9 ஜனவரி, 2014

ஜில்லா

ஊர் பெரிய மனிதர் சாக கிடக்கிறார். அரசியல் எதிரிகளால் அந்த பெரிய மனிதரின் மகன் படுகொலை செய்யப்பட, இளம் விதவை ஆகிறார் பூர்ணிமா பாக்யராஜ். சாகக்கிடக்கும் தருவாயில் இருக்கும் பெரியவர் தன்னுடைய விதவை மருமகளை மோகன்லால் திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு ‘பேக்கரி டீலிங்’ ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார். இதனால் அவரது அடுத்த அரசியல் வாரிசாக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகளின் தாயான பூர்ணிமா பாக்யராஜை மோகன்லால் மணந்துக்கொண்டு வாக்குறுதியை காப்பாற்றுகிறார். பூர்ணிமாவின் மகன் தான் இளைய தளபதி விஜய். பிற்பாடு மோகன்லாலுக்கும் அவருக்கும் இன்னொரு உருப்படாத மகன் பிறக்கிறான். மகத்.

அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மாநில அளவில் பெரிய மனிதராகிறார் மோகன்லால். கட்டிவர சொன்னால் வெட்டிவர தயாராக வளர்ந்து நிற்கிறார் விஜய். ஆனால் மகத்தோ வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டு, கண்ணில் படும் பெண்களை ரேப் செய்துக்கொண்டு, டோபு அடித்துக்கொண்டு வெளங்காவெட்டியாக உருவெடுக்கிறார்.

அரசியலில் விஜய்க்கு மோகன்லால் முக்கியத்துவம் கொடுப்பதை ஆரம்பத்திலிருந்தே மகத் விரும்பவில்லை. இளைஞரணித் தலைவர் பதவியை விஜய்க்கு தருவதை கடுமையாக எதிர்க்கிறார். ஆனாலும் மோகன்லால் விஜய்யைதான் அரசியலில் வளர்க்க விரும்புகிறார். ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்று அப்பா தன்னை வெறுப்பதாக கருதிக்கொள்ளும் மகத் , கடுப்பாகி ஹாஃப் ஹாஃபாக சரக்கடித்து, ஃபுல் போதையில், மோகன்லாலிடம் பணிபுரியும் பாஷா என்பவரின் மகளை கதறக் கதற...

இந்த அடாத செயலுக்காக மகத்தை தண்டிக்க வேண்டுமென்று விஜய் போர்க்கொடி தூக்குகிறார். விஜய்யை போட்டால்தான் தான் உயிரோடு இருக்க முடியுமென்று மகத் அவர் மீது கொலைமுயற்சியை நடத்துகிறார். விஜய் இதிலிருந்து தப்பிக்க, மிருகமாக மாறிவிட்ட மகத் என்ன செய்கிறோம் என்பது புரியாமல் பூர்ணிமாவின் மகளையும் (அதாவது விஜய்க்கு டைரக்ட், மகத்துக்கு இன்டைரக்ட் அக்காவை), அவரது கணவரையும்கூட போட்டுத் தள்ளிவிடுகிறார். அக்காவை இழந்த விஜய் எரிமலையாய் வெடிக்கிறார். தன்னுடைய மகளை கற்பழித்துக் கொன்ற மகத்தை ஒழிக்க வேண்டுமென்று விஜய்யோடு மோகன்லாலின் நம்பிக்கைக்குரிய சகாவான பாஷாவும் கரம் கோர்க்கிறார். மகத்தை போட்டுத் தள்ளுகிறார் விஜய்.

தூங்கிவிடாதீர்கள். ட்விஸ்ட் மிச்சமிருக்கிறது.

இதுவரை படத்தில் காட்டப்பட்டது மாதிரி மோகன்லால் அவ்வளவு பெரிய யோக்கிய கொண்டையெல்லாம் கிடையாது. தன் ரத்தத்தில் பிறந்த மகனான மகத்தை நன்றாக வாழவைக்க, விஜயை ஒரு பலியாடாகதான் வளர்த்துக் கொண்டிருந்தார். விஜய்யின் ஒரிஜினல் தந்தை அரசியல் கலவரத்தால் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டதும் பொய். அவரை கொன்றவரே மோகன்லால்தான் என்று பழைய கதைகளை தெரிந்த பாஷா சொல்கிறார்.

க்ளைமேக்ஸ்.

மோகன்லாலை பார்க்க வருகிறார் விஜய். இவரை எதிர்கொள்ள முடியாமல் கூசிப்போகும் மோகன்லால், “நல்லவன், கெட்டவன் பாகுபாடெல்லாம் உலகத்தில் இல்லை. இலட்சியங்களை அடைய அனைவரும் சிறு சிறு தவறுகளை செய்தவர்கள்தான்” என்று தன்னுடைய கடந்தகால தவறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டுகிறார். விஜய்யிடம் தன்னுடைய பழைய விஷயங்களை எல்லாம் போட்டு கொடுத்துவிட்ட பாஷாவை போட்டுத் தள்ளுமாறு ஆணையிடுகிறார். அதை மறுக்கும் விஜய், மோகன்லாலின் காலில் விழுந்து வணங்கி “யார் என்ன சொன்னாலும் நீ மட்டும்தான் என் அப்பா. என்னோட ஒரிஜினல் அப்பன் இப்போ உயிர்பிழைச்சி வந்தாலும் கூட, உன்னைதான் என் அப்பனா ஏத்துப்பேன். ஏன்னா நீ என்னை அப்படி வளர்த்திருக்கே” ரேஞ்சுக்கு எட்டு, பத்து நிமிஷத்துக்கு முழம் முழமாய் செண்டிமெண்டை கொட்டி வசனம் பேசுகிறார். அவரும், பாஷாவும் சில்லவுட்டாக தனியாக இருக்கும் மோகன்லாலை விட்டுக் கிளம்புகிறார்கள்.

இளைய தளபதியின் லாங் டயலாக்கை கேட்டு உலகத்தையே வெறுத்துவிட்ட மோகன்லால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சாகிறார்.

2007ல் ‘பிரஸ்தானம்’ என்கிற பெயரில் சாய்குமார், சர்வானந்த் நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் இது. தமிழில் இதுதான் ‘ஜில்லா’வாகிறது. பாலகிருஷ்ணாவின் ஆல்டைம் ப்ளாக்பஸ்டரான ‘சிம்மா’ ரிலீஸ் ஆன தேதியில் பிரஸ்தானமும் ரிலீஸ் ஆகித் தொலைத்ததால் படுதோல்வி அடைந்தது. வேறு தேதியில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் தோல்வி அடைந்திருக்கும். சாய்குமாரின் நடிப்பு மட்டும் நன்றாக பேசப்பட்டது. அவருக்கு அவ்வருடத்துக்கான ஃபிலிம்பேர், நந்தி விருதுகள் இப்படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. சில காலம் முன்பு இப்படம் ‘பதவி’ என்கிற பெயரில் டப் ஆகி தமிழிலும் ரிலீஸ் ஆனது. வந்த சுவடே யாருக்கும் தெரியவில்லை.

பின்னணி இப்படியிருக்க, ‘வேலாயுதம்’ ஷூட்டிங்கில் ஜெயம் ராஜாவின் உதவியாளராக இருந்த நேசன் சொன்ன மதுரைப் பின்னணி கதை ரொம்பவும் பிடித்துப்போய் ‘ஜில்லா’வில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டதாக கதையளக்கிறார்கள். தெலுங்கு ரீமேக் என்று சொல்லிக் கொள்வதற்கு என்ன தயக்கமென்று தெரியவில்லை. தெலுங்கில் ஹீரோவுக்கு ஜோடியில்லை. இதில் சேர்த்திருக்கிறார்கள் போல. நேசன் ஏற்கனவே ‘முருகா’ என்கிற படத்தையும் இயக்கியிருக்கிறார். விஜய்க்கு நல்ல ஸ்க்ரிப்ட் கேட்க தெரியவில்லை. தமிழில் விஜய் நடித்தால் ஷ்யூர் ஹிட் என்று சொல்லிக்கொள்ளக் கூடிய ஏராளமான படங்கள் சமீபமாகவே தெலுங்கில் வந்திருக்கின்றன. அப்படியிருக்கையில் அரதப்பழசான சப்ஜெக்ட்டுகளை ஏன்தான் குறிவைத்து தேர்ந்தெடுக்கிறாரோ தெரியவில்லை.

