9 ஜனவரி, 2009

சென்னை புத்தகக் காட்சி - முதல் நாள்..


சென்ற வருடம் போல இந்த வருடமும் தினசரி புத்தகக்காட்சி தரிசனம் சாத்தியமா என்று தெரியவில்லை. இன்று கூட போய்வரும் சாத்தியமில்லை. ரிசர்வில் எத்தனை நாள்தான் வண்டி ஓட்டுவது? முரளிதியோரா விரைவாக மனசு வைத்தால் கடைசி ஐந்து நாட்களாவது தினமும் போய்வர முடியும். சென்னை சங்கமத்தை வேறு போட்டியாக நாளை தொடங்குகிறார் ‘தலைவரின் கனி, தமிழின் மொழி’.

புத்தகக்காட்சியை தொடக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்ட ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கு உடம்பு சரியில்லையாம். வாழ்த்துச்செய்தியோடு தன் கடமையை முடித்துக் கொண்டார். மெர்சிடிஸ் பென்ஸில் வந்திறங்கி கொச்சையான மேடைத்தமிழில் இலக்கியச்சேவை ஆற்றினார் நல்லி குப்புச்சாமி செட்டியார். எனக்கொரு சந்தேகம். கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது வாங்குபவர்கள் எல்லாமே பார்ப்பதற்கு பாவமாகவே இருக்கிறார்களே? ஏன்?

சென்ற வருடத்தை விட புத்தகக்காட்சி விசாலமாக காற்றோட்டத்தோடு இருப்பது போல ஒரு பிரமை. முதல் நாள் அனுமதி இலவசமென்றாலும் கூட்டம் நஹி. பல ஸ்டால்களில் இன்னமும் ஆணி அடித்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஞாநி ‘ஓ ஞாநி’ ஆகிவிட்டாராம். அலங்காரம் செய்துக் கொண்டிருக்கும் போது கருவறையை திரைபோட்டு மூடியிருப்பது போல அவரது ஸ்டாலும் திரைபோட்டிருந்தது. மஞ்சள் திரை.

பாரதி புத்தகாலயம் சுறுசுறுப்பாக இருந்தது. புத்தகங்களை அடுக்கி வைத்திருந்த முறை அபாரம். திருக்குடந்தை பதிப்பகம் (கேள்விப் பட்டிருக்கிறீர்களா?) மட்டுமே முதல்நாளில் முழுமையாக தயாராகியிருந்தது. காலச்சுவடு கருப்புமயம். உயிர்மையில் இன்னமும் புதிய பத்தகங்களை பார்வைக்கு வைக்கவில்லை. சுஜாதா, ஜெயமோகன், சாரு மூவருமே உயிர்மையின் 90 சதவிகித இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறார்கள். கல்லாப் பெட்டியில் முதலாளியம்மா. குழந்தை பீடிங் பாட்டிலில் பால் குடித்துக் கொண்டிருக்கிறது.

பத்து ரூபாய்க்கு பீர்வாசனையில் ஆப்பிள் ஜூஸ் கிடைக்கிறது. இனிப்பு மசாலா தடவிய வேர்க்கடலையின் விலை அதிகம் என்று ப்ளூ கலர் குல்லாய் போட்டு மாறுவேடத்தில் இருந்த ஒரு பிரபல எழுத்தாளர் புலம்பிக் கொண்டிருந்தார். தூர்தர்ஷன் ஒரு ஸ்டால் போட்டு தன்னுடைய நிகழ்ச்சிகளை(?) ஒரு விசிடி இருநூற்றி தொண்ணூற்றி ஐந்து ரூபாய் என்றளவில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். பர்மாபஸாரில் ‘திண்டுக்கல் சாரதி’ டிவிடியே பதினைந்து ரூபாய்க்கு கிடைக்கிறது என்று தூர்தர்ஷன் அதிகாரிகளுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் தேவலை.

மணிமேகலைப் பிரசுரம் வழக்கம்போல சுறுசுறுப்பு. காயிதே மில்லத் கல்லூரியில் நடந்த பழைய கண்காட்சி ஒன்றில் இங்குதான் ‘ஒல்லியாக இருக்கும் நீங்கள் குண்டாவது எப்படி?’ புத்தகத்தை வாங்கி தற்கொலை எண்ணத்தை கைவிட்டேன். அந்தப் புத்தகத்துக்கு அருகிலேயே ‘குண்டாக இருக்கும் நீங்கள் ஒல்லியாவது எப்படி?’ என்றொரு புத்தகமும் இருந்தது நினைவில் நீங்கா கொடூரம். கண்ணதாசன் பதிப்பக கல்லாவில் இங்கும் வழக்கம்போல முதலாளியம்மாவே உட்கார்ந்திருக்கிறார். அதே சுறுசுறுப்பு. ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ. முடிச்ச பையன் இன்னமும் நிர்வாகப் பொறுப்புக்கு வரவில்லை போலிருக்கிறது.

