ஜாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 ஜூலை, 2012

இந்த காதலுக்கு எத்தனை கோணம்?


சின்னக் கவுண்டராலேயே தீர்க்க முடியாத பஞ்சாயத்து ஏதாவது ஒன்று இருக்கும்தானே? வேதாளம் சொன்ன கடைசிக் கதைக்கு விக்கிரமாதித்தனால் விடை சொல்ல முடியவில்லையாம். நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த பஞ்சாயத்து ஒன்று அப்படிப்பட்டது. கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனரோ, கூடுதல் கமிஷனர்களோ மக்களிடமிருந்து நேரடியாக புகார்களை பெறுவது ஒரு சடங்கு. அந்த சடங்கின்படி நேற்று கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங் புகார்களை வாங்கிக் கொண்டிருந்தார்.

பரங்கிமலையிலிருந்து ஓர் நடுத்தர வயது ஆள் புகார் கொடுக்க வந்திருந்தார்.

“என்ன பிரச்சினை?” கமிஷனர் கனிவாக கேட்டார்.

“என் கூட இருந்த பொண்ணை ஒருத்தன் தள்ளிக்கிட்டு போயிட்டான்”

“கூட இருந்த பொண்ணுன்னா.. மனைவியையா?”

“இல்லை. என் மனைவியை அவன் எப்பவோ தள்ளிக்கிட்டுப் போயிட்டான்”

“அப்போ உன் கூட இருந்த பொண்ணு”

“அவனோட மனைவி”

“புரியலை”

“நான் வாழ்க்கை நடத்திக்கிட்டிருந்த பொண்ணை அவளோட முன்னாள் கணவன் கூட்டிக்கிட்டுப் போயிட்டான். அவ இல்லாமே என்னாலே வாழ முடியாது. நீங்கதான் பெரிய மனசு பண்ணி எங்களை சேர்த்து வைக்கணும்”

கூடுதல் கமிஷனருக்கு ‘கிர்’ரடித்திருக்கிறது. கொஞ்சம் தெளிவாக பின்கதைச் சுருக்கத்தை எடுத்தியம்புமாறு அந்த மறத்தமிழனிடம் கெஞ்சியிருக்கிறார்.

பரங்கிமலையில் வசிக்கும் அவர் இண்டீரியர் டெக்கரேஷன் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளி. சில ஆண்டுகளுக்கு முன்பாக அவருக்கு திருமணம் ஆகியிருக்கிறது. மனைவியோடு இல்லறத்தில் இன்பமாக வாழ்ந்துக் கொண்டிருந்தவருக்கு, திடீரென ‘இடி’ விழுந்தது பக்கத்துத் தெரு இளைஞர் ஒருவரால். இளைஞரின் கவர்ச்சியில் மயங்கிவிட்ட இவரது மனைவி அவரோடு ஓடிவிட்டார்.

இனிய இல்லறம் புயலாய் தடைபட்ட விரக்தியில் வாடிய நம் ஹீரோவின் வாழ்வில் மீண்டும் தென்றல் வீசத் தொடங்கியது. பக்கத்துத் தெரு பைங்கிளி ஒன்று இவருக்கு ஆறுதலாய் அமைந்தது. அது வேறு யாருமல்ல. இவருடைய மனைவியை தள்ளிக்கொண்ட சென்ற இளைஞரின் மனைவி. எனக்கு நீ துணை. உனக்கு நான் துணை என்று பாதிக்கப்பட்ட இருவரும் இணைந்து புது அத்தியாயம் எழுதத் தொடங்கினார்கள்.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்க, மீண்டும் புயல். இவர் வேலைக்குச் சென்றிருக்கும் நேரத்தில், அதே இளைஞர் பூர்வாசிரம நினைவு வந்து அவ்வப்போது வந்துச் சென்றிருக்கிறார். பைங்கிளியும் தன் முன்னாள் கணவரின் கவர்ச்சிக்கு முன்பாக மதியிழந்தார். ஒரு சுபமுகூர்த்த நாளில் இவரும் அவருடனேயே ஓட்டம் பிடித்தார்.

அடுத்தடுத்து இரண்டு துணைகளையும் ஒரே இளைஞரிடம் பறிகொடுத்த ஆற்றாமை தாங்காமல் உள்ளூர் பஞ்சாயத்து, போலிஸ் ஸ்டேஷன் என்று தனக்கு சாத்தியப்பட்ட எல்லா இடங்களுக்கும் சென்று தன் பிரச்னையை தீர்த்துவைக்குமாறு கோரியிருக்கிறார் நம் ஹீரோ. இவருடைய கதையை கேட்ட எல்லோருமே “நீ ஹாலிவுட்லே பொறந்திருக்க வேண்டிய ஆளு” என்று பாராட்டினார்களே தவிர, தீர்வுக்கு முன்வரவில்லை. கடைசியாகதான் கமிஷனர் ஆபிஸ் கதவைத் தட்டியிருக்கிறார்.

“இப்போ என்னய்யா பிரச்னை? உன் பொண்டாட்டியை உன் கூட சேர்த்து வைக்கணுமா?” கூடுதல் கமிஷனர் கொஞ்சம் டென்ஷனாகவே கேட்டிருக்கிறார்.

ஹீரோ உடனே மறுத்திருக்கிறார். தனக்கு தன்னுடைய மனைவி வேண்டாம். அவளைவிட அவனுடைய மனைவியைதான் பிடித்திருக்கிறது. அவளோடு மட்டும் சேர்த்துவைத்தால் போதுமென கேட்டுக் கொண்டார்.

கமிஷனர் ஆபிஸே கதிகலங்கிப் போய்விட்டது. நூற்றாண்டு கண்ட சென்னை ஆணையாளர் அலுவலகம் எத்தனையோ விசித்திர வழக்குகளுக்கு தீர்வு கண்டிருக்கிறது. ஆனால் இப்படியொரு வழக்கு வருவது வரலாற்றில் இதுதான் முதன்முறை.

சுவாரஸ்யத்துக்கு சுவாரஸ்யம் சேர்க்கும் வகையாக திடீரென ஒரு சுவையான ட்விஸ்ட். ஹீரோ கமிஷனர் ஆபிஸுக்குப் போயிருப்பதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட வில்லன், வள்ளி தெய்வானை சமேதரராய் திடீரென்று ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார். “அவருக்கு ஏதாவது ஒண்ணு வேணும்னா, இந்த ரெண்டுலே எது இஷ்டப்படுதோ அது அவராண்ட போய்க்கட்டும்” என்று பெருந்தன்மையும் காட்டியிருக்கிறார். ஆனால் ரெண்டுக்குமே ஹீரோவைவிட வில்லனைதான் ரொம்பவும் பிடித்திருக்கிறது. ரெண்டுமே அவரோடு போக இஷ்டப்படவில்லை. ஒற்றுமையாக வில்லனோடேயே உன்னதமாக வாழ விருப்பப்படுகிறார்கள். இப்படிப்பட்ட கண்ணகிகள் இருப்பதால் இந்தியா இரண்டாயிரத்து இருபதுக்கு முன்பாகவே வல்லரசு ஆகிவிடுமென்ற நம்பிக்கை நமக்கு இயல்பாகவே பிறக்கிறது.

ஆனால், நம் ஹீரோவோ தீர்வு கிடைக்காமல் இடத்தை விட்டு நகரப்போவதில்லை என்று ஒற்றைக்காலில் தவம் நின்றார். முக்கோணக் காதலை கேள்விப்பட்டிருக்கிறார் கூடுதல் கமிஷனர். நான்கு பேர் பங்கு கொண்டிருக்கும் இந்த விசித்திரமான காதலுக்கு எத்தனை கோணங்கள் என்று புரியாமல் தாவூ தீர்ந்துப்போய் டரியல் ஆகிவிட்டவர், இந்தப் பஞ்சாயத்துக்கு நான் தீர்ப்பினை சொல்லுவதைவிட, பரங்கிமலை உதவி கமிஷனர் தீர்வு சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இது அவருடைய ஏரியா என்று நைஸாக பாலை அந்த சைடு ஒரு தட்டு தட்டிவிட்டார்.

இன்று விடிகாலையிலேயே தினகரன் நாளிதழில் இச்செய்தியை வாசித்த பரங்கிமலை உதவி கமிஷனர், கூடங்குளத்துக்கு அந்தப்பக்கமாக எங்காவது தண்ணியில்லாத காட்டில் போஸ்டிங் கிடைக்குமாவென்று டிரான்ஸ்பருக்கு அலைந்துக் கொண்டிருப்பதாக பராபரியாக வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

25 ஏப்ரல், 2012

தண்ணீர்ப் பந்தல்


சென்னைக்கு வெகு அருகில் அமைந்திருந்தாலும், கிராமிய அடையாளங்கள் ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை கூட எங்கள் ஊருக்கு இருந்தது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒரு புன்னை மரமோ, வேப்பமரமோ கட்டாயம் இருக்கும். அவ்வப்போது வெயிலில் வியாபாரம் செய்யும் பிளாஸ்டிக் சாமான் கடைக்காரரோ, ஜோசியரோ ‘தில்’லாக யார் வீட்டு முன்பாகவும் இளைப்பாறலாம். “கொஞ்சம் தண்ணி கொடுங்க தாயீ!” என்று குரல் கொடுத்தால், பெரிய சொம்பில் ஜில்லென்று கிணற்று நீர் கட்டாயம் கிடைக்கும். அந்தக் காலத்து மடிப்பாக்க தண்ணீரை குடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். பேச்சுக்கு சொல்வார்கள்.. ‘எங்க வீட்டு கிணத்துத் தண்ணி தேங்காய்த்தண்ணி மாதிரி இருக்கும்’ என்று.. நிஜமாகவே எங்க ஊர் தண்ணி தேங்காய்த் தண்ணிதான். அப்போதெல்லாம் நினைத்ததேயில்லை, தண்ணீரை கூட காசு கொடுத்து வாங்குவோமென்று.

‘கேட்டால் கிடைக்கும்’ என்பதால் மடிப்பாக்கத்திலோ, சுற்று வட்டாரத்திலோ நான் தண்ணீர்ப் பந்தலை பார்த்ததே இல்லை. அறுபத்து மூவர் விழாவுக்கு மயிலாப்பூர் வரும்போதுதான் இப்படி ஒரு சமாச்சாரம் இருப்பதே தெரியும். அப்போதெல்லாம் நகரில் சில இடங்களில் பக்காவாக கான்க்ரீட் கட்டமைப்பு கொண்ட தண்ணீர் பந்தலை ஓரிரு இடங்களில் பார்த்திருக்கிறேன். உபயம் : லயன்ஸ் கிளப் என்றோ அல்லது ஜெயின் சங்கம் என்றோ கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கும். எவர்சில்வர் லோட்டா மிகக்கவனமாக அதைவிட நான்கு மடங்கு விலை கொண்ட சங்கிலியில் கட்டப்பட்டிருக்கும்.

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல் திறக்கும் புரட்சிக்கு புண்ணியம் கட்டிக் கொண்டவர் நம் புரட்சித்தலைவி அம்மாதான். 96ல் தோற்றபிறகு எந்த ஆக்டிவிட்டியும் இல்லாமல் அதிமுக சோர்ந்துப்போயிருக்க, ஒரு கோடைக்காலத்தில் அம்மா அறிக்கை விட்டிருந்ததாக ஞாபகம். “தீயசக்தியின் ஆட்சியில் மக்கள் தாகத்தால் தவித்துப் போகிறார்கள். எனவே கழகத் தொண்டர்கள் ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல் திறந்துவைத்து மக்களின் தாகத்தைப் போக்க வேண்டும்” என்கிற ரீதியில் அந்த அறிக்கை இருந்ததாக நினைவு.

அன்று ஆரம்பித்த அமர்க்களம்தான் இன்று ஆவேசமாக தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் வந்துவிட்டாலே அதிமுகவினர் உற்சாகமடைந்து விடுகிறார்கள். ‘தண்ணீர்ப் பந்தல் திறக்கவரும் புரட்சித்தலைவியின் போர்ப்படைத் தளபதியான செங்கோட்டையன் அவர்களே, அம்மாவின் இதயக்கனி அக்கா வளர்மதி அவர்களே’ ரேஞ்சுக்கு மெகா போஸ்டர் ஒட்டி, கடைகளில் கலெக்‌ஷன் கல்லா கட்டி, தெருவெல்லாம் தோரணம், ஆயிரம்வாலா பட்டாசு என்று கோடைத்திருவிழாவை அரசியல் கலாச்சார கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். காலணா பந்தலை திறக்க எதற்கு அமைச்சர்கள் வருகிறார்கள் என்கிற தர்க்கம் பிடிபடவே மாட்டேன் என்கிறது.

இவர்களைப் பார்த்து ரசிகன் விஜய் நற்பணி மன்றம், கேப்டன் நரசிம்மா மன்றம், காதல் மன்னன் ‘தல’ மன்றம் என்று துக்கடா நற்பணி இயக்கங்களும், உதிரிக் கட்சிகளும் கூட பந்தல் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் சென்னைக்கு வருபவர்கள் தடுக்கி விழுந்தாலே ஏதோ ஒரு தண்ணீர்ப் பந்தலில்தான் விழுந்தாக வேண்டும். திமுககாரர்கள் இந்த விஷயத்தில் அசமஞ்சங்கள். கிருஷ்ணா நீர் வாங்கிக் கொடுத்துவிட்டோமென்று மிதப்பில் அலைகிறார்கள் போல.

எக்கனாமிக்கலாக பார்த்தால் ஒரு தண்ணீர்ப் பந்தல் அமைக்க என்ன செலவாகும்? ஐந்துக்கு ஐந்து சைஸில் சவுக்கு கட்டி, தென்னை ஓலை வேய்ந்து ஒரு சிறிய குடில். தோராயமாக இரண்டாயிரம் செலவாகலாம். இரண்டு பெரிய சைஸ் பானை. கோடம்பாக்கத்தில் விசாரித்ததில் இருநூறு, இருநூற்றி ஐம்பது என்று எஸ்டிமேட் தருகிறார்கள். நான்கு பிளாஸ்டிக் லோட்டா நாற்பது ரூபாய். ஒட்டுமொத்தமாகவே அதிகபட்சம் இரண்டாயிரத்து ஐநூறில் பக்காவான தண்ணீர்ப்பந்தல் அமைத்துவிடலாம். துரதிருஷ்டவசமாக ஒரு பந்தலுக்கு நம்மாட்கள் குறைந்தபட்சம் ஐம்பதாயிரத்திலிருந்து, ஒரு லட்சம் வரை செலவழிக்க வேண்டியிருக்கிறது. தண்ணீர்ப் பந்தலுக்கு ஆகும் செலவை விட இருபது, நாற்பது மடங்கு போஸ்டர், பட்டாசு, பேனர் மாதிரியான சமாச்சாரங்களுக்கு செலவழிக்கிறார்கள். இந்த ஆடம்பரம் இல்லாவிட்டால் ஒரு பந்தல் அமைப்பதற்கு பதிலாக நாற்பது, ஐம்பது பந்தல் போட்டு அசத்து அசத்துவென அசத்தலாம். ஆனால் பப்ளிசிட்டிதான் எதிர்ப்பார்த்த அளவுக்கு கிடைக்காது.

சரி, தீபாவளி மாதிரி கொண்டாடி பந்தல் அமைத்துவிட்டார்கள். மெயிண்டனென்ஸ் எப்படியிருக்கிறது?

