இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9 பிப்ரவரி, 2015

கறுப்பர் நகரம்

‘மெட்ராஸ்’ படம் வந்தபோதுதான் இந்த நாவலின் பெயரையே கேள்விப்பட்டேன். இந்த நாவலை அப்படியே இயக்குனர் சுட்டுவிட்டதாக யாரோ எழுதியிருந்தார்கள். படம் பார்த்த ஆர்வத்தில் உடனே வாசிக்க எண்ணி கடை கடையாக ஏறி இறங்கியதுதான் மிச்சம். கடந்த சென்னை புத்தகக்காட்சியில் கிடைத்தது.

இந்த நாவலில் ‘மெட்ராஸ்’ என்கிற ஊர் வருகிறதே தவிர, ‘மெட்ராஸ்’ திரைப்படத்துக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. சில காட்சிகளுக்கு லேசான கருத்தியல் இன்ஸ்பிரேஷனாக வேண்டுமானால் இந்நாவல் இருந்திருக்கலாம்.

கறுப்பர் நகரம் : சென்னை என்கிற நகரைப் பற்றிய நிஜமான novelised history. நாவலை எழுதியிருக்கும் கரன் கார்க்கியின் எழுத்து மட்டுமல்ல, வாழ்க்கையும் சுவாரஸ்யமானதுதான். வீடுகளில் எலெக்ட்ரீஷியனாக டெஸ்டர் வைத்துக்கொண்டு வேலை பார்க்கும் கரன், ஓய்வு நேரங்களில்தான் பேனா பிடிக்கிறார். சென்னையிலேயே பிறந்து வளர்ந்த இவர், நகரின் மாற்றங்களை நாவல் வழியாக மிக திறமையாக பதிவு செய்கிறார்.

இரட்டை ஆயுள் தண்டனை முடிந்து சிறையிலிருந்து வெளிவருகிறான் கிழவன் செங்கேணி. முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக அவன் பார்த்த சென்னையை, அடையாளம்கூட கண்டுகொள்ள முடியவில்லை. அவன் சிறைக்கு போவதற்கு முன்பாக சென்ட்ரலுக்கு அருகில் இருந்த அல்லிக்குளத்தில் பூத்த தாமரையை பறிப்பது பிடித்தமான விஷயம். இப்போது அல்லிக்குளத்துக்கு பதிலாக ஏதோ ஒரு கட்டிடம். மூர் மார்க்கெட் என்கிறார்கள். அப்படியெனில் நிஜமான மூர்மார்க்கெட் எங்கே என்று பார்க்கிறேன். அங்கே பெரிய கட்டிடம் எழுந்து நிற்கிறது. மக்கள் சகட்டுமேனிக்கு ஒருவருக்கொருவர் ஆங்கிலம் பேசியபடியே போவதைப் பார்த்து, மீண்டும் வெள்ளைக்காரன் ஆட்சிக்கு வந்துவிட்டானா என்று குழம்புகிறான். உடையில் தொடங்கி உணவு, உறைவிடம் வரை ஒரு நகரம் இவ்வளவு குறைவான கால அவகாசத்தில் எப்படி ஒட்டுமொத்தமாக மாற்றிக்கொள்ள முடியும் என்கிற ஆச்சரியத்தில் அவன் இருக்கும்போதே, அவனுடைய கடந்தகால ப்ளாஷ்பேக் ஓப்பன் ஆகிறது.

எழுபதுகளின் சென்னையை முடிந்தமட்டிலும் விரிவாக, நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார் கரன் கார்க்கி. புதுப்பேட்டை சித்ரா டாக்கீஸ் எதிரில் கூவத்தின் கரையில் இருந்த குடிசைப்பகுதி. அந்த காலத்தில் நரியங்காடு என்பார்கள். இப்போது குடிசைகள் எதுவுமில்லை. சாலையோரப் பூங்காவை நிறுவியிருக்கிறது மாநகராட்சி. இங்கேதான் ஆராயியைப் பார்க்கிறான் செங்கேணி. கண்டதும் காதல். ஆராயியை இரண்டாவது பொண்டாட்டியாக மாற்றிக்கொள்ள நினைக்கும் அவளது மாமாவிடம் இருந்து செங்கேணி காப்பாற்றி, ஓடிப்போய் கல்யாணம் கட்டிக் கொள்கிறார்கள்.

பெரியமேடுக்கும், சூளைக்கும் இடைபட்ட பகுதியில் அமைந்திருந்த ஜெகனாதபுரத்தில் குடிசை வாடகைக்கு எடுத்து தங்குகிறார்கள். அங்கு சுற்றி வாழும் மனிதர்களிடமிருந்து வாழ்வின் நல்லது, கெட்டதை பயிலும் வாய்ப்பு செங்கேணிக்கு கிடைக்கிறது. கட்டைவண்டி இழுத்து பிழைப்பு நடத்தும் செங்கேணிக்கு ஒரு ப்ளாஷ்பேக் உண்டு. மிகுந்த சோகமான ஒரு சூழலில் ஆராயியிடம் தன் சிறுவயது நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறான். அறுபதுகளின் ஆண்டான் அடிமை முறையை மனம்பதைக்கும் வகையில் இன்றைய தலைமுறைக்கு புரியவைக்கும் எபிஸோட் அது. ஊர் ஊராக பறந்த செங்கொடி உழைக்கும் மக்களுக்கு ஊட்டிய தன்மானத்தையும், அரசியல் கல்வியையும், வரலாற்றுத் தேவையையும் செங்கேணியின் இளம் வயது கதை சொல்கிறது.

அக்கம் பக்கம் வீடுகளில் வசிக்கும் சில படித்தவர்கள் மூலமாக காரல்மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களைப் பற்றிய புரிதல் செங்கேணிக்கு கிடைக்கிறது. ஆதிதிராவிட சமூகம் அடைந்திருக்கும் இன்னல்களுக்கு எல்லாம் என்ன காரணமென்ற தெளிவினை அவன் பெறுகிறான். அ, ஆ, இ, ஈ கூட எழுதத்தெரியாத செங்கேணி இரவுப்பள்ளிக்குச் சென்று படிக்கத் தொடங்குகிறான்.

கனவுகள் நனவாகும் என்கிற நம்பிக்கையை விதைப்பதோடு நாவலின் முதல் பாகம் முடிகிறது.

இரண்டாம் பாகம் ரியலிஸத் தன்மையோடு தொடங்குகிறது. தொழிலாளி – முதலாளி உறவின் முரணையும், பாட்டாளிகளின் மீதான முதலாளித்துவ எகத்தாளத்தையும் விவரிக்கிறது. எழுபதுகளின் சமகால அரசியல் குறித்த விமர்சனமும் இடம்பெறும் பகுதி இது. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்குகிறார். பெரியார் மறைகிறார் போன்ற வரலாற்று நிகழ்வுகள் கதையின் ஓட்டத்தில் வந்துபோகின்றன.

தான் பணிபுரியும் முதலாளி ஒருமுறை செங்கேணியை வழக்கம்போல நக்கல் அடிக்கிறார். அவன் பேசும் சென்னை மொழியின் தன்மை குறித்தது அந்த கிண்டல். சுயமரியாதை வரப்பெற்றுவிட்ட செங்கேணியோ பதிலுக்கு எகிறுகிறான். “நீங்க பேசுறது மட்டும் நல்ல தமிழா. அவா, இவா, ஆத்துலே எல்லாம் எந்த தமிழில் சாமி சேத்திக்க?” என்று கேட்கிறான். பொழைப்பில் மண் விழுகிறது.

மனைவி வேறு கர்ப்பமாகிறாள். முன்னிலும் அதிகம் சம்பாதிக்க உழைக்கும் செங்கேணிக்கு எதிர்பாராத விபத்து நேர்கிறது. அதனால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் அவன் வாழ்க்கையை அலைக்கழிக்கிறது.

கதையின் தொடக்கத்திலேயே ‘இரட்டை ஆயுள்’ தண்டனை வாங்கியவன் என்று தெரிந்துவிடுவதால், நாவலின் க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க யாரை போட்டுத் தள்ளப் போகிறானோ என்கிற பதட்டம் வாசிப்பவருக்கு கூடிக்கொண்டே போகிறது. கதையின் போக்கில் வரும் சில வில்லன்களை கவனித்ததுமே இவர்களைதான் கொல்லப் போகிறான் என்று யூகித்துக்கொண்டே வருகிறோம். நாம் யாருமே எதிர்பாராத ஒருவரை செங்கேணி கொல்ல நேர்கிறது.

வரலாற்றின் பசிக்கு மனிதர்கள்தான் இரை. சென்னைப் பட்டிணம், நாற்பது ஆண்டுகளில் சிங்கார சென்னையாக, மெட்ரோபாலிட்டன் நகராக தன்னை மாற்றிக் கொள்வதற்கு கொன்று தீர்த்த பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் பிரதிநிதிகளில் ஒருவன் செங்கேணி. இம்மண்ணில் பரம்பரை பரம்பரையாக பிறந்து வளர்ந்தவர்கள், இன்று சென்னைக்கு தொடர்பற்ற இடத்தில் எங்கோ தூரத்தில் அகதிவாழ்க்கை வாழ அலைக்கழிக்கப்படுகிறார்கள். யார் யாரோ இந்நகரை சொந்தம் கொண்டாடுகிறார்கள். மண்ணின் மைந்தன் என்கிற அடிப்படையில் தன் முன்னோரின் வாழ்க்கை எப்படி இருந்து இருக்கும் என்று கரன்கார்க்கி செய்துப் பார்த்திருக்கும் ஆய்வுதான் கறுப்பர் நகரம்.

வெறும் ஆவணமாகி இருக்கவேண்டிய வரலாற்றை ரத்தமும், சதையுமாக மாற்றியிருக்கிறது கரன்கார்க்கியின் பேனா. புனைவும், நிஜமுமாக… எது புனைவு, எது நிஜமென்று அறியமுடியாவகையில் உருவாகியிருக்கும் மந்திரவாத யதார்த்தம்.

இன்று எல்லாருக்கும் சென்னையைத் தெரியும். மெட்ராஸ் எப்படி இருந்தது என்பதை அறியவிரும்புபவர்கள் கறுப்பர் நகரத்தை வாசிக்கலாம். ஒடுக்கப்பட்டோரின் நியாயத்தை உணர நினைப்பவர்களும் வாசிக்கலாம். பொழுதுபோக்குக்கு ஒரு காதல் கதையையோ அல்லது குடும்பக்கதை, க்ரைம்கதை என்று ஏதோ ஒரு கதையை வாசிக்க விரும்புபவர்களும் இதை வாசிக்கலாம். வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சேதியை கறுப்பர் நகரம் கட்டாயம் வைத்திருக்கிறது.

நூல் : கறுப்பர் நகரம்

எழுதியவர் : கரன் கார்க்கி

பக்கங்கள் : 352

விலை : ரூ.195

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18
போன் : 24332424, 24332924, 24339024

19 ஜனவரி, 2015

எம்.ஜி.ஆரும், ஜெயமோகனும்!

பெண்கள் விஷயத்தில் எம்.ஜி.ஆரைப் பற்றி ‘வாய்மொழி வரலாறாக’ எவ்வளவோ தகவல்கள் உண்டு. சில நம்பகமான மனிதர்கள்கூட அவர் குறித்த நெகட்டிவ்வான சம்பவங்களை, நாம் நம்பக்கூடிய ஆதாரங்களோடு சொல்லியிருக்கிறார்கள்.

எதையுமே நம்பமாட்டேன். அதாவது நம்ப விரும்பமாட்டேன். இந்த விஷயத்தில் பகுத்தறிவுக்கு எல்லாம் ‘லீவு’ போட்டுவிடுவேன். எம்.ஜி.ஆர் விஷயத்தில் மட்டும் நான் ஆத்திகன். அவர்தான் கடவுள்.

சினிமாவில் அவர் காட்டிய ‘ஒழுக்கப் பிம்பம்’ அவ்வளவு நேர்த்தியானது. அது உண்மையென்று நம்பக்கூடிய அளவுக்கு மனசுக்கு நெருக்கமானது.

அனேகமாக எட்டாவது வயதில்தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ முதன்முறையாக பார்த்தேன். ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பாடல் முடிந்ததுமே, பேரழகியான அந்த தாய்லாந்து ஃபிகர் (14 வயது; தலைவரின் வயது அப்போது 55) நீச்சல்குளத்தருகே ஓடிவந்து தன் காதலை தெரிவிப்பார். ஓரிரு நிமிடங்களுக்கு முன்பாக பாடலில் இஷ்டத்துக்கும் புகுந்து விளையாடிய தலைவரோ, அசால்டாக வலக்கையில் (வாத்தியார் இடதுகைப் பழக்கம் கொண்டவர்) அந்த காதலை நிராகரிப்பார். கூடுதல் அதிர்ச்சியாக ‘தங்கச்சி’ என்று விளிக்க, தாய்லாந்து அவரைக் கட்டிக்கொண்டு கண்ணீர் உகுக்க, சட்டென்று படம் ‘பாசமலர்’ ரேஞ்சுக்கு காவியமாகி விடும். கடந்த முப்பது ஆண்டுகளாக அந்தப் படத்தை கிட்டத்தட்ட நூறுமுறை பார்த்தாகிவிட்டது. பைத்தியம் மாதிரி ஒரே படத்தை ஏன் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றால், எம்.ஜிஆர் தாய்லாந்திடம் காட்டிய அந்த ‘ஆண்மையான’ ஒழுக்கம்தான். சந்திரகலாவுக்காக மட்டுமே தன் கற்பை போற்றிப் பாதுகாப்பதும், தன் காதலன் என்று நினைத்து மஞ்சுளா கட்டியணைக்க ஓடிவரும்போது, ‘அண்ணீ, நான் ராஜூ. முருகனோட தம்பி’ என்று பதறிவிலகுவதுமாக… ‘மனுஷன்னா இவன்தான்யா…’ என்று அந்த வயசிலேயே தோன்றியது.

பெண்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று சுயக்கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாத்திரங்கள்தான் ரோல்மாடல் ஆனது.

தனிப்பட்ட ரசனை அடிப்படையில் கமல்ஹாசனையும், சாருநிவேதிதாவையும் பிடிக்குமென்றாலும் ‘பெண்கள்’ விஷயத்தில், அவர்களை எவ்விதத்திலும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை. ஒருவேளை இந்த பிற்போக்குத்தனமான, தாலிபானிஸ மனநிலையால்கூட ‘பெ.முருகன் கருத்துச்சுதந்திர’ விவகாரத்தில் பெரும்பான்மை தமிழிலக்கிய அறிவுஜீவிகளின் கருத்துக்கு நேரெதிர் கருத்து எனக்கு உருவாகியிருக்கலாம். ஆனாலும் சாகும்வரை சினிமா எம்.ஜி.ஆராகவே இருக்க விருப்பம்.

எனவேதான் நிஜவாழ்வில் பெண்களை எதிர்கொள்ள நேரும்போதெல்லாம் நட்புபாராட்டவோ, நெருக்கமாக பழகவோ கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களை ‘வாலண்டியராகவே’ தவிர்த்துவிடுவேன். அம்மா, சகோதரி, மனைவி தவிர்த்து (எம்.ஜி.ஆர் ஸ்டைல்தான்) மற்ற பெண்களிடம் “நல்லாருக்கீங்களா? ஊர்லே மழையெல்லாம் நல்லா பெய்யுதா?” ரேஞ்சுக்கு மேல் எதுவும் பேச நமக்கு சங்கதி இருப்பதில்லை. சமூகவலைத்தளங்களில் கூட வேண்டுமென்றே பெண்களிடம் சண்டை இழுத்து, ‘இரும்புத்திரை மனிதன்’ ஆக இமேஜை தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பதுண்டு.

‘சரோஜாதேவி’யெல்லாம் சும்மா. அப்பப்போ ஆல்டர் ஈகோவை திருப்திபடுத்திக்கொள்ள.

இம்மாதிரி எம்.ஜி.ஆர்களை நிஜவாழ்வில் சந்திக்க நேரும்போது, ‘அட நம்மாளு’ என்பது மாதிரி மனநெருக்கம் ஏற்படுகிறது. முடிந்தவரை கமல்ஹாசன்களிடமிருந்து விலகி வெகுதூரமாக ஓடிவிடுகிறேன் என்பது என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு தெரிந்த விஷயம்தான். கமல்ஹாசன்களும் நிரம்பியதுதான் உலகம் என்றாலும், அவர்களிடம் சேர்ந்துப் பழக என்னுடைய அந்தரங்கமான எம்.ஜி.யாரிஸ கொள்கை அனுமதித்துத் தொலைக்க மாட்டேன் என்கிறது.

எதையோ பேசவந்து எதையோ பேசிக்கொண்டிருக்கிறேன்.

நண்பர் சரவணகார்த்திகேயனின் ‘தமிழ்’ மின்னிதழ் வெளிவந்திருக்கிறது.

அதில் ஜெயமோகனின் பேட்டி கிட்டத்தட்ட ஐம்பது பக்கங்களுக்கு விரிகிறது. ஜெமோ ஏற்கனவே பலமுறை விடையளித்துவிட்ட அலுப்பூட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கேள்விகள். ஆனாலும் தன்னுடைய சுவாரஸ்யமான வெளிப்பாட்டுத் தன்மையால் அந்த சுமை வாசகனுக்கு ஏற்படாமல் தோள் மீது தாங்கியிருக்கிறார்.

பேட்டியில் வழக்கமான இடதுசாரி துவேஷம், தமிழ் கிண்டல், நித்ய சைதன்யபதி, இந்து, ஆன்மீகம், நாத்திகம், இந்திய ஞானமரபு, சுரா, விஷ்ணுபுரம் என்று பலமுறை ஜல்லியடித்து ஜெமோ கான்க்ரீட் கட்டிடம் எழுப்பிய விஷயங்களை தாண்டி, அவருடைய எம்.ஜி.ஆர்த்துவம் இறுதியில் பளிச்சென்று வெளிப்படுகிறது. ஜெயமோகனை என் மனதுக்கு மிக அருகிலான ஆளுமையாக உணர்வது, அவர் தன் குடும்பத்தை பற்றி பேசும்போதுதான்.

பேட்டியின் இறுதிப்பகுதியில் ஜெயமோகன் பேசும் இந்திய குடும்பச்சூழல் வன்முறை மாதிரியான விஷயங்கள் முழுக்க ஏற்றுக்கொள்ளத்தக்கவையே.

இன்று சைதன்யா தன்னுடைய அப்பா ஜெயமோகன் பற்றி வைத்திருக்கும் மதிப்பீட்டை, என்னுடைய ஐம்பத்து மூன்று வயதில் என்னுடைய மகள்களும் என்மீது வைத்திருக்க வேண்டும் என்று உளமாற விரும்புகிறேன்.

நெகிழ்ச்சியான வாசிப்பனுபவத்தை தந்ததற்கு நன்றி ஜெமோ & சரவணகார்த்திகேயன்.

12 ஜனவரி, 2015

தமிழ்மகன் : இரு நூல்கள்

‘பத்திரிகையாளர்களுக்கு இலக்கியம் எழுதவராது’ – பொதுவாக தமிழ் இலக்கியவாதிகளுக்கு இருக்கும் மூடநம்பிக்கை இது. நவீன தமிழிலக்கியத்தின் பிதாமகனான பாரதியாரே கூட பத்திரிகையாளர்தான். கடந்த நூறாண்டுகளில் தமிழ் இலக்கியத்தில் கணிசமாக பங்காற்றியிருக்கும் பத்திரிகையாளர்களின் பட்டியல் மிகப்பெரியது.

வெகுஜனப் பத்திரிகைகள் என்றாலே ஒருமாதிரி ஒவ்வாமையோடு அணுகிவந்த இலக்கியவாதிகள் சமீபகாலமாக இப்பத்திரிகைகளில் பணியாற்ற முட்டி மோதிக்கொண்டு வருகிறார்கள் என்பதே ஆரோக்கியமான மாற்றம்தான்.

அவ்வப்போது ஏதேனும் ஒரு பத்திரிகையாளர் தன்னுடைய இருப்பை உறுதியாகவே பதிவு செய்தாலும், இலக்கியவாதிகள் முடிந்தவரை அவரை இருட்டடிப்பு செய்வது வாடிக்கை. அம்மாதிரி தொடர்ச்சியாக இருட்டடிப்பு செய்யப்படுபவர்களில் முக்கியமானவர் தமிழ்மகன்.

இவரது ‘வெட்டுப்புலி’ நாவலை வாசகர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு ஆதரித்தார்களோ, இலக்கியவாதிகள் அவ்வளவுக்கு அவ்வளவு பதட்டம் அடைந்தார்கள். தனிப்பட்ட சந்திப்புகளில் ‘வெட்டுப்புலி’ குறித்து உயர்வாக பேசிய இலக்கிய ஜாம்பவான்கள் கூட, பொதுவில் அதுபற்றி ஒரு அபிப்ராயமும் தெரிவிக்காமல் தங்கள் நாகரிகத்தை வெளிப்படுத்தினார்கள்.

