25 செப்டம்பர், 2012

வேலு சார்

நீங்கள் சென்னை வாசியாக இருந்து அடிக்கடி இலக்கியக் கூட்டங்களிலோ அல்லது ஈழத்தமிழர் தொடர்பான நிகழ்வுகளிலோ கலந்துக் கொள்பவராக இருந்தால் வேலு சாரை பார்த்திருப்பீர்கள். இல்லையேல் ஏதேனும் திரைப்பட விழாக்களிலும் அவரை கண்டிருக்க முடியும். ஒரு சமூக ஆர்வலராக வேலு சாரை அறிவதற்கு முன்பாகவே அவர் எனக்கு வேறுவிதமாக அறிமுகம் ஆகியிருந்தார்.

அப்போது விளம்பர ஏஜென்ஸி ஒன்றுக்கு பணிக்காக விண்ணப்பித்திருந்தேன். நேர்முகத் தேர்வுக்கு வரச்சொல்லி அழைப்பு வந்தது. ஏஜென்ஸிகளில் நேர்முகத்தேர்வு என்றாலே கொஞ்சம் அலர்ஜி. அலட்டிக்கொள்ளும் ஆங்கிலத்தில் அச்சுறுத்துவார்கள். என்னுடைய ஆங்கிலமோ இலக்கணச் சுத்தமான திக்குவாய் ஆங்கிலம். நடுங்கிக் கொண்டே போனபோது, “வாங்க தம்பி. நீங்கதான் கிருஷ்ணாவா?” என்று தமிழில் ஒருவர் பேச ஆனந்த அதிர்ச்சி அடைந்தேன். அவர்தான் வேலு சார். என்னுடைய ஆங்கில அச்சம் அவரது தோற்றத்தை கண்டபிறகே அகன்றது. அப்போது அந்த ஏஜென்ஸியில் ப்ரீலான்ஸ் ஆர்ட் டைரக்டராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது மேற்பார்வையில் சீனியர் விஷுவலைஸராக பணிக்கு சேர்ந்தேன்.

அவருடைய முழுப்பெயர் ஆறுமுகவேலு. பெயருக்கு ஏற்றதுமாதிரி கம்பீரமான தோற்றம். ‘குரு’ கமல் மாதிரி அல்லது பழைய சீனத்துப் பாணியில் நீளமான தொங்குமீசை. நறுக்கென்ற உடல்வாகுக்கு பொருத்தமான உயரம். ஃபார்மலும் இல்லாமல் கேஸுவலும் இல்லாமல் ஒருமாதிரி புதிய பாணி உடையலங்காரம். அவரது பேச்சு வழக்கை வைத்து மதுரையா, திருநெல்வேலியா என்று முடிவு செய்யமுடியாது. கிட்டத்தட்ட ஈழத்தமிழ்.

தினமும் அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோதான் வேலு சார் ஏஜென்ஸிக்கு வருவார். நானும், சக விஷூவலைஸர் ஒருவரும் செய்த வேலைகளை சரி பார்ப்பார். லேசான திருத்தங்களை அவரே மேற்கொள்வார். பெரும்பாலும் வண்ணங்களை கூட்டுவதோ அல்லது குறைப்பதாகவோ இருக்கும். அழகுணர்ச்சி மிகுந்தவர். எந்த ஒரு விளம்பரமும் அச்சுக்கு போகும் வரை செதுக்கிக் கொண்டே இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவார். விளம்பரத்தின் ஒவ்வொரு மில்லி மீட்டரையும் அழகியல் தன்மையோடு உருவாக்க மெனக்கெடுவார். ஃபைன் ஆர்ட்ஸ் பட்டதாரி.

விளம்பர ஏஜென்ஸிகளில் அவ்வப்போது ராக்கூத்து நடக்கும். குறிப்பாக விழாக்காலங்களில் முழுப்பக்க, அரைப்பக்க விளம்பரங்களாக வந்து குவியும். நான்கைந்து டிசைன்கள் செய்து, அவற்றில் ஒன்றிரண்டு கிளையண்டுகளுக்கு பிடித்து, அவர்கள் விரும்பும் மாற்றங்களை செய்து, கடைசியாக பிரெஸ்ஸுக்கு அனுப்புவதற்குள் தாவூ தீர்ந்துவிடும். அதுமாதிரி நேரங்களில் ராத்திரியில் வந்து வேலு சாரும் வேலை பார்ப்பதுண்டு. இளையராஜா ரசிகர். எண்பதுகளின் தொடக்கத்து ராஜாவின் பாடல் எதையாவது முணுமுணுத்துக் கொண்டே வேலை பார்ப்பார்.

ஒருமுறை ஏதோ ஒரு விளம்பர வாசகத்தைப் பார்த்து “அட்டகாசமா இருக்குய்யா.. யார் எழுதினது?” என்று கேட்டார். “நான்தான் எழுதினேன்” என்றதுமே, “அட.. தமிழ் தெரிஞ்ச ஒருத்தன் இங்கிருக்கறதே எனக்குத் தெரியாதே?” என்றார். அதன்பிறகு அரசியல், இலக்கியம் என்று கொஞ்சம் கொஞ்சமாக உரையாட ஆரம்பித்தார். அவருடைய அரசியல் பார்வை என்னவென்று இன்னும் கொஞ்சம் குழப்பம்தான். தமிழ் தேசியமாக இருக்கக்கூடும். ஆனால் திராவிட அரசியல்/அரசியல்வாதிகள் மீது சில நியாயமான, தீவிரமான விமர்சனங்கள் அவருக்குண்டு.
தீவிரமான படிப்பாளி. ஜெயமோகன் பற்றி ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது, “கலைஞனையும், அவனது படைப்புகளையும் ஒண்ணா போட்டுக் குழப்பிக்கக்கூடாது” என்றார். பின்னர் ‘ஜெயமோகனின் குறுநாவல்கள்’ புத்தகத்தை கொடுத்து, “இவரை பிடிக்குதோ இல்லையோ, ஆனா தொடர்ந்து படிச்சாகணும்” என்றார் (அந்த புத்தகம் இன்னும் என்னிடம்தான் இருக்கிறது, திருப்பிக் கொடுப்பதற்குள் வேலு சார் வேலையை விட்டுவிட்டார்). ஜெயமோகனை தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்தது அதற்குப் பிறகுதான்.

