1 மார்ச், 2013

பாவமன்னிப்பு?

பிரிட்டிஷ் வரலாற்றிலேயே நடந்த மிக மோசமான சம்பவம் இதுதான். இதைப்பற்றி அப்போதே வின்ஸ்டன் சர்ச்சில் மிகச்சரியாக ‘அசுரத்தனமான செயல்’ என்று கண்டித்திருந்தார். இங்கே நடந்ததை நாம் எப்போதும் மறக்கக்கூடாது. அமைதிப் போராட்டங்களுக்கான உரிமையை பிரிட்டன் எப்போதும் காக்கக்கூடிய நிலைக்கு நாமெல்லாம் உறுதி ஏற்க வேண்டும்.

- ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் வருகையாளர் பதிவேட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரான், பிப். 20, 2013 அன்று எழுதியது... 

“அமிர்தசரஸ் நகரம் அன்று இருந்த நிலையை உணர்ந்த பலர் நான் செய்தது சரியென்று சொல்கிறார்கள். நிறைய பேர் நான் மாபெரும் தவறு இழைத்து விட்டதாகவும் கூறுகிறார்கள். நான் இப்போது சாக விரும்புகிறேன். மேலுலகம் சென்று என்னை படைத்தவனிடம் நான் செய்தது சரியா, தவறா என்று கேட்கப்போகிறேன்” மரணப்படுக்கையில் ஜெனரல் டயர் சொன்ன வாசகம் இது. பாரிசநோய் தாக்கியிருந்ததால் அப்போது பேசுவதற்கே மிகவும் சிரமப்பட்டார். உயிரைவிடும் கடைசி நொடியிலும் கூட அவருக்கு ஜாலியன் வாலாபாக் படுகொலை மட்டும் மறக்கவேயில்லை. 

டயரால் மட்டுமல்ல. ஒரு நூற்றாண்டு ஆகப்போகிறது. இருந்தும் இன்னும் இந்தியர்களால் மறக்க முடியாத, ஜீரணிக்க முடியாத துயர சம்பவம் அது.

முதல் உலகப்போரின் போது சுமார் பண்ணிரெண்டு லட்சம் இந்தியர்களை இராணுவ வீரர்களாகவும், தொழிலாளர்களாகவும் போரில் ஈடுபடுத்தியது பிரிட்டிஷ் அரசு. மனிதவளம் மட்டுமின்றி உணவு, செல்வம் என்று போருக்காக இந்தியாவின் வளங்கள் சுரண்டப்பட்டன. வங்காளத்திலும், பஞ்சாப்பிலும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இந்த அநியாய நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. போரின் முடிவில் 43,000 இந்தியர்கள் பிரிட்டனுக்காக போர்க்களத்தில் உயிரிழந்தார்கள் என்கிற தகவலை சிவில் மக்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இப்படிப்பட்ட கொந்தளிப்பான சூழலில் பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர், தன் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் கூட்டங்கள் போடவோ, போராட்டங்கள் நடத்தவோ தடை விதித்திருந்தார். 

1919, ஏப்ரல் 13. பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வரும் வைசாகி பண்டிகைக்காக அமிர்தசரஸ் நகரின் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் சீக்கியர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் என்று மும்மதத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று சுமார் இருபதாயிரம் பேர் கூடியிருந்தார்கள். மாலை 4.30 மணிக்கு விழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜெனரல் டயர் சுமார் நூறு வீரர்களோடு மைதானத்துக்கு வந்தார். அவர்களில் ஐம்பது பேர் ஆயுதம் தரித்திருந்தார்கள். மெஷின்கன் ஏந்திய இரண்டு வாகனங்களும் வந்தன. ஆனால் மைதானத்துக்குள் நுழையும் பாதை குறுகியதாக இருந்ததால், அவ்வாகனங்கள் உள்ளே நுழைய முடியவில்லை.

மக்களை கலைந்துப்போகச் சொல்லி அவர் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை. பிற்பாடு விசாரணையின் போது இதற்கு அவர் சொன்ன விளக்கம் வேடிக்கையானது. “கூட்டத்தை கலைக்க நான் அங்கே செல்லவில்லை. அவர்களது ஒழுங்கீனத்துக்காக தண்டிக்க மட்டுமே விரும்பினேன்”.

