24 செப்டம்பர், 2011

புதுசுக்காக பழசை அழிக்கலாமா?

ஒரு பக்கம் வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்படுவதில்லை என்று புகார். மறுபுறம் ஏற்கனவே நன்கு கட்டமைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் கட்டிடங்களையும், மைதானங்களையும், பூங்காங்களையும், நூற்றாண்டு மரங்களையும் வளர்ச்சி என்கிற பெயரில் அழிக்க வேண்டுமா என்று கேள்வி. அரசுக்கு இருதலைக்கொள்ளி எறும்பு நிலைதான்.

எங்கே?

தலைநகர் சென்னையில். சுமார் எழுபது லட்சம் மக்கள் வசிக்கும் ‘கசகச’ நெரிசலான தமிழகத்தின் தலைநகர், தன் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு தயார் ஆகிக் கொண்டிருக்கிறது. நகர் மக்களின் மிக முக்கியப் பிரச்சினையாக அன்றாட போக்குவரத்து சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டு, அடுத்தடுத்து இதற்கான தீர்வுகளும், திட்டங்களும் தீட்டப்பட்டு வருகின்றன. அரசுப் பேருந்து, ரயில், ஆட்டோ தனியார் வாகனங்கள் என்று லட்சக்கணக்கில் பெருகிப்போய்விட்ட வாகனங்கள் நெரிசலால் முடங்கிப்போய், சென்னைவாசிகள் தங்கள் நாளின் பெரும்பாலான நேரத்தை சாலைகளுக்கு செலவிட வேண்டியிருக்கிறது.

இப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டுவரப்பட்டதுதான் மெட்ரோ ரயில் திட்டம். சென்னையில் இரு மார்க்கத்தில் இது திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. வடசென்னை வண்ணாரப்பேட்டையில் தொடங்கி பிராட்வே, ஸ்பென்சர்ஸ், அண்ணாசாலை, கிண்டி வழியாக சென்னை விமான நிலையத்திற்கு 23.1 கி.மீ நீளத்தில் ஒரு மார்க்கம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வேப்பேரி, அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி, பரங்கிமலை வரை 22 கி.மீ நீளத்துக்கு மற்றொரு மார்க்கம். இத்திட்டத்துக்கு சுமார் 16,000 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் 41 சதவிகிதத் தொகையை மத்திய, மாநில அரசுகளும் மீதியை ஜப்பானிடம் கடன் வாங்கி திட்டத்தை முடிப்பதாகவும் ஏற்பாடு.

வண்ணாரப்பேட்டையிலிருந்து நந்தனம் சேமியர்ஸ் சாலை வரை பூமிக்கு கீழாகவும், அங்கிருந்து தூண்கள் மீதும் ரயில் பயணிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதே போலவே சென்னை சென்ட்ரலில் இருந்து திருமங்கலம் வரை கீழே, அதன் பிறகு பரங்கிமலைவரை தூண்களில் ரயில் செல்லும்.

அயல்நாடுகளில் இருப்பதைப் போன்ற சுரங்க ரயில் நிலையங்கள் நம்மூரிலும் அமையப்போகிறது என்கிற மகிழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தாலும், திட்டத்துக்கான பணிகள் தொடங்க ஆரம்பித்தப் பிறகு ஆங்காங்கே பல தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பத் தொடங்கியது. தங்கள் இடம் அரசுத் திட்டத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் போதெல்லாம் தனியார் எதிர்ப்பு தெரிவிப்பது வாடிக்கைதான். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அரசுத்துறையைச் சார்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததுதான் முக்கியமானது.

மீனம்பாக்கத்தில் விமான நிலையத்துக்கு அருகில் தூண்கள் அமைக்கப்பட விமான நிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து ஆரம்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. விமான ஓடுபாதைக்கு அருகே ரயில் செல்வதால், விமான நிலையத்தின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகும் என்று இவர்கள் ஆட்சேபம் தெரிவித்தார்கள். இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் தரப்பும், மெட்ரோ ரயில் அதிகாரிகள் தரப்பும் அமர்ந்துப் பேசி இருவருக்கும் பொதுவான திட்டத்துக்கு ஒப்புக் கொண்டார்கள்.

