16 மார்ச், 2012

சங்கரன்கோவில்: கட்சிகள் வரிந்து கட்டும் கடைசி நிமிடம்!

இன்னும் சில தினங்களில் இடைத் தேர்தலைச் சந்திக்கிறது சங்கரன் கோவில்.எப்படி இருக்கிறது நிலவரம்? களத்தில் அரங்கேறும் காட்சிகளை உங்கள் கண் முன் கொண்டுவருகிறது புதிய தலைமுறை.

சங்கரன் கோவிலில் ஜவஹரைத் திமுக வேட்பாளாராக அறிவித்திருக்கிறது. ஆனால் காந்தியும் களமிறங்கியிருக்கிறார் தெரியுமா?நீங்கள் நினைப்பது போல் கரன்சியில் சிரிக்கும் காந்தியைச் சொல்லவில்லை.

‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடல் ஒலித்தபடி அந்த வேன் ஆரவாரமின்றி மெதுவாக கிராமங்களுக்குள் நுழைகிறது. தேர்தல் சமயத்தில் காதைக் கிழிக்கும் சத்தமின்றி ஒரு வாகனம் தங்கள் ஊருக்குள் நுழைவதை உலக அதிசயமாக பார்க்கிறார்கள் மக்கள். வேனுக்குள் இருந்து கதராடையில், வெள்ளைக் குல்லா அணிந்த சிலர் அமைதியாக பிட் நோட்டீஸ்களை வினியோகிக்கிறார்கள்.

“நாங்கள்லாம் மகாத்மா காந்தியோட தொண்டர்கள். மறக்காம மெழுகுவர்த்தி சின்னத்துக்கு நீங்க ஓட்டு போடணும்”

சொல்லிவிட்டு பிட்நோட்டீஸ் கொடுத்தவரை நிமிர்ந்துப் பார்க்கிறார் அந்த கடைக்காரர். நோட்டீஸில் அச்சடிக்கப்பட்டிருக்கும் வேட்பாளரேதான் நோட்டீஸ் கொடுத்தவரும். கடைக்காரருக்கு ஆச்சரியம். இவ்வளவு எளிமையான வேட்பாளரை இதுவரை அவர் கண்டதில்லை.

அந்த வேட்பாளர் பெயர் ஆறுமுகம். டி.ஆர்.ஓ.வாக பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் அவருக்கு வயது எழுபத்து ஒன்பது. தன்னை காந்திய பண்பாளராக மக்களிடம் அறிமுகம் செய்துக் கொள்கிறார். “பூரண மதுவிலக்கே எங்கள் நோக்கம்” என்கிற இவர்களது பிரச்சாரத்துக்கு பெண்களிடம் நல்ல ஆதரவு இருக்கிறது. ஆனால், இந்த ஆதரவு ஓட்டாக மாறுமா என்பது சந்தேகம். சங்கரன்கோவிலின் பெரும்பாலான வாக்காளர்கள் ஏதோ ஒரு அடிப்படையில், ஏதோ ஒரு கட்சியுடன் உணர்வுபூர்வமாக பிணைந்திருக்கிறார்கள்.

சரி, கட்சிகள் களத்தில் காட்டும் காட்சிகள் என்ன?

கடந்த வாரம் வரை களைகட்டாமல் டல் அடித்துக் கொண்டிருந்த சங்கரன் கோவிலை இந்த வாரம், இன்னொரு திருமங்கலமாக மாற்ற நமது அரசியல் கட்சிகள் முனைந்திருக்கின்றன. குறுக்கும் நெடுக்குமாக பிரச்சார வாகனங்கள் ஆரவாரத்தோடு தொகுதி முழுக்க வலம் வந்தவாறு இருக்கின்றன. சரத்குமார், குஷ்பு, செந்தில் என்று சினிமா நட்சத்திரங்களைக் காண மக்களிடையே போட்டாபோட்டி நிலவுகிறது.

தேதிமுக
விஸ்வரூபம் எடுக்க முயற்சிக்கிறது தேதிமுக. மாநிலம் முழுவதிலிருந்தும் கட்சியின் நிர்வாகிகள் மொத்தமாக சங்கரன்கோவிலில் குவிந்திருக்கிறார்கள். திமுக, அதிமுக, மதிமுக கட்சிகளின் கரைவேட்டிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் தேமுதிக கரைவேட்டிகளை தொகுதி முழுக்க காண முடிகிறது.

