3 டிசம்பர், 2009

உங்களில் யார் அடுத்த சீத்தலைச் சாத்தனார்?


போட்டோ கர்ட்டஸி : வரைந்த முகம் தெரியாத நண்பர்.

சீத்தலைச் சாத்தனாரைப் பற்றி ஒரு சிலருக்காவது தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். ஏனென்றால் எனக்கே தெரிந்திருக்கிறது.

இவர் சங்க காலத்தில் வாழ்ந்த புலவராம். அச்சாணியை கையில் எடுத்தால், ஓலைச்சுவடியில் மடக்கி மடக்கி கவிதைகளாக எழுதித் தள்ளுவாராம். ஏதாவது வார்த்தை சிக்காவிட்டால் கையில் இருக்கும் அச்சாணியாலேயே கடுப்பில் தலையில் குத்திக் கொள்வாராம். இதனால் அவரது தலைமுழுக்க காயம் ஏற்பட்டு, இன்பெக்‌ஷன் ஆகி சீழ் வழியுமாம். எனவேதான் அவரது பெயர் சீத்தலைச் சாத்தனார்.

இதுபோல உங்கள் தலையும் சீழ் பிடிக்க வேண்டுமா?

சமூக, கலை, இலக்கிய சிந்தனை அமைப்பான ’உரையாடல்’ பெரியமனதோடு இந்த வாய்ப்பினை அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பாக இவ்வமைப்பு தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஒரு சிறுகதைப் போட்டி நடத்தி முப்பதாயிரம் ரூபாய் பரிசு வழங்கியது நினைவிருக்கலாம். இம்முறை கவிதைப்போட்டி!

மொத்த பரிசுத் தொகை ரூபாய் 30 ஆயிரம். 20 கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூபாய் 1,500 வீதம் அளிக்கப்படும்.

விதிமுறைகள்

1. வலைப்பதிவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இதுவரை வாசகர்களாக இருப்பவர்கள் போட்டியில் கலந்து கொள்ள விரும்பினால், புதியதாக வலைதளம் ஒன்றை ஆரம்பித்துவிட்டு போட்டியில் பங்கேற்கலாம்.

2. இதுவரை பிரசுரமாகாத - அச்சிலோ, வலைத்தளத்திலோ - கவிதையாக இருக்க வேண்டும்.

3. குறைந்தது 10 வரிகள் இருக்கவேண்டும். ஒரு வரிக்கு எத்தனை சொற்கள் என்பது அவரவர் முடிவு. (எண்டர் தட்டித் தட்டியா... என நண்பர் குசும்பன் கேட்பது காதில் ஒலிக்கிறது!)

4. இந்தத் தலைப்பு அல்லது இந்தப் பொருள் என்று எதுவும் கிடையாது. எந்தத் தலைப்பிலும் கவிதைகள் எழுதலாம்.

5. கண்டிப்பாக அமைப்பாளர்கள் நடுவர்களாக இருக்கமாட்டார்கள்.

6. அவரவர் வலைத்தளத்தில் கவிதையை வெளியிட்டுவிட்டு, எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு லிங்க் தந்தால் போதுமானது. சிறுகதைப் போட்டிக்காக தனி வலைத்தளம் அமைத்துத் தந்த நண்பர் 'சங்கமம்' இளாவிடமே, இம்முறையும் கவிதைப் போட்டிக்காக தனி வலைத்தளம் அமைத்துத் தரும்படி கேட்டிருக்கிறோம். இரண்டொரு நாளில் அவரும் அமைத்து தந்துவிடுவார். போட்டிக்காக நீங்கள் எழுதிய கவிதையை அந்தத் தளத்தில் லிங்க் தந்துவிட்டால், அனைத்து பதிவர்களும் அதை வாசிக்க சுலபமாக இருக்கும். கவிதைப் போட்டிக்காக உருவாக்கப்பட்ட தளத்தில் இணைக்கப்படாத கவிதைகளை பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது.

7. அறியப்பட்ட, பிரபலமான கவிஞர்களே நடுவர்களாக இருக்கிறார்கள். அவர்களது பெயர்கள் முடிவு வெளியாகும் போதே அறிவிக்கப்படும்.

8. நடுவர்களின் முடிவே இறுதியானது.

9. முடிவு அறிவிக்கப்படும் வரையில், போட்டிக்காக எழுதப்பட்ட கவிதைகளை அச்சு ஊடகத்துக்கு தர வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

10. ஒருவரே பல வலைத்தளங்களை பல்வேறு பெயர்களில் வைத்திருக்கலாம். என்றாலும் ஒருவர் ஒரு கவிதையை மட்டுமே போட்டிக்கு அனுப்புவது, அனைவரது பங்கேற்புக்கும் வழிவகுக்கும்.

11. முடிவு அறிவிக்கப்பட்ட பின்பு, கவிதைப் பட்டறை குறித்த அறிவிப்பு வெளியாகும்.

