16 ஜனவரி, 2014

காமிக்ஸ் எப்படி உருவாகிறது?

பாக்கெட் சைஸில் நம்மை பரவசப்படுத்திக் கொண்டிருந்தவர்கள், இப்போது ஏ-4 அளவுக்கு ஏற்றம் கண்டிருக்கிறார்கள். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் குழந்தைகளின் இணைபிரியா நண்பர்களான முத்து காமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ் குழுமத்தார் கடந்த ஆண்டு புது பரிமாணத்துக்கு மாறியிருக்கிறார்கள். நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் தினகரன் வசந்தம் அளவில், வழுவழுப்பான உயர்ரக தாளில், முழுக்க வண்ணத்தில் சித்திரக்கதைகளை அச்சிடுகிறார்கள். இரும்புக்கை மாயாவியை எல்லாம் ஏறக்கட்டி ஆயிற்று. சமகாலத்தில் சர்வதேச அளவுகளில் கலக்கிக் கொண்டிருக்கும் சூப்பர்ஹீரோக்களை சுடச்சுட தமிழுக்கு கொண்டு வருகிறார்கள்.

பட்டாசுக்கு பெயர் போன சிவகாசி நகரத்தில், பரபரப்பான மாலை வேளை ஒன்றில் இந்த படைப்பாளிகளை சந்தித்துப் பேசினோம்.
ஆசிரியர் எஸ்.விஜயன்

“ஒரு காமிக்ஸை வாசிப்பது குழந்தைகளுக்கும் எளிதானது. ஆனால் அதன் உருவாக்கம் ஒரு பிரும்மாண்டமான ஹாலிவுட் திரைப்பட உருவாக்கத்துக்கு இணையான உழைப்பை கோரக்கூடியது. ஒவ்வொரு சித்திரக்கதையின் பின்னணியிலும் எவ்வளவு திறமையாளர்கள் மறைந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்தால், இது சிறுபிள்ளை விளையாட்டு அல்ல என்பதை புரிந்துக் கொள்வீர்கள்” என்கிறார் முத்து, லயன் காமிக்ஸ்களின் ஆசிரியர் எஸ்.விஜயன். பழைய கிளாசிக் காமிக்ஸ்களை மீண்டும் வாசிக்க விரும்பும் ‘மலரும் நினைவுகள்’ வாசகர்களின் வசதிக்காக ‘சன்ஷைன் காமிக்ஸ்’ என்று புதியதாக ஒரு இதழையும் சமீபத்தில் தொடங்கியிருக்கிறார்.

ஒரு காமிக்ஸ் என்பது முதலில் ஓர் எழுத்தாளரின் மூளையில் மின்னலாக ஒரு வரி கதை வடிவில் பளிச்சிடுகிறது. இந்த கதை எப்படி காமிக்ஸ் ஆகப்போகிறது என்று சம்பந்தப்பட்ட பதிப்பகத்திடம் அந்த எழுத்தாளர் விளக்குகிறார். அடுத்தக்கட்டம் திரைக்கதை எழுதுவது. கடைசியாக வசனம். ஒரு தரமான காமிக்ஸுக்கான கதை, திரைக்கதை, வசனம் எழுத சில எழுத்தாளர்கள் இரண்டு ஆண்டு காலம் கூட எடுத்துக் கொள்வதுண்டு. இலக்கிய எழுத்தாளர்கள் மாதிரியே இதற்கென காமிக்ஸ் எழுத்தாளர்களும் உலகின் பல்வேறு மூலைகளுக்கு சென்று கள ஆய்வுகள் மேற்கொள்கிறார்கள்.

அடுத்து ஓவியர். ஒரு காமிக்ஸின் பிரதான அம்சமே ஓவியம்தான் எனும்போது, இந்த தொடர் தயாரிப்பில் இவர்தான் கதாநாயகன். எழுத்தாளரின் கதையை நன்கு உள்வாங்கிக் கொண்டு காமிக்ஸின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது இவர்தான். கதாசிரியர் ஒரு நாட்டிலும், ஓவியர் வேறு நாட்டிலும் இருப்பதெல்லாம் இத்தொழிலில் சகஜம். ஆனால் இருவருக்கும் ஒத்துப்போகும் புரிந்துணர்வு இருப்பது அவசியம்.

ஒவ்வொரு ஓவியரும் தனக்கே தனக்கான ஒவ்வொரு பாணியை கடைப்பிடிக்கிறார்கள். ஐம்பது பக்க அளவு கொண்ட காமிக்ஸ் புத்தகத்தை வரைய ஆறுமாதங்கள் கூட தேவைப்படும். சில சமயங்களில் வருடக்கணக்கிலும் இந்த வேலை நீளும். பதிப்பகங்கள் அவசரப்படுத்துவதில்லை. தயாரிப்பு தரமாக இருக்க வேண்டும் என்பதால் மீனுக்கு காத்திருக்கும் கொக்காக பொறுமை காக்கிறார்கள். ஆரம்பக்கட்ட ஓவியங்கள் கருப்பு வெள்ளையில்தான் உருவாகிறது.

ஓவியங்கள் தயார் ஆனதுமே, அதில் வரையக்கூடிய வசனங்களை வரையும் ‘லெட்டரிங்’ பணிகள் தொடங்கிவிடும். இருப்பதிலேயே கடினமான பணி இதுதான். வசனங்களை ஓவியங்களுக்குள் பொருத்துவது சிற்பம் செதுக்குவதைப் போன்ற உன்னத கலை. ஓவியத்தின் பிரும்மாண்டமும் குறையக்கூடாது. பொருத்தமான வசனத்தையும் பொறுத்தியாக வேண்டும்.

இந்த வேலைகள் முடிந்ததுமே வண்ணம் சேர்க்கும் பணி துவங்கும். கதையின் சூழலை புரிந்துகொண்டு அதற்கேற்ப வண்ணக்கலவைகளை சேர்க்க வேண்டும். சில அஷ்டாவதனிகள் ஒருவராகவே இந்த நான்கு வேலையையும் செய்வதும் உண்டு.
ஜூனியர் எடிட்டர் விக்ரம் விஜயன்

இம்மாதிரி உருவாகி, வெளியாகி அயல்நாடுகளில் சக்கைப்போடு போடும் காமிக்ஸ்களைதான் லட்சங்களில் ராயல்டி கொடுத்து தமிழுக்கு கொண்டுவருகிறார் எஸ்.விஜயன். இவரது தந்தை எம்.சவுந்தரபாண்டியன் முத்து காமிக்ஸை தொடங்கினார். தந்தையின் பணியை லயன் காமிக்ஸாக விஜயன் விரிவுபடுத்த, உதவிக்கு தோள் கொடுக்கிறார் தம்பி எஸ்.பிரகாஷ்குமார். மூன்றாவது தலைமுறையாக ‘ஜீனியர் எடிட்டர்’ ஆக கோதாவில் குதித்திருப்பவர் கல்லூரி மாணவரான விக்ரம் விஜயன். இவர் எஸ்.விஜயனின் மகன்.