பாக்கெட் நாவல் ஜீ.ஏ. அண்ணாச்சியும் இந்த முறை ஸ்டால் போட்டிருக்கிறார். சாருவின் ’ஸீரோ டிகிரி’ மக்கள் பதிப்பாக ரூபாய் முப்பதுக்கு கிடைக்கிறது. அச்சு அவ்வளவு மோசமில்லை. கோணல் பக்கங்கள் இரண்டாவது தொகுதி ரூபாய் நூற்றி நாற்பது விலையில் தரமாக அச்சிடப்பட்டு விற்கிறது. அண்ணாச்சியிடம் விசாரித்தபோது ஸீரோ டிகிரி மலிவுப் பதிப்பு இருபதாயிரம் காப்பிகளுக்கு மேலாக இதுவரை விற்றதாக சொன்னார். அஜால் குஜால் டாக்டர் பிரகாஷின் நூல்களும் இங்கே மலிவுவிலையில் கிடைக்கிறது. சுந்தர ராமசாமியின் ‘புளியமரத்தின் கதை’ மக்கள் பதிப்பும் இங்கே பதினைந்து ரூபாய்க்கு கிடைக்கக்கூடும். இந்த ஸ்டாலின் முதல் கஸ்டமர் என்பதால் அண்ணாச்சி ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு எங்களோடு பேசிக்கொண்டிருந்தார்.

சினிமா செட் ரேஞ்சுக்கு செட் போடும் நக்கீரன் பதிப்பகம் இவ்வருடம் அடக்கி வாசிக்கிறது. கோபால் அண்ணாச்சி சேலஞ்ச் செய்யும் ஒரே ஒரு கட்-அவுட்டோடு நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாசலில் கிழக்கு எடிட்டர் மருதனோடு பேசிக்கொண்டிருந்தவர் “பெரியவங்க எங்களையும் ஞாபகம் வச்சிக்கோங்க” என்று கலாய்த்துக் கொண்டிருந்தார்.

கிழக்கு ஸ்டாலில் ’பிரபாகரன்’ புத்தகமே இவ்வருட பிரதான அலங்காரம். அதற்கும் தடை போட்டுவிட்டதாக பாராவும், பத்ரியும் எழுதியிருக்கிறார்கள். சென்ற ஆண்டு இதுபோலவே ‘நான் வித்யா’ புத்தகம் விற்பனையில் சூடாக இருந்தது. ’சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்’ புத்தகத்துக்கு அருகில் ‘கிரிமினல்கள் ஜாக்கிரதை’ புத்தகத்தை பார்வைக்கு வைத்திருந்தது யதேச்சையானதுதான் என்று கிழக்கின் விற்பனை மேலாளர் ஹரன்பிரசன்னா எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதன் மீது சத்தியம் செய்கிறார்.

விகடன் பிரசுரம் முழுமையாக தயாராகாததால் உள்ளே நுழையவில்லை. குமுதத்தின் பு(து)த்தகம் ஸ்டாலில் ரேஞ்ச் குறைவு என்றாலும் ஆடம்பரத்துக்கு குறைவில்லை. ப்ளக்ஸ் பேனர்களும், கண்காட்சி முகப்பில் வரவேற்பு வளைவுகளுமாக ரொம்ப ஆடுகிறார்கள். சாருவின் ‘ஸீரோ டிகிரி’ ஆங்கிலப் பதிப்பை வெளியிட்ட ப்ளாப்ட் பப்ளிகேஷன்ஸ் அசத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் பல்ப் பிக்‌ஷன் நூல்களை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கும் இந்நிறுவனத்தின் ஸ்டாலில் தமிழ்வாணனின் ‘சங்கர்லால்’ வேடத்தில் ஒருவர் பயமுறுத்திக் கொண்டிருந்தார். நல்லவேளை கையில் துப்பாக்கி இல்லை.

நீண்டகாலமாக தமிழ் வாசகர்களின் டவுசர் கயட்டும், தாவூதீரும் நடையில் புத்தகங்கள் வெளியிட்டு வரும் க்ரியா பதிப்பகம் இந்த முறை ஸ்டால் போட்டிருக்கிறது. ஒவ்வொரு புத்தகத்தின் விலையிலும் ஒரு கல்யாணம் காட்சி செய்துக் கொள்ளலாம். பார்வைக்கு மட்டும் இவர்கள் வைத்திருக்கும் விண்டேஜ் கலெக்‌ஷன் புத்தகங்கள் கண்ணை கொள்ளை கொள்ளுகிறது. இவற்றை வேடிக்கை பார்ப்பதே மெகா சுவாரஸ்யம். மைக்கா கவரில் சுற்றி பாதுகாக்கப்பட்ட சுராவின் ஜே.ஜே.சில குறிப்புகள் முதல் பதிப்பை கையில் எடுத்துப் பார்க்கும்போது எதையோ சாதித்தது போல சொல்லவொண்ணா மகிழ்ச்சி.

இந்த வருடத்தின் டாக்காக சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ இருக்கக்கூடும். அறுநூறு ரூபாய் விலையில் வந்திருக்கும் ஆயிரம் பக்கத்துக்கும் மேலான மெகாநாவல். முதல்நாளிலேயே பலரும் ஆவலோடு புரட்டிப் பார்த்தார்கள். எத்தனை பேர் வாங்குவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நூலாசிரியரின் பத்தாண்டு உழைப்பு வீண்போகாமல் வெற்றியடைய வாழ்த்துவோம்.

