19 மார்ச், 2012

கர்ணன்

பரம்பரை எம்.ஜி.ஆர் ரசிகன் என்பதால், சிவாஜியை சிறுவயதிலிருந்தே பிடிக்காது. ஆனால் வயதான காலத்தில் என் அப்பாவே கூட சிவாஜியை கண்மூடித்தனமாக ரசிக்க ஆரம்பித்துவிட்டார். பத்து வருடங்களுக்கு முன்பு எப்போது பார்த்தாலும் என் வீட்டில் திருவிளையாடலும், சரஸ்வதி சபதமும், பாவமன்னிப்பும் இடைவிடாது ஓடிக்கொண்டேயிருக்கும்.

“ராயல் வாக்” சிவாஜிக்கு மட்டும்தான் என்பார் அப்பா. தெய்வமகன், திருவிளையாடல் படங்களில் சிவாஜியின் ‘டபுக்கு டபான்’ மியூசிக்கோடு வரும் நடையினை சுட்டிக்காட்டி கிண்டல் செய்வேன்.

சிவாஜி மறைந்த அன்று எனக்கு வயதாகிவிட்டிருக்கும் போல. தமிழருக்கு கிடைக்காமல் கிடைத்த மாணிக்கம் அவர் என்பதை திடீரென உணர்ந்தேன். தொடர்ச்சியாக ஒரு வாரத்துக்கு சிவாஜியின் படங்களை திரும்பத் திரும்ப பார்த்தேன். பாசமலரின் இறுதிக்காட்சியில் அவரது நடிப்பு (பிணமாக) உலகத்தரம் வாய்ந்தது என்று உணர முடிந்தது. அண்ணா ஒருமுறை சொல்லியிருந்தார். “மார்லன் பிராண்டோவை விட சிறந்த நடிகன் நமது சிவாஜி”. நூற்றுக்கு லட்சம் சதம் உண்மை. இன்று கமலுக்கு, விக்ரமுக்கு, அமிதாப்புக்கு, ஷாருக்குக்கு, சல்மானுக்கு என்று சமகாலத்தின் சிறந்த நடிகர்களுக்கெல்லாம் ஏற்றுக் கொள்ளும் பாத்திரத்தை சிறப்பிக்க போதுமான முன்னுதாரணங்கள் இருக்கிறது. ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் சிவாஜிக்கு அத்தகைய வசதியில்லை. அவர் சிறப்பாக நடித்த படங்கள் எல்லாம் முழுக்க முழுக்க அவரது தனித்துவ படைப்பாற்றலால் உருவானவை.

சிவாஜியின் நடிப்பு மிகைத்தன்மை வாய்ந்தது என்று முன்பொரு காலத்தில் மூச்சுப்பிடிக்க வாதிட்டிருக்கிறேன். மைக் இல்லாத அந்தக் காலத்து நாடகங்களிலிருந்து வந்தவர்களின் இயல்பு அது என்பதை இப்போது புரிந்துக்கொள்ள முடிகிறது. சத்தமாகதான் பேசுவார்கள். உடல்மொழி அசாதாரமாணதாக இருக்கும். அதே சிவாஜி பிற்பாடு தேவர் மகனில் கமலைவிட யதார்த்தமாக நடித்து அசத்தியிருக்கிறார்.

முன்னுரையே கொஞ்சம் நீளமாகிவிட்டது. சிவாஜியைப் பற்றி எழுதுவதென்றால் கொஞ்சம் மிகையாக இப்படி நீட்டி முழக்குவது இயல்பாக வந்துவிடுகிறது.


கடந்த வார இறுதியில் மூன்று தீவிர ‘வாத்யார்’ ரசிகர்கள் கர்ணன் பார்க்கப் போனோம். வாசலில் பேனர், தோரணம், போஸ்டர் என்று இளைய-அல்டிமேட்-புரட்சி-சின்ன-லொட்டு-லொசுக்குகளுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் சிவாஜி ரசிகர்கள் களமிறங்கியிருந்தார்கள். 1964ல் வெளியாகி, கிட்டத்தட்ட தமிழகமே நான்கைந்து முறை பார்த்துவிட்ட ஒரு படத்துக்கு 2012ல் இப்படிப்பட்ட வரவேற்பு என்பது ஆச்சரியகரமானதுதான். முழுக்க முழுக்க ஃபேமிலி ஆடியன்ஸ். தொண்ணூறு சதவிகிதம் அரங்கு நிறைந்தது. டிக்கெட் கிழிக்கும் இடத்தில் படம் பார்க்க வந்தவரின் செல்போன் ஒலித்தது. ரிங்டோன் : உள்ளத்தில் நல்ல உள்ளம்.