இருபத்தைந்து ஆண்டு காலமாக ‘நாவல்’ எழுதிவரும் தமிழ்மகன், தொழில்நிமித்தமாக வெகுஜன பத்திரிகைகளில் பணியாற்றுகிறார். சத்தமில்லாமல் தொடர்ச்சியாக இலக்கியம் படைத்து வருகிறார்.
அவருடைய முதல் நாவலான ‘மானுடப் பண்ணை’யே இதற்கு சாட்சி. தன்னுடைய 21வது வயதில் 1984ல் எழுதத் தொடங்கிய இந்நாவலை 25வது வயதில் 1989ல் முடித்திருக்கிறார். 1994ல் முதல் பதிப்பு வெளியாகியிருக்கிறது. 1996ல் தமிழக அரசு விருதும் பெற்றிருக்கிறது.

எமர்ஜென்ஸிக்கு பிறகு – உலகமயமாக்கலுக்கு முன்பு என்று யாராலும் அவ்வளவாக விவாதிக்கப்படாத மிக முக்கியமான அரசியல் சமூகச் சூழலை படம் பிடித்துக் காட்டியிருக்கும் நாவல் இது. குறிப்பாக இது பிற்படுத்தப்பட்டவர்களின் எழுச்சி தொடங்கிய காலம்.

நாவலின் நாயகன் பாலிடெக்னிக் முடித்த சிவில் என்ஜினியர். இன்று புற்றீசல்களாக பெருகிவிட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு அஸ்திவாரம் போடப்பட்ட காலம். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவனுடைய சில நாட்களின் டயரிக்குறிப்பாக ‘மானுடப்பண்ணை’ விளங்குகிறது. திராவிட இனமான உணர்வு கொண்ட அவன் எதிர்கொள்ள நேரிடும் மார்க்சிய விவாதங்களோடு, தன்னுடைய கொள்கை சார்ந்த புரிதல்களை ஒப்பிட்டுக் கொள்கிறான். கொள்கைகளும், சித்தாந்தங்களும் லவுகீக வாழ்க்கைக்கு எவ்வகையிலும் உதவாத கையறுநிலையை இறுதியில் அடைகிறான். சாதியம் தமிழ் வாழ்க்கையில் எத்தகைய அதிகாரத்தை கட்டமைத்து வைத்திருக்கிறது என்பதை இலைமறை காய்மறையாய் சம்பவங்களின் ஊடாக நுழைத்திருக்கிறார் தமிழ்மகன்.

2009க்குப் பிறகு வானத்தில் இருந்து குதித்தவர்கள் திராவிடத்துக்கு ஏதேதோ அருஞ்சொற்பொருள் அகராதி தயாரித்து உளறிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மண் எப்படி இருந்தது, திராவிடம் இங்கே என்ன சாதித்துக் கிழித்தது என்பதை அறிய ஆசை இருப்பவர்கள் ‘மானுடப்பண்ணை’ வாசிக்கலாம்.
‘ஆபரேஷன் நோவா’வுக்கு அறிமுகம் தேவையா?

‘ஆனந்தவிகடன்’ இதழில் வாராவாரம் ஆயிரக்கணக்கானோர் வாசித்து சிலிர்த்த தொடர்.

ஒரே நூலில் அவதார், இண்டர்ஸ்டெல்லார் இரு படங்களையும் பார்த்த அசாத்திய அனுபவத்தை தருகிறார் தமிழ்மகன்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் அல்ல. ஒவ்வொரு வரியிலுமே ‘ஆச்சரியங்கள்’ காத்திருக்கின்றன.

“சுஜாதாவுக்கு அப்புறம் யாரு சார் இண்டரெஸ்ட்டா எழுதறா?” என்று சலித்துக் கொள்பவருக்கு இந்த நாவல்தான் பதில்.

ஓர் எழுத்தாளனின் கற்பனை எந்தளவுக்கு உச்சத்தை எட்டமுடியும் என்பதற்கு ‘ஆபரேஷன் நோவா’வை உதாரணமாக காட்டலாம்.

* * * * * * * * * *

திராவிடனுக்கு இலக்கியமும் தெரியும், அதன் நெளிவுசுளிவுகளும் அத்துப்படி என்பதை பத்தாயிரத்தி ஒன்றாவது மனிதராக திரும்ப மீண்டும் நிரூபித்திருக்கும் ‘மக்கள் எழுத்தாளர்’ அண்ணன் தமிழ்மகனுக்கு வாழ்த்துகள்!

* * * * * * * * * *

இரு நூல்களையுமே உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

மானுடப்பண்ணை : விலை ரூ.130

ஆபரேஷன் நோவா : விலை ரூ.150

5 ஜனவரி, 2015

சுதந்திரக்கலவி தமிழகக்கலையா?

நம்முடைய முந்தையப் பதிவான ‘ஓவர் முற்போக்கு ஒடம்புக்கு நல்லதல்ல’ கட்டுரைக்கு நண்பர் ராஜன்குறை ஃபேஸ்புக்கில் எதிர்வினை ஆற்றி இருக்கிறார். அவருக்கு கிடைத்த அதிர்ச்சி நமக்கு கிடைக்கவில்லை.

ஏனெனில் முழுக்க மேற்கத்திய வாழ்க்கைமுறைக்கும், சிந்தனைகளுக்கும் முழுக்க ஆட்பட்டுவிட்ட ராஜன்குறைக்கு ‘சுதந்திரக் கலவி’ (நன்றி : பெருந்தேவி) மாதிரியான கலாச்சாரம் சாதாரணமானதாகவும், கேளிக்கைக்கு உரியதாகவும் தெரிவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தமிழகத்தில் வாழும் சராசரி நடுத்தரனான நாம் இன்னும் அந்தளவுக்கு பக்குவப்படவில்லை.

நாம் மிகவும் மதிக்கும் மானுடவியல் அறிஞர் பேராசிரியர் ராஜன்குறை. போலவே பெருமாள் முருகனும் நமக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்தான். எனவே இந்தப் பதிவையோ, முந்தையப் பதிவையோ இவர்களுக்கு எதிரான விரோதமான மனநிலையில் எழுதியதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்த இரு பதிவுகளுமே ‘மாதொரு பாகன்’ குறித்த சர்ச்சைக்கு மட்டுமே உரித்தானது.

ராஜன்குறையின் அதே ஃபேஸ்புக் திரியில் நண்பரும் அறிவுஜீவி என்று அவரை அவரே நம்பிக் கொண்டிருப்பவருமான ரோஸாவசந்த் எழுதியிருக்கும் பின்னூட்டமும் ஆச்சரியப்படுத்தவில்லை. ஏனெனில் உலகில் தனக்கு மட்டுமே அறிவு என்கிற ஆற்றல் இருப்பதாக நம்பிக் கொண்டிருப்பவர் இப்படிதான் பின்னூட்டமிட முடியும். ‘ஸ்டேண்ட்’ என்பதை நண்பர் ரோஸாவஸந்த் ‘பஸ் ஸ்டேண்ட்’ என்பதாக புரிந்துக் கொண்டிருக்கிறார். சூழல்தான் ஒருவனது நிலைப்பாட்டை தீர்மானிக்கும். நிலைப்பாடு அவ்வப்போது மாற்றத்துக்குறிய ஒன்று என்பதை பெரியாரை வாசித்தாலே புரிந்துக்கொள்ள முடியும். மாற்றிக்கொள்ளும் நிலைப்பாட்டுக்கு ஒருவன் தரும் ஜஸ்டிஃபிகேஷன்தான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமா நிராகரிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும். இளையராஜாவின் இசையை கேட்டு ரசித்து ட்விட்டு போடுவதுதான் தமிழ் அறிவியக்க செயல்பாட்டின் உச்சக்கட்டமான நடவடிக்கை என்று நம்பிக்கொண்டிருக்கும், லிங்கா கட்டவுட்டுக்கு பால் ஊற்றும் ரஜினிரசிக மனப்பான்மைக்கு இணையான மனோபாவம் கொண்ட ரோசாவிடம் இதையெல்லாம் விவாதிக்க முடியாது. பிழைப்புக்கு போராளியாகவும், சந்தர்ப்பவசத்தால் இலக்கியவாதியாகவும் ஆகிவிட்ட சிலர் ரோசாவுக்கு ‘லைக்’ போட்டிருக்கிறார்கள். அவர்களுடைய நிர்ப்பந்தத்தையும் புரிந்துக்கொள்ள முடிகிறது.

ஓக்கே. பேராசிரியர் ராஜன்குறைக்கு வருவோம்.

“வாய்மொழி வரலாறு என்பதை அங்கீகரிக்கப்பட்ட அறிவுத்துறை என்று யுவகிருஷ்ணா ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று அன்புடன் அறிவுறுத்துகிறார்.

மானுடவியல் அறிஞர் ஒருவர் இவ்வாறு பேசுவதைவிட அபத்தமான விஷயம் வேறில்லை. எந்தெந்த வாய்மொழி தகவல்கள் வரலாறாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கான சான்றுகளை ராஜன்குறை தரவேண்டும். இன்று செய்திகளுக்கே ஆதாரம் கேட்கப்படும் சூழலில், வரலாற்றுக்கு மறுக்கமுடியாத ஆதாரங்கள் தேவை. ஆவணரீதியிலான தரவுகள் நிறைந்திருக்கும் வரலாற்றுத் தகவல்களையே கேள்விக்குள்ளாக்கக்கூடிய இன்றைய சூழலில் இப்படிப்பட்ட கருத்தை ஒரு பேராசிரியர் முன்வைப்பது துரதிருஷ்டவசமானது. நிறைய தரவுகள் நிறைந்த ‘திராவிட இனம்’ என்கிற கருத்தாக்கத்தையே வரலாற்றின் மாறுபட்ட வேறு தகவல்கள் மற்றும் அறிவியல் அடிப்படையில் இன்று மறுப்பவர்களோடு நாம் உரையாடிக் கொண்டிருக்கிறோம். நரசிம்ம பல்லவன் வாதாபியை கொளுத்தினானா, சாளுக்கியனை வென்றானா என்பதற்கே இருவேறு வரலாறு இருக்கிறது. இரண்டுக்குமே அசைக்கமுடியாத கல்வெட்டு ஆதாரங்களும் இருக்கின்றன.

நிலைமை இப்படியிருக்கையில்-

‘மாதொருபாகன்’ நூலில் சித்தரிக்கப்பட்டிருப்பதைப் போன்ற வாய்மொழி வரலாற்றினை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

‘ரஜினிக்கும் கமலுக்கும் சண்டை… அதனாலே’ என்று ராகத்தோடு பாடப்படும் (இப்போது விஜய்க்கும் அஜித்துக்கும் சண்டை என்று பரிணாமம் பெற்றுவிட்டது) வாய்மொழித் தகவல்களையும் வரலாற்றாக்கி விடலாமா. கிசுகிசு வரலாறு ஆகுமா. லட்சுமிகாந்தனும், கயிலைமன்னனும் பரப்பியதெல்லாம் வரலாறா?

தமிழ்நாட்டிலும் carnival உண்டு. ராஜன்குறை மொழியில் ‘வரம்பு மீறுவது’ ஆங்காங்கே ஒருசில மனிதர்களிடம் நடைபெற்றிருக்கலாம். நடைபெறுகிறது. இது individual ஆன விஷயம். ஆனால், ஒட்டுமொத்த திருச்செங்கோடுவாழ் சமூகமே ‘சுதந்திர கலவி’ திருவிழாவில் கலந்துக் கொண்டார்களா. நடந்திருந்தால் அது பிள்ளைப்பேறு இல்லாத மகளிருக்காக நடத்தப்பட்டதா என்பதுதான் இங்கே சர்ச்சைக்குரிய விஷயம். அப்படி இதற்கு ஆதாரமில்லாத பட்சத்தில் அவ்வாறு சித்தரிக்கப்பட்டிருப்பது திருச்செங்கோட்டுக்காரர்களை புண்படுத்தும் என்பது இயல்பானதுதான்.

எழுபதுகளின் துவக்கம் வரை சகஜமாக ‘சுதந்திர கலவி’ நடைபெற்றிருப்பதாக ராஜன்குறை அறிந்திருப்பதாக சொல்கிறார். ராஜன்குறை மட்டுமல்ல. நிறைய பேர் இப்படிப்பட்ட திருவிழாக்களை கண்களில் கனவு மின்ன ஆர்வத்தோடு சொல்கிறார்கள். இவர்களில் யாரேனும் அப்படிப்பட்ட திருவிழாக்களில் கலந்துக்கொண்டது உண்டா என்று கேட்டால், ‘கேள்விப்பட்டேன்’, ‘நண்பர் சொன்னார்’ ரீதியில்தான் சொல்கிறார்கள். கடந்த நூறாண்டுகளில் தமிழகத்தில் நடந்த பெரும்பாலான சம்பவங்கள் அனைத்தையும் ஊடகங்கள் பதிவு செய்திருக்கின்றன. இப்படிப்பட்ட திருவிழா ஒன்றினை ஏதேனும் ஊடகம் ‘லைவ் ரிப்போர்ட்டாக’ பதிவு செய்திருக்கிறதா என்று அறியவிரும்புகிறேன். ஏனெனில் ஊடகங்களுக்கு ‘ஹாட்கேக்’ ஆன மேட்டர் இதுவென்பதை, ஊடகத்தில் பணிபுரிபவனாக உணருகிறேன்.

அடுத்து,

“புனைவு என்பதை உண்மை என்பதாக புரிந்துகொண்டுவிடுவார்கள் என்பதற்காக புனைவுகளில் எல்லோருக்கும் மகிழ்ச்சியளிக்கும் விதமாகத்தான் எழுதவேண்டும் என்றெல்லாம் நிர்ப்பந்திக்கமுடியாது. இதையெல்லாம் விட முக்கியமான பிரச்சினை அப்படி என்ன கொலைகுற்றத்தையா பெருமாள் முருகன் எழுதிவிட்டார்?” என்கிற அதிமுக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கிறார் ராஜன்குறை.

புனைவுகளில் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் எல்லா நேரத்திலும் எழுதமுடியாதுதான். அப்படி யாரும் யாரையும் நிர்ப்பந்திக்கவும் முடியாதுதான். ஆனால் ராஜன்குறையின் இந்த ஸ்டேட்டஸுக்கு ‘லைக்’ போட்ட 100+ பேர்களை குறிப்பாக தொடர்புபடுத்தி, இம்மாதிரி புனைவு எழுதினால் அவர்கள் நூலை எரிப்பார்களா அல்லது கட்டிப்பிடித்து கொஞ்சி கருத்து சுதந்திரம் பேசுவார்களா?

யார் வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் யாரைப்பற்றி வேண்டுமானாலும் எழுதிவிட்டு போகலாம் என்பதையெல்லாம் கருத்துச் சுதந்திரம் என்று பார்க்கமுடியாது. என்னுடைய கருத்துச் சுதந்திரத்தின் வரம்பளவு உங்களுடைய மூக்கின் அரை இஞ்சுக்கு முன்னால் முடிந்துவிடுகிறது அல்லவா. அப்படியில்லை. கருத்துவேறுபாடு கொண்டவரின் மூக்கை உடைப்பேன் என்றெல்லாம் விதண்டாவாதம் பேசினால் எந்த விவாதத்தையுமே நாம் நடத்த முடியாது.

ஒரு சமூகம் நல்லிணக்கத்தோடு சமதர்ம சமூகமாய் செயல்பட வேண்டியதின் அவசியத்தை உணர்ந்திருப்பது எவரையும் விட ஒரு படைப்பாளிக்கு அவசியமான அம்சமாகும். ஏனெனில் கலை என்பது மக்களை கரைசேர்க்கக்கூடிய கலங்கரை விளக்கம் என்கிற நம்பிக்கை மனித சமுதாயத்துக்கு இருக்கிறது. அவசியமற்ற கலகத்தை உருவாக்குவது படைப்பாளியின் பணியா?

புனைவு என்கிற கருத்துச் சுதந்திரம் பெருமாள் முருகனுக்கு மட்டுமா இருக்கிறது. இதே சுதந்திரத்தை ராஜன்குறை கனவிலும் எதிர்க்கும் இந்துத்துவர்களோ அல்லது வேறேதேனும் பிற்போக்குச் சக்திகளோ பயன்படுத்தினால் அதையும் அனுமதித்துவிடலாமா. மனு எதையோ எழுதிவிட்டு போய்விட்டான். அவனுடைய கருத்துச் சுதந்திரத்துக்கு நம்மால் அப்படியே மதிப்பளிக்க முடிகிறதா. கொளுத்துகிறோம் இல்லையா. நாளை ராஜன்குறையை சித்தரித்து அவதூறான புனைவு எழுதப்படுமேயானால் அதையும் அப்படியே அனுமதித்துவிடலாமா? அறிஞர் அண்ணா எழுதிய ‘தீ பரவட்டும்’ நூலை இங்கே பேராசிரியருக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

ராஜன்குறைக்கு புரிகிறமாதிரி ஒரு சம்பவத்தை இங்கே எடுத்துச் சொல்கிறேன்.

அடிக்கடி சாருநிவேதிதா எழுதுவார். ‘ரெண்டாம் ஆட்டம்’ என்கிற அவருடைய மகத்தான நாடகத்தை நடத்தவிடாமல் மதுரையில் வன்முறை செய்தார்கள் என்று. புதிதாக அதை வாசிக்கும் வாசகர்களுக்கு கருத்துச் சுதந்திர உணர்வு பீறிட்டு எழும். ஆனால், தடுத்தவர்களும் முற்போக்காளர்களே, கருத்துச் சுதந்திரம் பேசுபவர்களே என்கிற உண்மை அப்படியே ‘வரலாற்றில்’ அமுங்கிவிட்டது. அவர்கள் ஏன் தடுத்தார்கள் என்பதற்கான நியாயமும், காரணமும் யாராலும் பரிசீலிக்க முடியாவண்ணம் மறைக்கப்பட்டு விட்டது.

வேறொன்றுமில்லை. எல்லாவற்றுக்கும் ‘இடம், பொருள், ஏவல்’ உண்டு என்பதுதான் emphasis செய்து இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம்.

பெருமாள் முருகன் வெறும் புனைவாக மட்டுமே இதை முன்வைக்கிறார் என்கிற வாதத்தை நிறையபேர் பேசுகிறார்கள். திருச்செங்கோடு என்பதை திருச்செங்காடு என்றும் அவர் புனைந்துவிட்டிருந்தால் பிரச்சினை எழ என்ன வாய்ப்பு இருந்திருக்கும்?

ஆனால் அவரால் அப்படி செய்திருக்க முடியாது. ஏனெனில் பெங்களூரைச் சேர்ந்த ‘கலைகளுக்கான இந்திய மையம்’ – IFA (ரத்தன் டாட்டா அறக்கட்டளையின் ஓர் அங்கம்) நிறுவனத்துக்கு விண்ணப்பித்து, அவர்களது உதவியோடு (வேறென்ன பண உதவிதான்) ‘கள ஆய்வு’ மேற்கொண்டு, அதன் அடிப்படையில் இந்த நூலை பெருமாள் முருகன் எழுதியிருக்கிறார். எனவே ‘சுதந்திரக் கலவி’ என்பது ‘தமிழகக்கலைகள்’ என்றுதான் டாட்டா அறக்கட்டளையின் ஆவணங்களில் வரலாறாக –அதுவும் திருச்செங்கோட்டின் கலையாக- பதிவாகப் போகிறது. அப்படியிருக்க இதை வெறுமனே புனைவு, கருத்துச்சுதந்திரம் அளவுகளுக்குள் எப்படி அறிவுஜீவிகளும் சுருக்குகிறார்கள் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. சுதந்திரக் கலவியை தமிழகக்கலை என்று ஏற்றுக்கொள்ள ராஜன்குறைக்கும், அவருடைய திரியில் பின்னூட்டமிட்டிருக்கும் பெருந்தேவிக்கும் மனத்தடங்கல் இருக்காது என்று அவர்களது கருத்துகளில் தெரிகிறது. ஆனால் ‘லைக்’ போட்ட, ‘கமெண்ட்’ போட்ட மற்ற தமிழர்களும் இதை ஒப்புக்கொள்கிறார்களா என்பதைதான் அறிய விரும்புகிறேன்.

“இதை எதற்காக பெண்ணியவாதிகள் எதிர்க்கவேண்டும் என்று நினைக்கிறார் என்றும் புரியவில்லை” என்று பேராசிரியர் ஐயம் எழுப்புகிறார்.

இதுதொடர்பான என்னுடைய பதிவிலேயே திருச்செங்கோட்டை சேர்ந்த பெண் ஒருவர் பின்னூட்டம் இட்டிருக்கிறார். ராஜன் அதை வாசிக்கும்போது ஓரளவுக்கு அவருக்கு நிலவரம் புரிபடலாம்.