முதல் நாள் திறப்பாளர் வந்து திறக்கும்போது தர்ப்பூசணி, கிர்ணிப்பழம், ரஸ்னா, கோக்கோ கோலா, மோர், லொட்டு லொசுக்குவென்று கோடையைத் தணிக்கும் குளிர் சமாச்சாரங்களாக மக்களுக்கு தந்து அசத்துகிறார்கள். இரண்டாவது, மூன்றாவது நாள் மட்டும் பானையில் தண்ணீர் இருக்கும். ஐந்தாவது நாள் அந்தப் பானையில் கால்வாசியளவு தண்ணீர் இருக்கும். குடித்தால் ஒரு மாதிரி சவுரு அடிக்கும். ஏழாவது நாள் பானை மட்டும் இருக்கும். பத்தாவது நாள் பந்தல் மட்டும் இருக்கும். பதினைந்தாவது நாள் அங்கே கட்டப்பட்ட பேனர்களும், ஒட்டப்பட்ட போஸ்டர்களும் மட்டுமே இருக்கும். திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட படங்கள் சில நாளிதழ்களில் மட்டும் ‘கவர்’ சிஸ்டத்தில் பிரசுரிக்கப்படும். பந்தலை ஏற்பாடு செய்து திறந்துவைத்த வட்டச் செயலாளரோ, கொட்டச் செயலாளரோ அடுத்த உள்ளாட்சியின் போது சீட்டு கேட்க ‘பக்கா’வாக இதையெல்லாம் ஆல்பம் போட்டு வைத்திருப்பார்.

தண்ணீர்ப் பந்தல் யாருக்காவது பயன்படுகிறதா?

பன்றிக்காய்ச்சல் பரவிவரும் நிலையில் யாரும், எதிலும் ரிஸ்க் எடுக்கத் தயாரில்லை. யாசகம் கேட்கும் தோழர்கள் கூட தண்ணீர்ப் பந்தல் எதையும் இப்போது பயன்படுத்துவதாக தெரியவில்லை. ஒண்ணரை ரூபாய் கொடுத்தால் ‘ஜில்’லென்று பொட்டிக்கடையில் பாக்கெட்டாகவே கிடைக்கிறது தண்ணீர். குடிவெறியர்கள் கூட மிக்ஸிங்குக்கு தண்ணீர்ப் பந்தல் தண்ணீரை யூஸ் செய்வதில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

நிஜமாகவே நாட்டு நடப்பு எல்லைமீறி கேணைத்தனமாக நடந்துக் கொண்டிருக்கிறது.

11 பிப்ரவரி, 2012

பிட்டு பார்த்தது ஒரு குற்றமா?

கடந்த வாரம் முழுக்க கர்நாடக அமைச்சர்கள் பிட்டுப்படம் பார்த்தது ஒரு தேசத்துரோக குற்றம் என்பதைப் போல மக்களிடம் விவாதம் நடந்தது ஆச்சரியமாக இருக்கிறது. ஏசு சொன்னதைதான் இரண்டாயிரம் வருஷம் கழித்தும் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது. “உங்களில் எவன் யோக்கியனோ, அவன் முதல் கல்லை எறியலாம்”.

பொதுவாக இதுமாதிரி ‘மேட்டர்’களில் கேரள அமைச்சர்கள்தான் கில்லாடிகளாக இருப்பார்கள் என்று யூகித்திருந்தேன். என் யூகத்துக்கு மாறாக கர்நாடக அமைச்சர்களும் – அதிலும் கலாச்சாரக்காவல் இயக்கமான பாஜகவின் அமைச்சர்கள் - முன்னோடிகளாக இருக்கிறார்கள் என்பது அறிந்து மெத்த மகிழ்ச்சி.

பிட்டுப்படம் பார்ப்பது ஒரு கலாச்சாரச் சீரழிவு என்பதாக வெறும் வாய் வார்த்தையில்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் நம் ஒவ்வொருவருக்கும் ‘செக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ்’ இருந்தாலும் கூட ‘பிட்டு’ பார்ப்பதில் இருக்கும் குறுகுறுப்பு எழுபது, எண்பது வயசானாலும் அடங்குவதில்லை. பெண்களுக்கு ‘பிட்’டில் ஆர்வமில்லை என்றுதான் ஒரு காலத்தில் அப்பாவியாக நினைத்திருந்தேன். அதுவும் வெத்து யூகம் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பாக அனுபவப்பூர்வமாக உணரமுடிந்தது.

பிட்டு பார்ப்பதில் போய் என்னத்தை குற்றவுணர்ச்சி என்பது புரியவில்லை. சுய இன்பம் மாதிரி இதுவும் இயல்பான ஒரு சமாச்சாரம்தான். வேடிக்கை பார்க்கும் மனோபாவத்தின் வெளிப்பாடுதான் இது. பிட்டு என்றில்லை. பரபரப்பான எந்த விஷயமாக இருந்தாலும் வேடிக்கை பார்ப்பது மட்டும் நமக்கு சலிப்பதேயில்லை. செக்ஸ் சர்வநிச்சயமாக பரபரப்பான விஷயம். எனவே பிட்டு பார்த்தவர்கள் அதற்காக தாம் தரமிறங்கி நடந்துகொண்டோமே என்று சுயகழிவிரக்கம் கொள்வதோ, பிட்டு பார்த்தவர்களை நோக்கி ‘அயோக்கியர்கள்’ என்று பழிப்பதோ அநியாயம்.

‘பிட்டு’ எடுப்பதுதான் குற்றம், பார்ப்பது ஒன்றும் பெரிய பாவமல்ல என்பது என் வாதம். பிட்டுக் கலாச்சாரத்துக்கு பலியாகிறவர்கள் பெரும்பாலும் பெண்கள். குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்கப் பெண்கள். பணத்துக்காக விருப்ப அடிப்படையில் பெர்ஃபாமன்ஸ் காட்டுபவர்கள் போய், கட்டாயத்துக்காக இதில் ஈடுபடுத்தப்படுபவர்கள், கேண்டிட் முறையில் மறைவாக கேமிரா வைத்து எடுக்கப்பட்டு வினியோகிக்கப்படும் பிட்டுகள் என்று இத்துறை நாம் எவ்வளவு பெரிய அயோக்கியர்களாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத படுமோசமான அயோக்கியத்தனமான முறையில் வளர்ந்துக் கொண்டிருக்கிறது. ‘பிட்டு’ விவகாரத்தை எதிர்ப்பதாக இருந்தால், இந்த அரசியல் அடிப்படையில்தான் எதிர்க்க வேண்டும்.

பிட்டு மாதிரி எந்த சமகாலப் பிரச்சினையாக இருந்தாலும் உலகமயமாக்கலின் விளைவு மற்றும் தாக்கம் எவ்வளவு இருக்கிறது என்பதைதான் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. உலகமயமாக்கல் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுப் படுத்தியிருக்கிறது. அதன் பலனாக விளையும் சாதகங்களோடு, பாதகங்களையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும். இன்றைய தேதியில் இணையத்துக்கு இருக்கும் அகோரப்பசிக்கு, இந்த ‘பிட்டுகள்’ பெரும் தீனியைப் போட்டு வருகின்றன.

இந்தியக் கலாச்சாரத்தில் முதன்முதலாக கோயில்களில் சிற்பவடிவில் ‘பிட்டுகள்’ காட்டப்பட்டன என்பது வரலாற்றில் அழுத்தமாக பதிவான ஒன்று. பிற்பாடு தொழில்நுட்பம் முன்னேற முன்னேற புகைப்படங்களில், சினிமாக்களில், வீடியோக்களில், விசிடிக்களில், இணையத்தில் என்று வளர்ந்து இன்று மொபைல் போன்களில் வந்து நிற்கிறது. இது ‘பிட்டு’களை விரும்பினாலும் சரி, விரும்பா விட்டாலும் சரி தவிர்க்க இயலாத சூழல். இக்கலாச்சாரம் ஜூராசிக்தனமாக வளர்ந்து எதிர்காலத்தில் நடுத்தெருவில் யாராவது இருவர் (ஆண் + ஆணாக இருந்தாலும் கூட) லைவ்ஷோ காட்டி, அதை சுற்றிலும் ஒரு ஐம்பது, நூறு பேர் வேடிக்கைப் பார்ப்பதாக இருந்தாலும் நாம் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அடையத்தேவையில்லை. ஏதேனும் ஒரு சேனல் இதை நேரடி ஒளிபரப்பாகவும் ஸ்பான்ஸர்கள் உதவியோடு ஒளிபரப்பக்கூடும்.

அபத்தமான, ஆபாசமான இந்தக் கட்டுரை மீண்டும் கர்நாடக அமைச்சர்களுக்கே வருகிறது. ஏதோ இரண்டு அமைச்சர்கள் ஆர்வத்தில் ‘பிட்டு’ பார்த்துவிட்டார்கள். ஒரு அமைச்சர் தன் மொபைலையே முல்லைக்கு தேர் கொடுத்த பாரியாய் கொடுத்து உதவியிருக்கிறார். இதையெல்லாம் குற்றமென்று சொல்லமுடியுமாவென தெரியவில்லை. சட்டமன்றத்தில் அமைச்சர்கள் இம்மாதிரி செல்போனில் பிட்டு பார்ப்பார்கள் என்று அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கருக்கு தெரியாது. எனவே இதுகுறித்த சட்டப்பிரிவு எதையும் அவர் வரையறுத்திருக்க வாய்ப்பில்லை. நம்மிடம் இருக்கும் அரைநூற்றாண்டுக்கும் மேலான கிழடு தட்டிப்போய்விட்ட சட்டத்தை வைத்து அவர்கள் மீது கிரிமினல் குற்றமாக வழக்கு தொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. பப்ளிக் நியூசன்ஸ் மாதிரி ஏதாவது கேஸுதான் போடமுடியும். அவ்வாறு இதற்கு முன்பாக ‘பிட்டு’ பார்த்தவர்கள் யார்மீதாவது என்ன பிரிவில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது என்று சட்ட வல்லுனர்கள் யாராவதுதான் சொல்லியாக வேண்டும்.

இந்த விஷயத்தில் அமைச்சர்கள் செய்த குற்றத்தைவிட, அதை ‘ஜூம்’ செய்து உலகுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கேமிராமேன் செய்த குற்றத்தின் அளவுதான் பெரியது என்று கருதுகிறேன். இரண்டு பேர் பார்த்ததை இப்போது உலகமே பார்க்க ஆசைப்படுகிறது. பர்மாபஜாரில் தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் ‘மினிஸ்டர் பார்த்த பிட்டு கொடுப்பா’ என்று கேட்டு, டிவிடி வியாபாரிகளை ‘டார்ச்சர்’ செய்துக் கொண்டிருக்கிறார்களாம். அவசரத்துக்கு கையில் கிடைக்கும் ஏதோ மொக்கைப் பிட்டை கொடுத்து ‘இதைத்தான் மினிஸ்டர்கள் பார்த்தார்கள்’ என்று அவர்களும் வாடிக்கையாளர்களை ‘திருப்தி’ செய்ய வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட ‘பிட்டுவெறி’ சமூகம்தான் அப்பாவி அமைச்சர்களை ‘ராஜினாமா’ லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள் என்பதை நாம் அவதானிக்க வேண்டும்.

7 ஜனவரி, 2012

எங்களின் ரோபோவே!

பெட்ரோல் விலை உயர்வு, பேருந்துக்கட்டணம் உயர்வு, பால்விலை உயர்வு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு... உயர்வு, தட்டுப்பாடு என்று சாதாரண மனிதனுக்கு பி.பி.ஐ எகிறவைக்கும் பிரச்சினைகள் ஏராளம்.. ஏராளம்.. இன்றைய ஐ.டி. கலாச்சார இளைஞர்கள் இதற்காகவெல்லாம் தெருவுக்கு வந்து போராடுகிறார்களோ இல்லையோ.. இணையத்தில் ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ நாலுவரி கிண்டலாக எழுதிவிட்டு ‘ரிலாக்ஸ்’ ஆகத் தொடங்கிவிட்டார்கள்.



எவ்வளவு பெரிய பர்சனாலிட்டியாக இருந்தாலும் சரி. இந்த சமூகவலைத்தளத்தில் புழங்கும் ஆட்களிடம் மாட்டிக்கொண்டால் பஞ்சர்தான். கொஞ்சமாக போட்டோஷாப்பில் விளையாடத் தெரிந்தவர்களாக அவர்கள் இருந்துவிட்டால் கிழிஞ்சது கிருஷ்ணகிரி. வி.ஐ.பி.களின் முகத்தை மட்டும் வெட்டியெடுத்து, வேறு ஏதாவது ஒரு படத்தில் பொருத்தி நொடியில் உலகமெல்லாம் காண செய்துவிடுவார்கள்.

ஃபேஸ்புக்கில் இதுமாதிரி நக்கலடிக்கவென்றே நூற்றுக்கணக்கான க்ரூப்புகளை உருவாக்கி கும்மியடித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘கடுப்பேத்தறார் மை லார்ட்’ என்பது ஒரு க்ரூப்பின் பெயர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், எந்த லெவலுக்கு இறங்கி அடிப்பார்கள் என்பதை.

இப்போது இவர்களிடம் ரொம்பவும் மாட்டிக் கொண்டு அவதிப்படுவது மன்மோகன்சிங்தான். ஏனோ அவரது முகத்தைப் பார்த்தாலே வெட்டி, எங்காவது ஒட்டியாகவேண்டும் என்று இவர்களுக்கு ‘கொலைவெறி’ ஏற்பட்டு விடுகிறது. சோனியா, கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் என்று அன்றன்றைய அவர்களது அறிக்கைகள், செயல்பாடுகளை பொறுத்து, இவர்களது ‘கருத்துப்படம்’ அமையும்.






இணையத்தில் புழங்குபவர்களுக்கு என்றுமே ஃபேவரைட் ஆன ஆட்கள் சிலர் உண்டு. அவர்களில் முக்கியமானவர் டி.ராஜேந்தர். அவருக்குப் பிறகு ஜே.கே.ரித்தீஷ். சமீபகாலமாக தன்னைத்தானே ‘பவர்ஸ்டார்’ என்று அழைத்துக் கொள்ளும் நடிகர் (!) சீனிவாசன். இவர்களெல்லாம் எதைச் செய்தாலும் இவர்களுக்கு ஜோக்குதான். பவர் ஸ்டார் சீனிவாசனின் லத்திகா திரைப்படம் சமீபத்தில் 200 நாள் ஓடியதை இந்த சோசியல் நெட்வொர்க் ஆட்கள் திருவிழாவாக கொண்டாடிவருகிறார்கள்.

இவர்கள் கிராஃபிக்ஸ் செய்ய அவசியமே வைக்காதபடி சில அரசியல்வாதிகளுக்கு கிராபிக்ஸ் போஸ்டர்கள் ஒட்டப்படுவதுண்டு. குறிப்பாக மத்திய அமைச்சர் அழகிரிக்கு அவர்களது தொண்டர்கள் அழைக்கும் அடைமொழிகள், மூக்குப்பொடி போடாமலேயே நம்மை தும்மவைக்கும் லெவலுக்கு காரம் கொண்டவை. அதையெல்லாம் அப்படியே கேமிரா மொபைலில் சிறைபிடித்து, எந்த மாற்றமும் இல்லாமல் இணையத்தில் ஏற்றுகிறார்கள்.




ஏதோ காமெடிக்கோ, பொழுதுபோக்குக்கோ இதையெல்லாம் இவர்கள் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மீதான தங்களது கோபத்துக்கு வடிகாலாகவும் இணையத்தை இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

எல்லை மீறாத வரை சரிதான்!

23 டிசம்பர், 2011

ஏதாவது தலைப்பு போட்டு படித்துக் கொள்ளுங்கள்!

‘புதுவருஷத்தில் இருந்து தம் அடிக்கக் கூடாது, தண்ணி அடிக்கக் கூடாது’ என்கிற வழக்கமான லவுகீக சடங்குகள் ஒருபுறமிருக்க, பார்ப்பவனிடமெல்லாம் “உங்க ஆபிஸ் டயரி நல்லா பெருசா, வாட்டமா(?) இருக்குமாமே? ஒண்ணு கிடைக்குமா?” என்று பரக்காவெட்டி போல கேட்டுவைப்பதும், “ஜி.ஆர்.டி-லே ரெண்டு சீட்டு போட்டிருக்கீங்களே? அப்போன்னா ரெண்டு காலண்டர் கொடுத்திருப்பானே? ஒண்ணு உங்களுக்கு. இன்னொன்னு யாருக்கு?” என்று அல்பத்தனமாய் அலம்பல் பண்ணுவதுமாக, தன்னுடைய வாழ்க்கை முழுக்கவே கவுண்டமணியாக மட்டுமே வாழ்ந்து கழிப்பது என்பதனை ஒரு சபதமாகவே மேற்கொண்டு வாழ்ந்து வரும் தமிழன்....