முதல்நாள் விசிட் வெறும் பறவைப் பார்வை பார்க்கவே உபயோகப்பட்டது. அடுத்தடுத்து செல்லும் நாட்களில் எதையாவது உருப்படியாக வாங்க வேண்டும். ஆயிரம் ரூபாய்க்கு இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் என்றெல்லாம் அறிவிப்பினை கண்டு பேஜார் ஆகியும் போயிருக்கிறேன். எழுத்துப்போராளி சாருவின் ‘காமரூபக் கதைகள்’ கட்டாயம் வாங்கியாக வேண்டும் என்று எண்ணம். பாராவின் ‘மாயவலை’யும் நிச்சயமாக வீட்டு நூலகத்தில் இடம்பெற்றாக வேண்டிய நூல்.

பாரதி புத்தகாலயத்தில் சில பிரதிகள் வாங்க வேண்டும். மணிமேகலையில் ‘கல்யாணம் செய்துகொள்வது எப்படி?’ என்ற நூல் இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும். எங்கேயோ ‘காதலிப்பது எப்படி?’ என்றொரு நூலைப் பார்த்தேன். சென்ற வருடம் வாங்கிய இதேபோன்ற ஒரு நூலால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. ஒரு ஸ்டாலில் டாக்டர் ஒருவரின் செக்ஸ்நூல்கள் சூடாக பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஸ்டாலுக்கு அடிக்கடி போகவேண்டும்.

5 ஜனவரி, 2009

அபியும், நானும்!


சீக்கிரமாக ஒரு கல்யாணம் காட்சி செய்துகொண்டு ஒரு பெண்குழந்தையை பெற்று வளர்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகி விட்டது. முன்பெல்லாம் தேவதைகள் என்றாலே அத்தைகளுக்கு மகள்களாக பிறப்பார்கள் என்ற எண்ணம் இருந்தது. ‘அபியும் நானும்’ படம் பார்த்தபிறகு தேவதைகள் நமக்கும் மகள்களாக பிறக்கக்கூடும் என்ற இன்னொரு சாத்தியம் புரிந்தது. எனக்கு மூன்று, நான்கு வயதிருக்கும்போது மண்டையைப் போட்ட என்னுடைய ஆயா கோயிந்தம்மா எனக்கு மகளாக பிறக்க வேண்டும். அவளுக்கு திருமண வயதாகும்போது எவனோ ஒரு சர்தார்ஜி பயலை லவ்வித் தொலைத்து, வயிறு எரிந்துகொண்டே கன்னிகாதானம் செய்துத் தரவேண்டும்.

மங்கி குல்லாவோடு ஊட்டியில் வாக்கிங் செல்லும் பிரகாஷ்ராஜில் படம் தொடங்குகிறது. தன் குட்டிக் குழந்தையோடு பார்க்கில் விளையாடிக் கொண்டிருக்கும் பிருத்விராஜிடம் பேச ஆரம்பிக்கிறார் பிரகாஷ்ராஜ். நர்ரேஷன் ஸ்டைலில் அபியும், நானும் தொடக்கம். பெண்ணை பெற்று, வளர்த்து, கட்டிக் கொடுத்தது வரைக்கும் முழுவதையும் நகைச்சுவைப் பொங்க சொல்கிறார். சின்ன வயதில் திண்ணையில் சிவராம் பெரியப்பாவிடம் கேட்ட கதையை விட பன்மடங்கு சுவாரஸ்யம்.

ரோஜாப்பூ மாதிரி பிறந்த மகளை கையில் ஏந்தும் காட்சியில் பிரகாஷ்ராஜ் காட்டும் ரியாக்‌ஷன். அடடா. பிறவி நடிகனய்யா நீர். ஸ்கூல் சேர்க்கும்போதும், அடம்பிடிக்கும் பெண்ணுக்காக பிச்சைக்காரரை வீட்டில் சேர்த்துக் கொள்ளும் போதும், பெண்ணுக்கு சைக்கிள் வாங்கித் தர மறுக்கும்போதும், மகளுக்கு முதல்முதலாக வந்த காதல் கடித மேட்டரை டீல் செய்வதும், மேற்படிப்புக்காக டெல்லிக்கு அனுப்ப மறுத்து அடம்பிடிக்கும் போதும் படம் முழுக்க பிரகாஷ்ராஜ்யம்.

கனவுதேவதை திரிஷா உருப்படியாக ஒரு படம் நடித்துவிட்டார். எல்லோரும் கைத்தட்டலாம். அழகான அம்மாவாக ஐஸ்வர்யா. நடிப்பு ஓக்கே. குரல் தான் பயமுறுத்துகிறது. தம்மாத்தூண்டு கேரக்டராக இருந்தாலும் படம் முழுக்க வரும் மனோபாலா. பிச்சைக்காரராக அறிமுகமாகும் குமாரவேலு நார்த் இண்டியன் ஃபிகரை மடக்கும்போது காட்டும் காதல் சென்சேஷன். ஒரே ஒரு குழந்தைக்காக ஏங்கும் தலைவாசல் விஜய் என்று படம் முழுக்க கேரக்டர்களாக செதுக்கித் தள்ளியிருக்கிறார் இயக்குனர் ராதாமோகன். இவர் கேரக்டர்களை உருவாக்கி விட்டு அதன் பின் காட்சிகளை பிடிப்பார் போலிருக்கிறது.

