2 செப்டம்பர், 2011

என்னைப் போல் ஒருவன்!


 “சரியா அஞ்சாவது படிக்கிறப்போதான் இந்த பிரச்சினை ஆரம்பிச்சுதுன்னு நெனைக்கிறேன். இல்லை.. இல்லை.. அதுக்கு முன்னாடியே.. சரியா எப்போ? ஆங்.. நான் பொறந்த அன்னைக்கே ஆரம்பிச்சிடிச்சி போல. நான் நட்ட நடுப்பகல், உச்சிவெயில் 12 மணிக்கு பொறந்தேன். சரியா ஒரு நிமிஷம் கழிச்சி, அவன் 12.01க்கு பொறந்தானாம். அன்னைக்கு எனக்குப் புடிச்ச சனியனுங்க இவன். ஏழரை நாட்டு சனியாவது ஏழரை வருஷம். இவன் முப்பத்தஞ்சி வருஷமா என்னைப் படுத்தற பாடு இருக்கே. உஸ்ஸப்பா...

போன பத்தியிலே எங்கன ஆரம்பிச்சேன்? ஆங்.. அஞ்சாங்கிளாஸ்! அப்போ தமிழய்யா தினமும் ஒரு ஆளுக்கு, ஏதாவது ஒரு திருக்குறளை மனப்பாடமா சொல்றவங்களுக்கு ஒரு பென்சில் பரிசா கொடுப்பார். தினம் ஒரு பென்சில் திட்டம். ஒரு நாள் நான் நன்றி மறப்பது நன்றல்லபர்ஃபெக்டா, ஏற்ற இறக்கத்தோடு ‘நச்’’சுன்னு சொன்னேன். முதுகில் தட்டிக் கொடுத்து அய்யா பென்சில் கொடுத்தார். ரொம்ப பெருமிதமா இருந்துச்சி. வீட்டுக்குப் போய் சொன்னப்போ என் ஆத்தா நிஜமாவே, சான்றோன் எனக்கேட்ட தாய்ஆகிட்டாங்க. அவனோட அம்மா கிட்டே போய் பெருமையா சொல்லியிருப்பாங்க போல.

மறுநாளே கற்க கசடற’, அதற்கடுத்த நாள் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்னு ரெண்டையும் அட்டகாசமா ஒப்பிச்சு, ஒண்ணுக்கு ரெண்டு பென்சில் வாங்கிட்டான். எப்பூடி?

ஆறாங்கிளாஸ் போனப்பவும், நான் சேர்ந்த அதே ஸ்கூல்ல, அதே கிளாஸுக்கு அவனும் அடம் புடிச்சு வந்து சேர்ந்தான். காலாண்டு பரிட்சையில், நான் தான் வகுப்பிலேயே முதலாவதா வந்தேன். அவன் பயங்கரமா கடுப்பாயிட்டான். என்ன பண்ணான்? எப்படி படிச்சான்னே தெரியலை. அரையாண்டுப் பரிட்சையில் அவன் என்னைவிட ரெண்டு மார்க் அதிகம் வாங்கி முதலாவதா வந்துட்டான். இத்தனைக்கும் அவன் கணக்குலே பயங்கர மக்கு. அந்தப் பரிட்சையிலே பார்த்தீங்கன்னா நூத்துக்கு நூறு மார்க்கு வாங்கி அசத்திட்டான். பத்தாங் கிளாஸ் வர்ற வரைக்கும் இதேமாதிரி முதலாவது, ரெண்டாவதுன்னு நாங்க ரெண்டு பேருமே மாறி வந்துக்கிட்டிருந்தோம்.

சரியா இந்த நேரத்துலேதான் எனக்கு வேறமாதிரி சகவாசமெல்லாம் கொஞ்சம் சேர ஆரம்பிச்சிச்சி. ஒரு நாள் ஜேக்கப்போட மாந்தோப்புலே முதல் முறையா பனாமா ஃபில்டர் பத்த வெச்சேன். நல்ல காரம். இருமலோட பொறையேறி கண்ணுலே தண்ணியே வந்துடிச்சி. விஷயம் அவனுக்கு எப்படி தெரிஞ்சிதுன்னு தெரியலை. ஒருவேளை ஜேக்கப் பயலே கூட சொல்லி இருக்கலாம். கடைவீதியிலேயே நாலு பேருக்கு நல்லா தெரியறமாதிரி, கோல்ட் ஃபில்டர் பத்த வெச்சு ஊதினான். யார் மூலமாவோ அவன் வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சி செம அடி வாங்குனான். பயபுள்ள மாட்டுனதுதான் மாட்டுனான். விசாரணையோட டார்ச்சர் தாங்கமுடியாம, கடைசியிலே நான் தம்மு அடிச்சதையும் சொல்லித் தொலைச்சிட்டான். அப்பா காதுக்கு மேட்டர் வந்து, நம்ம வீட்டுலேயும் பர்ஸ்ட் டிகிரி ட்ரீட்மெண்ட் நல்லா கோலாகலமா நடந்தது.

