7 செப்டம்பர், 2011

2ஜி – அரசுக்கு 7000 கோடி லாபம்!

கடந்த ஆண்டு நாம் ‘ஸ்பெக்ட்ரம்’ குறித்து எழுதியிருந்தபோது, நீதிவான்கள் பலரும் கய்யோமுய்யோவென்று கத்தினார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருந்து உனக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்றெல்லாம் குதித்தார்கள். இந்திய ராணுவத்திடம் சும்மா ஒப்புக்கு இருந்த அலைவரிசையை பெற்று, நிறுவனங்களுக்கு விற்றதின் மூலமாக அரசுக்கு கூடுதல் வருவாயை ஏற்படுத்தித் தந்தார் அ.ராசா என்பது நம்முடைய அப்போதைய வாதமாக இருந்தது.

2008ஆம் ஆண்டு 122 விண்ணப்பதாரர்களுக்கு 22 வட்டங்களில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்டபோது அரசுக்கு கிடைத்த வருவாய் 12,386 கோடிகள். சி.ஏ.ஜி. அறிக்கையோ இந்த ஒதுக்கீட்டை ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடிகளுக்கு விற்றிருக்க முடியும் என்று ஒரு கற்பனைத் தொகையை குன்ஸாக அடித்துவிட்டது. மத்திய அமைச்சர் கபில்சிபல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏதுமில்லை என்று அப்போதிலிருந்தே கரடியாக கத்தி வருகிறார். மாறாக பி.ஜே.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சி.ஏ.ஜி. அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அரசுக்கு நெருக்கடி தர அ.ராசா தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. பின்னர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு, இன்றுவரை திகார் சிறையில் இருக்கிறார்.

நீதிமன்றத்தில் அரசின் கொள்கை முடிவையே தான் அமல்படுத்தியதாக தொடர்ச்சியாக அ.ராசா வாதிட்டு வருகிறார். இந்த கொள்கை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் மட்டுமல்ல, முந்தைய பா.ஜ.க. ஆட்சிக்காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டதுதான் என்பதை போதிய தரவுகளோடு வாதிடுகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் ‘உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம்’ பாணியில் 30,000 கோடி ரூபாய் அரசுக்கு இந்த ஒதுக்கீட்டால் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுக்கு முன்பாக TRAI-யிடம் எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று எல்லா கோணங்களிலும் ஆராய்ந்து சொல்லும்படி கேட்டிருந்தது. TRAI இழப்புத் தொகையை சொல்வதற்கு முன்பாகவே அவசர அவசரமாக குற்றப்பத்திரிகையில் பெரும் தொகையை சி.பி.ஐ. குறிப்பிட்டிருக்கிறது.

இப்போது TRAI பலவகைகளில் இந்த ஒதுக்கீட்டை ஆராய்ந்து விற்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலையின் விலையை ரூ.5,500 கோடியிலிருந்து, ரூ.9,500 கோடியாக வரையறுத்து சொல்லியிருக்கிறது. இதன் அடிப்படையில் பார்க்கப் போனால் அ.ராசாவால் அரசுக்கு ரூ.3,000 கோடியிலிருந்து ரூ.7,000 கோடி வரை லாபம் என்று தெரிகிறது. மேலும் ஏலமுறையில் விற்பனை செய்ய பரிந்துரை எதையும் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்துக்கு செய்யவில்லை என்பதையும் TRAI தெளிவுபடுத்தியிருக்கிறது.

ராசா குற்றவாளியல்ல, மிகத் திறமையாக, சாதுர்யமாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விற்பனையில் நடந்துகொண்ட அமைச்சர், இந்த ஒதுக்கீட்டின் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாயை ஏற்படுத்தித் தந்தவர் என்பதை TRAI மூலமாக இப்போது கொஞ்சம் தாமதமாகவே அறிந்துகொள்ள முடிவது வேதனையானது.

எந்த தொழில்நுட்ப அறிவுமின்றி தயாரிக்கப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கை வந்தவுடனேயே ஒண்ணே முக்கா லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்று வானுக்கும், பூமிக்குமாக எகிறிக் குதித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது வாய் உள்ளிட்ட ஒன்பது ஓட்டைகளையும் அடைத்துக்கொண்டு அமைதிகாத்து வருவது வெட்கக்கேடானது. நிமிடத்துக்கு நாலு ஃப்ளாஷ் நியூஸ் ஓட்டிக்கொண்டிருந்த ஊடகங்கள் இப்போது காத்துவருவது அப்பட்டமான, அயோக்கியத்தன மவுனம்.

செய்யாத குற்றத்துக்காக ஒரு திறமையான அமைச்சர் அரசியல்வாதிகள், ஊடகங்கள், நீதிமன்றங்கள் என்று பலதரப்பின் நெருக்கடிக்கு பலிகடா ஆக்கப்பட்டிருப்பது, அவர் பிறந்த சாதியினாலோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. இங்கே ஜனநாயகம் வாழுகிறது என்று சொன்னால், நம்புபவன் இரு காதுகளிலும் சாமந்திப்பூ வைத்தவனாக இருக்க வேண்டும். தன்னை நிரூபித்து விரைவில் தகத்தாய தங்கமாக, சிங்கமாக தமிழ் மண்ணுக்கு வருகை தரவிருக்கும் வருங்கால மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அ.ராசாவுக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்!

தர்மம், தாமதமானாலும் வெல்லும்!

6 செப்டம்பர், 2011

நான் கூட சிகரெட் பிடிப்பேன்!

"டியர் கிருஷ்ணா,
நான் சாகவேண்டும். உங்கள் உதவி தேவை.
அன்புடன்,
மலர்."