சுடுமாறு வீரர்களுக்கு உத்தரவிட்டார். துப்பாக்கிகள் வெறித்தனமாக பத்து நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக முழங்கிக்கொண்டே இருந்தது. தோட்டாக்கள் தீரும் வரை. மொத்தமாக 1,650 ரவுண்டுகள். முதற்கட்டமாக பெண்களும், குழந்தைகளும் பெருமளவில் உயிரிழந்தனர். எங்கும் மரண ஓலம். சுற்றி வளைக்கப்பட்டு விட்டதால் தப்பிக்க வழியே இல்லை. உயிர்பிழைக்க வழி தெரியாமல் சுற்றுச்சுவரை ஒட்டியிருந்த கிணற்றுக்குள் நிறைய பேர் குதித்தார்கள். துப்பாக்கி குண்டுக்கு தப்பி நெரிசலில் இறந்தவர்களும் கணிசமானவர்கள்.

“துப்பாக்கிக் குண்டுகள் தீர்ந்துவிட்டதால் மட்டுமே என்னால் நடவடிக்கையை தொடரமுடியவில்லை. அவை இன்னும் கூடுதலாக இருந்திருந்தால் தீரும் வரை சுட்டுக்கொண்டே இருந்திருப்பேன்” லண்டனில் நடந்த கமிஷன் விசாரணையில் ஜெனரல் டயர் எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் இச்சம்பவத்தை விவரிக்கும்போது சுற்றியிருந்தவர்கள் அதிர்ந்துப் போனார்கள்.


உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல மாதங்களுக்கு உறுதிப்படுத்தப்படவில்லை. அந்த மரணக் கிணற்றில் இருந்து மட்டுமே 120 உடல்கள் எடுக்கப்பட்டன. பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்திருந்த கண்துடைப்பு விசாரணைக்குழு மொத்தமாக 379 பேர் மட்டுமே மரணித்தார்கள் என்று அநியாயமாக புளுகியது. பிற்பாடு அக்குழுவில் இருந்த ஒருவரே உண்மை எண்ணிக்கை பலமடங்கு அதிகம் என்று ஒப்புக்கொண்டார். 

கூடியிருந்த மக்களின் எண்ணிக்கையும், சுடப்பட்ட ரவுண்டுகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டால் அரசு சொல்லும் எண்ணிக்கை நம்பவே முடியாதது. எனவே இந்திய தேசிய காங்கிரஸ் இப்படுகொலைகளை விசாரிக்க தனியாக ஒரு குழுவை நியமித்தது. 1,500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், தோராயமாக 1,000 பேர் உயிரிழந்ததாகவும் அக்குழு சொன்னது.

இந்திய வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரியளவிலான இந்த படுகொலைகளை மூடிமறைக்க இங்கிருந்த இராணுவ அதிகாரிகள் எவ்வளவோ முயன்றனர். பிரிட்டனுக்கே கூட ஆறு மாதங்கள் கழித்து டிசம்பரில்தான் விஷயம் தெரிந்தது. நம்மூர் தலைவர்களுக்கே கூட உடனடியாக தெரியவில்லை. கல்கத்தாவில் இருந்த தேசியகவி இரபிந்திரநாத் தாகூருக்கு சம்பவம் நடந்து நாற்பது நாள் கழித்து 22 மே, 1919 அன்றுதான் தெரிந்ததாம். உடனடியாக கல்கத்தாவில் இதை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தினார்.

தனது மேலதிகாரியாக பஞ்சாப்பை ஆண்டுக்கொண்டிருந்த கவர்னர் மைக்கேல் ஓ’ட்வையருக்கு, ஜெனரல் டயர் இச்சம்பவம் குறித்த ஒரு அறிக்கையை அளித்திருக்கிறார். அதில் ‘இந்தியர்கள், புரட்சிகர ராணுவத்தை கட்டமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினேன்’ என்று தன் வீரபிரதாபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இவ்விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கவர்னர், ‘நீங்கள் செய்ததுதான் சரி’ என்று ஒப்புக்கொண்டு டயரை பாராட்டியும் இருக்கிறார். பிற்பாடு இருபத்தோரு ஆண்டுகள் கழித்து இச்செயலுக்காக லண்டனில், பஞ்சாபை சேர்ந்த உத்தம்சிங் எனும் வீரனால் சுட்டுக் கொல்லப்பட்டார் ஓ’ட்வையர்.