அந்தப் பின்னூட்டம் இதுதான் :

“இந்த நாவலை படித்தேன், ஒரு சில பக்கங்களை படித்தவுடன் மிகவும் அபத்தமாக தோன்றியது, நானும் திருச்செங்கோட்டில் பிறந்தவள் என்பதால் அல்ல ஒரு பெண் என்பதால் அதுவும் (being a late child of my parents), என் அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன் குழந்தை பிறக்காதவர்களை இந்த சமூகம் எவ்வளவு மோசமக நடத்தும் என்று. ஒரு மாசம் முன்னாடி தான் எனக்கு கல்யாணம் முடிவு செய்தார்கள், இந்த எதிர்ப்பு பக்கத்தை பர்த்துவிட்டு அவர் கேட்டார் நீ கூட Late child தானே என்று கேட்டார் (because he is from chennai and he have no idea about my native, just see how much impact its creating for the people who didnt have idea of that place, may be author just taken this place to tell somthing but its affecting the people who are living there), விளையாட்டாக தான் கேட்டார் என்றாலும் எவ்வளவு அபத்தாமான கருத்தை இந்த எழுத்தாளார் மனதில் பதிக்கிறார் அவருடைய பொண்ன இப்படி யாரவது கேட்டிருந்தால் அவருக்கு எப்படி இருந்திருக்கும்.
என் பாட்டி சொன்னாங்க அந்த ஊர் அப்படி பட்ட ஊர் என்றால் எப்படி என் மகளை கல்யாணம் கட்டி கொடுத்திருப்பேன் என்று (சிந்திக்கபட வேண்டிய ஒன்று தான் இவர் சொல்வது போல இப்படி ஒன்று வழக்கத்தில் இருந்திருந்தால் எப்படி பெண் கொடுத்திருப்பார்கள்).

எழுத்து சுதந்திரம் மதிக்கபடவேண்டிய ஒன்று தான் ஆனால் அது அடுத்தவர்களைக் காயப்படுத்தாதவரை.

திரு பெருமாள் முருகன் அவர்களுக்கு ஒருவேளை குழந்தை இல்லாமலோ அல்லது ரொம்ப நாள் கழித்து குழந்தை பிறந்திருந்தால் இப்படி எழுதியிருக்க தோன்றியிருக்காது காரணம் இவர் மனைவியயும் இழிவு படுத்தபட்டிருப்பார் அல்லவா.

இதுக்கு எதிர்ப்பு இப்ப வருவதர்க்கு என்ன காரணம் என்று தெரியவில்லை ரொம்ப முன்னாடியே எதிர்க்கபட்டிருக்க வேண்டிய புத்தகம். என்ன மாதிரி ஒவ்வொருவரையும் ரொம்ப கஷ்டபடுத்திய புத்தகம்.

என் ப்ளாக்ல கூட என்னால இத எழுத முடியல, சில வக்கிர மனங்கள் எப்படி இத யோசிக்கும் என்று தெரிந்ததால். பெயர கூட சொல்லாமால் இதை இங்கு பகிர்கிறேன். இந்த புத்தகத்துக்கு support பண்றவங்க எங்க மன நிலையை யோசித்து பாருங்க.”


தாமதமான பிள்ளைப்பேறு அல்லது பிள்ளைப்பேறு இன்மை போன்ற சமூகப் பிரச்சினைகளில் தமிழகப் பெண்கள் எதிர்கொள்ள நேரிடும் கேள்விகளைக் குறித்து மானுடவியல் அறிஞரான ராஜன்குறை களஆய்வு செய்யவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

பின்னூட்டமிட்ட சகோதரியின் உணர்வை என்னாலோ, ராஜன்குறையாலோ முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாது. ஏனெனில் நாங்கள் இருவரும் ஜஸ்ட் ஆண்கள். அதிலும் ராஜன் அறிவுஜீவி வேறு. பெண்ணாகவோ அல்லது குறைந்தபட்சம் அர்த்தநாரீஸ்வரராக இருந்தாலாவது அந்த பெண்ணின் வலியை உணரமுடியும்.

ராஜனின் பதிவில் பிரச்சினைக்கு தொடர்பில்லாமல் ஒரு வரி துருத்திக்கொண்டு நிற்கிறது.

“நவீன கால காம இயந்திரங்களில் மாட்டிக்கொண்டு சரோஜோ தேவி எழுதிக்கொண்டிருக்கும் இந்த இளைஞருக்கு கடந்த காலம் புரியாமல் போவதில் வியப்பில்லை”

ஒன்றுமில்லை. பேராசிரியர் நம்மை இடுப்புக்குக் கீழே அடிக்கிறாராம். ஒரு பெண்ணோட வலி இன்னொரு பெண்ணுக்குதான் தெரியும் என்பதைப் போல, ஒரு பேராசிரியரின் வலி இன்னொரு பேராசிரியருக்கு தெரிகிறது. ‘எங்களையெல்லாம் நோண்டுனா என்னாகும் தெரியுமில்லே?’ என்கிற அறிவுஜீவித்தனமான மிரட்டல் இது.

ஒண்ணும் ஆகாது சார்.
‘சரோஜாதேவி’ என்பது செய்திகள், சம்பவங்கள், கட்டுரைகள், கதைகள் வழியாக சுவாரஸ்யமான பாலியல் வெகுஜன வாசிப்பைக் கோரும் நூல். அதனுடைய target audienceஐ அது சரியாகவே திருப்திபடுத்துகிறது. எல்லாரும் சரோஜாதேவி எழுத்துகளை எழுதிவிட்டு உன்னத இலக்கிய அந்தஸ்து கோருகிறார்கள். நான் மிக சாதாரணமாக எழுதிய எழுத்துகளையே ‘சரோஜாதேவி’ என்று டைட்டிலிட்டிருக்கிறேன். அவ்வளவுதான்.

சுவாரஸ்யத்துக்கும் உங்களுக்கும் சற்றும் சம்பந்தமில்லை என்பதால், இது நிச்சயமாக உங்களோட cup of tea கிடையாது. எனவே நான் எழுதியிருக்கிறேன் என்கிற ஒரே காரணத்துக்காக உங்களிடம் கொடுத்து படிக்கச் சொல்லி சித்திரவதை எல்லாம் செய்யமாட்டேன். ஆனால் என்ன, ஏதுவென்று தெரியாத ஒரு விஷயத்துக்கு, நீங்கள் படிக்காத ஒரு புத்தகத்தை, உங்களுடைய குறிப்பிட்ட ஒரு கருத்துக்கு மாறுபாடாக இருப்பவனை இழிவுசெய்ய பயன்படுத்தும் ஆயுதமாக பயன்படுத்துகிறீர்கள். நீங்கள்தான் இதுபோன்ற விஷயங்களில் ஜெயமோகனை கண்டிக்கிறீர்கள். ஜெயமோகனை கண்டிப்பவர்களிடம் ஜெயமோகனைவிட பன்மடங்கு ஜெயமோகத்தனம் இருக்கிறது என்பதற்கு நீங்களே நல்ல உதாரணமாகி விட்டீர்கள். நன்றி. Intellectuals என்று அறியப்படுபவர்கள் தேவை ஏற்படும்போது, சாதாரணர்கள் என்று அவர்கள் கருதக்கூடியவர்களை எப்படி அறிவுத்தீண்டாமையோடு நடத்துவார்கள் என்பதை ஏற்கனவே அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். சாதி, மதத்தின் பெயரால் நடப்பது பார்ப்பனீயம் என்றால்.. அறிவின் பெயரால் நடக்கும் இந்த கருத்து வன்முறைக்கு என்ன பெயர் வைப்பது?

கடைசியாக…

என்னுடைய பதிவில் பேசப்பட்ட மாதொருபாகனுக்கான ‘விளம்பர அரசியலை’ கவனமாக தவிர்த்தே பேராசிரியர் பேசியிருக்கிறார்.

ஏனெனில்…

அவருக்கே தெரியும். நடந்தது நல்ல நாடகம். ‘ஆலவாயன்’, ‘அர்த்தநாரீஸ்வரர்’ வெளியான நாளில் ஹிந்து, தினமலர் பத்திரிகைகள் கொடுத்த முன்னோட்ட விளம்பரங்கள் இதற்கு நல்ல ஆதாரம்.

இந்த நாடகத்தில் கருத்துரிமைப் போராளிகள் அத்தனை பேரும் கோமாளிகளாகி விட்டார்கள். நாடகத்தை நடத்தியவர் அடக்கமாட்டாமல் சிரித்துக் கொண்டிருப்பார். அதை மறைக்க அல்லது திசைதிருப்ப இப்படிதான் ஏதாவது புள்ளைப்பூச்சியை போட்டு அடித்துக் கொண்டிருப்பார்கள். அல்லது சரக்கடித்துதான் இந்த அவலத்தை மறந்தாக வேண்டும்.

தட்ஸ் ஆல்.

29 டிசம்பர், 2014

ஓவர் முற்போக்கு ஒடம்புக்கு நல்லதில்லை

 இன்னமும் ‘மாதொருபாகன்’ வாசிக்கவில்லை.

எனவேதான் அந்த நூல் மதவெறியர்களால் எரிக்கப்பட்டது என்று கேள்விப்பட்டபோது கோபம் வந்தது. ஒருவேளை முன்பே வாசித்திருந்தால் கோபப்பட்டிருக்க வாய்ப்பேயில்லை. ‘மாதொருபாகன்’ நாவலுக்கும், எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கும் ஆதரவான இயக்கங்களில் பங்குகொள்ள தயாராக இருப்பதாக சில நண்பர்களிடம் ஒப்புக்கொண்டிருந்தேன். என்னுடைய ஆதரவை முற்றிலுமாக ‘வாபஸ்’ வாங்கிக் கொள்கிறேன்.

நண்பர் ஒருவர் அந்நாவலின் 'objectionable content' என்னவென்பதை முகநூலில் இட்டிருந்தார். சற்றுமுன்புதான் அதை பார்த்தேன். அந்த இரு பக்கங்களையும் வாசித்தபோது திருச்செங்கோடுவாழ் நண்பர்களுக்கு எவ்வளவு கோபமும், வன்மமும் ஏற்படும் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. மடிப்பாக்கத்தில் இப்படியொரு ‘தேர்த்திருவிழா’ நடந்தது என்று ஏதேனும் ஒரு படைப்பாளி, தன் கருத்துச் சுதந்திரத்தின் வாயிலாக புனைந்திருந்தாலும் எனக்கும் இப்படிதான் இருந்திருக்கும்.

ஆதாரமில்லாமல் வாய்வழியாக சொல்லப்படுகிற ஒரு கதையை, இலக்கியத்தின் ஏதோ ஒரு வடிவில் பதிவு செய்யப்படும்போது அது வரலாறாக நம்பப்பட்டு விடுகிற ஆபத்து இருக்கிறது. புராண இதிகாசப் பாத்திரங்களையே கூட மக்கள் அப்படிதான் நம்பி தொலைத்துக்கொண்டு நம் கழுத்தை அறுக்கிறார்கள் இல்லையா? இன்னமும் ராமர்பாலம் இருக்கிறது, அதை ராமரின் ப்ளான்படி குரங்குகள் போட்டது என்று எந்த லாஜிக்கும் இல்லாமல் மத்திய அரசேகூட நம்புகிறதுதானே?
ஏதோ காரணங்களால் குழந்தைப்பேறு தள்ளிப்போகும் அல்லது நிரந்தரமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண்களை ‘மலடி’ என்று இழிவுப்படுத்துவதைவிட மோசமான இழிவுப்படுத்துதலை ‘மாதொருபாகன்’ செய்திருக்கிறது. பெண்ணியவாதிகள், எப்படி இந்த நாவலை ஆதரித்து பேசுகிறார்கள் என்றெல்லாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அவர்களும் இன்னமும் என்னைப்போலவே நாவலை வாசித்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது.

இப்படியொரு ‘கூட்டுக்கலவி’ சித்தரிப்பு, அந்த நாவலுக்கு அவசியமாக வேண்டுமென்கிற கட்டாயம் இருக்கும் பட்சத்தில் ஏதோ ஒரு கற்பனையூரில் நடைபெறுவதாக எழுதியிருக்கலாம். அப்படியும்கூட குழந்தை இல்லாத பெண்களுக்கு இப்படியொரு வாய்ப்பினை கொடுத்தார்கள் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் தேவை. ஆதாரமற்ற அவதூறுகளை முற்போக்கின் பெயரால் ஆதரிக்க முடியாது. ‘தேவடியா பையா’ என்று திட்டினால் முற்போக்காளனாக இருந்தாலும், அவனுக்கும் கோபம் வருவதுதானே யதார்த்தம்?

“எல்லா விஷயங்களுக்கும் எழுத்துப்பூர்வமான ஆதாரத்தை வழங்க முடியாது” என்கிறார் பெருமாள் முருகன். இது தட்டிக் கழிக்கும் பொறுப்பற்ற பதில்.

வரலாற்று ஆய்வறிஞரான அ.கா.பெருமாள், தியோடர் பாஸ்கரன் போன்றவர்கள் சில தகவல்களை சொன்னார்கள் என்றும் அவர் சொல்கிறார். ஆதாரப்பூர்வமாக அவர்கள் ஏதேனும் சொன்னார்களா, அல்லது வாய்வழி வார்த்தையாக பரப்பப்பட்ட தகவல்களா என்று தெரியவில்லை.

மேலும் இந்த தேர்த்திருவிழா சித்தரிப்புகளுக்கு வாய்வழியாக சொன்னவர்கள்தான் ஆதாரம், அவர்களை அறிமுகப்படுத்தினால் பாதுகாப்பு இருக்காது என்றும் சொல்கிறார். வாய்வழி வார்த்தைகள் எப்படி வரலாறு ஆகும்?

அதுவுமின்றி 2011ல் வெளியான நாவலுக்கு ஏன் 2014ல் போராட்டம் என்பது புரியவில்லை. மூன்று ஆண்டுகளாக இதை திருச்செங்கோடுகாரர்களோ, ஜாதிய அமைப்புகளிலோ அல்லது இந்து அமைப்புகளிலோ ஒருவர்கூடவா வாசித்ததில்லை. எங்கோ லாஜிக் ‘லைட்டாக’ உதைப்பது போலதான் இருக்கிறது. ‘மாதொருபாகன்’ நாவலின் இருகோண முடிவு தனித்தனியாக இரண்டு நாவலாக ‘ஆலவாயன்’, ‘அர்த்தநாரி’ என்று இப்போது காலச்சுவடு வெளியிடப் போகிறதே, அதற்கான டிரைலரா இது?

9 டிசம்பர், 2014

சகுனியின் தாயம்

இதில் ரகசியம் எதுவுமில்லை. ‘கர்ணனின் கவசம்’ நூலின் என்னுரையிலேயே கே.என்.சிவராமன் குறிப்பிட்டு விட்டார். நரேனும், நானும் என்னவென்பதை. அதேதான். ‘சகுனியின் தாயம்’ தொடரிலும் எங்களுக்கு அதே வேஷம்தான்.

2013ஆம் ஆண்டின் இறுதிநாளில் முதல் அத்தியாயத்தை வாசித்தது ஏதோ நேற்று நடந்த போலிருக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டுகள் நிறைவடையப் போகிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் பொங்கல் இதழில் இருந்து குங்குமத்தில் இத்தொடர் வரத் தொடங்கியது என்று நினைவு. 49வது அத்தியாயத்தை சற்று முன்னர்தான் வாசித்தேன் (குங்குமம் வாசகர்கள் அடுத்த திங்கள் அன்று வாசிப்பார்கள்). 50வது அத்தியாயத்தோடு கதை முடிகிறது. ஒரு வருடமாகவா இந்த தாயத்தை உருட்டிக் கொண்டே இருந்திருக்கிறோம் என்று ஆச்சரியம் மேலிடுகிறது.

துரியோதன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சகாதேவன் குறித்துக் கொடுத்த முகூர்த்தத்தில் சகுனியின் தாயம் உருள்கிறது. தொடரின் ஆரம்பம் இதுதான்.

ஸ்காட் வில்லியம்ஸ் என்கிற பன்னாட்டு தரகு முதலாளிக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?

ஆலிஸின் மாய உலகம் போன்ற இடத்துக்குள் மகேஷ் ஏன் பிரவேசித்தான்?

யவனராணியும், இளமாறனும் புகார் நகருக்குள் ஏன் நுழைந்தார்கள்?

இப்படியாக மூன்று தளங்களில் தனித்தனியாக ‘சகுனியின் தாயம்’ பயணிக்கிறது. மூன்றுமே ஒன்றுக்கொன்று எவ்வகையிலும் தொடர்பில்லாதவை. ஆனால் மூன்றுக்கும் பொதுவான ஒரு புள்ளி உண்டு.
இந்நாவலின் தீம் முக்கியமானது. சமகாலத்து நடப்புகள் குறித்த கூர்மையான விமர்சனம் கொண்டது. அதாவது ஆடும், ஓநாயும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். தேவை ஏற்படும்போது ஆடு தன்னை ஓநாயாகவும், ஓநாய் தன்னை ஆடாகவும் மாற்றிக் கொள்கிறது. யார் இப்போது ஆடாக இருக்கிறோம், யார் ஓநாயாக இருக்கிறோம் என்று நம்மை நாமே ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஸ்காட் வில்லியம்ஸ் கதை சமகாலத்தில் நடப்பது. ஆரம்பத்தில் ‘ரெட் மார்க்கெட்’ கதை என்பதைப் போன்று பாவ்லா காட்டிவிட்டு நக்சல்பாரிகள், தர்மபுரி கலவரம் என்று தமிழகத்தின் வெகுஜனத் தளத்தில் அவ்வளவாக அறியப்படாத களத்துக்குள் புகுந்து பயணிக்கிறது. ஓர் அத்தியாயம் முழுக்கவே தமிழக நக்ஸல்பாரிகளின் வரலாற்றை எளிய அறிமுகமாக கொடுக்கிறது. போலவே தர்மபுரி கலவரத்தை அப்படியே இன்னொரு அத்தியாயம் படம் பிடித்துக் காட்டுகிறது. ஒரு பிரபலமான போலிஸ் அதிகாரியையும், மறைந்துவிட்ட சந்தன கடத்தல்காரர் ஒருவரையும் நினைவுபடுத்துகிற பாத்திரங்கள் இப்பகுதிக்கு சுவாரஸ்யம் சேர்க்கின்றன. ஒரு நக்ஸல்பாரி, வெகுஜன இதழில் தொடர் எழுதினால் அப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது இந்த பகுதி.

மகேஷின் கதை முழுக்க ஃபேண்டஸி. வாண்டுமாமா நடையில் எழுதப்பட்ட இந்த கதையில் ஹாரிபாட்டர், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் என்று அத்துணை சூப்பர்ஹீரோக்களும் உள்ளே வருகிறார்கள். சிவராமனின் ஏரியாவான மேஜிக்கல் ரியலிஸம், போஸ்ட் மார்டனிஸம் எல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கும் பகுதி இதுதான்.

மூன்றாவது சாண்டில்யனின் ஏரியா. அவருக்கான ட்ரிப்யூட்டாக ‘யவனராணியே’ வருகிறார். இளமாறனின் தினவெடுக்கும் தோள்கள், யவனராணியின் கவர்ச்சியான மார்புகள் என்று லாகிரி வஸ்துகள் ஏராளமாக தூவப்பட்டிருந்தாலும் பண்டைய தமிழகத்தின் அரசியல் சூழ்ச்சிகள் குறித்த சித்தரிப்புதான் இப்பகுதியை ஆக்கிரமிக்கிறது. சேர சோழ பாண்டிய மன்னர்களுக்கு இடையேயான முரண்கள், சீன குறுக்கீடு, யவனர்கள் ஆதிக்கம் என்று கலர்ஃபுல்லான போர்ஷன் இது.
முந்தைய ‘கர்ணனின் கவசம்’ நூலில், சமகால இலக்கிய பாணி டெக்னிக்குகளை பயன்படுத்தினார் சிவராமன். ‘சகுனியின் தாயம்’ வடிவரீதியிலான பரிசோதனை முயற்சி. மூன்று வெவ்வேறு மொழியை பயன்படுத்தி இருக்கிறார். கதையின் அந்தந்த பகுதிக்கு எந்தெந்த மொழி தேவையோ, கதையே அதை கோரி பெற்றுக் கொண்டது. இந்த வித்தியாசமான முயற்சியை குங்குமம் வாசகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். முழு நாவலாக வாசிக்கும்போது சுவாரஸ்யம் இன்னும் சில மடங்கு கூடுமே தவிர, குறையாது என்று உறுதியாக தோன்றுகிறது. தொடருக்கான ஹைலைட்டாக ராஜாவின் ஓவியங்கள் விளங்கின. அவை நூலாக்கம் பெறும்போதும் இணைக்கப்பட்டால் நல்லது.

நாவலின் முடிவு?

உலகம் அழியும் வரை சகுனியின் தாயம் உருட்டப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். எனவே இந்த கதைக்கும் ‘முற்றும்’ இல்லை.

10 நவம்பர், 2014

தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்

நவம்பர் 8, 2014 அன்று சென்னை பனுவல் புத்தக நிலையத்தில் நிகழ்ந்த, தாமிராவின் ‘தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்’ நூல் விமர்சனக் கூட்டத்தில் பேசியதின் வரிவடிவம் :

எல்லாருக்கும் வணக்கம்.