ஒருமுறை நடிகர்களை, தலைவர்களை மாதிரி மிமிக்ரி செய்து நடித்துக் காட்டினார். அப்போதுதான் தெரியும். வேலு சார் ஒரு நடிகரும் கூட என்று. நவீன நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ‘நிழல்’ என்று ஒரு குறும்படம் நடித்திருக்கிறேன் என்று சிடி ஒன்றை தந்தார். நிழலில் அவரது நடிப்பு அட்டகாசமாக இருந்தது. இருபது நிமிட குட்டி கமர்சியல் சினிமா. இரண்டே இரண்டு கேரக்டர்கள்தான். அந்தப் படத்தை பார்த்தபிறகு, சினிமாதான் அவரது லட்சியமென்று புரிந்தது. ஆனால் நடிப்பா, இயக்கமா என்று தெரியவில்லை. “சினிமாதாம்பா அல்டிமேட் எய்ம்” என்றார் ஒருமுறை.

அந்த ஏஜென்ஸியில் இருந்து வேலு சார் நின்றபிறகு எப்போதாவது வருவார். அயல்நாட்டில் இருந்து ஆர்டர் பெற்று சில விளம்பரப் படங்களை இயக்கியிருந்தார். வேலு சாரின் இயல்பான அழகியல் வேட்கை அந்த விளம்பரங்களை பிரமாதப்படுத்தியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. மிக விரைவில் அவர் இயக்கத்தில் ஒரு சினிமா வருமென்று எதிர்ப்பார்த்தேன்.

பின்னர் நானும் அந்த ஏஜென்ஸியில் இருந்து வெளியேறி, வேறு நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினேன். நான் பணிபுரிந்தது கார்ப்பரேட் சினிமா நிறுவனம் என்பதால், அவ்வப்போது ப்ரிவ்யூ காட்சிகளுக்கு செல்லவேண்டி இருந்தது. அம்மாதிரி செல்லும்போது, சில நேரங்களில் வேலு சாரை பார்க்க முடியும். அவரோடு பேசுகையில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தோடு ஏதோ ஒருவகையில் தொடர்புடையவர் என்று தெரிந்தது.

எப்போதாவது எங்காவது திடீரென்று சந்திப்போம். அழகான புன்னகையோடு எதிர்கொள்வார். “பிளாக் எழுதறே போல. நல்லா இருக்கு. நிறைய எழுது” என்பார்.

போன வருடம் ‘ரெளத்திரம்’ ரிலீஸ் ஆனபோது தியேட்டருக்குப் போய்ப் பார்த்தேன். ஜீவாவிடம் அடிவாங்கும் ஒரு கராத்தே கோமாளி கேரக்டரில் வேலு சார். கடுப்பாக இருந்தது. எவ்வளவு நல்ல நடிகரை, எவ்வளவு மோசமான பாத்திரத்துக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று கோபப்பட்டேன். ஆனாலும் சினிமா வாய்ப்பு என்பது அவ்வளவு சுலபமாக கிடைக்காது என்கிற யதார்த்தம் உறைத்தது. கிடைப்பதை பயன்படுத்தி, ஏதேனும் ஒரு கட்டத்தில் ‘க்ளிக்’ ஆவதுதான் சினிமா.

போன மாதம் அட்டக்கத்தி பார்த்தேன். படம் வெளிவந்து இரண்டு நாட்கள் கழித்து வேலு சார் கைப்பேசியில் அழைத்தார்.

“அட்டக்கத்தி பாத்தியா?”


“பார்த்தேன் சார்”

“ஒண்ணுமே சொல்லலை”

“என்ன சார் சொல்லணும்”

“யோவ். நான் நடிச்சிருக்கேன்யா”

நம்பவே முடியவில்லை. படத்தில் வேலு சாரை பார்த்த ஞாபகமே இல்லை. ஏதேனும் துண்டு துக்கடா காட்சியில் நடித்திருப்பாரோ என்று குழப்பம்.


“எந்த கேரக்டர் சார்?”

“கிழிஞ்சது. என்னத்தைப் படம் பார்த்தியோ? ஹீரோவுக்கு அப்பாவே நான்தான்யா”
திரும்பவும் நம்பமுடியவில்லை. நமக்கு நன்கு தெரிந்த ஒருவர் நடித்திருக்கிறார், ஆனால் அது அவர்தான் என்று தெரியவேயில்லை. இதுதான் நடிப்பு. ஒரு கதாபாத்திரத்தை திரையில் காணும்போது, தெரிந்தவர்களால் கூட அடையாளம் கண்டுகொள்ள முடியாதபோதுதான் நடிப்பு வெற்றி காண்கிறது. ‘அட்டக்கத்தி’ படம் பார்த்தவர்கள் அந்த குடிகார அப்பாவை மறக்கவே முடியாது. ஒருவழியாக வேலு சார் வெற்றி பெற்றுவிட்டதாகவே தோன்றுகிறது. அடுத்தடுத்து அவருக்கு நல்ல கதாபாத்திரங்கள் அமையலாம். தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான நடிகராக உருவெடுக்கலாம். ஆனால் வேலு சார் அடையவேண்டிய தூரம் இதுவல்ல என்று நினைக்கிறேன்.