வின்ஸ்டன் சர்ச்சில், ஹென்றி அஸ்க்வித் போன்ற பிரிட்டன் தலைவர்கள் அப்போதே இப்படுகொலைகளை கடுமையாக கண்டித்தார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. படுகொலைகளை விசாரிக்க பிரிட்டிஷ் அரசு நியமித்த ஹண்டர் கமிஷனால் உருப்படியான நியாயம் இந்தியர்களுக்கு கிடைக்கவில்லை. ஜெனரல் டயர் மட்டும் பணியிலிருந்து ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டார். படுகொலைகளுக்கு காரணமானவர்களுக்கு அரசியல் அழுத்தம் காரணமாக எந்த தண்டனையும் கிடைக்கவில்லை.

ஜாலியன் வாலாபாக் சம்பவம் நடந்து இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரம் கிடைத்தே அறுபத்து ஆறு ஆண்டுகளும் ஆகிவிட்டது. ஆனால் அதற்காக இங்கிலாந்து மன்னிப்பு கேட்குமென்று இந்தியர்கள் இன்றும் எதிர்ப்பார்க்கிறார்கள்.

இங்கிலாந்து ராணி எலிசபெத் சுதந்திரத்துக்குப் பிறகு 1961லும், 1983லும் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். அப்போது ஜாலியன் வாலாபாக் குறித்து எதுவுமே பேசவில்லை. பிறகு 1997ல் வந்தபோது சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மவுன அஞ்சலி செலுத்தினார். “நம் கடந்தகாலத்தில் எவ்வளவோ கசப்பான சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஜாலியன் வாலாபாக் மாதிரி. வரலாற்றை திரும்பவும் மாற்றி எழுத முடியாது. வரலாறு ஏராளமான வருத்தங்களும், ஏராளமான மகிழ்ச்சிகளும் நிறைந்தது. வருத்தங்களை பாடமாக படித்து, எதிர்காலத்தில் மகிழ்ச்சியை கட்டமைக்க கற்றுக்கொள்ள வேண்டும்” என்று முன்னதாக இதைப்பற்றி பேசினார். இது நேரடி மன்னிப்பு இல்லையே என்று அப்போதே இந்தியர்கள் அங்கலாய்த்தார்கள்.

இப்போதும் அதேமாதிரிதான். பிரிட்டனின் பிரதமர் ஒருவர் ஜாலியன் வாலாபாக்குக்கு வருகை புரிந்தது இதுதான் முதல்முறை. வருகை பதிவேட்டில் வருத்தம் தெரிவித்திருக்கிறாரே தவிர, மன்னிப்பு கேட்கவில்லை என்று மீண்டும் குரல்கள் உயரத் தொடங்கியிருக்கின்றன.

எலிசபெத் ராணி மன்னிப்பு கேட்கவில்லை என்று வருத்தம் பரவியபோது, இந்தியப் பிரதமராக இருந்த ஐ.கே.குஜ்ரால் சொன்னதை நாம் நினைவுறுத்திப் பார்ப்போம். “தாம் பிறப்பதற்கு முன்பாகவே நடந்த சம்பவங்களுக்கு, இப்போது இருப்பவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டுமா என்ன?”

(நன்றி : புதிய தலைமுறை)

12 கருத்துகள்:

  1. அருமையான கட்டுரை நிறைய தெரியாத விஷயங்களை உங்கள்மூலம் தெரிந்துக்கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  2. // “தாம் பிறப்பதற்கு முன்பாகவே நடந்த சம்பவங்களுக்கு, இப்போது இருப்பவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டுமா என்ன?” //

    தாம் பிறப்பதற்கு முன்பு கொள்ளை அடித்ததை அனுபவிக்க மட்டும் முடியும், மன்னிப்பு கேட்க முடியாதா??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா11:42 AM, மார்ச் 02, 2013

      இ​தே பதி​லைத்தான் ​சொல்லலாம் என பின்னூட்டத்திற்காக வந்​தேன். யா​ரோ முன்​பே என் மனதில் ​தோன்றிய​தை ​​சொல்லியிருக்கிறார்கள்.