இப்படியேதாங்க வாழ்க்கை அவனுக்கும் எனக்குமான ஏட்டியும், போட்டியுமா போயிக்கிட்டு இருந்தது.

பண்ணெண்டாங் கிளாசுலே நான் வாங்குன மார்க்குக்கு பி.ஏ எகனாமிக்ஸ்தான் கிடைச்சுது. ஏன்னா இந்த ரெண்டு வருஷத்துலே நான் படிக்கிற பையன் என்கிற ‘நல்லகேட்டகிரியில் இருந்து, அராத்து கேட்டகிரிக்கு வந்து தொலைச்சிட்டேன். அவன் அப்படியில்லை. முழுப்பரிட்சை மட்டும் நல்லா எழுதிட்டான் போலிருக்கு. நல்ல மார்க் வாங்குனான். அவனுக்கு கம்ப்யூட்டர் என்ஜினியரிங் சீட்டு கிடைச்சும் கூட, வெணுமின்னே எங்கூட வந்து எகனாமிக்ஸ் படிச்சான்.

எப்படியோ தட்டுத் தடுமாறி படிச்சி, அரியர்ஸ் வைக்காம முடிச்சி, சும்மா ஊர் சுத்திக்கிட்டிருந்தேன். அவங்கப்பா பிஸினஸை பார்த்துக்கிட்டு இருந்தவன், நான் ஊர் சுத்துறதைப் பார்த்துட்டு, அவனும் வெட்டியா ஊர்சுத்த ஆரம்பிச்சான். இப்படி ஒரு கேரக்டரை உலகத்துலே நீங்க எங்கனயாவது கேள்விப்பட்டு இருக்கீயளா?

நான் தெருக்கோடி புஷ்பாவை லவ்வுனதை கேள்விப்பட்டு, புஷ்பாவுக்கு எதிர்த்த வீட்டிலிருந்த மல்லிகாவை அவன் லவ்வுனான். எனக்கு லவ் பெய்லியர். அவன் வேணும்னே அவனும் அவனோட லவ்வை பெய்லியர் ஆக்கிக்கிட்டான். அவனை நெனைச்சிப் பார்த்தா இன்னைக்கும் எனக்கு ஆச்சரியமாதான் இருக்கு. இத்தனைக்கு நான் கயட்டி உடற மூடுலே லவ்வு பண்ணவன். அவனோட லவ்வு செம டீப்பு லவ்வுங்க.

லவ் பெய்லியர்லே நாசமாயிடக்கூடாதுன்னு, கடைசியா சோசியல் சர்வீஸ்லே இறங்கிட்டேன். நாலைஞ்சி பசங்களை சேர்த்துக்கிட்டு இளையதளபதி விஜய் ரசிகர் மன்றம் ஆரம்பிச்சேன். இரத்த தானம் பண்ணுனேன். அவன் தீனாஅஜித் ரசிகர்மன்றம் ஆரம்பிச்சான். ஊரெல்லாம் மரம் நட்டான். கண் தானம் செஞ்சான்.

சோஷியல் சர்வீஸுக்கு அப்புறமென்ன.. பாலிடிக்ஸ்தானே? திமுக இளைஞரணீலே சேர்ந்து, சின்சியரா ஒர்க் பண்ணி, பகுதிச் செயலாளர் ஆயிட்டேன். அவன் டபக்குன்னு அதிமுகவுலே சேர்ந்து, இளைஞர் பாசறையிலே என்னைவிட பெரிய போஸ்ட்டு ஒண்ணு வாங்கிட்டான்.

