17 ஆகஸ்ட், 2009

சிறுகதை எழுதுவது எப்படி?


“சிறுகதை எழுதுவது எப்படி?”

இந்த கேள்வியை யாராவது பெருசுகளிடம் கேட்டால், “சுஜாதா புக் எழுதியிருக்கிறார். வாங்கிப்படி!” என்கிறார்கள். உண்மையில் அந்தப் பெருசுகள் அப்புத்தகத்தை படித்திருக்க வாய்ப்பேயில்லை என்று கருதலாம். ‘சிறுகதை எழுதுவது எப்படி?' என்பதே ஒரு சிறுகதைதான். அந்த சிறுகதை அடங்கிய சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்புக்கு சூட்டப்பட்ட பெயர் அது.

”சுஜாதா சிறுகதை எழுத சொல்லித் தருகிறார்!” என்று யாராவது சொன்னால் பரலோகத்தில் இருக்கும் சுஜாதாவே அதை மன்னிக்க மாட்டார். சிறுகதை எழுதுவதை பாடமாக எல்லாம் சொல்லித்தர முடியாது என்று நம்பியவர் அவர். ஆனால் ஒரு தேர்ந்த வாசகன் நிறைய சிறுகதைகள் வாசிப்பதின் மூலமாக சிறுகதைகளை எழுதும் ஆற்றலை பெற்றிட முடியும். குறிப்பாக சுஜாதாவின் சிறுகதைகளை நிறைய வாசிக்கலாம்.

சுஜாதா எழுதிய காலத்தில் அவரை ஒரு கமர்சியல் ரைட்டராகவும் ஏற்றுக் கொள்ளப் படாமல், இலக்கிய எழுத்தாளராகவும் ஒத்துக் கொள்ளப்படாமல் திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்வின் பெரும்பகுதியை வாழ்ந்திருக்கிறார். உண்மையில் அவருக்கு இலக்கிய அந்தஸ்து என்பது கடைசிக்காலத்தில் தான் கிடைத்தது என்று நம்புகிறேன். அதிலும் ஒரு தலைமுறையே, ”தங்களை சுஜாதா பாதித்திருக்கிறார்” என்று ஒட்டுமொத்தமாக சொன்னதின் பின்னால்தான் வேண்டாவெறுப்பாக ஒப்புக் கொள்ளப்பட்டார். அதிர்ஷ்டவசமாக சுஜாதாவுக்கு வாழும் காலத்திலேயே இந்த அந்தஸ்து கிடைத்துவிட்டது. சாண்டில்யன் எல்லாம் ரொம்ப பாவம். இப்போதும் கூட அவரை சரோஜாதேவிரக எழுத்தாளராகவே பல இலக்கிய விமர்சகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

எதையோ பேசவந்து எதையோ பேசிக்கொண்டிருக்கிறேன். எதை பேசவந்தேன்? ஆங்.. சிறுகதை எழுதுவது எப்படி?

சுஜாதா கருதியதைப் போல யாரும் விரல் பிடித்தெல்லாம் சொல்லித் தந்துவிட முடியாது. ஆனால் இப்போது பத்திரிகைகளில் எழுதி பிரபலமாக இருக்கும் எழுத்தாளர்களை விட பல திறமையான கதை சொல்லிகள், தங்கள் திறமையை அறியாமலேயே ஆயா வடை சுட்டக் கதையை தினுசு தினுசாக தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி வருகிறார்கள். நேரமும், வாய்ப்பும் வாய்த்தவர்கள் இன்று இணையங்களில் எழுதுகிறார்கள். எதை எழுதவேண்டும் என்று தெரிந்தவர்கள் கூட எப்படி எழுதுவது என்று தெரியாமல் சொதப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு என்னையே எடுத்துக் கொள்ளலாம். நான் ஒரு நல்ல கதைசொல்லி கிடையாது என்பது எனக்கே தெரியும். அப்படிப்பட்ட நான் கூட தைரியமாக கதை என்று எதையோ எழுதி, இணையங்களில் சில பரிசுகளை கூட வாங்கிவிட்டேன். ஒரு சில கதைகள் பத்திரிகைகளிலும் பிரசுரம் ஆகிவிட்டது என்பதெல்லாம் பெருங்கொடுமை. இப்பதிவை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் என்னைவிட மிகத்திறமையான கதைசொல்லியாக இருக்கலாம். உங்களிடம் நிறைய தீம் இருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட ஒரு கதையை எந்த வடிவில் எழுத்தில் வழங்கலாம் என்பதில் மிகப்பெரிய குழப்பம் உங்களுக்கு மட்டுமல்ல, பல வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கும் பலருக்கும் இருக்கிறது.