இயல்பிலேயே படைப்புத்திறமையும், அழகியல் தன்மையும் வாய்ந்த அவர் ஒரு இயக்குனராக வெற்றி காண்பதுதான் முக்கியம். மண்வாசனை கொண்ட மனிதர். நிறைய கதைகளை போகிறபோக்கில் சொல்லக்கூடிய நல்ல கதைசொல்லி. தீர்க்கமான வாசிப்பும், பரவலான அனுபவமும் பெற்ற வேலு சாரால் உருப்படியான திரைப்படங்களை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன். அவரிடம் பணியாற்றியவன் என்கிற முறையில் அவரது வேலை எவ்வளவு முழுமையாக இருக்குமென்று எனக்குத் தெரியும். விரைவில் வாய்ப்பு கிடைத்து வேலு சார் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும். அந்தப் படத்துக்காக முதல் ரசிகனாக காத்திருக்கிறேன்.

24 செப்டம்பர், 2012

திலகன்


“நீ மறுபடியும் வரணும் பன்னீர்செல்வம். பழைய ஐ.பி.எஸ். பன்னீர் செல்வமா வரணும்” இருபது ஆண்டுகளுக்கு பிறகும் இன்னும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும் வசனம். மிக சாதாரணமான இந்த வசனம் இவ்வளவு பிரபலமடைய காரணம் திலகன். ஏற்ற இறக்கத்தோடு, முகத்தில் ஒரு அனாயசமான புன்முறுவலோடு அவர் சொன்னபோது, தியேட்டரில் விஜயகாந்தின் ரசிகர்கள் பரவசப்பட்டுப்போய் விசிலடிப்பார்கள்.

எண்பதுகளின் இறுதியில் சினிமாவில் வில்லன்கள் புதுப்பரிமாணம் பெற்றார்கள். அதுவரை வில்லன் என்றால் கற்பழிக்க வேண்டும், ஹீரோவோடு மல்லுக்கட்டி சண்டை போடவேண்டும், எந்த காரியத்தை எடுத்தாலும் வில்லத்தனமாக நரி மாதிரி செயல்படவேண்டும்  என்றெல்லாம் விதிகள் இருந்தது. மணிரத்னம் மாதிரி இயக்குனர்கள் ஒயிட் அண்ட் ஒயிட் ஜெண்டில்மேன் வில்லன்களை உருவாக்கத் தொடங்கினார்கள். ஆனந்த் தியேட்டர் அதிபர் உமாபதிக்கு நடிப்பே வராது. இருந்தாலும் அந்த நடிப்பே வராத தன்மைதான் அக்னிநட்சத்திரத்துக்கு தேவைப்பட்டது.

விஜயகாந்தின் ‘சத்ரியன்’ இன்றுவரை நினைவுகூறப்படுவதற்கு கேப்டனுடைய போலிஸ் உடுப்பு கம்பீரத்தோடு, அருமை நாயகமாக நடித்த திலகனின் அலட்டிக்கொள்ளாத நடிப்பும் காரணமாக இருக்கிறது. அவரது குரல் தனித்துவமானது. ஸ்ட்ராங்கான மலையாளவாடை கொண்டது. ஆனால் தமிழை சரியாக உச்சரிக்க வேண்டும் என்று மெனக்கெட்டு நிறுத்தி, நிதானமாக உச்சரிப்பார். இருபது ஆண்டு காலத்தில் அவரது தோற்றத்தில் எந்த வித்தியாசமும் ஏற்பட்டதாகவே தெரியவில்லை. 91ல் எப்படி இருந்தாரோ அப்படியே 2011லும் இருந்தார்.

திலகனை தமிழில் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. வசனத்திலும், தோற்றத்திலும் அப்பட்டமாக அடித்த மலையாளவாடை இதற்கு காரணமாக இருக்கலாம். இவருக்குப் பிறகு தமிழுக்கு அறிமுகமான ராஜன் பி.தேவ் (சூரியன் படத்து கோனாரை மறக்க முடியுமா?) போன்றவர்கள் பெரிய ரவுண்டு அடித்தார்கள். சத்ரியனை விட மேட்டுக்குடியில் திலகனின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நிஜவாழ்க்கையில் நாம் பார்க்கும் சாமியாடி எப்படி இருப்பாரோ, அப்படியே திரையில் நடித்துக் காட்டியிருந்தார். கரம் மசாலாவான மேட்டுக்குடிக்கு அவ்வளவு சிரத்தை தேவையில்லை என்றாலும், ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கு நியாயம் செய்திருந்தார் திலகன். ‘நீ வேணுண்டா செல்லம்’ மாதிரி மொக்கைப் படங்களில் கூட தனித்து தெரிந்தது திலகனின் நடிப்பு.


தமிழில் அஜீத் நடித்த ‘க்ரீடம்’ பார்த்திருப்பீர்கள். அஜீத்தின் அப்பாவாக ராஜ்கிரண் நடித்திருப்பார். ஒரிஜினல் மலையாள க்ரீடத்தில் மோகன்லால் ஹீரோ. ராஜ்கிரணின் வேடத்தில் திலகன். திலகன் நடித்து நான் பார்த்த திரைப்படங்களில் ‘க்ரீடம்’ ஒரு மைல்கல். இப்படி ஒரு அப்பா நமக்கு இருக்கக்கூடாதா என்று ஒவ்வொரு மகனையும் ஏங்கவைக்கும் நடிப்பு.

தொடர்ச்சியாக இவர் நடித்த படங்களை பார்த்தவர்கள் இவரது நடிப்பினை சுலபமாக யூகிக்க முடியும். காட்சி தொடங்கும்போது லேசான கவலை அல்லது மகிழ்ச்சியை முகத்தில் தேக்கி ஆரம்பிப்பார். கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணர்ச்சியை அதிகப்படுத்திக்கொண்டே செல்வார். காட்சியின் நடுவில் உச்சக்கட்டத்தை அடையும் உணர்ச்சி அதே பாணியில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, முடியும்போது தொடக்கத்தில் இருந்த பாவனையில் அவரது முகம் இருக்கும். செவ்வாய்க்கிழமை டி.டி. நாடக நடிகர்களின் நடிப்புப் பாணிதான் இது. நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் பெரும்பாலோனரது நடிப்பு டெக்னிக். வசன உச்சரிப்பும் கூட இதே பாணியில்தான் மெதுவாக தொடங்கி, உச்சத்துக்குப் போய் மீண்டும் நிதானம் பெறும்.