இப்போது படம் பார்த்த சில நண்பர்கள் டெக்னிக்கலாக ஒரு மண்ணையும் கழட்டவில்லை என்று அலுத்துக் கொண்டிருக்கிறார்கள். சாதா படத்தை சினிமாஸ்கோப்பாக மாற்றியிருக்கிறார்கள் என்பதே சாதனைதான். ஓடி ஓடி தேய்ந்துப்போன ஃபிலிமிலிருந்து இமேஜ் எடுத்து டிஜிட்டலில் கலர் பூஸ்ட் செய்திருக்கிறார்கள். சில காட்சிகள் அதே பழைய சொதப்பலோடு இருந்தாலும், பல காட்சிகளில் ஃப்ரெஷ்னெஸ் தெரிகிறது. பாடல் காட்சிகளில் கூடுதல் இசை, சைட் ஸ்பீக்கர்களில் கேட்கும் வண்ணம் சேர்த்திருக்கிறார்கள்.

ஏற்கனவே சிலமுறை பார்த்திருந்தாலும், ஒருமுறை கூட கர்ணனின் டைட்டிலை நான் பார்த்ததில்லை. டைட்டிலுக்கு முந்தைய ‘பிட்’ ஒன்றே போதும், கர்ணனின் தரத்தை பறைசாற்ற. உலகின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபியான கர்ணனை, அவனது தாய் குந்திதேவி ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டு விடுகிறாள். தேரோட்டி ஒருவர் அக்குழந்தையை கண்டெடுத்து வாரிச்செல்ல, வழியில் ஒரு சாமியார் ஏது இக்குழந்தை என்று விசாரிக்கிறார். குழந்தையை அந்த சாமியாரிடம் தேரோட்டி கொடுக்க, குழந்தை சிரித்தபடியே தன் கையில் இருக்கும் ஒரு முத்துமாலையை சாமியாருக்கு ‘தானம்’ செய்கிறது. தியேட்டரில் விசில் சத்தம்.

மகாபாரதத்தின் ஒரு போர்ஷனை மட்டும் எடுத்துக்கொண்டு மிகத்திறமையாக திரைக்கதையாக்கம் செய்திருக்கிறார்கள். சக்தி கிருஷ்ணசாமியின் பஞ்ச் டயலாக்ஸ் மாஸ் சினிமாவின் உச்சம். ஹீரோவான கர்ணன் மட்டுமின்றி, வில்லன், ஹீரோயின், துண்டு துக்கடா பாத்திரங்கள், அட்மாஸ்பியருக்கு வந்து போகிறவர்கள் என்று ஆளாளுக்கு ‘பஞ்ச்’ ஆக பேசித்திரிய, படம் பார்க்கும் கிழவிகள் கூட விசிலடித்து, விசிலடித்தே வாய் வீங்கிப் போகிறார்கள். குறிப்பாக சாவித்ரியும், சிவாஜியும் விளையாடிக் கொண்டிருக்கும் (தாயக்கட்டைதான்) போது ஒரு எசகுபிசகான கட்டத்தில், சாவித்ரியின் கணவரான துரியாதன அசோகன் வந்துவிட.. இருவரும் திருட்டு முழி முழிக்க, நியாயமாக ஒரு கணவனுக்கு வரவேண்டிய கோபமோ, சந்தேகமோ இல்லாமல் இளிச்சவாய் கணவனாக “எடுக்கவா, கோர்க்கவா” என்று அசோகன் அடிக்கும் பஞ்ச் அதகளம்.

பொண்டாட்டியை சந்தேகப்படும் கேரக்டர்களிலேயே பெரும்பாலான தனது திரைவாழ்வை கழித்துவிட்ட முத்துராமன் வீரமான அர்ஜூனன் பாத்திரத்துக்கு எனும்போது கொஞ்சம் நெருடத்தான் செய்கிறது. As per மகாபாரதம், படத்தின் ஆரம்பக்கட்ட காட்சிகளில் இவர்களுக்கெல்லாம் வயது இருபது டூ இருபத்தி மூன்றாக இருக்க வேண்டும். தொப்பையும், கிப்பையுமாக இருக்கும் சிவாஜியை இருபதுகளின் ஆரம்ப வயதில் ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். அசோகனுக்கு புருவத்தை ஓவர் அழகாக திருத்தி விட்டிருக்கிறார்கள். மீசை மட்டும் இல்லையென்றால் ஐஸ்வர்யாராயை விட அழகாக இருந்திருப்பார்.