7 ஜனவரி, 2014

அன்புள்ள ஆசிப் அண்ணாச்சிக்கு...

அன்புள்ள ஆசிப் அண்ணாச்சிக்கு...

நலம் நலமறிய ஆவல்.

உங்கள் நெக்குருக்கும் கடிதம் வாசித்தேன். இரத்தக் கண்ணீரை அடக்கிக்கொண்டு படித்தேன். நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களை காட்டிலும் மிகச்சிறந்த கடிதமாக மதிப்பிடுகிறேன். அழிந்து வரும் கடிதக்கலையை நீங்களும், கலைஞரும்தான் காக்க வேண்டும்.

//வேடியப்பன் என்ற நண்பருக்காக உரக்கக் குரல் கொடுத்தாக வேண்டுமென்ற உனது எண்ணத்தைப் பாராட்டுகிறேன்//

உங்கள் பாராட்டுக்கு நன்றி. எனக்கு சென்ஷி எதிரியல்ல. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே பழக்கமான நண்பர்தான். ஒன்றாக லஞ்ச் சாப்பிட்டிருக்கிறோம். கட்டிப் பிடித்து அன்பை பரிமாறிக் கொண்டிருக்கிறோம். போலவே உங்களுக்கும் வேடியப்பன் எதிரியல்ல என்று கருதுகிறேன்.

இந்த consipiracy theory எல்லாம் இணையத்தின் பிலக்கா பயல்கள் செய்துக் கொள்ளட்டும். உங்களுக்கு ஏன் அண்ணாச்சி. நீங்கள் நினைப்பது மாதிரி வேடியப்பனுக்கு நான் நெருக்கமான நண்பர் எல்லாம் அல்ல. சென்னையில் இருக்கும் உங்கள் இதர நண்பர்களிடம் நீங்கள் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். வேடியப்பனுக்கு முன்பே எனக்கு அறிமுகமானவர் சென்ஷிதான்.

வளைகுடா நாடுகளில் வேலை செய்தார் என்பதற்காக வளைகுடா பதிவர்களும், விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் இருக்கிறார் என்பதற்காக அதன் தளபதிகளும், பண்புடன் குழுமத்தில் இருக்கிறார் என்பதற்காக அதன் உறுப்பினர்களும் கச்சை கட்டிக்கொண்டு வருவதைப் போன்ற எந்தப் பின்னணியும் இந்த விவகாரத்தில் கருத்து சொல்வதற்கு எனக்கில்லை.

மொத்தமாக கூட்டம் சேர்ந்து, அநியாயமாக அராஜகமாக ஒருவர் அடிக்கப்படுவதை எதிர்த்து, நடைமுறை யதார்த்த நியாயம் என்ன என்பதை மட்டும்தான் பேசியிருக்கிறேன்.

//கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகள்.. யார் யாரிடமோ யாசகம் பெற்று, ஒளி வருடி, செல் பேசியில் படமெடுத்து அனுப்பி அதனை வரியாக வரியாகத் தட்டச்சு செய்து என்று பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.. அதனால்தான் அந்த உழைப்பு சுரண்டப்படும்போது மயிர் பிளக்கும் விவாதத்திற்கு அது வழி வகுத்து விட்டது//

சென்ஷிக்கு இந்த வேலையை வேடியப்பனோ, எஸ்.ராமகிருஷ்ணனோ ‘அசைன்’ செய்து உழைப்பை சுரண்டியிருந்தால் நானும் உங்களோடு வந்து கொடிபிடிப்பதுதான் நியாயமான செயலாக இருக்கும்.

//பகிரல் நோக்கமில்லாமல் இருந்திருந்தால் சென்ஷி இணையத்தில் இதனைத் தொகுத்திருக்க அவசியமேயில்லை..//

இணையம் என்பது மின் ஊடகம். அச்சு ஊடகத்தோடு வேறுபட்டது. பகிரல்தான் நோக்கம் எனும்போது, அது அச்சுக்கு வரும்போது அதை எதிர்க்கவோ, கசமுசா செய்யவோ அவசியமில்லை என்பது என் தாழ்மையான கருத்து. அச்சில் வாசிக்கும் வாசகர்களும் பயனடைந்துவிட்டு போகட்டுமே. அதே நேரம் நான்கு வருடம் யாசகம் பெற்று, ஒளிவருடி, செல்பேசியில் படமெடுத்து, தட்டச்சியெல்லாம் தயார் செய்துவிட்டால் மட்டுமே ‘தொகுப்பாசிரியர்’ ஆகிவிட முடியாது என்கிற யதார்த்தத்தை எல்லாரும் உணரவேண்டும். தொகுப்புகளில் என்னென்ன இடம் பெற வேண்டும் என்று தீர்மானிக்கிறவர்தான் தொகுப்பாசிரியர் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல. உலகம் முழுக்க அதுதான் நடைமுறை.

// ஒரு பைத்தியக்காரன் மொத்த கதையையும் தொகுத்து இணையத்துல அதிகப் பிழையேதுமில்லாமல் சேர்த்து வச்சிருக்கான். அப்படியே ’லபக்’கிட்டா எவன் கேக்கப் போறான்னு தெரிஞ்சதும் அனுமதி கேட்டிருப்பாரா இருக்கும். ஏற்கெனவே 50 கதைகள் மின்நூலா கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் தொகுப்பாசிரியரும் சம்மதம் சொல்லியிருப்பாராக இருக்கும் //

நீங்களெல்லாம் இப்படி குற்றம் சாட்டுகிறீர்கள். சென்ஷி டைப்படித்த கதைகளை வேடியப்பன், Ctrl C + Ctrl V செய்துக்கொண்டார் என்று. தமிழ் இணையத்தில் மின்னல்வரிகள் பாலகணேஷ் என்றொருவர் பிரபலமானவர். டிசைனிங், டி.டி.பி. பணிகள் செய்கிறார். நிறைய பதிவர்களின் புத்தகங்களுக்கு ப்ரீப்ரொடக்‌ஷன் பணிகளை செய்துக் கொடுத்திருப்பவர். வேடியப்பன் கொண்டுவரும் தொகுப்புக்காக டைப்பிங் வேலை மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கிறது என்று அவர் சொல்கிறார். நானறிந்தவரை கணேஷ் பொய் சொல்லக்கூடிய நபர் அல்ல. இதற்கு என்ன சொல்கிறீர்கள்? கணேஷ் டைப் செய்துக்கொண்டிருப்பது வேறு ஏதோ எஸ்.ரா புத்தகம் எனப் போகிறீர்களா?

// அச்சிலேயே இல்லாத கதைகளைக் கூட பணம் கொடுத்து சென்ஷி வாங்கினான். நான் தான் அதை ஒன்றல்ல, இரண்டல்ல.. ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி வந்தேன் என்பதெல்லாம் உனக்குத் தெரியுமா? //

உண்மையிலேயே இப்படியான சூழல் இருப்பின், சென்ஷிக்கு இதுவரை இதற்காக ஆன செலவுகளுக்கு வேடியப்பனிடம் நிவாரணம் கேட்கலாம். தவறேயில்லை. இந்த விஷயத்தில் ஐ ஆல்சோ சப்போர்ட் சென்ஷி.

