7 பிப்ரவரி, 2013

காம்மத் & காம்மத்


தென்னிந்தியாவுக்கு இது multi starrer ஆண்டு. தெலுங்கில் விக்டரி ஸ்டார் வெங்கடேஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் நடிப்பில் ‘சீத்தம்மா வாக்கிட்லோ’ ப்ளாக் பஸ்டர். கன்னடத்தில் சீயான் சுதீப் மற்றும் இளம் ஹீரோ சிரஞ்சீவி சர்ஜா இணைந்து ‘வரதநாயக்கா’ சூப்பர்ஹிட். தமிழுக்கு வாய்த்தது சந்தானம் பவர்ஸ்டாரின் லட்டு காம்பினேஷன்தான். ஆனாலும் வசூலுக்கு குறைவில்லை.

இந்த வரிசைப்படி பார்த்தால், அடுத்து மல்லுவுட் எனப்படும் மலையாளத் திரையுலகின் முறை. மெகாஸ்டார் மம்முட்டி, ஜனப்ரிய நாயகன் திலீப் காம்பினேஷன். காம்மத் & காம்மத் என்று படத்தின் டைட்டிலே இருவரையும் தராசுத் தட்டில் சமமாக நிறுத்துகிறது. மலையாளத் திரையுலக வரலாற்றிலேயே சாட்டிலைட் ரைட்ஸ் அதிகவிலைக்கு விற்கப்பட்டு சாதனை. நாலேமுக்கால் கோடி என்று கிசுகிசுக்கிறார்கள். ஓபனிங்கிலும் அமோக விளைச்சல். ஏழு கோடியை அனாயசமாக கடந்திருக்கிறது. மலையாளத்தில் ஐந்து கோடியில் படமெடுத்தாலே அது மெகாபட்ஜெட் எனும்போது இந்த வசூல் அசாதாரண சாதனை.

ஆரம்பத்தில் மம்முட்டியும், ஜெயராமும் இப்படத்துக்காக இணைகிறார்கள் என்று செய்தி பரவத் தொடங்கியபோது பரபரப்பு ஏற்பட்டது. திலீப் ஒரு சிறப்புத் தோற்றத்தில் தோன்றப் போகிறார் என்றார்கள். பின்னர் திலீப் விலகிக் கொள்ள, அவரது பாத்திரத்தில் மற்றொரு இளம் ஹீரோவான குஞ்சாகோ போபன் நடிப்பார் என்றார்கள். என்ன மாயம் ஆனதோ தெரியவில்லை. மீண்டும் திலீப் என்று சொல்லப்பட்டது. ஆனால் பழைய பாத்திரத்தில் அல்ல, ஜெயராம் விலகிக்கொள்ள, அவருக்குப் பதிலாக என்றார்கள். இடையே குஞ்சாகோ பிராஜக்ட்டில் இருந்து விலகிவிட்டார். அவரது பாத்திரத்தை நரேன் ஏற்கிறார் என்று அறிவித்தார்கள். மம்முட்டியை தவிர வேறு எவருமே இந்தப் படத்தில் சாசுவதம் இல்லை. படிக்கும்போதே தலை சுற்றுகிறது இல்லையா?

இந்த வகையில் படமெடுக்க படாத பாடு பட்டு, நொந்து நூடுல்ஸாகிப் போன இயக்குனர் தாம்ஸன் தாமஸ் படத்தால் கொட்டும் பணமழையைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார். எனினும் கேரள திரைவிமர்சகர்கள் சுளுக்கெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இவருக்கு இதுதான் ராசி. முந்தையப் படமான ‘காரியஸ்தன்’ பாக்ஸ் ஆபிஸில் ப்ளாக் பஸ்டர்ஹிட். அப்போதும் இதே விமர்சகர்கள் இவரை இப்படியேதான் துப்பினார்கள்.

உதயகிருஷ்ணா மற்றும் சிபி. கே.தாமஸ் என்று இருவர். நம்மூரில் சுபா (சுரேஷ் & பாலகிருஷ்ணன்) மாதிரி அந்த ஊரில் இரட்டை எழுத்தாளர்கள். ஆரம்பக் காலத்தில் இருவரும் ஒற்றுமையாக சில இயக்குனர்களிடம் அசிஸ்டெண்டாக பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். மனோஜ் கே.ஜெயன் ஒரு படம் செய்யலாம், நீங்கள் இயக்குங்கள் என்று இவர்களை ஏற்றிவிட, டுயோ-டைரக்டர் கனவில் மிதந்தார்கள். முயற்சி தொடக்கத்திலேயே அபார்ஷன் ஆனது. மீண்டும் டைரக்டர்களிடம் அசிஸ்டண்டாக வேலை பார்க்க கவுரவம் இடம் கொடுக்கவில்லை. எனவே திரைக்கதை, வசனம் எழுத ஆரம்பித்தார்கள். ஹிட்லர் பிரதர்ஸ், மாயாஜாலம் என்று அடுத்தடுத்து தோல்விப்படங்கள். மூன்றாவது படமான மட்டுப்பேட்டி மச்சான் ஓரளவுக்கு ஓட, அந்தப் படத்தை இயக்கிய ஜோஸ் தாமஸின் அடுத்தப் படத்திலும் இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதுதான் திருப்புமுனை. திலீப் நடித்த உதயபுரம் சுல்தான்.