இதுபோலவே கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையம் அருகே பாதை மற்றும் பணிமனை அமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திடம் இடம் கோரியது மெட்ரோ ரயில். இதையடுத்து மார்க்கெட் பகுதியில் ஜவுளி மற்றும் மளிகை அங்காடிகள் கட்ட திட்டமிடப்பட்டிருந்த 35 ஏக்கர் நிலத்தை மெட்ரோ ரயிலுக்கு வளர்ச்சிக் குழுமம் தந்தது. இது கோயம்பேடு மார்க்கெட் வணிகர்களை கோபப்படுத்தியிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பாகவே தங்களுக்கு ஒதுக்கித்தந்து, வணிக விரிவாக்கத்துக்காக திட்டம் தீட்டி வைத்திருந்த இடத்தை, புதியதாக வந்த ஒரு திட்டத்துக்கு தாரை வார்ப்பது சரியல்ல என்று குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

“கட்டுமானப் பணிகளுக்காக மெட்ரோ ரயில் நிலம் எடுத்துக் கொள்வதின் மூலமாக ஏற்கனவே பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் வாங்கப்பட்ட 25 கடைகள் அழிக்கப்படும். காய்கறி எடுத்துவரும் டிரக்குகளின் பார்க்கிங் இடம் பறிக்கப்பட்டால், கோயம்பேடு மார்க்கெட்டின் வழக்கமான பணிகளும் பாதிக்கப்படும்” என்கிறார் வி.ஆர்.சவுந்தரராஜன். இவர் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் லைசன்ஸ் ஹோல்டர்ஸ் அசோசியேஷனின் செயலாளர்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் ஊடாக மெட்ரோ ரயில் ஊடுருவ திட்டமிடப்பட்டிருப்பதால் வெளியூர் பஸ்கள் வந்து செல்லும் பாதை, மாநகர பஸ்கள் நிற்கும் பகுதி ஆகியவற்றில் பெரும்பகுதி மெட்ரோ ரயிலுக்கு ஒதுக்கப்பட்டது. வெளியூர் பஸ்கள் வந்துச் செல்லும் பாதை இத்திட்டத்துக்கு வந்துவிட்டதால், அருகிலிருந்த குடிநீர் வடிகால் வாரியத்திடம் பேசி, அங்கிருந்து நிலம் பெறப்பட்டு புதுப்பாதை போடப்பட்டது. பெருகி விட்ட பஸ்களின் எண்ணிக்கை, நடைபெற்றுவரும் மெட்ரோ பணிகள் ஆகியவற்றால் வரலாற்றில் இதுவரை சென்னை நகரம் கண்டிராத போக்குவரத்து நெரிசலை இப்போது கோயம்பேடு பேருந்து நிலையம் சந்தித்து வருகிறது. இதனால் பஸ் ஓட்டுனர்கள் தொடர்ச்சியாக புலம்பி வருகிறார்கள். இவர்களது புலம்பல் என்று கோபமாக மாறி வெடிக்குமோ என்கிற வெப்பச்சூழல் நிலவுகிறது.

எனவே இந்த நெரிசலைத் தவிர்க்க, பஸ் நிலைய விரிவாக்கத்துக்காக வளாகத்தின் பின்னாலிருக்கும் குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஐந்து ஏக்கர் நிலம் கோரப்பட்டிருக்கிறது. ஏற்கனவே வெளியூர் பேருந்துகள் பாதைக்காக நிலம் தானம் செய்திருக்கும் குடிநீர் வடிகால் வாரியம், மேலும் மேலும் நிலம் கேட்பதால் கடும் அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறது. இச்சிக்கல் தொடர்பாக அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சென்னையில் பதினாறு இடங்களில் பாரம்பரிய கட்டிடங்கள் இருக்கின்றன. பிராட்வே வெஸ்லி தமிழ் ஆலயம், சென்னை சட்டக்கல்லூரி, ரிப்பன் கட்டிடம், விக்டோரியா பொது அரங்கம், சென்ட்ரல் ரயில் நிலையம், இராமசாமி முதலியார் கட்டிடம், சிம்சன், அண்ணா சாலை பாரத ஸ்டேட் வங்கி, பாரத் காப்பீட்டுக் கழகம், ஹிக்கின் பாதம்ஸ் கட்டிடம், மே நாள் நினைவுப்பூங்கா, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி உள்ளிட்டவை பாதுகாக்கப்படும் பாரம்பரியக் கட்டிடங்கள் ஆகும். இந்த பாரம்பரியக் கட்டிடங்களுக்கு அருகில் எந்த புதிய கட்டுமானப் பணியும் நடக்கக்கூடாது என்பது விதி. ஏனெனில் அந்தப் பணிகளால் இவற்றின் கட்டுமான உறுதி பாதிக்கப்படலாம்.

