7 பிப்ரவரி, 2014

டாஸ்மாக்குக்கு எதிராக கேப்டன் போர்முழக்கம்!

“முன்னே பின்னே கொஞ்சம் அப்படி இப்படிதான் இருக்கும். நீங்கதான் சரிப்படுத்தி எழுதிக்கணும்” என்று விஜயகாந்த் பத்திரிகையாளர்களைப் பார்த்து மாநாட்டில் சொல்லியிருந்தாலும், இந்த கட்டுரையை எப்படி எங்கே ஆரம்பிப்பது என்கிற குழப்பத்தோடே எழுத ஆரம்பிக்கிறோம்.

சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை உளுந்தூர்ப்பேட்டையில் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடைபெறுவதற்கான சுவடுகள் ஓரளவுக்குதான் தெரிந்தது. ஆனால் செங்கல்பட்டில் தொடங்கி, மாநாடு நடைபெற்ற இடமான ‘எறஞ்சி’ வரை பேனர்கள் கட்டி ஜமாய்த்துவிட்டார்கள் தேமுதிக தொண்டர்கள். பத்தடிக்கு ஒரு கொடிக்கம்பம். பைபாஸ் சாலை முழுக்க பேரணியாக தொண்டர்களின் கொண்டாட்ட ஊர்வலம்தான். விஜயகாந்தின் செல்வாக்கு குறைந்திருக்கிறது என்கிற ஊடகங்களின் கணிப்பையும், மற்ற கட்சிகளின் அரசியல் கணக்கையும் தவிடுபொடியாக்கி இருக்கிறது லட்சக்கணக்கானோர் பங்கேற்ற உளுந்தூர்ப்பேட்டை ஊழல் எதிர்ப்பு மாநாடு.

பேனர்களில் விஜயகாந்த் நடித்த எல்லா சினிமாக்களின் ‘கெட்டப்பும்’ இடம்பெற்றது. குறிப்பாக அவர் போலிஸ் வேடத்தில் நடித்த சத்ரியன், வல்லரசு, வாஞ்சிநாதன், புலன்விசாரணை, கேப்டன் பிரபாகரன் முதலான திரைப்படங்களின் ஸ்டில்கள். எல்லாமே அதிரடியான ஆவேசமான ‘போஸ்’ தான். மறக்காமல் எல்லோருமே ‘அண்ணியார்’ பெயரையும் பிரதானமாக குறிப்பிட்டே அச்சடித்திருக்கிறார்கள். முன்பெல்லாம் தேமுதிக பேனர்களில் தவறாமல் இடம்பெறும் எல்.கே.சுதீஷின் பெயர் பெரும்பாலான இடங்களில் ஏனோ மிஸ்ஸிங்.

மாநாட்டுக்காக வண்டி கட்டி உளுந்தூர்ப்பேட்டைக்கு வந்த தொண்டர்களுக்கு திடீர் அதிர்ச்சி. ஆங்காங்கே அதிமுக கொடிகட்டி டூவீலரில் இப்படியும், அப்படியுமாக அக்கட்சியின் தொண்டர்கள் அணி அணியாக சுற்றிக் கொண்டிருந்தார்கள். இங்கே நடைபெறுவது தேமுதிக மாநாடா அல்லது ஏதேனும் அதிமுக கட்சி நிகழ்வா என்று தேமுதிகவினர் குழம்பினார்கள். வேண்டுமென்றே அவர்களை வெறுப்பேற்ற உளுந்தூர்பேட்டை உள்ளூர் அதிமுகவினர் செய்த அசத்தல் ஏற்பாடு இது. இவர்களைப் பார்த்து பாமகவினரும் ’காப்பி’ அடித்து, தங்கள் பங்குக்கு கொடி கட்டிக்கொண்டு ‘சும்மனாச்சுக்கும்’ சுற்ற ஆரம்பிக்க ஏகப்பட்ட கலாட்டா. ஆனாலும் திருச்சி பைபாஸில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு பிரியும் சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக்கில், மூன்று கட்சியினருமே, அவ்வப்போது ஒற்றுமையாக ‘ஓய்வு’ எடுத்துக்கொண்டது கண்கொள்ளா காட்சி.