திலீப்புக்கு இவர்களது எழுத்து பிடித்துப்போக, அடுத்தடுத்தப் படங்களுக்கு இவர்களையே சிபாரிசு செய்தார். சி.ஐ.டி. மூசா பம்பர்ஹிட் அடிக்க, முன்னணி நாயகர்கள் அனைவருமே தங்கள் படங்களுக்கு இவர்கள்தான் பணியாற்ற வேண்டும் என்று கண்டிஷன் போட தொடங்கினார்கள். மலையாள நடிகர்கள் சங்கம்‘அம்மா’ தயாரித்த சாதனைப்படமான ட்வெண்டி டெவெண்டிக்கும் இவர்கள்தான் எழுதினார்கள். மம்முட்டியின் கம்பேக் படமான போக்கிரிராஜா இவர்களது கைவண்ணம்தான். போக்கிரிராஜாவின் வசூலை கிட்டத்தட்ட நெருங்கிய காரியஸ்தனும் இவர்களது எழுத்துதான். மெகாஹிட் படமான கிறிஸ்டியன் பிரதர்ஸ், சக்கைப்போடு போட்ட மாயமோஹினி, மிஸ்டர் மருமகன் என்று சமீபகாலமாக உதயகிருஷ்ணாவும், சிபிதாமஸும் பேனாவை எடுத்தாலே பணமழைதான். திலீப், மோகன்லால், மம்முட்டி என்று சூப்பர்ஹீரோக்களின் படங்களுக்கு எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் யார் கூப்பிட்டாலும் சரி. முன்னுரிமை திலீப்புக்குதான். நன்றி மறப்பது நன்றன்று அல்லவா?

பொதுவாக இவர்களது பேனா காமெடியாகதான் எழுதும். இவர்களது கதைநாயகன் பணக்கார கிறிஸ்துவ அல்லது இந்து குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருப்பான். இரண்டு குடும்பங்களுக்குள் பகை அல்லது குடும்பத்துக்குள் குழப்பம் என்றுதான் கதையின் ஒன்லைன் இருக்கும். டபுள்மீனிங் டயலாக்குகள் எழுதுவதில் கில்லாடிகள். இரட்டை வெண்ணிற ஆடை மூர்த்திகள் என்றே சொல்லலாம்.

“படமெடுக்க பணம் போட்டவருக்கு நல்ல லாபம் கிடைக்கவேண்டும். காசு கொடுத்து படம் பார்த்த ரசிகனுக்கு நல்ல பொழுதுபோக்கு கிடைக்க வேண்டும். எனவேதான் எங்களை நம்பி எழுதவைக்கும் ஸ்டார் நடிகர்களை வைத்து கலைமுயற்சிகள் எதையும் நாங்கள் பெரியதாக மெனக்கெடுவதில்லை” என்று ஒருமுறை ஓபன் ஸ்டேட்மெண்டே விட்டிருக்கிறார்கள்.

சினிமாவை கலைவடிவமென தீர்க்கமாக நம்பும் மலையாள தீவிர திரையார்வலர்கள் சும்மாவா இருப்பார்கள்? இவர்கள் எழுத்தில் எந்தப் படம் வந்தாலும் பத்திரிகைகளிலும், டிவிகளிலும் காறித்துப்பி விமர்சித்து ஓட ஓட விரட்ட முயற்சிக்கிறார்கள். அதனாலென்ன.. இவர்களது பெயர் திரையில் தெரிந்தாலே மலையாளத் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறதே... அது போதாதா?

இவ்வளவு விலாவரியாக இந்த இரட்டையர்களின் புராணம் பாடுவது ஏனென்றால், காம்மத் & காம்மத்தை எழுதியவர்களும் இவர்கள்தான். மெகாஸ்டார் மம்முட்டி இருக்கிறார் என்பதாலேயோ என்னவோ ‘இரட்டை அர்த்த’ மேட்டரில் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார்கள். திலீப்பும் ஹீரோயின் கார்த்திகாவை விட்டு இரண்டு அடி தள்ளி நின்றே ரொமான்ஸ் செய்கிறார்.