12. எங்கள் மீது அன்பும், பிரியமும் கொண்ட நண்பர் 'கிழக்கு பதிப்பகம்' பத்ரி, கவிதை நூல்களை வெளியிடுவதில்லை. எனவே தேர்ந்தெடுக்கப்படும் 20 கவிதைகளும் நூலாக வெளிவருமா என்று திட்டவட்டமாக சொல்ல முடியாது. பிற பதிப்பக நண்பர்கள் ஆர்வமுடன் நூலாக கொண்டு வர இசைவு தெரிவித்தால், நிச்சயமாக முறைப்படி உங்களிடம் அறிவித்துவிட்டு அனுமதி தருவோம்.

13. தேர்ந்தெடுக்கப்பட்ட, தேர்ந்தெடுக்கப்படாத கவிதைகள் அனைத்தும் எழுதியவர்களுக்கே சொந்தம். அந்த உரிமையில் ஒருபோதும் 'உரையாடல்' தலையிடாது.

14. டிசம்பர் மாதம் முதல் தேதி, இந்திய நேரப்படி நள்ளிரவு ஒரு மணிக்கு போட்டி தொடங்குகிறது.

15. கவிதைப் போட்டிக்கான இறுதி தேதி, தைத் திங்கள் முதல் நாள், அதாவது 2010ம் ஆண்டு ஜனவரி மாதம், 14ம் தேதி, இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது.

16. போட்டியின் முடிவுகள் 2010, மார்ச் மாதம் முதல் தேதி, அறிவிக்கப்படும்.

17. எந்தவிதமான ஸ்பான்சர்களையோ, தொண்டு நிறுவனத்தின் உதவிகளையோ பெறாமல், அமைப்பாளர்கள் தங்கள் கைக் காசைச் செலவழித்து போட்டியை நடத்துகிறார்கள். எனவே விமர்சனம் வைக்கும் அன்பு நண்பர்கள், தயவுசெய்து, பண உதவி பெறுவதாகவோ, பலரிடமிருந்து பெற்று அமைப்பாளர்கள் சுருட்டிக் கொள்வதாகவோ விமர்சனம் வைக்க வேண்டாம்.

18. வலையுலக நண்பர்கள் அனைவரும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். உங்களது ஆர்வமும், உற்சாகமுமே எங்களுக்கான தூண்டுகோல் என்பதை மீண்டும் நினைவுப்படுத்துகிறோம்.

19. போட்டியில் பங்கேற்கப் போகும் அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

20. இந்தப் போட்டி குறித்த அறிவிப்பை உலகெங்கும் கொண்டு செல்லப் போகும் அனைத்து வலைத்தளங்களுக்கும், 'தமிழ்மணம்', 'தமிழிஷ்', 'தமிழர்ஸ்', 'தமிழ்வெளி', 'திரட்டி', 'சங்கமம்' 'நெல்லை', 'உலவு', 'மாற்று', 'தமிழ்மானம்' உட்பட அனைத்து திரட்டி நிர்வாகிகளுக்கும், 'டிவிட்டரில்' கலாய்க்கப் போகும் அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றி.

கீழும் விவரங்களுக்கு, பைத்தியக்காரனின் இப்பதிவைச் சுட்டலாம்!

2 டிசம்பர், 2009

அய்யனார் கம்மா!


சிறுகதைகளுக்கான இடம் வெகுஜனப் பத்திரிகைகளில் வெகுவாக குறைந்துவரும் காலக்கட்டத்தில், இணையத்தில் முன்னணி எழுத்தாளராக விளங்கும் நர்சிம்மின் முதல் புத்தகமே சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. தமிழ் பதிப்பகங்களின் சமீபக்காலப் போக்கு புனைவுகளை குறைத்து புனைவல்லாத எழுத்துக்களுக்கு (Non-fiction) முக்கியத்துவம் தந்து வரும் நிலையில், தைரியமாக புதுமுக எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கும் அகநாழிகை பதிப்பகத்தின் பொன்.வாசுதேவன் நம்பிக்கையளிக்கிறார். மதிராஜின் அழகான முகப்போவியத்தோடு எழுபத்தி இரண்டு பக்கங்களில் தரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது தொகுப்பு.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். புத்தகத்தின் முதல் கதையே முத்தானது. அய்யனார் கம்மா. நூலுக்கு சூட்டப்பட்ட பெயரும் இதுதான்.

“யார் உள்ள”

“நாந்தாய்யா”

”மெட்ராஸ் போகணும், வேமா வாப்பா”

“நான் மெட்ராஸுக்கு வரலைய்யா”

“யோவ் நான் போகணும்ய்யா”

“அப்ப பஸ்ஸுக்குப் போய்யா இங்க எதுக்கு வந்த?”

பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் நடக்கும் கூத்து இது. எனக்கு என்னவோ எழுத்தாளரின் சொந்த அனுபவமோ என்று தோன்றுகிறது. முதல்முறையாக அவர் மெட்ராஸுக்கு வந்தபோது நடந்த சம்பவமாக இருக்கலாம். அல்லது யாருக்கோ நடந்ததை நர்சிம் அருகில் இருந்தும் பார்த்திருக்கலாம். அனுபவங்களின் வெளிப்பாடே தரமான இலக்கியமாக பரிணமிக்கும். இங்கே பரிணமித்திருக்கிறது.

