3 செப்டம்பர், 2011

முதல்வரால் முடியாதா?

29-08-2011 அன்று சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் சமர்ப்பித்த அறிக்கையில் ”பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்தவித அதிகாரமும் மாநில முதல்வர் என்கிற முறையில் எனக்கு இல்லை” என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதாவின் கூற்று தவறானது. ”மாநில ஆளுனருக்கும், தமிழக அமைச்சரவைக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 161இன் படி கருணை மனுக்களை பரிசீலிக்கும் அதிகாரம் நிச்சயமாக இருக்கிறது” என்று வாதிடுகிறார் மூத்த வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன்.

“தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கூற்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161வது பிரிவுக்கூறுக்கு புறம்பானது.

1991ல் மத்திய உள்துறை அமைச்சரகம் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் முதலமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிப்பேராயம் 11-11-1980 அன்றே மாரூராம் வழக்கில் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 72 மற்றும் பிரிவுக்கூறு 161-இல் குடியரசுத் தலைவருக்கும், மாநில ஆளுனருக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை வேறு எந்த சட்டத்தாலும் கட்டுப்படுத்த முடியாது என்று மிகத்தெளிவாக கூறியிருக்கிறது.

குடியரசுத் தலைவருக்கு இந்த அதிகாரத்தை வழங்கியுள்ள அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 72 உட்பிரிவு 3-இல் ஒரு முக்கிய குறிப்பு உள்ளது. மரண தண்டனைக்கு எதிராக வரும் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பரிசீலித்தாலும்கூட, குடியரசுத் தலைவருக்கு உள்ள அதே அதிகாரம் மாநில ஆளுனர்களுக்கும் உண்டு என்பதை இந்த உறுப்பு தெளிவு படுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகரத்தின் கடிதம், அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 257(1)இன் கீழ் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. இத்தகைய கடிதத்தை இந்த உறுப்பின்கீழ் மாநில அரசுகளுக்கு அனுப்ப மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த கடிதத்தை ஆணையாக ஏற்றுக் கொண்டு எந்த ஒரு மாநில ஆளுனரும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 161இல் தனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி கருணை மனுக்களின் மேல் முடிவெடுக்க மாட்டேன் என்று சொல்லவும் முடியாது.

மத்திய உள்துறை அமைச்சரகத்தின் கடிதம், மாநில ஆளுனரின் அதிகாரத்தில் தலையிடுவதால் அந்தக் கடிதம் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 14க்கு எதிரானது. அந்த கடிதத்தின்படி எந்த மாநில ஆளுனராவது தண்டனை கைதிகளால் தன்னிடம் கொடுக்கப்பட்ட கருணை மனுக்களை குடியரசுத்தலைவருக்கு அனுப்பினாலோ, அல்லது தனக்கு அதிகாரம் இல்லை என்று புறம் தள்ளினாலோ அச்செயல் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 161க்கு எதிரானதாகும்.

அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 161-இல் உள்ள அதிகாரம் சாதாரண நிர்வாக அதிகாரம் அல்ல. மாநில ஆளுனருக்கு அரசமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்ட இறையாண்மை சார்ந்த அதிகாரம் ஆகும். இந்த அதிகாரத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டத்தாலோ அல்லது மற்ற சட்டங்களாலோ கட்டுப்படுத்த முடியாது. இந்த அதிகாரத்தை சாதாரண நிர்வாக அதிகாரம் என்று எடுத்துக் கொண்டால்கூட, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதம் அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பானது. ஏனெனில், இந்த மூன்று கைதிகளின் கருணை மனுக்களை மாநில ஆளுனர் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டால் அதனால் குடியரசுத் தலைவரின் அதிகாரத்திற்கு எந்த ஊறும் விளையப்போவதில்லை. குடியரசுத் தலைவரிடம் இன்றும் கருணை மனுக்கள் நிலுவையில் இருந்தால் மாநில ஆளுனர் புதிதாக அவரிடம் வரும் கருணை மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது.

எனவே மாநில ஆளுனருக்கும், தமிழக அமைச்சரவைக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 161இன் படி கருணை மனுக்களை பரிசீலிக்கும் அதிகாரம் நிச்சயமாக இருக்கிறது”.

(நன்றி : புதிய தலைமுறை)

4 கருத்துகள்:

  1. //குடியரசுத் தலைவருக்கு உள்ள அதே அதிகாரம் மாநில ஆளுனர்களுக்கும் உண்டு என்பதை இந்த உறுப்பு தெளிவு படுத்தியுள்ளது.//
    ஒரு புதிய விஷயம் தெரிந்து கொண்டோம்.
    //மத்திய உள்துறை அமைச்சகரத்தின் கடிதம், அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 257(1)இன் கீழ் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. இத்தகைய கடிதத்தை இந்த உறுப்பின்கீழ் மாநில அரசுகளுக்கு அனுப்ப மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. //
    அப்படி என்றால் ஏன் மதிய அரசு இப்படி ஒரு கடிதத்தை அனுப்புகிறது. ? கடிதத்தை அனுப்பியவர்கள் அவ்வளவு விவரம் அற்றவர்கள் எனில் நாம் ஒரு மோசமான ஜனநாயகத்தை நோக்கி போய் கொண்டு இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. அவசரத்துல எழுதின மாதிரி இருக்குங்க. இன்னும் கொஞ்சம் ஆர்ட்டிகுலேட் பண்ணி எழுதி இருந்து இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. //தமிழக அமைச்சரவைக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 161இன் படி கருணை மனுக்களை பரிசீலிக்கும் அதிகாரம் நிச்சயமாக இருக்கிறது//

    ஆறுதலான செய்தி.

    ***************

    இதை படித்துப் பாருங்களேன்...

    செத்தப் பாம்பை அடிக்காதீங்க!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. காதல் தோல்வியால் தற்கொலை செய்ய நினைப்பவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பாக நின்று பெட்ரோல் ஊற்றி பொது மக்கள் இருக்கும் இடத்தில் தன்னையே எரியூட்டுவார்களா? கொஞ்சாமாவது மனிதத் தன்மையோடு சிந்திக்க மாட்டானா இந்த மானங்கெட்ட தினமலர்.

    உங்கள் கண்டனத்தை எந்த வழியிலாவது பதிவு செய்யுங்கள்

    தின மலர் கட்டுரையை எழுதிய ரங்கராஜ் பாண்டேவின் தொலைபேசி எண். 9952409258.

    99443 09600
    98940 09200
    98940 09400

    98940 09007

    044 – 2841 3553
    044 – 2855 5783

    Dinamalar Email:

    dmrcni@dinamalar.in
    dmrpondy@dinamalar.in
    dmrcbe@dinamalar.in
    dmrmdu@dinamalar.in
    dmrbangalore@dinamalar.in
    dmrmumbai@dinamalar.in
    dmrdelhi@dinamalar.in
    coordinator@dinamalar.in
    webmaster@dinamalar.in

    பதிலளிநீக்கு