காம்மத்துகள் எனப்படுபவர்கள் கொங்கணி பிராமணர்கள். நானூறு, ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றியபோது அங்கிருந்தவர்கள் தென்னிந்தியா முழுக்க பரவுகிறார்கள். கேரளாவின் காசர்கோடுக்கும் வருகிறார்கள் என்கிற வரலாற்றுக் குறிப்போடு படம் தொடங்கியதுமே நிமிர்ந்து உட்கார்கிறோம். அதற்குப் பிறகு நிமிரவே முடியவில்லை. நிமிடத்துக்கு நிமிடம், நொடிக்கு நொடி மொக்கைப் போட்டு தளரச் செய்துவிட்டார்கள். காமநெடியாக எழுதிய எழுத்தாளர்களை காமெடியாக மட்டும் எழுதச் சொன்னால் எப்படி? கொஞ்சம் வெயிட்டாகவே சொதப்பிவிட்டார்கள்.

விதவை மறுமணம், மாற்றுத் திறனாளியை அழகான (!) ஹீரோ எந்த நெருடலுமின்றி கைப்பிடிப்பது என்று சமூகநோக்கோடு கதை எழுதியிருந்தாலும், கொட்டாவி வரவைக்கக்கூடிய சலிப்பான திரைக்கதை. சீரியஸாகவும் இல்லாமல், ‘சிரி’யஸாகவும் இல்லாமல் மொட்டைத்தாத்தா குட்டையில் விழுந்தான் கதையாக ஆகிவிட்டது காம்மத் & காம்மத்.

திலீப் பெரிய பிரச்சினை இல்லை. எப்போதும் போல ‘லந்து’ கொடுக்கும் கேரக்டர். அவர் நடிக்க முயற்சித்தால்தான் அதுதான் ரசிகர்களுக்கு சோதனை. ஆனால் இந்தியாவின் மிகத்திறமையான நடிகர்களில் ஒருவரான மம்முட்டிக்குதான் இப்படம் சத்திய சோதனை. ஹிட் கொடுத்தே ஆகவேண்டுமென்று ஜெயிக்கிற குதிரையில் ஏறி குப்புற விழுந்திருக்கிறார்.

நிச்சயமாக இந்தப் படம் ஹிட். சந்தேகமேயில்லை. ஆனால் இரண்டு, மூன்று ஆண்டுகள் கழித்து யாருடைய நினைவிலும் இப்படம் இருக்கப் போவதில்லை. பத்தோடு பதினொன்று ரக படம்தான். இதற்கு ஏன் மெகா ஸ்டார்? மலையாள விமர்சகர்கள் இந்தப் படத்தையும் காலில் தூக்கிப்போட்டு மிதிப்பது நியாயம்தான்.

எது, எப்படியோ. தமிழ் ரசிகர்கள் மகிழ்ச்சி கொள்ளத்தக்க ஒரு விஷயம் படத்தில் உண்டு. தென்னாட்டு ப்ரூஸ் லீயான தனுஷ் இப்படத்தில் கவுரவ வேடத்தில் தனுஷாகவே தோன்றுகிறார். கோயமுத்தூரில் காம்மத் & காம்மத் நிறுவனத்தாரின் ஓட்டலை தனுஷ்தான் திறந்து வைக்கிறார். அவரை தமிழ்நாட்டின் ‘சூப்பர் ஸ்டார்’ தனுஷ் என்றுதான் அறிமுகப்படுத்துகிறார்கள். இந்த மேட்டர் அவருடைய சூப்பர் மாமனாருக்கு தெரியுமா?

(நன்றி : http://cinemobita.com)

5 கருத்துகள்:

  1. ஏன் யுவா?. ஒண்ணுமே தெரியாத விஜய்' லாம் superstar 'ன்னு சிலரால் முன்வைக்கப்ப்படுமபோழுது சொல்லிக்கொள்ளும்படியாக நான்கு படங்கள் செய்திருக்கும் தனுஷை அவர்கள் சுபெர்ச்டார் என்று சொல்வதில் தவறேயில்லை, விஜய் அங்கேயும் தனது கிறுக்குத்தனத்தை தொடங்கியிருப்பதால் இவர்களின் நுண்ணரசியல் இருக்குமென நினைக்கிறேன். சொல்லிக்கிறது தப்பேயில்லை.

    பதிலளிநீக்கு
  2. malayaalathan yekadu ketta namaku enna yuva...

    பதிலளிநீக்கு
  3. கம்மத் & கம்மத் என்பது தான் சரி. கொஞ்சம் மலையாளம் வாசிக்க வரும் என்பதால் கூறுகிறேன்.

    நன்றி ஜெயராமன் சிங்கை.

    பதிலளிநீக்கு
  4. பகிர்வுக்கு நன்றிங்க....

    பதிலளிநீக்கு
  5. யுவா,
    மலையாளிகலாவது கதை வசனம் எழுதும் எழுத்தாளர்களுக்காக படம் பார்க்க போகிறார்களே. தமிழன் மட்டும்தான் பட ஹீரோக்களுக்காக மட்டுமே படம் பார்க்க போவதுபோல தோன்றுகிறது. சில இயக்குனர்களின் படங்கள் தவிர. ஒருவேளை சாறு மலையாளிகளை பற்றி சொல்வது உண்மையாக இருக்குமோ?

    பதிலளிநீக்கு