மாட்டுக்கு லாடம் என்று ஒன்று இருப்பதே இன்றைய நகரத்து இளைஞனுக்கு தெரியுமா என்பது சந்தேகம். லாடம் அடிப்பது என்பது ராக்கெட் விடுவதைப் போல நுணுக்கமானது என்று ஆரம்பிக்கும் நர்சிம், அடுத்த பத்திகளில் சுவாரஸ்யமாக லாடம் அடிப்பதை வார்த்தைகளாலேயே படம் வரைந்து பாகம் குறிக்கிறார். ‘ஒரு சுத்து சின்ன லாடம்’ போன்ற சொல்லாடல்கள் வாசகனை சுளுவாக கதைக்களத்துக்கு அழைத்துச் செல்கிறது.

பதிமூன்று ராசியில்லாத எண் என்று யார் சொன்னது? இத்தொகுப்பில் மொத்தம் பதிமூன்று கதைகள். பெரும்பாலும் சம்பவங்களும், கதாபாத்திரங்களின் உரையாடல்களுமாக லேசான மொழியில் கனமான விஷயங்களை தொடருகிறது நர்சிம்மின் கதைகள். கடைசிக்கதையான ‘அன்பின்’ கதையா/கட்டுரையா என்று யூகிக்க முடியவில்லை.

இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்தது ‘தந்தையுமானவன்’. வேலை நிமித்தமாக மொழி தெரியாத ஊரில் அவன் இருக்கிறான். அங்கிருந்த மருத்துவமனை ஒன்றில் அவனது மனைவிக்கு பிரசவம். பெண்குழந்தை. நீடித்த மகிழ்ச்சி சில நிமிடங்களில் அடங்குகிறது. குழந்தை ஏதோ பிரச்சினையால் உலகுக்கு வந்த முதல்நாளிலேயே தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறாள். மனைவியிடம் சொல்ல முடியாத நிலை. பொட்டலமாய் கட்டி கையில் கொடுக்கப்பட்ட மழலைச்செல்வம். இப்படிப் போகிறது கதை. தாய் செண்டிமெண்ட் கேட்டு வளர்ந்தவர்கள் தமிழர்கள். தந்தை செண்டிமெண்டையும் வாசிக்கட்டுமே!

விமர்சனம் என்றால் திருஷ்டிப்பொட்டு வைக்க வேண்டுமாமே? வைத்துவிட்டால் போயிற்று.

இந்தத் தொகுப்பில் குமுதம் ஒருபக்க கதையாக வரவேண்டிய இரண்டு, மூன்று கதைகள் நைசாக உள்ளே நுழைக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. குறிப்பாக ‘தலைவர்கள்’ கதையை சொல்லலாம். கடைசி இரண்டு பத்தி மட்டுமே கதை. அதற்கான ஆயத்தம் மூன்று பக்கம். வாசகனுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பினை உண்டுசெய்து, சப்பென்று முடிப்பது குமுதம் பாணி. இக்கதையிலும் அப்பாணி கையாளப்பட்டிருக்கிறது. ஆனால், குமுதம் இதை ஒருபக்கக் கதைகளில் மட்டுமே செய்யும் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.

அடுத்ததாக நர்சிம்மின் எழுத்தும், சம்பவ விஸ்தாரிப்புகளும் சுவாரஸ்யமளித்தாலும், கதைகளுக்கான வடிவங்கள் என்பது அரதப் பழசானது. எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் குமுதம்-விகடன்-தாய்-சாவி கிரைண்டர்களில் நூற்றுக்கணக்கான முறை அரைக்கப்பட்டது. வார்த்தைகளில் கவனம் காட்டும் நர்சிம், வடிவத்திலும் சிரத்தை எடுக்க வேண்டும். இல்லையேல் நர்சிம்முக்கான தனித்துவம் (Uniqueness) என்று எதுவுமிருக்காது. தனித்துவமிக்க தமிழ் எழுத்தாளர்களே இன்று காலம் கடந்தும் நினைவுகூறப்படுகிறார்கள்.

’வடிவம்’ என்ற விஷயம் இதை வாசிக்கும் சிலரை குழப்பலாம். ஓக்கே, ஒரு உதாரணக் கதையை சுட்டுகிறேன். இன்றைய வாசகன் ஃபாஸ்ட்புட் கலாச்சாரத்தில் வாழுகிறான். சமீபத்தில் மிகச்சரியாக இன்றைய வாசகனின் நாடிபிடித்து எழுதப்பட்ட சிறுகதை ஒன்றை ஆனந்த விகடனின் தீபாவளி இதழில் வாசித்தேன். ராஜூமுருகன் எழுதிய தீபாவலி. ஒரு சிறுகதையில் சினிமாவுக்குரிய அத்தனை இலக்கணங்களையும் கையாண்டிருக்கிறார். கட் ஷாட், ப்ளாஷ்பேக், ஏன் கேமிரா கோணங்கள் மாதிரியான இத்யாதிகள் கூட அச்சிறுகதைக்கு உண்டு. நடப்பில் இருக்கும் சிறுகதை எழுத்தாளர்களில் ராஜூமுருகனும் தலைசிறந்தவர் என்று சொல்லலாம். இதுபோன்ற வடிவரீதியிலான பரீட்சார்த்த முயற்சிகளே இன்றைய தேவை. நர்சிம் தன் எதிர்கால படைப்புகளில் இதுபோன்ற முயற்சிகளை கையாளுவார், பாலச்சந்தர் டச் என்பதைப்போல ‘நர்சிம் டச்’ என்று சொல்லக்கூடிய போக்கினை உருவாக்குவார் என்று நம்புகிறேன். நண்பனாக விரும்புகிறேன்.