படத்தின் கதையை விமர்சனத்தில் வாசிப்பதை விட திரையில் பார்ப்பதே நியாயம். “என்னம்மா பேங்குலே மேனேஜரா இருக்குறாரு என்பது மாதிரி எங்க ஸ்கூல் வாசலிலே பெக்கரா இருக்குறாருன்னு சொல்றே” வசனங்கள் அநியாயத்துக்கு ஜாலி. இந்தப் படத்துக்கு பாடல்களே தேவையில்லை. முதல் பாதியின் சுவாரஸ்யத்தை இரண்டாம் பாதிக்கும் நீட்டியிருக்கலாம். செகண்ட் ஹாப்பில் கமர்ஷியல் காம்ப்ரமைஸுக்காக செருகப்பட்ட பாடல்களின் போது வெளியே சென்று கோன் ஐஸ் வாங்கி சாப்பிடலாமா என்றிருக்கிறது.

பிரகாஷ் ராஜ் - ராதாமோகன் கூட்டணியிடம் எனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. எப்போது பார்த்தாலும் மல்டிபிளக்ஸ் ஆடியன்ஸுகளை குறிவைத்தே படங்களை எடுத்துத் தொலைக்கிறார்கள். அபியும் நானும் படத்தின் கதாபாத்திரங்களை லோயர் மிடில்க்ளாஸ்களாக சித்தரித்திருந்தால் படம் பரவலான வரவேற்பை பெற்றிருக்கக் கூடும். மேல்தட்டு வர்க்க கதாபாத்திரங்களை உபயோகிப்பதன் மூலம் ரிச்சாக காட்ட முடியும். அதுமட்டுமன்றி லொக்கேஷன்களிலும், காட்சியமைப்புகளிலும் ஆடம்பரத்தை ரசிகனுக்கு பரிசளிக்க முடியும் என்றாலும் சினிமா என்பது வெகுஜன ரசிகர்களின் உணர்வுகளோடு பேசாவிட்டால் என்ன பிரயோஜனம்?

இதே கூட்டணியின் ’மொழி’யை விட சிறந்த படமாக ’அபியும் நானும்’ எனக்கு தோன்ற இப்போதைய வயதும், வாழ்வின் காலக்கட்டமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு அப்பனும், அப்பனாகப் போகிறவனும் கட்டாயம் பார்த்து தொலைக்கலாம்.

அபியும் நானும் - அழகானது வாழ்க்கை!

1 ஜனவரி, 2009

வயசாயிடிச்சில்லையோ?


நினைவு தெரிந்த முதல் ஆங்கிலப் புத்தாண்டு அம்மாவுக்கு கோலம் போடும்போது உதவுவதில் ஆரம்பித்ததாக நினைவு. பத்து மணி வாக்கில் வீட்டு வேலையை எல்லாம் முடித்துவிட்டு அம்மா கோலம் போட ஆரம்பிப்பார். அவர் சொல்லும் இடங்களில் வண்ணம் சேர்ப்பது என் பணி. பண்ணிரெண்டு மணி அளவில் தூக்கம் கண்ணை சுழற்றும்போது கமல்ஹாசன் ‘இளமை இதோ இதோ’வென நடனம் ஆடுவார் டிவியில். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு இப்படித்தான் எனக்கு புத்தாண்டு விடிந்திருக்கும். இன்னமும் அதே கமல் அதே இளமையோடு டிவிக்களில் பாடிக்கொண்டிருக்கிறார். இதுமட்டும் தமிழனுக்கு மாறாத ஒரு அம்சம்.

அப்புறம் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் வந்தபிறகு புத்தாண்டு அங்கே பிறந்தது. குடும்பத்தோடு கூட்டத்தில் கசகசவென உள்ளே புகுந்து ஆஞ்சநேயரை அண்ணாந்துப் பார்த்து, புத்தாண்டு பரிசாக அவர் தரும் ஐந்து ரூபாய் நாணயத்தை வாங்கிக் கொண்டு வருவதில் சில புத்தாண்டுகள் கழிந்தது. கொஞ்சம் தாமதமாகப் போனாலும் ஐந்து ரூபாய் நாணயம் இரண்டு அல்லது ஒரு ரூபாயாக மாறிவிடக் கூடிய ஆபத்துண்டு. அப்பாவின் தலைமையில் தான் ஆஞ்சநேயர் தரிசனம் நடக்கும். அப்பா தலைமையில் எது நடந்தாலும் எரிச்சல் தந்த காலக்கட்டம் அது. காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டதைப் போல பரபரவென்று எரிந்து விழுந்துக் கொண்டேயிருப்பார். ஆஞ்சநேயரை தரிசித்து மூன்று, மூன்றரை மணிக்கு அப்பாடாவென்று கண்ணயர்ந்தால் நாலு, நாலரைக்கெல்லாம் எழுப்பி உயிரை வாங்குவார். மாங்காடு கோயிலுக்கு காலையிலேயே போகவேண்டும். இதுபோன்ற தருணங்களில் தான் அவருக்கு முக்கியத்துவம் என்பதால் ரொம்ப ஓவராய் ஆடுவார்.

