23 ஜூலை, 2009

எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்!


சென்னை தி.நகர் ஆற்காடு தெருவில் இருக்கிறது எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். சிவாஜியும், எம்.ஜி.ஆரும் ஒரு காலத்தில் பக்கத்து, பக்கத்து தெருக்காரர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதே ஆச்சரியமான ஒரு விஷயம். இந்திபிரச்சார சபாவுக்கு அருகில் சிம்பு வீட்டிலிருந்து தெற்கு போக் ரோடு வழியாக சிவாஜியின் அன்னை இல்லத்தை கடந்து சென்றால் பீச்சாங்கை பக்கமாக ஆற்காடு சாலை வரும்.

தமிழ் சினிமாவை கட்டி ஆண்ட சூப்பர் ஸ்டாரின் வீடு போல இல்லாமல் மேல்நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவரின் வீடுபோல எளிமையோ எளிமை. எம்.ஜி.ஆர் அறக்கட்டளை நிர்வகிக்கிறது. 1990ஆம் ஆண்டு ஜானகி எம்.ஜி.ஆர் திறந்து வைத்ததாக கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. சுற்றிப் பார்க்க கட்டணம் இல்லை. ஆனால் வெளியே செருப்பினை விட மட்டும் 50 காசு கட்டவேண்டும். செவ்வாய் விடுமுறை. எம்.ஜி.ஆர் மறைந்து இருபத்தி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இன்றும் தினமும் ஐம்பது பேராவது நினைவு இல்லத்தை தரிசித்து செல்கிறார்கள்.

கீழ்த்தள ஹால் பெரியது. 1950களில் தொடங்கி எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட நினைவுப்பரிசுகள் இந்த ஹாலினை அலங்கரிக்கிறது. சுவற்றையொட்டி வைக்கப்பட்டிருக்கும் அலமாரிகள் முழுக்க நினைவுப்பரிசுகள். நினைவுப்பரிசுகள் பலவற்றிலும் கருப்பு சிவப்பு திமுக கொடி. பல நினைவுப்பரிசுகள் வேடிக்கையாகவும் இருக்கின்றன.

கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் 90 சதவிகிதப் படங்களுக்கு நூறாவது நாள் விழா ஷீல்டு கொடுத்திருக்கிறார்கள். இந்த நினைவுப்பரிசுகளை பாதுகாக்கவே எம்.ஜி.ஆர் மிகவும் மெனக்கெட்டிருக்க வேண்டும். ஹாலுக்கு மையத்தில் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய 4777 எண்ணுள்ள, சைரன் பொருத்தப்பட்ட அம்பாஸிடர் கார் புதுமெருகோடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

முதல் தளத்திலும் நினைவுப்பரிசுகளின் ஆதிக்கம். எம்.ஜி.ஆரின் வேட்டி சட்டை, டாக்டர் பட்டம் பெற்றபோது அணிந்த அங்கி, இடுப்பில் செருகும் குறுவாள், சாட்டை, மெகா சைஸ் பேனாக்கள் என்று அவர் பயன்படுத்திய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு அவரது ரசிகர்களும் தொண்டர்களும் வாள் வழங்குவதில் ஆர்வம் அதிகமாக காட்டியிருக்கிறார்கள். அவர் வளர்த்த சிங்கமான ராஜாவின் பதம் செய்யப்பட்ட பிரம்மாண்ட உடல் பிரமிப்பூட்டுகிறது. இந்த சிங்கம் அடிமைப்பெண் படத்தில் நடித்ததாக சொல்கிறார்கள்.

ஆச்சரியமான விஷயம் எம்.ஜி.ஆரின் நூலகம். வீடு முழுக்க ஆங்காங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நூல்களின் எண்ணிக்கை குறைந்தது ஐயாயிரமாகவாவது இருக்கக்கூடும். நிறைய ஆங்கிலநூல்களும் இருப்பது எதிர்பாராத விஷயம். எம்.ஜி.ஆர் ஆங்கிலமும் வாசிப்பார் என்பதை அவர் நூலகத்தில் இருக்கும் நூல்களை வைத்தே அறிய முடிகிறது. எம்.ஜி.ஆரின் பிரத்யேக அலுவல் அறை அப்படியே இருக்கிறது. மேஜையில் அவரது டிரேட் மார்க் தொப்பி.

அலுவல் அறை வழியாக மீண்டும் கீழ்தளத்தின் முன்பக்கத்துக்கு படிக்கட்டுகள் வழியாக வரமுடிகிறது. இவ்வறைகளில் எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் ஸ்டில்கள் வரிசையாக சதிலீலாவதியிலிருந்து, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை (136 படங்கள்) பிரேம் போட்டு மாட்டப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட நாற்பதாண்டுக்காலம் திரைத்துறையில் வெற்றிகரமாகப் பணியாற்றியது அவரது அசைக்க முடியாத சாதனை. திரைப்பட ஸ்டில்கள் மட்டுமன்றி பல தலைவர்களோடு எம்.ஜி.ஆர் எடுத்துக்கொண்ட அரியப் புகைப்படங்கள் இல்லம் முழுக்க ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கிறது.