இப்படியொரு மெயில் அவளிடமிருந்து வரும் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. அவளுக்கு என்னதான் பிரச்சினை? என்னால் உதவமுடியுமா?

"அவசரப்படாதே. பொறு. உனக்கு என்ன பிரச்சினை?" என்று மெயிலிலேயே கேட்டேன். உடனே பதில் வந்தது.

"டியர் கிருஷ்ணா!

என் அப்பா இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவர். சிறுவயதிலேயே தாயை இழந்தவள் நான். அலுவலக உதவியாளினியாக சேர்ந்தவள் என் சித்தி. அப்பாவை மயக்கி வாழ்க்கையிலும் வஞ்சகமாக நுழைந்தாள்.

சென்ற மாதம் அப்பா மர்மமான முறையில் இறந்துவிட்டார். இது நிச்சயமாக சித்தியும், அவளது தம்பியும் செய்த வேலையாக இருக்கும். இப்போது சித்தியின் தம்பியை நான் மணந்துகொள்ள கட்டாயப்படுத்துகிறார்கள். அவனுக்கு வயது 40. கடைந்தெடுத்த பொறுக்கி. சொத்துகளுக்கு நான் மட்டுமே ஒரே வாரிசு. என் சொத்து முழுவதையும் அபகரித்து என்னையும் அப்பாவை போல கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன்.

எனக்கே எனக்கென்று வாய்ப்பவன் குறித்த கனவுகள் வைத்திருக்கிறேன். என் வயது 22. அவனுக்கு வயது 28 ஆக இருக்கும். பார்க்காமலேயே அவனைக் காதலித்து கைபிடிப்பேன். அவனுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கும். கல்யாணத்துக்குப் பிறகு அவனை திருத்துவேன்.

இந்த கனவோடு வாழும் நான் (இந்த வரிகளை எழுதும்போது அழுகிறேன்) 40 வயது முரடனுக்கு வாழ்க்கை படுவதை காட்டிலும் இறந்துவிடுவதே மேல் அல்லவா?

அன்புடன்
மலர்"


மலருடைய மின்னஞ்சலை கண்டதும் வேகவேகமாக திட்டங்களை தீட்ட ஆரம்பித்தேன். இதுவரை மலரிடம் ஓராண்டுக்கு மேலாக இண்டர்நெட்டில் நட்பு பாராட்டினாலும் அவளிடம் என்னைப் பற்றி பெரிதாக சொன்னதில்லை. அவளோ வெகுளியாக ஒரு முறை அவளுடைய போட்டோவை அனுப்பியிருக்கிறாள் (பார்க்க ஷ்ரேயா மாதிரி அரபிக்குதிரை வாகாக இருந்தாள்) இப்போது அவள் வாழ்க்கைப் பின்னணியையும் சொல்லியிருக்கிறாள்.

கிளிபோல மனைவி, குரங்குபோல வைப்பாட்டி வைப்பது ஆண்குணம். எனக்கு 34 வயது. கிளிபோல பொண்டாட்டி இருக்கிறாள். பஞ்சவர்ணக்கிளி போல ஒரு வைப்பாட்டி இருந்தால் என்ன தவறு? போனஸாக கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பல்லாயிரம் கோடி சொத்துக்களோடு.. சரியாக தப்பாக சிந்திக்க ஆரம்பித்தேன்.

அட்டகாசமான ஆங்கிலத்தில் அவளுக்கு ஒரு மடல் தயார் செய்தேன்.

"அன்பு மலர்,

நீண்ட நாட்களாக சொல்லவேண்டுமென்பதை நீ துயரத்தில் இருக்கும்போது சொல்லவேண்டியிருக்கிறதே என்று வருந்துகிறேன்.

எனக்கு 28 வயதாகிறது. உன்னைவிட ஆறுவயதுதான் மூத்தவன். நான் கூட சிகரெட் பிடிப்பேன். புரிகிறதா மலர்?

காதலுடன்
கிருஷ்ணா"


அனுப்பிய பிறகு, மலரிடமிருந்து மெயில் வருமா என்று கம்ப்யூட்டர் முன்பாக தவமிருக்க ஆரம்பித்தேன். பத்து மணி நேரம் கழித்து பதில் மெயில் வந்தது. "அன்புள்ள அண்ணா கிருஷ்ணாவுக்கு" என்று மடலை ஆரம்பித்திருந்தாள் மலர்.

(நன்றி : தினகரன் வசந்தம்)

5 செப்டம்பர், 2011

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!

தலைமை ஆசிரியரின் நீண்ட கல்வித்துறை அனுபவமும், துணை ஆசிரியரின் இளமைத் துடிப்பான செயல்வேகமும்இணைந்து, தமிழகத்தின் குக்கிராமத்தில் அமைந்திருக்கும் அரசு ஆரம்பப் பள்ளியை சர்வதேச தரத்துக்கு உயர்த்தியிருக்கிறது!

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இருக்கிறது காரமடை. அங்கிருந்து சிறுமுகை செல்லும் பாதையில் ஐந்து கிலோ மீட்டர் பயணித்தால் வரும் குக்கிராமம் இராமம்பாளையம். 900 பேர் வசிக்கும் இக்கிராமம் ஜடையம்பாளையம் பஞ்சாயத்தின் கீழ் வருகிறது. கோவையிலிருந்து 38 கிலோ மீட்டர் தூரம்.

இங்கிருக்கும் ஆரம்பப் பள்ளி 1930ல் அரசு நலப்பள்ளியாக தொடங்கப்பட்டது. வைரவிழா கண்ட இப்பள்ளிக்கு சில ஆண்டுகளாக முன்பாக ஒரு பெரிய சோதனை. கிராம மக்கள் பலரும் இப்பள்ளியை புறக்கணித்து, தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க ஆரம்பித்தார்கள்.