யப்பா... எவ்ளோ நீட்டு வாக்கியம்...

ஆகையால் மக்களே, வருட கடைசியில் உங்களுக்கு ஆயிரம் சம்பிரதாயமும், சடங்குகளும் இருக்கலாம். பத்திரிகைகளுக்கும் இதுமாதிரி பாரம்பரிய சடங்குகள் உண்டு. ’கடந்தவை’, ‘நினைவில் நின்றவை’, ‘சென்ற வருடம்’ என்றெல்லாம் ஏராளமான தலைப்பில், எல்லா பத்திரிகையும் ஒரே மேட்டரையே நன்கு நைசாக மாவரைப்பது வழக்கம். படிப்பவர்களுக்கு இது அரைத்தமாவாக தெரிந்தாலும், இதையெல்லாம் தொகுப்பது என்பது தாலியறுக்கும் வேலை. இதற்காக சம்பந்தப்பட்ட பத்திரிகைக்காரன் ரெண்டு, மூன்று நாள் கண்விழித்து நைட்டு வேலை பார்க்க நேரிடும். அதற்குப் பிறகு கண்ணு பூத்துப்போய் ரோட்டில் போகும்போது கூட அவனை கடக்கும் ஃபிகரை கூட கடந்த வருட ஃபிகராகதான் பார்ப்பான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

தினத்தந்தி மாதிரியான பத்திரிகைகள் இந்த கந்தாயத்துக்கெல்லாம் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்கிற மனோபாவம் கொண்டவை. உதாரணத்துக்கு அவர்களது 1950ஆம் ஆண்டு ஜனவரி 1 பேப்பரை எடுத்துப் பாருங்களேன். முகப்புப் பக்கத்தில் ஒரு கார்ட்டூன் இருக்கும். அதில் 1949 என்கிற கிழவன் ஃபிரேமை விட்டு வெளியே போவான். 1950 என்கிற குழந்தை ஃபிரேமுக்குள் வரும். இப்போது 2012க்கு வருவோம். அதே கார்ட்டூன்தான் இப்போதும் முகப்பை அலங்கரிக்கப் போகிறது. என்ன கிழவனுக்கு 2011 என்கிற எண்ணும், குழந்தைக்கு 2012 என்கிற எண்ணும் மட்டும் பலமாக சிந்திக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். தீபாவளி கார்ட்டூன், பொங்கல் கார்ட்டூன் என்றெல்லாம் எல்லா ஸ்பெஷலுமே இதே பாணியில்தான் தினத்தந்தியில் அமையும். என்ன 1958ல் சரோஜாதேவி புதுவருட வாழ்த்து சொல்லியிருப்பார். இப்போது ஹன்சிகா சொல்லுவார். இந்த வித்தியாசம் போதாதா?

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறியும் வேலைதான். இருந்தாலும் சொல்கிறேன். பத்திரிகைப் பணி என்பது பெரும்பாலும் இதுமாதிரி ‘ஜல்லி’ அடிக்கும் பணியாகவே செய்யவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. ஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறை எப்போதோ ஓரிரண்டு சுவாரஸ்யமான வேலைகள் வரக்கூடும். அதுவரைக்கும் இதுமாதிரி வழக்கமான மாவரைக்கும் மாவை எப்பாடுபட்டேனும் அரைத்தே ஆகவேண்டும். ஸ்பெஷல் என்றால் விருந்தினர் பக்கம் எல்லாம் வந்தாக வேண்டும் யார்தான் கண்டுபிடித்ததோ தெரியவில்லை. சாதாரணமாக ஈ ஓட்டிக் கொண்டும், ‘உங்க பத்திரிகையிலே என்னோட ஒரு பேட்டி போடுங்களேன்’ என்று கெஞ்சிக் கொண்டிருக்கும் இந்த விருந்தினர்கள், எப்படித்தான் இந்த ஸ்பெஷல் போடும் காலத்தில் மட்டும் பிஸியாகித் தொலைக்கிறார்களோ? செய்வது புண்ணாக்குத் தொழில் என்றாலும், காட்டும் பந்தா மட்டும் இவர்களுக்கு குறைச்சல் இல்லை.

டயர்ட்னஸ்ஸில் ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறேன். ஸ்பெஷலுக்காக ரொம்ப காத்திரமாக(?) ஏதோ எழுதிக் கொண்டிக்கும் போது, ஒரு ரிலாக்சேஷனுக்காக, எந்த ஃபோகஸும் இல்லாமல், எந்த ரெஸ்ட்ரிக்‌ஷனும் இல்லாமல், எந்த சப்ஜெக்ட்டும் இல்லாமல் எதையாவது ஒரு ஐநூறு வார்த்தையை பைத்தியக்காரத்தனமான மனநிலையில் எழுதித் தொலைக்க முடியுமா என்று பார்ப்பதற்கே இதை கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்.

இந்த சலிப்பான வருடக் கடைசி, புதுவருட சம்பிரதாயங்களை சிலர் மட்டும் எப்படி சுவாரஸ்யமாக அணுகுகிறார்கள் என்று தெரியவில்லை.

இன்றைய தினகரன் வெள்ளிமலர் ஒரு பொக்கிஷம். சினிமா ரசிகர்கள் போற்றிப் பாதுக்காக்க வேண்டிய மலர். கடந்த ஆண்டு மலையாளம், இந்தி, தெலுங்கு, ஹாலிவுட் சினிமாவின் நிகழ்வுகளை, முக்கியமானது எதுவும் விடுபட்டு விடாமல் தலா ரெண்டு பக்க கேப்ஸ்யூல்களாக கொடுத்திருக்கிறார்கள். நான் வெள்ளிமலரின் ரெகுலர் ரசிகன். வெள்ளிக்கிழமை காலை எண்ணெய், சீயக்காய் வைத்து தலைக்கு குளிக்கிறேனோ இல்லையோ (இது பெண்கள் வழக்கம்தானே? நான் எந்த கிழமையில் சீயக்காய் தேய்க்கிறேன் என்று மறந்துவிட்டது) வுட்டாலங்கடி, ஹாலிவுட் ட்ரைலர் ஆகியவற்றை வாசிக்கத் தவறுவதில்லை. இப்போது ரவிதேஜா, சுதீப், கரன் ஜோஹர், டாம் க்ரூஸ் மாதிரி பெயர்களை எங்காவது வாசிக்க நேர்ந்தால் ஜெயம் ரவி, சித்தார்த், ஹரி, சிங்கமுத்து மாதிரி பெயர்களை வாசிப்பதைப் போன்ற ஈஸியான அட்டாச்மெண்ட் வர இந்த வுட்டாலங்கடி, ஹாலிவுட் ட்ரைலர்கள் ஒரு முக்கியக் காரணம். இந்த மாதிரி வாரா வாரம் ஒரு படத்துக்கு ப்ரிவ்யூ கொடுப்பவர்கள், இந்த வாரம் கடந்த வருட முக்கிய சினிமா நிகழ்வுகளை அலசியிருக்கிறார்கள். இந்தியில் வசூல் சாதனை புரிந்த படங்கள், தெலுங்கில் டப்பாவுக்குள் முடங்கியவை, கன்னடத்தில் சாதனை, மலையாளத்தில் வேதனை என்று கலக்கல் காக்டெயில். தமிழ் சினிமா பற்றிய அலசல்கள் அடுத்த வாரமென்று நினைக்கிறேன். நிஜமாகவே இந்த கட்டுரைகளை எழுதுவது சவால்தான். அனேகமாக ஐநூறு வார்த்தைகளுக்குள் ஒரு வருட சரித்திரத்தை எழுதியாக வேண்டும். எதை எடுப்பது, எதை விடுப்பது என்பதையெல்லாம் ஐநூறுக்குள் அடக்குவது, அதையும் வறட்சியான கட்டுரைநடையில்லாமல் புனைவு மாதிரி சுவாரஸ்யப்படுத்துவது என்று தினகரன் அசத்தியிருக்கிறது. ஒரே ஒரு குறை. சிங்கம் நிஜமாகவே ஹிட்டுதான். ஒத்துக் கொள்கிறோம். அதை கலாநிதி மாறன் வழங்கும் சன் பிக்சர்ஸ்தான் தயாரித்தது. அதையும் ஒத்துக் கொள்கிறோம். அதற்காக அது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது, கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டதையெல்லாம் சொல்லும்போது கூட ‘கலாநிதிமாறன் வழங்கும், சன் பிக்சர்ஸ் தயாரித்த’ என்கிற ஸ்லோகனை எல்லா இடத்திலும் மனப்பாடமாக ஒப்பித்தாக வேண்டுமா? கொஞ்சம் விட்டால் இனிமேல் காட்டுக்குள் இருக்கும் சிங்கத்தைப் பற்றி எழுதும்போது கூட ’கலாநிதிமாறன், சன்பிக்சர்ஸ்’ வார்த்தைகளை சேர்த்து எழுதுவார்கள் போலிருக்கிறதே?

எதையோ எழுதவந்து, எதை எதையோ எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னும் நிறைய எழுத வேண்டியிருக்கிறது. டாட்டா. பை.. பை.. ஹேப்பி கிறிஸ்துமஸ்!

18 அக்டோபர், 2011

உங்கள் வலைப்பூவை பிரபலப்படுத்த...


நான் பிரபல பதிவராக(?) இருந்த காலத்தில் இந்த டிப்ஸ்களை எழுதினேன். இப்போதைய மாடர்ன் டேமில் பிலாக்கிங்குக்கு இவையெல்லாம் உதவுமா என்று தெரியவில்லை. ஒருவேளை ட்ரெண்ட் மாறியிருக்கலாம். ஆனால் அந்தக் காலத்து வலைப்பதிவு பெருசுகள் அவ்வப்போது இந்த டிப்ஸ்களை என்னிடம் இப்போதும் நினைவு கூர்வதுண்டு... ஒருவேளை நீங்கள் இதையெல்லாம் ஃபாலோ செய்து, எதிர்பாராவிதமாக ‘லத்திகா’ மாதிரி உங்கள் பிலாக் ஹிட் அடித்தாலும் அடிக்கலாம்.

ஓக்கே, கமிங் டூ த பாயிண்ட் :

டைரக்ட் மார்க்கெட்டிங் :

தமிழ்மணத்தில் எந்தப் பதிவை பார்த்தாலும் சிரமம் பார்க்காமல் நுழைந்து விடுங்கள். பதிவை முழுவதாக படிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. லைட்டாக ஒரு லுக் விட்டு அப்பதிவில் முத்தாய்ப்பாக இருக்கும் ஏதோ ஒரு கருமத்தை Quote செய்து “அருமையாக சொன்னீர்கள். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!” என்றொரு பின்னூட்டத்தை போட்டு விட்டு வந்துவிடுங்கள். நம்முடைய பதிவையும் எவனோ ஒரு கம்முனாட்டி பாராட்டிவிட்டானே என்று மெய்சிலிர்த்து சம்பந்தப்பட்ட பதிவர் உங்களது Blogger Profile மூலமாக உங்கள் பதிவுக்கு வந்து பதில் மொய் வைக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது. தமிழ் மணத்தின் “ம திரட்டி” மொத்தத்தையும் உங்களது “அருமையாக சொன்னீர்கள்” என ஆரம்பிக்கும் பின்னூட்டத்தின் மூலமாக ரொப்பினீர்கள் என்றால் இன்ஸ்டண்ட் பலன் நிச்சயம் உண்டு.


டெலி-மார்க்கெட்டிங் :

சில கோயிந்து பதிவர்கள் தங்களது டெம்ப்ளேட்டில் கொடூரமான தங்கள் முகத்தை போட்டு கீழே போன் நம்பரையும் கொடுத்து “நிறைய பேசலாம், வாருங்கள்” என்று போட்டிருப்பார்கள். சும்மா டைம் பாஸுக்கு அவர்களுக்கு போன் செய்து, “உங்க பதிவுகளையெல்லாம் தொடர்ந்து படிக்கிறேன். ரொம்ப நல்லா எழுதறீங்க. உங்க சிந்தனைகளோடு ஒத்த சிந்தனை கொண்டவன் நான் என்று ஆரம்பியுங்கள். கொஞ்சம் அழுத்தமாகவே உங்கள் வலைப்பூவின் முகவரியையும் சொல்லிவிடுங்கள். உங்களது டெம்ப்ளேட்டிலும் உங்கள் போன் நம்பரை பிரசுரித்தால் எவனாவது வேலையத்தவன் போன் செய்து பேசுவான். இவ்வாறாக உங்கள் வலைப்பூவை தொலைபேசி வாயிலாகவும் மற்றவன் தலையில் கட்டமுடியும்.


அட்வெர்டைஸிங் :


ஒரு பதிவை போட்டுவிட்டு பின்னூட்டங்கள் வராமல் தேவுடு காத்திருப்பதை விட அனானிமஸாக நீங்களே உங்களை பாராட்டி ஒன்று, ரெண்டு பின்னூட்டங்களை போட்டுக் கொள்ளுங்கள். இந்த பின்னூட்டக்கயமை மூலமாக தமிழ்மணத்தின் முகப்பில் எப்போதும் நின்று கொண்டிருக்கலாம். ஏதோ பின்னூட்டம் வந்திருக்கிறதே, விஷயம் இருக்கிற பதிவு தான் போலிருக்கு என்று சில அப்பாவிகள் வந்து மிக சுலபமாக தூண்டிலில் மாட்டிவிடக்கூடும். அப்படியும் வேலைக்கு ஆகவில்லையென்றால் சம்பந்தப்பட்ட பதிவின் லிங்கை காப்பி செய்துகொண்டு, தமிழ்மணத்தில் வந்திருக்கும் எல்லாப் பதிவுகளுக்கு போய் “நல்ல பதிவு” என்று சொல்லிவிட்டு லிங்கை நைசாக சொருகிவிட்டு வந்துவிடுங்கள். டோண்டு சார் போன்றவர்களுக்கு இதுபோன்ற பின்னூட்டங்களை போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.


மக்கள் தொடர்பு :


ஒரே ஒரு ஐடி மட்டுமே வைத்துக் கொண்டிருந்தால் வலையுலகில் நாக்கு வழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியது தான். குறைந்தது பத்து ஐடிக்களாவது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஐடியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சூடான ஒரு பதிவு போடுங்கள். இன்னொரு ஐடியில் அதே பதிவை கடுமையாக தாக்கி முதலாளித்துவம் பேசுங்கள். இரண்டு ஐடியிலும் மாறி மாறி சண்டைப் போட்டுக் கொண்டால் மற்ற பதிவர்கள் இடையே ஒரு சலசலப்பு ஏற்படும். ”என்ன பிரச்சினை?” என்று பிரச்சினைகளுக்கு ஆளாய் பறக்கும் மொக்கை மற்றும் கும்மிப் பதிவர்கள் உங்களை சூழ்ந்து கொள்வார்கள். ஆளாளுக்கு அவரவர் சர்க்கிளில் உங்கள் ஐடிக்களை பிரபலப்படுத்துவார்கள். வலையுலகில் மிகப்பிரபலமாக இருக்கும் ‘லக்கிலுக்' மற்றும் ‘இலைக்காரன்' ஐடிக்கள் இப்படித்தான் பிரபலமடைந்ததாக வாத்ஸ்யாயனர் தன்னுடைய காமசூத்ரா புத்தகத்தில் எழுதியிருக்கிறாராம்.


ஈவண்ட்ஸ் மேனேஜ்மெண்ட் :

பொழப்பத்தவர்கள் சிலர் அவ்வப்போது போண்டாவோ, பஜ்ஜியோ வாங்கிக் கொடுத்து பதிவர் சந்திப்புகள் நடத்துவது வழக்கம். அதுபோலவே சில நாட்களாக சோறு போட்டு பதிவர் பட்டறையும் நடத்துகிறார்கள். இதுபோன்ற ஈவெண்ட்ஸ்களில் தவறாமல் கலந்துகொண்டால் அந்நிகழ்ச்சிகள் குறித்து சிலாகித்து போடப்படும் எல்லாப் பதிவுகளிலும் உங்கள் பெயர் கண்டிப்பாக இடம்பெறும். யாருக்கு தெரியும்? நாளைக்கே இதன்மூலமாக நீங்கள் சன்நியூஸிலும், ஆனந்தவிகடனிலும் கூட பேட்டி தர வாய்ப்பிருக்கிறது.