‘உளுந்தூர்ப்பேட்டையில் ஊழல் எதிர்ப்பு மாநாடு’ என்று உ-னாவுக்கு ஊ-னா போட்டு பிரமாதமாக பெயர் பிடித்துவிட்டாலும், மாநாட்டின் இலக்கு என்னவென்கிற குழப்பம் தொண்டர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் ஏற்பட்டிருந்தது. மேடையில் பேசியவர்களிலும் ‘அண்ணியார்’, ‘கேப்டன்’ தவிர அனைவருக்கும் இதே குழப்பம்தான்.

இதுமாதிரி ஆயிரம் குழப்பங்கள் இருந்தாலும், சிலர் மட்டும் ஊழல் எதிர்ப்பு தெளிவோடு மாநாட்டுக்கு வந்திருந்தார்கள்.

“டெல்லியில் ஆம் ஆத்மியின் எழுச்சிதான் கேப்டனுக்கு இந்த ‘ஐடியா’வை கொடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தேமுதிக தவிர வேறெந்த கட்சியும் தமிழ்நாட்டில் ஊழல் எதிர்ப்பு பேசமுடியாது. ஊழலுக்கு எதிரான அவர்களது திட்டம் என்னவென்று தெரிந்துகொள்ளவே சென்னையில் இருந்து வந்திருக்கிறேன். இக்கட்சியின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றார் இளைஞரான பீர்முகம்மது. பிரபலமான புஹாரி ஓட்டல் குழுமத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட இவர், தன்னை கட்சி சார்பற்றவர் என்றும் கூறினார்.

வடகரையம்மான் பூண்டி என்கிற ஊரைச்சேர்ந்த எண்பத்தியேழு வயது பெரியவர் சிவா, பட்டுவேட்டி கட்டி மாப்பிள்ளை மாதிரி வந்திருந்தார். “சுதந்திரம் வாங்கிய காலம் தொட்டு ஊழலையும், லஞ்சத்தையும் எதிர்த்து போராடி போராடி தோற்றுவிட்டோம். இவர்களாவது ஏதாவது செய்வார்களா என்கிற எதிர்ப்பார்ப்பில் வந்திருக்கிறேன். நான் முன்பு காங்கிரஸ் ஆதரவாளன். இப்போது கட்சி, கிட்சியெல்லாம் கிடையாது” என்றார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உளுந்தூர்பேட்டை நகர எல்லையில் இந்திய ஜனநாயக கட்சி பிரம்மாண்டமாக பிரமாதமாக ஒரு மாநாடு நடத்திக் காட்டி அசத்தியிருந்தது. அதே இடத்தில் இந்த மாநாட்டையும் நடத்த வேண்டும் என்றுதான் விஜயகாந்த் ஆசைப்பட்டார். அரசியல் அழுத்தம் காரணமாக அந்த இடம், மாநாடு நடத்த தேமுதிகவினருக்கு கிடைக்கவில்லை என்று கட்சிக்காரர்கள் சொல்கிறார்கள். எனவேதான் ’எறஞ்சி’யில் அவசர அவசரமாக யார் யாரையோ பிடித்து கரும்பு, சோளம் பயிரிடப்பட்டிருந்த பொட்டல்காட்டை தயார்படுத்தினார்கள்.

பிப்ரவரி இரண்டு, ஞாயிறு மதியம் ஒரு மணிக்கு ‘கேப்டன்’ மாநாட்டு முகப்பில் கொடியேற்றுவார். மூன்று மணி வாக்கில் மாநாடு தொடங்கும் என்று முதலில் சொல்லப்பட்டது. ஒரு மணிக்கு நாம் அங்கே சென்றபோது மூவாயிரத்துக்கும் குறைவானவர்களே திடலில் இருந்தார்கள். மாநாடு நடைபெறுவதற்கான அறிகுறியே தெரியவில்லை. மூன்று மணிக்கு மேலாக கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் வர ஆரம்பித்தது. மூன்றே முக்காலுக்கு திறந்த வேனில், எம்.ஜி.ஆர் பாணியில் கூலிங் க்ளாஸ் அணிந்து விஜயகாந்த் ஊர்வலமாக மாநாட்டு முகப்புக்கு வர விசில்சத்தம் விண்ணைப் பிளந்தது. வேனில் இருந்தபடியே ஸ்டைலாக கொடியேற்ற, “வருங்கால தமிழக முதல்வர் கேப்டன் வந்துவிட்டார்” என்று மைக்குகள் அலற ஆரம்பித்தன. தலைவரைப் பார்த்ததுமே தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு, கொஞ்சநாட்கள் முன்பாக கட்சியை விட்டு தானாக விலகி எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்த பண்ருட்டி ராமச்சந்திரனை அர்ச்சித்து கோஷங்கள் எழுப்பத் தொடங்கினார்கள். விஜயகாந்த் வாயில் விரல்வைத்து ‘உஸ்’ஸென்று சொல்லி அனைவரையும் அமைதிப்படுத்தினார்.