பேச்சுன்னா எனக்கு கலைஞரைதான் பிடிக்கும். மனசுலே நினைக்கிற வேகத்துலே மைக் முன்னாடி அவராலே பேசமுடியும். எந்த நெருக்கடியிலும் கச்சிதமா எடிட் பண்ணிப் பேசுவாரு. தான் உச்சரிக்கிற ஒவ்வொரு சொல்லுக்கும் என்ன விளைவு ஏற்படும்னு அவராலே ஜோசியம் பார்த்துட்டு பேசமுடியும். ஆனா நான் மக்கள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவோட ஜெனரேஷன். திட்டமிடாம பேசினா எதையாவது உளறிக் கொட்டிடுவோமோன்னு பயம். அதனாலேதான் முன்னாடியே எழுதிவெச்சிக்கிட்டு பார்த்து பேசுறேன். மன்னிக்கவும்.

நாலஞ்சி வருஷம் முன்னாடி இருக்கும். கற்பு பத்தி குஷ்பூ தைரியமா பேசியிருந்த டைம் அது. வழக்கம்போல தமிழ்நாடே கொந்தளிச்சிடிச்சி. கல்தோன்றி மண்தோன்றா காலத்திலேயே கற்போடு வாழ்ந்த தமிழரின் பெருமையை ஒரு வடக்கத்திப் பொண்ணு இப்படி கேவலப்படுத்தினா, புலியை முறத்தாலே விரட்டின இனம் சும்மா இருக்குமா?

அந்த டயமில் ஒரு படம் வந்தது. அதிலே ஒரு குட்டிப் பாப்பாவோட பேரு குஷ்பூ.

“குஷ்பூ நீ பேசாதே!”

“குஷ்பூ செருப்பு போட்டுக்கிட்டு கோயிலுக்கு வராதே!”

“குஷ்பூ நீ எதையாவது பேசினாலே பிரச்சினைதான்!”

அட. இப்படியெல்லாம் கூட சினிமாவில் சமூக அரசியலை பேசலாமான்னு ஆச்சரியம்.

நானும் தமிழன்தான். இருந்தாலும் இந்த தமிழ் அடையாளத்தை வெச்சிக்கிட்டு ஒரு நூறு வருஷமா நாம பண்ணுற அலம்பல் நமக்கே புரியுது. அதை தைரியமா ஒத்துக்கிட்டவர் என்கிற முறையில் தாமிராவை அப்போதான் எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது. அதுவரை அவரோட கதை சிலதை ஆனந்தவிகடனில் படிச்ச நினைவு. ஆனா, அவரு பேரு ரொம்ப ஸ்ட்ராங்கால்லாம் ரெஜிஸ்டர் ஆகலை. ‘ரெட்டச்சுழி’ படம் வந்தப்போ, அதை ஆதரிச்சி ரொம்ப பாசிட்டிவ்வா இண்டர்நெட்டுலே எழுதினது அனேகமா நான் மட்டும்தான்னு நெனைக்கிறேன்.

லேயர் லேயரா ரெட்டச்சுழியிலே தாமிரா வெச்சிருந்த உள்குத்துகள் வழக்கம்போல தமிழர்களுக்கு புரியலைன்னு தோணுது. அவங்களுக்கு டைரக்டா ‘பஞ்ச் டயலாக்’ சொல்லி, வயிறு நிறைய நாலு இட்லி சாப்பிட்டுட்டு எக்ஸ்ட்ராவது அஞ்சாவது இட்லி ஆர்டர் பண்ணுறவன் பூர்ஷ்வான்னு பப்பரப்பான்னு பேசுனாதான் புரியும்.

“அவுரு கட்சி ஆபிசுக்கு போயே பத்து வருஷம் ஆச்சி. அவராண்டே வந்து ராட்டையை காட்டிக்கிட்டு”ன்னுலாம் டயலாக் வச்சா அது எவ்ளோ பெரிய sattire. அதிர்ஷ்டவசமா இன்னிக்குவரைக்கும் அது காங்கிரஸ்காரனுக்கும் புரியலை. புதுசா வந்திருக்கிற தமிழ்மாநில காங்கிரஸ்காரனுக்கும் புரியலை. நல்லவேளை. தாமிரா தப்பிச்சார். இல்லேன்னா வேட்டி கிழிஞ்சிருக்கும்.

அண்ணன் தாமிராவோட எனக்கு பெருசா பழக்கவழக்கம் எதுவுமில்லை. ஓரிரு முறை அகஸ்மாத்தா பாத்துக்கிட்டப்போ கூட லேசா புன்னகை பண்ணியிருக்கேன். அவ்ளோதான். எனவே அப்போ ரெட்டைச்சுழியை பாசிட்டிவ்வா எழுதினதுக்கு வேறெந்த உள்நோக்கமும் இல்லைங்கிறதை இப்போ சொல்லிக்கறேன். அப்புறம் ‘தொடர்பு எல்லைக்கு அப்பால்’ என்கிற இந்த சிறுகதை தொகுப்பை பத்தியும் பாசிட்டிவ்வாதான் பேசப்போறேன். ஏதாவது தேடிக்கண்டுபிடிச்சி நெகட்டிவ்வா சொன்னா மட்டும்தான் அது விமர்சனம்னா, அப்படியொரு கலையே நமக்கு தேவையில்லை.

தாமிராவோட சில கதைகளை பத்திரிகைகளில் படிச்சப்பவும் சரி. ரெட்டச்சுழி படம் பார்த்தப்பவும் சரி. அவரோட அரசியல் என்னன்னு ரொம்ப சப்டிலா காமிக்கிறார். தமிழ் ஐடெண்டிட்டி மேலே எல்லாம் அவருக்கு பேரன்பு இருக்கு. ஆனா, ‘தமிழ், தமிழன்’னு சொல்லி கும்மி அடிச்சிக்கிட்டு மொழியை, இனத்தை வியாபாரத்துக்கு பயன்படுத்துறவங்க மேலே பெருங்கோபம் இருக்கு. இது நானா அவரைப்பத்தி guess பண்ணி வெச்சிருந்த இமேஜ்.

இந்த தொகுப்போட முன்னுரையை படிக்கறப்போ, அது கரெக்ட்டுதான்னு தோணுது.

பொதுவா எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு. அனேகமா அது மூடநம்பிக்கையா கூட இருக்கலாம். அதாவது படைப்பாளியோட படைப்புலே அவங்களோட பணிசார்ந்த தாக்கம் கண்டிப்பா இருக்குன்னு நம்பறேன்.

உதாரணத்துக்கு சொல்லணும்னா, சுந்தர ராமசாமியை படிச்சோம்னா அவ்வளவு பர்ஃபெக்ட்டா வார்த்தைகள் கட் பண்ணியிருக்கும். ஒவ்வொரு sentenceலேயும் எக்ஸ்ட்ராவாவும் இருக்காது. கம்மியாவும் இருக்காது. துணிக்கடையிலே ரெண்டு மீட்டர் துணி கேட்டோம்னா, ஒரு இஞ்ச் அப்படியும், ஒரு இஞ்ச் இப்படியுமா இல்லாமே ரொம்ப நறுக்கா வெட்டி கொடுப்பாங்க இல்லையா? அந்த கறாரான அளவீடு அவரோட எழுத்துகளில் இருக்கும்.

பத்திரிகையிலே வேலை செய்யுறவங்க கதை எழுதினாங்கன்னா அதுலே ரிப்போர்ட்டிங் வாசனை நிச்சயமா அடிக்கும். தினத்தந்தியிலே வேலை பார்க்குறவங்க எழுதுறப்போ ‘சதக், சதக்’, ‘கதற கதற’ ஆட்டோமேடிக்கா வந்துடும்னு எனக்கு தோணும்.

இதை கிண்டலுக்காக எல்லாம் சொல்லலை. நாம புழுங்கற மனுஷ்யங்களோட / ஏரியாவோட தாக்கம் நம்மோட கனவுகளிலேயே வர்றப்போ, கதைகளில் வர்றது ஆச்சரியமில்லை இல்லையா. ஒருவகையிலே கதைகளும் அந்த எழுத்தாளனோட கனவுகள்தானே?

படைப்பை பணிசார்ந்த அம்சம் தாக்கப்படுத்துது என்பதாலேதான் சமகால நவீன, பின்நவீனத்துவ தமிழிலக்கியத்துக்கு ஒரு குமாஸ்தா தன்மை இருக்குன்னு நெனைக்கிறேன்.

இதுக்கெல்லாம் புள்ளிவிவரம் எதுவும் எங்கிட்டே இல்லை. இது நானே உட்கார்ந்து சொந்தமா ரூம் போட்டு யோசிச்சப்போ தோணுச்சி. ஒருவேளை இதை யாராவது இண்டெக்ஸ் போட்டு, ஆராய்ச்சி பண்ணினா அனேகமா அவங்களுக்கு டாக்டர் பட்டம் கூட ஏதாவது பல்கலைக்கழகத்தாலே வழங்கப்படலாம்.

ஓக்கே. மேட்டருக்கு வர்றேன்.

தாமிராவோட கதைகளில் அவரோட பணியான சினிமா நிறைய இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது. அதை சொல்லதான் இப்படி காதை சுத்தி மூக்கை தொட்டிருக்கேன்.

ஒவ்வொரு பாராவும் ஒரு ஷாட்டா இருக்கு.

ஒவ்வொரு கதையும் ரெண்டு இல்லைன்னா மூணு சீன்.

கதைகளைப் படிக்கிறப்போ எனக்கு ரீரெக்கார்டிங் கூட கேட்குது. கன்ஃபார்மா மியூசிக் இளையராஜாதான். டவுட்டே இல்லை.

இடையிடையிலே பொருத்தமான இடங்களில் பாட்டு கூட போடுறாரு.

‘அமிர்தவர்ஷினி’ கதையை படிக்கிறப்பவே மழை வந்து நாம நனைஞ்சுட்ட ஃபீலிங்.

அதிலும் கேரக்டர் இண்ட்ரொடக்‌ஷனெல்லாம் பக்கா சினிமா.

‘அடிப்படையில் குமார் ஒரு நாத்திகர். ஆனால் அவரது நாக்கில் எப்போதும் சனி குடிகொண்டிருக்கும்’னு சொல்றப்பவே இந்த கேரக்டர் மணிவண்ணனுக்குன்னு தோண ஆரம்பிச்சிடுது.

சில கதைகளில் தாமிராவோட உருவகம் அநியாயத்துக்கு மிரட்டுது.

“யூனிஃபார்மை போட்டுக்கிட்டு ஒரு கல்லறையிலேருந்து இன்னொரு கல்லறைக்கு என்னாமா ஓடுதுங்க”ன்னு சொல்றப்போ பக்குன்னு இருக்கு. திருநெல்வேலி சுடலைக்கு நகரம் மொத்தமாவே நரகம்தான். கான்க்ரீட் வீட்டை கல்லறைன்னு சொல்றான். ஸ்கூலும் கான்க்ரீட்தானே. அதுவும் இன்னொரு கல்லறை. “வாக்கரிசையை கூட இனிமே இறக்குமதிதாண்டா பண்ணனும்னு” அவன் சொல்றப்போ நெஜமாவே நாமள்லாம் சுடுகாட்டுலே அலையற ஆவிங்களோன்னு டவுட்டு வருது.

சாட்டிங், பேஸ்புக்கு, வாட்ஸப்புன்னு மாறிட்ட நவீன உலகத்துலே நுணுக்கமான மனித உறவுகளோட பொசிஸன் என்னன்னு ‘மியாவ்… மனுஷி’ங்கிற கதையிலே ஆராயறாரு. அந்த கதையிலே இண்டர்நெட்டுக்கு தாமிரா கொடுத்திருக்கும் தமிழாக்கம் அட்டகாசம். ‘வலைவனம்’. கதை இப்படி முடியுது… “வலைவனங்களெங்கும் ஏதோ ஒரு பூனை மியாவ் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறது”. நாமல்லாம் ரோபோவா மாறுகிற வரைக்கும் நம்மோட ஆதாரமான ஆதிகுணங்களை இழந்துட மாட்டோம்னு இந்த கதையோட மெசேஜை எடுத்துக்கிட்டேன்.

எப்பவும் தற்கொலைக்கு முயற்சிக்கிற தட்சணோட முயற்சிகள் ஊத்திக்குது. இருபத்தஞ்சி வாட்டிக்கும் மேலா அவனுக்கு மரணம் கண்ணாமூச்சி காமிக்குது. கடைசியிலே ஒருத்தன் அவங்கிட்டே வந்து புலம்பறான். “என்னை மன்னிச்சிடுங்க. உங்க கிட்டே தோத்துட்டேன். வெளியே சொல்லிடாதீங்க. மானம் போயிடும்”னு அழுவறான். அவன் தான் மரணம். சடார்னு சுஜாதா நினைவுக்கு வந்தாரு. ஒருமாதிரி குறுகுறுப்புலே மறுபடியும் கதையை முதல்லேருந்து படிச்சிப் பார்த்தோம்னா, கிறிஸ்டோபர் நோலன் லெவல் கிளாசிக். கதையோட பின்னிணைப்பா தாமிரா எழுதியிருக்கிற மரணசாசன கவிதை தீபாவளிக்கு டபுள் போனஸ் கிடைச்சமாதிரி இருக்கு.

தாமிராவோட உலகப் புகழ்பெற்ற கதை ‘ரஜினி ரசிகன்’. ரொம்ப நேரிடையான அட்டாக். பாப்புலர் லேங்குவேஜ்லே ஒரு சொசைட்டியோட ஒட்டுமொத்த ஆன்மாவை அம்பலப்படுத்துற கதை. குறைந்தபட்சம் ஒரு கோடி காமுவாவது தமிழ்நாட்டில் இருக்காங்கன்னு தோணுது. நம்பளைப் பத்தி நம்பளைவிட யாருக்கு ரொம்ப நல்லா தெரியும். நாம பொய் பேசுவோம். நாம பொறாமைப் படுவோம். நாம கோள் மூட்டுவோம். நமக்கு பர்சனலா நிறைய வீக்னஸ் இருக்கு. இதெல்லாம் மத்தவங்களுக்கு தெரியாது. நமக்கு மட்டும்தான் தெரியும்னு நெனைச்சிப்போம். ஆனா, “தம்பி. இதெல்லாம்தான் உன்னோட கேரக்டர்”ன்னு ஒருத்தரு புட்டுப்புட்டு வெச்சா எவ்ளோ கோவம் வரும். இந்த கதையை படிக்கிறப்போ அப்படிதான் எல்லாருக்கும் கோவம் வரணும். எனக்கு வரலை. நல்லவேளையா நான் கமல் ரசிகன். கமலைப் பத்தி அண்ணன் ஏதாவது எழுதினாருன்னாதான் டென்ஷன் ஆவேன்.

பொதுவா இதுமாதிரி சினிமாப் பைத்தியங்களை பத்தி வெளியிலேருந்து நிறைய பேர் விமர்சிச்சிருக்காங்க. குறிப்பா பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும். ஆனா ஒரு சினிமாக்காரரே ரொம்ப தெகிரியமா தன்னோட துறையின் சூப்பர்ஸ்டாரை, பலமான ஆதாரங்களை வெச்சிக்கிட்டு அம்பலப்படுத்துறது ரொம்ப துணிச்சலான முயற்சி. ரஜினி கிட்டே கால்ஷீட் வாங்கி, படமெடுக்கிற எண்ணமே அண்ணனுக்கு இல்லைன்னு தோணுது.

எல்லாத்தையும் விட தொகுப்போட க்ளைமேக்ஸ் கொடுக்குற அற்புத அனுபவம்தான் இந்த புத்தகத்தை தலைமேலே தூக்கிவெச்சி என்னை கொண்டாட சொல்லுது. எனக்கு வைரமுத்துவை ரொம்ப பிடிக்கும். இளையராஜாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அனேகமா காது கேட்குற தமிழனில் தொண்ணூறு சதவிகிதம் பேருக்காவது இவங்களை சேர்த்துவெச்சி பிடிக்கும். அவங்க சேர்ந்திருந்த ஆறேழு வருஷம் தமிழ் திரையிசையின் பொற்காலம் என்பதை யாரும் மறுத்துட முடியாது. இந்த பிரிவுக்கு என்ன காரணம்னு ஒவ்வொருத்தனுக்கும் இருவத்தஞ்சி வருஷமா மண்டை காய்ஞ்சிக்கிட்டிருக்கு. தமிழனோட இந்த உணர்வை சைக்காலஜிக்கலா அணுகற கதை அது.

ஒட்டுமொத்தமா இந்த தொகுப்பை பத்தி சொல்லணும்னா, பதினைஞ்சி படத்தை அடுத்தடுத்து பார்த்த இனிமையான அனுபவத்தை எனக்கு கொடுக்குது. பிழியப் பிழிய டிராமா பண்ணவேண்டிய விஷயங்களைகூட ‘லைட்டர் வெர்ஷனில்’ கொடுக்கிறாரு. சமகால அரசியல் சமூக அங்கதம் அங்கங்கே அழகா விரவியிருக்கு. குறிப்பா கடவுள், மரணம்னு விடை தெரியாத விஷயங்களுக்கு… அறிவியலால் ஒப்புக்கொள்ளப்படவோ, நிராகரிக்கப்படவோ முடியாதது பத்தின அலசல் அடிக்கடி வருது.

தான் எழுதுறது இலக்கியங்கிற கான்சியஸ் எல்லாம் இல்லாமே இயல்பான வெளிப்பாடா எழுதியிருக்கிறாரு. ஒரு கதை இலக்கியம்னு ஒப்புக்கப்படணும்னா அதுக்கு நிறைய சங்கேதவார்த்தைகளை அங்கங்கே மானே, தேனேன்னு தூவணும்னாதான் இப்போ ஒத்துக்கிறாங்க. அதிலும் கதையை படிச்சதுமே வாசகனுக்கு புரிஞ்சிடக் கூடாதுன்னு எழுத்தாளர்கள் ரொம்ப தீவிரமா இருக்காங்க. சில கதைகளை படிக்கிறப்போ இந்த கதை எழுதினவருக்கே புரியுமான்னுகூட எனக்கு அப்பப்போ சந்தேகம் வரும். அந்த மாதிரி பாவனைகள் எதுவுமே இல்லாம நேரடியாக வாசகனோட மானசீகமா உரையாடுது தாமிராவோட எழுத்து.

லேங்குவேஜோட கொஞ்சம் இண்டெலெக்ச்சுவல் ஃபார்ம் - ‘மொழியின் அறிவுப்பூர்வமான வெளிப்பாடு’தான் இலக்கியம்னு நம்பறேன். அந்த வகையில் தாமிராவோட இந்தத் தொகுப்பு இப்போதைய சூழலுக்கு அவசியமான இலக்கியம் என்கிற எண்ணம் எனக்கிருக்கு. பரவலாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம் என்கிற அபிப்ராயம் உருவாகியிருக்கு. முக்கியமா தாமிரா இனி எழுதற கதைகளையும் மோசமா அவராலே எழுதவே முடியாதுங்கிற ஸ்ட்ராங் ஃபீலிங் வந்திருக்கு.

இந்த கதைகளில் அவருக்கு கிடைச்சிருக்கிற ப்ளாக்பஸ்டர்ஹிட் விரைவில் சினிமாவிலும் கிடைக்கணும்னு, அவரோட முதல் படத்தை இன்னமும் நேசிக்கிற தரைடிக்கெட் ரசிகனாக வாழ்த்துகிறேன். நன்றி. வணக்கம்.
நூல் : தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள்
ஆசிரியர் : தாமிரா
விலை : ரூ. 100
வெளியீடு : நாளந்தா

5 நவம்பர், 2014

காகிதப்படகில் சாகசப்பயணம் : நூல் வெளியீட்டு விழா உரை!

நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசுபவர்கள் (அதாவது எழுதுபவர்கள்), லைக் போடப்போகிறவர்கள், கமெண்ட் போடப்போகிறவர்கள், நிஜமாகவே வாசிக்கப் போகிறவர்கள், பார்த்துவிட்டு சும்மா போகிறவர்கள் அனைவருக்கும் என்னுடைய முதற்கண் வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு என் சிற்றுரையை தொடங்குகிறேன்.
நாளைக்கு சச்சின் புக் ரிலீஸ்.

இன்றைக்கே கருணாகரன் புக் ரிலீஸ்.

(விசில் சத்தம்)

சச்சின் கிரிக்கெட்டுக்கு வந்த அதே காலக்கட்டத்தில்தான் கருணாகரனும் பத்திரிகையுலகத்துக்கு வருகிறார். பேட்டை பிடித்தவனுக்கு உடல் ஒத்துழைப்பதை நிறுத்தினால் ரிடையர் ஆகிவிடலாம். பேனாவைப் பிடித்தவன் இதயம் துடிப்பதை நிறுத்துவதுவரை நாட் அவுட் பே(இங்கே ‘ட்’ போடணுமா ‘ன்’ போடணுமா)ஸ்மேனாக முடிவேயில்லாத டெஸ்ட்டில் விளையாடித்தான் ஆகவேண்டும். எல்லாருக்கும் கேரியர் என்பது 56, 58, 60 என்கிற வயதுகளில் முடிந்துவிடும். பேனா பிடித்தவன் மூச்சை விடும்போதுதான் அவனுடைய கேரியர் முடிவுக்கு வரும் என்பது சாபக்கேடு அல்லது வரம். இதுநாள் வரையிலான கால்நூற்றாண்டு கேரியரை பெரிய வம்பு, தும்பு இல்லாமல் முடித்த கருணாகரன் சாருக்கு முதலில் வாழ்த்துகள்.

