26 செப்டம்பர், 2011

Dookudu – Daring & Dashing

போனவாரம் வரை விஜய்க்கும், சல்மான்கானுக்கும் பயங்கர டென்ஷன். நகம் கடித்தபடியே காத்துக் கொண்டிருந்தார்கள். மனதுக்குள் இஷ்டதெய்வத்தை வேண்டிக் கொண்டார்கள். அவர்களுடைய படம் வெளிவரும்போது கூட இவ்வளவு மெனக்கெட்டதில்லை.

மகேஷ்பாபுவின் டோக்குடுவுக்குதான் இவ்வளவு டென்ஷன் (Dookudu என்பதை தமிழில் எப்படி பிரனவுன்ஸ் செய்வது?). ஏற்கனவே மகேஷ்பாபுவின் ‘போக்கிரியை’ தமிழிலும், இந்தியிலும் முறையே விஜய்யும், சல்மானும் உல்டா அடித்து, பிளாக்பஸ்டர் பார்த்தவர்கள். தெலுங்குகாரர்கள் கடந்த ஆறு மாதங்களாக ‘அடுத்த போக்கிரி’ என்று அலறுவதைப் பார்த்துதான் படத்தின் ரிசல்ட்டுக்காக தேவுடு காத்துக் கொண்டிருந்தார்கள்.

ரிசல்ட் பக்கா. இதுவரை தெலுங்கு சினிமா சென்றிராத உயரங்களுக்கு டோக்குடு போயிருக்கிறது. சுமார் முப்பத்தைந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் படம், முதல்நாளே ஆந்திராவில் பத்து கோடி ரூபாய் வசூலை வாரிக்கொட்டிக் கொண்டு கோலிவுட்டையும், பாலிவுட்டையும் அச்சுறுத்தியது. டோலிவுட்டுக்கு வாராது வந்த மாமணியாய் வாய்த்த மகாதீராவை அசால்டாக வசூலில் பின்னுக்கு தள்ளிவிடும் என்று கணிக்கிறார்கள் தெலுங்கு பிசினஸ் ஆட்கள். மகாதீரா அமெரிக்காவில் முதல்நாள் நாலரை கோடி வசூலித்து அசத்தியதாம். டோக்குடுவின் முதல்நாள் அமெரிக்க வசூல் மட்டும் ஆறரைக் கோடி.

ஹீரோ மகேஷ்பாபுவுக்கு இப்படத்தின் வெற்றியில் எந்த சந்தேகமும் இல்லை. அவருக்கு இயக்குனர் சீனு வைத்லா மீது அப்படியொரு நம்பிக்கை. சொல்லிக் கொள்ளும்படியான தோற்றமோ, பெரிய நடிப்புத் திறமையோ இல்லாத ரவிதேஜாவையே மாஸ் மகாராஜா ஆக்கியவர் சீனு. அவருடைய துபாய் சீனு இன்றுவரை ஆந்திராவின் ஏதோ ஒரு தியேட்டரில் விசில் சத்தத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.

1999ல் தன்னுடைய 24வது வயதில் ஹீரோவானார் மகேஷ். முதல் படம் ராஜகுமாரடு (ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தால் பிரின்ஸ்). அப்போதிலிருந்து ‘பிரின்ஸ்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி என்று அடுத்தடுத்து ஐந்து வருடங்களில் நான்கு சூப்பர் டூப்பர் ஹிட்டுகளை கொடுத்த மகேஷ்பாபு, இம்மாதிரியான ஒரு வெற்றிக்காகதான் இவ்வளவு நாட்களாக பொறுமையாக காத்திருந்தார். ஹீரோவாக நடிக்கத் தொடங்கி பதினாறாவது படம் டோக்குடு. போக்கிரிக்கு பிறகு சைனிக்குடு, அதிதி, கலேஜா என்று ஹாட்ரிங் படங்கள் வசூலில் டூமாங்கோலி ஆகியதால் இப்படத்தின் வெற்றி, போக்கிரியின் வெற்றியை விட மகேஷ்பாபுவுக்கு முக்கியமானது.

அப்படியென்ன அப்பாடக்கர் படம் இதுவென்றுப் பார்த்தால், நத்திங் ஸ்பெஷல். மிக சாதாரணமான மசாலா படம். கதையோ, திரைக்கதையோ எந்தவகையிலும் மற்ற படங்களில் இருந்து மாறுபடவில்லை. ஆனாலும் டைட்டில் தொடங்கி, க்ளைமேக்ஸ் வரை ஜிவுஜிவுவென்று ஒரு ‘டெம்போ’வை தக்கவைத்திருப்பதுதான் இயக்குனரின் சாமர்த்தியம். கே.வி.குகனின் கேமிரா, ஒரு சாதாரணப் படத்தை எவ்வளவுக்கு எவ்வளவு ‘ரிச்’சாக காட்ட முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு காட்டுகிறது. குறிப்பாக இண்டர்வெல் ப்லாக் ஆக்‌ஷன், இந்தியத் திரைப்படங்களின் தொழில்நுட்பத் தேர்ச்சிக்கு நல்ல எடுத்துக்காட்டு.