      நீக்கு
  3. ரபிந்த்ரநாத் தாகூருக்கு தெரிந்தது 22 மே, 1919 என்று இருக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  4. யுவா சார்,

    முன்பு பிரிட்டிஷ் அரசியோடு வந்த அவர் கணவர் " ஜெனரல் டையரின் மகன் என்னோடு படித்தான். இறந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவினால் மிகவும் மிகைப் படுத்தப் பட்டது என்று சொன்னான்" என்று பேசி செமையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்! வேறு ஒரு இடத்தில் மாணவர்களிடம் பேசும் போது 'Potato' வுக்கு சரியான ஸ்பெல்லிங் 'Potatoe' என்றும் வேறோர் இடத்தில் " ரொம்ப நாள் சைனாவில் இருந்தால் உங்களுக்கும் இடுங்கிய கண் வந்து விடும்!" என்றும் பேசிய பெருந்தகை இவர்!

    நன்றி!

    சினிமா விரும்பி
    http://cinemavirumbi.blogspot.in

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா3:59 PM, மார்ச் 02, 2013

    ஜாலியன்வாலாபாக்கை விட பலமடங்கு இரக்கமற்ற செயல்களை புரிந்த இலங்கை ராணுவத்திற்காகவும் அதற்கு உறுதுணையாக இருந்த இந்திய அரசுக்காகவும் யார் மன்னிப்பு கேட்பது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளை கண்டிக்காத இந்தியா ஜாலியன்வாலாபாக்கிற்காக பிரிட்டன் மன்னிப்பு கோரும் என எதிர்பார்ப்பது நியாயமா?

    பதிலளிநீக்கு
  6. இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்

    பதிலளிநீக்கு
  7. "தாம் பிறப்பதற்கு முன்பாகவே நடந்த சம்பவங்களுக்கு, இப்போது இருப்பவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டுமா என்ன?"

    இது ஒரு மொண்ணையான வாதம். கேமரான் என்ற தனி மனிதரையோ அவர் நாட்டு மக்களையோ மன்னிப்பு கேட்கச் சொல்லவில்லை. பிரிட்டன் என்ற நாட்டின் பிரதிநிதியாகத்தான் அவர்கள் முன் இந்த கோரிக்கை வைக்கப்படுகிறது. அஹிம்சை வழியில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்த மக்களை சுட்டுத் தள்ளியது எந்த வகையிலும் எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

    அனானிமஸ்- இலங்கைப் படுகொலைகளை முப்பது ஆண்டுகளாக பெருமளவில் நிகழ்த்திய விடுதலைப் புலிகள் சார்பாக யார் மன்னிப்பு கேட்கப் போகிறார்கள் ? இந்தியப் பிரதமரை கொன்றதற்கு மன்னிப்பு கேட்பதற்கு பதில் 'அது ஒரு துன்பியல் சம்பவம்' என்று சொன்ன பிரபாகரனுக்கு வரலாற்றில் என்ன இடம் ? அதையும் சேர்த்து முடிவு செய்வோம். ஆரம்பித்தால் எல்லாவற்றையும் பேச வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. இளமுருகு,

    ராஜீவ்காந்தியை கொன்றது விடுதலைப்புலிகள் தான் என்று யாராலும் நிரூபிக்க முடியவில்லை. ஒரு போட்டோவை வைத்து முடிவு செய்தது சரியில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெய்சங்கர், சரி நீங்கள் சொல்வது போல ஒன்று குறைத்து விடுவோம் - பத்தாயிரம் கொலைகளில் ஒன்று குறைத்தால் என்ன, மனித உயிருக்கு அதே மதிப்பு தானே ?

      நீக்கு