பியர் குடிக்க கற்றுக்கொண்ட காலத்து புத்தாண்டுகள் தான் சுவாரஸ்யமானது. ஒன்பதரை, பத்து மணியளவில் வேளச்சேரி பைபாஸ் அல்லது தரமணி ரோட்டில் ஏதாவது ஒரு கடையில் மேட்டரை முடித்துவிட்டு பெசண்ட் நகருக்கு மின்னல் வேக பைக் பயணம். மார்கழி குளிர் முகத்தில் அறைந்தாலும் எதையுமே சாதிக்காமல் எதையோ சாதிக்கப்போவது மாதிரி, சாதித்தது மாதிரி பரவசம் நிறைந்திருக்கும். எதிர்காலம் குறித்த அச்சமோ, நிகழ்காலம் குறித்த வெட்கமோ இல்லாத பட்டாம்பூச்சி வயசு. பெசண்ட் நகர் டூ மெரினா. எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் வாய்குழற “ஹேப்பீ ந்யூ ஹியர்!”. ஒன்றிரண்டு ஃபிகர்கள் பதிலுக்கு ஹேப்பி நியூ இயர் சொல்லிவிட்டால் போதும் வந்தது வம்பு.

“அவ என்னைப் பாத்துதாண்டா சொன்னா”

“உம்மூஞ்சிக்கு உன்னை பாத்து சொன்னாளா? இதுக்கெல்லாம் என்னை மாதிரி பர்சனாலிட்டி இருக்கணும் மாமே!”

“டேய் ரெண்டு பேரும் அஜித் விஜய் மாதிரி பேசிக்கிறீங்க. மாமாவைப் பாத்து தாண்டா அவ சொன்னா” மூன்றாமவனும் தன் பங்குக்கு ஜல்லியடிப்பான்.

பொதுவாக இதுபோல விவாதங்கள் ஜாலியாக முடிந்தாலும், சில நேரங்களில் சீரியஸாகி ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு மணலில் புரண்டதுமுண்டு.

பாலாஜி அண்ணாவும், ஓம்பிரகாஷ் மாமாவும் ஒரு புத்தாண்டுக்கு ‘மணக்குளம் விநாயகரை தரிசனம் பண்றோம்” என்று சொல்லி, அப்பாவிடம் பர்மிஷன் வாங்கி என்னை பாண்டிச்சேரிக்கு நண்பர்களோடு பைக்கில் அழைத்துச் சென்றார்கள்.

“சின்னப்பையன், இதெல்லாம் சாப்பிடுவானா?” அடிக்கடி ஓம்பிரகாஷ் மாமா பாலாஜி அண்ணாவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

“இந்த காலத்து பசங்க நம்மளை விட கேடிங்க மச்சான். எல்லாம் சாப்பிடுவான்! ஹாட் அடிப்பியாடா?”

“ம்ம்..” வெட்கப்பட்டுக்கொண்டே பொய் சொன்னேன். அதுவரை எந்த கருமத்தையும் அடித்ததில்லை.

பிரெஞ்ச் ரம். ஊற்ற ஊற்ற உறிஞ்சுக் கொண்டேயிருந்தேன். ஐந்து ரவுண்ட். ‘ஒண்ணுமே ஏறலையே? பீர் தான் பெஸ்ட்டு!’ மனசுக்குள் நினைத்துக் கொண்டேன். ரம் லேட்டாக பிக்கப்பாகும் என்பதை யாரும் சொல்லித் தொலைக்கவில்லை. அதிலும் பிரெஞ்ச் ரம் ரொம்ப ரொம்ப லேட் பிக்கப்பாம். கடையோர கையேந்திபவன் ஒன்றில் கல்தோசை சாப்பிடும்போது கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. கை கால் உதற, இருதயமே வெளியே வந்து விழுந்து விடுமோ என்று அஞ்சும் வகையில் உவ்வ்வாக்...

கண்விழித்தபோது காலை பதினொரு மணி. ‘மணக்குளம் விநாயகர் தரிசனம்’ அபாரம்.

சுனாமி வந்து சூறையாடிச் சென்ற நிலையில் 2005 புத்தாண்டு. சுனாமி நேரத்தில் அப்பா சர்க்கரைநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அம்மா ஒத்தாசைக்கு அப்பாவோடு இருக்க வீட்டில் தனியாகவே பத்து நாட்களை சமாளித்தேன். அந்த புத்தாண்டை கொண்டாட நண்பர்கள் யாருக்கும் மனமில்லை. பாலாஜி அண்ணா மட்டும் என்னை அழைத்துச் சென்று லோக்கல் டாஸ்மாக்கில் விடிய விடிய கவனித்தார்.

சில ஆண்டுகளாக ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று பணம் கட்டி கிளப்களில் மெம்பர்களாகியிருக்கும் நண்பர்கள் தயவில் புத்தாண்டு விடிகிறது. எட்டு, ஒன்பது மணிக்கு லைட் மியூசிக்கோடும் சரக்கு மற்றும் உணவுவகைகளோடும் மெல்ல சூடு பிடிக்கிறது. மேடையில் குட்டைப்பாவாடையோடு ஃபுல் மேக்கப்பில் போதைக்குரலோடு ஒரு பாடகி பாடிக்கொண்டிருப்பாள். நிறைய பேர் போலியாக நடனம் ஆடுவது போல கையையும், காலையும் ஆட்டிக்கொண்டே சரக்கடிக்கிறார்கள்.