உலக பதிப்புலக வரலாற்றிலேயே முதன்முறையாக இணையத்திலேயே வெளியீட்டுவிழா காணும் நூல் ‘காகிதப் படகில் சாகசப் பயணம்’ என்றுதான் நினைக்கிறேன். இந்த வெளியீட்டு விழாவில் பேச (அதாவது எழுத) எனக்கு அருகதை இருக்கிறது என்று கருதுகிறேன். ஏனெனில் இப்போது உங்கள் கையில் தவழும் புத்தகத்தை வரிவரியாகதான் நீங்கள் அனைவரும் படிக்கிறீர்கள். இந்த நூலில் இருக்கும் மொத்த வார்த்தைகளையும் (இந்த நூலைவிட ஐந்து மடங்கு கூடுதலான டெக்ஸ்ட்டையும்) நூலாசிரியரின் வாய்வழியாகவே கடந்த ஐந்தாண்டுகளாக நேரிடையாக கேட்டிருப்பவன் என்கிற தகுதி எனக்கு இருக்கிறது.

நவம்பர் தொடங்கினாலே இப்படிதான் உற்சாகமடைந்துவிடுவேன். கலைஞருக்கு பிறகு அதிகம் மதிக்கும் ஆளுமையான கமலஹாசனின் பிறந்தநாள் வருகிறது என்பதால். எனவே கமல் மாதிரி கொஞ்சம் அப்படி, இப்படி சுற்றி உளறிதான் இந்த வெளியீட்டு விழாவில் focus இல்லாமல் பேசி (அதாவது எழுதி) சமாளிக்க இருக்கிறேன் என்பதால் நண்பர்கள் பொறுத்துக்கொண்டு வாசிக்கவும்.

ஒரு சீனியர் தன்னுடைய ஜூனியருக்கு கொடுக்கக்கூடிய மிகப்பெரிய கவுரவத்தை எனக்கு கருணாகரன் சார் கொடுத்திருக்கிறார், அவருடைய புத்தகத்தை வாழ்த்திப்பேச அழைத்ததின் மூலம். இந்த கவுரவம் என்கிற சொல் பிரபஞ்சனை அடிக்கடி புரட்டுவதால் வந்து ஒட்டிக் கொள்கிறது. ‘நல்லதொரு காலைப்பொழுதை காஃபி குடித்துதான் கவுரவப்படுத்தமுடியும்’ என்று கவித்தெறிப்போடு எங்கோ அவர் எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது. ‘லாங் சர்வீஸ்’ செய்த ஊழியர்களை நிறுவனங்கள் கவுரவப்படுத்தும். மற்ற தொழில்களுக்கு சரி. பத்திரிகையாளனை அதுபோல யாரும் பெரியதாக கவுரவப்படுத்துவதாக தெரியவில்லை. நம் மக்களைப் பொறுத்தவரை தினமும் காலையில் அவர்களுக்கு பேப்பர் போடும் பையனும் ஒன்றுதான். அந்த பேப்பரில் எழுதியிருப்பவனும் ஒன்றுதான். இதற்காக பேப்பர் போடும் பையனை குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தமில்லை. அவன்தான் ஒவ்வொரு எழுத்தையும் எண்ட் பாய்ண்டுக்கு கொண்டுச்சென்று கவுரவப்படுத்துபவன்.

ஓக்கே. எங்கே விட்டேன். பத்திரிகையாளனை அதுபோல யாரும் பெரியதாக கவுரவப்படுத்துவதாக தெரியவில்லை. எனவே பத்திரிகையாளன் தன்னைத்தானே கவுரவப்படுத்திக் கொள்வதுதான் ஒரே வழி. கருணாகரன் சார், அதைத்தான் செய்திருக்கிறார். கடந்துபோன தன்னுடைய இருபத்தைந்து ஆண்டுகால சொந்தவாழ்க்கையின் பெரும்பகுதியை பத்திரிகைப்பணிகள் எப்படியெல்லாம் பறித்துக் கொண்டது என்பதை ஏகப்பட்ட முறை, பல சம்பவங்களை சொல்லி சொல்லியிருக்கிறார். எல்லாருமே அவரவர் பணிரீதியான அழுத்தங்களை சந்திக்கிறார்கள் என்றாலும், இத்துறை பலி கேட்கும் விஷயங்கள் கொஞ்சம் கொடூரமானவை. உண்மையில் இந்த நூலில் இந்த விஷயத்தை அவர் லேசாகதான் கோடிட்டுக் காட்டியிருக்கிறாரே தவிர, முழுக்க சொல்லவில்லை. சொல்லவும் விரும்பவில்லை என்றுதான் தோன்றுகிறது.

நாற்பதை எட்டியவர்களுக்கு சொல்ல நிறைய இருக்கிறது. இருபதை தாண்டியவர்களுக்கு கேட்க நிறைய இருக்கிறது. நாற்பதை எட்டியவர்கள் சொல்ல தயாராக இருந்தாலும், இருபதை எட்டியவர்கள் பெரும்பாலும் காது கொடுக்க விரும்பாதவர்களாக இருக்கிறார்கள். கவுதம் சாரிடம் நான் கற்றுக்கொண்ட பண்பு, வாயை திறக்கிறோமோ இல்லையோ. இரண்டு காதுகளையும் எப்போதும் திறந்துவைத்திருக்க வேண்டும். தேவையோ தேவையில்லையோ. எல்லாவற்றையும் கேட்டு வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அனைத்தையும் சீர்செய்து தேவையில்லாதவற்றை தூக்கி ரீசைக்ளிங் பின்னில் போட்டுக் கொள்ளலாம். முற்போக்கானவன் என்று காட்டிக்கொள்ள விரும்பினாலும் எனக்கு குருகுலக் கல்வியில் உள்ளூர நம்பிக்கையுண்டு.

முதன்முதலாக கருணாகரன் சாரை நான் சந்தித்தது ராயப்பேட்டையில் இருந்த ‘பெண்ணே நீ’ அலுவலகத்தில். கவுதம் சாரை அவர் சந்திக்க வந்திருந்தார். அப்போது நான் கவுதமிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். “இவர்தான் பெ.கருணாகரன்” என்று கவுதம் சொன்னதுமே, “காதல்தோல்வி கதைகள் எழுதினவர்தானே?” என்று கேட்டு கைகுலுக்கினேன். இருபதாண்டுகள் கழித்து தன்னுடைய எழுத்துகளை ஒருவன் நினைவுகூர்வது எந்தவொரு எழுத்தாளனுக்கும் உவப்பான விஷயம்தான். என்னை இவனுக்கு ஏற்கனவே எழுத்துகள் வாயிலாக தெரியும் என்கிற எண்ணமே அவருக்கு என் மீது கூடுதலான அன்பை ஏற்படுத்தியிருக்கலாம். பின்னர் சில மாதங்கள் கழித்து, ‘புதிய தலைமுறை’ இதழ் தொடங்கப்பட்டபோது அதன் ஆரம்ப ஊழியர்களாக ஒரே அலுவலகத்தில் இருந்தோம். ‘அ’னா போட்டு ஓர் இதழ் துவக்கப்படும்போது அதில் பணிபுரிபவர்களுக்கு கிடைக்கக்கூடிய அனுபவங்கள், மற்ற பெரிய இதழ்களில் பணிபுரிபவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்களை காட்டிலும் கொஞ்சம் ‘ஒஸ்தி’தான். அனுபவமிக்க மாலன் சார், கருணாகரன் சார், உதயசூரியன் சார் போன்றவர்களின் வழிகாட்டலில் ஆரம்பத் திணறல்களை வெகுசுலபமாகவே எங்களால் கடக்க முடிந்தது.

கருணாகரன் சார் கடந்த ஐந்தாண்டுகளில் அவர் மனைவியிடம் பேசியதைக் காட்டிலும் என்னிடம்தான் அதிகம் பேசியிருப்பார் என்று கருதுகிறேன். ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்ததால் இது சாத்தியமானது. அலுவலகத்தில் டீ குடிக்க மாட்டோம். வெளியேதான் இருவரும் போவோம். டீ குடிக்க ஐந்து, பத்து நிமிடம் ஆகிறதென்றாலும் ஒவ்வொரு பிரேக்கிலும் அரைமணி நேரம் பேசிக்கொண்டிருப்போம். இதழ் தயாரிப்பு, கட்டுரைகள் முதலானவற்றை தாண்டி பர்சனல் லைஃப் குறித்தும் பேசியிருக்கிறோம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் விகடனில் தொடங்கிய தன்னுடைய பத்திரியுலகப் பணிகளை பேசத் தொடங்கினார். கிசுகிசுக்கள் கேட்பதில் ஆர்வம் கொண்ட நான் (இது முக்கியமான வெகுஜனப் பண்பு) கேள்விப்பட்டவற்றை சரியா, தவறா என்று அவரிடம் கேட்பேன். அது தொடர்பாக அவருக்கு தெரிந்த விஷயங்களுக்கு ஹைப்பர்லிங்க் கொடுத்து கொஞ்சம் விஸ்தாரமாக சொல்வார். இதன் வாயிலாக நான் பணிபுரிந்திருக்கா விட்டாலும் குமுதம், விகடன், நக்கீரன், தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகள் எப்படி இயங்கின, அங்கு யாரெல்லாம் பணிபுரிந்தார்கள், அவர்களுடைய குணநலன்கள் என்று கருணாகரனின் ப்ளாஷ்பேக்கில் நான் அறிந்துகொண்ட விஷயங்கள் பல.

குறிப்பாக குமுதம் – கமல் மோதல் குறித்து அவரிடம் அடிக்கடி கேட்பேன். ஏற்கனவே அவர் விலாவரியாக சொல்லியிருந்தாலும், வேண்டுமென்றே புதியதாக கேள்விப்படுவது போல மற்றுமொரு சந்தர்ப்பத்தில் கேட்பேன். இவனிடம்தான் சொல்லிவிட்டோமே என்று சலித்துக் கொள்ளாமல் மீண்டும் ஆதியிலிருந்து அந்தம் வரை சொல்வார். போலவே பாபா காலத்து ரஜினி பற்றியும் அடிக்கடி சொல்லியிருக்கிறார். அப்போது தமிழ் வெகுஜன இதழ்கள் குறித்த நூல்களை தேடித்தேடி வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அது தொடர்பான நூல்கள் வெகுகுறைவாகவே இருக்கின்றன என்கிற எண்ணம் ஏற்பட்டிருந்தது. “இதையெல்லாம் நீங்கள் எழுதலாமே சார்?” என்று கேட்டால், “எழுதினா யார் படிப்பா?” என்பார்.

ஃபேஸ்புக்கில் அவர் அக்கவுண்டு தொடங்கிய அந்த சுபயோக சுபதினத்தின் முகூர்த்த நேரம்தான் இன்று ‘காகிதப் படகில் சாகசப் பயணம்’ நூல் வெளிவரவே காரணமாக இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் ஃபேஸ்புக்கில் மொக்கைதான் போட்டுக் கொண்டிருந்தார். இளங்கோவன் பாலகிருஷ்ணன் திடீரென்று அவர் மாணவப் பத்திரிகையாளராக இருந்தபோது எழுதிய கட்டுரைகளை ஸ்கேன் செய்து போட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்தவுடன் தான் தன்னுடைய ப்ளாஷ்பேக்கை எழுதலாம் என்கிற எண்ணம் கருணாகரன் சாருக்கு வந்தது.

ஆரம்பத்தில் நூலாக தொகுக்கும் எண்ணமெல்லாம் அவருக்கு இல்லை. இந்த ஸ்டேட்டஸ்களுக்கு பெரியளவில் இணைய வாசகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து நூலாக வெளியிடவேண்டும் என்கிற கோரிக்கைகளும் அவருக்கு வைக்கப்பட்டபோதுதான், ஏன் நூலாக்கக்கூடாது என்கிற முடிவுக்கு வந்தார். ‘நூல்’ என்கிற எண்ணம் வந்தபிறகு, மிகவும் கவனமாக எழுத ஆரம்பித்தார் என்பதை கவனித்திருக்கிறேன்.

எழுத நினைத்து அவர் எழுதாமல் விட்ட சம்பவங்கள் ஏராளமாக இருக்கிறது. ஃபாஸிட்டிவ்வான விஷயங்களைதான் ஃபோகஸ் செய்யப்போகிறேன் என்று முதலிலேயே சொல்லிவிட்டார். ஆனால் எழுதுவதற்கு முன்பாக அது தொடர்பான நெகட்டிவ்வான விஷயங்களையும் என்னிடம் சொல்லியிருக்கிறார். இந்த நூலால் யார் மனதும் புண்பட்டுவிடக்கூடாது என்று ரொம்பவும் கவனமாக இருந்தார். புத்தகத்தை வாசிக்கும்போது அவரிடம் அந்த ஓர்மை எந்தளவுக்கு இருந்தது என்பதை உணரமுடிகிறது.

(சோடா ப்ளீஸ்)


உடன்பணிபுரிந்த சகாக்கள் பற்றி எழுதவேண்டுமா என்று அவருக்கு தயக்கம் இருந்தது. எழுதலாம் என்று ஊக்கம் கொடுத்தது நான்தான். இப்போது புத்தகத்தை வாசிக்கும்போது அந்த அத்தியாயம் கொஞ்சம் சோடை போனது போலதான் தோன்றுகிறது. காரணம் அவருடைய நெடும்பயணத்தில் எல்லாரையும் குறிப்பிட முடியவில்லை. போலவே, சில முக்கியமான விடுபடுதல்கள் இருப்பதாக தோன்றியதும் அவரிடம் தொலைபேசியில் கேட்டேன். “அவங்கள்லாம் முக்கியமானவங்கதான். ஆனா நீங்க குறிப்பிடறவங்களில் சிலரோட நான் வேலை கூட பார்த்ததில்லை. என்னோட அனுபவங்கள் என்கிறப்போ என்னோட பழகாதவங்களை பத்தி என்னன்னு எழுதறது. சில பேரை எனக்குத் தெரியும். ஆனா நினைவுப்படுத்திக்கிற மாதிரி முத்தாய்ப்பான சம்பவம் எதுவும் அவங்க தொடர்பா இல்லாததாலே எழுத முடியலை” என்றார். அந்த அத்தியாயம் கொஞ்சம் சுமார் என்று எழுத்தாளர் சுபா (சுரேஷ்) இன்று காலை ஃபேஸ்புக்கில் சொல்லியிருந்ததை கவனித்தேன். இந்த பாவம் என்னையே சாரும்.

புதிய தலைமுறை பத்திரிகையாளர் திட்டத்தின்போது வாசித்த இரண்டு கட்டுரைகளை சேர்த்திருக்கிறார். அதை பின்னிணைப்பாக கொடுத்திருக்கலாம் என்று கருதுகிறேன். சுவாரஸ்யமான நாவலுக்கு இடையே இரண்டு கட்டுரைகளை அத்தியாயமாக செருகியதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.

நூலில் எனக்கு மிகவும் பிடித்த அத்தியாயம் நக்கீரன் அண்ணாச்சியைப் பற்றி அவர் எழுதியிருக்கும் ‘அண்ணன் காட்டிய வழியம்மா’. அண்ணன் கோபால் அவர்களைப் பற்றி கருணாகரன் சார் என்னிடம் பகிர்ந்துக் கொண்ட பல விஷயங்களே ஒரு முழுப்புத்தகம் அளவுக்கு தேறும். அந்த அளவுக்கு அண்ணன் மீது அளவில்லா அன்பும், அளப்பறியா மரியாதையும் கொண்டவர் கருணாகரன். இந்த அத்தியாயத்தை அவர் ஃபேஸ்புக்கில் எழுதியபோது அவ்வளவு பாராட்டுகள். பிற்பாடு இந்த அத்தியாயம் அப்படியே ‘இனிய உதயம்’ இதழிலும் பிரசுரமானது. குமுதம் வரதராசன் குறித்து அவர் எழுதியிருக்கும் அத்தியாயமும் அபாரம். தன்னுடைய சீனியர்கள் பெரும்பாலானவர்கள் மீது கருணாகரன் சாருக்கு மரியாதையும் பக்தியும் உண்டு. மாலன் சார் குறித்து எழுதியிருக்கும் அத்தியாயத்தில் அவர் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தையையுமே, மாலனிடம் பணிபுரிந்த அத்தனை பேரும் ஒப்புக்கொள்வார்கள். ஒரே ஒருவரி கூட மிகையாக இருக்காது.

மற்ற பணிகள் மாதிரி இல்லாமல் பத்திரிகையாளன் ஒவ்வொருவனுக்கும் கிடைக்கும் பணி அனுபவங்கள் unique ஆனது. உலகில் வேறெவருக்குமே கிடைக்காத அனுபவங்கள் அவனுக்கு மட்டும்தான் சாத்தியம். பத்திரிகையுலகில் நீண்டகாலம் பணிபுரிந்த மூத்தப் பத்திரிகையாளர்கள் தங்கள் அனுபவங்களையும், தாங்கள் சந்தித்த மனிதர்களையும் இதுபோல நூலாக எழுதவேண்டும். தங்கள் அடுத்த தலைமுறை பத்திரிகையாளர்களுக்கு என்றில்லாமல் இது அனைவருக்கும் பயன்படக்கூடிய விஷயம்தான். தான் வாழும் காலத்தைதான் ஒவ்வொரு பத்திரிகையாளனும் தன்னுடைய பணியாக பதிவு செய்கிறான். அதுவே எதிர்கால வரலாறாகவும் ஆகிறது. நமக்கு பின்னால் எத்தனையோ ஆண்டுகள் கழித்து எவனோ ஒருவன் வரலாற்றை தொகுக்க தேடும்போது, இம்மாதிரி நூல்கள் அவனுக்கு வெகுவாக உதவும்.

அந்த கால கல்கியை தெரிந்துக்கொள்ள வாண்டுமாமாவின் ‘எதிர்நீச்சல்’, குமுதத்தை அறிந்துக்கொள்ள ‘எடிட்டர் எஸ்.ஏ.பி’, சாவியை உணர ‘சாவியில் சில நாட்கள்’ என்று பத்திரிகையாளர்களுக்கென்றே பிரத்யேகமாக முன்னுதாரண நூல்கள் ஏராளமானவை இருக்கின்றன. அந்தவரிசையில் வரும் ‘காகிதப்படகில் சாகசப் பயணம்’ நூலும் மாபெரும் வெற்றி காணும் என்று வாழ்த்தி என்னுடைய நீண்ட உரையை இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.

பேச (எழுத) வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி!

(பலத்த கைத்தட்டல்)

நூல் : காகிதப் படகில் சாகசப் பயணம்
ஆசிரியர் : பெ. கருணாகரன்
பக்கங்கள் : 208
விலை : ரூ.150/-
வெளியீடு : குன்றம் பதிப்பகம்,
73/31, பிருந்தாவனம் தெரு,
மேற்கு மாம்பலம்,
சென்னை - 600 033.
ஃபேஸ்புக் : https://www.facebook.com/perumal.karunakaran.1
மின்னஞ்சல் : pekarunakaran@gmail.com

3 நவம்பர், 2014

பினாமி ஆட்சி

முந்தைய அதிமுக ஆட்சியின் போது ஜெயலலிதாவுக்கு ‘வாய்தா ராணி’ பட்டம் வழங்கிய ஸ்டாலின், இம்முறை ‘பினாமி ஆட்சி’ என்கிற சொல்லை பிரபலப்படுத்தி வருகிறார். அப்பாவின் சாமர்த்தியம் இவருக்கும் இருக்கிறது. வெகுஜன அரசியலில் இதுபோன்ற கவர்ச்சியான word coining ஒரு தலைவருக்கு எப்பவும் அவசியம். ஆனாலும் அதிமுக முன்வைக்கும் ‘மக்களின் முதல்வர்’ கான்செப்ட்தான் டாப்.

* * * * * * *
ஷோபாசக்தியின் ‘கண்டிவீரன்’ கடைக்கு வந்துவிட்டது. ஏற்கனவே வாசித்த கதைகள்தான் என்றாலும் தொகுப்பாக வாசிக்கும்போது ஷோபாவின் வீச்சு இன்னும் வலிமையாக மூளையை தாக்குகிறது. விடுதலைப்புலிகள் vs சிங்கள ராணுவம்; இருவருக்குமிடையே சாண்ட்விச்சாக மாட்டிக்கொண்ட மக்களின் மனவியல்தான் அவரது ஏரியா.