பிராண்டிங் :

இதை 'பிறாண்டிங்' என்று படிக்கவேண்டாம், Branding என்று படியுங்கள். படிக்கும் எல்லாப் பதிவர்களுக்கும் ”நல்ல பதிவு, சூப்பர்” என்று சொம்படித்துக் கொண்டிருந்தால் ‘நடுநிலை பதிவர்' என்ற பிராண்டிங் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். அவ்வாறில்லாமல் டோண்டு சாரையோ, இட்லிவடையையோ எதிர்த்து ஒரு பதிவு போட்டாலோ அல்லது பின்னூட்டம் போட்டாலோ “பார்ப்பனீய எதிர்ப்பாளர்” என்ற பிராண்டிங் கிடைக்கும். அதுவும் வேண்டாமா? ‘கலைஞர் கருணாநிதி' வலைப்பூவுக்கு போய் கலைஞரை திட்டி ஒரு சின்ன பின்னூட்டம் போடுங்கள். உடனடியாக ‘பார்ப்பன அடிவருடி' பிராண்டிங் கிடைக்கும். இது எதுவுமே வேண்டாமென்றால் உங்கள் பதிவுகளில் நல்ல பிள்ளையாக ‘நான் பார்த்த முதல் படம்', ‘நான் சைட்டு அடித்த பிகர்', ‘நானும் பினாத்தல் சுரேஷும்' என்று பதிவு போட்டுக் கொண்டிருங்கள். சிறந்த மொக்கை மற்றும் கும்மிப் பதிவராக பிராண்டிங் செய்யப்படுவீர்கள்.

அப்படியில்லையேல் ஒம்மா, த்தா, யோனி போன்ற வார்த்தைகளை பின்னூட்டங்களிலும், பதிவுகளிலும் ஆங்காங்கே அள்ளித் தெளியுங்கள். உயிர்மை, கவிதாச்சரண், காலச்சுவடு ரேஞ்சு புத்தகங்களில் வரும் கட்டுரைகளில் சில பத்திகளை மனப்பாடம் செய்து வார்த்தைகளை ஆங்காங்கே மாற்றிப் போட்டு எல்லா இடத்திலும் கும்மியடியுங்கள். ‘பின்நவீனத்துவ' பிராண்டிங் நிச்சயம் கிடைக்கும்.


கஸ்டமர் Feedback :


உங்கள் பதிவுகள் சூப்பராக இருந்தாலும் சரி, மொக்கையாக இருந்தாலும் சரி. வந்து பின்னூட்டம் போட்டு உங்களை போற்றி புகழ்ந்து கொண்டிருக்க எத்தனை பேருக்கு நேரம் இருக்கப் போகிறது. ஆகையால் தன் கையே தனக்குதவி என்ற அடிப்படையிலும், நமக்கு நாமே திட்டத்திலுமாக சேர்ந்து வெவ்வேறு பெயர்களில் நீங்களே உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டுக் கொள்ளுங்கள். பத்து பின்னூட்டங்கள் நல்ல பதிவு என்ற ரேஞ்சிலும் இடையிடையே ஒன்றிரண்டு மோசமான பதிவு, தட்டையான சிந்தனை என்றும் மாற்றி மாற்றி போட்டுக் கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு பதிவுக்கும் இருபதுக்கும் மேற்பட்ட கமெண்டுகள் வருவதாக காட்டிக் கொண்டால் வலையுலகில் கொஞ்சம் கெத்தாக வலம் வரமுடியும்.

ஓக்கே, ரொம்ப போரடிக்குது இல்லே. Bye for now.

14 அக்டோபர், 2011

தள்ளு தள்ளு

ஃபேஸ்புக், பஸ் மற்றும் ட்விட்டர் ஸ்டேட்டஸ்களில் அடிக்கடி ‘தள்ளு தள்ளு’ தலைவர் என்று நாம் குறிப்பிடும்போது, அவர் யாரென்று புதுசு புதுசாக தினுசு தினுசாக யாராவது கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அந்தத் தொல்லையில் இருந்து விடுபட தெளிவான விளக்கம் ஒன்றினை அளிக்க வேண்டியது நம் கடமையாகிறது.

ஆத்திகரோ, நாத்திகரோ நீங்கள் திருப்பதி சென்றிருந்தால் இந்த வசனத்தை கேட்காமல் இருந்திருக்கவே முடியாது. ’ஜருகண்டி, ஜருகண்டி’.

கிட்டத்தட்ட ‘ஜருகண்டி, ஜருகண்டி’ வாய்ஸ் மாடுலேஷனிலேயே கடந்த இரண்டு வருடங்களாக, சீமான் வரும் நிகழ்ச்சிகளில் எல்லாம் அவரது தொண்டர்கள் குரல் கொடுத்துக்கொண்டே வருவார்கள். “தள்ளு தள்ளு” என்று வேகமாக குரல் கொடுப்பதோடு இல்லாமல், கூட்டத்தை கையால் இருபுறமாக தள்ளிவிட்டுக் கொண்டேவும் வருவார்கள். யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதைப் போல சீமான் வரும் இடமெல்லாம் இந்த ‘தள்ளு தள்ளு’ சத்தம் கேட்பது என்பது வழக்கமாகி போய்விட்டது. ஆளே இல்லாத டீக்கடைக்கு சீமான் வந்தாலும் ‘தள்ளு தள்ளு’ பந்தாவுக்கு மட்டும் எந்த குறைச்சலுமில்லை.

எனவேதான் தமிழுணர்வு வாய்த்த புலவர் பெருமக்கள் சிலர் அவரை ‘தள்ளு கொண்டான்’ என்று புகழ்ந்துரைக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களோ இப்போதெல்லாம் வாழ்க கோஷம் போடுவதற்கு பதிலாக விண்ணதிர ‘தள்ளு தள்ளு’ கோஷம் போடுகிறார்கள். அரசியல் மட்டத்தில் ‘தள்ளு தள்ளு தலைவர்’ என்று அறியப்படுகிறார்.

மற்றப்படி இந்தப் பட்டத்தின் பின்னால் ஆபாசமான காரணம் எதுவுமில்லையென்று திட்டவட்டமாக தெரிவிக்கின்றோம்.

27 செப்டம்பர், 2011

மொக்கை ஃப்லிம் க்ளப்

2007 இறுதியா அல்லது 2008 ஆரம்பமா என்று சரியாக நினைவில்லை. மொக்கைப் படங்களின் படுதீவிர ரசிகர்களான நானும், தோழர் கிங் விஸ்வாவும் திடீரென அறச்சீற்றம் கொண்டோம். உப்புமா படங்களை மக்கள் தியேட்டர்களுக்குச் சென்று பார்ப்பதில்லை. திருட்டு டிவிடியிலோ அல்லது டிவியிலோ பார்த்துத் தொலைத்து விடுகிறார்கள். மொக்கைப்பட தயாரிப்பாளர்களின் வீட்டு கேஸ் ஸ்டவ்வில் பூனைகள்தான் தூங்குகிறது. ஏதாவது செய்யணும் பாஸூ.

இந்த சீரிய சிந்தனையின் விளைவாகதான் தொடங்கப்பட்டது மொக்கை ஃப்லிம் க்ளப். எத்தகைய மரண மொக்கைப் படமாக இருந்தாலும் சரி. முதல் நாளே தியேட்டருக்குச் சென்று, சூப்பர் ஸ்டார் படங்களுக்கான ஆரவாரத்தோடு ரசிப்பது என்பதை எங்கள் கொள்கையாக வரையறுத்தோம். தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று மொழிபாகுபாடின்றி மொக்கைப்படங்களை ஆதரிப்பது என்பதாக சபதமும் மேற்கொண்டோம். குறிப்பாக தோழர் கிங்விஸ்வா தெலுங்கு மொக்கைப்படங்களின் தீவிர வெறியர். பிரின்ஸ் மகேஷ்பாபுவின் ஒக்கடு ரிலீஸ் ஆனபோது அவரது ஈமெயில் ஐடி பிரின்ஸ்விஸ்வா@ஜிமெயில்.காம் ஆக இருந்தது. நாகார்ஜூனாவின் ‘கிங்’ ரிலீஸின் போது கிங்விஸ்வா@ஜிமெயில்.காம் ஆக உருமாறியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். மரணமொக்கைப் படங்களாக தேர்ந்தெடுத்து, கண்டுகளித்து வலைப்பூவில் விமர்சனம் எழுதி, மற்றவர்கள் தாலியறுப்பது எங்கள் திட்டம்.

உன்னத நோக்கத்தோடு தொடங்கப் பெற்றாலும், ஆரம்பத்தில் க்ளப் ரொம்ப மொக்கையாகவே செயல்பட்டது. ஆளே இல்லாத தியேட்டர்களுக்கு போய் எக் பஃப்ஸ் சாப்பிட்டோம். பிற்பாடு தோழர் அதிஷாவும் எங்கள் க்ளப்பில் இணைந்தபிறகு சூடு பிடிக்க ஆரம்பித்தது. உட்லண்ட்ஸ், காசினோ, மோட்சம், பைலட், கிருஷ்ணவேனி, அண்ணா, கே.கே.நகர் விஜயா போன்ற ரெண்டுங்கெட்டான் தியேட்டர்கள்தான் எங்களுக்கு வேடந்தாங்கல். மொக்கைப் படங்கள் என்று தேர்ந்தெடுத்துப் பார்க்கும் சிரமத்தை எங்களுக்கு தராமல், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் எல்லாப் படங்களுமே மொக்கையாக அமைந்துவிட்ட காரணத்தால், தேர்ந்தெடுக்கும் பணி சுளுவானது. இன்றுவரை நாங்கள் பார்த்த படங்களிலேயே சிறந்த மொக்கைப் படமாக ‘பொக்கிஷம்’ விளங்குகிறது (கருமாந்திரத்தை பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் பார்த்தோம் என்பது குறிப்பிடத்தக்கது).

அதற்குப் பிறகு எங்களது வட்டம் விரிவடைந்தது. கவிஞர் தா.பி. அவராகவே கழுத்தில் மாலை போட்டுக்கொண்டு வந்து சேர்ந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் வந்தபிறகு தொடர்ச்சியாக நாங்கள் பார்த்த படங்கள் அனைத்துமே ‘சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் பெருமையுடன் வழங்கும்’ படங்கள் என்பதால் மொக்கை சூடு பிடித்தது. சன்பிக்ஸர்ஸின் படங்கள் அவரது கவிதைகளைவிட மொக்கைகளாக அமைந்ததை கவிஞரால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. இதனால் வெள்ளிக்கிழமை தோறும், நாங்கள் போன் செய்து கூப்பிடும்போது கவிஞருக்கு டைபாய்டும் வந்து தொலைத்தது. கோயமுத்தூரிலிருந்து புளிச்சோற்றை மூட்டை கட்டிக்கொண்டு டாக்டர் அ.கொ.தீ.க.வும் சென்னைக்கு வந்து, அவ்வப்போது மொக்கைப்பட ஜோதியில் கலந்துகொண்டார். பைலட் தியேட்டருக்கு அழைத்துப்போய் ஹாலிவுட் தமிழ் டப்பிங் மொக்கைகளை ரெண்டு பீஸு சாம்பிள் காட்டியதிலிருந்து, அலுவலகரீதியாக கூட இப்போதெல்லாம் டாக்டர் சென்னைக்கு வருவதில்லை.

சமீபத்தில் ஆறு மாத காலத்துக்கு முன்பாக நம் க்ளப்பில் இணைந்தார் சூப்பர் ஸ்டார் தியேட்டர் டைம்ஸ். இயல்பாகவே இவரிடம் மொக்கைத்தன்மை கைகூடி இருந்ததால், எங்கள் க்ளப்பின் அசைக்க முடியாத ஆணிவேராக அமைந்தார். தமிழ்ப்படம் பார்ப்பதாக இருந்தாலும் கூட இவருக்கு சப்-டைட்டில் அவசியம். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, மாண்டரீன் என்று எந்த மொழியுமே இவருக்குப் புரியாது என்பதுதான் இவருடைய ஸ்பெஷாலிட்டி. படுசோகமான காட்சிகளில் விழுந்து விழுந்து சிரிப்பதும், வயிற்றைப் பதம் பார்க்கும் காமெடிக் காட்சிகளை உருகிப் போய்ப் பார்ப்பதுமாக இவரது ரசனையே அலாதியானது.

எங்கள் டீமுக்கு லேட்டஸ்ட் வரவு நரேன். அல்பசினோ, ராபர்ட் டீநீரோ, டிண்டோ ப்ராஸ் என்று ஆங்கிலமாய் அலட்டிக் கொண்டிருந்தவரை, “வாய்யா முனி பார்க்கலாம்” என்று உட்லண்ட்ஸுக்கு தள்ளிக்கொண்டு போனோம். இப்போது ‘மங்காத்தா ஈஸ் த பெஸ்ட் மூவி இன் த வேர்ல்டு. ஒய் ஐ சே திஸ்...’ என்று பெசண்ட் நகர் பரிஸ்டாவில், பீட்டர்களோடு பீலா விட்டுக் கொண்டிருக்கிறார்.

மொக்கை ஃப்லிம் க்ளப்புக்கு இதுவரை பொருளாதாரரீதியான பிரச்சினைகள் ஏதும் வந்து தொலைக்கவில்லை. ஏனெனில் ஒன்று முதல் பத்து தேதிகளுக்குள் 50 ரூபாய் டிக்கெட், பத்து முதல் இருபது தேதிகளுக்குள் 30 ரூபாய் டிக்கெட், இருபது முதல் முப்பது தேதிக்குள்ளாக இருந்தால் 10 ரூபாய் டிக்கெட் என்று பக்காவாக பட்ஜெட் போட்டு படம் பார்க்கிறோம்.

க்ளப்பில் சேர விரும்பும் திரைப்பட ஆர்வலர்கள் திறந்தமனதோடு வரவேற்கப்படுகிறார்கள். ஒரே ஒரு கண்டிஷன். இந்த க்ளப்பின் உறுப்பினர் கடுமையான மொக்கைச்சாமி என்பதற்கான போதுமான சான்றிதழ்களும், சம்பவங்களும், தரவுகளும் அவசியம்.

எங்கள் மொக்கை ஃப்லிம் க்ளப் சோர்வில்லாமல் இயங்கிவருவதற்காக, மிகச்சரியான இடைவெளிகளில் குருவி, வில்லு, வேட்டைக்காரன், காவலன் என்று மொக்கைப்படங்களாக நடித்துத் தள்ளுபவரும், எங்களை வாழவைக்கும் தெய்வமுமான டாக்டர் அணிலுக்கு கோடானுகோடி நமஸ்காரங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

லேட்டஸ்ட் மொக்கை டிப்ஸ் : மொக்கைப் படங்களுக்கு சிகரமாய் லேட்டஸ்டாக வெளிவந்திருக்கும் ஹாலிவுட் தமிழ் டப்பிங் திரைப்படம் ஏலியன்ஸ் விஸ் அவதார். இப்படத்தைக் காணநேரும் மொக்கைரசிகர்களுக்கு நெஞ்சிலிருந்து (ஸ்பெல்லிங் மிஸ்டேக்) ரத்தம் வழிவது நிச்சயம். படம் பார்க்கும்போது கையில் பஞ்சும் அவசியம். எனவே, காணத்தவறாதீர்கள்!

31 மே, 2011

நமீதா இட்லி ரெடி!

