22 ஜூன், 2011

இன்டர்நெட் ரோமியோ!


இப்போதெல்லாம் தோழர் டமாரு குமாரு ஒரு மிகச்சிறந்த கம்யூனிஸ்ட்டாக மாறிவிட்டான். பார்க்கும் ஃபிகர்களை எல்லாம் தன்னுடைய ஃபிகராக நினைக்கும் மிகச்சிறந்த பொதுவுடைமைவாதியாகவும் உருவெடுத்துவிட்டான். சகாக்களின் ஃபிகர்களை மட்டும் சிஸ்டராக நினைக்கும் நற்குணமும் அவனுக்கு வாய்த்திருந்தது. வாயைத் திறந்தாலே பச்சை நிறத்தில் 'ஏ'ய்த்தனமாக பேசக்கூடிய அசுரப் பேச்சாளன் நம்ம டமாரு. காதல் திருமணம் முடிந்து ரெண்டு பிள்ளைகளை பெற்றிருந்தாலும் டமாருக்கு ஏனோ சைட் அடிக்கும் ஆர்வம் கொஞ்சமும் குறையவேயில்லை.

இளைஞர்கள் பலரும் ‘சாட், சாட்’ என்று உயிரை விட்டுக் கொண்டிருந்ததை கண்ட டமாருவுக்கும் இயல்பாகவே சாட்டிங் மீது பிடிப்பு ஏற்பட்டது. ஆர்.கே. மட் ரோடில் இருந்த டமாருவின் நண்பன் விஜி ஒரு பிரவுசிங் சென்டர் வைத்திருந்தான். டமார் குமாருக்கு ஓரளவுக்கு இங்கிலீஷ் தெரியும், ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் டீ காண்ட்ராக்ட் எடுத்திருந்ததால் ஓரளவுக்கு ஆங்கிலப் பரிச்சயம் ஏற்பட்டிருதது. முன்பு போலில்லாமல் இப்போது டமாரு கொஞ்சம் டீசன்ட் வேறு ஆகிவிட்டிருந்தான். விஜி கடைக்கு அவ்வப்போது சென்று சாட்டிங் செய்ய கற்றுக்கொள்ள ஆரம்பித்தான்.

ஆரம்பத்தில் டமாரிடம் சாட்டிங்கில் மாட்டியதில் நிறையப் பேர் அமெரிக்க ஃபிகர்களாக இருந்தார்கள். வெள்ளைத் தோல் மீது பிறப்பிலேயே குமாருக்கு ஈர்ப்பு அதிகமாக இருந்தது. இருப்பினும் கொஞ்ச நாள் சாட் செய்ததுமே டமாரு கேட்கும் ஒரு கோரிக்கையை (அது ஒரு மோசமான ஆங்கில நாலெழுத்து கோரிக்கை) கண்டு காரித்துப்பி அனுப்பி விடுவார்கள் வெள்ளைக்கார ஃபிகர்கள். நாம இருக்கறதோ மெட்ராஸ்? அமெரிக்காவில் இருக்குற பிகர்களிடம் போயி ஜொள்ளுவிடுவதால் என்ன பயன்? என்று திடீரென்று டமாருவுக்கு ஒருநாள் பகுத்தறிவு ஏற்பட்டது.

இதனால் டமார் குமாரின் பார்வை இந்திய ஃபிகர்கள் மீது திரும்பியது. ஆனாலும் மாட்டணுமே? ஒரு நாள் தோழர் டமாரு மிகுந்த மகிழ்ச்சியோடு காணப்பட்டான்.

‘என்ன மேட்டர்?’ விஜி வினவினான்.

"விஜி, சாட்டிங்ல மெட்ராஸ்லேயே ஒரு ஃபிகர் மாட்டிக்கிச்சி’’

‘‘இன்னா சொல்றே டமாரு. உன் ஏஜுக்கும், முகத்துக்கும் இதெல்லாம் ஓவராத் தெரியலை’’

‘‘இன்னாடா ஒனக்கு மட்டும் மாட்டிக்கிட்டா ......................... இருப்பியா?" (கோடிட்ட இடத்தில் ஆக்சுவலாக இடம் பெற்றது ஒரு மோசமான தமிழ் வார்த்தை. நாகரிகம் கருதி தனிக்கை செய்திருக்கிறேன்)’’

‘‘அப்புறம் ஒன் இஷ்டம்டா குமாரு. ஆனாலும் ஒனக்கு கொழந்தை, குட்டின்னு இருக்கு. பாத்துக்கோ’’

விஜியின் ஆலோசனையை எல்லாம் கேட்கும் நிலையில் டமாரு இல்லை. சாட்டிங் பைத்தியம் முத்திவிட்டிருந்தது.

அவள் பெயர் நந்தினி. வயது பத்தொன்பதாம். சாட்டிங்கில் பசங்களை மடக்கும் ஃபிகர்கள் எல்லோருக்குமே பத்தொன்பது வயதாக இருப்பது ஒரு ஆச்சரியகரமான ஒற்றுமை. சென்னையின் நுழைவாயிலில் இருக்கும் ஒரு பெண்கள் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாளாம். டமாரு தினமும் 4 மணிநேரமாவது நந்தினியுடன் சாட்டிங்கில் ஈடுபட்டான். ஒரு நாள் அவள் பிரவுசிங் சென்டருக்கு கீழிருந்த துணிக்கடைக்கு வருவதாகச் சொன்னாள். டமாரு ரொம்பவும் பரபரப்பாகி விட்டான்.

அன்று அவனுக்கு முக்கியமான வேலை இருந்தது. அவனது மனைவி கருவுற்றிருந்தாள். கன்சல்டேஷனுக்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தது. நந்தினியைச் சந்திக்க இயலாத சூழ்நிலை. எனவே விஜியிடம் ஒரு கோரிக்கை வைத்தான். ‘‘பச்சைத் தாவணியில் அவள் அக்காவோட வருவா. எப்படி இருக்கிறான்னு மட்டும் பார்த்து வைச்சுக்கோ. அவ இன்னால்லாம் செய்றான்னு நோட் பண்ணிக்கோ. மறுநாள் நான் சாட்டிங் பண்றப்போ அவளை நானே மறைஞ்சு நின்னு பார்த்தா மாதிரி ஃபிலிம் காட்டிக்கிறேன்’’ என்றான். விஜியும் பெரிய மனது வைத்து நண்பருக்காகச் சம்மதித்தான். இருந்தாலும் போயும் போயும் டமாருக்கு ஒரு ஃபிகர் சாட்டிங்கில் செட் ஆன வருத்தம் அவன் முகத்தில் தெரிந்தது.