காட்சிகளின் தொடக்கமும், முடிவும் சக்தி நாடகக்குழுவின் ஓம்சக்தி நாடகம் மாதிரியே இருக்கிறது. ஸ்க்ரீனுக்குள் ஒவ்வொரு பாத்திரமாக வந்து நெஞ்சுருக பேசுகிறார்கள். பஞ்சப் பாண்டவப் பயல்கள் எருமைக்கடா சைஸுக்கு இருந்துக்கொண்டு ஆளாளுக்கு அம்மா, அம்மாவென்று கொஞ்சுவது சகிக்க இயலாதது. காட்சி முடிந்ததும் கடனேவென்று எந்த ரியாக்‌ஷனும் இல்லாமல் ஒவ்வொருத்தராக கிளம்புகிறார்கள்.

எல்லாக் கொடூரங்களையும் ஒருவகையாக சகித்துக் கொள்ளலாம். கர்ணனின் ரொமான்ஸ்தான் உச்சக்கட்ட கோராமை. இளமையான அழகான தேவிகாவை தன்னுடைய வீரத்தையும், கம்பீரத்தையும் காட்டி மயக்குகிறார், மயங்குகிறார் நம் கர்ணன். திருமணம் ஆகும்வரை பிரிவுத்துயர் தாளாமல் இவர் ஏங்க.. எவ்வளவு அடித்தாலும் ரசிகர்கள் தாங்க.. ஒரே ரகளைதான்.

இடைவேளைக்குப் பிறகு அதிரடியாக ஒரு கோயிலின் கர்ப்பக் கிரகத்திலிருந்து நேரடியாக முகம் முழுக்க ப்ளூ கலர் பவுடர் பூசி கண்ணனாக என்.டி.ஆர். களமிறங்குகிறார். அவர் திருதராஷ்டிரனின் சபைக்கு வந்து எகனைமொகனையாய் விடாமல் பதினைந்து நிமிடங்களுக்கு டபுள் மீனிங்கில் பேசி தாலியறுக்கிறார். இதற்குப் பிறகுதான் சூடு பிடிக்கிறது படம். இரண்டாம் பாதியில் கர்ணன் அவ்வளவாக சீனில் தலை காட்டுவதில்லை. போர் யுக்திகள், கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்குமான Cat & Mouse விளையாட்டு, திக்கைத்தனமாக துரியோதனன் செய்யும் நயவஞ்சக செயல்களை, தனது கூர்மையான அறிவுத்திறனால் கண்ணன் கட்டுடைப்பது என்று ‘கில்லி’ லெவல் ஸ்பீடு.

ஆரம்பத்திலிருந்தே இந்திரனில் தொடங்கி துரியோதனன், சகுனி, துரோணர், பீஷ்மர், குந்திதேவி, கண்ணன் என்று கிட்டத்தட்ட படத்தின் எல்லாப் பாத்திரங்களுமே தன்னை ‘சூ’ அடிப்பதை புரிந்துகொள்ளாமலேயே, கேணைத்தனமாக ‘எல்லாம் நல்லதுக்கே’ என்று நினைத்து இறுதியில் உயிரை விடுகிறார் கர்ணன். “அய்யோ என் மகனே” என்று குந்திதேவி மார்பில் அடித்துக்கொண்டு, கர்ணனின் தலையை மடியில் வைத்துக் கொண்டு கதற.. மண்டையைப் போட்டது கர்ணனா அல்லது அர்ஜூனனாக என்று ப.பாண்டவர்களில் அர்ஜூனன் தவிர்த்து மீதி நாலு பேரும் குழம்ப.. இருக்கும் குழப்பம் பத்தாது என்று “என் மகனை கொன்றுவிட்டீர்களே” என்று தலைவிரிக் கோலமாய் தர்மத்தேவதை வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்க.. கர்ண்ணன் குந்தித் தேவியின் மகனா அல்லது தர்மத் தேவதையின் மகனா என்கிற சஸ்பென்ஸோடு படம் முடிகிறது.

ஓக்கே. சீரியஸாக இப்படத்தை அணுகுவதாக இருந்தால் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய சில அரசியல் கண்ணிகள் காட்சியமைப்பிலும், வசனங்களிலும் புதைந்துள்ளதை கண்டுகொள்ளலாம்.