வாழ்த்துகள் நர்சிம்!


நூல் : அய்யனார் கம்மா (சிறுகதைகள்)

ஆசிரியர் : நர்சிம்

பக்கங்கள் : 72

விலை : ரூ.40

வெளியீடு : அகநாழிகை,
33, மண்டபம் தெரு, மதுராந்தகம் - 603 306.
போன் : 9994541010

பேரினவாதத்தின் ராஜா!

தமிழ் பத்திரியுலகையில் பணிபுரியும் முற்போக்காளர்களில் குறிப்பிடத்தக்கவர் அண்ணன் அருள்எழிலன். மூத்தப் பத்திரிகையாளரான இவர் தற்போது வெகுஜன வார இதழ் ஒன்றினில் தலைமை உதவி ஆசிரியராக பணிபுரிகிறார். பல்வேறு இணையத்தளங்களிலும், சஞ்சிகைகளிலும் மாற்று சிந்தனைகளோடு கூடிய அரசியல் கட்டுரைகளை வரைந்து வருகிறார். கட்டுரைக்கான இவரது மொழிநடையும், வடிவமும் மிகச்சிறப்பானது.

நம் அண்டைநாடான இலங்கையில் தொடர்ச்சியாக நடந்துவரும் இனப்படுகொலைகளையும், அரசியல் அராஜகங்களையும் குறித்து ‘பேரினவாதத்தின் ராஜா’ என்ற தலைப்பில் நூல் எழுதியிருக்கிறார். வரும் ஞாயிறு (6-12-09) அன்று மாலை 5.30 மணிக்கு சென்னை புக்பாய்ண்ட் அரங்கில் (ஸ்பென்ஸர் பிளாஸா எதிரில், அண்ணாசாலை காவல்நிலையம் அருகில்) இந்நூல் வெளியிடப்படுகிறது.

கலந்து கொள்பவர்கள் : தமிழருவி மணியன், பி.சி.வினோஜ்குமார், மீனாகந்தசாமி, பீர்முகம்மது, நடராஜா குருபரன், ரஞ்சிதா குணசேகரன், பாரதிதம்பி, ராஜூமுருகன் மற்றும் நூலாசிரியர் டி.அருள் எழிலன்.

புலம் வெளியீடு.

அனைவரும் வருக!

1 டிசம்பர், 2009

சேவக லீலா!

பெரும்பாலான நண்பர்கள் என்னிடம் குறைபட்டுக் கொள்ளும் விஷயம் ஒன்று உண்டு. “சாரு எதை சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்வாயா?” என்று அடிக்கடி கேட்டவர்களே கூட திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ”எனக்கு சாருவை பர்சனலாகவும் பிடிக்கும். அவரது எழுத்தையும் பிடிக்கும். அவர் கமல்ஹாசன் மாதிரி. பத்து/பதினைந்து ஆண்டுகள் கழித்து எழுத வேண்டியதை இன்றே எழுதிவிடுவார். அதற்காக அவர் எழுதுவதையும்/பேசுவதையும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை” என்று ஒவ்வொருமுறையும் கிளிப்பிள்ளை மாதிரி திரும்ப திரும்ப பதில் அளிப்பேன். முன்பு சாரு இணையத்தில் எழுதிய பதிவு ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதியிருந்தேன். அதை மீண்டும் இங்கே பதிகிறேன். திரும்பப் படித்துப் பார்க்கும்போதும் எனக்கு அப்போது இருந்த அதே மனநிலைதான் இப்போதும் இருக்கிறது என்று புலனாகிறது!

ஓவர் டூ அந்த பழைய எதிர்ப்பு :


அபத்தமாக பேசுபவர்களையும், எழுதுபவர்களையும் கண்டால் எல்லோருக்கும் எரிச்சல் மண்டுவது இயல்பு. ஆயினும் சில நேரங்களில் நம்முடைய ஆதர்சங்களே அபத்தமாக சிந்தித்து, அதையும் எழுதியோ, பேசியோ தொலைக்கும்போது எரிச்சலோடு, கோபமும் இணைந்துக் கொள்கிறது. அதுபோன்ற சீற்றமான, நிதானமற்ற மனநிலையில் இப்போது எழுதுகிறேன்.