// நிச்சயம் அவர் படித்து தேர்வு செய்ததால்தான் சென்ஷி அதனைத் தொகுக்கவே தொடங்கினான். எனவே அந்த மரியாதை என்றுமே எஸ்.ராவுக்கு இருக்கும். ஆனால்.. அந்தக் கதைகளைத் தேடித் தொகுக்க நான்கரை ஆண்டுகள் உழைத்தவனுக்குண்டான அங்கீகாரத்தை ஒற்றை வரியில் நன்றி சொல்லி முடித்துக் கொள்வது முறையில்லை//

எஸ்.ரா படித்து தேர்வு செய்ததால்தான் அவர் தொகுப்பாசிரியர். இதுதான் என்னுடைய பாயிண்ட். சென்ஷிக்கு என்ன அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென்று எதிர்ப்பார்க்கிறீர்கள்? தொகுப்பாசிரியர் என்று அவரை டெக்னிக்கலாக சொல்லிக் கொள்ள முடியாது.

வேண்டுமென்றால் நம்முடைய ஈ-புக்கில் நாமே அப்படி போட்டுக்கொள்ள வேண்டியதுதான். யார் கேட்கப் போகிறார்கள். கதைகளை எழுதிய எழுத்தாளர்களிடம் கூட முறையான அனுமதி கேட்காமல்தானே நாலரை ஆண்டுகளாக உழைத்து சென்ஷி இணையத்தில் ஏற்றியிருக்கிறார்.

// ஒட்டுமொத்தமாக இப்படிச் சொல்வது ஏற்புடையதன்று. நியாயமாகப் பட்டதால் சென்ஷியை ஆதரிக்கிறார்கள் நீ எப்படி உன் தரப்பு நியாயத்துக்காக வேடியப்பனுக்காக வேட்டியை வரிந்து கட்டுகிறாயோ அதைப் போல..//

வேடியப்பனுக்காக வேட்டியை வரிந்து கட்டினேன் என்கிற உங்கள் அனுமானம் நியாயமானதல்ல. கடந்த ஞாயிறு அன்று எஸ்.ரா.வின் ‘நிமித்தம்’ நாவல் வெளியீடு நடந்தது. அந்த விழா முடிந்ததுமே ரஷ்ய கலாச்சார மையத்தின் வெளியே வைத்து ஒரு போலிஸ்காரன், திருடனை விசாரிப்பது மாதிரிதான் வேடியப்பனை விசாரித்தேன். “போடா மயிரு. நீ யாரு இதையெல்லாம் கேட்க” என்று வேடியப்பன் திருப்பிக் கேட்டிருந்தால் என்னால் ஒன்றும் செய்திருக்க முடியாது. மாறாக வேடியப்பன் இந்த நூலை கொண்டுவர என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று பொறுமையாக விளக்கினார். இது நடந்தது என்பதற்கு அங்கிருந்த இணைய நண்பர்கள் செ.சரவணக்குமார், விநாயகமுருகன், சிவராமன், ரமேஷ் போன்ற நண்பர்களே சாட்சி.

வேடியப்பனிடம் பேசியபோது அவர் சொன்னது. “புத்தகத்தில் சென்ஷிக்கு மட்டுமல்ல. எங்களுக்கு இந்த கதைகள் யாரிடமிருந்து, எங்கிருந்தெல்லாம் கிடைத்ததோ அத்தனை பேரின் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறோம்” என்றார்.

ஓக்கே, உங்கள் கடிதத்துக்கு இவ்வளவுதான் பதில். மீதி, பொதுவான நண்பர்களுக்காக.

ஒரு புத்தகம் தொகுப்பாக வருவதற்கு முன்பு பதிப்பாளர் என்னென்ன வேலையெல்லாம் செய்யவேண்டும் என்பது பொதுவான ஆட்களுக்கு தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

தொகுப்பு என்றால் அதில் இடம்பெறும் எழுத்தாளர்களிடம் அனுமதி பெறவேண்டும் என்பது முக்கியமான விதி. பி.டி.எஃப். என்பதால் அந்த விதியை சென்ஷி பின்பற்றவில்லையோ அல்லது சென்ஷிக்கு அது தெரியாதோ.. அதையெல்லாம் விட்டு விடுவோம். நாளைக்கு அவருக்கு இதனால் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், ‘ஐ சப்போர்ட் சென்ஷி’ என்பவர்கள் வெடிச்சத்தம் கேட்டதுமே பறக்கும் காக்காய்களாக பறந்துவிடுவார்கள். அல்லது சென்ஷியை குறிவைத்து குதறியெடுத்து விடுவார்கள். இணையத்தில் இதெல்லாம் சகஜம். நர்சிம் விஷயத்தில் எல்லாம் நாம் பார்க்காததா என்ன.

எழுத்தாளர் மாலனின் சிறுகதை ஒன்றும் இந்த தொகுப்பில் இடம்பெறுகிறது. இதற்காக வேடியப்பன் அவரிடம் தொலைபேசியில் பேசி அனுமதி வாங்கினார். வாங்கியதோடு இல்லாமல் ஒருமுறை நேரிலும் சந்தித்து ஒரு ஒப்புதல் கடிதமும் வாங்கிக் கொண்டார். கதை எழுதியவர்களுக்கு ராயல்டி தரமுடியாது. பதிலுக்கு புத்தகத்தின் ஒரு பிரதியை (விலை ரூ.650) கொடுத்துவிடுகிறேன் என்பது வேடியப்பனின் டீலிங்.

இதைப் போலவே ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களிடம் வேடியப்பன் அனுமதி வாங்க வேண்டியிருந்தது. லேசாக ஒரு வரியில் இதை கடந்து போய்விடலாம். அது எவ்வளவு பெரிய வேலையென்றால், நான்கு வருடம் யாசகம் பெற்று, ஒளிவருடி, செல்பேசியில் படமெடுத்து, தட்டச்சுவதை விட மிகப்பெரிய வேலை. பதிப்பகங்களுக்கும், நூல்களை தொகுத்தவர்களுக்கும்தான் இந்த வேலையை பற்றி தெரியும்.

நான் மேலே சொன்னது ஒரு தொகுப்பு உருவாகும் பெரிய பிராசஸிங்கில் இருக்கும் மிகச்சிறிய ஆரம்பக்கட்ட பணி. இதையடுத்து இன்னும் நிறைய பணிகள் இருக்கின்றன. அப்படியே டைப் செய்து இணையத்தில் ஏற்றுவது மாதிரி இது சுலபமான பணி அல்ல. ஏனெனில் இதில் நிறைய பணமும் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒருவரியில் சொன்னால் கொஞ்சமென்ன, நிறையவே ரிஸ்க்கான வேலைதான்.

பதிப்பாளரின் பணி மட்டுமல்ல. தொகுப்பாசிரியரின் பணியும் கடினம்தான். இணையத்தில் எழுதும்போது நூறு சிறந்த சிறுகதைகள் என்று ஜாலியாக லிஸ்ட் போட்டுவிடலாம். நாமெல்லாம் புது வருஷம் வந்ததுமே டாப் 10 தமிழ் மூவிஸ் என்று லிஸ்ட்டு போடுகிறோமே அதுபோல. ஆனால் ஒரு பட்டியல் முழுத்தொகுப்பாக புத்தகமாக வரும்போது, அந்த கதைகளை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று விலாவரியாக, விளக்கமாக ஜஸ்டிஃபை செய்ய வேண்டும். இந்த தேர்வுகளில் ஏதேனும் தவறு என்று இருந்தால் தொகுத்தவரின் டப்பாவை மற்ற இலக்கியவாதிகள் ஒன்று சேர்ந்து டேன்ஸ் ஆட வைத்து விடுவார்கள்.