படத்தின் ஆரம்பத்தில் பிறப்பினை அடிப்படையாக வைத்து அர்ஜூனனுக்கு, கர்ணன் சமமாக முடியாது என்று ஆச்சார்யார்கள் வாதிடும்போது, கர்ணனை சிற்றரசனாக்கி ‘இட ஒதுக்கீடு’க்கு அன்றே பிள்ளையார் சுழி போடுகிறான் துரியோதனன். ஒவ்வொரு முறை இதே காரணத்துக்காக கர்ணன் மட்டம் தட்டப்படும் போதெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஓங்கி ஒலிக்கிறது நம் கர்ணனின் குரல்.

கல்மனதையும் கரையவைக்கும் இறுதிக்காட்சியில் உலகில் தோன்றிய ஒவ்வொரு மாவீரனின் முடிவையும் கண்முன் கொண்டு வந்து காட்டுகிறார் இயக்குனர் பந்துலு. அதிலும் வீரமாகப் போரிடும் குழந்தைப் போராளியான கர்ணனின் மகனை அயோக்கியத்தனமாக கண்ணன்–அர்ஜூனன் கூட்டணி இரக்கமின்றி சாகடிப்பதும், போர் யோக்கியதையை மீறி நேருக்கு நேராக மோத திராணியின்றி தேர்க்காலை தூக்கி நிறுத்த தலைப்பட்ட நேரத்தில் கர்ணனின் நெஞ்சிலே அம்புகளை இதே கோழைக்கூட்டணி எய்வதும் சமீபக்கால வரலாற்றினை நெஞ்சிலே நிழலாடச் செய்கிறது.

இராமாயணத்திலே ராமன், மகாபாரதத்திலே கண்ணன் என்று கோழைப்பயல்களின் பேடித்தனம் காலம் காலமாக ஹீரோயிஸமாக கட்டமைக்கப்படும் இத்தேசத்தில் இராவணன், கர்ணன் மாதிரி நேர்மையான புரட்சி வீரர்களின் தனித்துவப் புகழ் மெச்சி சொல்லப்படுவதை வரவேற்றாக வேண்டும் என்கிற அடிப்படையில், நாற்பத்தி எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டு வந்திருக்கும் கர்ணனை பெரிய தாம்பாளத் தட்டில் ஆரத்தியெடுத்து வரவேற்போம்.

33 கருத்துகள்:

  1. அந்த ஆரத்தித் தாம்பாளத்தட்டுக்கு என் காணிக்கையாக இதோ ஒரு முழு ஆயிரம் ரூபாய் நோட்டை இடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சூப்ப்ப்ப்ப்ப்ப்பர்!

    //கல்மனதையும் கரையவைக்கும் இறுதிக்காட்சியில் உலகில் தோன்றிய ஒவ்வொரு மாவீரனின் முடிவையும் கண்முன் கொண்டு வந்து காட்டுகிறார் இயக்குனர் பந்துலு. அதிலும் வீரமாகப் போரிடும் குழந்தைப் போராளியான கர்ணனின் மகனை அயோக்கியத்தனமாக கண்ணன்–அர்ஜூனன் கூட்டணி இரக்கமின்றி சாகடிப்பதும், போர் யோக்கியதையை மீறி நேருக்கு நேராக மோத திராணியின்றி தேர்க்காலை தூக்கி நிறுத்த தலைப்பட்ட நேரத்தில் கர்ணனின் நெஞ்சிலே அம்புகளை இதே கோழைக்கூட்டணி எய்வதும் சமீபக்கால வரலாற்றினை நெஞ்சிலே நிழலாடச் செய்கிறது.//

    ர்ர்ரியல்ல்ல்லி சூப்பார்!

    வரிக்கு வரி செம பாஸ்!

    பதிலளிநீக்கு
  3. எல்லாப்பயலுவளும் கர்ணனுக்கு எதிரா கூட்டு சேந்தது பத்தாதுன்னு இந்த உடன்பிறப்புக்கள்கூட அவனுக்கு எதிரணிலயே நின்னுருக்காங்க பாருங்களேன்! # பஞ்சபாண்டவர்கள்

    பதிலளிநீக்கு
  4. ஒரு விசயத்தை சொல்ல விட்டீர்களே யுவா...கடைசிக் காட்சியில் பிச்சை கேட்க வரும் கண்ணனைப் பார்த்து ஒரு புன்னகை..இப்பவுமா? உயிரையுமா? இப்படித்தானே என்னிடம் வாங்க முடியும் கோழைகளா? என எல்லாம் சொல்லும் அந்தப் புன்னகை ஒன்று போதும் நடிகர் திலகம் எவ்வளவு பெரிய நடிகர் என்று..