அன்றிரவு டமாருவை செல்லில் பிடித்து நந்தினியின் உடல்வாகு, அவள் பேசும் ஸ்டைல், அவளது அக்கா குண்டாக இருந்தது, அவர்கள் வாங்கிய சுடிதார் கலர் போன்ற விவரங்களை விஜி சொன்னான். அவன் காலத்தாற் செய்த அந்த உதவிக்கு ரொம்பவும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக தழுதழுத்துச் சொன்னான் டமாரு. நாட்கள் கடந்தன. டமாருவின் போக்கில் நிறைய மாற்றம் ஏற்பட்டது. லேசாக முன் மண்டையில் விழுந்த வழுக்கையை மறைக்கும் விதத்தில் தலைவார ஆரம்பித்தான். சைடில் இருந்த நரைமுடியை மறைக்க ‘டை’ அடித்தான். டைட்டாக ‘டக்-இன்’ செய்ய ஆரம்பித்தான். அப்போதுதான் தொப்பை தெரியாதாம்.

ஒரு நாள் சாட் செய்துக் கொண்டிருந்தபோது ‘‘நாகேஸ்வரராவ் பார்க்கில் சந்திக்க விருப்பமா?’’ என்று நந்தினியிடம் கேட்டிருக்கிறான் டமாரு. நந்தினியோ ‘‘பார்க்குக்கு எல்லாம் வர முடியாது. கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை சாயுங்காலம் 6 மணிக்கு வர்றேன். பார்க்கலாம்" என்று கூறியிருக்கிறாள். டகாரு காத்திருந்தான். வெள்ளியும் வந்தது. மாலை 5 மணிக்கே பரபரப்பாகி விட்டான். வேர்க்க விறுவிறுக்க விஜியின் பிரவுசிங் சென்டருக்கு வந்தவன் ஃபேர் அண்டு லவ்லியும், பவுடரும் போட்டுக்கொண்டான். ஃபுல் மேக்கப்பில் டமாரு ஆஜர். சுமார் 2 மணிநேரம் கழித்து சோர்வாக வந்து சேர்ந்தான்.

‘‘என்ன டமாரு ஒர்க் அவுட் ஆயிடிச்சா?’’

‘‘அவளைப் பார்த்தேன் மாமு. ஆனாப் பேசலை’’

‘‘ஏன்டா?’’

"பாத்ததும் வயசைத் கண்டுபிடிச்சுட்டான்னா, அப்புறம் சாட்டிங்க்ல கூட வராமப் போயிட்டான்னா என்ன செய்ய?"

ஆனால் விதி யாரை விட்டது? நந்தினி குமாரை விடவில்லை. அவளது நச்சரிப்பாள் மெரீனாவின் கூட்டமற்ற இருண்ட முன்னிரவொன்றில் ஒருநாள் இருவரும் சந்தித்தார்கள். கிட்டத்தட்ட தன் உருவத்துக்கு சுடிதார் போட்டுவிட்டதைப் போன்றதொரு தோற்றத்துடன் இருந்த நந்தினியைக் கண்டு டமாரு 'டமால்' ஆனான். தன்னைப்போல் பிறரையும் நினைக்கும் அளவுக்கு அவன் மனம் விசாலமாக இல்லை.

விஜியுடன் அன்று இரவு டாஸ்மாக்கில் விடிய, விடிய கச்சேரி. விடிந்ததும் எழுந்து நேராக விஜி கடைக்கு வந்தான் குமாரு. யாஹூவின் சென்னை சாட்ரூம்.

"Hi"

"Hi"

"ASL Pls?" (Age, Sex, Location)

"I am kumaru 22/M/Chennai. Your ASL?"

"I am Bhuvana 19/F/Chennai"

புவனாவின் பூர்வீக புனைப்பெயர் 'நந்தினி' என்கிறது யாஹூ சாட் ஹிஸ்ட்ரி.

(நன்றி : யூத்ஃபுல் விகடன்)

21 ஜூன், 2011

அநாகரிகம்

ஒரு காலத்தில் பிட்டு படம் பார்க்க நாய் படாத பாடு படவேண்டியிருந்தது. எந்த தியேட்டரில் பிட்டு ஓட்டுவார்கள் என்பதை மோப்பம் பிடிப்பதற்குள் டங்குவார் அறுந்துவிடும். பரங்கிமலை ஜோதி தியேட்டரில் சிலவேளைகளில் அரிதாக பிட்டு இருக்கும். பலவேளைகளில் சும்மா மேலுக்கு காட்டி ஏமாற்றி விடுவார்கள். மவுண்ட்ரோடு கெயிட்டி சுத்தம். போஸ்டர் லெவலுக்கு கூட சீன் இருக்காது. ஆதம்பாக்கம் ஜெயலட்சுமியில் நினைத்தால் பிட்டு ஒட்டுவார்கள். இரும்புலியூர் அனுராக்கும் இப்படித்தான்.

காசியில் மட்டும் ஓர் அருமையான டீலிங் இருந்தது. சனி, ஞாயிறு காலை 9.30 காட்சிகள் மட்டுமே பிட்டு. சைக்கிள் டோக்கன் போடும் தாத்தாவிடம் நேராகப் போகவேண்டும். எதுவும் பேசாமல் ஒரு ரூபாய் காயினை அவரது கையில் திணித்தால், “இருக்கு” அல்லது “இல்லை” என்று ஒருவரியில் அன்றைய தலையெழுத்தை நிர்ணயித்து விடுவார். இந்த வசதி வேறெந்த தியேட்டரிலும் இல்லை.

பிட்டுபட ரசிகர்களுக்கு வாராது வந்த மாணிக்கம் போரூர் பானு. ஒரே ஒரு பிட்டு லட்சியம். குறைந்தது பத்து பிட்டு நிச்சயம். ஆபரேட்டருக்கு மூடு இருந்தால் மட்டுமே பிட்டுக்கு நடுவே படம் ஓட்டுவார். காஞ்சிபுரத்தில் இருந்தெல்லாம் ரசிகர்கள் படையெடுத்து வருவார்கள்.

ம்.. அதெல்லாம் ஒரு வசந்தக் காலம். சிடி, டிவிடி மலிவாகி தியேட்டர்களுக்கு மவுசு போயே போயிந்தி. ஆயினும் ஒரிஜினலான அக்மார்க் பிட்டுப்பட ரசிகர்கள் மட்டும் மீண்டும் அந்த கனாக்காலம் நனவாகாதா என்கிற ஏக்கத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். கனவுகள் மெய்ப்படும் காலமிது.

அப்போதெல்லாம் அடித்து அடித்து தேய்ந்துப்போன ரீலில் ‘பிட்டு’ க்ளியராக தெரியாது. நவீன தொழில்நுட்பம் அக்குறையினை போக்கியிருக்கிறது. க்யூப் டிஜிட்டல் புரொஜெக்‌ஷனில், டி.டி.எஸ். சவுண்ட் மிக்ஸிங்கில் நமக்கு காணக் கிடைக்கிறது ‘அநாகரிகம்’.

சென்னை கே.கே.நகர் விஜயா திரையரங்கில் திரையிடப்பட்டிருக்கிறது. குஜால் படம் திரையிடும் திரையரங்குகளின் பெயர்கள் மட்டும் விஜயா, ஜெயலட்சுமி, ஜோதி, பானு என்று கவர்ச்சிகரமான நாமகரணங்களை சூட்டியிருப்பது யதேச்சையாக நடந்த நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதெல்லாம்தான் ஆண்டவன் சித்தம்.