சிறுவயதிலிருந்தே ஏதாவது பத்திரிகைகளில் சாரு நிவேதிதா என்ற பெயரை காணநேர்ந்தால் அக்கட்டுரையையோ, புனைவையோ தவறவிடாமல் வாசிப்பது என் வழக்கம். சாரு என்ற பெயர் எனக்குள் ஏற்படுத்திய மேஜிக்குகள் எண்ணிலடங்கா. ஒரு அறிவுஜீவியாக இருந்தும் மிக எளிமையாக, வாசகன் அஞ்சாமல் அணுகக்கூடிய மொழிநடை அவருடையது. பெரும்பாலும் சுயபுராணமாக இருந்தாலும் அவருடைய சுய எள்ளல், சுய பச்சாதாபம் போன்றவை வாசிக்க சுவாரஸ்யமானதாகவே இருக்கும். சரோஜாதேவிரக எழுத்தாளர்கள் தவிர்த்து கைமைதுனம் செய்வதை கூட வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும் பன்முகப்பார்வை கொண்ட தமிழ் எழுத்தாளர் அவர் ஒருவர் மட்டுமே.

அவர் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு அவர் ஒரு நாத்திகர் என்ற தோற்றம் மிகுந்திருக்கும். எனக்குள்ளும் மிகுந்திருந்தது. சுஜாதா மறைவுக்குப் பின்னர் திடீரென்று சுஜாதாவின் இடத்தை பிடிக்க வேண்டும் (எந்த கொம்பனாலும் பிடிக்கமுடியாது என்பது என் எண்ணம்) என்ற பேராசையாலோ என்னவோ திடீரென தன்னை ஆத்திகர் என்று சமீபத்தில் அறிவித்துக் கொண்டிருக்கிறார். அவர் நாத்திகரோ, ஆத்திகரோ அது யாருக்கும் பிரச்சினையில்லை. ஆனால் திடீரென புதியதாக ஏற்றுக்கொண்ட ஆத்திக வேடத்துக்காக இறைமறுப்பாளர்களையும், இறைமறுப்பு முற்போக்கு சிந்தனைகளையும் மிக கேவலமாக விமர்சிப்பது சாரு போன்ற (இதுவரை) முற்போக்கு வேடமணிந்த ஒரு எழுத்தாளருக்கு அழகல்ல.

'விபச்சாரம் ஏன் நடக்கிறது?' என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியாமல் இருந்தது. சாரு கண்டுபிடித்து விட்டார். இறைமறுப்பு தான் விபச்சாரத்துக்கு காரணமாம். ரஷ்யா ஜார் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் வறுமையால் பீடிக்கப்பட்டிருந்தபோதும் கூட மதநெறி தந்த ஆன்மபலத்தால் ரஷ்யர்கள் ஒழுக்கமாக இருந்தார்களாம். ஆனால் கம்யூனிஸம் ஆட்சிக் கட்டிலேறி கடவுள் மறுப்பு விவாதங்களும், சிந்தனைகளும் வந்த பின்னர் ரஷ்யாவில் விபச்சாரம் பெருகி விட்டதாம். எவ்வளவு அபத்தம் இது? கடவுள் மறுப்பு சிந்தனைகளை மட்டுமன்றி கம்யூனிஸத்தின் மீதும் போகிறபோக்கில் சாணி அடித்துவிட்டுப் போகிறார் சாரு. இவரது இந்த புதிய கண்டுபிடிப்புக்கு தோதாக அவரது இலங்கை நண்பர் ஒருவருக்கு ரஷ்யாவில் நிகழ்ந்த சில அனுபவங்களை வாதத்துக்கு வலுவாக சேர்த்துக் கொள்கிறார்.

அதே சாரு தாய்லாந்து நாட்டின் விபச்சாரம் பற்றியும், பத்து வயது குழந்தைகள் கூட மிகக்குறைவான (50 ரூபாய்) தொகைக்கு விபச்சாரத்துக்கு தயாராக இருப்பது பற்றியும் எழுதுகிறார். தாய்லாந்து நாட்டில் கம்யூனிஸ ஆட்சி நடக்கிறதா? கடவுள் மறுப்பு விவாதங்கள் விவாதிக்கப்படுகிறதா? என்பது பற்றி சாருவுக்கு தெரியாதா? கிட்டத்தட்ட தொண்ணூற்றி ஒன்பது சதவிகித தாய்லாந்து மக்கள் மதநம்பிக்கையும், இறைநம்பிக்கையும் கொண்டவர்கள் தானே?

தாய்லாந்துக்கு போவானேன்? இந்தியாவில் என்ன வாழுகிறது? இங்கே (இப்போது சாரு உட்பட) தொண்ணூற்றி ஐந்து சதவிகிதம் பேர் இறைநம்பிக்கை கொண்டவர்களாக தானே இருக்கிறார்கள்? இங்கே ஏன் சோனாகஞ்சும், மும்பை சிகப்பு விளக்கு பகுதியும் இருக்கிறது? ஐம்பது ரூபாய்க்கு உடலை அரை மணி நேரத்துக்கு விற்க சென்னையில் கூட விளிம்புநிலைக்கு தள்ளப்பட்ட பெண்கள் இருப்பது நமக்கு தெரியுமோ இல்லையோ.. சாருவுக்கு நிச்சயமாகத் தெரியும். இதற்கெல்லாம் கூட காரணம் இறைமறுப்பா?