துரதிருஷ்டவசமாக மெட்ரோ ரயில் பாதை போடப்பட்டு வரும் வழியில் இந்த பாரம்பரியக் கட்டிடங்கள் பெரும்பாலானவை அமைந்து விட்டன. குறிப்பாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கட்டிடம், ஹிக்கின் பாதம்ஸ் புத்தகக் கடை ஆகியவை பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்று தெரிகிறது. எனவே பாரம்பரிய ஆர்வலர்கள் இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம், மாநகர பாரம்பரிய கட்டிடங்களுக்கான பாதுகாப்புக் குழு புகார் கூறியிருக்கிறது. தங்கள் வசமிருக்கும் இடங்களையே மெட்ரோ ரயில் திட்டத்துக்கு முணுமுணுப்போடு தூக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கும் வளர்ச்சிக் குழுமத்துக்கு இதுபோல எட்டுத்திக்கிலுமிருந்து எழுப்பப் பட்டுக் கொண்டிருக்கும் பிரச்சினைகள் பெரும் தலைவலியை தந்துக் கொண்டிருக்கிறது.

முதலில் பூந்தமல்லி சாலையில் அமையவிருந்த மெட்ரோ ரயில் பணிகள் இடதுபுறமாகவே திட்டமிடப்பட்டது. அப்பக்கம் முழுக்க முழுக்க தனியார் இடம் என்பதால், அவற்றைப் பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை கணக்கில் கொண்டு வலப்புறமாக திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, நெய்வேலி இல்லம், பச்சையப்பன் கல்லூரி என்று அரசு தொடர்பான இடங்கள் என்பதால் இடம் கேட்பது பெரிய பிரச்சினையாக இருக்காது என்று நினைத்தார்கள். ஆனால் தங்கள் கல்லூரியில் இருந்து பிடி மண்ணை கூட தரமுடியாது என பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். “எங்கள் கல்லூரி வளாகத்தில் இருக்கும் கிட்டத்தட்ட 300 மரங்கள், இத்திட்டத்தால் வெட்டுப்படும் வாய்ப்பிருக்கிறது. அவற்றை காக்கும் வரை போராடுவோம்” என்கிறார் இரண்டாம் ஆண்டு பி.காம் மாணவரான நரேஷ்குமார்.

மாணவர்களை சமாதானப்படுத்தும் படி பேராசிரியர்களை கேட்டால், அவர்களும் மாணவர்களோடு சேர்ந்து உண்ணாவிரதம் மாதிரியான போராட்டங்களில் கலந்துகொள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகளுக்கு தர்மசங்கடமாகி விட்டது.

இக்கல்லூரி மாணவர்கள் வித்தியாசமான போராட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மரங்கள் எங்கள் சகோதரர்கள் என்று அறிவிக்கும் பொருட்டு, மரங்களுக்கு ‘ராக்கி’ கட்டும் போராட்டம் ஒன்றினையும் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் இக்கல்லூரிக்கு எதிரிலிருக்கும் செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களோடு கைகோர்த்தார்கள்.

எக்ஸ்னோரா அமைப்பின் தலைவரான எம்.பி.நிர்மல், இத்திட்டத்தால் மரங்கள் வெட்டப்படுவதை கடுமையாக எதிர்க்கிறார். “நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட மரங்கள் பலவற்றையும் வெட்டிவிட்டால், என்ன விலை கொடுத்தாலும் இந்த இழப்பை ஈடு செய்யவே முடியாது. ஏற்கனவே மரங்கள் நிறைந்த சோலைகளாக இருந்த கீழ்ப்பாக்கம், ஷெனாய்நகர் ஆகிய பகுதிகள் மரங்களை இழந்து சுற்றுச்சூழல் சீர்கெட்டுப் போயிருக்கிறது. நன்கு வளர்ந்த 300 மரங்களை வெட்டிவிட்டு, 3000 விதைகளை விதைக்கிறோம் என்று சொன்னால் கூட அது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல” என்கிறார்.

இப்பகுதியில் மட்டுமல்ல. நகரில் பல இடங்களில் வெட்டப்படும் மரங்களைப் பார்த்து, இயற்கை ஆர்வலர்கள் கடுப்பு ஆகிக் கொண்டிருக்கிறார்கள். அசோக் நகர் போன்ற இடங்களில் பெரிய நூற்றாண்டு மரங்கள் வெட்டப்படுவதை பதைபதைப்போடு செய்வதறியாமல் பார்த்து நிற்கிறார்கள். இதற்காக இவர்கள் என்று நீதிமன்றப்படி ஏறப்போகிறார்களோ என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கும் டென்ஷன்.