அநாகரிகம் படத்தின் சதையைப் பார்ப்போம்.

நாயகன் விபு ஒரு லெக்சரர். நாட்டுக்கட்டை மனைவி வகிதா. முதல் காட்சியே முதலிரவுதான். நாயகியின் வசனம், “முதலிரவுக்கு ரெண்டு விஷயம் ரொம்ப முக்கியம். ஒண்ணு நெஞ்சு..”. நாயகன் அதிர்ச்சியோடு பார்க்க, “இன்னொன்னு இந்த மஞ்சு” என்று பஞ்ச் டயலாக் அடிக்கிறார். தியேட்டர் முழுக்க பரவச அலை சுனாமியாக அடித்து ரசிகர்கள் ஐந்து நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக விசில் அடிக்கிறார்கள்.

விபுவை விட்டுவிடுவோம். வழக்கமான பிட்டுபட ஹீரோவாகதான் இருக்கிறார். வகிதா வாவ். இவ்வளவு களையான முகம் கொண்ட பெண்ணை இதுவரை சினிமாவில் பார்த்ததே இல்லை. முகம் வரைக்கும் லட்சுமிகரமாக இருக்க, கழுத்துக்கு கீழே தொடங்கி ஜோதிலட்சுமிகரம். முதுகிலும், அதற்கு நேரெதிராக முன்னாலும் நச்சென்று அவருக்கு அமைந்திருக்கிறது அழகாக இரு மச்சம். தொப்புளிலிருந்து இரண்டே முக்கா இஞ்ச் இறக்கிதான் கொசுவம் வைக்கிறார்.

ஒரு காட்சியில் கணவரை புடவை கட்டி விடச் சொல்கிறார் வகிதா. கைகளையே பயன்படுத்தாமல் கொசுவம் சொருக வேண்டும் என்பது கண்டிஷன். இந்தக் காட்சியில் இயக்குனர் தனது படைப்பாற்றல் திறனை முழுமையாக கொட்டித் தள்ளியிருக்கிறார். க்ளோசப்பில் இக்காட்சியை படம் பிடித்த கேமிராமேனுக்கு வகையான இடத்தில் நிச்சயம் ஒரு மச்சம் இருக்க வேண்டும்.

ஒழுங்காக ஓடிக் கொண்டிருக்கும் ‘இல்லற’ வாழ்வில் திடீர் புயலாய் நுழைகிறார் தொங்கும் தோட்டமான பாபிலோனா. ஹீரோயினுக்கு இவர் தோழி. ஏதோ வேலை விஷயமாக சென்னைக்கு வருகிறார். அடிப்படையில் இவரது கணவர் ஒரு டொக்கு. இனி கதை எப்படிப் போகுமென்று யூகிப்பதில் உங்களுக்கு சிரமமிருக்காது. லெக்சரரை கணக்கு பண்ண ஜாக்கெட், பாவாடை மட்டுமே அணிந்து புடவைக்கு இஸ்திரி போடுகிறார். துண்டு மட்டும் கட்டிக்கொண்டு ஹீரோவிடம் கசமுசாவுக்கு ‘ட்ரை’ செய்கிறார். ஹீரோ முரண்டு பிடிக்க.. எசகுபிசகான சந்தர்ப்பத்தில் வகிதா பார்த்துவிட.. முடிச்சு மேல் முடிச்சாக விழுகிறது திரைப்பாவாடையில். கணவன், மனைவி பிரிகிறார்கள்.

பின்னர் தனியாக வசிக்கும் லெக்சரரிடம் ட்யூஷன்(!) படிக்க வருகிறார் ஒரு ஏழைப்பள்ளி மாணவி. கெமிஸ்ட்ரி எடுக்கும் மாஸ்டருக்கு மாணவியிடம் கெமிஸ்ட்ரி பற்றிக் கொள்கிறது. ஆனால் ஒரேயடியாக ‘மேட்டரை’ முடிக்காமல், துண்டு துண்டாக ‘பிட்டு’ ஓட்டி, திருமணத்துக்கு வற்புறுத்துகிறார் லெக்சரர். தன்னையும், தன் குடும்பத்தையும் பொருளாதார ரீதியாக பலப்படுத்தும் மாஸ்டரிடம் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவிக்கிறாள் மாணவி. கடைசியில் காதலனை கைபிடித்தாளா, லெக்சரர் மனைவியோடு இணைந்தாரா என்பதை கே.கே.நகர் விஜயா திரையரங்கில் ஐம்பது ரூபாய் டிக்கெட் வாங்கிப் பார்த்துக் கொள்ளவும்.

மாணவி பாத்திரத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் நாலு குழந்தைக்கு அம்மா மாதிரியான சைஸில் ஒருமாதிரியாக தொளதொளவென இருக்கிறார். இதுதான் படத்தின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட்.

கச்சிதமாக மூன்று ஃபிகர்களையும் மாற்றி மாற்றி புரட்டி எடுக்கும் ‘கவுரவமான’ வேடம் கிடைக்க, ஹீரோ எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தாரோ தெரியவில்லை.

புனேவில் ஒரு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில், மக்களுக்கு ‘விழிப்புணர்வு’ ஏற்படுத்தும் நோக்கில் இப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணதேவன். படத்தின் தயாரிப்பாளர் ஒரு டாக்டர். அதென்னவோ தெரியவில்லை, பிட்டு படம் எடுப்பவர்களெல்லாம் டாக்டர்களாகவே இருக்கிறார்கள். இயக்குனர் எதிர்ப்பார்க்கும் ‘விழிப்புணர்வு’ நிச்சயம் ஏற்படும். ஏனெனில் படம் பார்த்த ஒரு ரசிகனும் இரவு முழுக்க தூங்க இயலாமல், விழித்துக் கொண்டே படம் ஏற்படுத்திய அதிர்வுகளை உணர்வான்.

‘ஏதோ மோகம், ஏதோ தாகம்’ பாடல் மிகப்பொருத்தமான இடத்தில் சொருகப்பட்டு, அட்டகாசமாக படமாக்கப்பட்டிருக்கிறது. இப்பாடலின் ஒரிஜினல் கூட இவ்வளவு சிறப்பாக அமைந்ததில்லை. பின்னணி இசையும் ஓக்கே. பிட்டு படங்களுக்கேயான பிரத்யேக மரபார்ந்த இசைமரபை உடைத்தெறிந்திருக்கிறார் இசையமைப்பாளர்.

வெறுமனே ‘சதை’யை மட்டும் நம்பி படம் எடுக்காமல், ‘கதை’க்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பதால், பிட்டுபட பாரம்பரியத்தில் அநாகரிகத்துக்கு தனி இடம் நிச்சயமுண்டு. இவ்வகையிலான சாஃப்ட் போர்ன் படங்கள் நிறைய வரும் பட்சத்தில் விஜயா, ஜெயலட்சுமி போன்ற திரையரங்குகள் மறுமலர்ச்சி அடையக்கூடும்.