மம்முட்டி, மோகன்லாலில் தொடங்கி நேற்றைய பிருத்விராஜ் வரை அத்தனை ஹீரோக்களுக்கும் அப்பாவாக நடித்து கேரளாவில் பெரும் புகழ் பெற்றவர். இயல்பிலேயே கம்யூனிஸ சிந்தனைகளில் ஊறிப்போனவர் என்பதால், அவ்வப்போது மலையாளத் திரையுலகின் போக்கை அப்பட்டமாக கண்டித்து தன்னுடைய இடத்தை தானே அடுத்தடுத்து சிக்கலாக்கிக் கொண்டவர். ஒரு கட்டத்தில் மலையாளத் திரையுலகமே இவருக்கு எதிராக நின்றபோதும் கூட, ரசிகர்கள் இவரை கைவிட்டதே இல்லை.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது திலகனின் உடல்நிலை குறித்து மோசமான செய்திகள் வரும். அவ்வளவுதான், முடிந்தது அவரது மூச்சு என்றெல்லாம் கேள்விப்படும்போது, மீண்டும் பீனிக்ஸ் பறவையாய் எழுந்துவந்து மேக்கப்போடு படப்பிடிப்புத் தளத்தில் நிற்பார். இதய நோயோடு மிகக்கடுமையாக அவர் போராடிக்கொண்டிருந்த இந்த காலக்கட்டதிலும் கூட முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, நடிகனுக்குரிய கடமையை நிறைவு செய்தார்.

தன்னுடைய இணையற்ற நடிப்பாற்றலால் மலையாளப் படங்களை செதுக்கிக் கொண்டேயிருந்த பெருந்தச்சனின் காலம் இன்று அதிகாலை முடிவுக்கு வந்தது. ஈடு செய்யமுடியாத இழப்பு என்கிற சொல்லுக்கு நியாயம் கற்பிக்கிறது திலகனின் இழப்பும்.

22 செப்டம்பர், 2012

நடிகையின் கதை


பதலக்கூர் சீனிவாசலு என்றொரு எழுத்தாளர். தொண்ணூறுகளின் மத்தியில் குமுதம் இதழில் ‘நடிகையின் கதை’ என்றொரு தொடர் எழுதினார். பல்வேறு திரைப்பட நடிகைகளின் வாழ்வில் நடந்த நிஜ சம்பவங்களை (சில கிசுகிசுக்களையும் இணைத்து) பின்னணியாக வைத்து, சுவாரஸ்யமான நாவலைப் போல தொகுத்து எழுதிக் கொண்டிருந்தார். தமிழ் திரைப்பட உலகமே கொதித்துப் போனது. பதலக்கூரை சுளுக்கெடுக்க குமுதம் ஆபிஸுக்கு விரைந்து குறிப்பாக ராதிகா பலத்த ஆவேசமடைந்தார் என்று கேள்விப்பட்டேன்- பெரிய பஞ்சாயத்தெல்லாம் நடந்து தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. திரைப்படத் துறையில் இருப்பவர்கள் மட்டுமின்றி, அத்தொடரை வாசித்த வாசகர்கள் பலரும் பதலக்கூரை சரமாரியாக வசைபாடியதை காதால் கேட்டிருக்கிறேன். ஆனாலும் வசைஞர்கள் ரகசியமாக வாசித்து ரசித்தார்கள் என்றே நம்புகிறேன். அப்போதே மனசுக்குள் ரகசிய லட்சியம் ஒன்றினை பூண்டேன், என்றாவது ஒருநாள் பெரியவனாகி, பதலக்கூர் மாதிரி வரவேண்டுமென்று. என் லட்சியத்தை எல்லாம் விடுங்கள். நம் மேட்டருக்கு வருவோம்.

நம் ரகசியங்களை எவனோ ஒரு பத்திரிகையாளன் இல்லாததும், பொல்லாததுமாக எழுதுவதா என்று அன்று கொதித்தெழுந்த திரையுலகம், இன்று மதுர் பண்டார்க்கரை என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை. பண்டார்க்கர் குமுதத்தில் நடிகையின் கதையை வாசித்திருப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் அவரது இயக்கத்திலும், தயாரிப்பிலும் வெளிவந்திருக்கும் ‘ஹீரோயின்’, சர்வநிச்சயமாக நமது ‘நடிகையின் கதை’யேதான்.
மதுர் பண்டார்க்கருக்கு இப்போது நாற்பத்தியாறு வயதாகிறது. ஏழாவது படிக்கும்போது, குடும்பச்சூழல் காரணமாக படிப்பை பாதியில் விட்டுவிட்டார். ஏதேதோ வேலைகள் செய்து பிழைப்பை ஓட்டியவர், இறுதியாக ஒரு வீடியோ கேசட் கடையில் பணிபுரிந்தார். அங்கே நிறைய இந்தி மற்றும் அயல்நாட்டுப் படங்களை பார்க்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அது மட்டுமின்றி பாலிவுட் இயக்குனர்கள் மற்றும் நட்சத்திரங்களின் வீடுகளுக்கு கேசட் எடுத்துப்போய் கொடுப்பதின் மூலம் கொஞ்சம் திரையுலக அறிமுகத்தையும் ஏற்படுத்திக் கொண்டார். சில இயக்குனர்களின் அசிஸ்டெண்ட் ஆக பணிக்கு சேர்ந்து, பிற்பாடு ராம்கோபால் வர்மாவிடம் வந்து சேர்ந்தார். ‘ரங்கீலா’ வர்மாவுக்கு மட்டுமின்றி, நிறைய பேருக்கு வாழ்க்கை கொடுத்தது. அதில் மதுர் பண்டார்க்கரும் ஒருவர்.