முப்பதுகளின் ஆரம்பத்திலேயே பலருக்கும் தொப்பை. பெரிய தொந்தியோடு கையை காலை ஆட்டியபடியே மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டிக் கொள்கிறார்கள். முகம் உண்மையின் உரைகல். குடும்பம் குடும்பமாக குழந்தை குட்டியோடு வந்து தண்ணி போடுகிறார்கள். மனமொன்றி இந்தக் கொண்டாட்டங்களில் ஈடுபடமுடியவில்லை என்றாலும் வேறு வழியில்லை. கொண்டாடுவதைப் போல நடிக்கவாவது செய்யவேண்டும். ‘பூமாலை பாவையானது’ என்று பாடும்போது வெறுமனேவாவது கைத்தட்ட வேண்டும். இல்லாவிட்டால் நிர்வாண ஊரில் கோவணம் அணிந்தவனின் கதியாகிவிடும்.

‘தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா’ - வடநாட்டு சிவப்பு மேனி அஞ்சலைகள் சிலர் கையில் பீர்பாட்டில்களோடு பெருத்த ஸ்தனங்களை குலுக்கி, குலுக்கி ஆடுகிறார்கள். அப்பனும், அண்ணன், தம்பிகளும் சுற்றி நின்று கைத்தட்டி உற்சாகப்படுத்துகிறார்கள். சரியாக பண்ணிரண்டு அடிக்கும்போது ‘இளமை இதோ இதோ’. க்ளப்பின் ஏற்பாட்டில் வாணவேடிக்கை. எல்லோரும் எழுந்து நின்று ‘ஓ’வென்று கத்துகிறார்கள். ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொள்கிறார்கள்.

‘போலிஸ்காரன் பிடிப்பானோ?’ என்ற பயத்தோடு வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்ப வேண்டியதாக இருக்கிறது. அடுத்த தலைமுறை பேய்வேகத்தில் வண்டி ஓட்டுவதை பார்த்து பயமாக இருக்கிறது. அந்த காலத்தில் நம்மைப் பார்த்து எத்தனை பேர் பயந்திருப்பார்களோ? ஒவ்வொரு சிக்னலை தாண்டும்போதும் தலை தப்புவது தம்பிரான் புண்ணியம். பேருக்கு சில டிரிங்க் & ட்ரை கேஸ் போடுகிறார்கள். அன்று வண்டி ஓட்டுபவன் எல்லோருமே டிரிங்க் & டிரைவ் தான் எனும்போது பாவம் அவர்களால் என்னதான் செய்யமுடியும்? சர்ச்சுகளில் உற்சாக வெள்ளம். கோயில்களிலும் புத்தாண்டு ஸ்பெஷல் ஆராதனை. இஸ்லாமியர்கள் மட்டும் ஆங்கிலப் புத்தாண்டை கோலாகலத்தோடு வரவேற்பதில்லை என்று தோன்றுகிறது. மானம் கெட்ட இந்துக்கள் இன்னும் சில காலத்தில் கிறிஸ்துமஸை கூட கிருஷ்ணர் சிலை வைத்து கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.

நீண்ட இருசக்கரப் பயணத்தின் இடையே சிரமப் பரிகாரத்துக்கு ஒரு டீக்கடைப் பக்கம் ஒதுங்கினால் ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்று எஃப்.எம்.மில் தேன் வழிகிறது. எத்தனையோ முறை ரேடியோவில் கேட்ட பாட்டு தான் என்றாலும் இதுவரை ஒரு தடவை கூட முழுமையாக கேட்டதில்லை. ஏனோ நேற்று முழுமையாக கேட்கவேண்டும் என்று தோன்றியது. வயசாயிடிச்சில்லையோ?

30 டிசம்பர், 2008

திருவண்ணாமலை

ஆக்‌ஷன் ஜோதியில் ஹாஃப் பாயில் போட்டிருக்கிறார் பேரரசு. ஆக்‌ஷன் தான் வேலைக்காகும். ஆன்மீகத்தால் ஆட்டையைப் போடமுடியாது என்று அழுத்தம் திருத்தமாக மெசேஜ் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர். ஆக்‌ஷன் கிங் என்றாலே அதிரடி. ஒன்றுக்கு இரண்டு ஆக்‌ஷன் கிங்குகள், நிறைய பெப்பர் போட்டு டபுள் ஆம்லெட். இரட்டை கிங்குகள் இம்சை அரசர்களாக மாறி மாறி வில்லன்களை வதைக்க, பேரரசுவும் தன் பங்குக்கு டாக்டர் சுவாமிமலை என்ற டுபுக்கு வேடத்தில் சப்ஸ்டிடியூட்டாக களமிறங்கி பஞ்ச் ஃபுட்பால் ஆடுகிறார். இங்கிட்டும் அங்கிட்டுமாக அலைபாயும் ஃபுட்பால் தான் ரசிகர்கள். தாங்கலை சாமியோவ்.
 