“கூட்டணி முடிவை தலைவர் அறிவிப்பாருன்னு வந்திருக்கோம். ஊழல் எதிர்ப்புன்னு சொல்லிட்டதாலே நிச்சயம் காங்கிரஸோடு கூட்டணி இருக்க வாய்ப்பில்லை. பிஜேபியோடு சேருவதைதான் பெரும்பாலான தொண்டர்கள் விரும்புகிறோம்” என்றார் தூத்துக்குடியில் இருந்து வந்திருந்த ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய தேமுதிக துணைச்செயலாளரான எஸ்.பெருமாள்.

“தனித்து கூட ஓக்கே. ஆனா திமுகவோடோ, அதிமுகவோடோ கூட்டணின்னு சொல்லிட்டா அதை தொண்டர்கள் ஏத்துக்கிறது சிரமம். ரெண்டு கட்சியும் எங்களை கொஞ்சநஞ்ச பாடா படுத்தியிருக்காங்க. கேப்டனுக்கு எங்க உணர்வுகள் தெரியும்” என்றார் பொன்னன்குறிச்சி கிளைச்செயலாளர் ஈ.கந்தன்.

இம்மாதிரி பெரிய மாநாடுகள் நடத்துவதில் தேமுதிகவுக்கு இருக்கும் அனுபவமின்மை அப்பட்டமாக வெளிப்பட்டது. ஏனோதானோவென்று அமைக்கப்பட்டிருந்தது மாநாட்டு சுவராக அமைக்கப்பட்டிருந்த செஞ்சிக்கோட்டை. மாநாட்டு மேடை தமிழ்நாடு அரசு தலைமைச்செயலகம் மற்றும் பாராளுமன்றத்தை கலந்து புது வடிவில் சுமாரான டிசைனில் இருந்தது. மேடை மிக தாழ்வாக இருந்ததால், கூட்டம் தலைவர்களை காணமுடியாமல் முண்டியடித்துக் கொண்டு முன்னால் வந்தது. தொண்டரணியினர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், கட்டுப்பாடு இழந்து சில இடங்களில் பலப்பிரயோகம் செய்ய ஆரம்பித்தார்கள். இதனால் தொண்டர்களுக்கும், தொண்டரணியினருக்குமே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சும் நடந்தது. அவசர அவசரமாக இரு ஆம்புலன்ஸ்கள் கிளம்பின.

“ஆங்காங்கே எல்.சி.டி. திரைகள் வைத்திருக்கிறோம். அதில் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று மேடையில் அறிவிக்கப்பட்டதுமே, ‘ஊக்க மருந்து’ செலுத்தப்பட்டது மாதிரி உற்சாகத்தில் இருந்த கூட்டம் அவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ‘கேலரி’களின் சவுக்குக் கம்புகளை உடைத்தெறிந்துவிட்டு எல்.சி.டி. திரைகள் வைத்திருந்த இடங்களை நோக்கி, அணிந்திருந்த பிளாஸ்டிக் சேர்களோடு முன்னேறினார்கள். பொட்டல்காடு புழுதிக்காடானது. மாநாட்டுத் திடலே மகாபாரதப்போர் நடைபெற்ற குருஷேத்திரம் மாதிரி பரபரப்பாக, மீண்டும் மைக்கில் அறிவிக்கப்பட்டது. “பிளாஸ்டிக் சேர்களை யாரும் கையில் எடுக்க வேண்டாம். ஒரு சேரின் விலை ரூபாய் ஐநூறு. தொண்டர்களின் இரத்தமும், வியர்வையும் இந்த பணத்தில் இருக்கிறது” என்றதுமே தொண்டர்களுக்கு உற்சாகம். சிலர் செட் செட்டாக சேர்களை தூக்கிக்கொண்டு அவர்கள் வந்திருந்த வாகனங்களை நோக்கி நடைபோடத் தொடங்கினார்கள்.

