19 மார்ச், 2010

கென்ய புரட்சித்தலைவி!

வாங்கரி முடா மாத்தாய் (Wangari Muta Maathai). கென்ய நாட்டைச் சேர்ந்த முனைவர். தொடர்ச்சியான வளர்ச்சி, ஜனநாயகம் மற்றும் அமைதிக்காக பாடுபட்டவர் என்ற அடிப்படையில் 2004ஆம் ஆண்டு நோபல் பரிசு வென்றவர். இப்பரிசினை வென்ற ஆப்பிரிக்காவின் முதல் பெண்மணி இவர்தான். நோபல் வென்ற முதல் சுற்றுச்சூழலாளர் என்ற பெருமையையும் மாத்தாய் பெறுகிறார்.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த கென்யாவின் நைரி மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் ஏப்ரல் 1, 1940 அன்று மாத்தாய் பிறந்தார். கிக்குயூ என்ற கென்ய பழங்குடி இனத்தைச் சார்ந்த மாத்தாயின் தந்தை ஒரு வெள்ளையரின் பண்ணையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆரம்பக் கல்வியை ஒரு கிறிஸ்தவ மெஷினரி பள்ளியில் மாத்தாய் கற்றார். பதினாறு வயதில் பள்ளி படிப்பை முடித்திருந்தபோது, அப்பள்ளியின் சிறந்த மாணவியாக மாத்தாய் இருந்தார்.

பட்டம் முடித்தபிறகு உகாண்டாவில் ஒரு பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பது மாத்தாயின் ஆவல். காலனி ஆதிக்கத்திலிருந்து கிழக்கு ஆப்பிரிக்கா விடுபட்டுக் கொண்டிருந்த காலம் அது. வளர்ச்சி காரணங்களுக்காக ஆப்பிரிக்க நாட்டினருக்கு அமெரிக்காவில் கல்விச்சலுகை தொடங்கிய நேரமும் கூட. அமெரிக்க பல்கலைக் கழகங்களில் 300 கென்யர்கள் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களில் மாத்தாயும் ஒருவர்.

கான்சாஸ் நகரில் ஒரு பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டத்தை பெற்றார். பின்னர் ஜெர்மனியின் பிட்ஸ்பர்க் நகரில் உயிரியல் முதுகலை பட்டம் வென்றார். பிட்ஸ்பர்க் நகரில் படித்துக் கொண்டிருந்தபோது மாத்தாயுக்கு சுற்றுச்சூழல் குறித்த அக்கறையும், ஆர்வமும் ஏற்பட்டது. நகரின் காற்று மாசுபடுதல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த முன்வந்தார். அக்காலக் கட்டத்தில் கென்யர்கள் பட்டப்படிப்பு படிப்பதே அதிசயம். அதிலும் பெண்ணான மாத்தாய் பட்டங்களுக்கு மேல் பட்டங்களாக குவித்துக் கொண்டிருந்தது, அதிசயத்திலும் அதிசயம்.

படிப்பு போதும் என்று முடிவெடுத்தவர் தன்னுடைய 26வது வயதில் தாய்நாட்டுக்கு திரும்புகிறார். கென்ய தலைநகர் நைரோபியில், ஒரு பல்கலைக்கழகத்தில் ஆய்வு உதவியாளராக பணிக்கு சேருகிறார். சேர்ந்த சில மாதங்களிலேயே இப்பணி வேறொருவருக்கு வழங்கப்பட்டது. தான் பழங்குடியினத்தில் பிறந்த பெண் என்பதாலேயே தன்னை நிராகரிக்கிறார்கள் என்பதை உணர்ந்தார்.

இரண்டுமாத தீவிர வேலை தேடுதலுக்குப் பிறகு கால்நடைப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆராய்ச்சி உதவியாளர் பணி மீண்டும் கிடைக்கிறது. குடும்ப வருமானத்துக்காகவும், தன்னுடைய தங்கைகளுக்கு வேலை கொடுக்க வேண்டுமென்ற காரணத்துக்காகவும் வாடகைக்கு ஒரு கடையை நடத்துகிறார். ஓரளவுக்கு பொருளாதார நிலைமையை சரி செய்துவிட்டு மீண்டும் ஜெர்மனிக்கு படையெடுக்கிறார்.