தொகுதியில் தேமுதிகவின் தேர்தல் அலுவலகமே இல்லாத கிராமமில்லை என்ற நிலையை ஒரே வாரத்தில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்தச் சாதனைக்கு சொந்தக்காரர் தேமுதிகவின் சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளரான முன்னாள் எம்.பி. ஆஸ்டின்.

“எங்களது பிரச்சாரத்தை காவல்துறையினரைக் கொண்டு ஆளுங்கட்சியினர் தடை செய்கிறார்கள். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள். இத்தேர்தலில் அமைதிப்புரட்சியை ஏற்படுத்தப் போகிறார்கள். இருபதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எங்கள் வேட்பாளர் வெல்லுவார்” என்று உற்சாகமாக நம்மிடம் பேசினார் ஆஸ்டின்.

சங்கரநாராயண சாமி கோயிலுக்குச் சென்று வணங்கி, தன்னுடைய பிரச்சாரத்தை துவக்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், “சட்டசபையில் மக்களுக்காக பேசக்கூடாது என்கிறார்கள். இங்கே அதிமுக வென்றால் அவர்களின் ஆணவத்தை அழிக்க முடியாது. கவர்ச்சித் திட்டங்களுக்காக வளர்ச்சித் திட்டங்களை இழக்காதீர்கள். எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

மதிமுக
சங்கரன்கோவில் தேர்தலில் ஈழப்பிரச்சினையை முன்வைத்துப் பேசும் ஒரே கட்சியாக மதிமுக மட்டுமே இருக்கிறது. “பம்பரம் வென்றால் மகிழப்போவது நீங்களோ, நானோ, வைகோவோ அல்ல. வேலூர் சிறையில் மரணத் தண்டனைக்காக காத்திருக்கும் முருகன், பேரறிவாளன் சாந்தனும். ஈழத்து முகாம்களிலே அடைபட்டிருக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளும்” என்று முழங்குகிறார் நாஞ்சில் சம்பத்.

முப்பிடாதி அம்மன் கோயில் திடலிலே நாஞ்சில் இவ்வாறாக முழங்கிக் கொண்டிருக்கும்போது, அருகிலிருக்கும் பேருந்து நிலையத்துக்கு குஷ்புவின் பிரச்சார வேன் வந்தது. “இந்த ஆட்சி பொறுப்பேற்றதுமே அண்டை மாநிலங்களை சேர்ந்த கொலை, கொள்ளைக்கார கும்பல் இங்கே தஞ்சம் புகுந்துவிட்டது. சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது” என்று குரலுயர்த்தினார். இவரது ஒலி குறுக்கிட்டதுமே மதிமுக பொதுக்கூட்டத்தில் இருந்த மக்கள் குஷ்புவைக் காண வேகமாக பேருந்து நிலையத்துக்கு விரைந்தார்கள். மதிமுகவினர் டென்ஷனாகி வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு கிளம்ப, குஷ்புவின் பிரச்சார வாகனம் பாதியிலேயே கிளம்பியது. திமுகவினர் பதிலுக்கு எகிற, அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர் தேர்தல் பார்வையாளர்கள்.

மதிமுக பொதுச்செயலர் வைகோவின் பிரச்சாரம் உருக்கமானதாக இருக்கிறது. தெருத்தெருவாக நடந்துச்சென்றே வாக்கு கேட்கிறார். எதிர்ப்படும் வாக்காளர்களின் பெயர் சொல்லி அழைக்கிறார். “அப்பா நல்லாயிருக்காரா?” என்று பெயர் குறிப்பிட்டுப் பேசும்போது, அவரது நினைவாற்றலை மெச்சி வாக்காளர்கள் சிலிர்க்கின்றனர். “ரொம்ப வருஷமா, சென்னையிலேயே தங்கியிருந்தாலும் எங்க ஊரையும், ஊர்க்காரர்களையும் வைகோ மறக்கலை” என்றார் பஜார் வீதியில் பேன்சி கடைக்காரர் ஒருவர். “என்னுடைய சொந்தத் தொகுதி இது. இந்தத் தொகுதியிலாவது மதிமுகவுக்கு இந்த ஒரே ஒரு வாய்ப்பினை தாருங்கள்” என்பதுதான் வைகோ பிரச்சாரத்தின் அடிநாதம். “மண்ணின் மைந்தர் வைகோ என்பதால் எங்கள் கட்சிக்கு கூடுதல் ஆதரவு இருக்கிறது. திருமங்கலம் பாணியை வைகோ உடைப்பார்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் மதிமுகவின் சங்கரன்கோவில் தேர்தல் பொறுப்பாளரும், நெல்லை மாவட்டச் செயலாளருமான சரவணன்.

வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியின் ஊராட்சியை தொடர்ச்சியாக வைகோவின் குடும்பத்தினரே கைப்பற்றி வருகிறார்கள். எல்லா அடிப்படை வசதிகளும் நிறைந்த ஒரு மாதிரி கிராமமாக கலிங்கப்பட்டி திகழ்கிறது

ஆனாலும் கலிங்கப்பட்டியிலேயே வைகோவுக்கு எதிர்ப்பும் உண்டு. அவரது இல்லத்திற்கு எதிரேயே திமுகவின் தேர்தல் அலுவலகம் அமைந்திருக்கிறது. வைகோ சாடையிலேயே ஒரு இளைஞரை அங்கு கண்டேன். “அவரு என்னோட மாமாதாங்க. ஆனாலும் வேற வேற கட்சி. திமுகவை இங்கேயே ஜெயிக்க வைப்போம்” என்றார்.

“வைகோ நல்லவருதான். இல்லைன்னு சொல்லலை. ஆனாலும் எங்க சாதிக்காரங்களுக்கு அவங்க கிட்டே போதுமான நியாயம் கிடைக்கலை” என்று ஊர்க்காரர் ஒருவர் குறைபட்டுக் கொண்டார். இவர் தேவேந்திரகுல வேளாளர் இனத்தைச் சார்ந்தவர். “மக்களுக்கு மனமாற்றம் ஏற்பட்டிருக்கு. சங்கரன்கோவிலில் பம்பரம்தான் சுத்தப் போவுது” என்றார் கலிங்கப்பட்டியின் சாமிதாஸ். இவர் கட்சி சார்பற்றவர். கலிங்கப்பட்டியில் பர்னிச்சர் ஏஜென்ஸி நடத்தும் ஆர்.சைலப்பன் கடுமையான போட்டி என்று ஒப்புக் கொள்கிறார்.

திமுக
திமுக முகாம் தேர்தல் கமிஷன் மீது கடுமையான அதிருப்தியில் இருக்கிறது. தேர்தல் கமிஷன் பாரபட்சமாக நடந்துக் கொள்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். “நேர்மையாக தேர்தல் நடந்தால் திமுகதான் வெல்லும். இவர்கள் நேர்மையாக தேர்தல் நடத்த விரும்புவதாக தெரியவில்லை” என்கிறார் கராத்தே முத்து என்கிற திமுக தொண்டர். வெளிமாவட்டங்களில் இருந்து பிரச்சாரத்துக்கு வரும் தங்களைப் போன்றவர்களிடம் ஏகத்துக்கும் கெடுபிடி காட்டும் போலிஸ், அதிமுகவினரை கண்டுகொள்வதில்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்.

“மின்வெட்டு, பால்-பஸ் விலை உயர்வு, விவசாயிகள்-விசைத்தறித் தொழிலாளர் பிரச்சினை, அதிமுக இருபது ஆண்டுகாலமாக தொகுதிக்கு எதையுமே செய்யாதது ஆகியவற்றை முன்வைத்து எங்கள் பிரச்சாரம் அமைந்திருக்கிறது. இத்தொகுதியில் தாமிரபணிர குடிநீர்த்திட்டம், கோர்ட்டு, அரசு அலுவலகங்கள் அனைத்துமே திமுக ஆட்சிக்காலத்தில் அமைந்தவைதான். பெண்கள் கல்லூரி அமைப்போம் என்றும் வாக்குறுதி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார் திமுக தேர்தல் அலுவலக பொறுப்பாளரும், கட்சியின் சங்கரன்கோவில் ஒன்றியப் பிரதிநிதியுமான கணேசன்.