தற்போது ஈராசிரியர் பள்ளியாகச் செயல்படும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் என்.சரஸ்வதி. உதவி ஆசிரியர் டி.பிராங்க்ளின். பொருளாதார ரீதியாக ஏழைகளாக இருந்தாலும் வீம்பாக அரசுப்பள்ளியை புறக்கணித்து, தனியார் பள்ளியை நாடி மக்கள் செல்வதை இவர்கள் கவலையோடு பார்த்தார்கள்.

பெரிய மாற்றம் ஒன்று ஏற்படாவிட்டால், வைரவிழா கண்ட பள்ளியின் நிலை கவலைக்கிடமாகி விடும். அரசுச் சொத்துகளை அன்னியமாக பார்க்கும் மனோபாவம் அவ்வூர் மக்களுக்கு மட்டுமில்லை. எல்லோருக்குமே இருக்கிறது. இப்பள்ளி தங்களுடைய சொத்து, இதை பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறையை மக்களுக்குள் விதைக்க வேண்டும்.

என்ன செய்யலாம்?

ஆசிரியர் பணி என்பது வெறுமனே போதித்தல் மட்டும்தானா என்கிற கேள்வி இருவருக்குள்ளும் எழுந்தது. தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பலரும், தங்கள் பணி தாண்டி நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் ஆதாரமாக இருக்கிறார்கள். அரசின் கீழ் பணிபுரியும் நாம், இந்தப் பள்ளியை மேன்மையான நிலைக்கு கொண்டு வந்தால் என்ன?

56 வயதாகும் தலைமையாசிரியர் இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெறப்போகிறார். துணை ஆசிரியரோ 35 வயது இளைஞர். தலைமுறை இடைவெளி இவர்களை விலக்கிடவில்லை. மாறாக தலைமை ஆசிரியரின் நீண்டகால கல்வி அனுபவமும், உதவி ஆசிரியரின் சாதிக்க வேண்டும் என்கிற லட்சிய வெறியும் இன்று இராமம்பாளையம் பள்ளியை சர்வதேசத் தரம் கொண்ட பள்ளியாக உயர்த்தியிருக்கிறது. ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை இயங்கும் இராமப்பாளையம் ஊராட்சி ஒன்றிட்யத் தொடக்கப் பள்ளியில் தற்போது 34 குழந்தைகள் படிக்கிறார்கள்.

“நகர்ப்புற பள்ளிகளைக் காட்டிலும் தரமான கல்வியை, கட்டமைப்பை கிராமப்புற மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது எங்கள் ஆசை. நாங்கள் பணிபுரியும் இந்தப் பள்ளியையையே முன்மாதிரிப் பள்ளியாக உருவாக்கிவிட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இருவரும் ஆலோசித்தோம். அதுதான் ஆரம்பப் புள்ளி” என்கிறார் தலைமையாசிரியர் சரஸ்வதி.

எங்கே ஆரம்பித்தார்கள்?

தங்களுடைய ‘சீக்ரட் ஆஃப் சக்ஸஸை’ வெளிப்படையாக போட்டு உடைக்கிறார் துணை ஆசிரியர் பிராங்க்ளின்.

“முதலில் இந்தப் பள்ளியில் ஒரு மாற்றம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்கிற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்க முடிவெடுத்தோம். எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக இயங்கிவரும் பள்ளி என்றாலும், இங்கே ஆண்டுவிழா நடந்ததே இல்லை.

2009ல் முதன்முதலாக ஊர் பொதுமக்களை கூட்டி ஆண்டுவிழா நடத்தினோம். தங்கள் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளை கண்டவர்களுக்கு நம் குழந்தைகள் இத்தனை திறமையானவர்களா என்று ஆச்சரியம். வெளியூர்களிலிருந்து தன்முனைப்பு பேச்சாளர்களை அழைத்துவந்து அந்நிகழ்ச்சியில் பேசவும் வைத்தோம்.

முதன்முறையாக பள்ளி சார்பாக இப்படி ஒரு விழா நடந்ததை கண்ட மக்கள், ‘என்னப்பா விஷயம்?’ என்று அக்கறையாக கேட்க ஆரம்பித்தார்கள். எங்கள் கனவை சொன்னோம். ‘நல்ல விஷயம்தானே? செஞ்சுடலாம்’ என்றார்கள்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு கிராமக் கல்விக்குழு உண்டு. அவர்களும் எங்களோடு கைக்கோர்க்க, அனுமதிக்கு போய் நிற்கும்போதெல்லாம் தொடக்கக் கல்வி அலுவலர் ஊக்குவிக்க, இன்று எல்லோரும் அதிசயப்படும் பள்ளியை ஊர்கூடி அமைத்திருக்கிறோம்”

நாலு பாராவில் பிராங்க்ளின் சொல்லிவிட்டாலும் ஆசிரியர்களின் இரண்டாண்டு கடினமான திட்டமிடுதலும், உழைப்பும், கல்விக்குழு மற்றும் கிராமமக்களின் பங்களிப்பும் இவ்வெற்றிக்குப் பின்னால் இருக்கிறது.

பளிச்சென்று சர்வதேசத் தரத்துக்கு ஒப்பாக இருக்கும் வகுப்பறை, கணினிப் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, யோகாப் பயிற்சி, ஓவியப் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி, தலைமைத்துவப் பயிற்சி, தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை வாசிக்கப் பழக்கப் படுத்துதல் என்று போதிப்புத் தரத்தில் அயல்நாட்டுப் பள்ளிகளோடு போட்டிப்போடும் கல்வித் தரத்தையும், கட்டமைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு வண்ணச் சீருடைகள், கழுத்தணி (tie), காலணி (shoe), பெல்ட், அடையாள அட்டை, ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் இணைப்புக் கையேடு (Dairy) அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது.