விறுவிறுவென்று ஆக்‌ஷன் காட்சிகளால் தொடக்கம் பெறும் எந்த ஒரு மசாலா திரைப்படமுமே, செண்டிமெண்ட் காட்சிகளின் போது தொங்கிவிடுவது இயல்பானதுதான். இந்த தொங்கல் ஏரியாவை செப்பனிடுவதில்தான் ஒரு கமர்சியல் இயக்குனரின் திறமை வெளிப்படுகிறது. செண்டிமெண்ட் என்பதால் ரசிகன் அழுது வடியவேண்டும் என்று இப்படத்தின் இயக்குனர் எதிர்ப்பார்க்கவில்லை. ரசிகன் கண்கலங்கிவிடக் கூடாது என்பதில் சீனு வைத்லா உறுதியாக இருந்திருக்கிறார். பாசப்போராட்டக் காட்சிகளில் ஏன் அழுதுவடிய வேண்டும், சிரித்தால் என்ன முத்தா கொட்டிவிடும்? - லேட்டரலாக திங்க் செய்து பார்த்திருக்கிறார். இந்த காட்சிகளில் பிரம்மானந்தத்தையும், நாராயணாவையும் சொருகு. தியேட்டரில் எவன் அழுகிறான் என்று பார்த்துவிடுவோம். செண்டிமெண்ட் முடிந்ததும் ரிவென்ஜ், மீண்டும் ஆக்‌ஷன். அதை மகேஷ்பாபு பார்த்துக் கொள்வார். இடையிடையே சமந்தா, ரொமான்ஸ், கலர்ஸ், டான்ஸ்... இந்தப் படம் ஹிட் அடிக்காவிட்டால்தான் ஆச்சரியம்.

சமந்தா. வெள்ளெலி மாதிரி இருக்கிறார். கொஞ்சம் ஒல்லியான காண்வெண்ட் பெண் தோற்றம். ஃப்ளாட்டான, கவர்ச்சி மடிப்புகள் ஏதும் காணப்படாத வெள்ளை வெளேர் ஃப்ளோர் டைல்ஸ் இடை. வழக்கமாக ஹீரோயின்களிடம் நாம் எதிர்ப்பார்க்கும் கவர்ச்சியான ‘பெரிய’ சமாச்சாரங்கள் ஏதும் இவரிடம் இல்லை. ஆனால் கருகருவென மைபூசிய அவரது கண்கள், அளவெடுத்து செய்தமாதிரியான மூக்கு, அசத்தல் வடிவிலான உதடுகளென்று குழந்தைத் தனமான முகம்தான் சமந்தாவின் ப்ளஸ் பாயிண்ட்.

பிரம்மானந்தம், நாராயணா காமெடிக்கு இன்னும் பத்து ஆண்டுகளுக்காவது தெலுங்கு ரசிகர்கள் சிரித்துக்கொண்டே இருக்கப் போகிறார்கள். ஹீரோவிடம் அடி வாங்குவதுதான் பிரம்மானந்தத்தின் வழக்கமான காமெடி. இந்தப் படத்திலும் அடிதான் வாங்குகிறார். கவுண்டமணியிடம் செந்தில் எத்தனைமுறை அடிவாங்கினாலும் நாம் சிரிக்கிறோமில்லையா, அதேமாதிரிதான் மனவாடுகளும் சிரிக்கிறார்கள்.