இறைமறுப்பு சிந்தனைகளை உலகளவில் பரபரப்பாக விவாதித்த ஜெர்மன் சிந்தனையாளர்களையும்.. அந்நாட்டையும், ஐம்பது ஆண்டுகளாக இறைமறுப்பு கம்யூனிஸ ஆட்சி நடக்கும் கியூபா நாட்டையும் சாரு மறந்துவிட்டாரா? இல்லை அங்கும் விபச்சாரமும், சமூகக்குற்றங்களும் இன்னமும் தலைவிரித்து ஆடுகிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறாரா? மதநம்பிக்கையும், இறைநம்பிக்கையும் பெரிதும் கொண்டிருக்கும் அமெரிக்கா.. ஆத்திகர்களையே பெரும்பாலும் அதிபர்களாக ஏற்றுக்கொள்ளும் அமெரிக்கா, சர்வதேச அளவில் மனிதநேயத்துக்கு எதிராக செய்துவரும் மனிதகுல விரோத குற்றங்களுக்கு என்ன நியாயம் கற்பிக்கப் போகிறார் சாரு? இறைமறுப்பாளர்களால் உலகுக்கு விளைந்த கேடுகள் அதிகமா? மத அடிப்படைவாதிகளால் உலகுக்கு விளைந்த கேடுகள் அதிகமா? என்பதை சாரு மல்லாந்து படுத்துக் கொண்டு யோசிக்க வேண்டும்.

கடவுள் என்ற சொல்லாடல் புழக்கத்திற்கு வருவதற்கு முன்பே விபச்சாரம் என்ற தொழிலும், சமூகக்குற்றங்களும் உலகில் பெருகிவிட்டதை உலக வரலாறு வாசித்த யாருமே உணரமுடியும். இன்னமும் சொல்லப்போனால் சமூகக்குற்றங்கள் செய்வதிலிருந்து மனிதனை காக்க மனிதகுலம் கண்டுபிடித்த ஒரு முறையே மதமும், மதத்துக்கு மூலமான கடவுளும் என்றும் கூறலாம். இறைவன் குறித்த தர்க்கங்களில் வெற்றி காணமுடியாமல் கடைசியாக ஆத்திகர்கள் நாத்திகர்கள் மீது வைக்கும் பலகீனமான விமர்சனம் தான் இறைமறுப்பால் சமூகக்குற்றங்கள் பெருகும் என்பது. சாருவும் கூட அப்படிப்பட்ட விமர்சனத்தை எழுதுவதை காணும்போது “சாருவும் இவ்வளவுதானா?” என்ற ஆயாசமும், ஏமாற்றமும் தான் மிஞ்சுகிறது.

மனமுண்டு, மாற்றமுண்டு!


“அதிகாரிகளை குறைசொல்ல ஒண்ணுமே இல்லைங்க. ரொம்ப நல்லா பண்ணுறாங்க!”

“நாங்களே அவங்களை தேடி கண்டுபிடிச்சி போகுறது ரொம்ப கஷ்டம் சார். அவங்களே எங்களை தேடி வந்து சேவை பன்ணுறது என்பது எங்களுக்கு வரப்பிரசாதம்!”

“என்ன கேட்டாலும் முதல்லே பதில் வந்துடுதுங்க. இதுவே பெரிய விஷயம். அப்புறம் அவங்க பணிகளும் ரொம்ப நல்லாருக்கு!”

“ஊர்லே ஒவ்வொரு வீட்டிலேயும் அந்த அதிகாரி பேரைத்தாங்க சொல்லுறாங்க! இதுவரைக்கும் எந்த ஆபிஸரும் இவரை மாதிரி இருந்ததில்லை!”

நம் தமிழக அரசு அதிகாரிகள் சிலருக்கு கிராமப்புற விவசாய மக்கள் வழங்கும் பாராட்டுப் பத்திரம்தான் இது. சந்தேகமே வேண்டாம்.

பொதுவாக அரசு ஊழியர்கள் என்றாலே பொதுமக்களுக்கு வேப்பங்காயாய் கசப்பதைதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, சலுகைகள், போனஸ் என்றதுமே மக்கள் வெறுப்படைகிறார்கள் என்பது அரசு ஊழியர்களுக்கே தெரிந்த ஒரு விஷயம்தான். அரசுத்துறைகள் என்றாலே மக்கள் மீது அக்கறையற்றவை. ஊழல் கறை படிந்தவை என்ற எண்ணம் மக்களுக்கு இருக்கிறது. இவற்றையெல்லாம் மாற்ற வேண்டாமா?

மாற்றுவதற்கு சில அரசு அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

2003ல் மக்களை நோக்கிய நீர்மேலாண்மை தொடர்பான அதிகாரிகளின் பயணம் கிராமங்களுக்கு துவங்கியது. அரசுத்துறையை செம்மையாக, மக்களுக்கு உண்மையாகவே பயன் தரக்கூடியதானதாக மாற்ற அவர்கள் முற்பட்டார்கள். நகரங்களில் அமர்ந்துக்கொண்டு, திட்டங்களை மட்டுமே தீட்டி, கிராம மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார்கள். ஒவ்வொருவரும் களப்பணி மேற்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

ஆகஸ்ட் 2004ல் சென்னைக்கு அருகில் மறைமலை நகரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் சில உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டார்கள் :

* ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் திட்டங்களுக்கு மறுமலர்ச்சி தருவோம். முன்பைவிட அதிமுனைப்பாக அவற்றை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டுவோம்.