இங்கு என்ன செய்யவேண்டும் என்பதற்கு எங்கேயும் இவர்களுக்கு முன்மாதிரி (reference) இல்லை. ஒரு வகுப்பறை எப்படியிருந்தால் நன்றாகயிருக்கும் என்று ஆசிரியர்கள் ஆசைப்பட்டதை எல்லாம் செய்திருக்கிறார்கள்.

மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக சுத்தமான கழிப்பறைகள் உருவாக்கித் தந்திருக்கிறார்கள். சுற்றுச்சுவர் கட்டும் பணி இன்னும் பாக்கியிருக்கிறது. மேலும் கொஞ்சம் நிதி சேர்ந்தால், இன்னும் சில கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித்தர முடியும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

பல லட்சம் செலவாகியிருக்குமே, இவற்றுக்கெல்லாம் ஆன செலவை எப்படி சமாளித்தார்கள்?

முதல் பங்களிப்பை ஆசிரியர்கள் இருவருமே செலுத்த, கல்விக்குழுவின் ஒத்துழைப்போடு ஊர் மக்கள் செலவினை பங்கிட்டுக் கொண்டார்கள். இந்த முன்மாதிரிப் பள்ளியை உருவாக்க இதுவரை ஆன செலவு தோராயமாக இரண்டரை லட்சம் மட்டும் தானாம்.

கடந்த ஜூன் 15ஆம் தேதி பணிகள் முடிந்து திறப்புவிழா எளிமையாக நடந்தது. இது ஒரு சாதனை என்கிற நினைப்பு அங்கே யாருக்குமே இல்லை. வெளியே தெரிந்தால், அனைவரும் கண்காட்சி போல பள்ளியைக் காண வந்துவிடுவார்களோ, அதனால் குழந்தைகளின் கவனம் சிதறுமோ என்று கவலைப்படுகிறார்கள் ஆசிரியர்கள்.

சரி, இந்த மாற்றங்களால் என்ன பலன்?

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் திரும்பவும் இந்தப் பள்ளிக்கு வருகிறார்கள். “எல்லாமே முற்றிலும் இலவசமா, தனியார் பள்ளியை விட தரமான கல்வி இங்கே கிடைக்கிறப்போ, நாங்க எதுக்கு தனியாருக்கு போகணும்? நாலாவது வரைக்கும் மெட்ரிக்குலேஷனில் படிச்ச என் பொண்ணு யாழினையை, ஐந்தாவதுக்கு இங்கேதான் சேர்த்திருக்கேன்” என்கிறார் சரஸ்வதி வடிவேலு. வேறென்ன வேண்டும்?

தொடக்கக் கல்வி அலுவலகம் மூலமாக, இந்த விஷயம் மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரனுக்கு தெரியவந்திருக்கிறது. அவர் ‘திடீர் விசிட்’ அடித்து பள்ளியை சுற்றிப் பார்த்து பாராட்டியிருக்கிறார். “கலெக்டர் எல்லாம் வந்து பார்த்துட்டுப் போறாருன்னா, நிஜமாவே நாங்க நல்ல விஷயம்தான் பண்ணியிருக்கோமுன்னு புரியுது” என்கிறார்கள் கிராம மக்கள்.

“ஆசிரியர்கள் மாறக்கூடியவர்கள். ஆனால் கிராமமும், பள்ளியும் நிரந்தரமாக இங்கேயே இருக்கக் கூடியவை. பள்ளி, கிராமத்தின் சொத்து என்கிற உணர்வு ஒவ்வொரு கிராமத்தவருக்கும் வேண்டும். முன்பெல்லாம் பள்ளியில் என்ன நடந்தாலும், அதைப்பற்றி மக்களுக்கு பெரிய அக்கறை இருந்ததில்லை. இப்போது சுவரில் யாராவது கிறுக்கினாலோ, சுவரொட்டி ஒட்டினாலோ அவர்களை மக்களே தட்டிக் கேட்கிறார்கள். எங்கள் மக்களுக்கு கிடைத்த இந்த விழிப்புணர்வு தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கும் பரவவேண்டும். அடுத்து வரும் ஆசிரியர்களிடமும் இதே அர்ப்பணிப்பை நாங்கள் உரிமையாக தட்டிக் கேட்போம்” என்கிறார் கல்விக்குழு உறுப்பினரான ஆர்.மகேஷ்.
தமிழகத்தின் எல்லாக் கிராம ஆரம்பப் பள்ளிகளையும் இதேபோல செய்ய முடியாதா?

“தாராளமாக செய்யலாம். அந்தந்த கிராம மக்கள், கல்விக்குழு, ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து செய்தால் செய்யலாம். இராமம்பாளையம் பள்ளியை முன்மாதிரியாகக் கொண்டு இப்போதே பணியை ஆரம்பித்தால் கூட, அடுத்த ஆண்டு தமிழகம் முழுக்க 40 சதவிகிதப் பள்ளிகளை இந்த தரத்தை எட்டச் செய்யலாம்” என்கிறார் காரமடை ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆர்.ராஜேந்திரன்.

இதே தரத்தை தொடர்ச்சியாக பரமாரிக்க, கணிசமான நிதி தேவைப்படும். பள்ளியின் தரம் உயர, உயர மாணவர் சேர்க்கை அதிகமாகும். கூடுதல் செலவுகள் ஏற்படும். அதற்கு என்ன ‘ஐடியா’ வைத்திருக்கிறார்கள்?

