11 பிப்ரவரி, 2014

புலிவாலும் பத்மினியும்

வர்க்கமுரண் தான் ஒன்லைன். எதிர் எதிரான எக்ஸ்ட்ரீம் கார்னரில் வசிக்கும் இரு மனங்கள் ஏன் எப்படி முட்டிக்கொள்கிறது என்பதுதான் தீம். முதல் காட்சியிலேயே கதை ஆரம்பித்து விடுகிறது. பணத்துக்கு பஞ்சமில்லாத பிரசன்னா. பஞ்சமே வாழ்க்கையென வாழும் விமல். முன்னவருக்கு காதல் சைட் டிஷ். காமம் மெயின் டிஷ். பின்னவருக்கு காதல் புனிதம். காமத்தை பற்றி கல்யாணத்துக்கு அப்புறம்தான் பரிசீலனை. அட்டகாசமான கேரக்டர் ஸ்கெட்ச்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு மின்னலை பிடித்து மேகத்தில் குழைத்து பெண்ணென்று செய்துவிட்ட நடிகையின் ‘பிட்டு’ என்றொரு சமாச்சாரம் இணையத்தளங்களிலும், பர்மாபஜாரிலும் உலவிவந்தது நினைவிருக்கிறதா. காமவெறி தமிழ்சமூகம் வயது வித்தியாசம் பாராமல் பார்த்து ரசித்ததே? பின்னர் அது நடிகையுடையது அல்ல, ஒரு பெங்களூர் கல்லூரி மாணவியுடையது என்று பின்கதைச் சுருக்கம் வந்தது. அதற்கு பிறகு அந்த ‘பிட்டு’ டேட்டிங் போனபோது பாய்பிரண்ட் பிடித்தது. அவனுடைய செல்போன் சர்வீஸுக்கு போனபோது கடைக்காரன் நெட்டில் ஏற்றிவிட்டான். அவமானம் தாங்காமல் அந்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டாள் என்று கதை தொடர்ந்துகொண்டே போனது. புலிவாலில் அந்த கதை அப்படியே பதிவாகியிருக்கிறது. நீலப்படத்தில் வந்தவர் எந்த கோணத்தில், எம்மாதிரியான உடையில் வந்தாரோ (நாமும் காமவெறி தமிழ்சமூகத்தின் அங்கம்தான் என்பதால் அந்த பிட்டை எப்பவோ பார்த்திருக்கிறோம்) அப்படியே இப்படத்தில் ஓவியா வருகிறார். எதையுமே செல்போனில் பதிவு செய்துக்கொள்ளும் பிரசன்னா, இருவரும் ‘பேசிப்புழங்குவதையும்’ தெரியாத்தனமாக பதிவு செய்துவிடுகிறார். ‘டெலிட்’ செய்ய நினைக்கும்போது, ஏதோ போன் வந்து டெலிட்ட மறந்துவிடுகிறார்.

இந்த போன் எதிர்பாராவிதமாக விமலிடம் சிக்குகிறது. அதன்பிறகு படம் ரோலர் கோஸ்டர் ரைடுதான். இயக்குனர் மாரிமுத்து ஆறுவருடங்களுக்கு முன்பு எடுத்த கண்ணும் கண்ணும் படத்துக்கு பிறகு நீண்ட இடைவெளிவிட்டு மீண்டு வந்திருக்கிறார்.

புலிவால் - அட்டகாசமான கமர்ஷியல் த்ரில்லர்.

எழுபதுகளிலும், எண்பதுகளிலும் பிறந்தவர்கள் கொண்டாடக்கூடிய திரைப்படம். பத்மினி என்கிற காரை இப்போதைய இளசுகள் சாலையில் கூட பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ரஜினி வைத்திருந்த கார் (செல்ஃப் டிரைவிங்). டாக்டர்களும், வக்கீல்களும் கார் வைத்திருந்தால் அது பத்மினியாகதான் இருக்கும். ஹ்யூண்டாய் என்றொரு கார் எந்த எமகண்டத்தில் வந்ததோ அம்பாசிடர்களும், பத்மினிகளும் காணாமல் போய்விட்டன. அட்லீஸ்ட் அம்பாஸடராவது டிராவல்ஸுக்கு ஓடுகிறது. பத்மினி சுத்தம்.