தொழில் கற்றுக்கொண்டபிறகு தனிக்கடை போட்டார் பண்டார்க்கர். ஆரம்பத்தில் காமாசோமோவென்று சில டெலிவிஷன் சீரியல்களை இயக்கியவருக்கு ஒருவழியாக படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. ’த்ரிசக்தி’ படுமோசமாக ஊத்திக்கொண்டது. இருப்பினும் அவரது இரண்டாவது படமான ‘சாந்தினி பார்’, அவருக்கு பாலிவுட்டில் தனித்துவமான ஓர் இடத்தை பெற்றுக்கொடுத்தது. பண்டார்க்கர் படமென்றால் ‘அவார்டு’ நிச்சயம் என்கிற நம்பிக்கை இன்று பாலிவுட்டில் உண்டு. சாந்தினி பார், பேஜ் 3, டிராஃபிக் சிக்னல், கார்ப்பரேட், ஃபேஷன், ஜெயில் என்று அவர் இயக்கிய படங்கள் அத்தனையுமே விமர்சகர்களின் சாய்ஸ் ஆகிவிட்டது. பாக்ஸ் ஆபிஸிலும் குறை வைப்பதில்லை என்பதால், மும்பையில் கார்ப்பரேட் சினிமா நிறுவனங்களின் செல்லப்பிள்ளை ஆகிவிட்டார் பண்டார்க்கர். இன்ஃப்லிம் விளம்பரங்கள் மூலமாக பட்ஜெட்டின் சுமையை வெகுவாக குறைக்கிறார் என்பது கூடுதல் பலம். எம்.பி.ஏ படித்த மார்க்கெட்டிங் ஜாம்பவான்கள் கூட திணறும் இந்த பிசினஸில், ஏழாம் வகுப்பை கூட முழுமையாக முடிக்காத பண்டார்க்கர் சக்கைப்போடு போடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டார்க்கர் படங்களில் சில பொதுத்தன்மைகள் வெளிப்படும். குறிப்பாக பெண் பாத்திரங்களின் வாழ்க்கையை மையப்படுத்தி கதை அது பாட்டுக்கும் நகரும். ஓரினச் சேர்க்கை குறித்த காட்சி இலைமறைகாய்மறையாய் காட்டப்படும். அல்பமான சிறிய புகழுக்கோ, செல்வத்துக்கோ ஆசைப்பட்டு தன்னைத்தானே சிக்கல்படுத்திக் கொண்டு (கிட்டத்தட்ட மசோகிஸ்ட்டு போல), வாழ்க்கையை மகிழ்ச்சியாக கடத்தத் தெரியாதவர்கள்தான் பண்டார்க்கரின் மையப்பாத்திரங்கள். லேட்டஸ்ட் படமான ‘ஹீரோயின்’னில் இந்த எல்லா பொதுத்தன்மைகளையுமே காணலாம்.
ஆரம்பத்தில் படத்தின் கதையை கேட்டு கரீனாகபூர் மிரண்டுவிட்டாராம். இந்தி நடிகை மதுபாலா, ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ ஆகியோரின் வாழ்க்கையை தழுவியது என்று இயக்குனர் மேலோட்டமாக சொல்லிக் கொண்டாலும், சமகால இந்திய சினிமாவை கூறுபோட்டு காட்சிக்கு வைப்பதாகவே ‘ஹீரோயின்’ ஸ்க்ரிப்ட் இருக்கிறது. கரீனா மறுத்ததுமே ஐஸ்வர்யாராயை தொடர்பு கொண்டிருக்கிறார். ஐஸ்வர்யா மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டு நடிக்கத் தொடங்கினார். இடையில் அவர் கர்ப்பம் ஆகிவிட படமும் முழுகாமல் ஆகிவிட்டது. ஐஸ்வர்யாவே ஒப்புக்கொண்ட பாத்திரம் என்பதால், மீண்டும் கரீனா நடிக்க ஒப்புக்கொண்டார். படம் வளர்ந்துக் கொண்டிருந்தபோதே நடிகை மீனாட்சி தாப்பர், நடிகர் அமித் ஜெய்ஸ்வாலால் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது. இருவருமே இந்தப் படத்தில் சிறிய பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவர்கள். படத்தின் ட்ரைலர் வெளிவருவதே கூட பல காரணங்களால் தாமதமாகிக் கொண்டிருந்தது. இடையில் ராஜேஷ்கன்னாவின் மறைவு வேறு. ஒருவழியாக வெளிவந்த ட்ரைலரில் துபாய் மக்களை அவமானப்படுத்தியதாக துபாய்காரர்கள் முறுக்கிக்கொள்ள, அவர்களை வேறு மதுர்பண்டார்க்கர் சமாதானப்படுத்த வேண்டியதாகியது. இதுமாதிரி ஏராளமான தடங்கல்கள். எல்லாவற்றையும் மீறிதான் ‘ஹீரோயின்’ திரைக்கு வந்திருக்கிறாள்.