தோழமைக் கட்சியான காங்கிரஸ் திமுகவுக்கு பிரச்சாரத்தில் நன்கு உதவுகிறது. காங்கிரஸ் சார்பில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மாநிலத்தின் முக்கியத் தலைகளை வைத்து பொதுக்கூட்டமும் நடத்தினார்கள். “இடுப்பு வேட்டி அவிழும்போது வேகம் காட்டும் ‘கை’ போல, திமுகவுக்கு ஆபத்து என்றால் ஓடிச்சென்று காப்பாற்றுவோம்” என்று இலக்கியத்தரமாக தங்கள் கூட்டணியின் வலிமையை கூட்டத்தில் வெளிப்படுத்தினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் பீட்டர் அல்போன்ஸ்.

காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருப்பதால், குறைந்தபட்சம் காங்கிரஸ் கட்சியின் கொடிகளை திமுக பிரச்சார ஆட்டோ, வேன், ஜீப்புகளிலாவது பார்க்கமுடிகிறது. தனித்து நிற்கும் மற்றொரு தேசியக்கட்சியான பாஜகவின் நிலை கவலைக்கிடமாகவே இருக்கிறது. கொடிகட்டி, தொகுதி முழுக்க வாஜ்பாய், அத்வானி புகழ்பாடி வரும் ஜீப்பில் டிரைவரைத் தவிர வேறு யாருமில்லை.

திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தலித் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான். ஆனாலும் இக்கட்சிக்கு தொகுதியில் சொல்லிக் கொள்ளும்படியான செல்வாக்கு இல்லை. அதே நேரம் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு திமுகவுக்கு ‘பூஸ்ட்’ அளிக்கிறது. அக்கட்சியின் நிறுவனர் ஸ்ரீதர் வாண்டையாரின் பிரச்சாரம் சாதி ஓட்டுகளை மொத்தமாக அள்ளும் என்று திமுகவினர் நம்புகிறார்கள். அழகிரி-ஸ்டாலின் அதிரடி காம்பினேஷன் தோனி-சச்சின் ஜோடியைப் போல திமுகவை கரைசேர்க்கும் என்பது கட்சியினரின் எதிர்ப்பார்ப்பு.

அதிமுக
கட்சியின் மொத்த படைபலத்தையும் களத்தில் இறக்கியிருக்கிறார் முதல்வர். தொடர்ச்சியாக அதிமுகவையே சங்கரன்கோவில் மக்கள் தேர்ந்தெடுத்தாலும், இம்முறை மின்வெட்டுப் பிரச்சினை தங்களுக்கு ‘ஷாக்’ கொடுத்துவிடுமோவென்று அவர்களுக்கு அச்சமிருக்கிறது.

தேர்தலுக்கு சற்று முன்பாக இஸ்லாமியர்களுக்கும், புதிய தமிழகம் கட்சியினருக்கு ஒரு கோயில் திருவிழா சார்பாக ஏற்பட்ட பிரச்சினையொன்று, இஸ்லாமியர்களின் ஓட்டுகளை எதிர்முகாமுக்கு விழச்செய்வதற்கும் வாய்ப்பிருப்பதாக தொகுதியில் பேசிக்கொள்கிறார்கள். இதை சரிக்கட்டும் வகையில் முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் களமிறங்கியிருக்கிறது. அதிமுகவுக்கு ஆதரவாக தொகுதியின் இஸ்லாமியர்களிடம் தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது. அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், அம்மா தங்கள் சமூகத்துக்கு செய்த நன்மைகளை பட்டியலிட்டு தெருத்தெருவாக தனது ஆதரவாளர்களோடு வாக்கு கேட்டுச் செல்கிறார். தமிழ்மாநில முஸ்லீம் லீக்கும், “அதிமுகவுக்கு எங்கள் தரப்பில் பண்ணிரெண்டாயிரம் ஓட்டுகள் பெற்றுத் தருவோம்” என்று களமிறங்கியிருக்கிறது.

புதிய தமிழகம் கட்சியின் ஆதரவே, அதிமுகவுக்கு பாதிப்பாக போய்விடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. “பரமக்குடி கலவரம் இப்போதுதான் நடந்து முடிந்திருக்கிறது. அதன் இரத்தக்கறை கூட காயாத சூழலில் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுகவுக்கு ஆதரவளித்ததின் மூலம் தனது மரியாதையை தேவேந்திரகுல வேளாள மக்களிடம் இழந்திருக்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக, தனது அடிப்படை பலத்தை அடகுவைத்துவிட்டார்” என்றார் சத்ரப்பட்டியில் நாம் சந்தித்த புதிய தமிழகம் தொண்டர் ஒருவர்.