அஜால், குஜால் ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம்!

18 ஜூன், 2011

‘நூல்’ பாண்டியன்

சென்னை கே.கே.நகரில் இருக்கும் அந்தக் கடையின் கதவை திறந்ததுமே ‘குப்’பென்று அடிக்கிறது புத்தகவாசனை.

“இது வெறும் பேப்பரோட வாசனை இல்லைங்க. அறிவு வாசனை” சிரிக்கிறார் கடைக்காரர் ‘நூல்’ பாண்டியன். ‘நூல்’ என்பது அவர் படித்து வாங்கிய பட்டமல்ல. மக்களாக முன்வந்து அளித்த பட்டம்.

நாற்பத்தியாறு வயதான பாண்டியன், ஒரு வித்தியாசமானத் தொழிலை செய்துவருகிறார். பழைய புத்தகங்களை சல்லிசான விலையில் விற்று வருகிறார். இதுதான் வித்தியாசமா என்று அவசரப்பட்டு கேட்காதீர்கள்.

அரிய நூல்களை தேடிக் கண்டுபிடித்து, தனது வாடிக்கையாளர்களுக்கு தருவதுதான் பாண்டியனின் தொழில். அதிலும் அந்நூல் வெளியான முதல் பதிப்பகத்தின், முதல் பதிப்பை தேடிக்கண்டுபிடித்து வாங்கித் தருவதுதான் இவரது ஸ்பெஷாலிட்டியே. இவர் வெறும் விற்பனையாளர் மட்டுமல்ல, அரியநூல்கள் சேகரிப்பாளரும் கூட. 1826ல் இலங்கையில் பதிப்பிக்கப்பட்ட தமிழ் பஞ்சாங்கம் கூட இவரது சேகரிப்பில் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நூற்றாண்டு கண்ட நிறைய நூல்களை நூல் பாண்டியனின் கடையில் நீங்கள் நிறைய பார்க்கலாம்.

இவரது சேகரிப்பில் இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்? உத்தேசமாக யூகித்துச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஒரு லட்சம், ரெண்டு லட்சம், ஐந்து லட்சம்?

தயவுசெய்து நம்புங்கள். சகட்டுமேனிக்கும் எல்லாவகை நூல்களுமாக, சுமார்அரை கோடி நூல்களை சேகரித்து வைத்திருக்கிறார் பாண்டியன். ‘நூல்’ பட்டம் இவருக்கு பொருத்தமானதுதானே?

இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் நூல்களை வைத்திருந்தாலும், தன்னிடம் இருக்கும் ஒவ்வொரு நூலையும் இவருக்கு தெரியும். ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை வாடிக்கையாளர் தேடிவருகிறார் என்றால், அதைவிட சிறந்த புத்தகம் தன்னிடம் இருந்தால், அதைப்பற்றிச் சொல்லி சிபாரிசு செய்கிறார்.

கல்லூரி-பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், ஆன்மீகம், வைத்தியம், சித்தாந்தம், சுயமுனைப்பு நூல்கள், சிறுபத்திரிகைகள், காமிக்ஸ்கள், வார இதழ்கள், நாவல்கள் என்று எல்லாவகை நூல்களையும், எல்லா மொழிகளிலும் சேகரித்து வைத்திருக்கிறார்.

கே.கே. நகர் கடை தவிர்த்து, ஒரு கிடங்கிலும் நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இங்கும் இடம்போதாமல் பாண்டியன் வாடகைக்கு குடியிருக்கும் வீடு முழுக்க நூல்மயம்தான். மனைவியும், இரண்டு மகன்களும் நூல்கள் போக மீதமிருக்கும் இடத்தில்தான் புழங்குகிறார்கள்.

தேவக்கோட்டை இவரது பூர்வீகம். சென்னையில்தான் பள்ளிப் படிப்பு. உறவினர்கள் பலரும் பதிப்பகம் நடத்தி வருகிறார்கள். ‘நூல்’ தொடர்பான தொழில்தான் தனது வாழ்க்கை என்று அப்போதே முடிவு எடுத்து விட்டார். அதிலும் அரிய, பழைய நூல்கள் மீது அடாத காதல்.

“ஆரம்பத்தில் வீடு வீடா பேப்பர் போட்டுகிட்டு இருந்தேன். அப்புறம் சொந்தமா பேப்பர் ஏஜென்ஸி நடத்தினேன். இது தவிர்த்து நிறைய சின்ன சின்ன வேலைகளும் செய்துக்கிட்டிருந்தேன். என்ன வேலை செஞ்சாலும் பழைய புத்தகங்களை நோக்கியே திரும்ப திரும்ப வந்துக்கிட்டிருந்தேன்.

இப்படியே இருந்தா வேலைக்கு ஆகாதுன்னு சொல்லி அப்பா என்னை அரசு நூலகத்தில் நூலகரா சேர்த்து விட்டாரு. நூலகத்துலே இருக்குறது பெரும்பாலும் புதிய புத்தகங்கள். அதனாலே ஏனோ அந்த வேலையும் ஒட்டலை.

சேகரிப்பில் இருந்த புத்தகங்களை வெச்சு தனியா ‘ஆதிபராசக்தி பழைய புத்தகக்கடை’னு கடை ஆரம்பிச்சிட்டேன். விளையாட்டா முப்பது வருஷம் ஓடிடிச்சி...” நினைவுகளில் மூழ்குகிறார் பாண்டியன். பாருங்கள், நினைவுகள் கூட ‘பழையவை’தான்.

சென்னையின் கல்வியாளர்கள், சினிமா இயக்குனர்கள், புத்தகப் பிரியர்கள் என்று பலருக்கும் ‘நூல்’ பாண்டியன் அறிமுகமானவர்தான். வெளியூர்களில் இருப்பவர்களும் கூட தங்களுக்கு எந்த புத்தகம் வேண்டுமென்றாலும், போன் அடித்து சொல்லிவிடுவார்கள். தனது சேகரிப்பில் இல்லாத புத்தகமென்றாலும் இரண்டு மூன்று நாட்களில் ‘எப்படியோ’ வரவழைத்துக் கொடுத்துவிடுகிறார். ஆராய்ச்சி மாணவர்கள் பலருக்கும் இவரது கடை அட்சயப் பாத்திரம். அரிய நூல்கள் என்றால் விலையும் எக்குத்தப்பாக இருக்குமே என்று அஞ்சவேண்டாம். நூல்களைப் போலவே விலையும் கூட ‘பழைய’ விலைதான்.