சோகம் பிழியப்பிழிய ‘துலாபாரம்’ மாதிரி சொல்லவேண்டிய கதைகளை, ‘தெனாலி’ மாதிரி காமெடியாக எழுதுகிறார். உற்றுநோக்கினால், ஷோபாவின் கதைகளுக்கு ஒரே டெம்ப்ளேட்தான். கதை மாந்தர்கள் பேசுவதைவிட கதைசொல்லியே தொணதொணவென்று (ஆனால் ரசிக்கும்படியாக) பேசிக்கொண்டு இருப்பார். நாம் பரிதாபப்பட்டு ‘உச்சு’ கொட்டவேண்டிய மனிதர்களை அபத்தமானவர்களாகதான் காட்டுவார். அதே நேரம் வில்லன்களான விடுதலைப்புலிகளையும், சிங்கள ராணுவத்தையும் டபுள் அபத்தமாய் முன்வைப்பார். முடிக்கும்போது கடைசி பாராவில் நீங்கள் அடையவேண்டிய மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, புரட்சி, எழுச்சி, புட்டு, பொடலங்காய் உள்ளிட்ட நவரச உணர்வுகளையும் ஏற்படுத்திவிடுவதில்தான் ஷோபாவின் வெற்றி அடங்கியிருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற கதைசொல்லி ஷோபாசக்தி. கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் எழுதிய அபாரமான சிறுகதைகளின் தொகுப்பு கண்டிவீரன்.

ஏற்கனவே கலைஞரை தமிழின விரோதியாக தமிழ் தேசியர்கள் வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் தமிழின துரோகியான ஷோபாசக்தி, இந்த நூலை கலைஞருக்கு வேறு சமர்ப்பணம் செய்துத் தொலைத்திருக்கிறார். ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்று தமிழ் ஜோசியர்களுக்கு தெரியாதா என்ன. இதற்கும் கலைஞரின் தலைதான் உருளப் போகிறது. அவருக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் போதாதா?

நூல் : கண்டிவீரன்

பக்கங்கள் : 192

விலை : ரூ.160

வெளியீடு : கருப்புப் பிரதிகள்
மொபைல் போன் – 9444272500
மின்னஞ்சல் : karuppupradhigal@gmail.com

* * * * * * *

நடைபெறுவதற்கு சாத்தியமே இல்லாத சம்பவங்கள் எப்படிதான் நடைபெறுகின்றனவோ என்று செய்தித்தாளை வாசிக்கும்போது அயர்ச்சி ஏற்படுகிறது.

கோவையில் ஏதோ ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரியும் பத்தொன்பது வயது பெண் அவர். ஆந்திராவைச் சேர்ந்தவர். ஊருக்கு ஏதோ திருவிழாவென்று சொந்தக்காரர்கள் சிலரோடு ஆந்திரா நோக்கி ரயிலில் சென்றுக் கொண்டிருந்தார். சேலத்துக்கு அருகில் ஒரு ஆற்றுப் பாலத்தை கடக்க ரயில் நிற்கிறது. திடீரென அந்தப் பெண்ணுக்கு தலைசுற்ற, கதவுக்கு அருகில் வந்து குனிந்து வாந்தியெடுக்கிறார். கையில் இருந்த பர்ஸ் கீழே விழுந்துவிடுகிறது. அதை எடுக்க இறங்குகிறார். ரயில் கிளம்பிவிடுகிறது.

இவரைப் போலவே அதே ரயிலில் ஓர் இருபத்துநான்கு வயது இளைஞர். ரயிலில் ஏறும்போதே நன்கு ‘ஸ்ருதி’ ஏற்றிக் கொண்டிருக்கிறார். வாந்தி பிரச்சினையால், போதையில் ரயிலில் இருந்து இறங்கிவிட்டிருக்கிறார்.

அந்த அதிகாலையில் ஆளரவமற்ற அந்தப் பகுதியில் இவர்கள் இருவர் மட்டும். போதையில் இருக்கும் இளைஞர் அந்தப் பெண்ணை மிரட்டி, புதர்பக்கமாக அழைத்துச் சென்று…

அதிகாலையில் டிராக் வழியாக இருவரும் நடந்து அருகிலிருக்கும் ரயில்நிலையத்துக்கு சென்றிருக்கிறார்கள். அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் இந்தப் பெண் அழுதுகொண்டே அத்தனையையும் சொல்லியிருக்கிறார். போலிஸை அழைத்து அந்த இளைஞரை கைது செய்யவைத்தார் ஸ்டேஷன் மாஸ்டர். அப்போதுதான் போதை தெளிந்த இளைஞன் சொல்லியிருக்கிறான். “போதையிலே என்ன நடந்துச்சின்னே தெரியல்லைங்க. அப்படி ஏதாவது தப்புதண்டா நடந்திருந்தா நானே அந்தப் பொண்ணை கட்டிக்கறேன்”

* * * * * * *

மரம் நடுவது குறித்த மானமுள்ள கவிஞர் நண்பர் வா.மணிகண்டன் அவர்களுடைய பதிவினைப் பார்த்தேன். அனேகமாக இன்னும் இரண்டு மாதத்தில், சென்னை புத்தகக் காட்சி அரங்கில், ’கத்தி’ ஜீவானந்தத்துக்கு ரோட்டரி க்ளப் பாராட்டு விழா நடத்தியதைப் போன்ற ஒரு பாராட்டுவிழாவை இவருக்கு நாம் நடத்த வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது. மரம் நடுவிழா நடத்துகிறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் இதையாவது நடத்தலாமே. என்ன சொல்லுகிறாய் தமிழ் அன்னையே?

கென்யாவைச் சேர்ந்த வாங்காரி மாத்தாய் இப்படிதான் சுற்றுச்சூழலுக்காக போராடி நோபல் பரிசெல்லாம் வென்றார். நம் இணைய, இலக்கிய உலகில் இருந்து அப்படியொருவர் நோபல் பெற்றால் நமக்கெல்லாம் பெருமைதானே?

நிசப்தமாக இருக்க வேண்டாம். அசப்தமாக இருப்போம். nobel causeக்கு கை கொடுக்கலாம் தோழர்களே!

* * * * * * *
‘நெருங்கி வா முத்தமிடாதே’ பார்த்தேன். லோபட்ஜெட் குறைகளையும் தாண்டி, இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனின் intelligent படத்தை சுவாரஸ்யப்படுத்துகிறது. ஏற்கனவே ஓரிரு ரோட் ட்ரிப் ஸ்டோரி தமிழில் வந்திருக்கிறது. ஆனாலும் மசாலா கலக்காத அசலான ‘ரோட் ட்ரிப்’பாக இதை சொல்லலாம். ‘ஹைவே’ எல்லாம் வரும்போது வரட்டும்.

‘திடீரென்று இரண்டு மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக எங்குமே பெட்ரோல் டீசல் கிடைக்கவில்லை என்றால் என்னவாகும்’ என்று தடாலடியாக படம் ஆரம்பிக்கிறது. நாட்டுக்கு ஏதோ பெரிய ஆபத்து என்கிற பில்டப்போடு. இரண்டாம் பாதியில் அந்த பில்டப் படுமோசமாக பிசுபிசுத்துப் போகிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஆனால் இடையில் லாரி ஓட்டத்தின்போது செருகிய காட்சிகளும், பாத்திரங்களும் அபாரம். குறிப்பாக விஜிசந்திரசேகரின் கதை அட்டகாசம். நைசாக திவ்யா-இளவரசன் கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் கடைசியில் “விளைவுகளைப் பற்றி யோசிக்காம நீங்க பாட்டுக்கும் காதலிச்சிடறீங்க” என்கிற கீறல்விழுந்த அட்வைஸ்தான்.

நாடு ஸ்தம்பித்துவிட்டால் நாம் மட்டுமல்ல. ரோட்டோரத்தில் லாரிக்கு கைகாட்டும் பாலியல் தொழிலாளர்களுக்கும் கூட வாழ்வாதாரம் ஸ்தம்பித்துவிடும் என்றெல்லாம் யோசித்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஷேக் ஹேண்ட். முதல் பாதிக்கு சீன் யோசித்த அளவுக்கு, இரண்டாம் பாதிக்கு யோசிக்க முடியாத அவரது சோம்பேறித்தனத்துக்கு தலையில் குட்டு. தம்பி ராமையா மாதிரி பிஸி ஆர்ட்டிஸ்ட் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்பதற்காக, அவருடைய மொக்கை காமெடியை எல்லாம் அப்படியே வைக்காமல் எடிட்டித் தள்ளியிருக்கலாம்.

இதைவிட நூறு மடங்கு அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் படங்கள் அட்டக்கத்தியாக இருக்கும்போது, ‘நெருங்கிவா முத்தமிடாதே’ கொஞ்சம் ஷார்ப்பாகதான் இருக்கிறது. ஒருமுறை நெருங்கி முத்தமிடலாம் (படத்தை).

27 அக்டோபர், 2014

பஞ்சாபி லஸ்ஸி

“சார் போஸ்ட்!” என்று வாசலில் தபால்காரரின் சப்தம் கேட்டது. சமையல் அறையில் இருந்த அம்புஜம் போட்டது போட்டபடியே ஓடினாள் – என்று எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் ஆயிரக்கணக்கானோரால் சிலிர்ப்பாக வாசிக்கப்பட்ட தமிழ் சிறுகதைகள் கடந்த இருபது ஆண்டுகளில் அடைந்திருக்கும் பரிணாமம் பாராட்டத்தக்கது.

கே.என்.சிவராமன் தினகரன் தீபாவளி மலரில் எழுதியிருக்கும் ‘தேங்க்ஸ்’ கதையின் தொடக்க வரியே இவ்வளவுதான் “காரணம். அம்மா”.

வர்ணனைகள் இல்லை. கதாசிரியரின் தத்துவ சிந்தனை கோட்பாட்டு அலசல் இல்லை. வாசகனுக்கு ஸ்பூன் ஃபீடிங் செய்யும் விளக்கங்கள் அறவே இல்லை. ‘நறுக்’கென்று கதைக்கு எது தேவையோ, அதை தவிர்த்து ஒரே ஒரு சொல் கூட கூடுதலாக இல்லை.

சுஜாதா செத்துப்போன பிறகுதான் அவர் சொல்லியபடி கதை எழுத ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழ் எழுத்தாளர்கள்.

* * * * * * * * * *

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் திடீரென்று அந்த ஆசை தோன்றியது. மொத்த ஷெல்ஃபையும் அலசிப் போட்டு அந்த புத்தகத்தை தேடியெடுத்து விடியும் வரை படித்தேன். ‘கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’. மறுநாள் இரவு ஒரு பிரஸ்மீட்டில் இருந்தபோது குறுஞ்செய்தி வந்தது. “சுஜாதா காலமானார்”.

போனவாரம் எஸ்.எஸ்.ஆரின் வாழ்க்கை வரலாறு வெளிவருகிறது என்று கேள்விப்பட்டு, கடைக்கே வராத புத்தகம் வேண்டும் என்று நியூபுக்லேண்ட்ஸ் முன்பு தர்ணா செய்து, மேனேஜர் சீனிவாசன் எங்களுக்காக எப்படியோ புத்தகத்தை வரவழைத்தார். இரண்டு நாட்கள் கழித்து நடு இரவில் புத்தகத்தைப் புரட்டினேன். மறுநாள் முற்பகலில் வந்த செய்தி. “எஸ்.எஸ்.ஆர் இறந்துவிட்டார்”

பயமாக இருக்கிறது. எனக்கு ஏதோ அமானுஷ்ய சக்தி திடீரென்று ஏற்பட்டிருக்கிறது.

* * * * * * * * * *

‘ஃபெஸ்டிவல் மூட்’ என்றொரு ‘மாஸ் மெண்டாலிட்டி’ இருக்கிறது. சினிமா, பத்திரிகை என்று வெகுஜனத் தளங்களில் பணிபுரிபவர்கள், மக்களின் இந்த மனோபாவத்தை கணக்கிலெடுத்துக் கொண்டு பணிபுரிய வேண்டும். எம்.ஜி.ஆரும், ரஜினியும், குமுதமும், சரவணா ஸ்டோர்ஸும் அடைந்த மகத்தான வெற்றிகளுக்கு, மாஸ் மீதான அவர்களது ஆழ்ந்த புரிதலே காரணம்.

தீபாவளிக்கு ஷாருக் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தை காணும்போது, வடஇந்தியாவில் மக்கள் கூட்ட கூட்டமாக ஏன் இதை கொண்டாடுகிறார்கள் என்பதை உணரமுடிகிறது. ரிலாக்ஸான மனநிலையில் இருக்கும் மக்களின் மத்தியில் அன்பேசிவமோ, விவசாய சிறப்பிதழோ எடுபடாது. பர்ஸ்ட் நைட் ஸ்பெஷலாக எந்த மாப்பிள்ளையாவது நங்கநல்லூர் போய் ஆஞ்சநேயரை வழிபடுவாரா?

* * * * * * * * * *

சேகுவேரா ஒரு டெர்ரர். இதயத்துடிப்பை நிறுத்திவிட்ட சே-வின் கண்கள் மட்டும் திறந்துக் கிடந்தன. அவரது உடலை கைப்பற்றப் போன அமெரிக்க வீரர்கள் சே-வின் உயிரோட்டமான பார்வையை பார்த்து மரணபயத்தை உணர்ந்தது வரலாறு. சே மறைந்து ஐம்பது ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்னமும் அமெரிக்கர்கள் சே-வை பார்த்து பயந்து பயந்து சாகிறார்கள். இறந்த பின்னாலும் ஒரு மனிதன் தன்னுடைய எதிர்தரப்பினரை ஆயுளுக்கும் ராவில் பயத்தில் உச்சா போக வைக்க முடியுமா?

நம்மூரில் பெரியார் இன்னமும் மிரட்டிக்கொண்டே இருக்கிறார்.

* * * * * * * * * *

“இந்தி திணிக்கப்பட்டால் மொழிப்போர் வெடிக்கும்” என்று ‘நாம் தமிழர்’ சீமான், மத்திய அரசை எச்சரித்திருக்கிறார்.

இன்னமும் தமிழர்கள் மீது சீமானுக்கு இவ்வளவு நம்பிக்கை இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மக்கள் முதல்வருக்கு நீதி கிடைக்க அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீதி கிடைக்கும் வரை மொழியோ, இனமோ, ஊனோ, உறக்கமோ தமிழர்களுக்கு பொருட்டே அல்ல.

* * * * * * * * * *

ஸ்ருதிஹாசன், சமந்தாவையெல்லாம் மறந்துடுங்க. டோலிவுட்டே இப்போது ரகுல் ப்ரீத் சிங்கைதான் கொண்டாடுகிறது. இருபத்து நாலு வயசு இளமைப் பெட்டகம். திக்கான பஞ்சாபி லஸ்ஸி.

2009ல் ‘7ஜி ரெயின்போ காலனி’ கன்னடத்தில் ரீமேக்கப்பட்டபோது அனிதாவாக அறிமுகம். தமிழில் ‘தடையறத் தாக்க’வில் செகண்ட் ஹீரோயின், ‘புத்தகம்’ மற்றும் ‘என்னமோ ஏதோ’ படத்தில் ஹீரோயின். இதுமாதிரி லோ மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களில் காமாசோமோவென்றுதான் நடித்துக் கொண்டிருந்தார். ‘வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்’ஸில் இவரது கிளாமர் பச்சக்கென்று டாலடிக்க, “இந்த பொண்ணு கிட்டே ‘என்னமோ ஏதோ’ இருக்கு” என்று அடுத்தடுத்து தெலுங்கு இயக்குனர்கள் இவரை புக் செய்தார்கள்.

லேட்டஸ்ட் ஹிட்டான கோபிசந்த் நடித்த ‘லவுகியம்’தான் ஜாக்பாட். படத்தில் இவர் தோன்றும் முதல் காட்சியே க்ளோஸ் அப்பில் ‘தொப்புள் தரிசனம்’தான். பத்து நொடிகள் தோன்றும் அந்த ஷாட்டை திரும்பத் திரும்ப பார்ப்பதற்கென்றே தெலுங்கு ரசிகர்கள் பத்துக்கும் மேற்பட்ட தடவை திரையரங்குகளுக்கு படையெடுக்கிறார்கள்.

மனோஜ் மஞ்சுவின் ‘கரண்ட் தீகா’வில் சன்னிலியோனுக்கு சவால்விடும் அளவுக்கு கவர்ச்சி விருந்து. சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ரவிதேஜாவின் கிக்-2 படத்திலும் ஹீரோயின். வருட தொடக்கத்தில் பாலிவுட்டிலும் ‘யாரியான்’ மூலம் கணக்கை தொடக்கியிருக்கிறார். அடுத்து ரமேஷ்சிப்பியின் ‘சிம்லா மிர்ச்சி’. பவன் கல்யாணின் கப்பார் சிங்-2விலும் இவர்தான் ஹீரோயின் என்கிறார்கள்.

இந்தியத் திரையுலகை புரட்டிப்போட கிளம்பியிருக்கும் இந்த புயல், தமிழ்நாட்டை மீண்டும் எப்போது தாக்கும் என்று தெரியவில்லை. சிம்பு மாதிரி யாராவது மனசு வைக்கணும்.

* * * * * * * * * *

2006லிருந்து 2010 வரை. தமிழில் வலைப்பதிவுகள் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். ட்விட்டர், ஃபேஸ்புக் என்று மைக்ரோப்ளாக்கிங் சிஸ்டம் வந்து வலைப்பதிவுகளை விழுங்கிவிட்டது. ஆனாலும் இன்னமும் ஆங்காங்கே வலைப்பதிவர் சந்திப்புகள் நடக்கிறது என்பதெல்லாம் ஆச்சரியமாகதான் இருக்கிறது. எனக்கெல்லாம் ப்ளாக்கில்தான் வசதியாக ஆற, அமர ஆடமுடிகிறது. அதனால்தான் நேரமே இல்லையென்றாலும், மூளையில் சரக்கே இல்லையென்றாலும் வவ்வால் மாதிரி வலைப்பதிவை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறேன்.

ப்ளாக் எழுதுபவர்கள் சிக்கன நடவடிக்கையாக 2000 – 3000 வார்த்தைகளில் எழுதாமல் 500 – 700 வார்த்தைகளில் சுவாரஸ்யமாக எழுதிப்பழக வேண்டும் என்று ஏதோ ஒரு வலைப்பதிவர் சந்திப்பில் ‘மூத்தப் பதிவர்’ என்கிற முறையில் அட்வைஸ் செய்திருந்தேன். வாசகர்களை (!) துடிக்க துடிக்க கொல்லக்கூடாது இல்லையா? நிறைய இளம்பதிவர்கள் அப்போது எனக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். கிண்டல் அடித்தார்கள். அனேகமாக அந்த பதிவர்களும் இப்போது 50 – 100 வார்த்தைகளில் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இப்போதும் சொல்கிறேன். வலைப்பதிவுகள் முற்றிலுமாக பிராணனை விட்டுவிடக் கூடாது என்றால், மைக்ரோப்ளாக்கிங் தரும் சுவாரஸ்யத்தை மேக்ரோப்ளாக்குகளும் தரும் விதத்தில் எழுதவேண்டும். தமிழில் நன்றாக எழுதத் தெரிந்திருப்பது மட்டும் போதாது. கட்டுரைகளின் வடிவ நேர்த்தியும் அவசியம். கவிதை, சினிமா விமர்சனம், கதை, அரசியல், இலக்கியம் என்று எதை எழுதினாலும் லேசாக ‘மீறி’ பார்க்கலாம். நாலு தோசை சுட்டுப் பார்த்தால்தான் ஒரு தோசையாவது உருப்படியாக வரும்.

7 அக்டோபர், 2014

பாரு மீது சொத்து குவிப்பு வழக்கு!

பாரிஸ், அக். 7 : உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் பாருசிவேதிதா மீது போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் பரபரப்பான தீர்ப்பினை பாரிஸ் இலக்கிய நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இதனால் பதினெட்டு ஆண்டுகளாக நடந்துவந்த வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது.

சுமோ வழக்கு

பாருசிவேதிதாவின் சக போட்டி எழுத்தாளரான சுயமோகன் இந்த வழக்கினை தொடர்ந்து இருந்தார். ஜே.சி.ஜே.சி.ஐ. வங்கி அக்கவுண்டு எண் மூலமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை பாருசிவேதிதா வாங்கிக் குவித்திருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் இத்தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து பாருவுக்கு பரிசாக வந்த செமிமார்ட்டின் மதுபாட்டில்கள் இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது அல்ல என்கிற வாதத்தை கோர்ட் ஏற்றுக் கொண்டது.

தீர்ப்பு விவரம்

முதல் குற்றவாளியான பாருசிவேதிதாவுக்கு நாற்பது ஆண்டு சிறைத்தண்டனையும், கூடுதலாக அவர் எழுதிய சாமபேத கதைகளை நூறு முறை வாய்விட்டு வாசிக்க வேண்டும் என்று அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனை மிகக்கடுமையானது என்று பாரு தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபித்தபோது, சாமபேத கதைகளை நூறு முறை வாசிக்கும் கொடூரமான தண்டனை குறைக்கப்பட்டது. பதிலாக ‘ஓ என் கடவுளே’ என்று ஒரு லட்சம் முறை பாருசிவேதிதா இம்போசிஸன் எழுதவேண்டும்.