நேற்று ராமசேரி இட்லி பற்றி எழுதியதை வாசித்த நிறைய நண்பர்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் ’குஷ்பு இட்லி’ தயாரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து பேசினார்கள். குஷ்பு இட்லி என்பது வேறொன்றுமல்ல. கொஞ்சம் புசுபுசுவென்று பெரிய சைஸில் உருவாக்கப்பட்ட இட்லி, அவ்ளோதான். நம் லோக்கல் ஆட்களின் Branding அறிவே அறிவு. தற்போது வடபழனியில் ‘சிம்ரன் ஆப்பக்கடை’ கூட சக்கைப்போடு போடுவதும் கூட வரலாற்றில் பதியப்பட வேண்டிய நிகழ்வு.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கார்ப்பரேட் சினிமா நிறுவனத்தின் சீனியர் கண்டெண்ட் எக்ஸிக்யூடிவ்வாக பணிபுரிந்து வந்தேன். அவர்களது சினிமா தொடர்பான இணையத்தள பணிகளுக்கு தொடர்ச்சியாக கண்டெண்ட் அளித்து வருவது என்னுடைய வேலை. ‘அழகிய தமிழ் மகன்’ ரிலீஸ் ஆகும் நேரத்தில், மக்கள் தொடர்புக்காக ஒரு ‘குபீர்’ மேட்டரை களத்தில் இறக்கினேன். அது ‘நமீதா இட்லி’. விடிகாலை கற்பனையில் உதித்த ‘நமீதா இட்லி’ நிஜத்தில் Branding செய்து விற்கப்பட்டதா என்பது இன்றுவரை தெரியாது. யாராவது நமீதா பெயரில் இட்லிக்கடை தொடங்க விரும்பினால், என்னிடம் காப்பிரைட் உரிமைக்காக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. நமீதாவிடம் மட்டும் அனுமதி வாங்கிக் கொண்டால் போதுமானது.

அந்த மேட்டர் எக்ஸ்க்ளூஸிவ்வாக உங்களுக்காக...



பொருட்களை விற்பதற்காக திரையில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் பெயரில் பிராண்டிங் செய்யப்படுவது உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பாக நதியா கம்மல், நதியா வளையல் என்று கூறி கம்மல், வளையல் வகையறாக்களை விற்றார்கள். அதன்பின்னர் கவுதமி தாவணி, கவுதமி மிடி, கவுதமி ஸ்டப்ஸ் என்று சொல்லி விற்கப்பட்டது. பிரபலமான படங்களின் பெயர்களில் துணிவகைகள் விற்பனை செய்யப்படுவது மிகப்பெரிய கடைகளில் கூட வழக்கமானதுதான்.

குஷ்பு தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தபோது அவரது பெயர் சொல்லி பல பொருட்கள் விற்கப்பட்டது. முதன்முதலாக காஞ்சிபுரத்தில் ஒரு ஹோட்டலில் 'குஷ்பு இட்லி' என்று அறிமுகப்படுத்தப்பட்டு தமிழகமெங்கும் இட்லிக்கடைகளில் 'குஷ்பு இட்லி' என்று சொல்லப்படுமளவுக்கு இட்லி பிராண்டிங் ஆனது.

அதுபோலவே இப்போது நமீதா மிக பிரபலமாக இருக்கிறார். நமீதா இடம்பெறுவதே படங்களில் இப்போதெல்லாம் கூடுதல் தகுதியாக இருக்கிறது. நமீதா சிறு வேடங்களில் தோன்றும் படங்களை கூட அவரது ரசிகர்கள் விட்டு வைப்பதில்லை. ஒரே ஒரு பாடல்காட்சியில் அவர் இடம்பெற்றாலும் அப்படங்களை பலமுறை அவரது ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

ஹோட்டல்களிலும், கையேந்தி பவன்களிலும் MEALS READY என்றோ, TIFFEN READY என்றோ முகப்பில் போர்டு வைக்கப்பட்டிருக்கும். சில நாட்களாக சென்னையின் கையேந்தி பவன்களில் “நமீதா இட்லி ரெடி” என்று போர்டு வைக்கப்பட்டு வருகிறது. நமீதா இட்லி என்றதுமே இட்லியின் சைஸ் பிரம்மாண்டமாக இருக்கும் என்று நினைத்து நாக்கில் யாருக்கும் நீர் ஊற வேண்டாம். அதே பழைய சிம்ரன் சைஸ் இட்லி தானாம்.

நமீதா ட்ரெண்டினை நன்கு புரிந்துகொண்ட சென்னையின் கையேந்திபவன் காரர்கள் சிலர் நூதனமான முறையில் “நமீதா இட்லி ரெடி” போர்டு மாட்டி விற்பனையில் பட்டையைக் கிளப்புகிறார்கள். அதே பழைய இட்லி, காரச்சட்டினி, தேங்காய் சட்டினி தான். ஆனாலும் சாதாரண இட்லிக்கு கூட நமீதாவின் நாமகரணம் சூட்டப்படும் கடைகளில் எல்லாம் விற்பனை இரண்டு மடங்காக இருக்கிறதாம். மிக விரைவில் தமிழ்நாடெங்கும் இட்லி நமீதா மயமாகும் என எதிர்பார்க்கலாம்.

குறிப்பு : மேலே படத்தில் நமீதா மட்டும் தானிருக்கிறார். இட்லி இல்லை. இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் வெள்ளையாக காணப்படும் எல்லாமே இட்லி அல்ல.

13 அக்டோபர், 2010

கொட்டையெடுத்த கீபோர்ட் புளி!

பலமுறை பலரால் கொட்டையெடுக்கப்பட்ட கீபோர்ட் புளி ஒன்று பெயரைக் குறிப்பிடாமல் என்னை 'சில்லுண்டி' என்று விளித்து, பதிவிட்டிருப்பதாக சில நண்பர்களுடைய ட்விட்டர் டி.எம்.களால் என்னுடைய இன்பாக்ஸ் நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கிறது. சில்லுண்டியாக இருந்துவிட்டுப் போகலாம். ஆபத்தில்லை. இரட்டை நாக்கும், வஞ்சக நெஞ்சத்தோடே மற்றவர்களை அணுகும் அழுக்கு மனமும் எனக்கு படைக்கப்படவில்லை என்பதற்காக இயற்கைக்கு முதற்கண் நன்றி.

உருப்படாதது நாராயணன், அவருடைய பதிவில் குறிப்பிட்டிருக்கும் என்னுடைய ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் இதுதான் : "தமிழ் இணையம் குறைந்தபட்சம் ஒருவனையாவது கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்பி வைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்" - இந்த சிந்தனைக்குப் பின்னால் வேறு சில காரணங்கள் இருந்தாலும் (அவை பெரும்பாலும் ஃபேஸ்புக் தொடர்புடையவை), அது தன்னைத்தான் குறிக்கிறது என்று கீபோர்ட் புளி கருதுமேயானால், 'அது' (அஃறிணையாகதான் எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது நாராயணன், மன்னிக்க) சுயமோகத்தின் உச்சத்தை அடைந்து, கீழ்ப்பாக்கத்தை சென்றடையும் தகுதியைப் பெற்றிருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது.

அந்த இரட்டை நாக்கு கீபோர்ட் புலியோடு 'கருத்து மோதல்' எனக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் பொதுவாக ஏற்பட்டிருக்கிறது.

1) சாருநிவேதிதா குறித்த அந்த ஜென்மத்தின் இழிமொழிகள்

2) மசாலாப் படம் பார்ப்பவர்களை மடையர்கள் என்று அந்த ஜென்மம் விமர்சிக்கும்போது

இவை இரண்டுமே என் தனிப்பட்ட ரசனையின் அடிப்படையில் நிகழ்ந்த விபத்து என்பதால், இவற்றைப் பற்றி விலாவரியாக எதுவும் விளக்கம் அளிக்கப் போவதில்லை. அவரவர் தேர்வு அவரவர்க்கு.

இந்த கொட்டையெடுத்த புளியை ஓரிரு சந்தர்ப்பத்தில் நேரில் சந்தித்து உரையாடித் தொலைக்க வேண்டிய அபாக்கிய நிலைமை எனக்கு நேர்ந்து தொலைத்திருக்கிறது. அவ்வேளையில் இவரைப் பற்றிய ஒரு அனுமானத்துக்கும் வரமுடிந்தது. இவருக்கு நண்பர்களே இருக்க வாய்ப்பில்லை. இவர் மற்றவர்கள் பேசுவதை கேட்கவே விரும்புவதில்லை. இவர் சொல்லுவதை மற்றவர்கள் எந்த எதிர்கேள்வியும் கேட்காமல் ஒப்புக்கொள்ள வேண்டும். செலக்டிவ்வாக கள்ளத்தனப் பேச்சு சுபாவம் கொண்டவர். ஓக்கே. இது என்னுடைய தனிப்பட்ட அவதானிப்பு. ஜோசியம் மாதிரி. கொஞ்சம் முன்னே பின்னே உண்மை நிலவரம் இருக்கலாம். ஆனால் இவரோடு பழகிய வேறு சில இணைய துரதிருஷ்டசாலிகளும் கிட்டத்தட்ட இதே மாதிரியான மதிப்பீட்டினை தனிப்பேச்சில் முன்வைக்கிறார்கள்.

கீபோர்ட் புளியின் கடந்தகால செயல்பாடுகளை லீசில் விட்டுவிடுவோம். அவற்றையெல்லாம் புரட்டிப் பார்த்து ரெஃபரென்ஸ் எடுக்க வேண்டுமானால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி நாம்தான் கீழ்ப்பாக்கத்துக்கு செல்ல நேரிடும். எதிர்வினை என்று உளறிவைத்திருக்கும் லேட்டஸ்ட் பதிவிலிருந்தே புளியின் இரட்டை நாக்கை புரிந்துகொள்ள முடியும்.

//என் பதிவுகள் மொக்கை எனத் தெரிந்தும் ஏன் வாசித்து துன்புறுகிறீர்கள், நான் உங்கள் பதிவுகளை புறக்கணித்து விட்டு செல்வதைப் போல் புறக்கணித்து செல்வதுதானே என்கிற என் கேள்விக்கு அவர் இதுவரை முறையான பதிலளித்தது போல் தெரியவில்லை. // என்று ரோஸாவசந்தைப் பார்த்து கேட்கிறார்.

ஆனால், அதற்கு சில பாராக்களுக்கு முன்பாக //இணையத்தில் இதுவரை இத்தனை கடுமையான மொழியை நான் உபயோகித்திருப்பது சாருவைக்குறித்துதான். வாசகர்களை ஆபாசமான மொழியிலும் சக எழுத்தாளர்களை வன்மத்துடன் தொடர்ந்து எழுதும் சாருவின் முன்னால் வைக்கும் என்னுடைய எதிர்ப்பு அரசியல் அது.// என்றும் எழுதித் தொலைக்கிறார்.

என்ன கருமம் அய்யா இது?

நம் புளி தினமும் சாருவைப் படித்துவிட்டு ஜீரணம் ஆகாமல் எதையாவது கழிந்து வைப்பாராம். ஆனால் ரோஸா மட்டும் இவரது கழிவுகளை புறக்கணித்து செல்ல வேண்டுமாம். ரோட்டில் செல்லும்போது, தெருவோரம் யாராவது கழிந்து வைத்திருந்தால் எல்லோரும் மூக்கைப் பொத்திக் கொண்டுதான் போவோம். ஏன் மூக்கைப் பொத்துகிறாய்? இங்கேதான் கழிந்து வைத்திருக்கிறோமே? வேறு வழியாகச் செல்ல வேண்டியதுதானே? என்று கேட்பது என்ன மாதிரியான லாஜிக் என்று தெரியவில்லை.

//ரோசாவின் பதிவுகளை நான் பொருட்படுத்தி வாசிப்பதோ பின்னூட்டம் இடுவதோ கிடையவே கிடையாது.//

//ரோசாவிற்காவாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பொருட்படுத்தி பதிலளிக்கலாம்.//

எப்படி இப்படி முன்னுக்குப் பின்னாக ஒரே பதிவில் ஒரு மனிதரால் எப்படி முரண்பட முடியுமென்று தெரியவேயில்லை.

உண்மையில் ரோஸாவசந்த் குறித்தெல்லாம் இவ்வளவு வன்மமாக இந்த கீபோர்ட்புளி எழுதும் அளவுக்கு தகுதியோ, தராதரமோ கொண்டவர் அல்ல. ரோஸாவசந்த் இணையத்தில் இதுவரை அவர் சந்தித்தவர்களில் எல்லோரிடமும் ஏதாவது ஒரு விஷயத்தில் முரண்பட்டே வந்திருக்கிறார். அதுகுறித்த சூடான விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறார். ஆயினும் எங்கேனும் நேரில் சந்திக்க நேர்ந்தால் ஒரு அபாரமான புன்னகையோடு, அதே நபர்களை எதிர்கொள்ளும் பேராண்மை வாய்த்தவர். இந்த உம்மணாம் மூஞ்சி மாதிரி முகத்தை திருப்பி வைத்துக் கொள்ளும் மூணாங்கிளாஸ் மனோபாவம் அவரிடம் இல்லவே இல்லை. யார் யாரை என்ன சொல்லித் திட்டுவது என்று விவஸ்தை கிடையாதா?

"புறக்கணித்து விட்டு செல்வதுதானே?" என்று சுலபமாக கேட்கும் ஜென்மம், எந்திரன் விவகாரத்தில் எப்படி நடந்துகொண்டார் என்பதை தமிழிணையம் அறியும். படம் பார்த்தவர்கள் கூட ஒரு விமர்சனப் பதிவோடு நிறுத்திக் கொண்டபோது, நம்முடைய கீபோர்ட் புலி ஐந்து பதிவுகளை வரிசையாக அடித்துவிட்டு ஹிட்ஸ் தேத்திக் கொண்டார். ஊருக்கு உபதேசம் செய்யும் இந்த நல்லவர், எந்திரனை கமுக்கமாக புறக்கணித்துவிட்டு போயிருக்க வேண்டியதுதானே? நியாயம், நேர்மை பேசிவிட்டு திருட்டு டி.வி.டி.யில் படம் பார்ப்பவர்களிடம் வேறு என்னத்தை எதிர்ப்பார்க்க முடியும்?

என்னுடைய அவதானிப்பில் அவருடைய உளவியல் பிரச்சினையாக இதைத்தான் பார்க்கிறேன். "இவ்வளவு அருமையாக எழுதுகிறோமே? நம்மை ஏன் யாரும் படிப்பதில்லை, பின்னூட்டம் போடுவதில்லை" என்று பல்லாண்டுகளாக அவராகவே மனதுக்குள் புழுங்கித் தவிக்கிறார். அவனவன் மொக்கையாக எழுதுவதற்கு கூட 100, 200 பின்னூட்டம் வருகிறதே என்று பொறாமைப் படுகிறார். உண்மையில் அவரைப்போல எழுதுவது மகா எளிது. எந்தவித நடைமுறை வாழ்வியல் அனுபவமும் இல்லாமல் பத்து மாத காலச்சுவடையும், ஆறுமாத உயிர்மையையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு, 'இலக்கிய' மொழியில் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் 'நல்ல' தமிழில் எழுதிவிட முடியும்.Content is the king. மாஸ் ஆடியன்ஸை address செய்பவர்களுக்கு நல்ல மொழி கூடத் தேவையில்லை. Interesting Content சுமாரான தமிழில் இருந்தாலே போதுமானது.

புளியிடம் அது சுத்தமாக கிடையாது. அது தேவையென்றால் ரோட்டில் இறங்கி நடக்க வேண்டும். ஒரு அடி ரோட்டுக்கு மேலே பறந்தவாறு சென்று கொண்டிருப்பவர் இப்படியான இடியாப்பங்களைதான் சுடமுடியும். புதியதாக படிப்பவர்கள் "நல்ல பதிவு, நல்ல மொழியாளுமை" என்று ஆரம்பத்தில் பின்னூட்டம் போடுவார்கள். தொடர்ச்சியாக இதே மாதிரி நான்கைந்து இடியாப்பங்களை வாசித்தவர்கள் அஜீரணம் ஆகி சொல்லாமல், கொள்ளாமல் ஓடிவிடுவார்கள்.