ரொம்பவும் லோபட்ஜெட்டில் படத்தை முடிக்க கவிதாலயா திட்டமிட்டிருப்பார்கள் போலிருக்கிறது. ஒரு டொக்கு ஃபிகர் தான் ஹீரோயின். ஹீரோயினை விட ஹீரோவுக்கு தங்கச்சியாக வரும் ஃபிகரே டக்கராக இருக்கிறார். கடந்த கால்நூற்றாண்டு காலமாகவே அர்ஜூனின் கட்டுடலை கண்டு கதாநாயகிகள் காமம் கொள்ளும் அல்லது காதல் கொள்ளும் கருமம் இன்னமும் தொடர்கிறது. பேரரசு படங்களின் காட்சிகளையும், பாடல்களையும் ஒரு டெம்ப்ளேட்டில் அடக்கிவிடலாம். ஹீரோ, ஹீரோயின் மற்ற கதாபாத்திரங்களை மட்டும் மாற்றி மாற்றி ஃபிலிம் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
 
பாவம், நல்ல நடிகரான சாய்குமார் பேரரசுவு படத்தின் வில்லனாகி ஐசியூ பேஷண்ட் மாதிரி பரிதாபமாக ஆகிவிட்டார். கவுண்ட் டவுன் சொல்லி அர்ஜூன் அறிமுகமாகும் ஓபனிங் ப்ளாக்கெல்லாம் அரதப்பழசு. இன்னுமா பேரரசுவை ஊர் நம்பிக்கிட்டிருக்கு? என்று தியேட்டரில் ஒருவரையொருவர் கேட்டுக் கொள்கிறார்கள். பட்டாசுக் கிடங்கில் பஸ்பமான அர்ஜூன் டிரைனேஜ் வழியாக க்ளைமேக்ஸில் எழுந்துவருவது நமுத்துப்போன ஊசிப்பட்டாசு.
 
இந்தப் படத்தில் கருணாஸ் காமெடியன். அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த திண்டுக்கல் சாரதியே சக்கைப்போடு போடுகிறது. திருவண்ணாமலை? வையாபுரி என்றொரு காமெடியன் முன்பு இருந்தார் நினைவிருக்கிறதா? அவரும் வந்துப் போகிறார். மருந்துக்கு கூட காமெடி இல்லை. அர்ஜுன் படங்களில் இதுவரை காமெடி மட்டுமாவது உருப்படியாக இருந்தது. இதில் அதுவும் மிஸ்ஸிங்.
 
திக்குத்தெரியாத காட்டில் திசைபுரியாமல் குழம்பிப்போய் தியேட்டரில் உட்கார்ந்திருப்பவர்கள் இண்டர்வெல்லில் படம் திடுக்கென்று யூ டர்ன் அடித்து ஆன்மீகம் பக்கமாக திரும்பும்போது நிமிர்ந்து உட்காருகிறார்கள். அதுக்கப்புறமும் வழவழா கொழகொழா தான். வில்லன்கள் திரும்ப திரும்ப மோதுகிறார்கள். ஆக்‌ஷன் கிங் அடித்து உதைத்து ஓட ஓட விரட்டுகிறார். இந்த காட்சிகளையே இரண்டரை மணி நேரமும் பார்த்துத் தொலைத்தால் மூளைக்குள் மூட்டைப்பூச்சி கடிக்காதா?
 
தமிழினத்தின் பெருமைக்காக தமிழர்கள் எவ்வளவோ போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இரத்தம் சிந்தியிருக்கிறார்கள். உயிர் துறந்திருக்கிறார்கள். தமிழர்களை மாய்க்கானாக நினைத்து தொடர்ந்து படமெடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் பேரரசுவுக்கு எதிராக ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தையோ, உண்ணாவிரதத்தையோ எந்த தமிழ் அமைப்பாவது முன்நின்று நடத்த முன்வருமா?

23 டிசம்பர், 2008

சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் - புத்தக வெளியீடு!


கிழக்குப் பதிப்பகத்தின் மொட்டை மாடியில் 22-12-08 அன்று மாலை யுவகிருஷ்ணா எழுதிய 'சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்' நூலை எழுத்தாளர் சோம.வள்ளியப்பன் வெளியிட விளம்பரத்துறை வல்லுநர் நாராயணன் பெற்றுக் கொண்டார்.

முதல் நூல் மதிப்புரையினை சோம.வள்ளியப்பன் நிகழ்த்தினார். 'தான் கண்டிப்பானவன், விமர்சனமென்று வந்துவிட்டால் கத்தியை தூக்கிவிடுவேன்' என்ற ரேஞ்சுக்கு ஆரம்பித்து அந்நூலை எழுதிய எழுத்தாளரை பேதிக்குள்ளாக்கினார். ஸ்டிலெட்டோவால் அறுவைசிகிச்சை செய்துவிடுவாரோ என்று பீதியுற்ற நிலையில் இருந்தபோது, நல்லவேளையாக மயிலிறகால் தடவிக்கொடுத்தார்.