ஆகவே தோழர்களே! என்னுடைய இறுதி கருத்துகள் இவைதான்.

என்னைக் கேட்டால் ‘ஈகோ’வை விட்டு விட்டு வேடியப்பன் ஒருமுறை சென்ஷிக்கு போன் செய்து பேசிவிடலாம். அல்லது எஸ்.ரா.வே கூட சென்ஷியிடம் பேசிவிடலாம். இதில் யாருக்கும் கவுரவக் குறைச்சல் ஏற்பட்டு விடாது.

தொகுப்பு வெளியான பிறகு, ஒருமுறை எஸ்.ரா. தலைமையில் சென்ஷிக்கு வேடியப்பன் பாராட்டுவிழா நடத்தலாம். அவ்வாறு ஒரு விழா நடந்தால்கூட இணையத்தில் ‘ஐ சப்போர்ட் சென்ஷி’ என்று tag போட்டு எழுதுபவர்கள் நேரில் வந்தெல்லாம் பாராட்ட மாட்டார்கள். அவர்களால் லைக்கும், கமெண்டும்தான் போடமுடியும். இவர்களை நம்பி தேவையில்லாமல் தோழர் சென்ஷி எதிலும் ஏடாகூடமாக ஈடுபட்டுவிட வேண்டாமென்று அனுபவஸ்தன் என்கிற அடிப்படையில் கேட்டுக் கொள்கிறேன். இப்படியே ஏத்திவிட்டு, ஏத்திவிட்டுதான் உடம்பை ரணகளமாக்கி அனுப்புவார்கள். அம்மாதிரி ரணகளமாக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது சென்ஷிக்கும் தெரியும்தானே?

6 ஜனவரி, 2014

குற்றம் : நடந்தது என்ன?

பைசாவுக்கும் பிரயோசனப்படாத குப்பை என்று தமிழ்நாட்டின் ஏழு கோடியே நாற்பத்தி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஏழாயிரம் பேர் கருதும் ஒரு விஷயத்தைதான் தமிழிணையத்திலும், தமிழிலக்கியத்திலும் உயிர்போகும் பிரச்சினையாக விவாதிப்பார்கள். லேட்டஸ்ட் விவாதம், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் தேர்வு செய்த தமிழின் சிறந்த நூறு கதைகள் பற்றி. தமிழ் வாசகர்களால் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய சிறுகதைகள் இவையென்று நூறு கதைகளின் பட்டியலை சில காலம் முன்பு எஸ்.ரா பட்டியலிட்டிருந்தார். இக்கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு தொகுப்பாக கொண்டுவந்தாலும் நன்றாக இருக்குமென்று அபிப்ராயப்பட்டிருந்தார்.
கமா
எஸ்ரா ‘தொகுத்த’ அப்பட்டியலை வாசித்த ஓர் தீவிர வாசகரான தோழர் சென்ஷிக்கு தீராத இலக்கியத்தாகம் ஏற்பட்டது. அதில் இருக்கும் நூறு கதைகளை வாசித்துவிட வேண்டுமென்று சபதம் எடுத்தார். இணையத்தில் கிடைத்தவை தவிர்த்து, மற்ற கதைகளை நிறைய பேரிடம் தேடி அடைந்தார். இந்த இலக்கியப் பயணத்தில் அவருக்கு வேறொரு எண்ணமும் ஏற்பட்டது. தாம் பெற்ற இன்பத்தை இந்த வையகமும் பெறட்டுமே என்று, தேடி வாசித்த சிறுகதைகளை இரவு பகல் பாராமல் தட்டச்சி ‘அழியாச்சுடர்கள்’ போன்ற இணையத்தளங்களில் பதிவேற்றினார். தன்னலம் கருதாத ஒப்பற்ற சேவை. சென்ஷி நிச்சயமாக பாராட்டுக்குரியவர்தான். ஒரு வகையில் பார்க்கப்போனால் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் தமிழுக்கு என்ன செய்தாரோ, அதைதான் சென்ஷியும் செய்திருக்கிறார்.
கமா
தோழர் வேடியப்பன் என்றொரு இளைஞர். பாரதிராஜா ஆகவேண்டும் என்று ஆர்வமாக சென்னைக்கு வந்தவர், சினிமா ஷோக்கில் சிக்கி சின்னாபின்னமாகிப் போனார். வாழ்க்கை அவருக்கு இன்னொரு இன்னிங்ஸ் கொடுத்தது. கே.கே.நகரில் டிஸ்கவரி புக் பேலஸ் என்று புத்தகக்கடை திறந்தார். கடுமையான உழைப்பினால் மிகக்குறுகிய காலத்திலேயே புத்தக விற்பனைத் துறையில் சொல்லிக் கொள்ளும்படியாக பெயர் பெற்றார். இலக்கிய ஆர்வலரான வேடியப்பனுக்கு தாம் வெறும் புத்தக விற்பனையோடு முடிந்துவிடக்கூடாது என்று எண்ணம். தன்னுடைய கடையில் அடிக்கடி இலக்கியக் கூட்டங்கள் நிகழ்த்துவார். எழுத்தாளர் – வாசகர் சந்திப்பு நடத்துவார். இவ்வகையிலான இலக்கிய நடவடிக்கைகளில் அவருக்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு ரோல்மாடல் ஆகிப்போனார்.
எஸ்ராவின் புத்தகம் எதையாவது தானே பதிப்பிக்க வேண்டுமென்று அவருக்கு ஆவல். ஆனால் எஸ்ராவோ ஏற்கனவே உயிர்மை உள்ளிட்ட நண்பர்களின் பதிப்பகங்களோடு டை-அப்பில் இருக்கிறார். எனவே எஸ்.ரா தொகுத்த நூறு சிறுகதைகளை புத்தகமாகக் கொண்டுவருவது என்று முடிவுசெய்து, அவரிடம் அனுமதி கேட்டார்.
எஸ்.ரா அனுமதித்ததுமே வேலையை தொடங்கினார். நாட்டுடைமை ஆக்கப்பட்ட எழுத்தாளர்களை தவிர்த்து, அப்பட்டியலில் மீதியிருக்கும் எழுத்தாளர்களின் நேர்ப்பேச்சிலும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் அனுமதிகளை பெற்றார். “அந்த கதையோட காப்பி வேணுமா, இல்லேன்னா என்னோட ஃபைலிங் காப்பி ஜெராக்ஸ் பண்ணி கொடுக்கட்டுமா?” என்று கேட்ட எழுத்தாளர்களிடம், “சில கதைகளை நெட்டுலே ஏத்தியிருக்காங்க சார், அதை எடுத்துக்கறேன்” என்று சொல்லியிருக்கிறார். புத்தகக்கடை வைத்திருப்பதால், நெட்டில் ஏற்றப்படாத கதைகளையும் சுலபமாக அவரால் தொகுக்க முடிந்திருக்கிறது.
கிட்டத்தட்ட ஆயிரத்து நூறு பக்கங்கள். எஸ்.ரா மொத்தமாக படித்து, தேவையான திருத்தங்களை செய்துக் கொடுத்திருக்கிறார். எல்லோருக்கும் சேரவேண்டும் என்கிற அக்கறையில் லாபத்தை குறைத்து அறுநூற்றி ஐம்பது ரூபாய் விலை வைத்திருக்கிறார். முன்பதிவு செய்பவர்களுக்கு நானூற்றி எண்பத்தி ஐந்து ரூபாய் என்று சலுகை விலை.
புத்தக வெளியீடு குறித்து விபரங்களை அவர் ஃபேஸ்புக்கில் போட ஆரம்பித்ததுமே, பிடித்தது சனியன். ஓர் எழுத்தாளரின் இணையத்தளத்தில் இந்த நூறு கதைகள் மொத்தமும் பி.டி.எஃப். தொகுப்பாக பதிவேற்றப்பட்டு, வேண்டுமென்பவர்கள் டவுன்லோடு செய்து படித்துக் கொள்ளுங்கள் என்கிற அறிவிப்போடு வந்தது.
டாட்
இந்த விவகாரம்தான் இப்போது கூகிள் ப்ளஸ் மற்றும் ஃபேஸ்புக் இணையத்தளங்களில் மயிர்பிளக்கும் விவாதமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. இணையம் என்கிற மூடர்கூடத்தில் நானும் ஒரு கேரக்டர் என்பதால், இது தொடர்பான என்னுடைய கருத்துகள் :
  • அறிவுப் பகிரல் நல்ல விஷயம்தான். ஆனால் அதை வீம்புக்கு செய்யக்கூடாது. முழுத்தொகுப்பு புத்தகமாக வரும்போது, அதற்கு சரியாக பத்து நாட்களுக்கு முன்பாக பி.டி.எஃப். தொகுப்பை பதிவேற்றுவது என்பது நாகரிகமானவர்கள் செய்யக்கூடிய செயல் அல்ல.
  • பகிரல்தான் சென்ஷியின் நோக்கமென்றால், தன்னுடைய ஆர்வத்தை அச்சுக்கு கொண்டுவரும் வேடியப்பனின் செயல் குறித்து மகிழ்ச்சிதான் அடைந்திருக்க வேண்டும். விஷயம் தெரிந்ததும் வேடியப்பனுக்கு வேண்டிய உதவிகளை தாமாகவே முன்வந்து செய்திருப்பாரேயானால், அவரைவிட மனிதருள் மாணிக்கம் வேறு யாரும் இருக்க முடியாது.
  • இதற்கு ஃபேஸ்புக்கில் வேடியப்பன் அப்படியொரு எதிர்வினையை ஆற்றியிருக்க வேண்டியதில்லை.
  • ஓயாமல் தேடித்தேடி உழைத்த சென்ஷிக்கு நன்றி சொல்லவில்லை என்பதால் இந்த திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. ஆனால் தொகுப்பில் சென்ஷிக்கு நன்றி சொல்லப்பட்டிருக்கிறது என்றதுமே அடுத்த பிரம்மாஸ்திரத்தை எடுத்தார்கள்.
  • தொகுப்பாசிரியர் என்கிற இடத்தில் சென்ஷியின் பெயர் இடம்பெற வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்கள். இதுபோன்ற புத்தகத் தொகுப்புகளில் மட்டும் அல்ல அய்யா. எல்லா வேலைகளிலுமே ‘சிண்டிகேட்’ செய்பவர்தான் லீடர். உங்கள் லாஜிக்படி பார்த்தால், இதுவரை தமிழில் வந்த தொகுப்புகள் அனைத்திலுமே தொகுப்பாசிரியர் என்கிற இடத்தில் டி.டி.பி. செய்தவர்களின் பெயர்தான் இருந்திருக்க வேண்டும். ஒரு பத்திரிகை ஆசிரியர் என்ன, பத்திரிகையின் எல்லா பக்கத்தையும் அவரேவா எழுதி, தட்டச்சிடுகிறார். தன் பத்திரிகையில் என்னென்ன வரவேண்டும் என்று தீர்மானிப்பதால்தான் அவர் ஆசிரியர்.
  • சென்ஷியின் உழைப்புதான் பிரதானமானது என்று ஏற்கனவே இலக்கியத்தில் பழம் தின்று கொட்டையை சப்பியவர்கள்கூட போகிறபோக்கில் கமெண்ட் போட்டுவிட்டு செல்வது அதிர்ச்சியளிக்கிறது. நூறு கதைகளை சுட்டிக்காட்ட எஸ்.ரா எத்தனை ஆயிரம் கதைகளை படித்திருக்க வேண்டும்? அந்த உழைப்புக்காகதான் அவர் தொகுப்பாசிரியர்.
  • என்னைப் பொறுத்தவரை தேடித்தேடி தட்டச்சி இணையத்தில் பகிர்ந்துக் கொண்டவர் என்பதால் சென்ஷிக்கு டிஸ்கவரி புக் பேலஸில், எஸ்.ரா தலைமையில் பாராட்டுவிழா கூட வேடியப்பன் நடத்தலாம்.
  • அடுத்து பர்மிஷன், ராயல்டி என்றெல்லாம் பரவலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதன்படி பார்த்தால் போதிய அனுமதி பெறாமல் தட்டச்சி இணையத்தில் ஏற்றியதுதான் குற்றமே தவிர, ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக அனுமதி பெற்று அச்சுத் தொகுப்பு ஆக்குவது குற்றமல்ல. வேடியப்பனிடம் பேசியபோது, இத்தொகுப்புக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ராயல்டி வழங்கப்போவதாக சொன்னார்.
  • “இனி டிஸ்கவரியில் புத்தகம் வாங்க மாட்டோம், எஸ்.ராமகிருஷ்ணனின் எந்த எழுத்தையும் படிக்க மாட்டோம்” என்று அடுத்தடுத்து சிலர் இணையத்தில் சபதம் எடுத்துக் கொள்வதாகவும் கேள்விப்பட்டோம். சைவ உணவுப்பழக்கம் கொண்டவர்களான மயிலாப்பூர் பார்ப்பனர்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து இனி வேலு மிலிட்டரியிலோ, சாம்கோவிலோ பிரியாணி வாங்கமாட்டோம் என்று சபதம் எடுத்துக்கொண்டால் அது எவ்வளவு பெரிய காமெடியோ, அதற்கு இணையான காமெடிதான் இதுவும்.
  • கல்யாண வீட்டுலே மாப்பிள்ளையா இருக்கணும் அல்லது சாவு வீட்டிலே பொணமா இருக்கணும் மற்றும் கும்பலோடு கோயிந்தா போன்ற இணையக் கலாச்சார பண்பாட்டு செயல்பாடுகளில் ஒன்றாகதான் இந்த சர்ச்சையையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • நாமெல்லாம் டைம் பாஸுக்கு கமெண்டும், லைக்கும் போட்டுக் கொண்டிருக்கிறோம். வேடியப்பனுக்கு இது பொழைப்பு. சில லட்சங்களை இந்த புத்தகத்துக்காக முதலீடு செய்திருக்கிறார். நம்முடைய எண்டெர்டெயின்மெண்டுக்காக அவரது வாழ்க்கையோடு விளையாட வேண்டுமா?

‘நாவல்’பழ சீசன்

மீண்டும் நாவல்களின் காலம். சென்னை புத்தகக் காட்சியின் புண்ணியத்தால் மார்கழி என்பது இனி இசைக்கான மாதம் மட்டுமல்ல. இலக்கியத்துக்கான மாதமும் கூட. புத்தக வெளியீடு, விமர்சனக் கூட்டங்கள், வாசகர் சந்திப்பு என்று சென்னை அமளிதுமளிப்படுகிறது. இவ்வாண்டு புதிய எழுத்தாளர்களின் வருகை, பெரிய எழுத்தாளர்களின் சாதனை என்று இலக்கியம், இஞ்சி கடித்தாற்போல சுறுசுறுப்பாகியிருக்கிறது.

பின்வருவது இவ்வருடத்துக்கான நாவல்கள் குறித்த முழுமையான தொகுப்பு அல்ல. வானத்தில் வட்டமிடும் ஏராளமான கழுகுகளை விட்டு விலகி, ரொம்ப உயரத்துக்கு பறக்க பயந்துக்கொண்டு தனியே பறக்கும் ஒரே ஒரு கழுகின் குறுகிய பார்வை.

ஜெயமோகன் ராசியான கை. வெள்ளை யானை மூலமாக பிள்ளையார் சுழி போட்டார். அதிகாரப்பூர்வமான புத்தக வெளியீட்டுக்கு முன்பாகவே ஐநூறுக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்று அபார சாதனை புரிந்திருக்கிறது. மற்றவர்களின் போற்றுதலும், தூற்றுதலும் ஜெயமோகனுக்கு புதிதல்ல. வெள்ளை யானையை முடித்த கையோடு என் பணி, பணி செய்து கிடப்பதே என்று அடுத்த அசுர சாதனைக்கு தயாராகி விட்டார். உலக இலக்கிய வரலாற்றிலேயே முதன்முறையாக அடுத்த பத்தாண்டுகளுக்கு தினமும் தன்னை ‘கமிட்’ செய்துக்கொண்ட முதல் எழுத்தாளர் ஜெயமோகன்தான். வருடத்துக்கு ஒன்று என்கிற கணக்கில் பத்து பாகங்களில் (சராசரியாக ஐநூறு பக்கங்கள்) மகாபாரதத்தை தினமும் ஒரு அத்தியாயமாக எழுதத் தொடங்கிவிட்டார். ஐம்பத்தி இரண்டு வயதில் இப்படியொரு இமாலயப் பணியை ‘ஜஸ்ட் லைக் தட்’டாக தொடங்கும் தைரியம் வேறு யாருக்குமில்லை. எழுத்துதான் இலட்சியம், வாழ்க்கை, பயணம், புடலங்காய் என்று பேசுபவர்கள் மானசீகமாக அவரது காலில் விழுந்து வணங்க வேண்டும். ஜெயமோகன் ஓர் எழுத்து எந்திரன்.

புதிய எழுத்தாளர்களின் வருகை ஓர் அலையாக கிளம்பியிருக்கிறது. தான் பாட்டுக்கு இந்த அலையை ஏற்படுத்திவிட்டு, தினமும் நைட்ஷோ படம் பார்க்கும் மசாலா எண்டெர்டெயினராக மேடை மேடையாக ஏறிக்கொண்டிருக்கிறார் மனுஷ்யபுத்திரன். இவ்வாண்டின் குறிப்பிடத்தக்க அறிமுக எழுத்தாளராக விநாயக முருகனை அறிமுகம் செய்திருக்கிறார். ‘ராஜீவ்காந்தி சாலை’ வெளிவருவதற்கு முன்பாகவே சாருவின் கடுமையான விமர்சனம், அந்நாவலின் விற்பனையை சுடச்சுட மிளகாய் பஜ்ஜி டீக்கடையில் விற்பதைப் போல சூடாக்கியிருக்கிறது. நொடிக்கு நொடி குவியும் ஆன்லைன் ஆர்டர்களும், நேரில் வந்து ஆவலாக கேட்கும் வாசகர்களுக்கும் பதில் சொல்லி விற்பனையாளர்களால் மாளமுடியவில்லை. பிளாக் டிக்கெட் மாதிரி நாவல் இன்னமும் ரெண்டு மூன்று மடங்கு எக்ஸ்ட்ரா ரேட்டுக்கு விற்கப்படாதது ஒன்றுதான் நடக்கவில்லை. “எப்பவுமே பிரெஸ்ஸில் ராஜீவ்காந்தி சாலையையே ஓட்டிக்கிட்டிருந்தா, மத்த புக்குங்களை நான் எப்போதான் பிரிண்ட் பண்ணுறது?” என்று சந்தோஷமாக அலுத்துக் கொள்கிறார் பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன். வழக்கம்போலவே இணையத்தில் புழங்குபவர்கள் நாவலை படிக்காமலேயே நக்கல் அடித்துக் கொண்டிருந்தாலும், ‘ஒரிஜினல்’ வாசகர்கள் ரா.கா.சாலையை கொண்டாட தொடங்கிவிட்டார்கள்.

இருபது ஆண்டுகளாக பல்வேறு பத்திரிகைகளில் நூற்றுக்கணக்கில் கதைகள் எழுதியிருந்தாலும், கே.என்.சிவராமன் ஒரு முழுநீளத் தொடரை முதன்முதலாக கடந்த ஆண்டுதான் ‘குங்குமம்’ இதழில் ‘கர்ணனின் கவசமாக’ எழுதி முடித்தார். தொடர் முடிந்த கையோடே அவர்களது இன்-ஹவுஸ் பதிப்பகமான சூரியன் பதிப்பகம் நாவலாக வெளியிட்டுவிட, விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது கர்ணனின் கவசம். இந்திரா சவுந்தரராஜனின் கதைக்கருவை சுஜாதா எழுதினால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது இந்நாவல். ‘சயன்டிஃபிக் த்ரில்லர்’ என்கிற புதிய ஜானரை தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் சிவராமன். பரபரவென ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வேகத்தில் நகரும் கதை, புதிய தலைமுறை வாசகர்களை பரவலாக ஈர்த்திருக்கிறது.

ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ்களாக எழுதப்பட்டு பல்லாயிரக்கணக்கில் லைக்குகளையும், பலநூறுக் கணக்கில் கமெண்டுகளையும் பெற்ற அராத்துவின் ‘தற்கொலை குறுங்கதைகள்’ நாவலாக வெளிவந்திருக்கிறது. இதற்கும் புண்ணியம் கட்டிக்கொண்டது மனுஷ்யபுத்திரனின் உயிர்மை பதிப்பகம். ராஜீவ்காந்தி சாலையை எந்தளவுக்கு எதிர்த்தாரோ, அதே தீவிரத்தன்மையோடு இந்நாவலை ஆதரித்தார் சாரு. “இந்த வருடம் என்னுடைய நூல் எதுவும் வெளியிடப்படவில்லை. எனவே அராத்துவின் நூலை என்னுடைய நூலாக, என் வாசகர்கள் எடுத்துக் கொள்ளலாம்” எனுமளவுக்கு அவரது பெருந்தன்மை அமைந்தது. ஆனால் இதை என்னால் நாவலாக வாசிக்க முடியவில்லை. சிறுகதை நூல் என்றோ, ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களின் தொகுப்பு என்றோ வந்திருந்தால் இந்த நெருடல் கிடைத்திருக்காது. ஃபேஸ்புக்கில் வந்தபோது பெருமளவு ரசித்த நம்மால், முழுமையாக ஒரே தம்மில் வாசிக்கும்போது நிறைய இடங்கள் ரிபீட் ஆகி, எக்கோ அடித்துக் கொண்டிருப்பதான உணர்வு. முன்னுரையில் digimodernism என்றெல்லாம் முப்பது பக்கத்துக்கு சாரு ஜல்லியடித்திருந்தாலும், அவரே பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ‘ஸீரோ டிகிரி’யின் இன்னோவேட்டிவ் ஃபார்மேட்டை அடித்துக்கொள்ள இன்னும் எவரும் பிறக்கவில்லை. இதையெல்லாம் மீறியும் ‘தற்கொலை குறுங்கதைகள்’ லைட் ரீடிங்குக்கான முக்கியமான ஆக்கம். பெட்ரூமில் காதலி ஃபேஸ்புக்கை நோண்டிக் கொண்டிருக்க, அவளோடு ஃபோர்ப்ளே செய்துக் கொண்டே, கட்டிங் போதையில், மாணிக்சந்தை குதப்பிக்கொண்டு, கையில் சிகரெட் புகைய ஒரு பேரிலக்கியத்தை வாசிக்கும் கிறுகிறுப்பை, போதையை த.கு கொடுக்கிறது. போலவே சாம்நாதனின் ‘களவு, காதல், காமம்’. அட்டகாசமாக வரவேண்டிய நாவலை அவசர அடியாக முடித்திருக்கிறார். ஆனால் எழுத்துநடையில் கவனிக்கப்பட வேண்டியவர். அடுத்து பொறுமையாக ஒரு முழுமையான நாவலை எழுதக்கூடும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். இவர்கள் இருவருமே சாரு வாசகர் வட்டத்தில் இருந்து இவ்வருடம் உருவான எழுத்தாளர்கள். தன் வாசகர்களையும் எழுத்தாளர்களாக வளர்த்தெடுக்கும் விதத்திலும் சாருவே தமிழிலக்கியத்துக்கு முன்னோடியாக திகழ்கிறார்.