எனவேதான் நம் கீபோர்ட் புளி, அடிக்கடி யாரையாவது வம்புக்கு இழுத்து, தான் லைம்லைட்டிலேயே இருப்பதாக கருதிக்கொண்டு தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறது. இது எக்ஸிபிஸனிஸ மனநிலை. //சாருவிற்குப் பிறகு நான் இத்தனை கடுமையாக எழுதியது ரோசாவைக் குறித்தான்// என்று அப்பட்டமாக புளுகுகிறது. உதாரணமாக அகில உலக அப்பாவி மன்றத் தலைவரான ஆசிஃப் அண்ணாச்சியிடம் கூட ஒருமையில் இவர் எவ்வளவு மோசமாக நடந்துகொண்டார் என்பது பலருக்கும் தெரியும். "நான் ஊரில் இருப்பவனையெல்லாம் திட்டுவேன், என்னை யாராவது ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் தாங்கமாட்டேன்" என்று நினைப்பது மனநோயின் ஆரம்பக்கட்ட மனநிலையாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மனிதர்களில் இரண்டே இரண்டு வகைதான் உண்டு. ஆபத்தானவர்கள், ஆபத்தற்றவர்கள். கீபோர்ட் புளி முந்தைய வகையைச் சேர்ந்தது. ஏற்கனவே கீரப்பட்டவர்கள் ஏராளம். மற்றவர்களாவது உணர்ந்து தெளியவேண்டும்.

எதிர்வினையெல்லாம் எழுதித் தொலைத்து மாமாங்கமாகிறது. எனவேதான் கொஞ்சம் இப்பதிவில் சூடும், காரமும் குறைவாக இருக்கிறது. நாமென்ன தினமும் புளியை மாதிரி எவரிடமாவது சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோமா என்ன? இந்தப் புளி சீரியஸில் இதுதான் முதலும் கடைசியுமான பதிவு. கீபோர்ட் புளி ரிட்டர்ன்ஸெல்லாம் கண்டிப்பாக வரவே வராது. ஏனெனில் நிஜமாகவே கடந்த சில காலமாக வேலை கொஞ்சம் டைட்.

27 செப்டம்பர், 2010

தளபதி - பர்ஸ்ட் டே, பர்ஸ்ட் ஷோ!

அரைடவுசர் போட்டுக் கொண்டிருந்த காலமது. கமல் ரசிகன் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு, ரஜினி ரசிகர்களோடு மூர்க்கமாக மோதிக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த தீபாவளிக்கு என்னுடைய பர்ஸ்ட் சாய்ஸாக 'தளபதி' தானிருந்தது என்பதை பத்தொன்பது ஆண்டு கழித்து இப்போது வெளிப்படையாக லஜ்ஜையின்றி தெரிவிக்கிறேன். இப்போது எந்திரனுக்கு இருக்கும் ஹைப்பையும், அப்போதைய தளபதிக்கு இருந்த ஹைப்பையும் ஒப்பீடு செய்துப் பார்க்கும்போது, ஏனோ எந்திரனை 'தளபதி'யே வெல்கிறார்.

பி.பி.எல். சான்யோவில் 'ராக்கம்மா கையத் தட்டுவை' எத்தனைமுறை ரீவைண்ட் செய்து கேட்டிருப்பேன் என்பதற்கு கணக்கேயில்லை. தளபதியோடு வெளியான 'குணா'வில் துரதிருஷ்டவசமாக 'கண்மனி' மட்டும்தான் சூப்பர்ஹிட்டு. மாறாக தளபதியில் ஒவ்வொரு பாட்டும் மெகாஹிட்டு. இளையராஜா கமலுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்று நொந்துகொண்டேன். அப்போதெல்லாம் தீபாவளிக்கு தீபாவளி ரஜினி-கமல் அட்டகாசம் நிச்சயம். நாயகன் - மனிதன், வெற்றிவிழா - மாப்பிள்ளை, தளபதி - குணா, பாண்டியன் - தேவர்மகன்,  குருதிப்புனல் - முத்து என்று சிலவருட போட்டிகள் நினைவில் நிற்கிறது. போதாதற்கு விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக் படங்களும் ரேஸூக்கு உண்டு.

அபூர்வசகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன் என்று காமெடி கமர்ஷியல் ரூட்டில் போய்க்கொண்டிருந்த கமலுக்கு, பழைய குருடி கதவைத் திறடியென, 91ஆம் ஆண்டு திடீரென்று 'வித்தியாச' மோகம் பொத்துக்கொண்டு வந்துவிட்டிருக்க வேண்டும். 'குணா' படத்தின் ஸ்டில்கள் அவ்வளவாக கவரவில்லை. மாறாக 'தளபதி' கலக்கிக் கொண்டிருந்தார். கேசட் கவரில் (லஹரி கேசட்?) அச்சடிக்கப்பட்டிருந்த ரஜினியின் 'சைட் போஸ்' ஸ்டில் இன்றும் மறக்க முடியாதது. கிளாஸ் ரூமில் செந்தில்தான் கமலை காரணம் காட்டி என்னை வெறுப்பேற்றிக் கொண்டிருப்பான். கமல் ஏன் தான் போயும் போயும் பைத்தியக்காரனாக நடிக்கிறாரோ என்று நொந்துப் போயிருந்தேன்.

எப்படியும் செந்தில் முதல்நாளே தளபதியை பார்த்துவிட்டு, கிளாஸுக்கு வந்து திரைக்கதை சொல்லிக் கொண்டிருப்பான். நாம் 'குணா'வைப் பார்க்காவிட்டால் தலைவருக்கு எவ்வளவு கேவலம் என்று மனச்சாட்சி உறுத்தியது. துரதிருஷ்டவசமாக அந்தக் காலத்தில் என்னைச் சுற்றி இருந்த எல்லோரும் ரஜினி ரசிகர்களாக இருந்து தொலைத்தார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 'ஒலியும், ஒளியும்' பார்க்கும்போது நான் பட்டபாடு இருக்கிறதே? உஸ்ஸப்பா...

பாடல்காட்சிகளில் கமல் கொஞ்சம் தாராளம், ஏதோ ஒரு பாட்டில் ஜட்டி போட்டுக் கொண்டு நீச்சல் குளத்தில் குளிப்பார். ரஜினியோ உடைவிஷயத்திலும் சரி, ஹீரோயினை காதலிக்கும் விஷயத்திலும் சரி. அநியாயத்துக்கு மிலிட்டரி கண்ணியம். இந்த 'பெண்' சகவாசத்தாலேயே கமலுக்கு கெட்டவன் என்ற இமேஜ் பெண்களிடமும் ஏறிவிட்டிருந்தது. இந்த இமேஜ் லாஜிக்படி பார்த்தால் கமலின் ரசிகனும் கெட்டவனாக, ஆம்பளை லோலாயியாக, இந்த எழவெடுத்த சமூகத்தில் பார்க்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. 

இந்த ரசிகமனோபாவ லாஜிக்கில் இன்னொரு குளறுபடி ஒன்றினையும் நான் அப்போது கண்டுபிடித்திருந்தேன். எம்.ஜி.ஆரை ரசித்தவர்கள் நிறையபேர் கமலை ரசித்தார்கள். சிவாஜியை ரசித்தவர்கள் ரஜினி ரசிகர்களாக இருந்தார்கள். ஆக்சுவலாக, இது உல்டாவாக இருந்திருக்க வேண்டும். ஆனால் ஏனோ தலைகீழாக இருந்ததை பெரும்பாலான ரசிகர்களிடம் அறிவியல்பூர்வமாக இல்லாமல் வாய்வழியாக எடுத்த ஒரு கணக்கெடுப்பில் உணரமுடிந்தது.

எங்கள் வீட்டிலேயே எனக்கு ஒரு ஜென்மவிரோதி இருந்தாள். என்னுடைய தங்கை. ஜோதி தியேட்டரில் வெளியான எல்லா ரஜினி படத்தையும் வெளியான ரெண்டு நாளிலேயே அப்பா அவளை அழைத்துப்போய் காட்டிவிடுவார். நான் மட்டும்தான் அனாதை. நானாகவே முயற்சி எடுத்துப் போய் கமலை திரையில் பார்த்தால்தான் உண்டு. (அப்பா எம்.ஜி.ஆர். வெறியர் என்றாலும், அரசியல் காரணங்களால் சிவாஜி ரசிகராக கன்வெர்ட் ஆகி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தது. எனவே சிவாஜி - ரஜினி என்ற தொடர்ச்சியான ரசிக மனோபாவம்). பிற்பாடு தளபதி பார்த்துவிட்டு அப்பா அடித்த கமெண்ட் "ஒவ்வொரு ஃபிரேமுக்கும் கலக்கியிருக்காண்டா. சிவாஜியை மிஞ்சிட்டான்!"

ஆன்லைன் புக்கிங்கெல்லாம் எதிர்காலத்தில் நடக்குமென்ற சாத்தியத்தையே திரையரங்குகள் அறியாத தீபாவளி அது. மூன்று நாட்களுக்கு முன்பாக ரிசர்வேஷன் தொடங்கும். என் பிரெண்டு (கம்) பங்காளி ஒருவனோடு உதயம் காம்ப்ளக்ஸுக்கு சைக்கிளில் போயிருந்தேன். அவனுக்கு தளபதி, எனக்கு குணாவென்று ஒப்பந்தம். கையில் தாராளமாக 50 ரூபாய் இருந்தது. பால்கனி டிக்கெட்டே பண்ணிரண்டோ, பதினைந்தோ என்பதாக நினைவு (உதயத்தில் அப்போது பால்கனி இருந்தது).

வளாகம் முழுக்க மனிதத்தலைகள். 'தளபதி' ஸ்டில் அச்சடிக்கப்பட்ட டி-ஷர்ட்டுகளில் ரஜினி ரசிகர்கள் வளைய வந்து கொண்டிருந்தார்கள். 'குணா' டிஷர்ட் எங்கேயாவது கிடைக்குமாவென்று விசாரிக்க வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டேன். இடதுபுறம் (பெட்ரோல் பங்கையொட்டி) ரஜினியின் கம்பீர மெகா கட்டவுட். வலதுபுறம் சன்னியாசி வேடத்தில் கமல் கட்டவுட், அய்யகோ. முகப்பில் ஆங்காங்கே கிடைத்த இடத்தில் சிறிய அளவுகளில் விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக்குக்கு எல்லாம் குட்டி குட்டி கட்டவுட். ரிலீஸ் தேதியன்று ரஜினி-கமல் கட்டவுட் இருதரப்பு ரசிகர்கள் மோதலால் இங்கேதான் எரிந்தது.

மடிப்பாக்கம் தவிர்த்த வெளியுலகில் ரஜினியின் நிஜமான மாஸை நான் நேரில் பார்த்த நாள் அதுதான். பத்து மணி ரிசர்வேஷனுக்கு எட்டு மணிக்கு போயிருந்தோம். எங்களுக்கு முன்பாக வரிசையில் குறைந்தபட்சம் 750 பேராவது நின்றிருந்தார்கள். ரிசர்வேஷன் கவுண்டரையே திறக்காமல், ரிசர்வேஷன் சார்ட்டில் முதல் நான்கு நாட்களுக்கு அனைத்து காட்சிகளும் 'ஹவுஸ்ஃபுல்' போட்டிருந்தார்கள். சந்திரனில் வெளியாகிய 'குணா'வுக்கு பெரிய வரவேற்பில்லை. அந்த கவுண்டர் ஓரளவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான கூட்டம்தான். தளபதி டிக்கெட் கிடைக்க வாய்ப்பேயில்லை என்று தெரிந்ததும் பங்காளி நொந்துப்போனான். இதனால் எனக்கும் 'குணா'வை ரிசர்வ் செய்யும் எண்ணம் போய்விட்டது. ஏற்கனவே பெரியதாக ஆர்வம் இல்லை என்பதும் வேறொரு காரணம்.

தீபாவளி அன்று காலையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தேன். செந்தில் அண்ணா ப்ரெஷ்ஷாக சைக்கிளில் வந்தார். "குமாரு காலையில் 9 மணி ஷோ ஆல்பட்லே தளபதி இருக்கு. வர்றியா?" மனசுக்குள் சந்தோஷம். இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், "குணா இருந்தா சொல்லுண்ணா" என்று பிகு செய்தேன். செந்தில் அண்ணா கொஞ்சம் வித்தியாசமானவர். இன்றுவரை நான் பார்த்த மனிதர்களில் அவர் ஒருவர்தான் ஜெய்சங்கருக்கு தீவிர ரசிகராக இருந்தவர். "வர்றதுன்னா வா. வராங்காட்டிப் போய்க்கோ" என்று சட்டென்று அவர் சலித்துக்கொள்ள, 'பக்'கென்று ஆனது. ஓடிப்போய் அப்பாவிடம் பர்மிஷன் வாங்கிக்கொண்டு செந்தில் அண்ணாவின் சைக்கிளில் ஏறினேன்.

ஆல்பட்டில் ரசிகர்மன்ற சிறப்புக் காட்சி. திருவிழாக் கோலம் என்று சொல்லமுடியாது. உண்மையில் அங்கிருந்த ரசிகர்கள் பூண்டிருந்தது போர்க்கோலம். தினேஷை புரட்டியெடுத்துக் கொண்டு ரஜினி அறிமுகமாகும் காட்சியில்... நம்பினால் நம்புங்கள்... தியேட்டருக்குள் தவுசண்ட்வாலா சரம் நிஜமாகவே வெடிக்கப்பட்டது. ரஜினி பேசும் ஒவ்வொரு டயலாக்குக்கும் தொடர்ச்சியான விசில் சத்தம். படத்தின் 75 சதவிகித வசனங்கள் புரியாமலேயே படம் பார்க்க நேரிட்டது. படம் முடிந்ததும் "என் தலைவன் ஜெயிச்சிட்டாண்டோய்...!" என்று கத்திக்கொண்டே வெளியேறிய வெறிக்கூட்டம். எனக்கு 'குணா'வின் வெற்றி குறித்து பெருத்த கவலை உண்டாயிற்று. எதிர்ப்பார்த்தபடியே குணா பப்படமாக, தளபதி வெள்ளிவிழா.

தீபாவளி லீவெல்லாம் முடிந்து பள்ளிக்கு போனபோது, செந்தில் வழக்கம்போல கேப்பே விடாமல் தளபதி புகழ் ஓதிக் கொண்டிருந்தான். அவனும் முதல்நாள் முதல் காட்சி பார்த்திருக்கிறான். அடுத்த ஒரு மாதத்துக்கு தினமும் தளபதி கதையை திகட்டாமல், ஒவ்வொரு முறையும் புதியதாக சில காட்சிகள் சேர்த்து சொல்லிக்கொண்டேயிருந்தான். மாணவர்கள் மத்தியில் மட்டுமன்றி மாணவிகள் மத்தியிலும் அவனுக்கு ஹீரோ அந்தஸ்து. எல்லோர் மத்தியிலும் 'தோத்தாங்குளி' ஆகிவிட்ட அவமானம். (ஆனால் ஓராண்டு கழித்து வந்த அடுத்த தீபாவளியில் நல்லவேளையாக தேவர்மகன் வெளியாகி, அதே ஹீரோ அந்தஸ்தை வெற்றிகரமாக என்னால் கைப்பற்ற முடிந்தது என்பது தனி வரலாறு)

சுதாகர் என்னிடம் சோகமாக கேட்டான். அவன் பார்ட்-டைம் கமல் ரசிகன். "குணா பார்த்தியாடா"

"பார்த்துட்டேண்டா. பர்ஸ்ட் டே, பர்ஸ்ட் ஷோ. ஆக்டிங்குலே நம்ம தலைவருகிட்டே ரஜினியெல்லாம் வெறும் பச்சாடா!"

சுதாகரிடம் அப்பட்டமாக மனதறிந்தே பொய் சொன்னேன். அன்று மட்டுமில்லை. இன்றுவரை நான் முழுமையாக "குணா"வை பார்த்ததே இல்லை.