இவ்வளவு நூல்களை சேகரிக்க முடிகிறதென்றால், இவரிடம் ஒரு பெரிய படையே இருக்கவேண்டும் இல்லையா? இல்லை. ‘நூல்’ பாண்டியன் ஒரு ஒன்மேன் ஆர்மி. காலையில் எல்லோரும் அலுவலகத்துக்கு கிளம்புவதைப் போல, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் கிளம்பிவிடுகிறார். ஒவ்வொரு பழைய கடையாக சென்று, அரிய நூல்கள் கிடைக்கிறதா என்று தேடிக்கொண்டே இருக்கிறார். மாலை மூன்று மணிவரை தேடலும், சேகரிப்பும்தான்.

மாலையில் கூடு தேடி வரும் பறவையைப் போல கடைக்கு வருகிறார். நாலு மணி முதல் இரவு ஒன்பதரை வரைதான் இவரது கடை திறந்திருக்கும். வார விடுமுறை எல்லாம் இல்லை. வேலைக்கும் தனியாக ஆட்கள் வைத்துக் கொள்வதில்லை.

இத்தொழிலில் வருமானம் என்று பெரியதாக எதுவும் கிடைப்பதில்லை. இவரிடம் புத்தகம் வாங்கிச் சென்று படித்து தேர்ந்த மாணவர்கள், இனிப்பு கொடுக்க வருவதுண்டு. பழைய புத்தகம் வாங்கிப் படித்து போட்டித்தேர்வுகளில் வென்று வேலைக்குச் சேர்ந்தவர்களும் இவரை மறப்பதில்லை. இந்த ஆத்மத் திருப்திக்காகதான் இப்பணியை விடாமல் செய்துக் கொண்டிருக்கிறார்.

ஊருக்கெல்லாம் புத்தகம் விற்கிறாரே, ‘நூல்’ பாண்டியன் என்ன புத்தகங்களை படிக்கிறார்?

“முழுக்க முழுக்க ஆன்மீகப் புத்தகங்களைதான் படிப்பேன். ஆனாலும் வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச் சொல்லணும்னு, மத்த புத்தகங்களை பத்தி மேலோட்டமா வாசிச்சி தெரிஞ்சி வச்சிப்பேன்.

இப்பல்லாம் மக்கள் புத்தகம் வாசிக்கிறது ரொம்ப குறைஞ்சிடிச்சி சார். எல்லாரும் டிவி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அச்சிலே வாசிக்கிறது மனசுலே பதியறது மாதிரி, டிவியிலே பார்க்கிறது பதியாதுன்னு அவங்களுக்கு ஏன் தான் புரிய மாட்டேங்குதுன்னு தெரியலை” என்று அலுத்துக் கொள்கிறார்.

பேசிக்கொண்டிருக்கும் போதே, ஒரு பதினெட்டு வயது மதிக்கத்தக்க ‘வாசகர்’ உள்ளே நுழைகிறார்.

“சார். பொன்னியின் செல்வன் கிடைக்குமா?”

“கிடைக்கும் தம்பி. மொத்தம் அஞ்சி பாகம். இப்போ வர பதிப்புகளில் எல்லாம் படமே இருக்காது. அந்த காலத்துலே கல்கியில் வந்ததையெல்லாம் சேர்த்து வெச்சி ‘பைண்டிங்’ பண்ணி புக்கா கிடைக்கும். மணியமோட படங்கள் அட்டகாசமா இருக்கும். அதை வாங்கிக்குங்க” – இதுதான் ‘நூல்’ பாண்டியன்.

நூல் பாண்டியனின் தொடர்பு எண் : 9444429649

நூல்களை காப்பது எப்படி?

வீட்டில் சிறியளவில் நூலகம் வைத்திருப்பவர்களுக்கு பெரிய தொல்லை. புத்தகத்தை அரிக்கும் பூச்சிகள். புத்தக அடுக்குகளில் படித்துவிட்டு வைத்த பல புத்தகங்களை, சில காலம் கழித்து எடுத்துப் பார்த்தோமானால் மொத்தமாக அரித்து வீணாகிவிட்டிருக்கும்.

ஐம்பது லட்சம் புத்தகங்களை எந்தவித சேதாரமுமில்லாமல் பாதுகாக்கும் ‘நூல்’ பாண்டியன் சுலபமான ஒரு வழிமுறையை சொல்கிறார்.

“ஆறு மாதம் ஒரு புத்தகம் ஒரே இடத்தில் எந்த அசைவுமின்றி வைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் அதில் பூச்சிகள் குடிபுகும். ஒன்றுமே செய்யவேண்டாம். அடுக்கில் இருக்கும் புத்தகங்களை மூன்று மாதத்துக்கு ஒருமுறை சும்மா கையில் எடுத்து, மேலோட்டமாக பிரித்து பார்த்துவிட்டு அப்படியே வையுங்கள் போதும். எந்தப் பூச்சியும் வராது. நான் புத்தகங்களை பாதுகாக்கும் ‘டெக்னிக்’ இதுதான்”

(நன்றி : புதிய தலைமுறை)

16 ஜூன், 2011

திமுக ஏன் தோற்றது?

ஒரு மாத கால மவுனத்தை கட்டுடைக்க வேண்டிய நேரம் வந்தாயிற்று. இன்று இதை பேசாவிட்டால், நாளையாவது பேசித் தொலைக்க வேண்டிய தர்மசங்கடம் ஏற்பட்டுவிடும். இல்லாவிட்டால் நாளன்னைக்காவது பேசியாக வேண்டும். திராவிட இயக்கத்துக்கு வாக்கப்பட்டு விட்ட ஒரே பாவத்துக்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் திமுக தோற்றுவிட்டதைப் பற்றி நீ என்ன எழுதி கிழித்தாய் என்று இந்த சமூகம் தினம் தினம் குனியவைத்து கும்மிக் கொண்டிருக்கும்.

திமுக ஏன் தோற்றது?

கலைஞர் முதல் கடைக்கோடி தொண்டன் வரை திரும்ப திரும்ப இக்கேள்வியை தனக்குதானே கேட்டுக் கொண்டிருக்கிறான். இலவச டிவி கொடுத்தோம். ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்தோம். மளிகைப் பொருள் கொடுத்தோம். அவ்வளவு ஏன் தேர்தலில் ஓட்டுப்போட ஊக்கத்தொகையாக ஒவ்வொரு வாக்காளருக்கும் பணம் கூட கொடுத்தோம். அப்புறமும் ஏன் தோல்வி?

ஊடகங்கள் சில பட்டியல்களை தருகிறது. அறிவுஜீவிகள் வேறு பட்டியல்களை தருகிறார்கள். பொதுமக்கள் ஏதேதோ காரணங்களை அடுக்குகிறார்கள். கலைஞரோ 1950களின் ஸ்டைலில், பார்ப்பனர்களால்தான் தோற்றோம் என்கிறார். எந்தக் காலத்தில் பார்ப்பனர்கள் இவரை ஜெயிக்க வைத்திருக்கிறார்கள், இந்த தேர்தலில் மட்டும் குறிவைத்து தோற்கடிக்க?