இவையெல்லாம் கண்ணுக்கு தெரிந்து வெளிப்படையாக நடந்து வரும் பிரச்சினைகள். இதுபோல தினமும் ஆயிரத்தெட்டு பிரச்சினைகளுக்கு இடையேதான் மெட்ரோ ரயில் பணிகளுக்கு தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை நந்தனத்தில் கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மை தொழிற்கல்வி நிலையம் அடிபடும் என்று தெரிகிறது. சைதாப்பேட்டையில் மாநகராட்சிக்கு சொந்தமான மருத்துவ ஆய்வு நிலையம் மற்றும் கட்டிடங்கள், ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை, பனகல் மாளிகைக்கு எதிரில் அமைந்திருக்கும் பேருந்து நிலையம் ஆகியவையும் கபளீகரம் ஆகும்.

பாரம்பரியத்தையும், சுற்றுச்சூழலையும் அழித்து ஒரு வளர்ச்சிப் பணி இவ்வளவு முணுமுணுப்புகளையும், சாபங்களையும் பெற்றுக்கொண்டு நடைபெறுவது வருத்தத்துக்குரியது. சென்னை போன்ற திட்டமிடப்படாமல் உருவான நகரங்களில், ஏற்கனவே வளர்ந்துவிட்ட பகுதிகளில், புதியதாக ஒரு பெரிய வளர்ச்சிப்பணியை முன்னெடுக்கும் போது இம்மாதிரிப் பிரச்சினைகள் தவிர்க்க இயலாதது.

எனவேதான் நகரங்களில் மட்டுமே அரசு பல்லாயிரம் கோடிகளை கொட்டிக் கொண்டிருக்காமல், துணை நகரங்கள் அமைத்து வளர்ச்சியை பரவலாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலகாலமாக கோரிவருகிறார்கள்.

சென்னைக்கு அருகே திருமழிசை அருகில் 2,160 கோடி ரூபாய் செலவில் துணை நகரம் அமைக்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பு இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் அறிவிக்கப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது.

வளர்ச்சியை ஒரே இடத்தில் குவித்தால் அது இப்படித்தான் வீங்க ஆரம்பிக்கும். பரவலாக்குவதின் மூலமாக மட்டுமே இம்மாதிரியான பிரச்சினைகளை களைய முடியும்.

(நன்றி : புதிய தலைமுறை)

9 கருத்துகள்:

  1. Its a very useful article. already they removed so many trees from the coimbatore roads that the city is changed forever (to the worst).. Wish the students would stand firm in protecting the trees.. we need metro.. but the officials take the easy road out and many times don't look for alternatives.. good luck students!
    -Sinna

    பதிலளிநீக்கு
  2. கட்டுரை நன்கு அலசி எழுதப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  3. ஆங்காங்கு அரசு இடம் இருந்தால் இது போன்று திட்டங்களுக்கு கையகப்படுத்துவதில் சிரமம் குறையும்; அவை திறந்த வெளியாக,
    திடலாக இருத்தல் வேண்டும் என்று கருதியே அரசு நிலம் இருப்பது வழக்கம். அதை அரசு அதிகாரிகளும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களும் அடி மாட்டு விலைக்கு கிரயம் செய்து கொண்டால் (உதாரணம்: ஜாபர் சேட்டு) அரசு நிலம் இருந்த இடம் கட்டிடங்கள் எழும்பி விடுகின்றன. இன்னொன்று, இது போன்ற வளர்ச்சி பணிகள் நாம் மிகத் தாமதாக துவங்கி இருக்கிறோம். நாற்பது ஆண்டுகள் இரு கழக ஆட்சிகளின்
    தோல்விகளில் ஒன்று. போக்குவரத்து கட்டுமானம் பல வளர்ச்சிகளுக்கு அடிப்படை என்பதால் பிற சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு இதை முடிப்பது அவசியம். பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மெட்ரோ வந்து விட்டால் "பஸ் டே" என்று கொட்டம் அடிக்க முடியாது தான்.

    பதிலளிநீக்கு
  4. vanakkam yava, nalla vilippunarvu katturai, chennaiyil pirakka enna pavam seythomo? endru marangal thinam thinam aluthukondirukum

    பதிலளிநீக்கு
  5. அன்பின் கிருஷ்ணா

    புதிய தலைமுறையில் இந்தக் கட்டுரை வெளிவந்த அந்த பக்கங்களில் இருந்த அந்த டைனோசர் படமும் போட்டால் கட்டுரை முழுமை பெறுமே!
    Can you please do it?!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    பதிலளிநீக்கு
  6. நல்ல கட்டுரை,சூப்பர் அலசல்..

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு
  7. அருமையான அலசல்! ஒட்டு மொத்த மக்களின் ஆதங்கம்!! பாராட்டுக்கள்! எழுத்தாளர் யுவாவுக்கும் அதை வெளியிட்டு பெருமை தேடிக்கொண்ட புதிய தலைமுறைக்கும்!!!

    பதிலளிநீக்கு