3 செப்டம்பர், 2010

டான் சீனு


டைட்டிலில் ரவிதேஜாவுக்கு மாஸ் ராஜா என்று தப்பாக பட்டம் தருகிறார்கள். அவர் மாஸ் மகாராஜா. ஜெமினி டிவியில் பார்க்கும் பழைய ரவிதேஜா படங்கள் ‘ஆவ்’ ரகம். அவரது முகம், நம்மூர் சத்யராஜூக்கு ஒப்பான கவர்ச்சி கொண்டது. முகலட்சணம் சுமார்தானென்றாலும் தேஜாவின் பரபரவென்ற உடல்மொழி, ‘கோயிந்தா’ பாணி டான்ஸ், நான்ஸ்டாப் காமெடியென்று, பார்க்க பார்க்க பிடிக்கும் ரகம் இவர்.

மசாலா என்ற பெயரில் தமிழில் சுவாமிஸ் கஃபே மசால்தோசை மசாலாவாக இட்டுக் கொண்டிருக்க, தெலுங்கிலோ செட்டிநாட்டு நாட்டுக்கோழி மசாலாவை, காரம் தூக்கலாக வறுத்துத் தள்ளுகிறார்கள். செண்டிமெண்ட், லாஜிக், கலைவடிவம், இத்யாதி, இத்யாதியெல்லாம் யாருக்கு வேண்டும்? படத்தை சுட்டோமா, பரபரவென்று மொளகா பஜ்ஜி மாதிரி விற்றுத் தீர்த்தோமாவென்று இருக்கிறது டோலிவுட்.

கதை ரொம்ப சிம்பிள். சிறுவயதில் அமிதாப்பின் டான் படத்தை முப்பது முறைக்கு மேல் பார்க்கிறான் சீனு. தானும் டான் ஆகவேண்டும் என்ற ஆவலில் டான் சீனுவாக மாறுகிறான். பெயர் மாற்றம் சுலபமானதே தவிர, ஹைதராபாத்தில் டான் ஆவது அவ்வளவு சுலபமல்ல. ஏற்கனவே ஏட்டிக்குப் போட்டியாக கவுண்டமணி – செந்தில் மாதிரி இரண்டு டான்கள். அந்த இரண்டு டான்களுக்கும், துபாயில் இருந்து ‘ஒர்க் ஆர்டர்’ கொடுக்கும் வி.கே.ராமசாமி பாணியில் இன்னொரு இண்டர்நேஷனல் டான் உண்டு. காட்சிக்கு காட்சி சரவெடி சிரிப்போடு அதிரடி க்ளைமேக்ஸ். மேட்டர் ஃபினிஷ்ட். இண்டர்வெல் ப்ளாக்கில் ஆரம்பிக்கும் குட்டி குட்டி சஸ்பென்ஸ்கள், இரண்டாம் பாதி முழுக்க ஆங்காங்கே தொடர்வது சுவாரஸ்யம்.

ரவிதேஜாவுக்கு ஒரு ஹீரோயின் என்றாலே உரசி உரசி தேய்த்துவிடுவார். ஒன்றுக்கு ரெண்டு. புகுந்து புகுந்து ஃபுட்பால் விளையாடுகிறார். ஷ்ரேயாவையே ஐஸ்வர்யாராய் ரேஞ்சுக்கு காட்டியிருக்கும் கேமிராமேனை இறுக்கி அணைச்சு உம்மா கொடுக்கலாம். ஜெர்மனி குளிரில் கூட அம்மணிக்கு வேர்க்கும் போல. ஹாயாக திரிகிறார். இன்னொரு ஹீரோயின் அஞ்சனா சுஹானி. சாதா காட்சிகளில் பார்ப்பதற்கு குத்துவிளக்கு மாதிரி இருப்பவர், பாடல் காட்சிகளில் நைட் லேம்ப் ஆகிவிடுகிறார்.

இரட்டை டான்களான ஷாயாஜியும், ஸ்ரீஹரியும் சீரியஸாக நடித்தாலும், திரைக்கதையமைப்பில் கோமாளிகள் தானென்பதால் ‘த்ரில்லிங்’ குறைவு. இவர்களை விட மெகா கோமாளி மெயின் வில்லன். எனவே க்ளைமேக்ஸில் கிடைக்க வேண்டிய ஆக்‌ஷன் டேஸ்ட் டோட்டலாக மிஸ்ஸிங். ஹீரோ, வில்லன்களே காமெடியன்கள் என்றால் காமெடியன்கள் படுத்தும் பாட்டை வேறு புதுசாக சொல்லவேண்டுமா? பிரம்மானந்தம் தலைமையில் ஒன்றுக்கு மூன்று பபூன்கள். வயிற்று வலிக்கு மாத்திரை வாங்கிக்கொண்டு தியேட்டருக்குள் நுழைவதைத் தவிர வேறுவழியில்லை.

ஏன் தான் இதுமாதிரி சப்ஜெக்ட்கள் நம் இளையதளபதிக்கும், அல்டிமேட் ஸ்டாருக்கும் மாட்ட மாட்டேங்கிறதோ என்று ஏக்கப் பெருமூச்சுதான் விடமுடிகிறது.

1 செப்டம்பர், 2010

கிருஷ்ண கிருஷ்ணா! (Adults only, Strictly 18+)

பாவம். இந்த மாய கிருஷ்ணனுக்கு டிரெஸ் போட கூட வக்கில்லாத அளவுக்கு வறுமை. FULL LONG குழலையும் தொலைச்சிட்டதாலே அழுதுக்கிட்டு நிக்கிறான்!

’ஆபாசக் கடவுள்’ கிருஷ்ணருக்கு ஏதோ ஒரு ஜெயந்தி சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்!

5 ஆகஸ்ட், 2010

உல்டா!

‘உல்டா’ என்றொரு அழகிய தமிழ் சொல்லாடலை என்னுடைய பதின்ம வயதுகளில் அடிக்கடி கேட்டு சிலாகித்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதாவது வித்தியாசமான காட்சிகள் சினிமாத் திரையில் தெரிந்தால், அப்படியே இங்கிலீஷ்லேருந்து ‘உல்டா’ பண்ணிட்டாண்டா என்று ஸ்பாட்டிலேயே கண்டுபிடித்து ரசிகர்கள் நொங்கெடுத்து விடுவார்கள்.

இதுமாதிரியெல்லாம் நொங்கெடுக்க ‘உல்டா’ ஒன்றும் தீண்டாமை மாதிரி பாவச்செயல் அல்ல. ‘உல்டா’ என்றொரு தொழில்நுட்பம் இல்லாது போயிருந்தால் விஜயகாந்த் இங்கே புரட்சிக்கலைஞர் ஆகியிருக்கவே முடியாது. தென்னாட்டு மைக்கேல் ஜாக்சனாக பிரபுதேவா உயர்ந்திருக்க முடியாது. கமல்ஹாசன் காட்ஃபாதர் ஆகியிருக்க மாட்டார். ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க வாய்ப்பிருந்திருக்காது.

90களில் இதுபோல ’உல்டா’க்களை கண்டறிந்து கட்டுரை எழுதுவது இதழியலின் அத்தியாவசியத் தேவையாகக்கூட இருந்ததுண்டு. ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாட்டு ஹிட் ஆனபோது, மெட்ரோப்ரியா கூட குமுதத்தில், அப்பாடல் எந்த ஆங்கிலப் படத்திலிருந்து பிட் அடிக்கப்பட்டது என்று எழுதியிருந்தார். ‘உல்டா’ காட்சிகளை அமைப்பதில் வல்லவரான இயக்குனர் வசந்தே கூட வெறுத்துப் போய் ‘உல்டா’ என்ற பெயரில் ஒரு அருமையான சிறுகதையை விகடனில் எழுதியிருந்ததாக ஞாபகம்.

அமெரிக்க லத்தீன் இலக்கிய ரசனை கொண்ட என்னுடைய வாசகர்களே! மேற்கண்ட மூன்று பாராகிராப்புகளின் மூலமாக நான் உங்கள் மனதுக்குள் புகுந்து, உங்கள் மனோவோட்டத்தை மாற்ற முயற்சிக்கிறேன் என்பதை இன்னேரம் புரிந்துகொண்டிருப்பீர்கள். நான் ஆயிரக்கணக்கான இலக்கியங்களை படைத்து சோர்வு அடைந்துவிட்டிருப்பது உங்களுக்கு தெரியும்.

சோர்வடைந்தும் தொடர்ச்சியாக பிரிண்டிங் மிஷின் மாதிரி நான் படைப்புகளை படைத்துக்கொண்டே போவதற்கு நான் காரணமல்ல என்பதை நீங்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். என்னுள் மார்க்குவேஸும், டால்ஸ்டாயும், தஸ்தாவேஸ்கியும், இன்னும் ஏகப்பட்ட இலக்கிய அஸ்கு புஸ்குகளும் பேயாய் இறங்கி, புயலாய் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏன் என்னால் மட்டும் உலகின் தலைச்சிறந்த எழுத்தாளன் ஆகமுடிந்திருக்கிறது, உங்களால் ஏன் முடியவில்லை என்று தீவிரமாக ரூம் போட்டோ, பாம் போட்டோ யோசித்துப் பாருங்கள். ஏனெனில் நீங்கள் நானில்லை. நான் நினைத்தாலும் அழித்துவிடமுடியாது என்னுடைய பிரபலத்துக்கு காரணமென்ன? ஏனெனில் நான் நீங்களில்லை.

தமிழின் முன்னணி பத்திரிகைகளும், தெலுங்கு பத்திரிகைகளும், கன்னட, மலையாள, அரபி, ஹீப்ரு, லத்தீன், ஜெர்மானிய, பிரெஞ்சு, அல்பேனிய, ஆப்ரகாமிய மற்றும் மூவாயிரத்து சொச்ச மொழிகளில் வெளிவந்துக் கொண்டிருக்கும் பத்திரிகைகளும், அம்மொழிகளில் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களும் என்னுடைய எழுத்துகளை ‘உல்டா’ அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவ்வப்போது கண்டறிந்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

உல்டா தொடர்பான இதுபோன்ற மின்னஞ்சல்கள் எனக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சமாவது வருவதால், கூகிள் நிறுவனம் என்னுடைய மின்னஞ்சலுக்கான இடத்தை ஒரு லட்சம் ஜிகா பைட்டாக உயர்த்தியிருக்கிறார்கள். ஷேக்ஸ்பியர் கூட அடையமுடியாத உயரமிது.

இதைப்போலவே என்னைப்போன்ற நோபல்தன்மை கொண்ட மாற்றுமொழி சமகாலப் படைப்பாளிகளுக்கும் அவர்களது படைப்பை நான் உல்டா அடிப்பது தொடர்பாக, அவரவரது ரசிகர்கள் அவரவர்க்கு மின்னஞ்சல் மழை பொழிந்துக் கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அவர்கள் நானாக முடியாது என்றாலும் அவர்களும் எழுதுகிறார்கள் என்றவகையில் அவர்களை மதிக்கிறேன்.

இதுவரையில் இப்பதிவில் பதியப்பட்ட 280 வார்த்தைகளை வாசித்ததில் உங்களுக்கு ஒன்று புரிந்திருக்கும். இதுதான் உண்மை. பேருண்மை. இதை நேரிடையாக ஒப்புக்கொள்ள எனக்கு தயக்கமோ, வெட்கமோ, அருவருப்போ, ஆனந்தமோ, அகஞானமோ, புறத்தேடலோ, வேறு எந்த கருமாந்திரமோ தேவைப்படவில்லை. “உல்டா இன்றி அமையாது உலகு”

29 மே, 2010

ஸ்டைலு.. மயிலு..

ஸ்டைலு ஸ்டைலுதான்
இது சூப்பர் ஸ்டைலுதான்
இந்த ஸ்டைலுக்கேத்த
மயிலு நானுதான்!

20 மே, 2010

ரமணா.. ரமணா..

இவர் சினிமா ரமணா இல்லை. சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர். இவர் பொறுப்பேற்றபின், மழைக்காலங்களில் இவரது பெயர் வானொலியிலும், தூரதர்ஷனிலும் உச்சரிக்கப்படாத நாளே இல்லை எனலாம். மழையை மழை என்று சொல்லலாம். இனி ரமணா என்றும் சொல்லலாம்.

புயல் வருமா மழை வருமா என்று மிகத்துல்லியமாக கணித்துச் சொல்லக்கூடியவர். இவரது கணிப்பு எல்லாம் சயண்டிஃபிக்காக கரெக்ட்டுதான். ஆனால் இவருக்கும் புயல் மழைத் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் வருணபகவானுக்கும் ஏழாம் பொருத்தம். நம்மவரை ஏமாற்றி டகால்ட்டி காட்டுவதே வருணபகவானின் பொழைப்பாக போகிறது.

ரமணாவை ஏமாற்றுவதற்காகவே வங்கக்கடல் பகுதியில் கடுமையான மேகமூட்டத்தை வருணபகவான் அவ்வப்போது உருவாக்குவதுண்டு. அதைக்கண்டு உற்சாகமடைந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு இடைவிடாத மழை பொழியும் என்று ரமணா டிவியில் சொல்வார். உடனே ரமணாவுக்கு பழிப்பு காட்டும் விதமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு 108 டிகிரி வெய்யில் கொல்லு கொல்லுவென கொல்லும் விதமாக வெதரை வருணபகவான் மாற்றி வைத்து விடுவார். வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் கணிப்பு மாறுவதின் பின்னணி உண்மை இதுதான்.

வருணாவுக்கும், ரமணாவுக்கும் இது காலம் காலமாக நடந்து வரும் மரபுப்போர்.

இரண்டு நாட்களாக 'அழகிய லைலா' வங்கக் கடலோரமாக பிரேக் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்க, நம் ரமணாவை டிவியிலும், ரேடியோவிலும் காணலாம் என்று ஆவலோடு காத்திருந்த அவரது ரசிகர் மன்றத்தினருக்கு கடுமையான ஏமாற்றமும், மன உளைச்சலுமே பரிசாக கிடைத்தது. ரமணாவுக்கு பதிலாக ஒரு குழந்தை மழைச்செய்திகளை வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பாக சொல்லிக் கொண்டிருக்கிறார். குழந்தை என்றால் Child அல்ல. அந்த அதிகாரியின் பெயரே அதுதான்.

கத்தரி வெய்யில் சுட்டெரிக்க வேண்டிய இந்த மே மாதத்தில் அதிசயமாக கோடைமழை, லைலா பிராண்டிங்கில் வந்தது எப்படி என்று நாம் புலனாய்வு செய்து பார்த்ததில் அதிர்ச்சிகரமான பின்னணித் தகவல்கள் நிறைய கிடைத்திருக்கிறது.

மழைக்காலத்தில்தான் வருணா, ரமணாவைக் காய்ச்சிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தால் கோடைக்காலத்திலும் தன்னுடைய திருவிளையாடலை காட்ட ஆரம்பித்திருக்கிறார். நல்ல வெயில் காலமாயிற்றே என்று ரமணன் அவர்கள் தன்னுடைய மகள் திருமணத்துக்கு நேற்று தேதி குறித்திருக்கிறார். இது பொறுக்கவில்லை அவரது பரமவைரியான வருணபகவானுக்கு.

விஸ்வாமித்ரனின் தவத்தை மேனகையை வைத்து கலைக்க இந்திரன் முற்பட்ட அதே டெக்னிக்கை வருணபகவான் கையில் எடுத்துக்கொண்டிருக்கிறார். ரமணா இல்லத் திருமணத்தை சொதப்ப லைலாவை அனுப்பி வைத்திருக்கிறார். ரம்பா வந்தால் கூட அசந்துவிடாத மனஉறுதி கொண்ட நம் ரமணா தன்னுடைய வானிலை நுண்ணறிவை பயன்படுத்தி லைலாவை சென்னைக்கு வரவிடாமல் மசூலிப்பட்டணத்துக்கு துரத்தி அனுப்பி விட்டதாக தெரிகிறது.