    பதிலளிநீக்கு
  5. கலக்கீட்டிங்க யுவா.. ஒரு விசயம் சொல்ல மறந்துருக்கலாம்.. கடைசி காட்சியில் பிச்சை கேட்க வந்திருப்பவர் கண்ணன், அதுவும் தன் உயிரை என்றதும் அது வரை பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தவர் ஒரு புன்னகை செய்வார்.. இப்பவுமா? உயிரையுமா? இப்படித்தானே என் உயிரை வாங்க முடியும் கோழைகளா? எனப் பல பக்க வசனங்களை தன் ஒற்றைப் புன்னகையில் சொல்லத் தெரிந்த நடிகர் திலகத்தின் அந்தக் காட்சியைச் சொல்லி இருக்கலாம்.. படம் ஹிட்டாமே..!!

    பதிலளிநீக்கு
  6. விந்தைமனிதன் கூறிவிட்டார். அதேதான் எனது கருத்தும். வரிக்கு வரி செம யுவா.

    நடிகர்திலகத்தின் நடையழகு தங்கச்சுரங்கம் என்ற படத்தில் பார்க்கக் கோடிகண்கள் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. வாத்தியார் ரசிகனுக்கு நடிகர் திலகம் ரசிகனின் வணக்கம் :)

    அருமையான பதிவு ..ஆரம்பத்தில் சிவாஜி பற்றி நாலு நல்ல வார்த்தை சொல்லிவிட்டு கர்ணன் படத்தில் குறிப்பாக சிவாஜி நடிப்பு பற்றி பட்டும் படாமலும் ..உங்களுக்கா சொல்லிக்கொடுக்க வேண்டும் :)

    பதிலளிநீக்கு
  8. இதை போன்ற கமர்சியல் சினிமாக்களின் விமர்சனத்தை உங்களின் பார்வையில், உங்களின் எழுத்துநடையில் படிப்பது சுவாரஸ்யமாக உள்ளது. நன்றி!

    பதிலளிநீக்கு
  9. கர்ணன் மாதிரி நேர்மையான புரட்சி வீரர்களின் தனித்துவப் புகழ் ஒரு பெண்ணின்(பாஞ்சாலி) துகில் சபையில் உரியப்படும் போது ரசித்து சிரித்துக் கொண்டிருப்பதா நேர்மையான புரட்சி வீரம் யுவா???

    பதிலளிநீக்கு
  10. சமீபத்தில் மகாபாரதம் (வியாசபாரதம்) படித்தேன். அதன்படி யாரும் (கர்ணன், பாண்டவர்கள்) டெஸ்ட் டியுப் பேபி அல்ல. அனைவரும் சாதாரணர் போல உடலுறவால் பிறந்தவர்களே

    பதிலளிநீக்கு
  11. // போர் யோக்கியதையை மீறி நேருக்கு நேராக மோத திராணியின்றி தேர்க்காலை தூக்கி நிறுத்த தலைப்பட்ட நேரத்தில் கர்ணனின் நெஞ்சிலே அம்புகளை இதே கோழைக்கூட்டணி எய்வதும் சமீபக்கால வரலாற்றினை நெஞ்சிலே நிழலாடச் செய்கிறது.
    //

    I love you lucky for the above lines

    Thanks
    Aravindan

    பதிலளிநீக்கு
  12. எதையோ நினைத்து எதையோ இடித்து இருக்கிறீர்கள் தோழரே !
    நடத்துங்கள் - நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. அதிலும் வீரமாகப் போரிடும் குழந்தைப் போராளியான கர்ணனின் மகனை அயோக்கியத்தனமாக கண்ணன்–அர்ஜூனன் கூட்டணி இரக்கமின்றி சாகடிப்பதும், //

    அர்ஜுனனின் மகன் அபிமன்யுவும் இதே போல் கொல்லப்பட்டதைப் பற்றிப் பேசாதது ஏன்? கர்ணனும் திரவுபதி துகில் உரிக்கப்பட்டபோது
    பார்த்து ரசித்தவர்தானே. ஆகவே கர்ணனை அளவுக்கு மீறி தூக்கிப் பிடிப்பது தேவையற்றது.

    பதிலளிநீக்கு
  14. http://articles.timesofindia.indiatimes.com/2011-10-05/india/30246394_1_mandodari-demon-king-ravana-effigy

    "Ravana is worshipped in Vidisha district as he is personified as a symbol of prosperity and regarded as a saviour by Kanyakubja Brahmins, a Brahmin sub-sect to which Ravana is believed to belong. A village in Vidisha district is called Ravangram."