படம் வெளிவருவதற்கு முன்பாக போஸ்டர், ட்ரைலர் ஆகியவற்றை கண்டவர்கள் சமீபத்தில் வெளிவந்த ‘டர்ட்டி பிக்ஸரின்’ காப்பி என்று வதந்தி பரப்பத் தொடங்கினார்கள். வழக்கமாக தலைமீது மதுர்பண்டார்க்கரை விமர்சகர்கள் தூக்கிவைத்து ஆடுவார்கள். மாறாக ஹீரோயினுக்கு கிடைத்திருப்பது மிக்ஸ்ட் ரெஸ்பான்ஸ்தான். அதனால் என்ன? ரசிகர்கள் அவரை கைவிடவில்லை. இதுவரை இந்தியாவிலேயே ஒரு ஹீரோயின் ஓரியண்டட் படம் இவ்வளவு பெரிய ஓப்பனிங்கை கண்டதே இல்லை என்கிற சாதனையை ‘ஹீரோயின்’ இன்று நிகழ்த்திக் காட்டியிருக்கிறது (ஓபனிங் ஓக்கே என்றாலும் ஒட்டுமொத்த வசூலில் ‘டர்ட்டி பிக்சரை’ வீழ்த்திக் காட்டுமா என்பது ஒரு வாரம் போனபிறகே தெரியும்).
மஹி அரோரா என்கிற நட்சத்திர நடிகை. ஏற்கனவே திருமணமான உச்ச நட்சத்திரமான ஆர்யனை காதலிக்கிறாள். இயல்பிலேயே மஹி கொஞ்சம் ஆத்திரக்காரி. மிக சுலபமாக உணர்ச்சிவசப்படுபவள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற மனோபாவம். இதனால் ஆர்யனின் உறவு உடைகிறது. தனது நட்சத்திர அந்தஸ்தை தக்கவைக்க போராடுகிறாள். அடுத்து ஒரு கிரிக்கெட் வீரரோடு காதல். இந்த காதலைகூட தன்னுடைய அந்தஸ்துக்காகவே பயன்படுத்திக் கொள்கிறாள். அந்த காதலும் உடைய, மீண்டும் ஆர்யனோடு இணையும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதே நேரம் தொழிலில் தன்னுடைய நட்சத்திர அந்தஸ்தை மீட்க, மஹி செய்யும் ஒரு அவசரக்காரியம் அவளது வாழ்க்கையையே கேள்விக்குறியாக்குகிறது. ஒரு நடிகை நட்சத்திரம் ஆகவேண்டுமா அல்லது நல்ல நடிகை என்று பெயரெடுக்க வேண்டுமா என்கிற சஞ்சலமான காட்சிகளில், விரல்களில் சிகரெட் புகைவழிய படபடப்பாக கரீனா காட்டியிருக்கும் திறமை வெகுசிறப்பானது. நட்சத்திரமாக இருக்க வெற்றி போதுமானது. திறமை இரண்டாம் பட்சம்தான் என்கிற யதார்த்தத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

‘ஹீரோயின்’ சித்தரித்திருப்பது தற்கால இந்திய சினிமாவின் அப்பட்டமான பின்னணி முகத்தை. நடிக நடிகையர், இயக்குனர், தயாரிப்பாளர், சினிமா பத்திரிகையாளர்கள், பிராண்ட் மேனேஜர்கள் என்று சினிமாவில் இயங்குபவர்களின் மனோபாவத்தை
candid ஆக படம் பிடித்ததைப் போல காட்சிகள். ஒவ்வொரு காட்சியைப் பார்க்கும்போதும், சமகால உதாரணங்களை ரசிகமனம் தேடிக்கொண்டே இருக்கும் வகையில் சுவாரஸ்யமான புதிர் விளையாட்டை விளையாடியிருக்கிறார் மதுர் பண்டார்க்கர்.

சினிமாவுக்குள்ளே இருந்துகொண்டு சினிமாவை பகடி செய்யும் கலாச்சாரம் நமக்கு புதிதல்ல. ஆனால் ‘ஹீரோயின்’ செய்திருப்பது வேறு. அதை படம் பார்த்தால் மட்டுமே நீங்கள் உணரமுடியும்.

21 செப்டம்பர், 2012

சிப்ஸ்


கடனுக்கா குடிக்கிறோம், கண்டு நடுங்கிட..
ஊத்திக் கொடுப்பவர்கள் உரிமைகள் கேட்கிறபொழுது
உயிரை பணயம் வைத்து குடிக்கும் நாம் உரிமைகள் கேட்கக்கூடாதா?

கேப்டன் இயக்கப் போகும் அடுத்த படத்துக்கு இந்த போஸ்டருக்கு வாசகம் எழுதியவரை வசனம் எழுத கூப்பிடலாம். லியாகத் அலிகான், பேரரசு மாதிரி ஜாம்பவான்களை எல்லாம் அனாயசமாக ஒரே போஸ்டரில் தூக்கியடித்திருக்கிறார்.


பொறுத்தார் ஆள்வார்


தோற்றப்பிழை என்பது காணும் காட்சிகளில் மட்டுமில்லை. கேள்விப்படும் செய்திகளிலும் உண்டு. ‘இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம்’ படம் தொடர்பாக உலகெங்கும் நடக்கும் இஸ்லாமியர்களின் போராட்டம் குறித்த ஊடகச் செய்திகளை வாசிப்பவர்கள், அந்த மதத்தையே மதவெறி கொண்ட வன்முறை கும்பலாக கருதக்கூடிய வாய்ப்புகள் அதிகம். கொஞ்சம் மூளையை கசக்கி யோசித்துப் பார்த்தோமானால் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக இஸ்லாமியர்கள் தொடர்ச்சியாக சீண்டப்படுவதை கடந்தகால வரலாறுகளில் இருந்து அறியலாம். ஓட்டு போடும் ஒவ்வொரு அமெரிக்கனையும் உசுப்ப நடத்தப்படும் நாடகங்களில் ஒன்றுதான் இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம். பனிப்போர் காலங்களில் அமெரிக்க அதிபர் ஹீரோ என்றால், வில்லனாக ரஷ்யா சுட்டிக் காட்டப்படும். சோவியத் கூட்டமைப்பு உடைந்தபிறகு வில்லனே இல்லாததால், அமெரிக்க அதிபரும் ஹீரோ ஆக வாய்ப்பில்லை. எனவே வலிந்து ஒரு வில்லனை உருவாக்கும் முயற்சியாகவே, கிறிஸ்தவ அமெரிக்கா இஸ்லாமியர்களை கட்டம் கட்டிக் கொண்டிருக்கிறது.

மேற்கண்ட படத்தில் காணப்படும் சமாச்சாரம் என்னவென்று நினைக்கிறீர்கள்? நீங்கள் நினைத்தது சரியா என்று சரிபார்க்க படத்தை ரைட்க்ளிக் செய்து,
save image as ஆணை கொடுத்து ஃபைல் நேம் மூலமாக உறுதிப்படுத்திக் கொள்ளவும்.