அடுத்தடுத்த குற்றவாளிகளான சராத்து, வணேஷ் கொம்பு, பெல்பம் ஆகியோருக்கு தலா நாற்பது ஆண்டு சிறைத்தண்டனையும், ‘சக்ஸைல்’ நாவலை நானூறு முறை வாய்விட்டு வாசிக்கும் தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது. சிறைத்தண்டனை கூட ஓக்கே, ஆனால் சக்ஸைல் நாவலை வாசிக்கும் மரணத்தண்டனை மட்டும் வேண்டாம் என்று நீதிபதி முன்பாக குற்றவாளிகள் கதறினார்கள். குற்றத்துக்கு உடந்தையாக இருந்த ஜே.சி.ஜே.சி.ஐ. வங்கியையே இழுத்து மூடவும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

கோர்ட் வாசலில் பரபரப்பு

பதினெட்டு ஆண்டுகளாக வாய்தா மேல் வாய்தா வாங்கி ஜவ்வாக இழுக்கப்பட்ட இந்த இலக்கிய வழக்கில் பாருசிவேதிதா எப்படியும் விடுதலை ஆகிவிடுவார் என்கிற நம்பிக்கையில் பாருவின் நண்பர் சாபாகத்தி தலைமையில் வாசகர்கள் ஏராளமானோர் நீதிமன்ற வாசலில் பெருந்திரளாக திரண்டிருந்தார்கள். தீர்ப்பை கேள்விப்பட்டதும் அவர்கள் சோகமாகி, கையோடு கொண்டுவந்த சரக்கை அங்கேயே தண்ணீர் கலக்காமல் கல்ப்பாக அடித்து வாந்தியெடுக்கும் போராட்டத்தைத் தொடங்கினார்கள். பாரிஸ் போலிஸார் கண்ணிமைக்கும் நேரத்தில் வாந்தியை எல்லாம் கழுவி வாசகர்கள் மீதே ஊற்றி, அவர்கள் மீது சாகஸலீலா புத்தகத்தை வீசியெறிந்து துரத்தினார்கள். ஒன்றரை கிலோ எடையில் கருங்கல் மாதிரி கனமாக இருந்த புத்தகம் மேலே விழுந்ததில் நான்கு பேருக்கு மண்டை உடைந்தது. கை கால் எலும்பு முறிவும் பலருக்கும் ஏற்பட்டது.

சுமோ விளக்கம்

இந்த தீர்ப்பு பற்றி வழக்கு தொடர்ந்த சுயமோகன் தன்னுடைய வலைத்தளத்தில் கருத்து சொல்லியிருக்கிறார். இந்திய ஞானமரபிலும், வேதங்களிலும் ஜே.சி.ஜே.சி.ஐ. என்றொரு வங்கியே கிடையாது என்று அவர் விளக்கமளித்திருக்கிறார். இல்லாத வங்கி மூலமாக பாரு சொத்து குவித்து வருவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று அவரது குரு பத்யநித்ய பூபதி கனவில் வந்து வலியுறுத்தியதாலேயே தான் வழக்கு தொடரவேண்டிய அவசியம் ஏற்பட்டதாக அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். மேலும் வழக்கின் தீர்ப்பு இந்திய ஞான மரபில் ஆறு தரிசனங்கள் அடிப்படையிலேயே வழங்கப்பட்டிருப்பதால் தான் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த கட்டுரையை கூகிள் ப்ளஸ்ஸில் ‘ஷேர்’ செய்து, ‘ஆசான் ராக்ஸ்’ என்று தலைப்பிட்டிருக்கிறார் தொழிலதிபர் பரங்கசாமி.

கை கொடுத்த சாட்சி

வழக்கில் பாருவுக்கு தண்டனை கிடைக்க ராஸ்கர் பாஜாவின் சாட்சியே பிரதானமாக இருந்தது. கி.பி.2011ஆம் ஆண்டு சென்னை பாமராஜா அரங்கில் நடந்த சக்ஸைல் நாவல் வெளியீட்டு விழா மிக ஆடம்பரமாக நடந்தது. லட்சக்கணக்கான வாசகர்கள் கலந்துக்கொண்ட அந்த விழாவில் பாருவின் கட்டவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்தவர் ராஸ்கர் பாஜா. அந்த பீருக்கு காசு எப்படி வந்தது என்று தோண்டி துருவி விசாரிக்கப்பட்டதிலேயே நடந்த குற்றம் தெளிவாக தெரிந்தது. ராஸ்கர் பாஜா அரசுத்தரப்பு சாட்சியாக அப்ரூவர் ஆகி அளித்த சாட்சியமே வழக்கில் உறுதியாக நின்று, இன்று பாரு உள்ளிட்டோருக்கு தண்டனை கிடைக்க காரணமாக இருந்திருக்கிறது.

கருத்து மோதல்

பாருவுக்கு கிடைத்திருக்கும் தீர்ப்பு குறித்து இருவேறு நேரெதிர் கருத்துகள் தமிழ் இலக்கிய உலகில் ஏற்பட்டிருக்கிறது. தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய எழுத்தாளர் பாநி, “சட்டம் தன் கடமையைச் செய்திருக்கிறது” என்றார். அவருக்கு பதிலடி கொடுத்த கவிஞர் கனுஷ்ய முத்திரன், “பாரதியாருக்கு வளைந்த சட்டம் பாருவுக்கு வளையாதது ஏன்?” என்று கிடுக்கிப்பிடி போட்டார். இதே விவாதத்தில் கலந்துக்கொண்ட சிந்தனையாளர் சத்ரி, “வழக்கின் தீர்ப்பு ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடி பக்கங்களுக்கு பிரெஞ்சில் இருக்கிறது. அதை மேற்கு பதிப்பக மொழிப்பெயர்ப்பாளர்கள் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதை முழுக்க படித்துவிட்டு கருத்து சொல்கிறேன்” என்று கருத்து சொல்லியிருக்கிறார். இந்த தீர்ப்பு பற்றி தன்னுடைய வலைத்தளத்தில் “மாங்கா காமிக்ஸ் : ஓர் அறிமுகம்!” என்று எழுத்தாளர் ரஸ்.ஏமகிருஷ்ணன் கட்டுரை எழுதியிருக்கிறார். ஆனால் அந்த கட்டுரையில் எங்கே தீர்ப்பு பற்றிய கருத்து இருக்கிறது என்று வாசகர்கள் தேடித்தேடி அலுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எழுத்தாளர் மிமலாதித்த வாமல்லன் ‘இலக்கிய சிலுக்கு என்னாச்சி வழக்கு?’ என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். கட்டுரையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று புரியாமல் விளக்கம் கேட்ட வாசகர்களிடம், “எழுதின எனக்கே புரியலை. உனக்கு புரிஞ்சு என்னாகப் போவுது?” என்று ட்விட்டரில் காட்டமாக பதிலளித்தார் வாமல்லன். மாலச்சுவடு இதழும் ‘அறம் மீறும் இலக்கியம்’ என்று தலையங்கம் எழுதியிருக்கிறது. மற்றொரு புகழ்பெற்ற எழுத்தாளரான மா.வணிகண்டன், “இப்படித்தான் 1979லே பாப்பநாயக்கன் பாளையத்திலே” என்று கருத்து சொல்லியிருக்கிறார்.

வலுக்கிறது போராட்டம்

பாருவுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை அநீதியானது என்றுகூறி அவருடைய வாசகர்கள் சீலே, பிரஸீல், அர்ஜெந்தினா, கூபா, இந்தியா, தமிழ்நாடு ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். டாஸ்மாக் கடை வாசல் ஒன்றில் ச்யோவ்ராம் வேந்தர் எனும் பாரு அபிமானி மொட்டையடிக்கும் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார். டாஸ்மாக்கின் உள்ளே கணிஜி உள்ளிட்ட பாருவின் தீவிரவாத வாசகர்கள் சாகும்வரை குடிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக கூறி பாட்டிலை ஓபன் செய்திருக்கிறார்கள். இவர்களது வசதிக்காக போராட்டம் நடக்கும் டாஸ்மாக் கடைகள் மட்டும் இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கும் என்று தமிழக அரசு சலுகை அறிவித்திருக்கிறது. சச்சைக்காரன், சவகிருஷ்ணா உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பதினெட்டு பேர் பார்க்குவேஸ், மார்த்தர், ஷெமிங்வே, சுயமோகன், வலைஞர், மணிமொழி ஆகியோரின் கொடும்பாவியை பாரிஸ் கார்னரில் எரித்து போராட்டம் நடத்தி கைதானார்கள். பாருவின் வழக்கை சீலே நீதிமன்றத்துக்கு மாற்றவேண்டும் என்பது இவர்களது கோரிக்கை.

சென்னை ராஜீவ்காந்தி சாலையில் எழுத்தாளர் முருக விநாயகன் தலைமையில் “துக்கம் தொண்டையை அடைத்தது” என்று கோஷம்போட்டு பாரிஸ் நீதிபதியை கண்டித்து தொண்டையில் அடித்துக் கொண்டு கதறும் போராட்டம் நடந்தது.

சென்னை மே.மே.நகர் பிஸ்லெரி புக் பேலஸ் வளாகத்தில் எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர், இலக்கியவாதி சமிர்தம் ஆர்யா தலைமையில் கண்டனக்கூட்டம் நடந்தது. இதில் கவிஞர் சுமா பக்தி, நத்மஜா பாராயணன், மஜய விகேந்திரன் உள்ளிட்டோர் காரசாரமாக பாரிஸ் நீதிபதியை பேசினார்கள்.

பாரு விடுதலை ஆகும்வரை புறநாழிகை புத்தக உலகத்தில், பாரு எழுதிய நூல்கள் மட்டுமே விற்பனை ஆகும் என்று புறநாழிகை வெண். பாசுதேவன் அறிவித்திருக்கிறார். விஷயம் அறிந்த வாடிக்கையாளர்கள் வயிற்றிலும், வாயிலும் அடித்துக்கொண்டு கதறுகிறார்கள்.

கருப்புச்சட்டை வழக்கு

போராட்டக்காரர்கள் அனைவருமே கருப்புச்சட்டை அணிந்து போராடிவருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் எந்த போராட்டம் நடந்தாலும் தங்கள் யூனிஃபார்மை பயன்படுத்துவதா என்று திகவினர் கண்டன அறிக்கை விட்டதோடு இல்லாமல், சென்னை உயர்நீதிமன்றத்தில் இனி திகவினரை தவிர வேறு யாரும் கருப்பு உடை அணிய தடைவிதிக்குமாறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இந்த வழக்கு 2027ஆம் ஆண்டு, அக்டோபர் 6ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தள்ளி வைத்திருக்கிறது.

கொண்டாட்டம்

ஒரு பக்கம் போராட்டம் என்றால், மறுபக்கம் கொண்டாட்டமும் நடக்கிறது. பாருசிவேதிதா விமர்சகர் வட்டம் சார்பில் அதன் ஆதரவாளர்கள் ஜாக்கி ஜட்டி அணிந்து வருவோர் போவோருக்கெல்லாம் ‘கட்டிங்’ வழங்கி தீர்ப்பை கொண்டாடி வருகிறார்கள். “இன்றுதான் எங்களுக்கு தீபாவளி” என்று அவ்வமைப்பின் தீவிர ஆதரவாளரான சுமாசகேஸ்வரன் லாவோ தாசு நம்மிடம் சொன்னார். “மற்றவர் சோகத்தை நாம் கொண்டாடுவது தவறு” என்று அவ்வமைப்பின் அமைப்பாளர் இந்த கொண்டாட்டங்களை கடிந்துக் கொண்டாலும், ஃபேஸ்புக்கில் ஃபேக் ஐடியில் அவரும் இந்த அவலமான தீர்ப்பை கொண்டாடி வரிசையாக ஸ்டேட்டஸ்கள் போட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

(நன்றி : தினபிந்தி)

28 ஜூன், 2014

துலக்கம்

அமெரிக்காவில் ஒரு சிறுவனை திடீரென்று காணவில்லை. பெற்றோர் பதறிப்போய் தேடுகிறார்கள். சிறுவனுக்கு ‘ஆட்டிசம்’ பிரச்சினை வேறு உண்டு. மூன்று நாட்கள் கழித்து, அவர்கள் இருந்த ஊரிலிருந்து அறுபது கிலோ மீட்டர் தள்ளி வேறொரு ஊரில் அவனை கண்டுபிடித்தார்கள். அந்த மூன்று நாட்களும் பெற்றோர் பட்ட பாடு சொல்லி மாளாது. சாதாரண நிலையில் இருக்கும் குழந்தைகள் காணோம் என்றாலே கண்டுபிடிப்பது கடினம். இவனோ ஆட்டிச பாதிப்பில் இருப்பவன். ஆட்டிசம் பற்றிய புரிதல் இல்லாதவர்களைப் பொறுத்தவரை அவன் மனநிலை பிறழ்ந்தவன். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளோடு பழகிய அனுபவம் கொண்டவரான பாலபாரதி இந்த செய்தியை ஓர் இணையத்தளத்தில் வாசிக்கிறார். அவருக்குள் ஒரு குறுநாவலுக்கான கரு தோன்றுகிறது. அதுதான் ‘துலக்கம்’.

சமீப பத்து, பதினைந்து வருடங்களில் தமிழ் இலக்கியம் பல்வேறு மாற்றங்களை தனக்குள் உருவாக்கிக் கொண்டு வருகிறது. வாழ்வு குறித்த புரிதல்களை தெளிவாக்கிக் கொண்டு, அதை எதிர்கொள்வது குறித்த தீர்வுகளை முன்வைப்பதே பொதுவாக இலக்கிய நாவல் மரபு. உயர்தர மொழி கட்டமைப்பில், எளிய வெகுஜனவாசகர்கள் சுலபத்தில் அணுகிவிட முடியாதபடி, அறிவுஜீவிகள் பொத்தி பொத்தி பாதுகாத்த இலக்கியம் இன்று அனைவருக்குமானதாக மாறிவருகிறது. குறிப்பாக சிறு பத்திரிகைகள் தங்களுடைய கறார்தன்மையில் சமரசம் செய்துகொண்டு ‘எல்லோருக்குமானது இலக்கியம்’ என்று செயல்பட துவங்கியிருக்கும் காலக்கட்டம் இது. இதன் மூலமாக இதுவரை தீவிர இலக்கியம் என்று பேசப்பட்டதற்கும், வெகுஜன வாசிப்புக்கான எழுத்துகளுக்கும் இடைநிலையில் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் ஏராளமாக உருவாகி வருகிறார்கள். மரபான நாவல்முறையை உடைத்து புதிய வடிவங்களை முயற்சிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. பின்நவீனத்துவ எழுத்தாளர்களும் இதே காலக்கட்டத்தில்தான் கோலோச்சி வருகிறார்கள் என்றாலும், அவர்கள் வேற்றுக்கிரகத்தில் வாழ்பவர்கள் என்பதால் அவர்களை விட்டுவிடுவோம்.

இந்த புதிய போக்கில் பத்திரிகையாளர்களும் புனைவிலக்கியம் பக்கமாக தங்கள் பார்வையை திருப்பியிருப்பது ஒரு முக்கியமான திருப்பம். குறிப்பாக பத்திரிகைத்துறையில் நீண்டகால அனுபவம் பெற்ற எழுத்தாளர் மனோஜை குறிப்பிடலாம். முக்கியமான சிறுகதைகள் சிலவற்றை தமிழில் எழுதியிருக்கும் இவரது எழுத்துப்பாணி ‘ரிப்போர்ட்டிங் ஸ்டைல்’ என்று சொல்லக்கூடிய வெகுஜன பத்திரிகை நடையில், இதுவரை இலக்கியம் என்று நம்பப்பட்ட மதிப்பீடுகளை கதையாக்குவது. ‘துலக்கம்’ நாவலையும் இந்த வகையில் சேர்க்கலாம். யெஸ்.பாலபாரதியும் சுமார் பதினைந்து ஆண்டுகால பத்திரிகையுலக அனுபவம் கொண்டவர். குஜராத்தில் இனப்படுகொலை நடந்தபோது அதை நேரடியாக அங்கேயே சென்று, குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு ரிப்போர்ட்டிங் செய்தவர்.

‘துலக்கம்’ – காணாமல் போன ‘அஸ்வின்’ என்கிற சிறுவனைப் பற்றிய துல்லியமான ரிப்போர்ட்டிங். இருவேறு கிளைகளில் பிரிந்து பயணிக்கும் கதையை, கடைசி அத்தியாயத்தில் ஒன்றிணைக்கும் வழக்கமான பாணிதான் என்றால், பத்திரிகையாளருக்கே உரிய விவரணைகளோடு ‘ஆட்டிஸம்’ என்கிற மனகுறைபாடு குறித்த பார்வையை எல்லோருக்குள்ளும் ஆழமாக விதைக்கிறது.

நகரில் கள்ளநோட்டு கும்பலின் அட்டகாசம் அதிகரிக்கிறது. சுமார் நாற்பது பேர் கொண்ட கும்பல் இதற்காக நகரெங்கும் ஊடுருவியிருப்பதாக ஒரு தகவல். இத்தகைய சூழலில் வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகனிடம் ஒரு சிறுவன் மாட்டுகிறான். தோற்றத்திலும், நடவடிக்கையிலும் வித்தியாசமாக தோன்றும் அவன்மீது சந்தேகப்படுகிறார்.

இதே நேரம் சென்னை புறநகர் மடிப்பாக்கத்தில் கல்யாண் என்பவர் தன்னுடைய மகன் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அவனுக்கு ஆட்டிசப் பாதிப்பு இருப்பதாக விசாரணையில் கூறுகிறார். புகாரை வாங்கும் போலிஸ்காரர்களோ ஆட்டிஸம் என்பதை மனநிலை தவறியதாக புரிந்துக் கொள்கிறார்கள். இப்படியாக இரண்டு டிராக்குகளில் கதை நகர்கிறது.

முருகன் தன்னிடம் மாட்டிய சிறுவனை விசாரிக்கும் முயற்சியில் ‘ஆட்டிஸம்’ பற்றி அறிந்துக் கொள்கிறார். கல்யாண் தன்னுடைய மகன் தொலைந்த சோகத்தில் இருக்கும்போது ப்ளாஷ்பேக்கில், தன் குழந்தைக்கு ஆட்டிஸம் என்று கண்டறிந்ததில் இருந்து, அதிலிருந்து அவனை மீட்க செய்யும் போராட்டங்கள் என்று கதை விரிகிறது.

துலக்கம் என்கிற சொல்லுக்கு குத்துமதிப்பாக ‘விசாரணை’ என்று பொருள் கொள்ளலாம். ‘துப்புதுலக்குவது’ என்று ஏற்கனவே நமக்கு பரிச்சயமான வார்த்தையில் வரும் ‘துலக்குவது’தான் துலக்கம். ஆட்டிஸம் குறித்த விசாரணை என்று துலக்கத்தின் ஒன்லைனர் அமைந்திருப்பதால், மிக கச்சிதமாக கதைக்கு தலைப்பு பொருந்துகிறது.

கரணம் தப்பினாலும் டாக்குமெண்டரி ஆகிவிடக்கூடிய கதையை சுவாரஸ்யமான நடையில் சிறப்பான நாவலாக உருவாக்கியிருக்கிறார் பாலபாரதி. அனேகமாக ‘ஆட்டிஸம்’ குறித்து தமிழில் வெளிவந்திருக்கும் முதல் நாவலாக இதுவாகதான் இருக்கக்கூடும். எழுதத் தெரிந்த யாருமே எதைப்பற்றியும் எழுதிவிடலாம் என்று தன்னம்பிக்கை கொண்டிருப்பார்கள். ஆனால், உண்மையில் இம்மாதிரி குறிப்பிட்ட ஒரு பிரச்சினை சார்ந்த எழுத்தை எவ்வித தர்க்கப்பிழையுமின்றி எழுதுவதற்கு சலிக்காத உழைப்பும், அப்பிரச்சினை குறித்த தெளிவான பார்வையும் இருக்க வேண்டும். பாலபாரதிக்கு இருந்திருப்பதால் ‘துலக்கம்’ சாத்தியமாகி இருக்கிறது. எளிதில் வாசிக்கக்கூடிய நடையை மிகக்கவனமாக அவர் தேர்ந்தெடுத்திருப்பதற்கு பின்னால், ‘ஆட்டிஸம்’ குறித்த விழிப்புணர்வு எல்லா தரப்புக்கும் போய்ச்சேர வேண்டும் என்கிற அக்கறை இருப்பதை உணரமுடிகிறது. கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு வாசித்தாலும் குறைகள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கச்சிதமான எடிட்டிங். சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்துக்கு மட்டுமல்ல, சமூகம் சந்தித்து வரும் ஒரு முக்கியமான பிரச்சினை குறித்த புரிதலுக்காகவும் துலக்கத்தை அனைவரும் வாசிக்கலாம்.

நூல் : துலக்கம்
எழுதியவர் : யெஸ்.பாலபாரதி
பக்கங்கள் : 128
விலை : ரூ.85
வெளியீடு : விகடன் பிரசுரம்
757, அண்ணாசாலை, சென்னை-600 002
போன் : 044-42634283/84 மின்னஞ்சல் : books@vikatan.com

‘துலக்கம்’ நூல் வெளியீடு, நாளை மாலை சென்னையில் நடக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளலாம்.