ஒரு நல்ல காஃபியில் டிக்காஷனும், பாலும் சரியான விகிதத்தில் கலந்திருக்க வேண்டியது அவசியம். அது போலவே ஒரு நல்ல சிறுகதையில் கதையின் உள்ளடக்கமும், அந்த உள்ளடக்கத்தை நல்ல முறையில் வாசகனுக்கு கையளிப்பதற்கான பொருத்தமான வடிவமும் மிக முக்கியமானது.

தமிழ் எழுத்தாளர்கள் பொதுவாக சுயநலமானவர்கள். தாங்கள் கற்ற வித்தைகளை, அனுபவத்தில் அறிந்த நுணுக்கங்களை அவ்வளவு சுலபமாக மற்றவர்களிடம் பகிர்ந்துவிட மாட்டார்கள். அரிதிலும் அரிதாக ஒருசிலர் பகிர்ந்துக் கொள்வார்கள். தமிழின் மிக முக்கியமான நான்கு எழுத்தாளர்கள் சிறுகதைப் பட்டறை ஒன்றினில் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களை, தாங்கள் கற்றவைகளை, அடிபட்டு தெரிந்துகொண்டவைகளை பகிர்ந்துக்கொள்ளப் போகிறார்கள் என்பது எவ்வளவு அருமையான விஷயம்?

தமிழின் முக்கிய கவிஞர்களில் ஒருவரான சுகுமாரன் உலகச் சிறுகதைகள் குறித்தும், தான் எப்படி சிறுகதைகள் எழுதுகிறேன் என்று சிறுகதை மற்றும் நாவலாசிரியரான யுவன்சந்திரசேகரனும், சிறுகதைகளுடனான தனது அனுபவங்கள் குறித்து சிறுகதை ஆசிரியரும், சினிமா வசனகர்த்தாவுமான பாஸ்கர் சக்தியும், 'சிறுகதை எழுதுவது எப்படி?' என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளரும், கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியருமான பா.ராகவனும் பேச இருக்கிறார்கள்.

இந்நிகழ்வுக்காக சுஜாதாவின் ‘சிறுகதை எழுதுவது எப்படி?' கதையில் வருவதைப் போலவே இதற்காகவே ஒரு பட்டறையை நடத்த 'உரையாடல் கலை இலக்கிய அமைப்பு' முன்வந்திருக்கிறது. ஆனால் சுஜாதா கதையின் இறுதியில் வருவதைப் போல உங்கள் வீட்டு அண்டா, குண்டாவையெல்லாம் உரையாடல் அமைப்பினர் ஆட்டை போட்டுக் கொண்டு போக மாட்டார்கள் என்பதற்கு நான் நூறு சதவிகித உத்தரவாதம் தருகிறேன்.

சிறுகதைப் பட்டறை குறித்த முழுவிவரங்கள் பைத்தியக்காரன் அவர்களின் இப்பதிவில் இருக்கிறது. க்ளிக்கிப் பார்த்து, மறக்காமல் உங்களது பெயரை முன்பதிவு செய்துக் கொள்ளவும். இப்போது கந்தசாமி படத்தின் முன்பதிவை விட இந்த சிறுகதைப் பட்டறைக்கான முன்பதிவே பரபரப்பாக நடந்து வருகிறது.

அமைப்பாளர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்கு பலதரப்பட்ட விஷயங்களை இணைத்து தொகுப்பாக வழங்குவதாக கூறியிருக்கிறீர்கள். இந்தத் தொகுப்போடு தமிழர் தந்தை ஆதித்தனார் எழுதிய ‘இதழாளர் கையேடு' நூலையும் வழங்குமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

19 கருத்துகள்:

  1. இது போல சில நல்ல விஷயங்களை கலந்து கொள்ள முடியாத போது தான் பணத்தை துறத்திக் கொண்டு அமெரிக்காவிற்க்கு என் வந்தோம் என்றிருக்கிறது. இருந்தாலும் கடைசியில் பணம் வென்று விடுகிறது.

    பதிலளிநீக்கு
  2. பட்டறைகளாக நடத்தி பட்டையை கிளப்புகிறீர்கள் போங்கள்

    பதிலளிநீக்கு
  3. //இருந்தாலும் கடைசியில் பணம் வென்று விடுகிறது.
    //

    கிருஷ்ணா,

    சங்கர் அண்ணா சொல்வது 100 சதம் உண்மை. பணத்து நாம் கொடுக்கும் முதல் விலை நிறைய நல்லவற்றை இழப்பது.

    என்னைப் பொறுத்த வரையில் ஒரு நல்ல சிறுகதை எழுத அடிப்படை தேவை நிறைய படிப்பது மற்றும் சிறந்த சிறுகதைகள் என சொல்வதை ஏன் என ஆராய்ந்து அதில் உள்ள முறையை பின்பற்றுவது என நினைக்கிறேன்.