பெங்களூரில் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பது பரம்பரை பரம்பரையாக நாம் செவிவழியாகவும், அங்கு போய் பார்த்தவர்கள் கண்வழியாகவும் உணர்ந்த செய்தி. சிலமுறை பெங்களூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது, பையன்களும் கூட சென்னைப் பையன்களை மாதிரியே சுமாராக இருப்பதாகவே என்னால் கவனிக்க முடிந்தது. ஆனால் கன்னட சினிமா ஹீரோக்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு 360 டிகிரி பரப்பளவில் யோசித்தும் விடை கிடைக்கவில்லை.


இன்று காலை தினகரனில் ஒரு செய்தியை வாசித்ததுமே வசீகரப்பட்டு விட்டேன். வசீகரத்துக்கு காரணம் செய்தியல்ல. படம். ஊட்டியைச் சேர்ந்த நிஷாலி மஞ்சுபாஷினி கின்னஸ் சாதனைக்காக லட்சம் விநாயகர் சிலைகளை சேகரிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறாராம். இதுவரை நாலாயிரம் சிலைகளை சேகரித்திருக்கும் அவரது சாதனையைப் பாராட்டி தினகரன், கலர் படத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. என்னைப் போலவே ஏராளமான தமிழ் இயக்குனர்களும் இந்த படத்தை பார்த்திருப்பார்கள். ‘அடுத்த படத்துக்கு ஹீரோயின் ரெடி’ என்று இன்னேரம் ஊட்டிக்கு டிக்கெட்டும் போட்டிருப்பார்கள். போட்டோவைப் பார்த்ததுமே அவசரமாக ‘சைட்’ அடித்தவன், செய்தியை வாசித்து பேஜாராகிப் போனேன். மஞ்சுவின் அப்பா போலிஸ் எஸ்.ஐ.யாம்.


பழையங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் திரு ஏ.எஸ்.பாண்டியன் அவர்களைப் போலவே தமிழ்நாடு முழுக்க இருக்கும் எல்லா உள்ளாட்சித் தலைவர்களும் நல்லவர்களாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனமான குடிவெறியர்கள் மீதுதான் எவ்வளவு கரிசனம் இவருக்கு?


வரும் ஞாயிறன்று பிள்ளையார் சிலைகள் கடலில் கரைக்கப்படும் என்று தெரிகிறது. சென்னையில் இப்போதிருக்கும் அளவுக்கு மதரீதியான பதட்டம் முன்னெப்போதும் இருந்ததாக நினைவில்லை. சாத்வீகமான போலிஸ் கமிஷனர் மாற்றப்பட்டு, அதிரடியான ஆணையாளர் சென்னை மாநகரத்துக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். எல்லாம் நல்லபடியாக முடிய விநாயகப் பெருமான்தான் அருள்புரிய வேண்டும்.

20 செப்டம்பர், 2012

த்ரீ இன் ஒன்


சுந்தர பாண்டியன்
தமிழ் படங்களை தியேட்டருக்குப் போய் பார்ப்பதையே நிறுத்திவிடலாமா என்கிற முடிவினை மறுபரிசீலனை செய்ய வைத்திருக்கிறது சுந்தர பாண்டியன். தமிழ் மசாலா படங்களின் golden period ஆன எண்பதுகளை மீண்டும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் அறிமுக இயக்குனரான பிரபாகரன். பாத்திரங்களை சித்தரிப்பதில் பாண்டியராஜன் பாதிப்பு இவருக்கு இருக்கிறது. அச்சு அசலாக கன்னிராசி, ஆண்பாவம் பாணி. அதுபோலவே புகையிலை வாசனையோடு ஒட்டுமொத்தமாக இத்தனை கிழவிகளை திரையில் பார்த்தும் மாமாங்கமாகி விட்டது.

லாங் ஷாட்டில் நடனம் ஆடும்போது சின்னவயசு டி.ஆர். மாதிரி இருக்கிறார் ஹீரோ சசிக்குமார். ‘Producer Director Sasikumar’ என்கிற டைட்டில் லாஜிக்கலாக கரெக்ட் தானென்றாலும், எப்பவும் ‘டாக்டர் கலைஞர்’ மாதிரி, படத்தை தயாரிக்கும்போதும் கூட ‘Director’ பட்டத்தை சுமந்துக்கொண்டே திரியவேண்டுமா என்று தோன்றுகிறது. சசிக்குமாரின் லேசான சிரிப்பு இயல்பானதும், வசீகரமானதுமாக unique தன்மை கொண்டது. ஆனாலும் அவரது தோற்றம் இந்த மாதிரி ‘விடலை’ கேரக்டர்களுக்கு வேலைக்கு ஆவாது என்பதை அவர் உணரவேண்டும்.

ஹீரோயின் லட்சுமி மேனன் door next girl மாதிரி என்று சொல்வதெல்லாம் cliche. நிஜமாகவே பக்கத்து வீட்டு கதவை போய் தட்டினால், லட்சுமி மேனன் வந்து திறப்பாரோ என்றே தோன்றுகிறது. இடது கண்ணுக்கு அருகில் கன்னப் பகுதியில் லேசான தழும்பு மாதிரி ஏதோ ஒன்று. அவரது முகத்துக்கு அந்த தழும்பு கூட பாந்தமாகவே இருக்கிறது.

விறுவிறுப்பான திரைக்கதை. யதார்த்தமான வசனங்கள். எதிர்ப்பார்க்காத
twist என்று பரபரவென ஒரு படம். climaxல் மட்டும் அடுத்தடுத்த twistகளை எதிர்ப்பார்க்க முடிகிறது என்றாலும், எடுக்கப்பட்ட விதத்தில் சுவாரஸ்யம் கூடிக்கொண்டே போகிறது. bus windowவை view frame ஆக்கி, கேமிரா மெதுவாக நகரும் காட்சியும், வசனங்களே இல்லாமல் வீட்டுப் பெண்கள் லட்சுமி மேனனின் மனதை மாற்ற முயற்சிக்கும் காட்சிகளும் class.