பாலிடிக்ஸிலே இருந்தோமில்லையா? அதனாலே நைட்டுலே லைட்டா டிரிங்க்ஸ் அடிக்குற பழக்கம் எனக்கு ஏற்பட்டுச்சி. ஏதோ ஒரு டாஸ்மாக்கு வாசல்லே அவன் என்னை யதேச்சையாப் பாத்துப்புட்டான். அடுத்த நாளு பார்த்தா மூக்கு முட்ட குடிச்சிப்புட்டு, வாந்தியெடுத்து நடுரோட்டுலே விழுந்து கெடக்குறான். என்னத்தைச் சொல்ல? என்னாங்கடா இதுன்னு ஆகிப்போச்சி எனக்கு.

சிகரெட்டு, குடி, பாலிடிக்ஸுன்னு கெட்டப் பழக்கமாவே திரிஞ்சிக்கிட்டு இருந்ததாலே வீட்டுலே எனக்கு கல்யாணம், காட்சின்னு பண்ணி வெச்சுப்புடலாம்னு முடிவு செஞ்சாங்க. வேலை வெட்டி இல்லாதவனுக்கு எவன் பொண்ணைக் கொடுப்பான்? உடனே ஒரு கடையை வாடகைக்கு புடிச்சி குலதெய்வம் பேருலே ஒரு ரியல் எஸ்டேட் பிசினஸ் ஆரம்பிச்சி தொழிலதிபர் ஆயிட்டேன். என் கடைக்கு எதுத்த இருந்த கடையை கரெக்ட்டா அவன் குறிபார்த்துப் புடிச்சான்.

பொலிடிக்கல் சப்போர்ட்டும் இருந்ததாலே ரெண்டு மூணு மாசத்துலேயே பிசினஸ் செமையா சூடு பிடிச்சிடிச்சி. கையிலே தாராளமா நாலு காசு பொரள ஆரம்பிச்சுது. உறவு வட்டத்துலே எனக்கு பொண்ணு தர எவன் எவனோ போட்டி போட ஆரம்பிச்சான். கடைசீலே தூரத்து சொந்தக்காரப் பொண்ணு ஒண்ணை ஃபிக்ஸ் பண்ணாங்க. நூறு சவரன் வரதட்சிணை.

நான் நாலு அடி பாய்ஞ்சா, அவன்தான் எட்டடி பாய்வானே? என்னென்னவோ டகால்ட்டி வேலை பார்த்து, நூத்தியோரு சவரன் போடுற மாமனாரை கண்டுப் புடிச்சிட்டான். ரெண்டு பேருக்கும் ஒரே நாள்லதான் கல்யாணமும் ஆச்சி. பர்ஸ்ட் நைட்டும் ஒரே நாள்லதான்னு உங்களுக்கு தனியா சொல்ல வேண்டியதில்லை.

எல்லாம் நல்லாதாங்க போயிட்டிக்கிருந்தது, அந்தப் பொம்பளையை பார்க்குற வரைக்கும். சும்மா வாளிப்பா கும்முன்னு சினிமா நடிகை மாதிரி இருப்பா. என்னைவிட மூணு, நாலு வயசு அதிகமும் கூட. பிசினஸ் காண்டாக்ட். என்னவோ சொக்குப்பொடி போட்டு என்னை நல்லா மயக்கிட்டா. நைட்டுலே வீட்டுக்கு போறதை விட்டுப்புட்டு அந்த பொம்பளை வீடே கதின்னு கிடக்க ஆரம்பிச்சேன். எனக்கு சின்னவீடு இருக்குறது ஊருலே அரசல், பொரசலா பேசப்பட்டு அவன் காதுக்கும் போயிருக்கு. கொடுமையப் பாருங்க சார். அவனும் வேண்டா வெறுப்பா ஒரு சின்ன வீட்டை வெச்சுக்கிட்டான்.

குடியும், கூத்தியுமா இருக்குற ஒரு புருஷனை எந்த பொண்டாட்டிதான் சகிச்சுப்பா. எம் பொண்டாட்டி ரொம்ப கடுப்பாயிட்டா. ஒரு நாள் செருப்பை கழட்டி என்னை அடிச்சிட்டு, முகத்துலே கொத்தா காறி உமிழ்ந்துட்டு, குழந்தையைக் கூட்டிக்கிட்டு அம்மா வீட்டுக்குப் போயிட்டா.

ஆனா அவன் பொண்டாட்டி கல்லானாலும் கணவன், ஃபுல் ஆனாலும் புருஷன்டைப் நளாயினி மாதிரி. புருஷனே தெய்வம்னு கெடந்தா. அவன் பொண்டாட்டியே அவனை வுட்டுட்டு போயிட்டா. உனக்கு அந்த அளவுக்கு சூடு சொரணை கிடையாதாடீன்னு சொல்லி அவளை போட்டு அடிச்சி, உதைச்சி அவளோட அம்மா வீட்டுக்கு இவனே துரத்தி அடிச்சிட்டான்.