21 மே, 2014

ஒரு சொம்பு தூக்கியும் வெள்ளைக் காக்காவும்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில நாட்கள் முன்பாக, நான் முன்பு பணியாற்றிய நாளிதழில், முன்பு கலகக்காரர் என்று தவறாக நினைத்துவந்த எழுத்தாளர் ஒருவர் பின்வருமாறு எழுதியிருந்தார்.
“மோடியை மதவாதி என்று இந்திய புத்திஜீவிகள் சொல்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை”
காலம் ஒரு மோசமான வில்லன். எமனுக்கு காலத்தை குறிக்கிற விதமாக காலன் என்று பெயர் வைத்தது எவ்வளவு பொருத்தம். பாழாய்ப்போன நினைவுசக்தி மட்டும் நமக்கு இல்லாமல் போனால் எவ்வளவு நன்றாக இருக்குமென்று யோசித்தேன். “வெள்ளைக் காக்கா பறக்கிறது” என்று நம் மனதுக்கு நெருக்கமான எழுத்தாளர் சொல்கிறாரென்றால், “ஆமாம். வானத்தில் பறக்கும் காக்கா, கொக்கு மாதிரி வெள்ளையாகதான் இருக்கிறது” என்று சொல்லிவிட்டு, அதை நம்பவும் ஆரம்பித்திருப்பேன். எழவு. எல்லாவற்றையும் மறக்கக்கூடிய மனநோய் எனக்கு வந்து தொலைக்கவில்லையே? இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டை மறந்து, அந்நாளைய நினைவுகளை தலைமுழுக முடியவில்லையே?

மிகச்சரியாக பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அந்த கலகக்கார எழுத்தாளர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். வாசித்துவிட்டு சூடான அறிவுகெட்டவர்களில் நானும் ஒருவன். ஒருவேளை அன்று சூடாகியிருக்காவிட்டால், இன்று நரேந்திர மோடியின் வெற்றியை தி.நகர் தாமரை இல்லத்தில் ‘பாரத்மாதா கீ ஜே’ கோஷம் போட்டு, பொதுமக்களுக்கு லட்டு கொடுத்து நானும் கொண்டாடியிருக்கலாம். வளர்ச்சியின் நாயகன் மோடியை பாராட்டி பேஸ்புக்கில் எழுதி ‘லைக்’ அள்ளியிருக்கலாம். அரசியல் சமரசங்களுக்கு உட்பட்ட திராவிடக் கட்சிகளின் ஆதரவாளனின் உள்ளம் நாணல் மாதிரிதான். மிக சுலபமாக வளையும். ஆனால் இதுபோன்ற கட்சி சார்பற்ற எழுத்தாளர்களின், சிந்தனையாளர்களின், செயற்பாட்டாளர்களின் கருத்துதான் அவனது உள்ளத்தை வலுவாக்கி, ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்துக்கு ஆதரவான வலுவான சிந்தனைகளை உருவாக்கும்.

எழுத்தாளர் எழுதிய கட்டுரையின் தலைப்பு ‘நரேந்திர மோடியும், நாஜி ஜெர்மனியும்’. கட்டுரை இவ்வாறாக ஆரம்பிக்கிறது.
“நாடாளுமன்றத்தில் நடந்து வரும் அமளி துமளி பற்றி சமீபத்தில் இரண்டு பேர் மிகவும் கவலைப்பட்டிருக்கின்றனர். ஒருவர் சோ. இவரது கவலைகள் பற்றி எனக்கு அக்கறை இல்லை”
எழுத்தாளர் பிற்பாடு இதே சோ நடத்தும் துக்ளக்கில்தான் நிறம்மாறி எழுதினார் என்பது வரலாற்று சோகம்.

அக்காலக் கட்டத்தில் நாடாளுமன்றத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக நடந்துவந்த அமளிதுமளிகள் நியாயம்தானென்று வலுவான வாதங்களை வைத்து கட்டுரை தொடர்கிறது.
“ஒரு அரசு ஊழியர் நூறு ரூபாய் லஞ்சம் வாங்கினால் அவரை வேலையை விட்டுத் தூக்க முடியும். சட்டம் அத்தனை கடுமையாக உள்ளது. ஆனால், குஜராத்தில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த கலவரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் குரூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். (இன்றைய தேதியில் எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டியுள்ளது). ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டிருக்கின்றனர். ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் அகதிகளாயிருக்கின்றனர். சொந்த ஊரில் சொந்த நாட்டில் வாழமுடியாத நிலைமை!
இக்பால் ஜாஃப்ரி ஒரு முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அவர் வீட்டில் ஒரு கும்பல் நுழைந்திருக்கிறது. அவர் வீட்டுக்கு பாதுகாப்பாக அங்கே வேன்களில் இருந்த போலீஸ்காரர்கள் இதைக் கண்டுகொள்ளவில்லை. எம்.பி.யின் கண் முன்பாகவே அவரது பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு பின்னர் கொளுத்தப்பட்டுள்ளனர். பிறகு இக்பால் ஜாஃப்ரியின் தலை வெட்டப்பட்டு அவரது உடலும் துண்டாடப்பட்டிருக்கிறது.
கலவரக்காரர்களெல்லாம் வெறும் ரவுடிகளோ காலிகளோ அல்ல. மத்திய தர வர்க்கத்தினர். கையில் செல்போன்களுடன் கலவரத்தை ஒருங்கிணைத்திருக்கின்றனர். முஸ்லீம்களின் வியாபார ஸ்தலங்களுக்கு கேஸ் சிலிண்டர்கள் நிரப்பப்பட்ட லாரிகளுடன் வந்து கொளுத்தியிருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு!
'கோத்ரா ரயில் பெட்டியில் 69 பேர் உயிரோடு எரிக்கப்பட்டதற்கான எதிர்வினையே இது' என்கிறார் மோடி. ஆனால், இரண்டுக்கும் அடிப்படையில் வித்தியாசம் இருக்கிறது. கோத்ரா சம்பவம் திடீரென்று நடந்த ஒன்று. ஆனால், அதற்கு பிறகு நடப்பதெல்லாம் அரசாங்கத்தின் உதவியோடு நடக்கும் திட்டமிட்ட படுகொலை.
நாஜி ஜெர்மனியில் யூதர்களுக்கு நேர்ந்த கொடுமைதான் ஞாபகம் வருகிறது.
ஒரு சம்பவம். மதிய வேளையில் ஒரு தம்பதி ஸ்கூட்டரில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது ஐம்பது பேர் கொண்ட கும்பல் ஸ்கூட்டரை நிறுத்துகிறது. கும்பலின் கைகளில் வாள், அரிவாள், திரிசூலம், கத்தி போன்ற ஆயுதங்கள். ஸ்கூட்டரை ஓட்டி வந்த நபரின் பெயரைக் கேட்கிறது கும்பல். அந்த நபர் ஏதோ ஒரு இந்து பெயரைச் சொல்கிறார். கும்பலுக்கு நம்பிக்கையில்லை. 'பேண்ட்டைக் கழற்று'. அடுத்த கணம் அந்த நபரின் மீது பாய்கிறது திரிசூலம்.
அவர் பெயர் முன்னா பாய். வயது 28. சந்தர்ப்பவசமாகப் பிழைத்துவிட்டதால் இப்போது மருத்துவமனையில் கிடக்கிறார். ஆனால், அவர் மனைவி மும்தாஜ் பானுவுக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. அந்தக் கும்பல் அவரை நிர்வாணமாக்கி அவரது பிறப்புறுப்பில் தொடர்ந்து கத்தியால் குத்திக் கொன்றுவிட்டது.
மற்றொரு இடம். 5000 பேர் கொண்ட கும்பல். அவர்களுக்கு நடுவே ஒரு பெண். அத்தனை பேருக்கும் எதிரே அப்பெண் பலராலும் தொடர்ந்து வன்புணர்ச்சி செய்யப்பட்டு தீயில் தூக்கியெறியப்படுகிறாள்.
இந்தக் கலவரத்தில் மாட்டிக்கொண்டு அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து சென்னை திரும்பிய என் நண்பர் ஒருவர் சொன்ன சம்பவம்: சுற்றிவர பெட்ரோல் கேன்களுடன் கலவரக்காரர்கள். நடுவில் உயிர்ப் பீதியில் நண்பர். 'நீ யார்? பேர் என்ன?' என்று கேட்டிருக்கின்றனர். பெயரை சொல்லியிருக்கிறார் நண்பர். அவர் களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. வழக்கம்போல் பிறப்புறுப்பை பரிசோதித்த பிறகே அவரை விட்டுச் சென்றிருக்கிறது கும்பல். இதைக் கேட்டதும் நான் நடுங்கிப் போனேன். ஏனென்றால் மருத்துவக் காரணங்களுக்காக நான் Circumcision செய்து கொண்டவன். நண்பரின் இடத்தில் நான் இருந்திருந்தால்... நினைத்தாலே குலை நடுங்குகிறது.
இதுபோல் ஒன்றல்ல, இரண்டல்ல, ஆயிரக்கணக்கான சம்பவங்கள். எல்லாவற்றுக்கும் சான்றுகளும் ஆதாரங்களும் இருக்கின்றன. சில ஆவணப்படங்கள் கூட எடுக்கப்பட்டுள்ளன. மனித உரிமை கமிஷனை சேர்ந்தவர்களும் நேரில் பார்த்துவிட்டு இதைத்தான் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
நான்கு தினங்கள் ஒரு பொந்தில் ஒளிந்து கிடந்து தப்பித்து தில்லிக்கு அகதியாக ஓடிவந்துள்ள ரேஷ்மா பென் என்ற பெண் சொல்லியிருக்கும் சம்பவம் இது:
''முதலில் அவர்கள் ஒரு பத்து வயதுப் பெண்ணை கற்பழித்தார்கள். பிறகு எனக்குத் தெரிந்த கெளஸர் பானு என்ற கர்ப்பிணிப் பெண்ணை மாற்றி மாற்றி ஒரு கும்பல் கற்பழித்தது. பிறகு அவள் வயிற்றை அரிவாளால் வெட்டினார்கள். வெளியில் வந்து விழுந்த குறைமாதக் கருவை எரியும் தீயில் தூக்கிப் போட்டார்கள். பிறகு அவளையும் கண்டதுண்டமாக வெட்டித் தீயில் போட்டார்கள்.''
தப்பிப் பிழைத்து ஓடிவரும் அகதிகள் சொல்லும் சம்பவங்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருக்கிறது. பெண்களின் வயிற்றைக் கத்தியால் கிழித்து எரியும் துணிப் பந்தை அதற்குள் திணிப்பது; கத்தியால் முஸ்லீம்களின் நெற்றியில் 'ஓம்' போடுவது... இதையெல்லாம் முன்னின்று நடத்துவது எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள். உதவி செய்வது போலீஸ்.
எங்கு பார்த்தாலும் கரிக்கட்டையாய் எரிந்து கிடக்கும் சிறுவர்களின் உடல்கள், தலை துண்டிக்கப்பட்ட உடல்கள், எரிந்து போன வாகனங்கள், வீடுகள், கடைகள், மசூதிகள்...
குவியல் குவியலாக மனித உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
நிலைமையை நேரில் கண்ட மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ''வார்த்தைகளால் விவரிக்க முடியாத பயங்கரம்'' என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால், பிரதம மந்திரிக்கோ, கலவரம் துவங்கி ஒரு மாதம் வரை நேரில் வர நேரமில்லை. இடையில் கவிதை எழுத வேண்டிய அவசரமான இலக்கியப் பணி. என்ன செய்ய?
ஒரு மாதம் கழித்து வந்து பார்த்து உணர்ச்சி வசப்பட்டு அழுதேவிட்டார்.
ஆனால், மறுநாள் கோவாவுக்கு சென்றவர் பால்கோவா சாப்பிட்டது போல் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்து முஸ்லீம்களைப் பற்றியும் திருவாய் மலர்ந்திருக்கிறார். ''இந்த முஸ்லீம்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் அமைதியாக வாழ விரும்புவதில்லை!''
இரண்டு மாதங்களாகியும் இன்னும் குஜராத்தில் கலவரங்கள் அடங்கினபாடில்லை. இவ்வளவுக்குப் பிறகும் குஜராத் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் அமளி துமளி. இந்த அமளியால் வீணாகும் பணத்தைப் பற்றியும், பாராளுமன்றத்தின் புனிதத்தைப் பற்றியும் கவலைப்படும் தமிழ்நாட்டு விமர்சகர்கள்”
வாசிக்கும்போதே ஓத்தா, ங்கொம்மா என்று வெறிவருகிறது இல்லையா. எழுதியவருக்கு எவ்வளவு வெறி இருந்திருக்கும்? எனவேதான் அதே வெறியோடுதான் எழுத்தாளர் குஜராத்தை, நாஜி ஜெர்மனியோடு ஒப்பிட்டு எழுதுகிறார்.
“குஜராத் முதல்வர் பதவி விலக வேண்டும்' என்ற கோரிக்கையைப் பார்த்தால் எனக்கு என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. ஹிட்லரை உலக நாடுகள் ராஜினாமா செய்யச் சொல்லியா கோரிக்கை விடுத்தன? குஜராத்தின் இப்போதைய நிலைமை நாஜி ஜெர்மனியுடன் மட்டுமே ஒப்பிடக் கூடியது என்பதில் சந்தேகமேயில்லை”
தான் வாழும் சமூகத்தில் நடந்த சமகால கொடுமைகளை ஓர் எழுத்தாளன் தட்டிக் கேட்பதைவிட அவனுக்கு வேறெதுவும் பெரிய கடமை இல்லை. மிகச்சரியாகவே அந்த எழுத்தாளர் தன் கடமையைச் செய்திருந்தார். எனவேதான் அவரை rebel என்று நம்பி, புதியதாக இலக்கியம் வாசிக்க வந்திருந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் அவரை தலைக்கு மேல் தூக்கிவைத்து கொண்டாடினோம். மன்னிக்கவும். சொம்பு தூக்கினோம். அதனால்தான் எழுத்தாளர் இப்போது நம்மை நோக்கி, “உங்களுக்கு சொம்பு தூக்கும் கலாச்சாரம் மட்டுமே தெரியும்” என்று விமர்சிக்கிறார். அவரது இந்த விமர்சனத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. எனவே அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். அன்று தங்க சொம்பாக இருந்தீர்கள். கவுரவமாக தூக்கினோம்.

ஆனால், அதே எழுத்தாளர் நாஜி ஜெர்மனிக்கு ஒப்பாக குறிப்பிட்ட நரேந்திரமோடியின் ஆட்சியை, ”குஜராத் மக்கள் மதவேறுபாடு இல்லாமல் மோடியை நேசிக்கிறார்கள். இல்லாவிட்டால் முஸ்லிம் மக்களும் மோடிக்கு ஓட்டு போட்டிருப்பார்களா? முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் இவ்வளவு வலுவான அரசை கொடுக்க முடியுமா?” என்று ஈயச்சொம்பாக மாறி கேள்வி கேட்கும்போதும், உங்களை தூக்கிக்கொண்டு திரிந்தால் வரலாறு மறந்த மொக்கையல்லவா நான்? நீங்கள் எழுதிய ‘ஆஸாதி.. ஆஸாதி.. ஆஸாதி’யை ஒருவரி விடாமல் பலமுறை வாசித்த உங்கள் வாசகன் எப்படி மொக்கையாக முடியும்?

மூன்றாம் முறையாக குஜராத்தில் மீண்டும் நரேந்திரமோடி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நம் எழுத்தாளர் 2008ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’. நீதி, நேர்மை, சமத்துவம் போன்ற ஜனநாயகத்தின் ஆதாரப் பண்புகளை இழந்துவரும் இந்திய மக்களின் மனம் மசோகிஸ்ட் மனோபாவமாக மாறிக்கொண்டிருக்கிறது என்று கவலை கொண்டிருந்தார். யாரை ஹிட்லர் என்று அப்போதெல்லாம் கடுமையாக விமர்சித்தாரோ, அவரையே இன்று ’உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை கொண்ட ஒருவர்’ என்று ஒப்புக் கொள்கிறாரென்றால், அவரே மசோகிஸ்ட் மனோபாவத்துக்கு மாறிவிட்டாரோ என்றுதான் ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது.

சுஜாதா, பாலகுமாரன், ராஜேஷ்குமார் என்று குண்டுச்சட்டியிலேயே குதிரை ஓட்டிக் கொண்டிருந்த எனக்கு தேசிய, உலகளாவிய அரசியல் இலக்கிய சிந்தனைகளை, ஆளுமைகளை, கலைகளை அறிமுகப்படுத்தியவர் சாருநிவேதிதாதான். இந்த நன்றியை சாகும்வரை மறக்க மாட்டேன். விஜய், அஜீத் ரசிகர்கள் மாதிரி நடந்துகொள்ளும் சாருவின் சமீபத்திய சொம்புகளுக்கெல்லாம் இந்த பெருமித உணர்வு கிடைத்திருக்குமா என்பதே சந்தேகம்தான். ஏனெனில் சாரு காத்திரமான கட்டுரைகளை படைத்து ஒரு மாமாங்கம் ஆகப்போகிறது.

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இதுவரை அவரை எங்கும் பொதுவெளியில் விட்டுக் கொடுத்து பேசியதில்லை. இப்படியொரு கட்டுரை எழுதநேருமென கனவிலும் நினைத்ததில்லை. ஆனால் ’எப்படியிருந்த நீங்கள், இப்படி ஆகிவிட்டீர்களே’ என்று சுட்டிக் காட்ட வேண்டியது காலத்தின் அவசியமாகி விட்டது. அவரது நிஜமான வாசகன் என்கிற முறையில் இது என்னுடைய கடமையும் கூட. இந்திய தத்துவ விசாரம், குடும்ப முரண்கள், தனிநபர் அகச்சிக்கல்கள் என்று மாட்டுவண்டி ஓட்டிக்கொண்டிருந்த தமிழிலக்கியத்தில், வடிவநேர்த்தியிலும் சிந்தனைத்தளத்திலும் புதிய வடிவங்களை உருவாக்கி புலிப்பாய்ச்சல் நடத்தியவர் சாரு. இன்னமும் அவர் மீது நம்பிக்கை இருக்கிறது. ஒரு வாசகன் என்கிற முறையில் அவரது நூல்கள் அத்தனையையும் காசு கொடுத்து வாங்கி வாசித்தவன்நான். அவரோடு முரண்படக்கூடிய சுதந்திரத்தையும் அவரது எழுத்துகள்தான் எனக்கு கொடுத்தது.

நீங்கள் எழுதியதையெல்லாம் வாசித்துதானே சாரு நாங்கள் இப்படி ஆனோம்? இன்று இந்துத்துவம் வென்றிருக்கலாம். ஒவ்வொருவரின் மனதுக்குள்ளும் உறங்கிக்கொண்டிருந்த மதவாத மிருகம் கண் விழித்திருக்கலாம். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள பலரும் நினைக்கலாம். ஆனால் சராசரிகளோடு மாறுபட்டு விதிவிலக்காக நிற்க வேண்டியது செயற்பாட்டாளர்களின் கடமை. முதன்முறையாக மதவாத சக்திகள் இந்தியாவில் பெரும்பான்மையாக ஆட்சியை கைப்பற்றியபோது அவர்களோடு யாரெல்லாம் இருந்தார்கள், மதச்சார்பற்ற இந்தியாவின் ஜனநாயகத்தன்மைக்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்கள் என்பதை வரலாறு பதிந்து வைத்துக்கொள்ளப் போகிறது. வேதனையாகதான் இருக்கிறது. அந்த கருப்புப் பட்டியலில் நீங்களும் இடம்பெறுகிறீர்கள் சாரு. ஆபத்து அறியாமல் மோடி வென்றுவிட்டார் என்று கெக்கே பிக்கே என சிரித்துக்கொண்டு ஸ்டேட்டஸ் போட்டு விளையாடும் இணையமொக்கைகளோடு நீங்களும் சேர்ந்துவிட்டீர்கள் சாரு. உலக இலக்கியத்தை விடுங்கள். தமிழிலக்கிய உலகிலேயே எதிர்காலத்தில் நீங்கள் யாராய் அறியப்படப் போகிறீர்களோ என்கிற கவலைதான் என்னை ஆக்கிரமிக்கிறது.

பி.கு : மேற்குறிப்பிட்ட கட்டுரையில் சாருநிவேதிதா எழுதியிருந்ததாக வரும் பத்திகள் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ஆஸாதி ஆஸாதி ஆஸாதி’ நூலில் இருந்து எடுத்தாளப் பட்டிருக்கிறது. முதல் கட்டுரையில் தமிழ் விமர்சகர்கள் என்று சாரு குறிப்பிடுவது சோ தவிர்த்த இன்னொருவரை சுட்டி. அவர் வெங்கட் சாமிநாதன். குறிப்பிட்ட இந்த இரு கட்டுரைகளையும் முழுமையாக வாசிக்க விரும்புபவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்தால் அனுப்பி வைக்கிறேன்.