* மக்களுக்கு உண்மையிலேயே உபயோகப்படக்கூடிய விஷயங்களை உறுதிசெய்வோம். தரமான சேவையை அளிப்போம்.

* பாரம்பரியமாக பயன்பட்டு வரும் விஷயங்களை பயன்படுத்திக் கொள்வோம்.

* திட்டமிட்டதை விட பத்து சதவிகிதமாவது கூடுதலானவற்றை, அதே நிதி ஒதுக்கீட்டில் சாதிப்போம்.

இந்த உறுதிமொழிகளின் அடிப்படையில் பணிகள் தொடங்கின. அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் ஊக்கம் தரும் வகையிலான ‘கூடம்’ பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டன

கூடம் என்ற சொல் தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமானதுதான். குடும்பம் ஒன்றுகூடி அளவளாவும் இடமாக, ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு காலத்தில் கூடம் இருந்ததுண்டு. கல்யாணம் நிச்சயம் செய்வது, பையனை வெளியூர் வேலைக்கு அனுப்புவது என்று குடும்பத்தின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் இடமாக கூடம் தமிழர் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறது. குடும்பத்தில் உண்மையான ஜனநாயகம் நிலவும் இடம் கூடம்.

பொதுவாக ஒரு கிராமத்தில் திருவிழா நடக்கிறதென்றால், அக்கிராமத்தின் ஒவ்வொரு வீடும் வெள்ளை அடிக்கப்படும். தெருக்கள் சுத்தமாக்கப்படும். ஆனால் இந்த மாதிரியான விழாக்காலங்களில் கூட அரசுக்கு சொந்தமான மேல்நிலை தண்ணீர்த் தொட்டி, பஞ்சாயத்து அலுவலகம் போன்றவை எப்போதுமே பாழடைந்த நிலையில் இருக்கும். அரசுச் சொத்து நமதல்ல என்ற மனோபாவம் மக்களிடையே ஏற்பட்டுவிட்டதே இதற்கு காரணம். தெருவில் ஒரு குடிநீர்க்குழாயில் நீர் வீணாகிக் கொண்டிருந்தால் கண்டுகொள்ளாமல் செல்லும் எண்ணம், கிராமவாசிக்கு மட்டுமல்ல.. நகரவாசிக்கும் உண்டு. வீட்டில் இருக்கும் குழாயில் நீர் வீணாகினால் நாம் சும்மா இருப்போமா?

‘அரசுக்கு சொந்தமான ஒவ்வொன்றும் மக்கள் சொத்து’ என்ற விழிப்புணர்வை மக்களிடம் முதலில் ஏற்படுத்துவதே அதிகாரிகளுக்கு சவாலானதாக இருந்தது. அரசு அதிகாரிகள் கிராமங்களுக்கு வருவதையே மக்கள் சட்டை செய்யாத நிலையும் ஆரம்பத்தில் இருந்தது. ‘ஜீப்பைப் போட்டுக்கிட்டு வருவாங்க. எதையாவது செய்யுவாங்க. நமக்கு என்ன பிரயோசனம்?’ என்று நினைத்தார்கள்.

“வலிந்துப்போய் பழகி, பேசி அவர்களுக்குள் ஒருவனாக மாற எனக்கு ஆறுமாதம் பிடித்தது!” என்கிறார் உதவிப் பொறியாளராக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் (TWAD Board) பணிபுரியும் எஸ்.சேட்டு.

இவரைப் போலவே ஒவ்வொரு பொறியாளரும், அவர் பொறுப்பேற்றுக் கொண்ட கிராமத்து மக்களோடு நெருங்கிப் பழகி அவர்களில் ஒருவராக மாறினார்கள். பஞ்சாயத்து அலுவலகத்தில் மக்களுக்கு சினிமாப் படம் போட்டு காட்டினார்கள். ஊர்த் திருவிழாக்களில் பங்கு கொண்டார்கள். உங்களுக்காக வேலை செய்கிறேன், நானும் உங்களில் ஒருவன் என்பதை அழுத்தமாக அவர்களது மனங்களில் பதிய வைத்தார்கள்.

அவ்வப்போது மக்கள் பங்கேற்கும் கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதுபோன்ற கூட்டங்களில் இவர்கள் அதிகமாக பேசாமல், மக்களை பேசவைத்தார்கள். அந்த கிராமத்துப் பஞ்சாயத்து தலைவரை, வார்டு உறுப்பினர்களை, குடிநீர்த்தொட்டி பணியாளரை, நர்ஸை, ஊர்ப் பிரமுகர்களை பேசவைத்தார்கள். இவர்கள் செயல்படுத்தும் திட்டங்களில் அவர்களது ஈடுபாட்டையும் வலிய வாங்கிக் கொண்டார்கள்.