    Ravana is a Brahmin by birth, Rama is Kshathriya and Krishna is Yadava(OBC now). Krishna and Rama are worshipped not because of their birth but what they stood for i.e. Dharma. Their means sometimes may be wrong sometimes but their goal is always for establishing the Right.

    Mahabharatha is supposed to be a treatise on nuances of Dharma.It cannot be understood using DK pamphlets or DMK stage speeches.

    Duryodhana was good to Karna(because he saw in him a worthy opponent to Arjuna) but not to his own relatives i.e. Pandavas because he wanted to enjoy their wealth/kingdom too.

    Karna is also a reason for Duryodhana's behavior. Before the war, even Sakhuni advises Duryodhana to follow dharma and give Pandavas what they deserve but Karna never says that as he wanted to settle his personal rivalry.

    Ethics of individuals cannot be concluded by a single action(both sides indulged in wrongdoings in the war), it should be measured through all their actions and the context.

    Seriously you have to get out anti-hindu rhetoric. It's the only way you can do justice to your own intellect and to the intelligence of your blog readers.

    பதிலளிநீக்கு
  15. ரகளையான பதிவு..அந்த எடுக்கவோ கோர்க்கவோ பாரா டாப்..

    பதிலளிநீக்கு
  16. "இராமாயணத்திலே ராமன், மகாபாரதத்திலே கண்ணன் என்று கோழைப்பயல்களின் பேடித்தனம் காலம் காலமாக ஹீரோயிஸமாக கட்டமைக்கப்படும் இத்தேசத்தில்"

    அவ்வளவு தானா ! இன்னும் இருக்கா நண்பரே ! அறியாமை ! நன்றி !

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா7:33 PM, மார்ச் 20, 2012

    1. Duryodhana's relationship with Karna is a classic case of quid-pro-quo.
    2. No one is stopping you from worshiping Ravana/Duryodhana/Karna.Just don't turn into a Mullah and force your Gods onto others.

    பதிலளிநீக்கு
  18. தயவு செய்து வியாச பாரதம் படியுங்கள் நண்பரே!

    எப்படி துக்ளக்கை படித்துவிட்டு ஒருவர் பெரியாரை தெரிந்து கொள்ள முடியாதோ, அதே போல கர்ணன் திரைப்படத்தை
    பார்த்து ஒருவர் மகா பாரதம் புரிந்து கொள்ள முடியாது!

    அன்புடன்
    கார்த்திக்

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லா8:34 PM, மார்ச் 20, 2012

    வஞ்சப் புகழ்ச்சிங்கிறது இது தானா...!!

    உங்களை மாதிரியே சிவாஜியைக் கண்டாலே பிடிக்காது எனக்கும். ஒவர் ஆக்டிங்.

    புராணம் பாஸ்... அனுபவிக்கனும்... ஆராயப்புடாது...

    பதிலளிநீக்கு
  20. நல்ல விமர்சனம். நன்றி.

    பதிலளிநீக்கு
  21. பெயரில்லா10:41 PM, மார்ச் 20, 2012

    இராமாயணத்திலே ராமன், மகாபாரதத்திலே கண்ணன் என்று கோழைப்பயல்களின் பேடித்தனம் காலம் காலமாக ஹீரோயிஸமாக கட்டமைக்கப்படும் இத்தேசத்தில் இராவணன், கர்ணன் மாதிரி நேர்மையான புரட்சி வீரர்களின் தனித்துவப் புகழ் மெச்சி சொல்லப்படுவதை வரவேற்றாக வேண்டும் என்கிற அடிப்படையில், நாற்பத்தி எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டு வந்திருக்கும் கர்ணனை பெரிய தாம்பாளத் தட்டில் ஆரத்தியெடுத்து வரவேற்போம்."

    Superb...

    பதிலளிநீக்கு
  22. காலம் கடந்து மக்கள் மத்தியில் நிற்கக்கூடிய படங்கள் மட்டுமே 48 வருடஙளுக்குப்பின்னரும் 70 திரை அரங்குகளில் ரிலீஸாகும். மற்ற படங்கள் எல்லாம் ஆளுங்கட்சி ஓட்டினால் தான் உண்டு. தொப்பை இல்லாத, ஆனால், தொப்பி போட்ட பென்சில் மீசை நடிகர்கள் எல்லாம் என்ன பேசினாலும் உசுப்பல் வரமாட்டேங்குது. சிவாஜி வசனம் பேசினபோது சிலிர்த்தெழுந்த _யிர்க்கால்களில் ஒன்று கூட எழுந்திரிக்க மறுக்கிறது!