“ரொம்ப சுலபம். இந்த ஊரில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பார்ப்பவர்கள், அரசு வேலைகளில் இருப்பவர்கள், தனியார் நிறுவனங்களில் நல்ல பதவிகளில் இருப்பவர்கள் என்று குறைந்தது நூறு பேரை பட்டியலிட்டு வைத்திருக்கிறோம். இவர்களை வைத்து ‘இராமம்பாளையம் முன்னாள் மாணவர்கள் அமைப்பு’ ஒன்றினை உருவாக்க உத்தேசித்திருக்கிறோம். இவர்களிடம் ஆண்டுக்கு ஆயிரம் ரூபாயை நன்கொடையாகப் பெறுவது சுலபம். இதன் மூலம் வருடத்துக்கு ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும். இப்போதிருக்கும் தரத்தை தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்ள இந்த தொகையே மிக அதிகம்” என்கிறார் துணை ஆசிரியர் பிராங்க்ளின். நல்ல ஐடியாதான்.

ஊர் கூடி தேர் இழுத்தால் என்ன பயன், இதுபோல ஒரு பள்ளியை உருவாக்க முடிந்தால், காலாகாலத்துக்கும் ஊர் பெயரை உலகம் பேசுமே?


பள்ளியில் என்னென்ன வசதிகள்?

• மாணவர்கள் குழுவாக அமர்ந்து பாடம் கற்க வட்ட மேசைகள்
• புத்தகங்கள் வைக்க இடவசதியோடு கூடிய நாற்காலிகள்
• தமிழ் – ஆங்கில நூல்கள் அடங்கிய நூலகம்.
• டி.வி.டிகள் அடங்கிய டிஜிட்டல் நூலகம்
• கம்ப்யூட்டர்
• தொலைக்காட்சி – டிவிடி ப்ளேயருடன்
• அறிவியல் ஆய்வு மற்றும் கணிதம் தொடர்பான உபகரணங்கள்
• செயல்வழி கற்றல் அட்டைகளை வாசிக்க வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ள அலமாரிகள்
• ஒலி-ஒளி அமைப்புகள்
• மாணவர்கள் எழுதிப்பலக கீழ்மட்ட பச்சை வண்ணப்பலகை
• படைப்பாற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு காட்சிப்பலகை
• சுத்திகரிக்கப்பட்ட வெந்நீருடன் கூடிய குடிநீர் வசதி
• காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு கண்ணாடி சன்னல்கள்
• குழந்தைகளை கவரும் வகையில் சுவர் ஓவியங்கள்
• உயர்தர தள கட்டமைப்பு
• ஒலிபெருக்கியோடு கூடிய உட்கூரை
• வேலைப்பாடுகள் நிறைந்த மர அலமாரிகள்
• அவசரக்கால வழி, தீயணைப்புக் கருவி, முதலுதவிப் பெட்டி

(நன்றி : புதிய தலைமுறை)

3 செப்டம்பர், 2011

முதல்வரால் முடியாதா?

29-08-2011 அன்று சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் சமர்ப்பித்த அறிக்கையில் ”பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்தவித அதிகாரமும் மாநில முதல்வர் என்கிற முறையில் எனக்கு இல்லை” என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதாவின் கூற்று தவறானது. ”மாநில ஆளுனருக்கும், தமிழக அமைச்சரவைக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 161இன் படி கருணை மனுக்களை பரிசீலிக்கும் அதிகாரம் நிச்சயமாக இருக்கிறது” என்று வாதிடுகிறார் மூத்த வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன்.

“தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கூற்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161வது பிரிவுக்கூறுக்கு புறம்பானது.

1991ல் மத்திய உள்துறை அமைச்சரகம் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் முதலமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிப்பேராயம் 11-11-1980 அன்றே மாரூராம் வழக்கில் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 72 மற்றும் பிரிவுக்கூறு 161-இல் குடியரசுத் தலைவருக்கும், மாநில ஆளுனருக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை வேறு எந்த சட்டத்தாலும் கட்டுப்படுத்த முடியாது என்று மிகத்தெளிவாக கூறியிருக்கிறது.

குடியரசுத் தலைவருக்கு இந்த அதிகாரத்தை வழங்கியுள்ள அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 72 உட்பிரிவு 3-இல் ஒரு முக்கிய குறிப்பு உள்ளது. மரண தண்டனைக்கு எதிராக வரும் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பரிசீலித்தாலும்கூட, குடியரசுத் தலைவருக்கு உள்ள அதே அதிகாரம் மாநில ஆளுனர்களுக்கும் உண்டு என்பதை இந்த உறுப்பு தெளிவு படுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகரத்தின் கடிதம், அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 257(1)இன் கீழ் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. இத்தகைய கடிதத்தை இந்த உறுப்பின்கீழ் மாநில அரசுகளுக்கு அனுப்ப மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த கடிதத்தை ஆணையாக ஏற்றுக் கொண்டு எந்த ஒரு மாநில ஆளுனரும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 161இல் தனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி கருணை மனுக்களின் மேல் முடிவெடுக்க மாட்டேன் என்று சொல்லவும் முடியாது.

மத்திய உள்துறை அமைச்சரகத்தின் கடிதம், மாநில ஆளுனரின் அதிகாரத்தில் தலையிடுவதால் அந்தக் கடிதம் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 14க்கு எதிரானது. அந்த கடிதத்தின்படி எந்த மாநில ஆளுனராவது தண்டனை கைதிகளால் தன்னிடம் கொடுக்கப்பட்ட கருணை மனுக்களை குடியரசுத்தலைவருக்கு அனுப்பினாலோ, அல்லது தனக்கு அதிகாரம் இல்லை என்று புறம் தள்ளினாலோ அச்செயல் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 161க்கு எதிரானதாகும்.

அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 161-இல் உள்ள அதிகாரம் சாதாரண நிர்வாக அதிகாரம் அல்ல. மாநில ஆளுனருக்கு அரசமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்ட இறையாண்மை சார்ந்த அதிகாரம் ஆகும். இந்த அதிகாரத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டத்தாலோ அல்லது மற்ற சட்டங்களாலோ கட்டுப்படுத்த முடியாது. இந்த அதிகாரத்தை சாதாரண நிர்வாக அதிகாரம் என்று எடுத்துக் கொண்டால்கூட, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதம் அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பானது. ஏனெனில், இந்த மூன்று கைதிகளின் கருணை மனுக்களை மாநில ஆளுனர் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டால் அதனால் குடியரசுத் தலைவரின் அதிகாரத்திற்கு எந்த ஊறும் விளையப்போவதில்லை. குடியரசுத் தலைவரிடம் இன்றும் கருணை மனுக்கள் நிலுவையில் இருந்தால் மாநில ஆளுனர் புதிதாக அவரிடம் வரும் கருணை மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது.

எனவே மாநில ஆளுனருக்கும், தமிழக அமைச்சரவைக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 161இன் படி கருணை மனுக்களை பரிசீலிக்கும் அதிகாரம் நிச்சயமாக இருக்கிறது”.

(நன்றி : புதிய தலைமுறை)

2 செப்டம்பர், 2011

என்னைப் போல் ஒருவன்!


 “சரியா அஞ்சாவது படிக்கிறப்போதான் இந்த பிரச்சினை ஆரம்பிச்சுதுன்னு நெனைக்கிறேன். இல்லை.. இல்லை.. அதுக்கு முன்னாடியே.. சரியா எப்போ? ஆங்.. நான் பொறந்த அன்னைக்கே ஆரம்பிச்சிடிச்சி போல. நான் நட்ட நடுப்பகல், உச்சிவெயில் 12 மணிக்கு பொறந்தேன். சரியா ஒரு நிமிஷம் கழிச்சி, அவன் 12.01க்கு பொறந்தானாம். அன்னைக்கு எனக்குப் புடிச்ச சனியனுங்க இவன். ஏழரை நாட்டு சனியாவது ஏழரை வருஷம். இவன் முப்பத்தஞ்சி வருஷமா என்னைப் படுத்தற பாடு இருக்கே. உஸ்ஸப்பா...

போன பத்தியிலே எங்கன ஆரம்பிச்சேன்? ஆங்.. அஞ்சாங்கிளாஸ்! அப்போ தமிழய்யா தினமும் ஒரு ஆளுக்கு, ஏதாவது ஒரு திருக்குறளை மனப்பாடமா சொல்றவங்களுக்கு ஒரு பென்சில் பரிசா கொடுப்பார். தினம் ஒரு பென்சில் திட்டம். ஒரு நாள் நான் நன்றி மறப்பது நன்றல்லபர்ஃபெக்டா, ஏற்ற இறக்கத்தோடு ‘நச்’’சுன்னு சொன்னேன். முதுகில் தட்டிக் கொடுத்து அய்யா பென்சில் கொடுத்தார். ரொம்ப பெருமிதமா இருந்துச்சி. வீட்டுக்குப் போய் சொன்னப்போ என் ஆத்தா நிஜமாவே, சான்றோன் எனக்கேட்ட தாய்ஆகிட்டாங்க. அவனோட அம்மா கிட்டே போய் பெருமையா சொல்லியிருப்பாங்க போல.

மறுநாளே கற்க கசடற’, அதற்கடுத்த நாள் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்னு ரெண்டையும் அட்டகாசமா ஒப்பிச்சு, ஒண்ணுக்கு ரெண்டு பென்சில் வாங்கிட்டான். எப்பூடி?

ஆறாங்கிளாஸ் போனப்பவும், நான் சேர்ந்த அதே ஸ்கூல்ல, அதே கிளாஸுக்கு அவனும் அடம் புடிச்சு வந்து சேர்ந்தான். காலாண்டு பரிட்சையில், நான் தான் வகுப்பிலேயே முதலாவதா வந்தேன். அவன் பயங்கரமா கடுப்பாயிட்டான். என்ன பண்ணான்? எப்படி படிச்சான்னே தெரியலை. அரையாண்டுப் பரிட்சையில் அவன் என்னைவிட ரெண்டு மார்க் அதிகம் வாங்கி முதலாவதா வந்துட்டான். இத்தனைக்கும் அவன் கணக்குலே பயங்கர மக்கு. அந்தப் பரிட்சையிலே பார்த்தீங்கன்னா நூத்துக்கு நூறு மார்க்கு வாங்கி அசத்திட்டான். பத்தாங் கிளாஸ் வர்ற வரைக்கும் இதேமாதிரி முதலாவது, ரெண்டாவதுன்னு நாங்க ரெண்டு பேருமே மாறி வந்துக்கிட்டிருந்தோம்.

சரியா இந்த நேரத்துலேதான் எனக்கு வேறமாதிரி சகவாசமெல்லாம் கொஞ்சம் சேர ஆரம்பிச்சிச்சி. ஒரு நாள் ஜேக்கப்போட மாந்தோப்புலே முதல் முறையா பனாமா ஃபில்டர் பத்த வெச்சேன். நல்ல காரம். இருமலோட பொறையேறி கண்ணுலே தண்ணியே வந்துடிச்சி. விஷயம் அவனுக்கு எப்படி தெரிஞ்சிதுன்னு தெரியலை. ஒருவேளை ஜேக்கப் பயலே கூட சொல்லி இருக்கலாம். கடைவீதியிலேயே நாலு பேருக்கு நல்லா தெரியறமாதிரி, கோல்ட் ஃபில்டர் பத்த வெச்சு ஊதினான். யார் மூலமாவோ அவன் வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சி செம அடி வாங்குனான். பயபுள்ள மாட்டுனதுதான் மாட்டுனான். விசாரணையோட டார்ச்சர் தாங்கமுடியாம, கடைசியிலே நான் தம்மு அடிச்சதையும் சொல்லித் தொலைச்சிட்டான். அப்பா காதுக்கு மேட்டர் வந்து, நம்ம வீட்டுலேயும் பர்ஸ்ட் டிகிரி ட்ரீட்மெண்ட் நல்லா கோலாகலமா நடந்தது.

