3 டிசம்பர், 2009

உங்களில் யார் அடுத்த சீத்தலைச் சாத்தனார்?


போட்டோ கர்ட்டஸி : வரைந்த முகம் தெரியாத நண்பர்.

சீத்தலைச் சாத்தனாரைப் பற்றி ஒரு சிலருக்காவது தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். ஏனென்றால் எனக்கே தெரிந்திருக்கிறது.

இவர் சங்க காலத்தில் வாழ்ந்த புலவராம். அச்சாணியை கையில் எடுத்தால், ஓலைச்சுவடியில் மடக்கி மடக்கி கவிதைகளாக எழுதித் தள்ளுவாராம். ஏதாவது வார்த்தை சிக்காவிட்டால் கையில் இருக்கும் அச்சாணியாலேயே கடுப்பில் தலையில் குத்திக் கொள்வாராம். இதனால் அவரது தலைமுழுக்க காயம் ஏற்பட்டு, இன்பெக்‌ஷன் ஆகி சீழ் வழியுமாம். எனவேதான் அவரது பெயர் சீத்தலைச் சாத்தனார்.

இதுபோல உங்கள் தலையும் சீழ் பிடிக்க வேண்டுமா?

சமூக, கலை, இலக்கிய சிந்தனை அமைப்பான ’உரையாடல்’ பெரியமனதோடு இந்த வாய்ப்பினை அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பாக இவ்வமைப்பு தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஒரு சிறுகதைப் போட்டி நடத்தி முப்பதாயிரம் ரூபாய் பரிசு வழங்கியது நினைவிருக்கலாம். இம்முறை கவிதைப்போட்டி!

மொத்த பரிசுத் தொகை ரூபாய் 30 ஆயிரம். 20 கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூபாய் 1,500 வீதம் அளிக்கப்படும்.

விதிமுறைகள்

1. வலைப்பதிவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இதுவரை வாசகர்களாக இருப்பவர்கள் போட்டியில் கலந்து கொள்ள விரும்பினால், புதியதாக வலைதளம் ஒன்றை ஆரம்பித்துவிட்டு போட்டியில் பங்கேற்கலாம்.

2. இதுவரை பிரசுரமாகாத - அச்சிலோ, வலைத்தளத்திலோ - கவிதையாக இருக்க வேண்டும்.

3. குறைந்தது 10 வரிகள் இருக்கவேண்டும். ஒரு வரிக்கு எத்தனை சொற்கள் என்பது அவரவர் முடிவு. (எண்டர் தட்டித் தட்டியா... என நண்பர் குசும்பன் கேட்பது காதில் ஒலிக்கிறது!)

4. இந்தத் தலைப்பு அல்லது இந்தப் பொருள் என்று எதுவும் கிடையாது. எந்தத் தலைப்பிலும் கவிதைகள் எழுதலாம்.

5. கண்டிப்பாக அமைப்பாளர்கள் நடுவர்களாக இருக்கமாட்டார்கள்.

6. அவரவர் வலைத்தளத்தில் கவிதையை வெளியிட்டுவிட்டு, எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு லிங்க் தந்தால் போதுமானது. சிறுகதைப் போட்டிக்காக தனி வலைத்தளம் அமைத்துத் தந்த நண்பர் 'சங்கமம்' இளாவிடமே, இம்முறையும் கவிதைப் போட்டிக்காக தனி வலைத்தளம் அமைத்துத் தரும்படி கேட்டிருக்கிறோம். இரண்டொரு நாளில் அவரும் அமைத்து தந்துவிடுவார். போட்டிக்காக நீங்கள் எழுதிய கவிதையை அந்தத் தளத்தில் லிங்க் தந்துவிட்டால், அனைத்து பதிவர்களும் அதை வாசிக்க சுலபமாக இருக்கும். கவிதைப் போட்டிக்காக உருவாக்கப்பட்ட தளத்தில் இணைக்கப்படாத கவிதைகளை பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது.

7. அறியப்பட்ட, பிரபலமான கவிஞர்களே நடுவர்களாக இருக்கிறார்கள். அவர்களது பெயர்கள் முடிவு வெளியாகும் போதே அறிவிக்கப்படும்.