    பதிலளிநீக்கு
  23. பெயரில்லா5:17 PM, மார்ச் 21, 2012

    /* அர்ஜுனனின் மகன் அபிமன்யுவும் இதே போல் கொல்லப்பட்டதைப் பற்றிப் பேசாதது ஏன்? கர்ணனும் திரவுபதி துகில் உரிக்கப்பட்டபோது
    பார்த்து ரசித்தவர்தானே. ஆகவே கர்ணனை அளவுக்கு மீறி தூக்கிப் பிடிப்பது தேவையற்றது.*/

    மகாபாரதம் சரியாக படியும். துரியோதனனும் துச்சாதனனும்தான் ரசித்ததாக நான் அறிவேன். பொண்டாட்டிய வெச்சு அப்படியென்ன ஆட்டம் ? அஞ்சு பேருக்கு ஒரு பொண்டாட்டியா ? பேடிப்பயலுங்க தான் அவனுங்க. குழந்தயை கொல்லும் கண்ணன் தெய்வமாம், சாகும் தருணத்திலும் ஈகை செய்த கர்ணன் வில்லனாம். என்னங்கடா உங்க ஞாயம் ? கண்ணனை தெய்வமாக கும்பிட்டால் கர்ணனையும் கும்பிடலாம். அவரவர் தரப்பில் தவறும் திருட்டுத்தனமும் உள்ளது.
    நீங்க இதே படத்தில் உள்ள "உள்ளத்தில் நல்ல உள்ளம்" பாட்ட கேளுங்க. கண்ணனே பாண்டவர்களை கேலிசெய்யும் வசனங்களையும் கேட்கவும்.

    பதிலளிநீக்கு
  24. "இராமாயணத்திலே ராமன், மகாபாரதத்திலே கண்ணன் என்று கோழைப்பயல்களின் பேடித்தனம் காலம் காலமாக ஹீரோயிஸமாக கட்டமைக்கப்படும் இத்தேசத்தில்"


    உங்கள் அபரீமிதமான அறிவுக்கு பாராட்டுக்கள்.... புலன்களுக்கு எட்டாத விஷயங்கள் புரியப்படுவதில்லை. அதை புரிந்து கொள்ளாமல் அதற்கு முயற்சியும் செய்யாமல் இருப்பவர்கள் அதைப் பற்றி விமர்சிக்காமல் இருப்பது உத்தமம்.

    பதிலளிநீக்கு
  25. மகாபாரத்தில் கண்ணன் தான் வேண்டுமா அல்லது தன படைகள் வேண்டுமா என்ற வாய்ப்பு கொடுத்து அதன் மூலம் பாண்டவர்களிடம் சேர்ந்தான். மேலும் கௌரவர்கள் செய்தது எல்லாம் சரி என்று சொல்கிறீர்களா? ராமனிடம் எங்கே கோழைத்தனத்தை கண்டீர்கள்? ராவணனிடம் நேருக்கு நேர் யுத்தம் செய்துதான் சீதையை மீட்டான். வாலியின் வதம் பற்றி சொல்வீர்கள் என்று நினைக்கிறன் அது தவறுதான். மற்றபடி ஒரு மனைவியுடன் வாழ் என்று சொன்ன ராம காவியம் தவறு என்று சொல்கிறீர்களா? கண்ணதாசனின் கடைசி கால கட்டுரைகளையும் கவிதைகளையும் படியுங்கள். சரியான ஆன்மிகம் தெரிந்து கொள்ளவும் உங்கள் தலைவரின் அயோக்கியத்தனத்தை தெரிந்து கொள்ளவும். சிவாஜி மற்றும் mgr நடிப்பை சமமாக்காதீர்கள். சிவாஜி மிகை நடிப்பு என்றால் mgr நடிப்பே இல்லை. அவரின் காதல் காட்சிகளை பாருங்கள். உதடு கடித்து சிரிக்கும் கோணல் சிரிப்பும் அந்த பென்சில் மீசையும். இந்த கர்ணன் விமர்சனம் மூலம் நீங்கள் செய்தது ராமன், கிருஷ்ணன் மற்றும் சிவாஜியை கிண்டல் செய்ததுதான். நாம் வாழும் காலத்தில் உயிருடன் உள்ள போதே இரு மனைவி மார்கள் வைத்திருப்பது சரி என்று சொல்ல வருகிறீர்கல் போலும்.