'ஒரு புத்தகம் என்பதை வாசகன் அணுகும்போது அவனை எழுத்தாளர் முதல் அத்தியாயத்திலிருந்து கையைப் பிடித்து கடைசி அத்தியாயம் வரை அழைத்துச் செல்லவேண்டும். இடையில் தம் அடிக்கலாமா, மூடிவைத்து விட்டு நாளைக்கு படிக்கலாமா என்று தோன்றக்கூடாது. இந்நூலாசிரியர் வாசகனை கையைப் பிடித்து அழைத்துச் செல்வதில் வெற்றியடைந்திருக்கிறார்' என்றவர், அவருக்குத் தோன்றிய ஓரிரு குறைபாடுகளை மட்டும் இறுதியாக சுட்டிக் காட்டினார். சோம. வள்ளியப்பன் நிகழ்த்தியது மதிப்புரையாக இல்லாமல் வாழ்த்துரையாகவே பட்டது. பேச்சின் இடையிடையே இயல்பாக நகைச்சுவையை நுழைக்கும் சாமர்த்தியம் அவருக்கு கைவந்த கலை.

அடுத்ததாக வாசகர்களோடு கலந்துரையாடல்.

விளம்பரங்கள் குறித்தே அதிகமான கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு நூலாசிரியர் சுமாராக பதில் சொல்லிக்கொண்டிருந்தார். நாராயணனும், பத்ரியும், சோம.வள்ளியப்பனும் அவ்வப்போது பதில் சொல்லி யுவகிருஷ்ணாவை காப்பாற்றினார்கள். "அரசியல்வாதிகளை ஏன் விளம்பரங்களுக்கு மாடல்களாக விளம்பர ஏஜென்ஸிகள் ஒப்பந்தம் செய்வதில்லை?" என்ற முத்துக்குமாரின் கேள்விக்கு பதில் சொல்வதற்குள் நூலாசிரியர் நொந்து நூடுஸ்லாகிப் போனார். விளம்பரங்களில் 'கருப்பு ஆகாது' என்ற பார்ஷியாலிட்டி இருப்பதாக முரளிகண்ணன் சொன்னார். இதற்குப் பின் அரசியல் இருப்பதாக பா.ராமச்சந்திரன் விமர்சித்தார்.

யுவகிருஷ்ணாவிடம் வாசகர்கள் சிலர் ஆட்டோகிராப் வாங்கியது தான் இரண்டாவது நாள் நிகழ்வில் நடந்த உச்சபட்ச காமெடி. வலைப்பதிவிலிருந்து ஒரு எழுத்தாளர் உருவாகியிருந்ததால் இரண்டாம் நாள் கூட்டத்துக்கு ஏராளமான வலைப்பதிவர்கள் வந்திருந்தார்கள்.

'எழுத்தாளர்கள் வலைபதிவது மிக சுலபம். ஆனால் ஒரு வலைப்பதிவாளர் புத்தகம் எழுதி எழுத்தாளராக உருமாறுவது மிக மிகக்கடினம்' என்பது என் சொந்த அனுபவம். வலைப்பதியும் போது ஒரு பதிவினை எழுதிக்கொண்டிருக்கும் போதே 300, 400 வார்த்தைகள் வந்து விழுந்துவிட்டால் மனசுக்குள் ஒரு மணி அடிக்கும், பஞ்ச் லைன் வைத்து முடித்துவிட்டு 100, 200 பின்னூட்டங்களை மிகச்சுலபமாக வாங்கிவிடலாம்.

150 பக்கங்களில் புத்தகம் எழுத 20,000 வார்த்தைகளும், குறைந்தது ஒரு மாத காலமாவது தேவைப்படுகிறது. இந்த ஒரு மாதக்காலத்திலும், எழுதி முடித்த சிறிது காலத்திற்குள்ளும் ஏற்படும் உளவியல்ரீதியான சிக்கல்களை எழுத்துக்களால் விவரிப்பது சிரமமானது. புத்தகம் எழுதுவதற்கு பின்னான உழைப்பு என்பது அசுரத்தனமான சாதகமாக இருக்கவேண்டியது. ஒற்றைக்காலில் நின்று செய்யவேண்டிய தவம். அடிவருடி, சொம்புதூக்கி ரீதியிலான விமர்சனங்கள் ஆரம்பத்தில் மன உறுதியை குலைக்கவும் கூடும். இதுபோன்ற மொள்ளமாறி விமர்சகர்களால் 40 வார்த்தைகளில் வசைபாட மட்டும் தான் முடியும், நம்மால் மட்டும் தான் எழுதமுடியும் என்ற மன உறுதி இருக்கவேண்டும்.

இந்தப் பிரச்சினைகளை எல்லாம் முரட்டு வைத்தியம் துணைகொண்டு சமாளிக்க முடியுமானால் நீங்களும் ஒரு வாசகருக்கு கையெழுத்து போடக்கூடிய அந்தஸ்தை பெறமுடியும். கையெழுத்து போடும்போது ஏற்படும் மகிழ்ச்சியின் அதிர்வுகளை என்னவென்று சொல்வது? ரிக்டர் ஸ்கேலில் கூட அளக்கமுடியாது. 2009ல் எழுத்தாளர்களாக பரிணாமம் பெறக்கூடிய நிஜமான தகுதியிருக்கும் வலைப்பதிவர்களை இப்போதே வாழ்த்துகிறேன்.