நீண்டகாலம் கழித்து, இன்னும் கொஞ்ச நேரம் ஓடியிருக்கக்கூடாதா என்று என்னை ஏங்கவைத்த திரைப்படம். எந்த கமர்சியல் காம்ப்ரமைஸும் இல்லாமல் யதார்த்தமான போக்கில் மிகதுல்லியமாக ஒரு காலக்கட்டத்தின் அடையாளங்களை திரையில் பதித்திருக்கிறார் இயக்குனர். படம் முடியும்போது பத்மினியில் நாமும் ஒரு ரவுண்டு அடிக்கமாட்டோமா என்று ஏக்கம் வருகிறது.

அழியாத கோலங்கள் பாணியில் ஒரு இளைஞனின் பிளாஷ்பேக்காக படம் விரிகிறது. ஒரு ஊர்லே ஒரு பண்ணையார். அவரிடம் ஒரு பத்மினி. அந்த பத்மினியை ஓட்டுறதுக்கு ஒரு டிரைவர். பண்ணையாருக்கு ஒரு பொண்டாட்டி. ஒரு பொண்ணு. டிரைவருக்கு ஒரு அசிஸ்டெண்ட் (க்ளீனர் மாதிரி). டிரைவருக்கு ஒரு காதலி. பத்மினியின் முன்சீட்டில் ஒரு வாட்டியாவது உட்கார்ந்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டு அஞ்சு ரூபாய் (க்ளீனருக்கு லஞ்சம்) சேர்க்கும் சிறுவன் என்று பாத்திரங்களை பக்காவாக செட்டப் செய்துக்கொண்டு களமிறங்கியிருக்கிறார் இயக்குனர்.

புகுந்தவீடு எவ்வளவு வசதியாக இருந்தாலும் பொறந்தவீட்டில் இருந்து அல்பத்தனமாக சின்ன சின்ன பொருட்களை எடுத்துப்போகும் பெண், சமையலறையில் அலட்சியமாக அறுவாமனையை நிமிர்த்துவைத்துவிட்டு வேலை பார்க்கும் குடும்பத்தலைவி, அதை பார்த்தவுடனேயே எடுத்து படுக்கவைக்கும் கணவன் என்று இயக்குனரின் சின்ன சின்ன நகாசு வேலைகள் படம் முழுக்க ஒவ்வொரு ஃப்ரேமையும் அழகாக அலங்கரிக்கிறது. சர்ப்ரைஸ் போனஸாக ஜெயப்பிரகாஷ் – துளசி காதல்.

படத்தின் நாயகி முந்தைய விஜய்சேதுபதி படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தவர் போலிருக்கிறது. கண்களில் சாராயத்தை தேக்கி வைத்திருக்கிறார். மற்ற அம்சங்கள் என்ன என்னவென்று விரிவாக அலச போதுமான ஸ்பேஸ் இந்த படத்தில் இல்லை என்பதால், அடுத்த படம் வரும் வரை வெயிட் செய்தாக வேண்டும். அவரை தரிசித்ததில் இருந்து தாவணி போட்ட பெண் யாரையாவது காதலிக்க வேண்டும் என்று திடீர் ஆசை ஏடாகூடமாக வந்து தொலைக்கிறது.

எனிவே, வதந்திகளை நம்பாதீர்கள். ’பண்ணையாரும் பத்மினியும்’ சூப்பர். மிஸ் பண்ணாமல் டிவிக்கு வரும் வரை வெயிட் செய்யாமல் தியேட்டருக்கு போய் பார்த்துவிடுங்கள்.

2 கருத்துகள்:

  1. //காமவெறி தமிழ்சமூகம்// இது சரியான வார்த்தை இல்லை யுவா...

    நீங்கள் உங்களை வைத்து மற்றவர்களையும் எடைப்போடக் கூடாது.

    பதிலளிநீக்கு
  2. மும்பை நகரத்தை இன்றும் இந்த பத்மினி கலக்கிக் கொண்டுதான் இருக்கிறது. குறைந்த கட்டணம் ரூ,20 மட்டும்தான்

    பதிலளிநீக்கு