    பதிலளிநீக்கு
  26. இராவணன் தமிழன் என்ற கருத்து ஏற்புடையதல்ல..இராவணனின் பெற்றோர் விஷ்ரவ முனி, கைகேசி. அந்தணர் குல தந்தைக்கும் அசுர குல தாய்க்கும் பிறந்தவர்..4 வேதங்களையும் 6 உபநிடதங்களையும் கற்றவர்..

    ஒரு முறை பார்வதி தேவி சிவனிடம் கடல்கள் சூழ்ந்த நிலப்பகுதியில் அழகான நகரம் அமைத்து தர வேண்டினார்.சிவன் இலங்கையை ஸ்தாபித்தார்.இலங்கையின் அழகையும், வனப்பையும் கண்டு அதிசயித்த பார்வதி தேவி அங்கு உடனே குடி புக முடிவு செய்தார். க்ரஹப்ரேவஷம் செய்ய வேதங்களை நன்கு கற்றுணர்ந்த ஒருவர் வேண்டும் என்றெண்ணி பல முனிவர்களை கலந்தாலோசித்தார். எல்லோரும் ராவணனை நோக்கி கைக்காட்டினார்கள்..இராவணன் க்ரஹப்ரேவஷம் செய்து கொடுத்தார்.க்ரஹப்ரேவஷம் சிறப்பாக நடந்ததை கண்டு மகிழ்ந்த பார்வதி என்ன பரிசு வேண்டும் கேள் என இராவணனிடம் கேட்டார்.அப்போது இராவணனின் தாயார் "இலங்கையை பரிசாக கேள்" என தூண்டினார். இராவணனும் அவ்வாறே கேட்க பார்வதி விட்டுக் கொடுத்தார்.


    இராவணன் சிவனை குறித்து இயற்றியது "சிவ தாண்டவ ஸ்தோத்திரம்", அதுவும் முழுக்க முழுக்க சமஸ்க்ருதத்தில்!!

    பதிலளிநீக்கு
  27. பெயரில்லா1:06 PM, மார்ச் 22, 2012

    sir,this is too much..i have been reading all of your blog posts..for a long time..many times i have noticed a tinch of sarcasm in your lines while you discuss abotu hinduism or anything related of that sort..but this time the feed you have posted under the title karnan..தாங்கள் கர்ணன் என்னும் தலைப்பில் இறுதியில் ராமரையும் கண்ணன்னையும் பேடிகள் என்றும் கோழைகள் என்றும் குறிபிட்டு இருந்தீர்கள்..இவ்வாறு நீங்கள் நினைக்கும் பொது எதற்காக தங்களின் புனை பெயரில் கிருஷ்ணா என்று இணைத்து கொண்டுளீர்கள்?? நீங்கள் வேண்டுமானால் பகுத்தறிவு வாதி ஆக இருக்கலாம்..ஆனால் பல மனிதர்களால் படிக்க படும் தங்களின் வலை தலத்தில் நீங்கள் இவ்வாறு எழுதியது மிக தவறானது...

    பதிலளிநீக்கு
  28. பெயரில்லா12:41 AM, ஏப்ரல் 05, 2012

    //Seriously you have to get out anti-hindu rhetoric. It's the only way you can do justice to your own intellect and to the intelligence of your blog readers.//


    இந்த மாதிரி லூசுகளை லூசில் விடவும் அவனுகளுக்கும் இந்த மாதிரி எழுதினா எவானவது காசு அழுவானா இருக்கும்......

    வேற பொழப்பு வேற தெரியாது இப்படி காசு பண்ணினா தானே உண்டு.......

    பதிலளிநீக்கு
  29. பெயரில்லா5:17 PM, மே 10, 2012

    well, mabharatham is about an human u see.. kannan represents our brain. paandavargal are 5 good thoughts n 100 other people are our bad thougts. karnan represents our soul. by d way, i do agree with ur Raman part. thr r actually northens more specificly middle east people who state South Indian (tamilan) as monkey. and ravanan as a bad guy. a good brother will fight 4 his sister wen a guy cut her noses. study deeply hinduism are more ten Mahabharatha n ramayana (which ploted by aryans) list will go on. soe people shld reaad history prperly bfr tey talk.. anyway, Sivaji is my favourite actor eventhough im only 23 but honestly nobody can beat him n make me cry like he does..=)

    பதிலளிநீக்கு
  30. http://vilash-sadie.blogspot.com/2012/05/rama-ravana-hanuman.html

    I wrote about MY POINT OF VIEW about Ramayana.

    பதிலளிநீக்கு