ரஜினிகாந்த் ஒருவரை தவிர தமிழ்நாட்டில் யாரை கேட்டாலும், சூரியனுக்குதான் வாக்களித்தோம் என்கிறார்கள். அப்படியென்றால் சூரியனுக்கு பட்டனை அமுக்க, இரட்டை இலைக்கு ஓட்டு விழுந்ததா என்று மாண்புமிகு புரட்சித்தலைவிக்கே கூட சந்தேகம் இருப்பதாக தெரிகிறது. ஏனெனில் இருநூறு இடம் தம் கூட்டணிக்கு கிடைத்ததை இன்னமும் நம்பாமல், “சசி.. என் கையை ஒருவாட்டி கிள்ளு...என்று அம்மா அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறாராம். எதிர்க்கட்சித் தலைவர் கேப்டனோ, இதெல்லாம் சோமபான மாயையோ என்று குழம்பி, அடிக்கடி முகத்தில் தண்ணீர் தெளித்து தான் நிதானமாக இருப்பதை உறுதி செய்துக் கொள்கிறாராம்.

மின்வெட்டு, ஈழப்பிரச்சினை, ஸ்பெக்ட்ரம், பல்வேறு தொழில்களில் குடும்ப ஆதிக்கம், மணல் கொள்ளை, சரமாரி ஊழல், அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் குறுநில மன்னர் மனோபாவம், உள்ளாட்சி பிரதிநிதிகளின் அராஜகம் என்று ஆயிரம் காரணங்கள் வரிசையாக பட்டியலிடப்படுகிறது.

இந்தப் பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் நாம் மிகச்சுலபமாக உடைக்க முடியும், அவையெல்லாம் தேர்தல் தோல்விக்கு காரணமாக இருந்திருக்க முடியாதென்று.

உதாரணத்துக்கு மின்வெட்டை எடுத்துக் கொள்வோம். திமுகவுக்கு வாக்கு விழாததற்கு காரணமாக மின்வெட்டினை பொதுமக்கள் பலரும் பரவலாக சொல்லுவதை கேட்கமுடிகிறது. குறிப்பாக திமுக ஆண்ட காலத்தில் திருமணம் முடித்த பலரும், மாமனார் வீட்டில் முதலிரவில் கூட மின்சாரம் இல்லாததால் இருட்டில் தடவி, தட்டுத் தடுமாறி கடுப்பாகியிருக்கிறார்கள். மனைவியின் கையை பிடிப்பதாக நினைத்து, மாமியாரின் கையை (வேண்டுமென்றே?) பிடித்துவிட்ட அதிர்ஷ்டக்கார மாப்பிள்ளைகளும் கூட உண்டு. ‘துப்பு கெட்ட மனுஷாவென்று முதல்நாளே பொண்டாட்டியிடம் திட்டும் வாங்கியிருக்கிறார்கள். இவர்களின் பாவமே திமுக ஆட்சியை தலைமுழுகியது என்பது ஒரு சாரார் வாக்கு.

தயவு தாட்சணியமின்றி இக்காரணத்தை எல்லாம் நீக்கிவிடலாம். ஆட்டைக்கே சேர்க்க வேண்டியதில்லை. மின்துறை அமைச்சராக இருந்த ஆற்காட்டார் ஏதோ கடைசி இரண்டு வருடங்களில்தான் கிடாவெட்டு மாதிரி மின்வெட்டை போட்டுத் தள்ளியதாகவும், அதற்கு முந்தைய மூன்று வருடங்களில் தமிழ்நாட்டையே ஜெகஜ்ஜோதியாக வைத்திருந்தது மாதிரியான தொனி இந்த கணிப்பில் தெரிகிறது. ஆற்காட்டார் அமைச்சராக கையெழுத்திட்ட அடுத்த நொடியே கோட்டையிலேயே மின்வெட்டு நிகழ்ந்தது என்பதுதான் வரலாறு.

மின்வெட்டும், ஈழத்தமிழர் பிரச்சினையும் தேர்தலில் பாதிப்பு உண்டாக்கியிருந்தால் 2009 பாராளுமன்றத் தேர்தலிலேயே திமுக, ‘கப்புவாங்கியிருக்க வேண்டும். வாங்கவில்லையே? அதென்ன கடைசி இரண்டு வருடங்களில்தான் இப்பிரச்சினை மக்களை புளியமரத்தை புளிக்காக உலுக்குவது மாதிரி உலுக்கியதா என்றும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

தமிழகம் தழுவிய அளவில் தோழர்களை வைத்து, திமுக ஏன் தோற்றது என்கிற கேள்வியை முன்வைத்து ஒரு கருத்துக் கணிப்பினை நடத்தினோம். தேர்தலுக்கு முன்பும், பின்பும் கருத்துக் கணிப்புக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்திருந்தாலும், பெரிய மனது வைத்து தேர்தல் படுதோல்விக்குப் பிறகாவது கருத்துக் கணிப்பு நடத்த அனுமதி தரவேண்டும் என்று கமிஷனரை நாம் கேட்டுக் கொண்டோம். அவரிடமிருந்து உரிய பதில் வராததால் மவுனம் சம்மதம்என்று எடுத்துக்கொண்டு நம்முடைய கருத்துக் கணிப்புப் படையினர் தமிழகமெங்கும் கரும்புத் தோட்டங்கள், வாய்க்கா வரப்பு, கண்மாய் கரையென்று இண்டு இடுக்கு விடாமல் புகுந்து கணிப்பெடுத்து, கள்ள ஜோடிகள் ஒதுக்குப்புறமாக ஒதுங்கிய சில இடங்களிலும் கணிப்புக்காக நோட்டை நீட்டி, தர்ம அடி வாங்கியும் கூட தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.

இந்த கணிப்பில் எல்லாக் காரணங்களையும் ஓரம் கட்டி, ஒரு முக்கியமான காரணம் தெரிய வந்திருக்கிறது. இக்காரணத்தைப் பற்றி எந்த ஊடகமும், அறிவுஜீவிகளும் இன்னமும் வாய் திறக்காதது நமக்கு அதிர்ச்சியையும், அயர்ச்சியையும், அலுப்பையும் ஒருசேர அளிக்கிறது.

இம்முறை வாக்களித்தவர்களில் சுமார் 30 லட்சம் பேர் இளைஞர்கள். ஓட்டு போடும் மெஷின் என்பது எடை பார்க்கும் மெஷின் மாதிரி இருக்கும் என்று நினைத்து வாக்குச்சாவடிக்குப் போனவர்கள். கொளத்தூர் தொகுதியில் இளைஞர் ஒருவர் மெஷின் மீது ஏறிநின்று எடை பார்த்த காரணத்தாலேயே, அந்த மிஷினில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கையில் தெரியாமல் வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடியான சம்பவம் நீங்கள் அறிந்ததே. இவர்களில் சுமார் 29 லட்சத்து தொண்ணுற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணுற்றி ஒன்பது பேர் இரட்டை இலைக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

இந்த இளைஞர்கள் அனைவருமே கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திரும்பவும் நிறைய படங்களுக்கு வசனம் எழுதிவிடுவாரோ என்று அஞ்சியே, அம்மா ஆட்சிக்கு ஆதரவளித்ததாக குறிப்பிடுகிறார்கள். அம்மா ஆட்சிக்கு வந்தால் சசிகலா சத்தியமாக மீண்டும் திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லையென்று சத்தியப் பிரமாணம் செய்து, ஒவ்வொரு இளைஞருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும் நம்முடைய கருத்துக் கணிப்பின்போது அறிந்துகொள்ள முடிந்திருக்கிறது (ஜாஃபர் சேட் என்னத்தைதான் உளவுத்துறையை வைத்து கணிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தாரோ தெரியவில்லை)

இளைஞர்களின் அச்சம் நியாயமானதுதான்.