லைலா மசூலிப்பட்டணத்துக்கு பயணப்பட்டாலும் தன்னுடைய சைடு எஃபெக்ட்டை நேற்று சென்னையில் காட்ட தவறவில்லை. இருப்பினும் கொட்டும் மழைக்கு இடையே ரமணா அவர்களின் மகள் திருமணம் வெற்றிகரமாக நல்லமுறையில் நடந்திருக்கிறது. வருணபகவானின் சதியும் அதிரடியாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. மாமனாரான வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரி ரமணன் அவர்களுக்கும், புதுமணத் தம்பதிகளுக்கும் நேற்றைய தினம் கொட்டும் மழையில் நனைந்து ஜல்ப்பு பிடித்தோர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகள்!

புலனாய்வு செய்திக்கு உதவி : தட்ஸ்தமிழ்.காம்

17 மே, 2010

நட்சத்திர சன்னலில் வானம் எட்டிப் பார்க்குதே!

முன்பெல்லாம் தமிழ்மணம் நட்சத்திரம் என்று சொன்னால் ஒரு கெத்து இருந்தது என்பது உண்மைதான். நானெல்லாம் கூட தமிழ்மணத்தில் நட்சத்திரப் பதிவராக அங்கீகரிக்கப்பட்ட பின்னரே கொஞ்சம் பரவலாக தெரிந்தேன். அப்போதெல்லாம் பதிவர்கள் தமிழ்மணத்தில் இருந்து நட்சத்திர அழைப்பு கடிதம் வராதா என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள். குசும்பன் போன்ற பதிவர்கள் சும்மானாச்சுக்கும் யாருக்காவது தமிழ்மணத்தில் இருந்து அஞ்சல் போடுவதைப் போல போட்டு ஃபேக் நட்சத்திர அழைப்பு அனுப்பி கலாய்ப்பார்கள். அதெல்லாம் கனாக்காலம்.

நர்சிம், கேபிள்சங்கர், அகநாழிகை, வால்பையன், அதிஷா, தண்டோரா போன்ற நிறைய நிஜமான ‘ஸ்டார்' பதிவர்கள் நட்சத்திரங்கள் ஆனதே இல்லை எனும்போது பாமரன், க.சீ.சிவக்குமார் போன்றவர்கள் நட்சத்திரங்களாகக்கப்பட்டு ஒரு வாரத்துக்கு பதிவே போடாமல் நட்சத்திர சாதனை நிகழ்த்தியதுகூட உண்டு. சிலர் இருமுறை கூட நட்சத்திரத்தமான அதிர்ஷ்டமும் நடந்ததுண்டு. நட்சத்திரப் பதிவர் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்ற விஷயம் இன்னமும் சிதம்பர ரகசியமாகதான் இருக்கிறது.

கடந்தவார நட்சத்திரம் தமிழ்சசி. கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக பதிவுகளில் இருந்து விலகியிருந்தவர். தமிழ்மணத்தின் அட்மின்களில் ஒருவர் நட்சத்திர வாரத்தில் வந்ததுமே கொஞ்சம் இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. அந்த இன்ப அதிர்ச்சி இந்த வாரமும் தொடர்கிறது. சித்தார்த்த 'சே' க்வாடா என்ற பதிவர் நட்சத்திரமாகியிருக்கிறார். மெத்த மகிழ்ச்சி. இவரும் தமிழ்மண அட்மின்களின் ஒருவரா என்று தெரியவில்லை. அப்படி இருந்தாலும் ஒன்றும் பிரச்சினையில்லை.

என்னுடைய ஆச்சரியம் என்னவென்றால் நட்சத்திர அன்பர் 2009 அக்டோபரில் இந்த வலைப்பூவை தொடங்கி ஒரே ஒரு பதிவிட்டிருக்கிறார். இதையடுத்து ஐந்து நாட்களுக்கு முன்பாக ஒரு கவிதை எழுதியிருக்கிறார். மூன்றாவது பதிவை நட்சத்திர வாரத்தில் இடுகிறார். நல்ல வேகம்தான். இவரிட்ட இரண்டே பதிவுகளின் தரத்தில் நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது ஒரு நல்ல முன்னுதாரணம். ஆனால், ஒரு சின்ன சந்தேகம். ஒரு பதிவர் புதியதாக வலைப்பூ தொடங்கி தமிழ்மணத்தில் இணைக்க வேண்டுமானால் குறைந்தது மூன்று பதிவுகளாவது தமிழில் எழுதியிருக்க வேண்டும் என்றொரு விதி இருப்பதாக நினைவு. ஆனால் இரண்டே இரண்டு பதிவுகளை மட்டுமே எழுதியவர் எப்படி தமிழ்மண நட்சத்திரம் ஆக முடியும்? சரி. விதியை விடுங்கள். விதிகள் எல்லாமே உடைக்கப்படுவதற்காக ஏற்படுத்தப்படுபவைதானே?

எனக்கு ஒரு ‘ஸ்டார்' வலைப்பதிவரை தெரியும். ஆங்காங்கே அடர்த்தியாக பின்னூட்டமிடுவார். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பின்னூட்ட சுனாமியாக இருந்தவர். அமெரிக்காவில் இருந்து வந்த அவரை ஒருமுறை நேரில் சந்தித்து குசலம் விசாரித்துக் கொண்டிருந்தபோது, சம்பிரதாயத்துக்காக எல்லா பதிவர்களிடமும் சொல்வது மாதிரி, “அண்ணே உங்க பதிவையெல்லாம் படிச்சிருக்கேன். அட்டகாசம்” என்று அப்பாவித்தனமாக சொன்னேன். “அடப்போய்யா. எனக்கெங்கே வலைப்பூ இருக்கு? சும்மா ஒரு அக்கவுண்ட் ஸ்டார்ட் பண்ணி வெறுமனே பின்னூட்டம் மட்டும்தானே போட்டுக்கிட்டிருக்கேன்!” என்றார். அப்போதுதான் அவருக்கென்று ஒரு வலைப்பூவே இல்லாதது தெரிந்து என்னை நானே நொந்துகொண்டேன். இப்போதும் கூட அவருக்கென்று வலைப்பூ எதுவும் இல்லையென்று தெரிகிறது.

அடுத்தவார நட்சத்திரமாக அவரைத் தேர்ந்தெடுக்கலாம். நட்சத்திரமாவதற்கு வலைப்பூவெல்லாம் இருப்பது ஒரு முக்கியமா என்ன? நாம் நட்சத்திரம் என்று யாரையாவது நினைத்தால் நட்சத்திரமாக்கி அழகு பார்த்துவிட வேண்டியதுதான். சொல்ல மறந்துவிட்டேனே. இந்த வலைப்பூ இல்லாத பின்னூட்ட சுனாமியின் பெயர் சுடலைமாடன். அவரும் கூட அட்மினாகதான் இருக்கிறார். ஹாட்ரிக் அடிக்க அருமையான வாய்ப்பு.

“நீதான் இப்போது தமிழ்மணத்திலேயே இல்லையே? தமிழ்மணப்பட்டையைக் கூட தூக்கிவிட்டாயே? நீ ஏன் இதையெல்லாம் பேசுகிறாய்?” என்று பராசக்திபட க்ளைமேக்ஸில் வக்கீல் சிவாஜியை பார்த்து கேட்டதுமாதிரி நீங்கள் யாராவது பின்னூட்டத்தில் கேட்கலாம். நானும் சிவாஜி மாதிரிதான் பதில் சொல்லவேண்டும். “நான் தமிழ்மணத்தில் இல்லையென்று நினைத்துக் கொண்டிருந்தாலும் என் பதிவுகள் ‘எப்படியோ' தமிழ்மணத்தில் கொஞ்சநாளாக வந்து தொலைத்துக் கொண்டிருக்கிறது. இது பெரிய தொல்லையாக போகிறது. இப்படியெல்லாம் பேசினால் 'அது' மாதிரி வராமல் சுத்தபத்தமாக செய்துவிடுவார்கள் இல்லையா?”

12 மே, 2010

எஸ்.எம்.எஸ்.


எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்திகளின் அளவு சிறிதானாலும், சிறப்புகள் பெரிது. எந்த மாகானுபவர் இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தாரோ பாவம். விஜய் ரசிகர்களிடமும், அஜீத் ரசிகர்களிடமும் மாட்டிக்கொண்டு அல்லல் படுகிறது. கடந்த ஏழெட்டு வருடங்களாக இவர்களின் படங்கள் வெளியாகும்போதெல்லாம் எதிர்தரப்பு ரசிகர்களால் அனுப்பப்படும் குறும்பு எஸ்.எம்.எஸ்.களில் இன்பாக்ஸ் நிரம்பி வழிகிறது. ஒரு கட்டத்தில் இவ்வகையில் மொக்கைவகை எஸ்.எம்.எஸ்.களும் பல்கி பெருக ஆரம்பித்துவிட்டதால் மணி அடித்தாலே கிலியாகும் நிலை ஏற்பட்டுவிட்டது.

அஜீத்தின் மவுசு கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டதால் சமீபத்தில் அசல் வெளியானபோது அவ்வளவு தொந்தரவில்லை. ஆனால் விஜய் இன்னும் பீக்கில் இருப்பதால் சுறா வெளியானதில் இருந்து எறாவாக வறுத்துத் தொலைக்கிறார்கள். அந்தப் படம் பார்த்த அனுபவமே திராவகக் குளியல் தரும் எரிச்சலை இன்னமும் தந்துகொண்டிருக்கும்போது, இந்த மொக்கை எஸ்.எம்.எஸ்.களால் கூடுதல் எரிச்சல் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

ஆயினும் கைதேர்ந்த எஸ்.எம்.எஸ்.ஸர்கள் சிலரின் படைப்புத்திறனை எண்ணி மலைக்காமல் இருக்க முடியவில்லை. உதாரணத்துக்கு ஒன்று கீழே. இதுபோல உங்கள் இன்பாக்ஸ்களில் இருக்கும் எஸ்.எம்.எஸ்.களை (இண்டரெஸ்டிங்கா இருந்தா மட்டும்) பின்னூட்டத்தில் தரலாம். சுறாவின் நூறாவது நாள் விழாவின்போது இவற்றை புத்தகமாக அச்சிட்டு விஜய்க்கு வழங்குவதாக உத்தேசம்.

மருத்துவமனையில் ஒரு பெரியவரும், டாக்டரும் பேசும் வசனங்கள்தான் ஒட்டுமொத்த குறுஞ்செய்தியும்.

பெரியவர் : டாக்டர், ப்ளீஸ் எப்படியாவது காப்பாத்துங்க.

டாக்டர் : தற்கொலை பண்ணிக்க அவன் விஷம் குடிச்சிருந்தாலோ, தூக்குலே தொங்கியிருந்தாலோ கூட பரவாயில்லை. விவரமா ‘சுறா'வைப் பார்த்திருக்கான். ப்ச்.. (கண்ணாடியை கழட்டிக்கொண்டே) மனசைத் தேத்திக்குங்க. எல்லாம் முடிஞ்சிடிச்சி...

பெரியவர் (கதறியவாறே) : ஒருவேளை இண்டர்வெல்லேயே தூக்கிக்கிட்டு வந்திருந்தா அவனை காப்பாத்தியிருப்பீங்களா டாக்டர்?

டாக்டர் : சான்ஸே இல்லை. ஓபனிங் சாங் முடிஞ்சதுமே உயிர் போயிட்டிருக்கும்னு நெனைக்கிறேன்!

29 ஏப்ரல், 2010

அஜால் குஜால் டிவி!

ஜோதியில் இப்போதெல்லாம் ‘பிட்டு' படங்கள் போடுவதில்லையே என்று நாம் ஏங்கிக் கொண்டிருக்க, கனடா அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட்டது. உலகின் முதல் நேக்ட் நியூஸ் (அம்மணக்கட்டை செய்திகள் - செய்திவாசிப்பாளர்கள் 0% உடை அணிந்திருப்பார்கள்) சேனலை உலகத்துக்கு அர்ப்பணித்த நாடு. அடுத்ததாக முழுக்க முழுக்க அஜால்-குஜால் மேட்டருக்காகவே ஒரு டிவி சேனலையும் ரசிகர்களுக்கு தாரைவார்க்கப் போகிறதாம்.

வரும் அக்டோபர் மாதம் முதல் விண்ணிலிருந்து ‘பிட்டு' மண்ணுக்கு ஒளி-ஒலிபரப்பாகும். குஜாலுக்கு மொழி ஒரு தடையில்லை. எனினும் முதற்கட்டமாக கனாடாவில் வாழும் பிரெஞ்சு பேசும் க்யூபிக் மக்களுக்காக பிரெஞ்சு மொழியில் தனது ஒளிபரப்பை துவக்குகிறது வேனஸ்ஸா டிவி. அடுத்த ஆண்டிலிருந்து ஆங்கிலமும். ”பிரெஞ்சோ, ஆங்கிலமோ. குருமா ருசியா இருந்தா சரிதான்” என்று நாக்கை சப்பு கொட்டுகிறார் அந்த ஊரில் வசிக்கும் ஒரு உண்மை பிரெஞ்சுக்காரன்.

ஹை-டெபனிஷனில் வேனஸ்ஸா டிவியின் ஒளிபரப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் பலரும் கண்களை அகல விரித்துக் கொண்டு பெருத்த எதிர்ப்பார்ப்புகளோடு தயாராக இருக்கிறார்கள். நாடகங்கள், ஆவணப் படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களாக நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. செக்ஸ் டிவியில் ரியாலிட்டி ஷோக்கள் என்று கேள்விப்பட்டதிலிருந்து பரபரப்புடன் கூடிய சூடு கோக்குமாக்காக க்யூபிக் வட்டாரத்தில் ஏற்பட்டிருக்கிறது.

”இவ்வளவும் ஓசியா?” என்று ஓசியில் ஒட்டடை அடித்துக் கொள்ளும் ஆர்வத்தோடு டொரண்டோவை சேர்ந்த கஞ்சன் ஜங்கா என்பவர் எழுப்பியிருக்கும் கேள்விக்கு, “இல்லை. மாதத்துக்கு பதினைந்து டாலர்” என்று ஆப்பு அடித்திருக்கிறது டிவி நிர்வாகம்.

நாட்டின் முதல் அஜால் குஜால் தொலைக்காட்சிக்கு க்ரீன் சிக்னல் காட்டிவிட்டாலும், வயிற்றில் கொஞ்சம் நெருப்பை கட்டிக்கொண்டே நடப்பவற்றை கவனத்தோடு பார்த்து வருகிறது Canadian Radio-Television and Telecommunications Commission. ”வன்முறையை காமிக்க கூடாது. அப்புறம் செக்ஸை ரீஜண்டா காமிக்கோணும்னு கண்டிஷன் போட்டிருக்கோம்” என்கிறார் அந்நிறுவனத்தை சேர்ந்த உயரதிகாரி ஒருவர். ஆயினும் இவரும் வரப்போகும் டிவி நிகழ்ச்சிகளை காணப்போவதில் பணிதாண்டிய ஆர்வத்தில் இருப்பதை அவரது உற்சாகத் துள்ளலின் மூலமாக அறியமுடிகிறது.

நிகழ்ச்சிகளுக்கான காண்டெண்ட் எங்கிருந்து பெறப்போகிறார்கள் என்பதில்தான் சிக்கல் நீடிக்கிறது. இருபது சதவிகிதம் லோக்கல் ஆட்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தே தீரவேண்டுமாம். மீதியிருக்கும் எண்பது சதவிகிதத்தை கலிஃபோர்னியா அஜால் குஜால் இண்டஸ்ட்ரியான சாண் பெர்ணாண்டோ பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து இறக்குமதி செய்ய நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. அந்த பள்ளத்தாக்குதான் அமெரிக்காவின் பலான பொழுதுபோக்குத் தேவையை ஈடு செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை அமெரிக்க பலான சேனல்களை கேபிள் டிவி மூலமாக பார்த்து ரசித்து வந்த கனடிய ஜொள்ளர்கள் அக்டோபருக்காக வயது வித்தியாசமில்லாமல் தவமிருக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நம்ம ஊருக்கு இதெல்லாம் எந்த காலத்தில் கிடைக்குமோவென்று ஷகிலா, ரேஷ்மா மற்றும் மரியா ரசிகர்மன்ற கண்மணிகள் வாயில் விரலை சப்பிக் கொண்டு ஏங்கிக் கிடக்க வேண்டியதுதான்!