நாராயணா கேரக்டர், தெலுங்கு சினிமாவின் அத்தனை ஹீரோக்களின் டவுசரையும் ஒட்டுமொத்தமாக கயட்டுகிறது. படம் முழுக்க தெலுங்கு சினிமாக்கள் குறித்த ஒரு சுயபகடி இருந்துக்கொண்டே இருக்கிறது. முன்னதாக ராம்கோபால் வர்மாவின் அப்பள ராஜூ ஒட்டுமொத்தமாக தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரியை கேலி செய்தது. அது வன்மமான காமெடி என்று இண்டஸ்ட்ரி மொத்தமும் ராம்கோபால் வர்மா மீது பாய்ந்தது. டோக்குடு இயக்குனரையும் ஆர்.ஜி.வி. அப்பளராஜூவில் கிண்டலடித்திருந்தார். அதற்குப் பதில் சொல்லும் விதமாக, ராம்கோபால் வர்மாவுக்கு பாடமெடுக்கும் விதமாக நோகாமல் தெலுங்கு சினிமாவை நொங்கெடுப்பது எப்படியென்று சீனு படமெடுத்துக் காட்டியிருக்கிறார். குறிப்பாக ராம்கோபால் வர்மா போட்டோவையே கூட பயன்படுத்தி காமெடி செய்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதுபோலவே பாடல்காட்சிகள் முழுக்க மகேஷ்பாபு தன்னுடைய ரெகுலர் பாடிலேங்குவேஜை மறந்துவிட்டு, மற்ற ஹீரோக்களை இமிடேட் செய்து ‘லொள்ளு சபா’ செய்கிறார். ஒரு பாடலில் ரவிதேஜா பாணியில் அவர் போடும் குத்து, கும்மாங்குத்து. இன்னொரு பாட்டில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜூஜூபி காட்டுகிறார்.

தேவுடு என்.டி.ஆர். படத்தில் ஒரு கேரக்டர். அவர் இந்தியாவுக்கே பிரதமர் ஆகிறார்(?). செங்கோட்டையில் வீர உரை கூட நிகழ்த்துகிறார். ஆந்திர திரையரங்குகள் நெரிசலில் மூச்சுத் திணற இது போதாதா?

ஒரிஜினல் மசாலா வாசனையோடு படம் பார்க்க விரும்பினால், உடனே தியேட்டருக்கு ஓடுங்கள். இரண்டரை மணி நேர எண்டெர்டெயிண்ட்மெண்ட் நிச்சய கேரண்டி. தெலுங்கு தெரிந்திருக்க வேண்டுமென்றெல்லாம் அவசியமில்லை. சைதை ராஜ், போரூர் கோபாலகிருஷ்ணா, பல்லாவரம் ஜனதா, ஆதம்பாக்கம் ஜெயலட்சுமி மாதிரி தியேட்டர்களில் கூட டோக்குடு ரிலீஸ் ஆகியிருக்கிறது. இல்லாவிட்டால் ஆற, அமர தமிழில் வந்தபிறகு பார்த்துக் கொள்வது என்றால் உங்கள் இஷ்டம். என்ன ஒரு கொடுமை என்றால், இப்படத்தின் தமிழ் பதிப்பில் அணில் நடித்துத் தொலைப்பார் என்பதுதான்.

13 கருத்துகள்:

  1. படத்தின் கதையை விட எக்ஸ்ட்ரா விஷயங்கள் அதிகம் தூவி எழுதி இருப்பது இந்த விமர்சனத்தின் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  2. தெலுங்கு தெரியாதவனையும் பார்க்க வைத்துவிடுவீர்கள் போலிருக்கிறது...

    விமர்சனம் சிறப்பு

    பதிலளிநீக்கு
  3. யுவா, தூக்குடு - தமிழில் சண்டித்தனம் செய்கிறவன். சண்டியர் மாதிரி

    பதிலளிநீக்கு
  4. இந்த படத்தில் சல்லு பாய் நடித்தால் இன்னும் பிரமாதமாக இருக்கும் . அணில் நடித்தால் கேவலமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. //என்ன ஒரு கொடுமை என்றால், இப்படத்தின் தமிழ் பதிப்பில் அணில் நடித்துத் தொலைப்பார் என்பதுதான்.//
    Couldn't stop laughing..

    பதிலளிநீக்கு
  6. "என்ன ஒரு கொடுமை என்றால், இப்படத்தின் தமிழ் பதிப்பில் அணில் நடித்துத் தொலைப்பார் என்பதுதான். "

    கடைசி பஞ்ச் அட்டகாசம்.

    பதிலளிநீக்கு
  7. sallu bhai'nna salman khan thaane.

    பதிலளிநீக்கு
  8. அருமையான விமர்சனம்.....

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு
  9. Naan kaeta varaiyil ... Ajith Raja combinationla indha padam remake aagungaranga ! any details on it ?

    பதிலளிநீக்கு
  10. YUVA- RAJA:

    REALLY BORE MOVIE LAST 10 MIN OK, SONG NOT IMPRESSED,3 HOUR MOVIE ????. I AM READING YOUR REVIEWS ALMOST YOUR SUPPORTING OTHER REGIONAL MOVIE. YOUR NOT WATCHING KANNADA MOVIE?. IF AVAILABLE TRY TO WATCH UPENDRA DIRECTED FLIM ( A, SSSS, UPENDRA,SUPER)ALL ARE FILM TITLE.

    பதிலளிநீக்கு