கருத்தரங்கம் தொடங்கியபோதும் கூட்டம் அமைதியடையவில்லை. பேசியவர் ஆம் ஆத்மி கட்சியை தாக்கி பேசிக்கொண்டிருக்க, ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் ஊழல் எதிர்ப்பு கட்சியை ஏன் தாக்கிப் பேசுகிறார் என்று பத்திரிகையாளர்களிடையே பரபரப்பு. டெல்லியில் தேமுதிகவை ஆம் ஆத்மி வென்றதால் ஏற்பட்ட ஆவேசம் இது என்று சிலர் விளக்கினார்கள். அடுத்து பட்டிமன்றம். ஒரு நடுவர். கேப்டனின் வெற்றிகளுக்கு காரணம் திட்டமா செயலா என்று பேச இருதரப்புக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என்று தலா ஒருவர். யாராவது ஏதாவது தொணதொணவென்று பேசிக்கொண்டே இருக்கிறார்களே என்று தொண்டர்கள் சலிப்படைந்திருந்த நேரத்தில் கலைநிகழ்ச்சிகள் தொடங்கின. முதலில் பரதநாட்டியம். ‘தேவுடா’ என்று சோர்ந்து போனபோது ஆரம்பித்தது அதிரடி. பாடகர் வேல்முருகன் ‘மதுரை குலுங்க குலுங்க’ மெட்டில் கேப்டனின் புகழ்பாட ஆரம்பித்ததுமே உற்சாகம் பிய்த்துக்கொண்டு போக, ஆள் ஆளுக்கு டேன்ஸ் ஆடத் தொடங்கினார்கள். விசிலும், கைத்தட்டலுமாக திடல் முழுக்க பரவச அலை. தங்கள் அபிமான நடிகரின் படத்தை முதல் நாள், முதல் காட்சி பார்க்கும் மகிழ்ச்சி ஒவ்வொருவர் முகத்திலும் தெரிந்தது.

“இன்னமும் ரசிகர்களாவே இருக்காங்க. நிச்சயமா இவங்கள்லாம் முரசுக்குதான் ஓட்டு போடுவாங்க. ஆனா அரசியல்மயமாகி தொண்டர்களா மாறினாங்கன்னாதான் இவங்களாலே மக்களை கன்வின்ஸ் பண்ணி தேமுதிகவுக்கு ஆதரவா வாக்குகளை சேகரிக்க முடியும். அந்த ‘மேஜிக்’ எப்போ நடக்குமோ, அப்போதான் கேப்டனாலே முதல்வர் ஆக முடியும்” என்று நம்மிடம் கொஞ்சம் சலிப்பாகவே பேசினார் கட்சி நிர்வாகி ஒருவர்.

“இந்த கூட்டத்தை பார்க்கும்போது இனிமே தமிழ்நாட்டின் எதிர்காலம் தேமுதிகன்னுதான் எனக்கு தோணுது. பிஜேபியோடு நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்தால், அடுத்த ஆட்சியில் மத்திய மந்திரி பதவியேகூட எங்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கு” என்றார் கோவில்பட்டி கேப்டன் மன்றத்தை சேர்ந்த பழனி. பெரும்பாலான தொண்டர்களுக்கு கூட்டணியென்றால் பிஜேபி அல்லது தனித்து போட்டி என்கிற எண்ணம்தான் இருக்கிறது.

விஜயகாந்த் பேசும்போது இவர்களது எண்ணத்தையே எதிரொலித்தார். ஆனால் அவர் பிஜேபியையும் லேசாக தாக்க தவறவில்லை. “சாதி மற்றும் மதத்தை வைத்து இனி யாரும் அரசியல் செய்ய முடியாது” என்றார்.

“ஒரு ரூபாய்க்கு இட்லியை கொடுத்துட்டு, பத்து ரூபாய்க்கு ‘தண்ணீ’ விக்கறீங்க. மக்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டிய முதல்வரே ‘தண்ணீ’ காட்டுறாங்க” என்று அடுக்கடுக்காக அவர் பேசபேச விண்ணை முட்டும் கரகோஷம்.