இப்படியேதாங்க வாழ்க்கை அவனுக்கும் எனக்குமான ஏட்டியும், போட்டியுமா போயிக்கிட்டு இருந்தது.

பண்ணெண்டாங் கிளாசுலே நான் வாங்குன மார்க்குக்கு பி.ஏ எகனாமிக்ஸ்தான் கிடைச்சுது. ஏன்னா இந்த ரெண்டு வருஷத்துலே நான் படிக்கிற பையன் என்கிற ‘நல்லகேட்டகிரியில் இருந்து, அராத்து கேட்டகிரிக்கு வந்து தொலைச்சிட்டேன். அவன் அப்படியில்லை. முழுப்பரிட்சை மட்டும் நல்லா எழுதிட்டான் போலிருக்கு. நல்ல மார்க் வாங்குனான். அவனுக்கு கம்ப்யூட்டர் என்ஜினியரிங் சீட்டு கிடைச்சும் கூட, வெணுமின்னே எங்கூட வந்து எகனாமிக்ஸ் படிச்சான்.

எப்படியோ தட்டுத் தடுமாறி படிச்சி, அரியர்ஸ் வைக்காம முடிச்சி, சும்மா ஊர் சுத்திக்கிட்டிருந்தேன். அவங்கப்பா பிஸினஸை பார்த்துக்கிட்டு இருந்தவன், நான் ஊர் சுத்துறதைப் பார்த்துட்டு, அவனும் வெட்டியா ஊர்சுத்த ஆரம்பிச்சான். இப்படி ஒரு கேரக்டரை உலகத்துலே நீங்க எங்கனயாவது கேள்விப்பட்டு இருக்கீயளா?

நான் தெருக்கோடி புஷ்பாவை லவ்வுனதை கேள்விப்பட்டு, புஷ்பாவுக்கு எதிர்த்த வீட்டிலிருந்த மல்லிகாவை அவன் லவ்வுனான். எனக்கு லவ் பெய்லியர். அவன் வேணும்னே அவனும் அவனோட லவ்வை பெய்லியர் ஆக்கிக்கிட்டான். அவனை நெனைச்சிப் பார்த்தா இன்னைக்கும் எனக்கு ஆச்சரியமாதான் இருக்கு. இத்தனைக்கு நான் கயட்டி உடற மூடுலே லவ்வு பண்ணவன். அவனோட லவ்வு செம டீப்பு லவ்வுங்க.

லவ் பெய்லியர்லே நாசமாயிடக்கூடாதுன்னு, கடைசியா சோசியல் சர்வீஸ்லே இறங்கிட்டேன். நாலைஞ்சி பசங்களை சேர்த்துக்கிட்டு இளையதளபதி விஜய் ரசிகர் மன்றம் ஆரம்பிச்சேன். இரத்த தானம் பண்ணுனேன். அவன் தீனாஅஜித் ரசிகர்மன்றம் ஆரம்பிச்சான். ஊரெல்லாம் மரம் நட்டான். கண் தானம் செஞ்சான்.

சோஷியல் சர்வீஸுக்கு அப்புறமென்ன.. பாலிடிக்ஸ்தானே? திமுக இளைஞரணீலே சேர்ந்து, சின்சியரா ஒர்க் பண்ணி, பகுதிச் செயலாளர் ஆயிட்டேன். அவன் டபக்குன்னு அதிமுகவுலே சேர்ந்து, இளைஞர் பாசறையிலே என்னைவிட பெரிய போஸ்ட்டு ஒண்ணு வாங்கிட்டான்.

பாலிடிக்ஸிலே இருந்தோமில்லையா? அதனாலே நைட்டுலே லைட்டா டிரிங்க்ஸ் அடிக்குற பழக்கம் எனக்கு ஏற்பட்டுச்சி. ஏதோ ஒரு டாஸ்மாக்கு வாசல்லே அவன் என்னை யதேச்சையாப் பாத்துப்புட்டான். அடுத்த நாளு பார்த்தா மூக்கு முட்ட குடிச்சிப்புட்டு, வாந்தியெடுத்து நடுரோட்டுலே விழுந்து கெடக்குறான். என்னத்தைச் சொல்ல? என்னாங்கடா இதுன்னு ஆகிப்போச்சி எனக்கு.

சிகரெட்டு, குடி, பாலிடிக்ஸுன்னு கெட்டப் பழக்கமாவே திரிஞ்சிக்கிட்டு இருந்ததாலே வீட்டுலே எனக்கு கல்யாணம், காட்சின்னு பண்ணி வெச்சுப்புடலாம்னு முடிவு செஞ்சாங்க. வேலை வெட்டி இல்லாதவனுக்கு எவன் பொண்ணைக் கொடுப்பான்? உடனே ஒரு கடையை வாடகைக்கு புடிச்சி குலதெய்வம் பேருலே ஒரு ரியல் எஸ்டேட் பிசினஸ் ஆரம்பிச்சி தொழிலதிபர் ஆயிட்டேன். என் கடைக்கு எதுத்த இருந்த கடையை கரெக்ட்டா அவன் குறிபார்த்துப் புடிச்சான்.