இல்லம் முழுக்க கவனித்ததில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. எம்.ஜி.ஆரோடு நெருக்கமாக இருந்த ஜெயலலிதா பெயரும் சரி, கலைஞர் பெயரும் சரி, சரிசமமாகவே இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா எம்.ஜி.ஆருக்கு வழங்கிய ப்ளவர் வாஷ் ஒன்று, கலைஞர் எம்.ஜி.ஆருக்கு ஐரோப்பாவில் இருந்து எழுதிய ஒரு கடிதம், ஓரிரு புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றிருப்பது ஆச்சரியகரமானது.

9 கருத்துகள்:

  1. Hi Lucky

    Me the first

    It was nice talking to you after a long time

    Friend from Bangalore

    பதிலளிநீக்கு
  2. அண்ணே - நீங்க பாரபட்சமற்றவர் தான்

    பதிலளிநீக்கு
  3. //அண்ணே - நீங்க பாரபட்சமற்றவர் தான்

    //

    போனாபோகுதுன்னு முன்னாள் தி.மு.க.காரரைப் பற்றி எழுதி இருக்கிறார் லக்கியண்ணன் :))

    பதிலளிநீக்கு
  4. //போனாபோகுதுன்னு முன்னாள் தி.மு.க.காரரைப் பற்றி எழுதி இருக்கிறார் லக்கியண்ணன் :))//

    வாட்? லக்கி ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர்-ன்னு உங்களுக்கு தெரியாதா?

    பதிலளிநீக்கு
  5. லக்கி,
    ராமவரம் இல்லத்துக்கு போய் பாத்திருக்கீங்களா ?

    மிகவும் எளிமையான இல்லம் .தமிழகத்தை தன் விரலசைவில் வைத்திருந்த மூன்றெழுத்து வாழ்ந்த இடம் என்பதை நம்பவே முடியவில்லை என்னால்.

    பதிலளிநீக்கு
  6. //போனாபோகுதுன்னு முன்னாள் தி.மு.க.காரரைப் பற்றி எழுதி இருக்கிறார் லக்கியண்ணன் :))//

    :) :)

    அவர் மீது பல விமர்சணங்கள் இருந்தாலும், சத்துணவு திட்டத்தை விரிவு படுத்தியது மூலமும், நேர்காணல் முறையை ஒழித்து நுழைவுத்தேர்வை கொண்டுவந்ததன் மூலம் சமூக பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்பது மறக்க முடியாது !!

    பெரியார் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இடப்பங்கீடு முழுமையடைய எம்.ஜி.ஆரின் இந்த இரு திட்டங்களும் மிகப்பெரிய பங்கை ஆற்றின

    தமிழ் திரைவரலாற்றில் மட்டுமல்ல, தமிழர்களின் கல்வி முன்னேற்றத்திலும் அவரது பங்கு மிக மிக முக்கியமானது.

    ஏனோ அது குறித்து பரவலாக தெரிவதில்லை

    பதிலளிநீக்கு
  7. //அவர் மீது பல விமர்சணங்கள் இருந்தாலும், சத்துணவு திட்டத்தை விரிவு படுத்தியது மூலமும், நேர்காணல் முறையை ஒழித்து நுழைவுத்தேர்வை கொண்டுவந்ததன் மூலம் சமூக பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்பது மறக்க முடியாது !!

    பெரியார் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இடப்பங்கீடு முழுமையடைய எம்.ஜி.ஆரின் இந்த இரு திட்டங்களும் மிகப்பெரிய பங்கை ஆற்றின

    தமிழ் திரைவரலாற்றில் மட்டுமல்ல, தமிழர்களின் கல்வி முன்னேற்றத்திலும் அவரது பங்கு மிக மிக முக்கியமானது.

    ஏனோ அது குறித்து பரவலாக தெரிவதில்லை//

    Well Said Dr.Bruno.

    பதிலளிநீக்கு
  8. புருனோ சொல்வது முற்றிலும் உண்மை.

    பதிலளிநீக்கு
  9. கலைஞருடான எம்.ஜி.ஆர் நட்பு மிகவும் வலிமையானது. அரசியல் காரணங்களால் சில சந்தர்ப்பங்களில் மோதிக்கொண்டாலும் நட்பு வலுவாக இருந்தமைக்கு ஆதாரங்கள் நிறைய உண்டு!.

    பகிர்வுக்கு நன்றி யுவா!.

    இல்லத்திற்கு எப்படிச் செல்வது என்று கொஞ்சம் வழிகாட்டுதல்களையும் இடுங்கள். பயனுள்ளதாக இருக்கும்!

    பதிலளிநீக்கு