கலைஞரும் கொஞ்சம் நஞ்சமாகவா ஆடியிருக்கிறார்? கடந்த ஐந்து ஆண்டுகளில் உளியின் ஓசை, பெண் சிங்கம், இளைஞன் என்று புகுந்து விளையாடியிருக்கிறார் அல்லவா? வசனம் எழுதுவது மட்டுமன்றி சினிமா பிரத்யேகக் காட்சிகளிலும், விழாக்களிலும் கலந்துகொண்டு சினிமாக்காரர்களை ஹிட்லர் மாதிரி சித்திரவதையும் செய்திருக்கிறார். அந்த சித்திரவதைகளை நேரடியாக கலைஞர் டிவியில் ஒளிபரப்பி, தமிழகத்தின் ஒவ்வொரு இளைஞனும் இந்த ஆட்சியை ஒழித்தாக வேண்டும் என்று சபதம் மேற்கொள்ளுமாறும் செய்திருக்கிறார்.

எந்த ஜென்மத்தில் நாம் செய்த புண்ணியமோ, இன்றுவரை ‘உளியின் ஓசைகேட்டதுமில்லை, பார்த்ததுமில்லை. ஆனால் பெண் சிங்கத்துக்கு இரையாகிவிட்டோம். ஒரு ஞாயிறு மதியம் அலுப்பாக தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி, “தலைவரின் ஆணை. ஆதம்பாக்கம் ஜெயலஷ்மியில் பெண் சிங்கம்பார்த்தே ஆகவேண்டும் என்று கூறி, இளம்பெண்ணை கதற கதற கற்பழிக்க இழுத்துப் போவது மாதிரி இழுத்துக் கொண்டுப் போனார்கள் கட்சி நிர்வாகிகள். ஒரு நாடறிந்த பத்திரிகையாளனையே இப்படி கைதியாக்கி இழுத்துப் போனார்களே, சாதாரணத் தமிழ் இளைஞர்களை என்ன பாடு படுத்தியிருப்பார்கள்? இவர்கள் படுத்திய பாட்டை விட, கலைஞர் படத்தில் வசனம் எழுதி படுத்திய பாடு அமோகமானது. (படம் பற்றிய நம்முடைய திரைப்பார்வையை ஏற்கனவே விலாவரியாக எழுதியிருக்கிறோம். இங்கே அமுக்கி அவஸ்தைப்படவும்).

இளைஞன்திரைப்படத்தை காணும் விபத்தும் கூட இதேபோல நமக்கு தவிர்க்கவியலா சந்தர்ப்பத்தில் எதிர்பாராமல் ஏற்பட்டு விட்டது. இளைஞனைப் பொறுத்தவரை கலைஞரின் வசனம் என்பதைவிட கொடுமையான விஷயம் கவிஞர் பா.விஜய் நாயகன் என்பதுதான். பொன்னர் சங்கரையும் தவிர்க்க இயலாத சூழலில் பார்த்துவிட்டு, நாம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்.

ஏதோ கலைஞர் ஆசைப்பட்டு வசனம் எழுதினார், படம் வெளியானது என்றில்லாமல் ஒரு நாளைக்கு 248 முறை கலைஞர் டிவியில் ட்ரைலர் காட்டியதும், படங்கள் அமோகமாக ‘அவதார்வசூலை முறியடித்துவிட்டதாக கலைஞருக்கு சில அல்லக்கைகள் கணக்கு காட்டியதும், நம் முப்பது லட்சம் இளைஞர்களையும் எரிமலையாய் குமுறச் செய்துவிட்டது. ரஜினியின் ரோபோவுக்கே 100வது நாள் போஸ்டர் ஒட்டப்படாத நிலையில் உளியின் ஓசை, பெண் சிங்கம், இளைஞன் ஆகிய படங்களுக்கு 100, 175, 250 நாட்களுக்கு போஸ்டர் அடித்து கும்மியடித்தார்கள் உடன்பிறப்புகள். கலைஞரும் நிஜமாகவே தனது படங்கள் ஓடுவதாக நினைத்து பொன்னர் சங்கர் என்கிற அடுத்த படத்துக்கும் உற்சாகமாக வசனம் எழுதிவிட்டார். நல்லவேளையாக தேர்தலுக்குப் பிறகே இப்படம் வெளிவந்ததால், திமுக 20 ப்ளஸ் சீட்டுகளையாவது வெல்ல முடிந்தது.

கலைஞர் மீண்டும் ‘தீரன் சின்னமலைஎன்கிற திரைக்காவியத்துக்கு எழுத்தோவியம் தீட்டவிருப்பதாக ஊருக்குள் பேசிக்கொள்கிறார்கள். செய்தி கேள்விப்பட்டதிலிருந்தே, அம்மா ஆட்சி வந்தும் கூட தங்களுக்கு விடிவுக்காலம் இல்லையா என்று இளைஞர்கள் மனம் வெதும்பி போயிருக்கிறார்களாம்.

கலைஞரே; தமிழினத் தலைவரே! கழகத்தையும் நாட்டையும் காக்கும் மாபெரும் பொறுப்பை அறிஞர் அண்ணா தங்களிடம்தான் ஒப்படைத்திருக்கிறார். சினிமா வசனம் எழுதுவதிலிருந்து உங்கள் பேனாவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள். பிறகு, தமிழினமே தங்களை தூக்கி தலையில் வைத்துக் கொண்டாடப் போவதைப் பாருங்கள்.

13 ஜூன், 2011

ஆரண்ய காண்டம்

படத்தில் ‘கதைஎன்கிற வஸ்து இல்லாததாலேயோ என்னவோ, தலைப்பிலேயே முழு கதையையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். நாடு ஒரு காடு, மனிதர்கள் விலங்குகள் இதுதான் ஒரு வரி கதை. இழப்பதற்கு எதுவுமில்லை என்கிற நிலையில் இருப்பவன், எதை வேண்டுமானாலும் பெற முடியும் என்கிற எளிய சூத்திரம் இறுதியில் வலியுறுத்தப்படுகிறது.