சுந்தர பாண்டியன். Super பாண்டியன்.


லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல்
இயக்குனர் சேகர் கம்முலா ஒரு பீட்டர்தான். ஆனால் பீட்டர்களின் கையிலும் பிளேடை கீறினால் ரத்தம் வரும் என்று ஒப்புக்கொள்ளும் நேர்மையான பீட்டர்.

லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல் படத்தில் நடிக்க அமலாவை தொடர்புகொண்டாராம் சேகர். அமலாவோ நடிக்க விருப்பமில்லை என்று மறுத்திருக்கிறார். சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனாய் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியிருக்கிறார் சேகர். உச்சக்கட்டமாய், “நீங்கள் நடிக்காவிட்டால், நான் இந்தப் படத்தையே எடுக்கப் போவதில்லை” என்றுகூட மிரட்டியிருக்கிறார். அமலா மனமிறங்கி நடித்துக் கொடுத்திருக்கிறார். இவ்வளவு ஃபோர்ஸான கம்பேக் வேறு எவருக்காவது கிடைக்குமாவென்று தெரியவில்லை. மொத்தமாக நான்கு காட்சிகள்தான் தோன்றுகிறார். ஆனால் ஒட்டுமொத்தப் படத்தின் சுமையையும், அந்த நான்கே காட்சிகளில் அமலா சுமப்பதாக தோன்றுகிறது. ஒரு காட்சியில் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் பழைய அமலாவின் ஸ்டில் (கலாசேத்ராவில் எடுக்கப்பட்ட அந்த பிரபலமான பரதநாட்டிய முத்திரை) ஒன்றே ஆயிரம் கதைகளை பேசுகிறது.

பழைய படங்களில் பண்ணையார் மற்றும் அவரது அல்லக்கை கும்பல்களோடு பாட்டாளிகள் மோதுவார்கள் இல்லையா? அதே கதைதான். பணக்கார குடியிருப்பு வாசிகளோடு, நடுத்தர வர்க்கத்தவர்கள் மோதுகிறார்கள். மூன்று பையன்கள். மூன்று (அழகான) பெண்கள். போதாதா? லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல்.

இந்த கதைக்கு நேரடியாக சம்பந்தமில்லாத, ஆனால் கதைக்கு மிக அத்தியாவசியமான ஒரு அம்மா செண்டிமெண்ட். இறுதிக் காட்சியில் உங்கள் கண்களில் நீர் கோர்க்காவிடில், உங்கள் பெயர் இடிஅமீனோ அல்லது ஹிட்லராகவோ இருக்கவேண்டும்.

ஒவ்வொரு முறையும் காப்மேயரின் ஏதேனும் ஒரு நூலை வாசித்து முடிக்கையில், உங்களுக்கு தன்னம்பிக்கை காம்ப்ளான் குடித்தமாதிரி ஒருமாதிரியாக முறுக்கேறும். நாடி, நரம்பெல்லாம் ஏதோ ஒரு வெறியேறி, எதையோ சாதிக்கவேண்டும் என்று இனம்புரியாத கிளுகிளுப்பு அல்லது விறுவிறுப்பு தோன்றும். இப்படம் முடியும்போது அம்மாதிரியான ஒரு உணர்வை உணர்வீர்கள்.

சேகர் கம்முலா வீட்டு வரவேற்பறையில் ஏகப்பட்ட விருதுகள் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்காக அவர் பெறப்போகிற விருதுகளுக்காக புதுசாக ஒரு வீடே கட்டவேண்டும்.


பார்ஃபி
இனிமேல் ஹாலிவுட்காரர்கள் இந்தி படத்தை சுட்டு காட்சிகள் அமைக்கலாம். ரன்பீர் கபூருக்கு நம்ம ஊரு சிம்பு வயசுதான் இருக்கும். பார்ஃபி மூலமாக அவர் சாதித்திருப்பதை யோசிக்கும்போதுதான், இவ்வளவு நாட்களாக ’உலகத்தர’ விஷயத்தில், கமல் நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று கோபம் வருகிறது. முதல்நாளே படம் பார்த்துவிட்டு வெளியே வந்த நண்பர் ஒருவர் சொன்னார். “ஆஸ்கருக்கு இதை அனுப்புங்க பாஸ். நாம வாங்கறோமா இல்லையான்னு பாருங்க”.

மர்பி என்கிற பார்ஃபி என்கிற ரன்பீர் அநியாயத்துக்கு அழகாக இருக்கிறார். சார்லி சாப்ளினை கேவலப்படுத்தாமல், சின்சியராக இமிடேட் செய்கிறார். நிஜமாகவே இவருக்கு வாய்பேச வராதோ என்று தோன்றுமளவுக்கு பிரமாதமான ஒர்க். க்ளாமர் குயீனான பிரியங்கா சோப்ராதானா என்று சந்தேகம் வருகிறது ஜிமிலை பார்க்கும்போது. ஒரு காட்சியில் தொடை வரை காட்டினாலும், பார்வையாளனுக்கு ‘மூடு’ வராததுதான் பிரியங்காவின் நடிப்புக்கு கிடைத்த வெற்றி. இலியானாவின் நடிப்பைப் பார்த்தால், இவர் நம்ம இலியானாதானா என்று சந்தேகம் வருகிறது.

இசை, ஒளிப்பதிவு, இயக்கம், நடிப்பு, எடிட்டிங் என்று சினிமாவின் அத்தனை துறைகளிலும் இந்திய சினிமா எட்டியிருக்கும் உச்சபட்ச உயரமாக பார்ஃபியை எடுத்துக் கொள்ளலாம்.