இந்த நேரத்துலேதானுங்க நமக்கு எகனாமிக் பிராப்ளம். வேலையை ஒழுங்கா பார்த்தாதானே? என்னோட தொழில் ஒட்டுமொத்தமா படுத்துடிச்சி. சுத்துப்பட்டு எல்லா ஊருலேயும் நமக்கு ஏகப்பட்ட கடன். ஊரைவிட்டு ஓட வேண்டிய நிலை. ஆனா ஆச்சரியகரமா அவன் பிசினஸ் ஓரளவுக்கு சுமாராவே இருந்தது, அவனோட க்ளையண்ட்ஸ் அந்தமாதிரி. சும்மா சொல்லக்கூடாது. அவன் என்னைவிட புத்திசாலிதான்.

எல்லாத்தையும் விட்டுட்டு ஒரு நாளு நைட்டு திருட்டுத்தனமா ரயிலேறி இங்கே ஓடிவந்துட்டேன். கடன் காரனுங்க எல்லாம் என்னை ஊருலே வலைவீசி தேடிக்கிட்டிருக்கிறதா கேள்விப்பட்டேன். அவனுக்கு நான் இங்கே இருக்குறது எப்படி தெரிஞ்சதுன்னு தெரியலைங்க. அவனோட தொழிலு, லொட்டு, லொசுக்கையெல்லாம் எவனுக்கோ சும்மாவே கொடுத்துட்டு அவனும் இங்கே ஓடியாந்துட்டான்.

என்னா சாமீ. இவ்ளோ நேரம் வக்கணையா எங்க கதைய கேட்டுப்புட்டு மரம் மாதிரி அப்படியே நிக்கிறே. அவன் யாருன்னு கேட்கறீயா? அதோ எனக்கு எதுத்த வாடைலே நாலாவதா தட்டை குலுக்கிட்டு அய்யா சாமீன்னு பரிதாபமா கொரலு விடுறான் பாருங்க. அவனேதான். எனக்கு ஒரு ரூவா, அவனுக்கு ஒரு ரூவா போட்டுட்டு இடத்தை சீக்கிரமா காலி பண்ணு சாமீ. காத்து வரட்டும். கஸ்டமருங்க வர்ற பீக் ஹவர் இல்லே இது? வக்கணையா கதை கேட்க இங்கன உட்கார்ந்து, நடக்குற இந்த பொழைப்பையும் கெடுத்துடுவே போலிருக்கே?”

(நன்றி : சூரிய கதிர் - செப்.1-15, 2011)

23 கருத்துகள்:

  1. So "Pudhiya Thalaimurai" TV channel starting now? Summa Kalakkunga Lucky

    பதிலளிநீக்கு
  2. ஒரு சிரிப்பினில் கடந்து செல்ல முடியவில்லை, உஙளின் ஆகச்சிறந்ததில் இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  3. கதை நல்லா இருக்கு அண்ணே

    பதிலளிநீக்கு
  4. கதை பரவாயில்லை ஆனால் புது டெம்பிளேட் நல்லாயிருக்கு

    பதிலளிநீக்கு
  5. //உஙளின் ஆகச்சிறந்ததில் இதுவும் ஒன்று.//
    ரிப்பீட்ட்டேய்ய்ய்

    பதிலளிநீக்கு
  6. சூப்பரு அப்பு. பழைய நினைவுகளை அபபடியே அப்படியே அசைபோட்டிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  7. i think ur touch is missing brother....plz try to write about the "Pudhiya Thalaimurai" chennal....

    பதிலளிநீக்கு
  8. இதை தான் உங்களிம் எதிர் பார்க்கிறோம்

    பதிலளிநீக்கு
  9. புன்னகையுடனே படித்து முடித்தேன்.
    நல்லாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  10. இப்படியும் ஒரு கரெக்டரா..?
    நல்ல யோசிகிறீங்க?

    பதிலளிநீக்கு
  11. Hero aduthathu sethu sethu vilayaaduvaarunu nenechen

    பதிலளிநீக்கு
  12. குருவே !!!!! என்னைச் சிஷ்யனாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. கடைசித் திருப்பம் எதிர்பார்க்க முடியாத ஒன்று,

    பதிலளிநீக்கு
  15. சூப்பர் கதை.....
    வாழ்த்துக்கள்!

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு