30 ஆகஸ்ட், 2012

பிரா விற்பனையாளனின் காதல்


பர்ஹாத் ஓர் எலிஜிபிள் பேச்சுலர். அம்மா கோண்டு. பார்ஸி சமுதாயத்தைச் சேர்ந்த அவனுக்கு கல்யாணம் தள்ளிக்கொண்டே போகிறது. காரணம் அவனது வேலை. மும்பையில் பெண்கள் உள்ளாடை விற்கும் பெரிய கடை ஒன்றில் விற்பனையாளனாக பணிபுரிகிறான். பெண் பார்க்கச் செல்லும் இடங்களில் எல்லாம் ‘பிரா, ஜட்டி விற்பவன்’ என்கிற இவனது பணியை கிண்டல் செய்கிறார்கள். பர்ஹாத்துக்கு தன் பணி மீது உயர்ந்த அபிப்ராயம் இருக்கிறது. உள்ளாடை பயன்படுத்தாத பெண்ணே இல்லை என்கிறபோது, அதை விற்பது எவ்வளவு கவுரவமான பணி என்கிறான். ஒரு பெண்ணை பார்த்ததுமே அவளது ‘சைஸ்’ என்ன என்பதை அளக்காமலேயே ‘பளிச்’சென்று சொல்லக்கூடிய நிபுணத்துவத்தைப் பெற்ற ‘கில்லி’ அவன். ‘அண்டர் வேர்ல்ட்’ என்கிற பெயரில் பெண்களுக்கான பிரத்யேக உள்ளாடை வணிகவளாகத்தை உருவாக்குவது அவனது கனவு. பையனுக்கு கல்யாணம் ஆகி பேரக்குழந்தைகளை பார்க்க முடியவில்லையே என்று அவனது அம்மாவுக்கும், அம்மாவின் அம்மாவுக்கும் ஆதங்கம்.

கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு காலை வேளை. தான் பணிபுரியும் கடையில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் பொம்மைக்கு (பெண் பொம்மை) ஜட்டியும், பிராவும் மாட்டிவிட்டுக் கொண்டிருக்கிறான். கடைக்கு வெளியே ஒரு தேவதை கொஞ்சம் வெட்கமாகவும், கொஞ்சம் அருவருப்போடும், கொஞ்சம் காமெடியாகவும் இவனைப் பார்க்கிறாள். அவள் ஷெரீன். தன்னை ஒருத்தி ஒரு மாதிரியாக பார்ப்பதை பர்ஹாத்தும் கவனித்து விடுகிறான். பார்த்ததுமே புரிந்துவிட்டது. தனக்காக படைக்கப்பட்டவள் இவள்தான். அவனது மூளைக்குள் எண்டாக்ரீன் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. ஹார்மோன்கள் தறிகெட்டு அலைந்தன.

கடைக்குள் நுழைகிறாள் ஷெரீன். பர்ஹாத் எதிர்கொள்கிறான்.

“எனக்கு பிரேசியர் வேண்டும்”

“ஏகப்பட்ட மாடல்கள் இருக்கின்றன.
நிறைய வண்ணங்களில். ஃப்ளோரசண்ட் கூட இருக்கிறது. பார்க்கிறீர்களா?”

“இல்லை. சாதாரணமான வெள்ளை ப்ராவே போதும்”

“உங்கள் சைஸ்?”

கொஞ்சம் வெட்கத்தோடும், பீதியோடும் “38”

“இல்லை. 36தான் உங்களுக்கு சரியாக இருக்கும். 38 கொஞ்சம் லூஸ்”


“மிஸ்டர். என்னுடைய அளவு எனக்குத் தெரியும். நான் கேட்டதை கொடுங்கள்”


பற்றிக்கொண்டது காதல். வாழ்க்கையில் முதன்முறையாக காதலை உணர்கிறான் பர்ஹாத். இந்தப் பரவசம் அவனது உடலெங்கும் பெய்யென பெய்யும் மழையாய் சோவென அடிக்க, காதல் காலராவில் அவதிப்படுகிறான்.


இதற்கிடையே அவனுடைய அம்மா பார்ஸி சங்கத்தின் மேட்ரிமோனியல் சேவையை நாடியிருக்கிறாள். நம்மூர் கல்யாண மாலை மாதிரி ஒரு சுயம்வரத்துக்கு பர்ஹாத் செல்கிறான். அங்கே நடைபெறும் ஏகப்பட்ட கலாட்டாக்களுக்கு இடையே ஷெரீனை மீண்டும் காண்கிறான். கொஞ்சம் தைரியமாகவே அவளிடம் போன் நம்பர் கேட்கிறான்.

“உங்களுடைய நம்பர் என்ன?”

“38” சொல்லிவிட்டு குறும்பாக சிரிக்கிறாள்.

அப்புறம் என்ன பையனுக்கு வந்த காதல் காலரா பெண்ணுக்கும் தொற்றிக் கொள்கிறது. பார்ஸி சங்கத்தில் அவள் செயலராகப் பணிபுரிகிறாள். பர்ஹாத்தை விட வசதியான குடும்பம். பையனுக்கும், பெண்ணுக்கும் பிடித்துவிட்டது. அடுத்து கல்யாணம்தான் எனும்போது ஒரு பெரிய சிக்கல்.

பர்ஹாத்தின் அம்மாவுக்கு பெண்ணை சில காரணங்களால் பிடிக்கவில்லை. அம்மாவின் செல்லக் குழந்தையான பர்ஹாத் தாய்க்கும், காதலிக்கும் இடையே அல்லாடுகிறான். இப்படிப்பட்ட சூழலில் ஒரு முக்கியமான விஷயத்துக்காக ஷெரீன் இவனை அழைக்க செல்போனில் முயற்சிக்கிறாள். அப்போது அம்மாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பர்ஹாத் கோபமாக போனை எடுத்து, “எப்பவும் கொஞ்சிக்கிட்டிருக்கணுமா” என்பது மாதிரி கேட்டு போனை தூக்கிப்போட்டு உடைக்கிறான். இயல்பிலேயே இனியவன் என்பதால்தான் ஷெரீனுக்கு இவன் மீது காதல் பிறந்தது. மாறாக முதன்முதலாக அவனது கோபத்தை உணர்ந்தவள் தனது காதலை துறக்கிறாள். பிற்பாடு எவ்வளவு கெஞ்சியும் மீண்டும் பர்ஹாத்தை காதலிக்க ஷெரீன் துணியவில்லை. இதற்கிடையே பர்ஹாத்தின் அம்மா அவனுக்கு வேறு பெரிய இடங்களில் பெண் பார்க்க ஆரம்பிக்கிறாள்.

க்ளைமேக்ஸ்.

பர்ஹாத் கடைசியாக ஷெரீனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறான். டிசம்பர் 31 இரவு 9 மணிக்கு தயாராக இரு. நாம் நியூ இயர் பார்ட்டிக்கு செல்கிறோம். நீ வர மறுத்தால் நம்முடைய காதல் முடிந்தது என்று நினைத்துக் கொள்கிறேன். இடைபட்ட ’பசலை’ நாட்களில் பர்ஹாத்துடனான தன்னுடைய தினங்களை ஷெரீன் நினைத்துப் பார்க்கிறாள். தன் வாழ்க்கையிலேயே மிக மகிழ்ச்சியான தினங்கள் அவைதான் என்று உணர்கிறாள். பர்ஹாத்துடன் வாழ்ந்தால் மட்டுமே அது வாழ்க்கை என்பதை உணர்ந்த ஷெரீன் பார்ட்டிக்கு தயார் ஆகிறாள்.

வீட்டிலிருந்து கிளம்பிக் கொண்டிருந்த பர்ஹாத்துக்கு பெரிய அதிர்ச்சி. ‘பையன்’ பார்க்க பெண்வீட்டாரை அழைத்திருக்கிறாள் அம்மா. 9 மணிக்கு செல்லாவிட்டால் ஷெரீன் இனி வாழ்நாள் முழுக்க தன்னை மன்னிக்கவே மாட்டாள். டென்ஷன்.

நயமாக தன்னைப் பார்க்க வந்த பெண்ணிடம் தான் காதல்வசப்பட்டிருப்பதை எடுத்துச் சொல்கிறான். அம்மாவிடமும் தன் காதலின் வீச்சு எவ்வளவு புனிதமானது என்பதை விளக்குகிறான். ஷெரீன் வீட்டுக்கு மிகச்சரியாக ஒன்பது மணிக்குச் செல்கிறான். அவளது வீட்டு வாசலில் நடக்கும் நியூ இயர் கலாட்டாவில் போலிஸ் இவனை அள்ளிப்போட்டுக் கொண்டு செல்கிறது. பர்ஹாத் வருவான் என்று காத்திருக்கும் ஷெரீன் பதட்டமடைகிறாள். நேரம் போய்க்கொண்டே இருக்கிறது. 9.00, 10.00, 11.00, 12.00

புதுவருடம் பிறக்கிறது. பர்ஹாத் வரவேயில்லை. இனி அவன் தன் வாழ்க்கையில் வரவே மாட்டான் என்று நினைக்கிறாள் ஷெரீன். காதலர்கள் இணைந்தார்களா என்பதை நீங்கள் ஏதேனும் திரையரங்கின் வண்ணத்திரையில்தான் காணவேண்டும்.

இதுவரை நீங்கள் பார்த்த, கேட்ட பிழியப் பிழிய காதல் திரைப்படங்களையும், கதைகளையும் கொஞ்சம் நினைவுறுத்திப் பாருங்கள். ரோமியோ ஜூலியட், அம்பிகாபதி அமராவதி, ஏக் துஜே கலியே, அன்பே வா, அலைகள் ஓய்வதில்லை, காதலுக்கு மரியாதை, வைகாசி பொறந்தாச்சி, காதல் கோட்டை, விண்ணைத் தாண்டி வருவாயா... இதெல்லாம் சட்டென்று நினைவுக்கு வரலாம். இந்த எந்த படைப்புகளுக்கும் ஒப்பானது பர்ஹாத் ஷெரீனின் காதல். ஒரே ஒரு வித்தியாசம்தான். நீங்கள் இதுவரை பார்த்த ‘காதல்’களின் காதலர்கள் வயது அதிகபட்சம் இருபதுகளின் இறுதியில் இருக்கும்.
Shirin Farhad Ki Toh Nikal Padi படத்தில் பையனின் வயது 45. பெண்ணுக்கு வயது 40+. வயது ஒரு மேட்டரே இல்லை என்பதை படம் பார்க்கும்போது உணர்வீர்கள். விண்ணைத்தாண்டி வருவாயாவில் சிம்பு என்னென்ன செய்வாரோ அது அத்தனையையும் பர்ஹாத் என்கிற பொமான் இரானி செய்கிறார். இடுப்பொடிய நடனம் ஆடுகிறார். நொடிக்கொரு முறை காதலியை நினைத்து சிலிர்க்கிறார். திரிஷா செய்கிற அத்தனையையும் ஷெரீன் என்கிற ஃபராகான் செய்கிறார். முகம் சிவந்து வெட்கப்படுகிறார். காதலனை தன் பின்னாலேயே ஹட்ச் நாய்க்குட்டி மாதிரி அலைய விடுகிறார்.

படத்தில் நாயகன் நாயகியை நினைத்தும், நாயகி நாயகனை நினைத்தும் காதலை கொட்டோ கொட்டுவென்று கொட்டி பாடல் காட்சிகள். டூயட்டுகள். அதிலும் ஒரு டூயட்டில் இந்தி சினிமாவின் புகழ்பெற்ற காதல் திரைப்படங்களான ஹம் ஆப்கே ஹைன் கோன், ஜப் வி மெட் மாதிரி படங்களில் இடம்பெற்ற காட்சிகளை உல்டா அடித்து பயங்கர கலாட்டா.

காதலுக்கு வயது ஒரு பொருட்டேயில்லை. காதல் எப்பவும் காதல்தான். படம் பார்க்கும்போது நம் அம்மா-அப்பா, சித்தப்பா-சித்தி, மாமா-அத்தை, பக்கத்து வீட்டு அங்கிள் - ஆண்ட்டி என்று அத்தனை பேரின் காதலையும், நாம் ரகசியமாக எட்டி நின்று பார்ப்பது மாதிரி ஃபீலிங். இரண்டு மணி நேர திரைப்படத்தில் இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறையாவது நீங்கள் வாய்விட்டு சிரிப்பீர்கள். காதல் என்பது வேடிக்கை பார்ப்பவர்களுக்கு நகைச்சுவையும்தான்.

ஹீரோ-ஹீரோயின் வயதானவர்கள் என்பது தவிர்த்து, ஒரு காதல் படத்தில் இருக்கவேண்டிய அத்தனை அம்சங்களும் படத்தில் உண்டு. லேசான செக்ஸ் கூட. காதல் படங்களுக்கு அவசியமான வஸ்துவான மழை அவ்வப்போது தூறி, காதல் சிற்றாறாய் ஓடுகிறது. படம் பார்ப்பவர்களின் மனம் கரைகிறது.

படத்தில் நடிகர்கள் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு ஆப்ட்டாக இருக்கிறது. இசை பிரமாதம். எடிட்டிங் நறுக். மிகக்குறைவான கேரக்டர்களை வைத்து, சிக்கனமான பட்ஜெட்டில் சிறப்பான கதை, திரைக்கதை அமைத்து ‘ரிச்’சாக எடுத்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் நாம் இப்படத்தை விமர்சிக்க வேண்டியதே இல்லை. படம் பார்ப்பவர்களே அதையெல்லாம் உணர்ந்துக் கொள்வார்கள்.

இந்தி சினிமா உள்ளடக்க ரீதியில் சர்வதேசத் தரத்தை எட்டியிருப்பதற்கு இப்படம் நல்ல உதாரணம். இப்படம் பார்க்கும்போது காட்டப்பட்ட சில ட்ரைலர்கள் மேலும் சில உதாரணங்களாய் எனக்குப் பட்டது. அதில் ஒன்று ஸ்ரீதேவி மீண்டும் நடிக்கும் படம் ஒன்று. அமெரிக்காவுக்கு ஒரு இந்தி குடும்பம் இடம் பெயர்கிறது. குடும்பத் தலைவியான ஸ்ரீதேவிக்கு மட்டும் ஆங்கிலம் சரியாக வராது. அதனால் அவர் அங்கே படும் பாடு. ஒரு என்.ஆர்.ஐ குடும்பத்தலைவி ஆங்கிலம் கற்றுக் கொள்வது என்று ஒரு ஒன்லைன். இன்னொரு படம் சக்கரவியூக். மாவோயிஸ்ட்டுகளை குறித்த விரிவான திரைப்படம். இன்னொன்று ராஸ்-3 (3டி) லேசான போர்னோ கலந்த திகில் படம். இப்படி ஏகப்பட்ட genreகளில் இந்தியில் நிறைய படங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. அவர்களது இண்டஸ்ட்ரி ஆரோக்கியமாக இருப்பதையே இது காட்டுகிறது.

மாறாக நம் கோலிவுட்டை நினைத்துப் பாருங்கள். தெரியாத்தனமாக ‘ஓக்கே ஓக்கே’ ஹிட் அடித்துவிட்டது என்று நகைச்சுவைத் துணுக்குத் தோரணங்களை கட்டிக் கொண்டிருக்கிறார்கள் நம்மூர் இயக்குனர்கள். இல்லாவிட்டால் சைக்கோ த்ரில்லர். இந்தியிலும், தெலுங்கிலும், மலையாளத்திலும் வெரைட்டியாக பிரியாணி போட்டுக் கொண்டிருக்க, நாம் வடுமாங்காய் வைத்து தயிர்ச்சாதம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

Shirin Farhad Ki Toh Nikal Padi மாதிரி ஒரு படத்தை நம்மூரில் எடுக்க முடியாதா? இங்கே இப்படிப்பட்ட படத்தில் நடிக்க பொமன் இரானி, ஃபராகான் மாதிரி  ’ஸ்டார்’ கலைஞர்கள் இல்லையா? சிறப்பாக படம்பிடிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் இல்லையா? என்னதான் பிரச்சினை? உறுதியாக சொல்லலாம். இதே கதை, இங்கு ‘பிரபு அம்பிகா’ காம்பினேஷனில் எடுக்கப்பட்டிருந்தால் பரபரப்பான ஹிட் படம் ஆகியிருக்கும். பிரச்சினை என்னவென்றால் ஏற்கனவே ஹிட் கொடுத்த இயக்குனர்கள் இன்னமும் தமக்கென்று ஒரு ‘டெம்ப்ளேட்’ அமைத்துக்கொண்டே இயங்குகிறார்கள். புது இயக்குனர்களும் சேஃபாக அதே டெம்ப்ளேட்டில்தான் சிந்திக்கிறார்கள். அதை உடைத்து சிந்தனையை பரவலாக்க அவர்கள் தயார் இல்லை. குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவதே அவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கிறது. அவ்வப்போது அங்காடித்தெரு, மதுபானக்கடை, அட்டக்கத்தி மாதிரி ஒரு சில வித்தியாச முயற்சிகள் அத்திப்பூத்தாற்போல ஒரு ஒளிக்கீற்றாக தென்படுவதை தவிர்த்து, கோலிவுட் ஜிலோவென்று இருளாகத்தான் இருக்கிறது.

6 கருத்துகள்:

  1. இல்லை யுவா

    இந்த மாதிரி படங்கள் இந்தியில் மட்டுமே சாத்தியம்... தமிழில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன.... வடக்கத்தியர்களில் 45-40 வயதில் காதல் சாத்தியம்... தமிழ் நாட்டில் கள்ளக் காதல் மட்டுமே சாத்தியம்... ஒரு மாநிலம் இல்லாட்டி இன்னொரு மாநிலத்தில் கலெக்ஷன் தேறிடும்.. அதனால்தான் புது முயற்சிகள், சிறிய பட்ஜெட்டில் சாத்தியம் ஆகின்றன

    தெலுங்கு சினிமாவை பொருத்தவரை, தியேட்டர்களில் டிக்கெட் விலை மற்றும் தியேட்டர் தரம் கண்ட்ரோலில் இருப்பதால் அங்கும் தியேட்டருக்கும் செல்பவர்களும் ரிபீட்டட் ஆடியன்ஸ் அதிகம்... அதனால் தாக்கு பிடிக்கிறார்கள்...

    மலையாளம் இப்போதான் விழித்து கொண்டிருக்கிறது... அவர்களும் தமிழ், தெலுகு குப்பைகளை கொஞ்ச நாளாக பொறுக்கி கொண்டிருந்தனர்....

    தமிழை பொறுதத்வரை எல்லாம் கலந்ததாக இருக்கிறது... கொஞ்சம் தியேட்டர் தரம் மற்றும் விலையில் கவனம் செலுத்தினால் சரியாகிவிடும்.... சத்யம் சினிமாவில் இன்னமும் டிக்கெட் கிடைப்பதென்பது லக் சார்ந்த விஷயமாகவே உள்ளது.. அதே சமயம் உட்லாண்ட்சில் எப்போ போனாலும் டிக்கெட் கிடைக்கும்....

    பதிலளிநீக்கு
  2. எவ்வளவுதான் இப்படிப் படம் எடுத்தாலும், இந்தியிலும் ஓடுவது என்னமோ சல்மான் கான் படம்தான். விமர்சகர்களால் பாராட்டப் பட்டாலும் வசூல் ரீதியாக இந்தப் படம் தோல்வியை நோக்குகிறதாம்.

    பதிலளிநீக்கு
  3. ராஜேஷ் நாராயண்5:49 PM, ஆகஸ்ட் 30, 2012

    நல்ல படமா என்று தெரிந்து கொண்டு தான் தியேட்டருக்கு போவேன் என்று பல பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். பார்த்த பின் தானே நல்லதா, மொக்கையா என்று தெரியும். அட்டகத்தி ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம். ஆனால் மதுபானக்கடை - சென்னையில் உள்ள கடைகள், கதாபாத்திரங்கள் கடைக்கு வருவதற்கு காரணம் (குடிக்காரனுக்கு காரணம் தேவையில்லை என்று சொன்னாலும் விவரிக்கும் போது தான் மனதை தொடும்.) அதன் மூலம் ஒருவர் மனம் மாறினாலும் போதுமே. படத்தை நாம் பார்த்து முடிவு செய்ய வேண்டும் அடுத்தவர் பேச்சை கேட்கக் கூடாது. இந்த மனோபாவம் மக்களுக்கு வந்து விட்டால் எல்லா படங்களுமே நஷ்டமின்றி ஒடும்.

    பதிலளிநீக்கு
  4. தமிழ்ல இந்த மாதிரி படம் எடுக்க முடியாதுனுலாம் சொல்ல முடியாது, அதுக்கான நடிகர்களும் இருக்காங்க, ஆனா என்ன பிரச்சனைனா அந்த மாதிரி படங்களை ரசிக்கற அளவுக்கு தமிழர்கள் இன்னும் பக்குவ படலை, ஆனா கொஞ்சம் கொஞ்சமா எல்லாமே மாறும்

    பதிலளிநீக்கு
  5. செமையா எழுதி இருக்கீங்க !!
    வாழ்த்துக்கள்

    பிரபு அம்பிகா காம்பினேசன் இப்போ நெனச்சுப்ப் பார்க்கவே அருமையா இருக்கே!!

    ''அழகன்'' படத்தில் கூட இந்த மாதிரி நாற்பது வயது காதல் தான்..

    பதிலளிநீக்கு