இவர்கள் மட்டுமின்றி ஒரு பத்திரிகை நடத்துவதற்கான ஒட்டுமொத்த மனித உழைப்பையும் செலுத்தும் ஒரு பெரிய குழு சிவகாசியில் நாற்பதாண்டுகளாக செயல்படுகிறது. ஏராளமான ஓவியர்களும், மொழிபெயர்ப்பாளர்களும், விற்பனையாளர்களும், இதரத்துறை பணியாளர்களும் இக்குழுவில் அடக்கம்.
இணையாசிரியர் பிரகாஷ் & முத்து காமிக்ஸ் நிறுவனர் எம்.சவுந்தரபாண்டியன்

“அயல்மொழி கதைகளை தமிழுக்கு கொண்டுவரும்போது ஆதாரமான ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அவர்களது ரசனையும், நமது ரசனையும் ஒத்துப்போகும் கதைகளை மட்டுமே தமிழில் வெளியிட முடியும். அமெரிக்காவில் பரபரப்பாக விற்பனை ஆன ஒரு கதை, இங்கேயும் வெற்றிபெறுமென்று நிச்சயமாக சொல்ல முடியாது. நம் வாசகர்களுக்கு எது ஏற்புடையதாக இருக்குமென்ற நம்முடைய தீர்மானம்தான் காமிக்ஸில் வெற்றி காண்பதற்கான சூத்திரம்” என்கிறார் சவுந்தரபாண்டியன். இரும்புக்கை மாயாவியை தமிழுக்கு ஏற்றவராக கண்டு கொண்டு அறிமுகப்படுத்தியதிலேயே, அவரது திறமையை நாம் கண்டுகொள்ளலாம்.

அயல்நாட்டு கதைகளில் அவர்களது கலாச்சாரம் கொஞ்சம் ‘தாராளமாக’ இருக்கும். அதுபோன்ற சூழல்களில், தயவுதாட்சணியமே பார்க்காமல் கத்திரி போட்டு வெட்டிவிடுகிறார்கள்.

1982ல் ‘முத்து காமிக்ஸ் வாரமலர்’ என்கிற பத்திரிகையை வெறும் அறுபது காசுக்கு விற்றதுதான் இவர்களது பெரிய சாதனை. சிறுகதைகள், காமிக்ஸ் தொடர்கதைகள் என்று பக்காவான கலவையாக அதை சவுந்தரபாண்டியன் தயாரித்தார். ஆனாலும் ஒரு வாரப்பத்திரிகைக்கான ஏற்பாடுகளை முழுமையாக செய்யாததால், இருபத்தி இரண்டு இதழ்களோடு மட்டுமே அது நின்றுவிட்டது.

தமிழ் காமிக்ஸ்களின் பொற்காலம் என்று 1986 முதல் 89 வரையிலான மூன்றாண்டுகளை சொல்லலாம். இவர்களது குழுமத்தில் இருந்து மட்டுமே ஐந்து இதழ்களை கொண்டுவந்தார்கள். டிவி, கம்ப்யூட்டர், செல்போன், இண்டர்நெட் இடையூறுகள் இல்லாத அக்காலக் கட்டத்தில் ஒவ்வொரு மாதமும் விற்பனையில் காமிக்ஸ் புத்தகங்கள் சக்கைப்போடு போட்டன. எனவே அப்போது இரண்டு ரூபாய்க்கும், மூன்று ரூபாய்க்கும் புத்தகங்களை கொண்டுவர முடிந்தது.

ஆனால் இன்றைய சூழலில் அதெல்லாம் சாத்தியமில்லை. காமிக்ஸ் வாசிப்பு என்பது சிறுவட்டமாக குறுகிவிட்டது. காமிக்ஸ் வாசிப்பை, பெரும்பாலான வாசகர்கள் ‘சின்னப்பசங்க சமாச்சாரம்’ என்று மூடநம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்த அபிப்ராயங்களை தவிடுபொடியாக்கும் வண்ணமே முத்து காமிக்ஸ் குழுமம் செயல்படுகிறது.

“அன்றைய டூரிங் டாக்கிஸீல் படம் பார்த்த அனுபவத்துக்கும், இன்றைய மல்ட்டிபிளக்ஸ் அரங்குகளில் படம் பார்க்கும் அனுபவத்துக்குமான வேறுபாட்டை எங்களது இப்போதைய வெளியீடுகளில் நீங்கள் காணலாம். இன்றைய தலைமுறைக்கு காமிக்ஸ் ரசனையை கொண்டு வருவதற்காக அயல்நாட்டு ஆர்ட் பேப்பர், அட்டகாசமான வண்ணங்கள், ஆழமான கதைத்தேர்வு என்று மெனக்கெடுகிறோம். காமிக்ஸ் வாசிப்பு என்பது ஒரு அலாதியான அனுபவம். நாங்கள் அடையும் அந்த அனுபவத்தை நீங்களும் அடையவேண்டும் என்பதே எங்கள் குறிக்கொள்” என்கிறார் விஜயன்.

இவர்கள் வெளியிடும் இதழ்களின் விலை மிகக்குறைவாகவே இருக்கிறது. அயல்நாடுகளில் இதே தரத்தில் கடைகளுக்கு வரும் இதழ்களின் விலையோடு ஒப்பிடுகையில் மூன்று, நான்கு மடங்கு குறைவு. காமிக்ஸ் வெளியிடுவது மட்டுமே இந்த சிவகாசிக்காரர்களுக்கு தொழில் அல்ல. ஆர்வம் மட்டும்தான் காரணம். அச்சகம், அச்சு இயந்திரங்கள் இறக்குமதி, தீப்பெட்டி மெஷின்கள் இறக்குமதி என்று அவர்களது தொழிலே வேறு. இது வெறும் ஆர்வத்தின் பேரில் லாபநோக்கின்றி செய்வதுதான்.

முன்புபோல கடைகளில் தொங்கவிட்டு சுலபமாக வாசகர்களுக்கு கிடைப்பதைப் போன்ற முறை இல்லாமல் தங்களது விற்பனை யுக்தியை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது பழைய வாசகர்களிடம் ஆண்டு சந்தா வசூலித்துவிடுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய புத்தகக் கடைகளில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இணையத்தில் ebay போன்ற தளங்கள் மூலமாக விற்கிறார்கள். சமீபமாக தமிழகத்தில் நடைபெறும் புத்தகக்காட்சிகளில் ஸ்டால் போடுகிறார்கள்.  http://lion-muthucomics.com/ என்கிற இவர்களது இணையத்தளத்தில் சமீபத்திய வெளியீடுகள், காமிக்ஸ் குறித்த சுவையான கட்டுரைகள் இடம்பெறுகின்றன.

2011ல் 852 பக்கங்கள், இருநூறு ரூபாய் விலை என்று இவர்கள் கொண்டுவந்த ‘இரத்தப்படலம்’ என்கிற ஒரே கதையின் முழுமையான தொகுப்புதான் தமிழில் மீண்டும் காமிக்ஸ் கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறது. பெல்ஜியத்தில் வெளியாகி உலகளவில் காமிக்ஸ் ஆர்வலர்களிடையே பரவலான பாராட்டுகளையும், ஏகத்துக்கும் விருதுகளையும் வென்ற இந்த கதைத்தொடரை ஒரே புத்தகமாக உலகிலேயே முதன்முதலாக வெளியிட்டவர்கள் இவர்கள்தான்.

“விஜயன், நீங்கள் வெளியிடும் இதழ்களில் உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்?”

“லக்கிலூக் எனும் காமெடி கவுபாயின் ரசிகன் நான். சமீபமாக நாங்கள் வெளியிட்டு வரும் கதைகள் லார்கோ வின்ச் என்கிற கோடீஸ்வர ப்ளேபாயின் கதைகள். அவரையும் எனக்கு பிடிக்கும்”

ரொம்ப சீரியஸாகவே பேசுகிறார்கள். காமிக்ஸ் என்பது நாம் நினைப்பதைப் போல விளையாட்டு விஷயமல்ல போலிருக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது என்று ஒருமுறை வாங்கி வாசித்துதான் பார்ப்போமே?