“அப்படியெல்லாம் இல்லை. தேவேந்திரகுல வேளாள மக்கள் டாக்டருக்கு விசுவாசமானவர்கள். அவர் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவார்கள். அதிமுக அமோக வெற்றி பெறப்போவது உறுதி” என்றார் ஆவுடையாபுரம் வார்டு கவுன்சிலரும், புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்தவருமான மாரிக்கனி. ஆனாலும் பரமக்குடி கலவரம் பற்றி பேசும்போது இவரும் தடுமாறுகிறார்.

மறைந்த அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமாக இருந்த கருப்பசாமியின் குடும்பத்தாரை ஒருவழியாக சமாதனப்படுத்தியிருக்கிறார்கள் அவர்களை முதல்வரை சந்திக்கவைத்து, அந்தப் போட்டோவை பத்திரிகைகளில் பிரசுரித்திருக்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள். இந்நிகழ்ச்சியை அடுத்து தொகுதிமுழுக்க சுவர் விளம்பரங்களில் “அம்மாவின் இரட்டை இலைக்கு வாக்களிப்போம். இப்படிக்கு கருப்பசாமி குடும்பத்தார்” என்று விளம்பரப்படுத்துகிறார்கள். இதுமட்டுமன்றி கருப்பசாமியின் மகன் மாரிச்சாமிக்கு கட்சிப் பொறுப்பு ஒன்றினையும் வழங்கி, அமைச்சரின் சொந்த ஊரான புளியம்பட்டி வாசிகளை குஷிப்படுத்தியிருக்கிறார்கள்.

பொதுவாக ஆளுங்கட்சி என்பதால் ஜெயித்துவிடலாம் என்று அதிமுக தொண்டர்கள் கொஞ்சம் தெம்பாகவே இருக்கிறார்கள். முப்பத்தி இரண்டு அமைச்சர்களும் ஒவ்வொரு பகுதியாக தத்தெடுத்து வாக்குச்சேகரிப்பிலும், ‘மற்ற’ பணிகளிலும் மும்முரமாக இருப்பதால் அதிமுக தரப்பில் உற்சாகமாகவே செயல்படுகிறார்கள்.

தேர்தல் ஆணையம்
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே மிச்சமிருக்கும் சூழலில் ‘ரெட்டை எலைக்கு ஐநூறு, உதயசூரியனுக்கு இருநூறு’ என்கிற கட்டண விகிதம் தொகுதி முழுக்க பரவலாக மக்களிடம் பரபரப்பாக பரிமாறிக்கொள்ளப் படுகிறது. “ஓட்டு போட பணம் வாங்கினால் கைது” என்று போலிஸார் தெருத்தெருவாக சென்று எச்சரித்தாலும், மக்கள் சட்டை செய்வதாக தெரியவில்லை.

நாம் தொகுதியில் இருந்த அன்று ஒரு வாகனத்தில் இரண்டு கோடி ரூபாய் பணம் வந்ததாகவும், அதை செக்போஸ்டில் அமைச்சர் ஒருவர் தகராறு செய்து மீட்டதாகவும் தகவல் பரவிக் கொண்டிருந்தது. கடைசியாக ஐம்பத்தி ஓராயிரம் ரூபாய் மட்டுமே பிடிபட்டதாக ‘கேஸ்’ பதிவு செய்யப்பட்டதாம். எதிர்க்கட்சிகள் இதுமாதிரியான தொடர்ச்சியான புகார்களை பதிவு செய்துக் கொண்டேயிருக்க, அதிரடியாக சங்கரன்கோவில் டி.எஸ்.பி.யை தேர்தல் பணியில் இருந்து விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

“பதட்டமுள்ள பூத்களை கண்டறிந்துக் கொண்டிருக்கிறோம். துணை ராணுவம் பாதுகாப்புக்காக வரவிருக்கிறது. பொதுமக்களிடையே தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் பாராட்டைப் பெற்றிருக்கிறது” என்கிறார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான தாசில்தார் தாமோதரன். இரவு பகல் பாராமல் தேர்தல் அலுவலர்கள் தொகுதிமுழுக்க சலிக்காமல் சுற்றி வருகிறார்கள்.

மக்கள்
“இந்த வாரம் மட்டும் பெரியதாக மின்வெட்டு இல்லாதது மாதிரி பார்த்துக் கொள்கிறார்கள். தேர்தல் முடிந்ததும் ‘பழைய குருடி, கதவைத் திறடி’ கதையாகதான் இருக்கும்” என்று சலித்துக் கொள்கிறார் சக்திவேல் என்கிற விசைத்தொழிலாளி. முன்பெல்லாம் ஒரு நாளுக்கு ஐந்து சேலைகளாவது நெய்ந்துக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு இன்று ஒரு சேலை நெய்யவே தாவூ தீருகிறது.

“எங்கள் ஊரில் மட்டுமின்றி, நாடு முழுக்க மின்வெட்டுப் பிரச்சினை இப்படித்தான் இருக்கிறது. கூடங்குளம் அணுவுலை செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்” என்கிறார் தச்சுத்தொழிலாளி கோவிந்தன்.

“அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் போலிஸாரின் அராஜகம் எல்லை மீறிக் கொண்டிருக்கிறது. அம்மா இவர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டியது அவசியம்” என்று நம்மிடம் பேசினார் குருவிக்குளத்தில் சந்தித்த பெண் ஒருவர்.

“உள்ளாட்சித் தேர்தலில் ஜெயித்ததுமே பஸ்-பால் விலை உயர்த்தினார் ஜெயலலிதா. இந்தத் தேர்தலில் ஜெயித்தால் மின்கட்டணம் உயர்த்துவார்” என்று அச்சப்பட்டார் நக்கலமுத்தம்பட்டியில் வசிக்கும் இன்னொரு பெண்.

பொதுவாக கட்சி சார்பற்றவர்கள் என்னிடம் வெளிப்படையாக பேசத் தயங்கினார்கள். ‘யாருக்கு ஓட்டு?’ என்பது மாதிரியான கேள்வியைத் தவிர்ப்பவர்கள், பிரச்சினைகளைப் பற்றிப்பேச ஆர்வமாக இருக்கிறார்கள். தேர்தலன்று திடமான தீர்ப்பைத் தர இவர்கள் தயாராக இருப்பதாகவே தெரிகிறது.

உதாரணத்துக்கு குருசாமியை சொல்லலாம். திருவேங்கடம் மார்க்கெட்டுக்கு அருகில் செருப்பு தைக்கும் தொழிலாளி இவர். அவரிடம் நடந்த எனது உரையாடல் கீழே :

“எலெக்‌ஷனெல்லாம் எப்படிண்ணா இருக்கு?”

“எனக்கு அரசியல், கிரசியல் எல்லாம் தெரியாதுப்பா. செருப்பு தைக்க மட்டும்தான் தெரியும்”

“ஓட்டு போடுவீங்க இல்லையா?”

“கண்டிப்பா போடுவேன்”

“யார் ஜெயிப்பாங்க?”

“நான் ஓட்டு போடற ஆளுதான் ஜெயிப்பாங்க. ஜெயிச்சப்புறம் பாரு”



எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :

அலங்கரிக்க முடியலையே?
‘பந்தா’ பாலு ஏக்கம்!
அறந்தாங்கியைச் சேர்ந்த திமுக தொண்டர் ‘பந்தா’ பாலச்சந்தர் எந்த தேர்தல் நடந்தாலும், தன்னுடைய டிவிஎஸ் வண்டியை கருப்பு சிவப்பு கொடிகளால் கோலாகலமாக அலங்கரித்து கம்பீரமாக வலம் வருவார். திமுக மாநாடுகளிலும் தன்னுடைய அலங்கார டூவீலரால் தலைவர்களையும் கவருபவர் இவர். இவரது அலங்காரங்களால் அசந்துப்போன கட்சியே இவருக்கு புது வண்டி வாங்கித் தந்தது.

சங்கரன்கோவிலுக்கும் தன் வண்டியை அலங்கரித்து சூடாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். போலிஸார் இதை அனுமதிக்கவில்லை. “அதிமுகவினர் நம்பர் ப்ளேட் இல்லாம கூட வண்டி ஓட்டுறதை அனுமதிக்கிற காவல்துறை, எதிர்க்கட்சிங்கிறதாலே என்னை அனுமதிக்க மாட்டேங்கிறாங்க” என்று குறைபட்டுக் கொண்டார்.