    நண்பர் பைத்தியக்காரன் அவர்களின் முயற்சி மிகவும் பாராட்டுதலுக்குறியது, வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  4. //சுஜாதா எழுதிய காலத்தில் அவரை ஒரு கமர்சியல் ரைட்டராகவும் ஏற்றுக் கொள்ளப் படாமல், இலக்கிய எழுத்தாளராகவும் ஒத்துக் கொள்ளப்படாமல் திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்வின் பெரும்பகுதியை வாழ்ந்திருக்கிறார். உண்மையில் அவருக்கு இலக்கிய அந்தஸ்து என்பது கடைசிக்காலத்தில் தான் கிடைத்தது என்று நம்புகிறேன். //

    இக்கருத்தும் ஏறக்குறையத்தான் சரி. உண்மையில் சுஜாதாவின் இலக்கிய அந்தஸ்து என்பது அவர் இறந்தபின் வந்து ஒட்டிக்கொண்டது.

    ஜெயமோகன், எஸ்.ரா, சாரு போன்ற இலக்கியவாதிகள் அவர் உயிரோடு இருக்கும் வரை, ஒரு புண்ணாக்கு மரியாதையும் செலுத்தியதில்லை. ஆனால் மனதுக்குள் அவரது புகழ்மீது அடங்காத வெறியும் அப்படியே அபகரித்துக்கொள்ளும் கயவாளித்தனமும் கொண்டிருந்தார்கள்.எப்படா சாவான் என்று காத்திருந்ததுபோல செத்ததும் அவரைத் தூக்கி இலக்கியபீடத்தில் உட்காரவைத்துவிட்டு, அடுத்த பீடாதிபதியாக தங்களைத் தாங்களே முடிசூட்டிக்கொண்டுவிட்டார்கள். சாரு சுஜாதாவைப் பற்றி பேசிய “அமுத மொழிகள்” வேண்டுமா? கலெக்ட் செய்தே வைத்திருக்கிறேன். அதைவிட கேவலமாக ஒரு எழுத்தாளனை விமர்சிக்க முடியாது. ஆனால் இப்போது? குருவாம்! கேடுகெட்ட பிழைப்பைய்யா.

    இந்த ஜெயமோகன்? சுஜாதா ஒரு கேளிக்கைவாதி என்று கொக்கரித்தவர். அதுவும் மேடைதோறும்! எஸ்ராவுக்கும் சுஜாதாவுக்கும் என்றைக்குமே தொடர்பு இருந்தது கிடையாது. செத்தவன் வந்து சர்டிபிகேட் கொடுக்கப்போவதிலை என்பதால் இப்போது ஏகமாகப் புகழ்ந்து தள்ளுகிறார்கள், புல்லரிக்கிறார்கள். இலக்கியவாதியான மனுஸ்யபுத்திரனுக்குக் கூட தன் பதிப்பகம் ஓடுவதற்கு சுஜாதா வேண்டியிருந்தார். அதனால்தான் அவர் சுஜாதாவைத் தூக்கிக்கொண்டு அலைகிறார். இவர்கள் அத்தனை பேரும் சுஜாதாவல் தொடமுடிந்த உயரத்துக்கு ஆசைபடும் ஊர்க்குருவிகளே.

    அவரது ஆத்மா சத்தியமக இந்த யாரையும் மன்னிக்காது. உண்மையிலேயே சுஜாதவைக் கொண்டாடியதும் வாழவைத்ததும் அவரால் பயனடைந்து, அவருக்கும் பயனளித்ததும் குமுதம், விகடன் போன்ற இதழ்களேயாகும்.

    லட்சக்கணக்கான சாதாரண வாசகர்கள் அவருக்கு உண்டு. அவர்கள் தலைமுறை தோறும் அவரைக் கொண்டு சேர்ப்பார்கள். இந்த இலக்கியப் போலிகள் செய்வதெல்லாம் பிண வியாபாரம்தான்.

    பதிலளிநீக்கு
  5. அட... இப்புடியும்கூடவா நீங்க....!! நல்லது.... நன்றி.....!! முடியல...... அஆஆவ்வ்வ்வ்வ்......

    பதிலளிநீக்கு
  6. நாம் பேசும், பார்க்கும் எல்லாமே சிறுகதைதான். சில கதைகள் சிலருக்குப் பிடிக்கும், சிலருக்கு கதை விடுவதாகத் தோன்றும்.

    உரக்கப் பேசுபவர்களுக்குப் பிடித்தால் அது நல்ல சிறுகதை.

    அமைதியாக இருப்பவர்களுக்கு மட்டும் பிடித்தால் அது கதைவிடும் கதை.

    கஷ்டப் படுபவர்களுக்கு மட்டும் பிடித்தால் அது பிரச்சாரக் கதை.அதிலும் முதலாளிகளை அதிகம் சாடினால் அது துண்டுப் பிரசுரம்.