எழுதியவர் : அணில்
நன்றி : தினகரன் வசந்தம்

11 ஜனவரி, 2014

ப்ரியா கல்யாணராமன்

ஒரு பத்திரிகை வேலைக்காக நேர்முகத்தேர்வுக்குப் போயிருந்தேன். 

வழக்கமான கேள்விகளோடு கேட்கப்பட்ட கூடுதல் கேள்வி அது. "உங்க லட்சியம் என்ன?"

+2 ஃபெயில் ஆனவன் அப்துல்கலாம் மாதிரி ராக்கெட் விஞ்ஞானி ஆகணும்னா சொல்ல முடியும்? உண்மையில் சொல்லப் போனால் இதற்கு என்ன விடை சொல்லுவதென்றே தெரியவில்லை. ஆக்சுவலி எனக்கு லட்சியம், கிட்சியம் என்பதெல்லாம் இன்றுவரை இல்லை.

தான்தோன்றித்தனமாக என் உள்மனது சட்டென்று ஒரு பதிலை வாய்வழியாகச் சொன்னது. "ப்ரியா கல்யாணராமன் ஆகணும்"

கேள்வி கேட்டவருக்கு வியப்பு. அதைவிட வியப்பு பதில் சொன்ன எனக்கு. உள்மனதில் இப்படியொரு ஆசை இருப்பது அன்றுதான் எனக்கே தெரியும்.

ப்ரியா கல்யாணராமன் ஆகணும் என்கிற லட்சியம் என்னைத்தவிர வேறு யாருக்காவது இருக்குமா என்பதே கொஞ்சம் சந்தேகம்தான். பத்திரிகை / எழுத்துத்துறையின் லட்சியமாக கல்கி, ராவ், எஸ்.ஏ.பி., என்று யார் யாரோ இருக்கலாம். ஏன் பர்ட்டிகுலராக ப்ரியா கல்யாணராமன்?

ஒரு பெரிய ஃப்ளாஷ்பேக்.

+2 பெயில் ஆகிவிட்டு தண்டச்சோறாக கிடந்த கொடூரகாலக்கட்டம் அது. காலை 5 மணிக்கு இங்க்லீஷ் ஹைஸ்பீட் டைப்பிங், 6 மணிக்கு மேத்ஸ் டியூஷன், 7 மணிக்கு ஷார்ட் ஹேண்ட், 8 மணிக்கு தமிழ் டைப்பிங், 11 மணிக்கு விவேகானந்தாவில் இங்கிலீஷ் என்று அப்பா என்னை நொங்கெடுத்துக் கொண்டிருந்த நேரம். இப்படியே விட்டால், இந்தாளு சாகடித்துவிடுவாரு என்ற பீதியில், நானே அப்ளிகேஷன் போட்டு ஒரு நாளிதழில் பணிக்கு சேர்ந்திருந்தேன். அக்டோபர் எக்ஸாமை எதிர்நோக்கியிருந்த சூழலில் பத்திரிகைகளோ, கதைப்புத்தகங்களோ படிக்க அப்பா 'தடா' விதித்திருந்தார்.

குமுதம் மட்டும் விதிவிலக்கு. ஏனெனில் என்னைப் போலவே அப்பாவும் குமுதத்தை காதலித்தார். புத்தகத்தை எடுத்ததுமே அவரும் என்னைப்போலவே 'நடுப்பக்கத்தை'தான் புரட்டுவார் என்பது தலைமுறை இடைவெளி என்ற வார்த்தையையே அர்த்தமற்று போகச்செய்த விஷயம். எஸ்.ஏ.பி., காலமாகியிருந்த சூழலில் கதைகளுக்கான மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக் கொண்டிருந்தது. எளிதில் யூகித்துவிடக்கூடிய முடிச்சுகளோடு கதைகள் வழக்கமான டெம்ப்ளேட்களில் வந்துகொண்டிருந்தது வாசகர்களை கொஞ்சம் சலிப்புறச் செய்திருந்தது.

96ஆ, 97ஆ என்று சரியாக நினைவில்லை. அந்தத் தொடரின் மூலமாக திடீர் புதுப்பாய்ச்சல் குமுதத்தில். தலைப்பே இளமையாக மிரட்டியது. 'ஜாக்கிரதை வயது 16'. கதையின் தொடக்கம் இப்படி இருந்ததாக நினைவு. "ஊர்மிளாவுக்கு தொப்பையோடு கூடிய ஆண்களைப் பிடிக்காது, பிள்ளையாரைத் தவிர". ரங்கீலா வெளியாகி சக்கைப்போடு போட்ட காலக்கட்டம் என்பதால் 'ஊர்மிளா' என்ற பெயரை இந்திய இளைய சமூகம் கிறக்கமாக உச்சரித்துக் கொண்டிருந்தது. தமிழக இளைஞர்கள் மட்டும் விதிவிலக்கா?

கதை இப்படியாக இருந்தது. ஊர்மிளா 16 வயது பெண். +2 படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு பிள்ளையார் பிடிக்கும். தாத்தாவைப் பிடிக்கும். அர்ஜூன் என்ற ஸ்மார்ட்டான பையனின் காதலை ஊதித்தள்ளினாள். அவனுக்கு ஒருமுறை ராக்கி கூட கட்டிவிட்டாள். அபு என்ற பையனிடம் வாலண்டியராக அவள் சோரம் போனாள். பின்னர் இளமை மயக்கங்களில் தெளிந்து டாக்டரானாள். இந்த நான்கைந்து வரிகளில் கதையைப் படித்தால் கொஞ்சம் மொக்கையாகவே தோன்றும்.

ஆனால் வாராவாரம் ப்ரியா கல்யாணராமனின் ட்ரீட்மெண்ட்களில் இளமை கொப்பளித்தது. ஒரே ஒரு சிறுகதையயாவது அந்த எனர்ஜி லெவலில் எழுதிவிட வேண்டும் என்று நூற்றுக்கணக்கான முறை முயற்சித்து தோற்றிருக்கிறேன். இன்றுவரை எனக்கு திருப்தியாக (ஐ மீன் 16 வயது லெவலுக்கு) எதையும் எழுதி கிழித்துவிட முடியவில்லை. அங்கேதான் நிற்கிறார் ப்ரியா கல்யாணராமன். அவருடைய பெயரே மாடர்ன் + விண்டேஜாக, வித்தியாசமாக இருக்கிறது இல்லையா? கமல்ஹாசன் படங்களில் எனக்குப் பிடித்தது கல்யாணராமன். ப்ரியா என்ற பெயரை பிடிக்காதவர்கள் யாராவது உண்டா?

வயது 16க்குப் பிறகு அவர் என்ன எழுதினாலும் (எந்தப் பெயரில் எழுதினாலும்) விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன். இளமையும், காமமும் இணைந்து கொப்பளிக்க எழுதினாலும் சரி, ஆன்மீக வாசனையோடு கோயில் சொல்லும் கதைகள் எழுதினாலும் சரி. ஒவ்வொரு வெரைட்டிக்கும், ஒரு யூனிக் ஸ்டைல். ப்ரியா கல்யாணராமன் என்னை ஆக்கிரமித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஏற்கனவே ப்ரியா கல்யாணராமன் பற்றி மேற்கண்டவாறு முன்பொரு முறை எழுதியிருக்கிறேன்.