“மக்களை ஏமாத்தணும், மூடர்களாக்கணுங்கிற எண்ணத்துலே டாஸ்மாக் திறக்கிறார்கள். இருநூறு கோடி, முன்னூறு கோடின்னு டாஸ்மாக்குக்கு இலக்கு நிர்ணயிக்கிறவங்க, விவசாயம் நல்லாருக்கணும்னு ஏன் இலக்கு நிர்ணயிக்கிறதில்லே. மக்கள் நல்லாருக்கணும்னு ஏன் இலக்கு நிர்ணயிக்கிறதில்லே?” என்று காரசாரமாக பேசினார்.
“இப்போ இருக்குற போலிஸை பார்த்தா, நான் கண்ணியமான போலிஸா படங்களில் நடிச்சதுக்காக வெட்கப்படுறேன்” என்று அவர் வேதனைப்பட்டபோது, கூட்டமும் அவரோடு சேர்ந்து வேதனைப்பட்டது.

கடைசியாக ‘ஆம் ஆத்மி’ பாணியில் “கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” என்று தொண்டர்களை நோக்கி கேட்டார். வேண்டாம், வேண்டாம் என்று குரல் எழுந்ததுமே, “என் தொண்டர்கள் வேண்டாம்னு சொல்றாங்க. ஒரு கூட்டணியில் சேர்ந்து எப்படியெல்லாம் அசிங்கப்பட்டோம்னு அவங்களுக்கு தெரியும். தொண்டர்கள் என்ன சொல்றாங்களோ, அதை நான் கேட்பேன். ஒரு வேளை நான் ஏதாவது முடிவெடுத்தா, அதுக்கு தொண்டர்கள் கட்டுப்படுவாங்க” என்று பொத்தாம் பொதுவாக முடித்தார்.

“எங்க உணர்வுகளை கேப்டன் அப்படியே பிடிச்சிக்கிட்டாரு. தனித்து நிற்பதைதான் தன்மானமுள்ளவங்க விரும்புறோம். அவர் என்ன முடிவு எடுத்தாலும் எல்லாரையும் கலந்துப்பேசி நல்ல முடிவாதான் எடுப்பாரு” என்று நத்தம் ஊராட்சி ஒன்றிய துணை செயலாளரான சாந்தி மகிழ்ச்சியோடு நம்மிடம் சொன்னார்.

ஆனால், கூட்டணி இருக்கிறதா இல்லையா என்று தெரியாத குழப்பத்தோடே பெரும்பாலான தொண்டர்கள் கலைந்தார்கள். சீக்கிரமா ஒரு தெளிவான முடிவு எடுங்க கேப்டன்!

(இக்கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் இவ்வார புதியதலைமுறை வார இதழில் வெளியாகியிருக்கிறது)

3 கருத்துகள்:

  1. தர்மத்தின் வாழ்வுதனை 2006ல் சூது வென்றாலும், 2011ல் தர்மமே வெல்லும் என்பது உறுதியாயிற்று. குடிகார திம்மியாக ஆரம்பத்தில் அறியப்பட்டு, அம்மாவால் மனம் மாற்றமடைந்த முற்போக்கு திராவிட திம்மியும் கூட, இராமர் பாலம் கட்ட ஸ்ரீ அணில் உதவியது போல அம்மாவுக்கு கொஞ்சமாக உதவியது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிரதிபலனாக அந்த குடிகார கட்சிக்கு ஊருக்கு ஒரு டாஸ்மாக் பார் லைசென்ஸை அம்மா கொடுத்திருக்கலாம். அதுவே அதிகம். ஆனாலும் பரந்த மனதோடு, அருள்பாலித்து 29 எம்.எல்.ஏ.க்களை வழங்கி கவுரவித்திருக்கிறார். இனியாவது இவர்கள் திராவிடம், முற்போக்கு போன்ற பழம் பஞ்சாங்க வார்த்தைகளை மூட்டை கட்டிவிட்டு அ ஃபார் அம்மா, சி ஃபார் சின்னம்மா, மோ ஃபார் மோடி, ஹி ஃபார் ஹிந்து என்று புது பாடம் படித்து, வழி தவறிய ஆடுகளாய் அலையாமல் வாழ முற்பட வேண்டும். @@@@@@@@@@@@@ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி. 2011ல் குடிகார திம்மி, இப்ப கேப்டன். வெக்கமா இல்ல???

    பதிலளிநீக்கு
  2. thalaippula ethuvum ulkuththu velikuththu illaiye :)

    nalla velai anony option irukku

    பதிலளிநீக்கு
  3. இந்திய ஜனநாயக கட்சி பிரம்மாண்டமாக பிரமாதமாக ஒரு மாநாடு நடத்திக் காட்டி அசத்தியிருந்தது.... ok ok

    பதிலளிநீக்கு