படிப்பு முடிந்து மீண்டும் நைரோபிக்கு திரும்புகிறார். இதே காலக்கட்டத்தில் தான் மாத்தாய், அமெரிக்காவில் படித்த ஒருவரை தனது கணவராக தேர்ந்தெடுக்கிறார். 1971ஆம் ஆண்டு பி.எச்.டி (Doctorate of Anatomy) பட்டம் பெறுகிறார். கிழக்கு ஆப்பிரிக்காவிலேயே இப்பட்டத்தை பெற்ற முதல் பெண்மணி இவர்தான். அடுத்தடுத்து இவர் பெற்ற பெருமைகள் பெரும்பாலானவற்றை முதலில் பெற்றவராக அவர் இருக்க இதுதான் முதல்படி.

யூனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் நைரோபியில் பேராசிரியராக பணிக்கு சேர்ந்தார். அங்கு ஆண்களுக்கு இணையான முக்கியத்துவம் பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று போராடினார். பல்கலைக்கழக பணியாளர்களை ஒருங்கிணைத்து, அவர்களது உரிமைகளை வென்றெடுக்க ஒரு சங்கமும் அமைத்தார்.

பணியிடம் மட்டுமன்றி, வெளியிலும் மாத்தாய் சமூகப்பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். கென்ய ரெட் க்ராஸ் அமைப்பின் இயக்குனராக பணியாற்றினார். ஐக்கியநாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின்படி கென்யாவில் தொடங்கப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் அமைப்பிலும் தீவிர உறுப்பினராக இருந்தார். தேசிய கென்ய பெண்கள் அமைப்பிலும் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். பல்வேறு அமைப்புகளிலும், பல்வேறு பொறுப்புகளில் ஈடுபட்டிருந்ததால், அவரது நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்று அவரால் அறிந்துகொள்ள முடிந்தது. அது, சுற்றுச்சூழல் சீர்கேடு.

இதற்கிடையே மாத்தாயின் கணவர் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பேன் என்று மக்களுக்கு வாக்குறுதி தந்திருந்தார். மரங்கள் வளர்ப்பதின் மூலமாக வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க முடியும் என்று மாத்தாய் தனது கணவருக்கு யோசனை சொன்னார். மரங்கள் வளர்க்கப்படுவதின் மூலமாக தனிமனிதனுக்கும், ஒவ்வொரு மனிதனும் வளர்ப்பதால் ஒட்டுமொத்தமாக காடுகள் உருவாகி நாட்டுக்கும் பொருளாதார ஆதாயம் கிடைக்கும் என்பது அவரது திட்டம். இதற்காக என்வைரோகேர் என்றொரு நிறுவனத்தை தொடங்கினார்.

யார் கண் பட்டதோ தெரியவில்லை. மாத்தாய்க்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு தோன்றியது. விவாகரத்து செய்துகொண்டார்கள். விவாகரத்து தொடர்பான வழக்கின் தீர்ப்பையடுத்து, நீதிபதியை மாத்தாய் விமர்சிக்க, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு அவர்மீது பாய்ந்தது. மூன்றுநாட்கள் சிறையில் கூட இருந்தார். பின்னர் அவ்வழக்கின் மேல்முறையீட்டில் விடுதலை ஆனார். கணவரின் ஆதரவை இழந்தவர், வழக்கு தொடர்பாகவும் நிறைய செலவு செய்திருந்தார். சேமிப்பு மொத்தமாக கரைந்த நிலையில் தன்னுடைய மூன்று குழந்தைகளை வளர்க்க இயலாமல், முன்னாள் கணவரிடம் கண்ணீர் மல்க சேர்ப்பித்தார்.

ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நேரத்தில் கிழக்கு ஆப்பிரிக்க பொருளாதார கமிஷன் நியமிக்கப்பட்டது. அதில் பணியாற்றும் வாய்ப்பு மாத்தாய்க்கு வீடு தேடிவந்தது. தேசிய கென்ய பெண்கள் அமைப்பின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னை நாடிவந்த பொறுப்புகளை சிறப்பாக செய்ததால், அவருக்கு மேலும் மேலும் பல அமைப்புகள் பொறுப்பினை வழங்க முன்வந்தன.

க்ரீன்பெல்ட் என்று அழைக்கப்படும் பசுமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபை, பெண்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கும் நிதியை பெற்று, ‘பணத்தை விதையுங்கள்’ என்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தினார்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல, மரங்கள் விதைப்பதின் மூலம் சுற்றுச்சூழல் சீர்கேட்டை தடுக்க முடிந்தது. மரங்களின் மூலமாக பொருளாதார ஆதாயத்தையும் பெண்கள் பெற்றார்கள். மரங்களை விதைக்கும் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. அவற்றை பரமாரிப்பது தொடர்பான வேலைவாய்ப்புகளும் பெருகின. நர்சரி எனப்படும் தோட்டக்கலை தொழில் பரவலாக்கப்பட்டது.