சினிமா என்பது ஒரு கதைசொல்லி ஊடகம் என்று தமிழ் சினிமாவின் முன்னோடிகள் அவசர அவசரமாக முடிவெடுத்திருக்கிறார்கள். தமிழில் சினிமா வந்து எண்பதாண்டுகள் கழித்து, ‘இல்லை. சினிமா என்பது ரசிகனுக்கு அனுபவத்தை ஏற்படுத்தும் ஊடகம்என்று ஆரண்ய காண்டம் அழுத்தம் திருத்தமாக மறுத்திருக்கிறது.

இப்படம் எந்த கதையையும், கருத்தையும் வலியுறுத்தவில்லை. முதல் காட்சி தொடங்கி, இறுதிக்காட்சி வரை உங்களுக்கு பிரேம்-பை-பிரேமாக வழங்குவது காட்சியனுபவத்தை மட்டுமே. முதல் காட்சி, அடுத்தக் காட்சிக்கு சங்கிலிப் பிணைப்பாக இருக்க வேண்டும் என்பது அழுத்தமான விதி. அனாயசமாக இவ்விதியை உடைத்திருக்கிறார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. லீனியர் அல்லது நான்லீனியர் என்கிற இரண்டே சாத்தியங்கள் கொண்ட திரைக்கதை கட்டமைப்பை, அசால்ட்டாக odd வரிசையில் அடுக்கியிருக்கிறார் (வானம் படத்தில் மொக்கையான காட்சிகளால் சப்பையாகிவிட்ட மேட்டர் இது).

கமல்ஹாசனும், விக்ரமும் நடித்திருக்க வேண்டிய படம். நம்ம ஷோதான் நல்லா இருக்காதேஎன்பதால் ஜாக்கிஷெராப்பும், சம்பத்தும். தனக்கு தொடர்பே இல்லாத கலாச்சாரத்தை கூட நன்கு உள்வாங்கி, சிறப்பான திறமையை நல்ல நடிகனால் வெளிப்படுத்த இயலும் என்பதற்கு ஜாக்கி நல்ல உதாரணம்.

படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் வன்முறையாளர்கள் கொஞ்சம் மிகைப்படுத்தி காட்டப்பட்டிருக்கிறார்கள் என்றாலும், வசனங்கள் மூலமாக அக்குறையை போக்க இயக்குனர் முற்பட்டிருக்கிறார். நிழல் காரியங்களில் ஈடுபட்டிருக்கும் கும்பலின் தலைவனுக்கு முதுமை ஏற்படுகிறது. துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவதை தவிர்க்கிறார். அவரது தளபதியாக இயங்கும் இளைஞன், ஒரு கட்டத்தில் “டொக்கு ஆயிட்டீங்கஎன்கிறான். அவசரத்தில், ஆத்திரத்தில் உதிர்க்கப்பட்ட இந்த டொக்குஎன்கிற சொல்தான் படத்தின் காட்சி விளைவுகளுக்கான மையப்புள்ளி.

அவசரக் காரியமாக காரில் பயணித்துக் கொண்டிருக்கும் சம்பத்திடம், அவரது மனைவி “என்ன சமையல் செய்யட்டும்?” ரேஞ்சில் கைப்பேசியில் ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார். எரிச்சலோடு ஏதோ சமாதானப்படுத்தும் பதிலை சொல்லி அழைப்பை நிறுத்துகிறார். கூட இருக்கும் சகா கேட்கிறான். “அண்ணியா?”. சம்பத்தின் பதில் “சுண்ணி”.

‘டொக்குஎன்று நாலு பேர் மத்தியில் விமர்சித்துவிட்ட சம்பத்தை முடித்துவிட, அவனது சகாக்களுக்கே ஆணையிடுகிறார் ஜாக்கி. அவர்களிடமிருந்து சம்பத் தப்ப, முன்காட்சியில் ‘அண்ணியா?என்று கேட்டவனே, “கஸ்தூரியை தூக்கிடுறோம் பசுபதிஎன்கிறான். சொன்னபடியே தூக்கிவிடுகிறான். சம்பத் இப்போது ஜாக்கியை போனில் அழைக்கிறார். ‘ஹலோவுக்குப் பதிலாக அவர் போனில் சொல்லும் முதல் வார்த்தை “தேவடியாப் பையா”. படம் முழுக்க இப்படியான வசனங்கள்தான். படத்தின் எடிட்டரை விட தணிக்கை செய்த அதிகாரிகள்தான் அதிகம் உழைத்திருக்கிறார்கள்.

மெட்ராஸ் பாஷையென்றாலே தமிழ் சினிமா வசனகர்த்தாக்களுக்கு லூஸ்மோகன் பாஷைதான். இந்த வழக்கத்தை இரட்டை இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி, ‘ஓரம்போ படத்தில் தாறுமாறாக தகர்த்து எறிந்தார்கள். அந்தப் படத்தைவிட இதில் வசனங்களின் துல்லியம் கூடியிருக்கிறது.

இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என்று சகலமும் சரியாக அமைந்திருக்கிறது. குறிப்பாக இசை. நாயகியின் அறிமுக காட்சியிலும், நாயகன் ‘ஐ லவ் யூ சொல்லும் காட்சிகளிலும் இதுவரை நாம் கேட்ட இசையை, ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளுக்கு அள்ளித் தெளித்திருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. படத்தின் முக்கியக் காட்சியான சேஸிங் காட்சியின் பின்னணியில் ஒலிக்கும் ஒற்றை புல்லாங்குழல் க்ளாசிக்.

அளவாக பயன்படுத்தப்பட்ட காமம், தேவையில்லாத செண்டிமெண்ட் – அழுகையை தவிர்த்திருப்பது, கலையாக கைக்கொள்ளப்பட்டிருக்கும் வன்முறை, இயல்பாக நடித்திருக்கும் நடிகர்கள், எளிமையான காட்சிகள், அதே நேரம் ரிச்லுக் படமாக்கம் என்று படம் பார்க்கும் ரசிகனின் மூளைக்கு ஃப்ரெஷ்ஷான சமாச்சாரங்கள்.

குவென்டின் டொரண்டினோ பாணியிலான திரைக்கதை யுக்தி. இதையெல்லாம் பல்ப் ஃபிக்‌ஷனிலேயே பார்த்துவிட்டோம் என்று படம் பார்த்த சில நண்பர்கள் அலுத்துக் கொள்கிறார்கள். பல்ப் ஃபிக்‌ஷனை பார்க்காத தமிழர்களின் எண்ணிக்கை ஆறு கோடியே தொண்ணூறு லட்சத்து அறுபத்தெட்டாயிரத்து எழுநூற்றி மூன்று. எனவே ஆரண்ய காண்டம் அடித்துப் பிடித்து ஓடினால், ஆச்சரியப்பட ஏதுமில்லை.


எச்சரிக்கை : அடுத்த சில நாட்களில் அறிவுஜீவி திரைப்பார்வையாளர்கள் இப்படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும், இயக்குனரே சிந்தித்திராத குறியீடுகளை எல்லாம் எடுத்தியம்பி, உங்களை கதறக் கதற கற்பழிக்கப் போகிறார்கள், ஜாக்கிரதை.