    இலக்கியவாதிகளின் பாணியிலிருந்து விலகி பழைய அகநானூறு, குறுந்தொகை பாணியில் எழுதினால் கமர்சியல் கதை.

    சரோஜாதேவி பாணியில் முண்ணனி எழுத்தாளர்கள் எழுதினால் அது புரட்சிக்கதை. அதே வள்ரும் எழுத்தாளர்கள் எழுதினால் கலீஜு.

    என்னைப் பொறுத்தவரை எல்லாமே கதைதான்.

    படிக்கும் வாசகர்களுக்கு தகுந்தாற்போல சொன்னால் அது வெற்றிக்கதை.

    கல்கிக்கு அனுப்புவதை குமுதத்திற்கு அனுப்பினால் அது கிறுக்குக்கதை

    பதிலளிநீக்கு
  7. யாரேனும் இதை படிக்காமல் , லக்கி லுக் சிறுகதை எழுத கற்று தருகிறார் என்று வெளியே சொல்லப்போகிறார்கள் :D

    பதிலளிநீக்கு
  8. சரி, சென்னைக்கு வந்து போகும் செலவு மிச்சம். இலவசமா கத்துக்கலாம்னு வந்தா, பட்டறைக்கு வெளம்பரம்!

    சரி சரி, முதல்ல உங்க கிட்ட குட்டுப்படாம பின்னூட்டம் போடுறது எப்படீனு ஒரு பட்டறை இல்லாட்டி ஒரு பதிவாச்சும் போடுறது :)

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  9. லக்கி,
    நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
    சிறுகதைப் பயிலரங்கு வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக்கள்.

    “அகநாழிகை“
    பொன்.வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  10. இம்மாதிரியான பட்டறைகள் என்னை மாதிரி தவழ்பருவ குழைந்தைகளுக்கு தாய்ப்பால் மாதிரி, ஆனால் என்ன செய்ய.... பணத்தை துரத்தி நாடு கடத்தப்பட்டவர்கள்......

    பதிலளிநீக்கு
  11. சிறுகதை பட்டறை வெற்றிகரமாக நடக்கவும், பதிவர்கள் பயன்பெறவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. லக்கி, எனக்கும் ஒரு துண்டு போட்டு வைங்க...

    பதிலளிநீக்கு
  13. எப்படிக் கதை எழுதுவது (எ க எ) என்று ரா.கி.ரங்கராஜன் குமுதத்தில் ஒரு தொடர் எழுதி அது புத்தகமாகவும் வந்திருக்கிறது. அதில் சொல்லப்பட்ட விதிகளைப் பின்பற்றி எழுதிப் பாருங்கள், எழுதினது நீங்கள்தானா என்று உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  14. ஜவஹர்!

    அந்தப் புத்தகத்தை நெடுநாளாக தேடிக் கொண்டிருக்கிறேன். எந்தப் பதிப்பகத்தில் வெளிவந்தது என்று சொன்னால் உதவியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  15. யுவக்ரிஷ்னா சார் :

    மதி நிலையம்
    4(39) தணிகாசலம் ரோட்
    பிருந்தாவன் apaartments
    தி.நகர்

    போன் : 4311838

    விலை ரூ.75/=

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  16. மிக்க நன்றி ஜவஹர்!

    அத்திபூத்தாற்போல இதுபோல எப்போதாவது பின்னூட்டங்கள் உருப்பட பயன்படுகிறது :-)

    பதிலளிநீக்கு
  17. அத்திபூத்தாற்போல இதுபோல எப்போதாவது பின்னூட்டங்கள் உருப்பட பயன்படுகிறது :-)

    அப்போ என் பின்னூட்டம் உருப்படியா இல்லையா. ல்க்கி இது நல்லா இல்ல

    பதிலளிநீக்கு
  18. நான் எழுதின பின்நூட்டங்கள்ளே இது ஒண்ணுதான் உருப்படியா இருக்குன்னு சொல்லியிருக்காரு! நீங்க கோயிச்சிக்காதீங்க!

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  19. துவரம்பருப்பு என்ன விலை விற்கிறது த்ஜெரியுமா? நூறு ரூபாய் என்று பின்னூட்டம் போட்ட யுவ கிருஷ்ணா தன்னையும் அறியாமல் ஒப்புக்கொண்டது!
    /மிக்க நன்றி ஜவஹர்!

    அத்திபூத்தாற்போல இதுபோல எப்போதாவது பின்னூட்டங்கள் உருப்பட பயன்படுகிறது :-) /

    துவரம்பருப்பு விலைஏறிக்கொண்டிருப்பதை, உங்கள் தலைவரிடமும் சொல்லி வையுங்க!

    பதிலளிநீக்கு