8. நடுவர்களின் முடிவே இறுதியானது.

9. முடிவு அறிவிக்கப்படும் வரையில், போட்டிக்காக எழுதப்பட்ட கவிதைகளை அச்சு ஊடகத்துக்கு தர வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

10. ஒருவரே பல வலைத்தளங்களை பல்வேறு பெயர்களில் வைத்திருக்கலாம். என்றாலும் ஒருவர் ஒரு கவிதையை மட்டுமே போட்டிக்கு அனுப்புவது, அனைவரது பங்கேற்புக்கும் வழிவகுக்கும்.

11. முடிவு அறிவிக்கப்பட்ட பின்பு, கவிதைப் பட்டறை குறித்த அறிவிப்பு வெளியாகும்.

12. எங்கள் மீது அன்பும், பிரியமும் கொண்ட நண்பர் 'கிழக்கு பதிப்பகம்' பத்ரி, கவிதை நூல்களை வெளியிடுவதில்லை. எனவே தேர்ந்தெடுக்கப்படும் 20 கவிதைகளும் நூலாக வெளிவருமா என்று திட்டவட்டமாக சொல்ல முடியாது. பிற பதிப்பக நண்பர்கள் ஆர்வமுடன் நூலாக கொண்டு வர இசைவு தெரிவித்தால், நிச்சயமாக முறைப்படி உங்களிடம் அறிவித்துவிட்டு அனுமதி தருவோம்.

13. தேர்ந்தெடுக்கப்பட்ட, தேர்ந்தெடுக்கப்படாத கவிதைகள் அனைத்தும் எழுதியவர்களுக்கே சொந்தம். அந்த உரிமையில் ஒருபோதும் 'உரையாடல்' தலையிடாது.

14. டிசம்பர் மாதம் முதல் தேதி, இந்திய நேரப்படி நள்ளிரவு ஒரு மணிக்கு போட்டி தொடங்குகிறது.

15. கவிதைப் போட்டிக்கான இறுதி தேதி, தைத் திங்கள் முதல் நாள், அதாவது 2010ம் ஆண்டு ஜனவரி மாதம், 14ம் தேதி, இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது.

16. போட்டியின் முடிவுகள் 2010, மார்ச் மாதம் முதல் தேதி, அறிவிக்கப்படும்.

17. எந்தவிதமான ஸ்பான்சர்களையோ, தொண்டு நிறுவனத்தின் உதவிகளையோ பெறாமல், அமைப்பாளர்கள் தங்கள் கைக் காசைச் செலவழித்து போட்டியை நடத்துகிறார்கள். எனவே விமர்சனம் வைக்கும் அன்பு நண்பர்கள், தயவுசெய்து, பண உதவி பெறுவதாகவோ, பலரிடமிருந்து பெற்று அமைப்பாளர்கள் சுருட்டிக் கொள்வதாகவோ விமர்சனம் வைக்க வேண்டாம்.

18. வலையுலக நண்பர்கள் அனைவரும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். உங்களது ஆர்வமும், உற்சாகமுமே எங்களுக்கான தூண்டுகோல் என்பதை மீண்டும் நினைவுப்படுத்துகிறோம்.

19. போட்டியில் பங்கேற்கப் போகும் அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

20. இந்தப் போட்டி குறித்த அறிவிப்பை உலகெங்கும் கொண்டு செல்லப் போகும் அனைத்து வலைத்தளங்களுக்கும், 'தமிழ்மணம்', 'தமிழிஷ்', 'தமிழர்ஸ்', 'தமிழ்வெளி', 'திரட்டி', 'சங்கமம்' 'நெல்லை', 'உலவு', 'மாற்று', 'தமிழ்மானம்' உட்பட அனைத்து திரட்டி நிர்வாகிகளுக்கும், 'டிவிட்டரில்' கலாய்க்கப் போகும் அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றி.

கீழும் விவரங்களுக்கு, பைத்தியக்காரனின் இப்பதிவைச் சுட்டலாம்!

1 கருத்து:

  1. I read somewhere that He used to bang his head with the 'yezhuththani' when ever he heard any one making mistakes in writing tamil/speaking tamil. that was the reason behind his name.

    பதிலளிநீக்கு