பத்தொன்பது வயதில் பத்திரிகைத்துறைக்கு வந்த சிக்கல்காரர் (இவருக்கு முன்பு சிக்கலில் ஃபேமஸ் ஆனவர் 'தில்லானா மோகனாம்பாள்' சிக்கல் சண்முகசுந்தரம்). குமுதம் இதழின் ஆரம்பகால தூண்களான ரா.கி.ர., ஜ.ரா.சு., புனிதன் என்று வரிசையாக வயது காரணமாக ஒவ்வொருவராக ஓய்வு நாடிக் கொண்டிருந்தார்கள். குமுதத்துக்கு அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் ஆசிரியர் எஸ்.ஏ.பி., அப்போது அவர் கண்டெடுத்த முத்துகளில் ப்ரியா கல்யாணராமன், ரஞ்சன், கிருஷ்ணா டாவின்ஸி ஆகியோர் முக்கியமானவர்கள்.

1987ல் பத்திரிகைத்துறைக்குள் நிருபராக நுழைந்த ப்ரியா கல்யாணராமன், கடந்த 2012ல் இத்துறையில் வெள்ளிவிழாவே கண்டுவிட்டார். தற்போது குமுதத்தின் ஆசிரியர். தொண்ணூறுகளின் மத்தியில் தமிழ் இளைஞர்கள் ஒரு மாதிரியான குழப்பான மனோபாவத்தோடு இருந்தார்கள். உண்மையில் கடந்த நூற்றாண்டுக்கும், இந்த நூற்றாண்டுக்கும் பாலமாக அமைந்த பத்தாண்டுகளாக 90 டூ 2000 வருடங்களை சொல்லலாம். ஒரு மாற்றம் வரும்போது முந்தைய லைஃப்ஸ்டைலின் பாதிப்பும், அடுத்து வரவிருக்கும் ட்ரெண்டின் தாக்கமும் கலந்து அதுவுமில்லாமல், இதுவுமில்லாமல் ஒரு மாதிரியாக எகனைமொகனையாகதான் அத்தலைமுறை இருக்கும். அம்மாதிரியான சூழலின் சமகால பிரச்சினைகளை தனது கதைகளிலும், கட்டுரைகளிலும் அசலாக பிரதிபலித்தவர் ப்ரியா கல்யாணராமன். தொண்ணூறுகளின் இளைஞனுடைய காதல், லட்சியம், கனவு, இத்யாதிகள் எப்படியிருந்தது, அதே நேரம் யதார்த்தம் எப்படியிருந்தது என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவர் எழுதிய தொடர்களை, சிறுகதைகளை (குமுதம் பதிப்பகத்தில் தனித்தனி புத்தகமாக வந்திருக்கிறது) வாசித்தால் ஓரளவுக்கு புரிதல் கிடைக்கும்.

2000ஆம் ஆண்டுக்கு பிறகு கிட்டத்தட்ட சாமியார் மாதிரி ஆகிப்போனார். அவரது எழுத்துகளை பெருமளவு ஆன்மீகம் ஆக்கிரமித்தது. கோயில் சொல்லும் கதைகள், குறைதீர்க்கும் கோயில்கள், ஜெகத்குரு, 108 திருப்பதிகள், சாய்பாபா என்று குமுதம் மற்றும் குமுதம் பக்தி இதழ்களில் எழுதிக் குவித்தார். எழுதுவது ஆன்மீகம் என்றாலும், அதையும் மிகச்சுவையாக பரிமாறுவதுதான் அவரது ஸ்பெஷாலிட்டி. நமக்கு ஆகாத ஏரியாதான் என்றாலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் படித்து விடுவது உண்டு.

என்னைப் பொறுத்தவரை தமிழ் சமூகம் கொண்டாட வேண்டிய ஆளுமைகளில் ஒருவர். ஆனால் நாம் யாரையுமே கொஞ்சம் தாமதமாகதான் கொண்டாடுவோம்.

இப்படியொரு ஏகலைவன் தனக்கு சிஷ்யனாக இருக்கிறான் என்று அந்த பீஷ்மருக்கு தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை. இவரைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அதை நான் காதிலேயே போட்டுக்கொள்ள மாட்டேன். வாழ்க்கையில் யாராவது ஒரு சிலரையாவது கண்மூடித்தனமாக நம்புவதும், ரசிப்பதும், வழிபடுவதும் இல்லையென்றால் அதென்ன வாழ்க்கை?

இன்று மாலை ஐந்து மணிக்கு சென்னை புத்தகக் காட்சியில் ப்ரியா கல்யாணராமனின் சில நூல்கள் வெளியிடப்படுகின்றன. வாய்ப்பிருப்பவர்கள் கலந்துக் கொள்ளலாம். இவர் எழுதி நூல்வடிவம் பெற்ற அத்தனை நூல்களுமே குமுதம் ஸ்டாலில் கிடைக்கும்.

10 ஜனவரி, 2014

இளைய தளபதி விஜய்

நேற்று இரவு மடிப்பாக்கத்தில் ’மாட்டினா மரண அடி கய்ஸ்’ குழுவினர் இளைய தளபதி விஜய்க்கு கட்டவுட் வைத்து பாலாபிஷேகமும், தேனாபிஷேகமும் செய்துக் கொண்டிருந்தார்கள். காலையில் கட்டவுட்டையும் காணவில்லை. கய்ஸையும் காணவில்லை.

அதை விடுங்கள்.

என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு தெரிந்த ரகசியம்தான். எல்லோருக்கும் சொல்லிவிடுகிறேன், பிரச்சினையில்லை.

எம்.ஜி.ஆர், கமலுக்கு பிறகு நான் ரசிக்கும் நடிகர் விஜய்தான். இளைய தலைமுறை நடிகர்களிலேயே விஜய் அளவுக்கு தோற்றப்பொலிவும் (அச்சான தமிழ் முகம்), நடனம், சண்டை, நடிப்புத் திறமையும் கொண்ட நடிகர் வேறு யாருமில்லை. ஆனால் தன்னுடைய potential என்னவென்று தெரியாமல், அநியாயத்துக்கு கேரியரை வீணடிப்பவரும் வேறு யாருமில்லை. நடனம் ஆடத்தெரியாத, முகத்தில் சரியாக ரியாக்‌ஷன் காட்டத்தெரியாத சூர்யாவெல்லாம் கூட விஜய்யை மிஞ்சிய நடிகராக பார்க்கப் படுவது ’நிஜமான’ விஜய் ரசிகனான என்னைப் போன்றவர்களுக்கு எத்தகைய மனத்துன்பத்தை தருமென்பதை சொல்ல வேண்டியதில்லை.

ஐம்பதாவது படம் என்பது ஒரு நடிகருக்கு மைல்கல்லான விஷயம். அதற்கு எப்படிப்பட்ட சப்ஜெக்ட்டை, எப்படிப்பட்ட இயக்குனரை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். பிரபு ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த கடைசிக்காலத்தில் அவரை வைத்து ஓரிரு சுமார் படங்கள் கொடுத்த ராஜ்குமாரையா இயக்குனராக ஒப்பந்தம் செய்வார்கள்? கேட்டால் ஏதோ நியூமராலஜி பார்த்து இயக்குனரை தேர்ந்தெடுத்ததாக சொல்கிறார்கள். ஆரம்பத்தில் விஜய் படங்கள் ஃப்ளாப் ஆகும்போதெல்லாம், அதற்கு காரணம் அவரது அப்பா எஸ்.ஏ.சி. என்று அசால்ட்டாக சமாதானம் சொல்லிக் கொண்டிருக்க முடிந்தது. நாற்பது வயதைத் தொட்டு விட்ட நிலையிலும் இன்னமும் அப்பாவுக்கு அடங்கிய அமுல் பாப்பா என்று அவரை சொல்லிக் கொண்டிருந்தோமானால் அதைவிட பகுத்தறிவுக்கு புறம்பான விஷயம் வேறொன்றும் இருந்துவிட முடியாது.