நமக்காக ஸ்பெஷலாக வண்டியை அலங்கரித்து, ‘போஸ்’ கொடுத்தும் காண்பித்தார்.


எக்ஸ்ட்ரா மேட்டர் 2 :

கூடங்குளம் கட்டாயம்

பிரச்சாரத்தில் எல்லாக் கட்சிகளுமே ‘கூடங்குளத்தை கொண்டுவருவோம்’ என்று வாக்குறுதி அளிக்கிறார்கள். “இந்த ஒரே ஒரு எம்.எல்.ஏ. சீட்டை வைத்து எப்படி கூடங்குளத்தை கொண்டுவருவார்கள்?” என்று கழுகுமலையில் பிரச்சாரத்தை கவனித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் லாஜிக்காக, கேட்டதை ஆட்டோவில் மைக்கில் பேசிக்கொண்டிருந்தவர் கண்டுகொள்ளவில்லை. கூடங்குளம் பற்றிப்பேச மதிமுக மட்டும் தயங்கிவருவதாக தெரிகிறது.


எக்ஸ்ட்ரா மேட்டர் 3 :

வாக்கை விற்காதீர்கள்!

’ஓட்டுக்கு துட்டு’ என்பது பிறப்புரிமை என்பதுமாதிரி (குறிப்பாக இடைத்தேர்தல்) வாக்காளர்கள் வாளாவிருக்க, ஊழல் எதிர்ப்பு இயக்கம் இப்போக்குக்கு எதிராக தொகுதி முழுக்க பிரச்சாரம் செய்துவருகிறது. இவ்வியக்கத்தைச் சேர்ந்த இருபது பேர் இதற்காக களமிறங்கியிருக்கிறார்கள். தேசியக்கொடி ஏந்தியவாறே “உங்கள் வாக்கை விற்காதீர்கள். விற்கப்படும் உங்கள் வாக்கினை இந்த காசுக்கு பத்துமடங்காக, இதனால் ஜெயிப்பவர் பிற்பாடு வசூலிப்பார்” என்று எச்சரிக்கிறார்கள்.


எக்ஸ்ட்ரா மேட்டர் 4 :

எப்படி சோதிக்கிறார்கள்?

’பிரஸ்’ என்று சொன்னதுமே பல செக்போஸ்ட்களில் நமது வாகனத்தை எந்த சோதனையுமின்றி, அனுப்பி வைத்தார்கள். நிச்சயமாக அமைச்சர்கள் வாகனத்தை இவர்கள் சோதிக்கப் போவதில்லை என்று தோன்றியது. மாறாக கீழத்திருவேங்கடம் செக்போஸ்டில் முத்துப்பிள்ளை என்கிற அனுபவம் வாய்ந்த ஸ்பெஷல் எஸ்.ஐ.யும், சாமிநாதன் என்கிற இளமையான பயிற்சி எஸ்.ஐ.யும் இணைந்து கறாராக கலக்குகிறார்கள். “போக்குவரத்துத்துறை அமைச்சரின் காரையே சோதனைப்போட்ட செக்போஸ்ட் இது” என்று அருகிலிருந்த டீக்கடைக்காரர் பெருமையாக சொன்னார்.

• வண்டி எண், எங்கே போகிறார்கள் போன்ற விவரங்களை கேட்டு அறிந்து கொள்கிறார்கள்.

• வண்டி முழுக்க சோதனை செய்கிறார்கள். சோதனையை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள்.

• உற்சாக பானம், பணம் மாதிரி ஏதாவது இருந்தால் கைப்பற்றுகிறார்கள்.

• பணம் அருகிலிருக்கும் போலிஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்படுகிறது. தக்க ஆதாரங்களைக் காட்டி வாங்கிக் கொள்ளலாம். அல்லது பணத்துக்கு முறையான காரணம் சொல்ல முடியாதவர்கள் கோர்ட்டுக்குப் போய்தான் தேர்தல் கமிஷனிடம் வாதாடி, தங்கள் பணத்தை திரும்பப் பெற முடியும்.