பொலிடிக்கல் சப்போர்ட்டும் இருந்ததாலே ரெண்டு மூணு மாசத்துலேயே பிசினஸ் செமையா சூடு பிடிச்சிடிச்சி. கையிலே தாராளமா நாலு காசு பொரள ஆரம்பிச்சுது. உறவு வட்டத்துலே எனக்கு பொண்ணு தர எவன் எவனோ போட்டி போட ஆரம்பிச்சான். கடைசீலே தூரத்து சொந்தக்காரப் பொண்ணு ஒண்ணை ஃபிக்ஸ் பண்ணாங்க. நூறு சவரன் வரதட்சிணை.

நான் நாலு அடி பாய்ஞ்சா, அவன்தான் எட்டடி பாய்வானே? என்னென்னவோ டகால்ட்டி வேலை பார்த்து, நூத்தியோரு சவரன் போடுற மாமனாரை கண்டுப் புடிச்சிட்டான். ரெண்டு பேருக்கும் ஒரே நாள்லதான் கல்யாணமும் ஆச்சி. பர்ஸ்ட் நைட்டும் ஒரே நாள்லதான்னு உங்களுக்கு தனியா சொல்ல வேண்டியதில்லை.

எல்லாம் நல்லாதாங்க போயிட்டிக்கிருந்தது, அந்தப் பொம்பளையை பார்க்குற வரைக்கும். சும்மா வாளிப்பா கும்முன்னு சினிமா நடிகை மாதிரி இருப்பா. என்னைவிட மூணு, நாலு வயசு அதிகமும் கூட. பிசினஸ் காண்டாக்ட். என்னவோ சொக்குப்பொடி போட்டு என்னை நல்லா மயக்கிட்டா. நைட்டுலே வீட்டுக்கு போறதை விட்டுப்புட்டு அந்த பொம்பளை வீடே கதின்னு கிடக்க ஆரம்பிச்சேன். எனக்கு சின்னவீடு இருக்குறது ஊருலே அரசல், பொரசலா பேசப்பட்டு அவன் காதுக்கும் போயிருக்கு. கொடுமையப் பாருங்க சார். அவனும் வேண்டா வெறுப்பா ஒரு சின்ன வீட்டை வெச்சுக்கிட்டான்.

குடியும், கூத்தியுமா இருக்குற ஒரு புருஷனை எந்த பொண்டாட்டிதான் சகிச்சுப்பா. எம் பொண்டாட்டி ரொம்ப கடுப்பாயிட்டா. ஒரு நாள் செருப்பை கழட்டி என்னை அடிச்சிட்டு, முகத்துலே கொத்தா காறி உமிழ்ந்துட்டு, குழந்தையைக் கூட்டிக்கிட்டு அம்மா வீட்டுக்குப் போயிட்டா.

ஆனா அவன் பொண்டாட்டி கல்லானாலும் கணவன், ஃபுல் ஆனாலும் புருஷன்டைப் நளாயினி மாதிரி. புருஷனே தெய்வம்னு கெடந்தா. அவன் பொண்டாட்டியே அவனை வுட்டுட்டு போயிட்டா. உனக்கு அந்த அளவுக்கு சூடு சொரணை கிடையாதாடீன்னு சொல்லி அவளை போட்டு அடிச்சி, உதைச்சி அவளோட அம்மா வீட்டுக்கு இவனே துரத்தி அடிச்சிட்டான்.

இந்த நேரத்துலேதானுங்க நமக்கு எகனாமிக் பிராப்ளம். வேலையை ஒழுங்கா பார்த்தாதானே? என்னோட தொழில் ஒட்டுமொத்தமா படுத்துடிச்சி. சுத்துப்பட்டு எல்லா ஊருலேயும் நமக்கு ஏகப்பட்ட கடன். ஊரைவிட்டு ஓட வேண்டிய நிலை. ஆனா ஆச்சரியகரமா அவன் பிசினஸ் ஓரளவுக்கு சுமாராவே இருந்தது, அவனோட க்ளையண்ட்ஸ் அந்தமாதிரி. சும்மா சொல்லக்கூடாது. அவன் என்னைவிட புத்திசாலிதான்.

எல்லாத்தையும் விட்டுட்டு ஒரு நாளு நைட்டு திருட்டுத்தனமா ரயிலேறி இங்கே ஓடிவந்துட்டேன். கடன் காரனுங்க எல்லாம் என்னை ஊருலே வலைவீசி தேடிக்கிட்டிருக்கிறதா கேள்விப்பட்டேன். அவனுக்கு நான் இங்கே இருக்குறது எப்படி தெரிஞ்சதுன்னு தெரியலைங்க. அவனோட தொழிலு, லொட்டு, லொசுக்கையெல்லாம் எவனுக்கோ சும்மாவே கொடுத்துட்டு அவனும் இங்கே ஓடியாந்துட்டான்.

என்னா சாமீ. இவ்ளோ நேரம் வக்கணையா எங்க கதைய கேட்டுப்புட்டு மரம் மாதிரி அப்படியே நிக்கிறே. அவன் யாருன்னு கேட்கறீயா? அதோ எனக்கு எதுத்த வாடைலே நாலாவதா தட்டை குலுக்கிட்டு அய்யா சாமீன்னு பரிதாபமா கொரலு விடுறான் பாருங்க. அவனேதான். எனக்கு ஒரு ரூவா, அவனுக்கு ஒரு ரூவா போட்டுட்டு இடத்தை சீக்கிரமா காலி பண்ணு சாமீ. காத்து வரட்டும். கஸ்டமருங்க வர்ற பீக் ஹவர் இல்லே இது? வக்கணையா கதை கேட்க இங்கன உட்கார்ந்து, நடக்குற இந்த பொழைப்பையும் கெடுத்துடுவே போலிருக்கே?”

(நன்றி : சூரிய கதிர் - செப்.1-15, 2011)