மக்களோடு மக்களாகி விட்டதால் நம் அரசு ஊழியர்களிடம் டீக்கடைகளிலும், டூரிங் கொட்டாய்களில் மனசுவிட்டு பேசத் தொடங்கினார்கள் கிராமவாசிகள். தங்களுடைய தேவை என்னவென்று காய்கறிக் கடைகளுக்கு வரும் பெண்கள் கூட அரசு அதிகாரியிடம் உரிமையாக கேட்டார்கள். மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ப திட்டங்களை (Tailor made schemes) தீட்ட, இதனால் அதிகாரிகளுக்கு சுலபமாக இருந்தது.

உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அரசு ஒரு திட்டத்தை தீட்டிவிட்டால், அது தேவையா தேவையில்லையா என்பதையெல்லாம் பார்க்காமல் கடமைக்கு முடித்துக் கொடுப்பதே பொதுவாக அரசு ஊழியர்களின் பாணியாக இருக்கிறது. மாறாக மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையானதை மட்டுமே செய்துக் கொடுக்கும் இந்தப் புதியப் பாணியால் பணமும், நேரமும் நிறைய மிச்சம்.

இந்த அணுகுமுறையின் வெற்றிக்கு, ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல மதுரை மாவட்டம் தும்பைப்பட்டி பஞ்சாயத்து ஒரு சான்று. மாரியப்பன் என்ற குடிநீர்வாரியப் பொறியாளர் இங்கு ஏற்படுத்தித் தந்த குடிநீர்க் கட்டமைப்புகளை, மக்களே இன்று செம்மையாகப் பராமரிக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கிறது. தெருக்குழாயில் ஏதாவது பழுது ஏற்பட்டால் நமக்கென்ன என்று கிராமவாசிகள் போய்விடுவதில்லை. அரசு அதிகாரிகளை எதிர்ப்பார்க்காமல் தங்கள் செலவிலேயே இப்போது அப்பழுதை சரிபார்க்கிறார்கள். ஏனெனில் அரசுச் சொத்து, நம் சொத்து என்ற விழிப்புணர்வை அவர்களிடையே மாரியப்பன் ஆழமாக விதைத்திருக்கிறார்.

“மாரியப்பன் சாருக்கு கொழந்தை பொறந்தப்போ, வந்து கிராமத்துக்கே இனிப்பு கொடுத்தாருங்க” என்கிறார் தும்பைப்பட்டி வாசியான மஜீத். ஒரு அரசு அதிகாரி மக்களிடையே எவ்வளவு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணம் இதுவல்லவா?

இத்தனைக்கும் ஒரு ஆறுமாதக் காலம்தான் அக்கிராமத்தில் மாரியப்பன் பணிபுரிய வேண்டியிருந்தது. அப்போது அவர் செய்தப் பணிகள் ஐந்தாண்டுகள் கழிந்தும் இன்னமும் கிராமமக்களுக்கு மறக்க முடியாததாக இருக்கிறது. கொசுக்களால் அக்கிராம மக்கள் அவதியுறுவதைக் கண்டவர், தன் சொந்த செலவிலேயே கழிப்பறைகளையும், சாக்கடைகளும் சுத்தப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரியப்பன் மட்டுமல்ல. மறைமலைநகர் உறுதிமொழியை எடுத்துக்கொண்ட ஏராளமான பொறியாளர்கள் அவரவர் பொறுப்பேற்றுக் கொண்ட கிராமங்களிலும் இதுபோலவே சாதனைகளை புரிந்தார்கள்.

குடிநீர் வாரிய பொறியாளர்கள் மட்டுமல்ல, வேளாண்மைத்துறை பொறியாளர்களும் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளை அணுகி அபிவிருத்தித் திட்டங்களை தீட்டினார்கள். சேலம் மாவட்டம் எல்லம்பாளையம்புதூரில் நடந்த விஷயங்களை இதற்கு உதாரணமாகப் பார்க்கலாம்.

வேளாண்மை அதிகாரிகளின் சீரிய பணிகளுக்குப் பிறகு, இங்கே ஆறுவருடங்களாக விவசாயத்தை மறந்துவிட்டவர்கள் கூட மீண்டும் விவசாயம் செய்ய முன்வந்திருக்கிறார்கள். மண்சோதனையில் தொடங்கி, என்ன உரம் இடுவது, எந்தக் காலத்தில் இடுவது, விளைப்பொருட்களை யாரிடம் விற்பது என்பது வரை ஆலோசனைகளை வழங்கி மீண்டும் விவசாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

சில கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டங்கள் அந்தந்த துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலிலேயே நடந்திருக்கிறது. பெரியளவில் அரசால் விளம்பரப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டவை அல்ல. அதிகாரிகளின் முனைப்பும், செயல்பாடும் தீவிரமானதாக இருக்கும்பட்சத்தில் மாநிலம் முழுக்க அல்ல, நாடு முழுக்கவே எல்லா அரசுத் துறைகளும் சிறப்பானதாக பணியாற்ற முடியும். இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சில அதிகாரிகளுக்கு சூட்டப்பட்ட புகழாரத்தை, எல்லா அதிகாரிகளும் பெறமுடியும்.

(நன்றி : புதிய தலைமுறை)