(நன்றி : புதிய தலைமுறை - படங்கள் : க.அறிவழகன்)

9 கருத்துகள்:

  1. "தனித்து நிற்கும் மற்றொரு தேசியக்கட்சியான பாஜகவின் நிலை கவலைக்கிடமாகவே இருக்கிறது. கொடிகட்டி, தொகுதி முழுக்க வாஜ்பாய், அத்வானி புகழ்பாடி வரும் ஜீப்பில் டிரைவரைத் தவிர வேறு யாருமில்லை."
    கவலைக்கிடம் மாறி கோமா நிலை வந்து மண்டையை போட வேண்டிய
    பாரத தீய ஜனதா பார்ட்டி இது.ஒழிந்து போகட்டும்.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா3:14 AM, மார்ச் 17, 2012

    //அதிமுகவையே சங்கரன்கோவில் மக்கள் தேர்ந்தெடுத்தாலும், இம்முறை மின்வெட்டுப் பிரச்சினை தங்களுக்கு ‘ஷாக்’ கொடுத்துவிடுமோவென்று அவர்களுக்கு அச்சமிருக்கிறது.//

    கரன்ட்டே இல்லைன்னாலும் அந்த பிரச்னையால அடிக்கடி ஷாக் ஆகறதே ரெண்டு கட்சிக்கும் வேலையா போச்சி!!

    பதிலளிநீக்கு
  3. ///எங்களது பிரச்சாரத்தை காவல்துறையினரைக் கொண்டு ஆளுங்கட்சியினர் தடை செய்கிறார்கள். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள். இத்தேர்தலில் அமைதிப்புரட்சியை ஏற்படுத்தப் போகிறார்கள். இருபதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எங்கள் வேட்பாளர் வெல்லுவார்” என்று உற்சாகமாக நம்மிடம் பேசினார் ஆஸ்டின்.///
    nambikkai irukkavendum, athukkaaka ippadiyaa?

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா3:15 PM, மார்ச் 18, 2012

    என்னங்க ரிப்போர்ட் இது... வழவழன்னு..

    ஒரு தெளிவா, இன்னது தான் அப்படின்னு ஒரு குத்து மதிப்பா ரிப்போர்ட் தந்தால் தானே நல்லா இருக்கும்.

    நிலவரத்தை மட்டும் சொல்லியிருக்கீங்க.. மக்களின் மன நிலையை இன்னமும் கொஞ்சம் ஆழமாக நாடி பிடித்துப் பார்த்திருக்கலாம்.

    எழுதும் போது, படிப்பவர்களின் மூளைக்கு சிந்திப்பதற்குத் தேவையான விவரங்களைச் சொன்னால், அவர்கள் அதற்கான விடை என்ன என்று எடுத்துக் கொள்வார்கள்.

    சும்மா ஒரு தேர்தல் களத்தைப் போய்ப் பார்த்து விட்டு வந்த உணர்வுதான் இருக்கிறது. இதில் யார் வெல்வார்கள் என்று உணர முடியவில்லை.

    லக்கியை விமர்சிப்பதாக நினைக்காமல், இது எப்படி ஒரு வாசகனிடம் போய்ச் சேர்ந்தது என்று வாசகன் உங்களிடம் சொல்லும் விமர்சனமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  5. சங்கரன்கோவிலில் யார் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றி எனது பார்வையை எனது வலைத்தளத்தில் எழுதிள்ளேன். பின்வரும் link ல் சென்று பார்க்கவும்.

    http://lakshmanaperumal.com/2012/03/13/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0/

    பதிலளிநீக்கு
  6. இது தான் போலீஸ்.......

    கீழத்திருவேங்கடம் செக்போஸ்டில் முத்துப்பிள்ளை என்கிற அனுபவம் வாய்ந்த ஸ்பெஷல் எஸ்.ஐ.யும், சாமிநாதன் என்கிற இளமையான பயிற்சி எஸ்.ஐ.யும் இணைந்து கறாராக கலக்குகிறார்கள். “போக்குவரத்துத்துறை அமைச்சரின் காரையே சோதனைப்போட்ட செக்போஸ்ட் இது” என்று அருகிலிருந்த டீக்கடைக்காரர் பெருமையாக சொன்னார்........



    "நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com"

    பதிலளிநீக்கு
  7. read this post in the puthiya thalaimurai magazine during a recent train trip.
    well written.

    only suggestion i have is, nadu nilayaa ezhudharennu rombave, 'nekkulaana' journalism konjam thookkalaa theriyudhu p.t'il.

    vilaa vaariyaa thanip padhivu podaren, idhaip paththi.

    பதிலளிநீக்கு