1985ல் நைரோபியில் ஐ.நா.சபையின் உலகளாவிய பெண்கள் மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு வந்தவர்களிடம், பசுமை இயக்கத்தின் மூலமாக சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, எப்படி வேலைவாய்ப்பையும் பெருக்கி வருகிறோம் என்பதை மாத்தாய் விளக்கின் சொன்னார். திட்டத்தின் வெற்றியை கண்டவர்கள் இத்திட்டத்தை கென்யா தாண்டி, மற்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இதைத் தொடர்ந்து இத்திட்டம் Pan-African Green Belt network என்ற பெயரில் விரிவாக்கப்பட்டது. அடுத்த மூன்று வருடங்களில் பதினைந்து நாடுகளை சேர்ந்த நாற்பத்தைந்து பிரதிநிதிகள் கென்யாவுக்கு வந்து மாத்தாய் நிகழ்த்திய அதிசயத்தை நேரில் கண்டு, தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் சொன்னார்கள்.
இப்போது கென்யாவில் மட்டுமே மாத்தாயின் இயக்கத்துக்கு சுமார் 600 சமூகக்கிளைகள் உண்டு. சுமார் இருபது நாடுகளில் மூன்று கோடியே பத்து லட்சம் மரங்களை புதியதாக வளர்த்திருக்கிறார்கள். ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள். அவரும், அவருடைய அமைப்பும் இப்பணிக்காக ஏராளமான விருதுகளை குவித்துக் கொண்டேயிருக்கிறார்கள். முத்தாய்ப்பாக 2004ஆம் ஆண்டு கிடைத்த நோபல் பரிசு.

“நாம் நடுவது மரங்களை அல்ல, திட்டங்களை” என்கிறார் மாத்தாய். ‘திட்டம்’ என்ற ஒரு சொல்லுக்கு ஏராளமான பொருள் உண்டு. பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் என்று மாத்தாய் விதைத்த திட்டங்களின் பலனை இன்று ஆப்பிரிக்க நாடுகள் அனுபவித்து வருகின்றன.

அவர் கென்ய அரசியலிலும் ஈடுபட்டு வெற்றிகளையும், தோல்விகளையும் மாறி, மாறி மாறி கண்டு வருகிறார். கென்ய ஜனநாயகத்துக்கு வலிமை சேர்த்துவரும் உரத்த குரல் மாத்தாயினுடையது. இந்திய அரசும் ஜவஹர்லால் நேரு விருது கொடுத்து மாத்தாயை கவுரவித்திருக்கிறது.

பழங்குடியினத்தில் பிறந்த பெண் என்பது மாத்தாய்க்கு ஆரம்பகாலத்தில் பெரிய தடைக்கல்லாக இருந்தது. குடும்பத்திலும், சமூகத்திலும் ஏற்பட்ட பிரச்சினைகளை கண்டு மலைத்துப்போய் உட்கார்ந்துவிடாமல், விடாமுயற்சியோடு அடுத்தடுத்து ஓடிக்கொண்டே இருந்ததால்தான் நோபல் என்னும் உயரத்தை அவர் எட்ட முடிந்தது. பெண்கள் எல்லோருக்குமே மாத்தாயின் வாழ்க்கை கலங்கரை விளக்கம்தான் இல்லையா?

6 கருத்துகள்:

  1. நான் கூட ஏதோ நம்ம மாயாவதி மாதிரி கென்ய நாட்டில் யாரும் இருக்கிறார்களோ என்று நினைத்துவிட்டேன்

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு சகோதரா !!

    உமையில் அவர் ஒரு சிறந்த சுற்று சூலல் ஆர்வலர்

    பதிலளிநீக்கு
  3. யுவ நல்ல பதிவு



    கடவுள்

    செடி
    புதைக்கப்பட்ட விதை

    மரம்
    வயதான செடி

    கூடு
    உடைந்த குச்சிகள்

    காய்
    காணாமல் போன பூ

    புத்தகம்
    வெட்டப்பட்ட மரம்

    ஆம் மரம் கடவுள்

    பதிலளிநீக்கு