காலச்சுவடின் நாவல்களை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. தரமான உள்ளடக்கம் என்று அவர்களின் ஆசிரியர் குழு சான்று தரும் நூல்களை மட்டுமே வெளியிடுவார்கள். இந்த சீஸனில் அவர்களது பங்கு ஆறு நாவல்கள். யுவன் சந்திரசேகரின் நினைவுதிர் காலம், பெருமாள் முருகனின் பூக்குழி, சுகுமாரனின் வெல்லிங்டன் மூன்றும் முக்கியமானவை. மற்ற மூன்று நூல்கள் குறித்து விமர்சனங்கள் வந்தபிறகு கண்டுகொள்ளலாம் என்றிருக்கிறேன். ‘கொல்வதெழுதல்’, ’உம்மத்’, ‘அஜ்னபி’ என்று தலைப்புகளே டெர்ரராக இருக்கின்றன. உலகப் புகழ்பெற்ற ஊட்டி தமிழகத்தின் பிரபலமான சுற்றுலாத்தளம். இந்த ஊரை அறியாத தமிழனே இல்லையென்றாலும், தமிழிலக்கியத்தில் அவ்வளவாக பதிவாகாத ஊர் எனும் அடிப்படையில், ஊட்டியை களமாக கொண்டு எழுதப்பட்ட நாவல் என்பதால் ‘வெல்லிங்டன்’ முக்கியத்துவம் பெறுகிறது. கிட்டத்தட்ட அறுபது வயதை நெருங்கும் சுகுமாரன், இதுவரை கவிதைகள் மற்றும் அவரது மொழிப்பெயர்ப்புகள் வழியாகவே அறியப்பட்டிருக்கிறார். நீண்டகால பத்திரிகையுலக அனுபவமும் கொண்ட சுகுமாரனின் முதல் நாவல் இது.

பொன்னுலகம் வெளியிட்டிருக்கும் ‘தறியுடன்’ குறிப்பிடத்தகுந்த இன்னொரு முக்கியமான நாவல். நக்ஸல்பாரி தோழர்களின் வாழ்க்கைப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு தமிழிலக்கியத்தில் போதுமான தரவுகள் எதுவுமில்லை. பாரதிநாதன் எழுதியிருக்கும் தறியுடன் அந்த குறையைப் போக்கியிருக்கிறது. தலையணை சைஸ் நாவல்தான். விலை ரூ.650 என்று நினைக்கிறேன். தமிழக அரசின் – காவல்துறையின் தடை மாதிரி சர்ச்சைகள் ஏதுமில்லையென்றால், தறியடி புத்தகக்காட்சியில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்.

உயிர்மை வெளியீட்டில் எஸ்.செந்தில்குமார் எழுதியிருக்கும் ‘காலகண்டம்’ இன்னுமொரு முக்கியமான நாவலாக படுகிறது. பொற்கொல்லர்களின் வாழ்க்கையை களமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். அதிகம் பேசப்படாத மனிதர்களை, இடங்களை, தொழில்களை குறித்த நாவல்கள் வர ஆரம்பித்திருப்பது, நாவல்களுக்கு பரவலான இடத்தை வாசகர்களிடம் பெற்றுத்தரும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

முந்தைய ஆண்டுகளில் தொடர்ச்சியாக வெட்டுப்புலி, ஆண்பால் பெண்பால், வனசாட்சி என்று ஹாட்ரிக் ஹிட் அடித்த தமிழ்மகனின் நாவல் எதுவும் இந்த வருடம் வரவில்லை என்பது ஏமாற்றமே. வாசகர்களிடையோ, விமர்சகர்களிடையோ பெரிய பரபரப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் ‘கால்கள்’ தமிழின் தனித்துவமான நாவல். உடனடியாக இன்னொரு நாவலை ஆர்.அபிலாஷ் எழுதியிருக்க வேண்டும். தரமான உரைநடையாளரான அவரும் திரும்ப கவிதைக்கு திரும்பிவிட்டது நமக்கு இழப்புதான்.

சந்தேகமேயில்லாமல் இந்த வருஷத்தின் ஹீரோ எஸ்.ராமகிருஷ்ணன்தான். தன்னுடைய வழக்கமான ஏரியாவான அகச்சிக்கல், உளவிசாரணையை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு, ஃப்ரெஷ்ஷான ஐடியாவோடு ‘நிமித்தம்’ மூலம் களமிறங்கியிருக்கிறார். உயிர்மை வெளியீடு. நாற்பத்தியேழு வயதான தேவராஜுக்கு பகுதிநேரமாக காது கேட்காது. குடும்பத்திலும், சமூகத்திலும் உதவாக்கரையாக முத்திரை குத்தப்படும் அப்பாவி. அப்படி, இப்படியென்று அலைக்கழிக்கப்பட்டு நாற்பத்தேழு வயதில்தான் அவனுக்கு திருமணம் ஆகிறது. வாழ்வில் தன்னை கடந்துச் சென்ற, தனக்கு முக்கியமானவர்களாக பட்ட அனைவருக்கும் திருமணத்துக்கு ‘அழைப்பிதழ்’ வைக்கிறான். யார், யாரெல்லாம் வருவார்கள் என்று ஆவலோடு வழிமேல் விழிவைத்து அவன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் திருமணத்துக்கு முந்தைய நாள் இரவுதான் நிமித்தத்தின் மொத்த கதையும். இந்நூலை அறிமுகப்படுத்தி பேசும்போது மனுஷ்யபுத்திரன் லேசாக தழுதழுத்ததாக பட்டது. இவ்வாறாக முன்னெப்போதும் அவர் உணர்ச்சிவசப்பட்டதாக நினைவில்லை. இது தேவராஜின் கதை மட்டுமல்ல. நாற்பத்தேழு ஆண்டுகளாக தேவராஜை சுற்றி நடந்த விஷயங்களின் கதை. மொழிப்போர், எமர்ஜென்ஸி, ஈழம், மண்டல் கமிஷனென்று தேவராஜ் நிமித்தம் இந்த வரலாற்றையே கேப்ஸ்யூலாக்கி தந்திருக்கிறார் எஸ்ரா. நிமித்த நாயகன் தேவராஜைப் போலவே, எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் வயது நாற்பத்தியேழுதான். இது யதேச்சையாக அமைந்ததா அல்லது குறிப்பாக நாற்பத்தியேழுதான் வேண்டுமென்று எழுதினாரா என்று தெரியவில்லை. பரபரப்பான விற்பனை மட்டுமல்ல, ஏராளமான விருதுகளையும் வாங்க இரண்டு கைகளையும் எஸ்.ராமகிருஷ்ணன் தயாராக வைத்திருக்க வேண்டும்.

3 ஜனவரி, 2014

உய்யாலா ஜம்பாலா

டோலிவுட்டுக்கு இது பொற்காலம். அவர்கள் எதை எடுத்தாலும் ஒர்க்கவுட் ஆகிவிடுகிறது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘சீத்தம்மா வாக்கிட்லோ சிறிமல்லி செட்டு’ என்கிற கிராமத்துப் பின்னணியை கொண்ட ப்ளாக் பஸ்டரில் துவங்கிய பயணம், அதே வில்லேஜ் ஜானரில் வெளிவந்திருக்கும் ‘உய்யாலா ஜம்பாலா’வின் சூப்பர்ஹிட்டில் முடிந்திருக்கிறது.

ஒரு காலத்தில் இளையராஜாக்களும், பாரதிராஜாக்களும் கொடிகட்டிப் பறந்த ஏரியா. இன்றோ தமிழில் பருத்திவீரன்களும், சுப்பிரமணியபுரங்களும், மதயானைக்கூட்டங்களும்தான் கிராமம் என்றாகிவிட்டது.

உய்யாலா ஜம்பாலாவின் ஒருவரி ரொம்ப பழசு. ‘ஒரு ஊரிலே அழகான ஒரு பையன், அவனுக்கு சூப்பரா ஒரு மாமா பொண்ணு’. அவ்ளோதான். உங்களுக்கு மாமாப்பொண்ணு இருந்திருந்தால் இந்த ஒன்லைனரின் கவர்ச்சியை உணர்ந்துகொள்ள முடியும் (நயன்தாரா ரேஞ்சுக்கு ஒரு மாமாப்பொண்ணு எனக்கு வாய்த்தும் ஜஸ்ட் மிஸ்). பரபரவென த்ரில்லருக்கு நிகரான பரபரப்பில் இந்த லைனை திரைக்கதை அமைத்திருப்பதில்தான் வெற்றி கண்டிருக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பத்தில் வரும் மாண்டேஜ் காட்சிகள் அநியாயத்துக்கு கலக்கல். பிறந்ததிலிருந்தே அழுதுக் கொண்டிருக்கும் ஒரு குழந்தை, அவனுக்கு மாமன் மகள் பிறந்தபிறகு – அதை அடிக்கடி விளையாட்டுக்கு சீண்டி – சிரிக்க ஆரம்பிக்கிறான். வளர்ந்ததும் கூட இருவரும் கீரியும் பாம்பும்தான். அவளை வெறுப்பேற்றுவதற்காகவே வேறு ஒரு பெண்ணோடு நெருக்கமாக இருக்குமாறு இவன் பழிப்பு காட்டுகிறான். அவளோ இவனை வெறுப்பேற்ற, ஒரு டுபாக்கூரை காதலிக்கவே தொடங்கி விடுகிறாள். கதையை கேட்க கொஞ்சம் சீரியஸாக இருந்தாலும் காட்சிக்கு காட்சி சிரிப்பு வெடிதான். அத்தை பையனும், மாமன் பொண்ணும் எப்படி இணைந்தார்கள் என்பதுதான் க்ளைமேக்ஸ் என்பது போகோ டிவி பார்க்கும் குழந்தைக்கு கூட தெரிந்திருக்கும்.

படத்தில் காட்டும் கிராமத்தின் சித்தரிப்பு ரொம்ப முக்கியமானது. பொதுவாக தெலுங்கு கிராமங்களில் வேட்டியை ஒரு மாதிரி கீப்பாச்சி மாதிரி கட்டிக்கொண்டு அலையும் பெருசுகள், எப்பவுமே கோழி அடித்து குழம்பு வைக்கும் பெண்கள், தாராளமாக மாராப்பை காட்டிக்கொண்டு அலையும் ஹீரோயின், டூயட்டில் கூட கத்தியும் ரத்தமுமாகவே காணப்படும் ஹீரோவென்று இல்லாமல் சமகால கிராமத்தை எந்த சினிமாத்தனமும் இல்லாமல் சித்தரிக்க இயக்குனர் ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார்.

முழுக்க புதுமுகங்கள் இடம்பெற்று இவர்கள் பெற்றிருக்கும் வெற்றி, பஞ்ச் அடித்தே காலம் தள்ளும் சூப்பர் ஸ்டார்களை அசைத்துப் பார்க்கும் என்பது உறுதி. சினிமாவில் content is the king என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது உய்யாலா ஜம்பாலா.

ஹீரோவாக நடித்திருக்கும் ராஜ் தருண், ஒரு என்ஜினியரிங் மாணவர். இருபத்தோரு வயதாகிறது. டைரக்டர் ஆகவேண்டும் என்பது லட்சியம். ஐம்பதுக்கும் மேற்பட்ட குறும்படங்களில் பங்கேற்றிருக்கிறார். தயாரிப்பாளரிடம் கதை சொல்ல போனபோது, எங்களுக்கு டைரக்டர் எல்லாம் இருக்காங்க. நீ வேணும்னா படத்துலே நடி என்றிருக்கிறார். நடிப்பில் ஆர்வம் இல்லை, டைரக்‌ஷன்தான் லட்சியம் என்று இவர் மறுத்ததுமே, சரி எங்க படத்திலே அசிஸ்டெண்டா வேலை பாரு என்று சொல்லியிருக்கிறார்கள். யாருக்கோ நடிப்பு சொல்லித்தர சொல்லி சில சீன்களை இவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். உண்மையில் அது இவர் நடிக்க வேண்டிய சீன்கள். அசிஸ்டெண்ட் டைரக்டர் என்று அல்வா கொடுத்து, கதற கதற இவரையே ஹீரோவாக்கி விட்டார்கள். நடித்தது மட்டுமின்றி திரைக்கதை, வசனம், இயக்கம் என்று இப்படத்தில் எல்லா துறைகளிலும் வேலை பார்த்திருக்கிறார் ராஜ் தருண்.

ஹீரோயின் அவிகாவுக்கு பதினாறு வயது. இந்தியில் டிவி நிகழ்ச்சிகளில் குழந்தை நட்சத்திரமாக சக்கைப்போடு போட்டவர். தகுந்த வயசு வந்ததும் திரைத்துறை வாய்ப்புகளுக்கு கதவைத் தட்டியிருக்கிறார். கிடைத்ததெல்லாம் துண்டு துக்கடா வேடம்தான். லோபட்ஜெட் படத்துக்கு மினிமம் சம்பளத்தில் ஹீரோயின் தேவை என்பதால் இவரை ஒப்பந்தம் செய்தார்கள். ஆஸ்கருக்கு தகுதி பெறுமளவுக்கு பின்னி பெடல் எடுத்துவிட்டார். க்ளாமர் அப்பீலே சுத்தமாக இல்லை. ஆனால் ஒவ்வொரு இளைஞனும் கல்யாணம் செய்துக்கொண்டால் இப்படியான ‘லட்சணமான’ பெண்ணைதான் செய்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்குமளவுக்கு ட்ரீம் கேர்ள். கீழ்நெற்றியில் பிளவுபடாமல் ஒட்டிய புருவங்கள் முகத்துக்கு கூடுதல் பொலிவு.

தமிழில் தனுஷ், நஸ்ரியாவை வைத்து படமெடுத்தால் ப்ளாக் பஸ்டர் உறுதி. ஆனால் ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் தயாரிப்பாளர் கொட்டியழ வேண்டிய சம்பளத்தால், படம் ஐநூறு நாள் ஓடினாலும் லாபம் நிற்காது. முன்பெல்லாம் சப்ஜெக்ட்டுக்கும், தயாரிப்பாளருக்கும் ஏற்றமாதிரி நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் சம்பளம் அட்ஜஸ்ட் செய்துக்கொண்டு நடிப்பார்கள் என்பார்கள். இப்போதெல்லாம் வரிசையாக நாலு ப்ளாப் படம் கொடுத்த ஹீரோ கூட, புதியதாக ஒப்பந்தம் ஆகும் படத்துக்கு முந்தையப் படத்தை விட செம பர்சண்டேஜ் சம்பளம் ஏற்றிவிடுகிறார்.

நான்ஸ்டாப் எண்டெர்டெயின்மெண்டுக்கு தயாராக இருப்பவர்கள் ‘உய்யாலா ஜம்பாலா’வை மிஸ் செய்துவிட வேண்டாம். ஏனெனில் இது தெலுங்கு சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் மூவியும் கூட.