விஜய்யின் நேரடிப் போட்டியாளரான அஜீத்துக்கு இம்மாதிரி பிரச்சினைகள் ஏதுமில்லை. நடிப்போ, நடனமோ எதுவுமே அவருக்கு அவசியமில்லை. அஜீத் படம் மொக்கை என்றாலும் கூட, அஜீத் ரசிகர்கள் படத்தில் ‘தல மட்டும் சூப்பர்’ என்று திருப்திப்பட்டுக் கொள்வார்கள். மாறாக விஜய்யின் மோசமான படங்களில்கூட, விஜயின் பெர்ஃபாமன்ஸ் சூப்பராக இருந்தாலும் (உதா : குருவி, வில்லு, சுறா) ஒட்டுமொத்தமாகவே மக்கள் தூக்கியெறிந்துவிடுகிறார்கள்.

ரீமேக்தான் தன்னை கரை சேர்க்கும் என்று விஜய் ஒரு குருட்டு நம்பிக்கை வைத்திருக்கிறார். போக்கிரியால் நிகழ்ந்த விளைவு இதுவென்று நினைக்கிறேன். திருப்பாச்சி, துப்பாக்கி என்று அவரை தூக்கிவிட்ட படங்களை ஏன் மறக்கிறார் என்று தெரியவில்லை.

இளையதளபதி இப்போது இருக்கும் ரேஞ்சுக்கு எப்படி இயக்குனராக நேசனை தெரிவு செய்தார் என்பதே புரியவில்லை. ஆர்.பி.சவுத்ரி தன்னுடைய மகன் ஜீவாவுக்கு கூட நேசனை தேர்ந்தெடுத்திருக்க மாட்டார். அதுவும் தெலுங்கில் சர்வானந்த் நடித்த கேரக்டருக்கு இங்கே எப்படி இளையதளபதி நடிக்க முடியும். இந்த கேரக்டரில் நடிக்க விமல், சிவகார்த்திகேயனெல்லாமே கூட யோசிக்க மாட்டார்களா? 'ஜில்லா சூப்பர்’ என்று ரெண்டு மூன்று அணில் குஞ்சுகள் கூவலாம். இது இயல்பானதுதான். குசேலன் வந்தபோது கூட தமிழின் மிகச்சிறந்த படம் என்று ரஜினி ரசிகர்கள் சிலர் இணையத்தில் விமர்சனம் எழுதினார்கள். ஆனால் யதார்த்தம் என்று இருப்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதால் நஷ்டம் நமக்குதான்.

சரி, ரீமேக்தான் என்று முடிவு கட்டி விட்டாலும், அங்கே மகேஷ்பாபு ஹாட்ரிக் ஹிட் கொடுத்திருக்கிறார். பவன் கல்யாண் ஹாட்ரிக் ஹிட் கொடுத்திருக்கிறார். அந்த ஆறு படங்களில் ஏதோ ஒன்றை தேர்ந்தெடுத்து தொலைத்திருக்கலாமே? ‘தூக்குடு’வில் இளையதளபதி நடித்திருந்தால் இங்கே போக்கிரியின் ரெக்கார்ட் எல்லாம் தூள் தூள் ஆகியிருக்காதா? பாட்ஷா என்றொரு படம். ஜூனியர் என்.டி.ஆரின் மாஸ்டர்பீஸ். அதை தமிழில் எடுத்தால் விஜய்யை தவிர வேறு யாருமே செய்ய முடியாது. ‘அத்தாரிண்டிக்கி தாரேதி’ என்று பவன் கல்யாண் படம். ஆக்‌ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என்று சென்ற ஆண்டு ஆந்திராவையே அசைத்துப் பார்த்த படம். இங்கே விஜய் நடித்தால், தமிழின் அதிகபட்ச வசூலை எட்டிப் பார்ப்பதற்கான வாய்ப்பு உண்டு.

இதையெல்லாம் இளையதளபதி பரிசீலனை கூட செய்ததாக தெரியவில்லை. அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஃப்ளாப் கொடுத்துக் கொண்டிருந்தாலும் தளபதியின் சம்பளம் மட்டும் ஏறிக்கொண்டே போகிறது. இப்படியே போனால் எந்தவொரு தயாரிப்பாளரும் விஜய்யை வைத்து படமே எடுக்க முடியாது. அவரே சொந்தமாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். தொண்ணூறுகளின் இறுதியில் லோ மற்றும் மீடியட் பட்ஜெட் தயாரிப்பாளர்களின் அமுதசுரபியாக விஜய் இருந்தார். பட்ஜெட்டுக்கும், சப்ஜெக்ட்டுக்கும் ஏற்றமாதிரி சம்பளத்தை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ வாங்குவார் என்பார்கள். ரஜினி, கமல் படங்கள் எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும், விஜய் என்கிற மாஸ் நடிகரால் இண்டஸ்ட்ரி நன்றாக வாழ்ந்துக்கொண்டிருந்த காலம் அது. அந்த பொற்காலம் திரும்பாதா என்று அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரைஆர்வலர்களும் ஏங்குகிறார்கள்.

9 ஜனவரி, 2014

ஜில்லா

ஊர் பெரிய மனிதர் சாக கிடக்கிறார். அரசியல் எதிரிகளால் அந்த பெரிய மனிதரின் மகன் படுகொலை செய்யப்பட, இளம் விதவை ஆகிறார் பூர்ணிமா பாக்யராஜ். சாகக்கிடக்கும் தருவாயில் இருக்கும் பெரியவர் தன்னுடைய விதவை மருமகளை மோகன்லால் திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு ‘பேக்கரி டீலிங்’ ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார். இதனால் அவரது அடுத்த அரசியல் வாரிசாக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகளின் தாயான பூர்ணிமா பாக்யராஜை மோகன்லால் மணந்துக்கொண்டு வாக்குறுதியை காப்பாற்றுகிறார். பூர்ணிமாவின் மகன் தான் இளைய தளபதி விஜய். பிற்பாடு மோகன்லாலுக்கும் அவருக்கும் இன்னொரு உருப்படாத மகன் பிறக்கிறான். மகத்.

அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மாநில அளவில் பெரிய மனிதராகிறார் மோகன்லால். கட்டிவர சொன்னால் வெட்டிவர தயாராக வளர்ந்து நிற்கிறார் விஜய். ஆனால் மகத்தோ வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டு, கண்ணில் படும் பெண்களை ரேப் செய்துக்கொண்டு, டோபு அடித்துக்கொண்டு வெளங்காவெட்டியாக உருவெடுக்கிறார்.

அரசியலில் விஜய்க்கு மோகன்லால் முக்கியத்துவம் கொடுப்பதை ஆரம்பத்திலிருந்தே மகத் விரும்பவில்லை. இளைஞரணித் தலைவர் பதவியை விஜய்க்கு தருவதை கடுமையாக எதிர்க்கிறார். ஆனாலும் மோகன்லால் விஜய்யைதான் அரசியலில் வளர்க்க விரும்புகிறார். ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்று அப்பா தன்னை வெறுப்பதாக கருதிக்கொள்ளும் மகத் , கடுப்பாகி ஹாஃப் ஹாஃபாக சரக்கடித்து, ஃபுல் போதையில், மோகன்லாலிடம் பணிபுரியும் பாஷா என்பவரின் மகளை கதறக் கதற...

இந்த அடாத செயலுக்காக மகத்தை தண்டிக்க வேண்டுமென்று விஜய் போர்க்கொடி தூக்குகிறார். விஜய்யை போட்டால்தான் தான் உயிரோடு இருக்க முடியுமென்று மகத் அவர் மீது கொலைமுயற்சியை நடத்துகிறார். விஜய் இதிலிருந்து தப்பிக்க, மிருகமாக மாறிவிட்ட மகத் என்ன செய்கிறோம் என்பது புரியாமல் பூர்ணிமாவின் மகளையும் (அதாவது விஜய்க்கு டைரக்ட், மகத்துக்கு இன்டைரக்ட் அக்காவை), அவரது கணவரையும்கூட போட்டுத் தள்ளிவிடுகிறார். அக்காவை இழந்த விஜய் எரிமலையாய் வெடிக்கிறார். தன்னுடைய மகளை கற்பழித்துக் கொன்ற மகத்தை ஒழிக்க வேண்டுமென்று விஜய்யோடு மோகன்லாலின் நம்பிக்கைக்குரிய சகாவான பாஷாவும் கரம் கோர்க்கிறார். மகத்தை போட்டுத் தள்ளுகிறார் விஜய்.

தூங்கிவிடாதீர்கள். ட்விஸ்ட் மிச்சமிருக்கிறது.

இதுவரை படத்தில் காட்டப்பட்டது மாதிரி மோகன்லால் அவ்வளவு பெரிய யோக்கிய கொண்டையெல்லாம் கிடையாது. தன் ரத்தத்தில் பிறந்த மகனான மகத்தை நன்றாக வாழவைக்க, விஜயை ஒரு பலியாடாகதான் வளர்த்துக் கொண்டிருந்தார். விஜய்யின் ஒரிஜினல் தந்தை அரசியல் கலவரத்தால் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டதும் பொய். அவரை கொன்றவரே மோகன்லால்தான் என்று பழைய கதைகளை தெரிந்த பாஷா சொல்கிறார்.

க்ளைமேக்ஸ்.

மோகன்லாலை பார்க்க வருகிறார் விஜய். இவரை எதிர்கொள்ள முடியாமல் கூசிப்போகும் மோகன்லால், “நல்லவன், கெட்டவன் பாகுபாடெல்லாம் உலகத்தில் இல்லை. இலட்சியங்களை அடைய அனைவரும் சிறு சிறு தவறுகளை செய்தவர்கள்தான்” என்று தன்னுடைய கடந்தகால தவறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டுகிறார். விஜய்யிடம் தன்னுடைய பழைய விஷயங்களை எல்லாம் போட்டு கொடுத்துவிட்ட பாஷாவை போட்டுத் தள்ளுமாறு ஆணையிடுகிறார். அதை மறுக்கும் விஜய், மோகன்லாலின் காலில் விழுந்து வணங்கி “யார் என்ன சொன்னாலும் நீ மட்டும்தான் என் அப்பா. என்னோட ஒரிஜினல் அப்பன் இப்போ உயிர்பிழைச்சி வந்தாலும் கூட, உன்னைதான் என் அப்பனா ஏத்துப்பேன். ஏன்னா நீ என்னை அப்படி வளர்த்திருக்கே” ரேஞ்சுக்கு எட்டு, பத்து நிமிஷத்துக்கு முழம் முழமாய் செண்டிமெண்டை கொட்டி வசனம் பேசுகிறார். அவரும், பாஷாவும் சில்லவுட்டாக தனியாக இருக்கும் மோகன்லாலை விட்டுக் கிளம்புகிறார்கள்.

இளைய தளபதியின் லாங் டயலாக்கை கேட்டு உலகத்தையே வெறுத்துவிட்ட மோகன்லால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சாகிறார்.

2007ல் ‘பிரஸ்தானம்’ என்கிற பெயரில் சாய்குமார், சர்வானந்த் நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் இது. தமிழில் இதுதான் ‘ஜில்லா’வாகிறது. பாலகிருஷ்ணாவின் ஆல்டைம் ப்ளாக்பஸ்டரான ‘சிம்மா’ ரிலீஸ் ஆன தேதியில் பிரஸ்தானமும் ரிலீஸ் ஆகித் தொலைத்ததால் படுதோல்வி அடைந்தது. வேறு தேதியில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் தோல்வி அடைந்திருக்கும். சாய்குமாரின் நடிப்பு மட்டும் நன்றாக பேசப்பட்டது. அவருக்கு அவ்வருடத்துக்கான ஃபிலிம்பேர், நந்தி விருதுகள் இப்படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. சில காலம் முன்பு இப்படம் ‘பதவி’ என்கிற பெயரில் டப் ஆகி தமிழிலும் ரிலீஸ் ஆனது. வந்த சுவடே யாருக்கும் தெரியவில்லை.

பின்னணி இப்படியிருக்க, ‘வேலாயுதம்’ ஷூட்டிங்கில் ஜெயம் ராஜாவின் உதவியாளராக இருந்த நேசன் சொன்ன மதுரைப் பின்னணி கதை ரொம்பவும் பிடித்துப்போய் ‘ஜில்லா’வில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டதாக கதையளக்கிறார்கள். தெலுங்கு ரீமேக் என்று சொல்லிக் கொள்வதற்கு என்ன தயக்கமென்று தெரியவில்லை. தெலுங்கில் ஹீரோவுக்கு ஜோடியில்லை. இதில் சேர்த்திருக்கிறார்கள் போல. நேசன் ஏற்கனவே ‘முருகா’ என்கிற படத்தையும் இயக்கியிருக்கிறார். விஜய்க்கு நல்ல ஸ்க்ரிப்ட் கேட்க தெரியவில்லை. தமிழில் விஜய் நடித்தால் ஷ்யூர் ஹிட் என்று சொல்லிக்கொள்ளக் கூடிய ஏராளமான படங்கள் சமீபமாகவே தெலுங்கில் வந்திருக்கின்றன. அப்படியிருக்கையில் அரதப்பழசான சப்ஜெக்ட்டுகளை ஏன்தான் குறிவைத்து தேர்ந்தெடுக்கிறாரோ தெரியவில்லை.

7 ஜனவரி, 2014

அன்புள்ள ஆசிப் அண்ணாச்சிக்கு...

அன்புள்ள ஆசிப் அண்ணாச்சிக்கு...

நலம் நலமறிய ஆவல்.

உங்கள் நெக்குருக்கும் கடிதம் வாசித்தேன். இரத்தக் கண்ணீரை அடக்கிக்கொண்டு படித்தேன். நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களை காட்டிலும் மிகச்சிறந்த கடிதமாக மதிப்பிடுகிறேன். அழிந்து வரும் கடிதக்கலையை நீங்களும், கலைஞரும்தான் காக்க வேண்டும்.

//வேடியப்பன் என்ற நண்பருக்காக உரக்கக் குரல் கொடுத்தாக வேண்டுமென்ற உனது எண்ணத்தைப் பாராட்டுகிறேன்//

உங்கள் பாராட்டுக்கு நன்றி. எனக்கு சென்ஷி எதிரியல்ல. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே பழக்கமான நண்பர்தான். ஒன்றாக லஞ்ச் சாப்பிட்டிருக்கிறோம். கட்டிப் பிடித்து அன்பை பரிமாறிக் கொண்டிருக்கிறோம். போலவே உங்களுக்கும் வேடியப்பன் எதிரியல்ல என்று கருதுகிறேன்.

இந்த consipiracy theory எல்லாம் இணையத்தின் பிலக்கா பயல்கள் செய்துக் கொள்ளட்டும். உங்களுக்கு ஏன் அண்ணாச்சி. நீங்கள் நினைப்பது மாதிரி வேடியப்பனுக்கு நான் நெருக்கமான நண்பர் எல்லாம் அல்ல. சென்னையில் இருக்கும் உங்கள் இதர நண்பர்களிடம் நீங்கள் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். வேடியப்பனுக்கு முன்பே எனக்கு அறிமுகமானவர் சென்ஷிதான்.

வளைகுடா நாடுகளில் வேலை செய்தார் என்பதற்காக வளைகுடா பதிவர்களும், விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் இருக்கிறார் என்பதற்காக அதன் தளபதிகளும், பண்புடன் குழுமத்தில் இருக்கிறார் என்பதற்காக அதன் உறுப்பினர்களும் கச்சை கட்டிக்கொண்டு வருவதைப் போன்ற எந்தப் பின்னணியும் இந்த விவகாரத்தில் கருத்து சொல்வதற்கு எனக்கில்லை.

மொத்தமாக கூட்டம் சேர்ந்து, அநியாயமாக அராஜகமாக ஒருவர் அடிக்கப்படுவதை எதிர்த்து, நடைமுறை யதார்த்த நியாயம் என்ன என்பதை மட்டும்தான் பேசியிருக்கிறேன்.

//கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகள்.. யார் யாரிடமோ யாசகம் பெற்று, ஒளி வருடி, செல் பேசியில் படமெடுத்து அனுப்பி அதனை வரியாக வரியாகத் தட்டச்சு செய்து என்று பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.. அதனால்தான் அந்த உழைப்பு சுரண்டப்படும்போது மயிர் பிளக்கும் விவாதத்திற்கு அது வழி வகுத்து விட்டது//

சென்ஷிக்கு இந்த வேலையை வேடியப்பனோ, எஸ்.ராமகிருஷ்ணனோ ‘அசைன்’ செய்து உழைப்பை சுரண்டியிருந்தால் நானும் உங்களோடு வந்து கொடிபிடிப்பதுதான் நியாயமான செயலாக இருக்கும்.

//பகிரல் நோக்கமில்லாமல் இருந்திருந்தால் சென்ஷி இணையத்தில் இதனைத் தொகுத்திருக்க அவசியமேயில்லை..//

இணையம் என்பது மின் ஊடகம். அச்சு ஊடகத்தோடு வேறுபட்டது. பகிரல்தான் நோக்கம் எனும்போது, அது அச்சுக்கு வரும்போது அதை எதிர்க்கவோ, கசமுசா செய்யவோ அவசியமில்லை என்பது என் தாழ்மையான கருத்து. அச்சில் வாசிக்கும் வாசகர்களும் பயனடைந்துவிட்டு போகட்டுமே. அதே நேரம் நான்கு வருடம் யாசகம் பெற்று, ஒளிவருடி, செல்பேசியில் படமெடுத்து, தட்டச்சியெல்லாம் தயார் செய்துவிட்டால் மட்டுமே ‘தொகுப்பாசிரியர்’ ஆகிவிட முடியாது என்கிற யதார்த்தத்தை எல்லாரும் உணரவேண்டும். தொகுப்புகளில் என்னென்ன இடம் பெற வேண்டும் என்று தீர்மானிக்கிறவர்தான் தொகுப்பாசிரியர் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல. உலகம் முழுக்க அதுதான் நடைமுறை.

// ஒரு பைத்தியக்காரன் மொத்த கதையையும் தொகுத்து இணையத்துல அதிகப் பிழையேதுமில்லாமல் சேர்த்து வச்சிருக்கான். அப்படியே ’லபக்’கிட்டா எவன் கேக்கப் போறான்னு தெரிஞ்சதும் அனுமதி கேட்டிருப்பாரா இருக்கும். ஏற்கெனவே 50 கதைகள் மின்நூலா கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் தொகுப்பாசிரியரும் சம்மதம் சொல்லியிருப்பாராக இருக்கும் //

நீங்களெல்லாம் இப்படி குற்றம் சாட்டுகிறீர்கள். சென்ஷி டைப்படித்த கதைகளை வேடியப்பன், Ctrl C + Ctrl V செய்துக்கொண்டார் என்று. தமிழ் இணையத்தில் மின்னல்வரிகள் பாலகணேஷ் என்றொருவர் பிரபலமானவர். டிசைனிங், டி.டி.பி. பணிகள் செய்கிறார். நிறைய பதிவர்களின் புத்தகங்களுக்கு ப்ரீப்ரொடக்‌ஷன் பணிகளை செய்துக் கொடுத்திருப்பவர். வேடியப்பன் கொண்டுவரும் தொகுப்புக்காக டைப்பிங் வேலை மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கிறது என்று அவர் சொல்கிறார். நானறிந்தவரை கணேஷ் பொய் சொல்லக்கூடிய நபர் அல்ல. இதற்கு என்ன சொல்கிறீர்கள்? கணேஷ் டைப் செய்துக்கொண்டிருப்பது வேறு ஏதோ எஸ்.ரா புத்தகம் எனப் போகிறீர்களா?

// அச்சிலேயே இல்லாத கதைகளைக் கூட பணம் கொடுத்து சென்ஷி வாங்கினான். நான் தான் அதை ஒன்றல்ல, இரண்டல்ல.. ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி வந்தேன் என்பதெல்லாம் உனக்குத் தெரியுமா? //

உண்மையிலேயே இப்படியான சூழல் இருப்பின், சென்ஷிக்கு இதுவரை இதற்காக ஆன செலவுகளுக்கு வேடியப்பனிடம் நிவாரணம் கேட்கலாம். தவறேயில்லை. இந்த விஷயத்தில் ஐ ஆல்சோ சப்போர்ட் சென்ஷி.

// நிச்சயம் அவர் படித்து தேர்வு செய்ததால்தான் சென்ஷி அதனைத் தொகுக்கவே தொடங்கினான். எனவே அந்த மரியாதை என்றுமே எஸ்.ராவுக்கு இருக்கும். ஆனால்.. அந்தக் கதைகளைத் தேடித் தொகுக்க நான்கரை ஆண்டுகள் உழைத்தவனுக்குண்டான அங்கீகாரத்தை ஒற்றை வரியில் நன்றி சொல்லி முடித்துக் கொள்வது முறையில்லை//

எஸ்.ரா படித்து தேர்வு செய்ததால்தான் அவர் தொகுப்பாசிரியர். இதுதான் என்னுடைய பாயிண்ட். சென்ஷிக்கு என்ன அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென்று எதிர்ப்பார்க்கிறீர்கள்? தொகுப்பாசிரியர் என்று அவரை டெக்னிக்கலாக சொல்லிக் கொள்ள முடியாது.

வேண்டுமென்றால் நம்முடைய ஈ-புக்கில் நாமே அப்படி போட்டுக்கொள்ள வேண்டியதுதான். யார் கேட்கப் போகிறார்கள். கதைகளை எழுதிய எழுத்தாளர்களிடம் கூட முறையான அனுமதி கேட்காமல்தானே நாலரை ஆண்டுகளாக உழைத்து சென்ஷி இணையத்தில் ஏற்றியிருக்கிறார்.

// ஒட்டுமொத்தமாக இப்படிச் சொல்வது ஏற்புடையதன்று. நியாயமாகப் பட்டதால் சென்ஷியை ஆதரிக்கிறார்கள் நீ எப்படி உன் தரப்பு நியாயத்துக்காக வேடியப்பனுக்காக வேட்டியை வரிந்து கட்டுகிறாயோ அதைப் போல..//

வேடியப்பனுக்காக வேட்டியை வரிந்து கட்டினேன் என்கிற உங்கள் அனுமானம் நியாயமானதல்ல. கடந்த ஞாயிறு அன்று எஸ்.ரா.வின் ‘நிமித்தம்’ நாவல் வெளியீடு நடந்தது. அந்த விழா முடிந்ததுமே ரஷ்ய கலாச்சார மையத்தின் வெளியே வைத்து ஒரு போலிஸ்காரன், திருடனை விசாரிப்பது மாதிரிதான் வேடியப்பனை விசாரித்தேன். “போடா மயிரு. நீ யாரு இதையெல்லாம் கேட்க” என்று வேடியப்பன் திருப்பிக் கேட்டிருந்தால் என்னால் ஒன்றும் செய்திருக்க முடியாது. மாறாக வேடியப்பன் இந்த நூலை கொண்டுவர என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று பொறுமையாக விளக்கினார். இது நடந்தது என்பதற்கு அங்கிருந்த இணைய நண்பர்கள் செ.சரவணக்குமார், விநாயகமுருகன், சிவராமன், ரமேஷ் போன்ற நண்பர்களே சாட்சி.

வேடியப்பனிடம் பேசியபோது அவர் சொன்னது. “புத்தகத்தில் சென்ஷிக்கு மட்டுமல்ல. எங்களுக்கு இந்த கதைகள் யாரிடமிருந்து, எங்கிருந்தெல்லாம் கிடைத்ததோ அத்தனை பேரின் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறோம்” என்றார்.

ஓக்கே, உங்கள் கடிதத்துக்கு இவ்வளவுதான் பதில். மீதி, பொதுவான நண்பர்களுக்காக.

ஒரு புத்தகம் தொகுப்பாக வருவதற்கு முன்பு பதிப்பாளர் என்னென்ன வேலையெல்லாம் செய்யவேண்டும் என்பது பொதுவான ஆட்களுக்கு தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

தொகுப்பு என்றால் அதில் இடம்பெறும் எழுத்தாளர்களிடம் அனுமதி பெறவேண்டும் என்பது முக்கியமான விதி. பி.டி.எஃப். என்பதால் அந்த விதியை சென்ஷி பின்பற்றவில்லையோ அல்லது சென்ஷிக்கு அது தெரியாதோ.. அதையெல்லாம் விட்டு விடுவோம். நாளைக்கு அவருக்கு இதனால் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், ‘ஐ சப்போர்ட் சென்ஷி’ என்பவர்கள் வெடிச்சத்தம் கேட்டதுமே பறக்கும் காக்காய்களாக பறந்துவிடுவார்கள். அல்லது சென்ஷியை குறிவைத்து குதறியெடுத்து விடுவார்கள். இணையத்தில் இதெல்லாம் சகஜம். நர்சிம் விஷயத்தில் எல்லாம் நாம் பார்க்காததா என்ன.

எழுத்தாளர் மாலனின் சிறுகதை ஒன்றும் இந்த தொகுப்பில் இடம்பெறுகிறது. இதற்காக வேடியப்பன் அவரிடம் தொலைபேசியில் பேசி அனுமதி வாங்கினார். வாங்கியதோடு இல்லாமல் ஒருமுறை நேரிலும் சந்தித்து ஒரு ஒப்புதல் கடிதமும் வாங்கிக் கொண்டார். கதை எழுதியவர்களுக்கு ராயல்டி தரமுடியாது. பதிலுக்கு புத்தகத்தின் ஒரு பிரதியை (விலை ரூ.650) கொடுத்துவிடுகிறேன் என்பது வேடியப்பனின் டீலிங்.

இதைப் போலவே ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களிடம் வேடியப்பன் அனுமதி வாங்க வேண்டியிருந்தது. லேசாக ஒரு வரியில் இதை கடந்து போய்விடலாம். அது எவ்வளவு பெரிய வேலையென்றால், நான்கு வருடம் யாசகம் பெற்று, ஒளிவருடி, செல்பேசியில் படமெடுத்து, தட்டச்சுவதை விட மிகப்பெரிய வேலை. பதிப்பகங்களுக்கும், நூல்களை தொகுத்தவர்களுக்கும்தான் இந்த வேலையை பற்றி தெரியும்.

நான் மேலே சொன்னது ஒரு தொகுப்பு உருவாகும் பெரிய பிராசஸிங்கில் இருக்கும் மிகச்சிறிய ஆரம்பக்கட்ட பணி. இதையடுத்து இன்னும் நிறைய பணிகள் இருக்கின்றன. அப்படியே டைப் செய்து இணையத்தில் ஏற்றுவது மாதிரி இது சுலபமான பணி அல்ல. ஏனெனில் இதில் நிறைய பணமும் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒருவரியில் சொன்னால் கொஞ்சமென்ன, நிறையவே ரிஸ்க்கான வேலைதான்.

பதிப்பாளரின் பணி மட்டுமல்ல. தொகுப்பாசிரியரின் பணியும் கடினம்தான். இணையத்தில் எழுதும்போது நூறு சிறந்த சிறுகதைகள் என்று ஜாலியாக லிஸ்ட் போட்டுவிடலாம். நாமெல்லாம் புது வருஷம் வந்ததுமே டாப் 10 தமிழ் மூவிஸ் என்று லிஸ்ட்டு போடுகிறோமே அதுபோல. ஆனால் ஒரு பட்டியல் முழுத்தொகுப்பாக புத்தகமாக வரும்போது, அந்த கதைகளை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று விலாவரியாக, விளக்கமாக ஜஸ்டிஃபை செய்ய வேண்டும். இந்த தேர்வுகளில் ஏதேனும் தவறு என்று இருந்தால் தொகுத்தவரின் டப்பாவை மற்ற இலக்கியவாதிகள் ஒன்று சேர்ந்து டேன்ஸ் ஆட வைத்து விடுவார்கள்.

ஆகவே தோழர்களே! என்னுடைய இறுதி கருத்துகள் இவைதான்.

என்னைக் கேட்டால் ‘ஈகோ’வை விட்டு விட்டு வேடியப்பன் ஒருமுறை சென்ஷிக்கு போன் செய்து பேசிவிடலாம். அல்லது எஸ்.ரா.வே கூட சென்ஷியிடம் பேசிவிடலாம். இதில் யாருக்கும் கவுரவக் குறைச்சல் ஏற்பட்டு விடாது.

தொகுப்பு வெளியான பிறகு, ஒருமுறை எஸ்.ரா. தலைமையில் சென்ஷிக்கு வேடியப்பன் பாராட்டுவிழா நடத்தலாம். அவ்வாறு ஒரு விழா நடந்தால்கூட இணையத்தில் ‘ஐ சப்போர்ட் சென்ஷி’ என்று tag போட்டு எழுதுபவர்கள் நேரில் வந்தெல்லாம் பாராட்ட மாட்டார்கள். அவர்களால் லைக்கும், கமெண்டும்தான் போடமுடியும். இவர்களை நம்பி தேவையில்லாமல் தோழர் சென்ஷி எதிலும் ஏடாகூடமாக ஈடுபட்டுவிட வேண்டாமென்று அனுபவஸ்தன் என்கிற அடிப்படையில் கேட்டுக் கொள்கிறேன். இப்படியே ஏத்திவிட்டு, ஏத்திவிட்டுதான் உடம்பை ரணகளமாக்கி அனுப்புவார்கள். அம்மாதிரி ரணகளமாக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது சென்ஷிக்கும் தெரியும்தானே?