சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7 பிப்ரவரி, 2017

எனக்கு வாய்த்த அடிமைகள்!

முதல்வர் பதவியின் மீது காதலாக இருக்கும் வைகோவுக்கு அந்த கனவு 1996லேயே புட்டுக் கொள்கிறது. எனவே 2016ல் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிக்கிறார்.

தான் தற்கொலை செய்துக் கொள்ளப் போவது குறித்து ஜி.ரா., முத்தரசன் மற்றும் திருமாவளவன் ஆகிய நண்பர்களுக்கு தகவல் அனுப்புகிறார். ஆரம்பத்தில் இந்த விஷயத்தை விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் நண்பர்கள், வைகோவை தற்கொலை முயற்சியில் இருந்து தடுக்க முயற்சிக்கிறார்கள்.

இந்த தடுப்பு முயற்சியில் ஈடுபடும் ஈடுபடும் மூன்று நண்பர்களுமே ஒருக்கட்டத்தில் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோமில் சிக்கி அவர்களும் வைகோவாகவே ஆகிவிடுகிறார்கள். மநகூ என்கிற பெயரிலான கொடிய விஷத்தை அருந்தி தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்று அதிரடி முடிவெடுக்கும்போது, வைகோவுக்கு திடீரென இன்னொரு நண்பரான விஜயகாந்தின் நினைவு வருகிறது. அவரையும் இந்த செத்து செத்து விளையாடும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாமே என்று அவர் சொல்லும் ஆலோசனையை, நண்பர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

‘குகனோடு சேர்ந்து ஐவரானோம்’ கணக்காக தங்கள் மநகூ திட்டத்தை கேநகூவாக மாற்றி ஒட்டுமொத்தமாக கூட்டுத் தற்கொலை செய்துக் கொள்வதே பரபரப்பான இறுதிக்காட்சி. இந்த தற்கொலையை வேடிக்கை பார்க்கவரும் வாசனும் ஒரு வேகத்தில்  விஷப்புட்டியை கல்ப்பாக வாயில் கவிழ்த்துக் கொள்வது எதிர்பாராத திருப்பம்.

கிளைமேக்ஸ் ட்விஸ்ட்டாக மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தோன்றி, “எனக்கு வாய்த்த அடிமைகள் திறமைசாலிகள்” என்று பஞ்ச் டயலாக் அடிக்கும்போது, தற்கொலை செய்துக் கொண்ட அடிமைகள் புளங்காங்கிதப்பட்டு சொர்க்கத்தில் இருந்து தண்டனிடும் காட்சியில் விசில் சப்தம் விண்ணைப் பிளக்கிறது.

ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்டாக அந்த கூட்டுத் தற்கொலையில் வைகோ அருந்தியது விஷமே அல்ல என்பது தெரிய வருவதற்குள்ளாகவே மற்ற அடிமைகளுக்கு உயிர் போய் விடுகிறது. வைகோ பாட்டுக்கும் அருவாளை தூக்கிக் கொண்டு கருவேலமரங்களை வெட்டப்போய் விடுகிறார் என்கிற ஃபீல்குட் எஃபெக்டோடு படம் முடிகிறது.

அம்மாவுக்கு மட்டுமே அடிமைத்தனம் காட்டிவந்த இந்த கலிங்கப்பட்டி கருவேலம், இனி சின்னம்மாவின் அடிமையாகவும் சீறுகொண்டு எழும் என்கிற டைட்டிலுக்கு கீழே Written & Directed by : M.Natarajan, Co-Director : Pazha.Nedumaran என்கிற பெயர்கள் வரும்போதும் ரசிகர்களின் ஆரவாரம் கட்டுக்கடங்காமல் போகிறது.

அடிமைகளின் காமெடி அமர்க்களமாக எடுபட்டிருப்பதால், படம் குறைந்தபட்சம் ஆயிரத்து ஐநூறு கோடியாவது வசூலிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

18 ஜனவரி, 2017

ஒரு கைதியின் டைரி

செப்டம்பர் 22, 1978. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். முதன்முதலாக அவரை திரையில் நடிகராக அவரே கண்ட நாள். அன்றுதான் ‘Pranam Kareedhu’ படம் வெளியானது. அதற்கு முன்பாகவே ‘Punadhirallu’ என்கிற படத்தில் நடித்திருந்தாலும், அது ஓராண்டு தாமதமாகவே வெளியானது.

ஜூன் 10, 1988. சிரஞ்சீவியின் 100வது படமான ‘கைதி நெம்பர் 786’ (தமிழில் ‘அம்மன் கோயில் கிழக்காலே’) வெளியானது. பத்தே ஆண்டுகளுக்குள் நூறு படம் நடித்தவர், அடுத்த ஐம்பது படங்கள் நடிக்க இருபத்தெட்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். யெஸ், இப்போது வெளியாகியிருக்கும் ‘கைதி நெம்பர் 150’தான் அவரது 150வது படம். கடைசியாக அவர் ஹீரோவாக நடித்த ‘சங்கர்தாதா ஜிந்தாபாத்’ வெளியாகி மிகச்சரியாக பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இடையில் தன்னுடைய மகன் ராம்சரண் நடித்த ‘மகதீரா’, ‘ப்ரூஸ்லீ’ படங்களில் கவுரவ வேடங்களில் தோன்றினார்.

சிரஞ்சீவியின் 150வது படத்துக்கு ‘கைதி நெம்பர் 150’ என்று பெயர் வைத்திருப்பதில் ஒரு சுவாரஸ்யமான சென்டிமெண்ட் உண்டு. 100வது படத்திலும் அவர் ‘கைதி’யாக இருந்திருப்பதை கவனியுங்கள். ஆரம்பக் காலங்களில் சிரஞ்சீவிக்கு சிறு சிறு வேடங்கள்தான் கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த வாய்ப்புகளை பெறவே அவர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தார்.

முதல் படமான ‘Pranam Kareedhu’ வாய்ப்புகூட சுதாகருக்கு கிடைத்ததுதான். சுதாகரும், சிரஞ்சீவியும் சென்னை ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட் மாணவர்கள். இருவரும் நெருங்கிய நண்பர்கள். கல்லூரியில் படித்துக் கொண்டே ஒன்றாகவேதான் வாய்ப்பு தேடினார்கள். சுதாகருக்கு தமிழில் பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் ஹீரோவாகவே அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது. எனவே தன்னை நாடிவந்த தெலுங்குப்பட வாய்ப்புகளுக்கு சிரஞ்சீவியை சிபாரிசு செய்தார்.

1955ல் மொகல்தூரு என்று ஆந்திர வரைப்படத்தில் கூட இடம்பிடிக்க முடியாத அந்தஸ்தில் இருக்கும் சிறு கிராமத்தில் பிறந்தவர் சிரஞ்சீவி. அவருடைய இயற்பெயர் சிவசங்கர வரபிரசாத். அப்பா, அரசுப்பணியில் இருந்தார்.

பள்ளிப் பருவத்திலிருந்தே இவருக்கு ‘சென்டர் ஆஃப் அட்ராக்‌ஷன்’ ஆக இருக்க விருப்பம். நாலு பேருக்கு மத்தியில் தான் பளிச்சென்று தெரியவேண்டும், தன்னைப் பற்றி அனைவரும் பேசவேண்டும் என்பதற்காகவே எங்கு பாட்டுச் சப்தம் கேட்டாலும் டேன்ஸ் ஆட ஆரம்பித்தார்.

அப்போது வெளிவந்திருந்த ‘கேரவன்’ இந்திப்படத்தில் ஹெலன் ஐட்டம் டான்ஸ் ஆடியிருந்த ‘Piya tu ab to Aaja’ பாடல் மிகவும் பிரபலம். இந்தப் பாடலை பார்ப்பதற்காகவே திரும்பத் திரும்ப தியேட்டருக்கு போவாராம். ஹெலன்தான் சிரஞ்சீவிக்கு டான்ஸ் குரு. இந்தப் பாடல் ரேடியோவில் எங்கு ஒலிபரப்பானாலும், அந்த இடத்தில் அப்படியே ஆட ஆரம்பித்து விடுவாராம். பிற்பாடு படங்களில் சிரஞ்சீவியின் நடனம் சிறப்பாக இருக்கிறது என்று யாராவது பாராட்டினால், சிரித்துக்கொண்டே ‘ஹெலனுக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும்’ என்பார். முறைப்படி அவர் நடனம் கற்றுக்கொண்டதில்லை.

‘நடனம் ஆடத் தெரிகிறது, நடிப்பை கற்றுக் கொண்டால் சினிமாவுக்கு போய்விடலாம்’ என்று நண்பர்கள் சொல்லவே, சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்கு வந்து சேர்ந்தார். இங்கே அவருக்கு கல்லூரி முதல்வராக இருந்தவர் ஒய்.ஜி.பார்த்தசாரதி (ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா). படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே தெலுங்குப் படங்களில் சிறிய வேடங்கள் கிடைத்தது. கல்லூரி முதல்வர் அனுமதிக்க, வரிசையாக நடித்துத் தள்ளிக்கொண்டிருந்தார்.

அதிர்ஷ்ட தேவதை ஆரம்பத்திலேயே சிரஞ்சீவியை ஆசிர்வதித்திருக்க வேண்டும். ஏனெனில், அவர் நடித்த முதல் படத்தின் பிரிவ்யூ காட்சியை தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநர் பாபு, நம்முடைய இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் போன்றோர் பார்த்தார்கள். “இந்தப் பையனோட கண்ணு ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கு” என்பதுதான் பாலச்சந்தர், சிரஞ்சீவி பற்றி அடித்த முதல் கமெண்ட். தங்கள் படங்களில் வாய்ப்பு இருக்கும்போதெல்லாம் இருவரும் சிரஞ்சீவிக்கு சொல்லி அனுப்பினார்கள். ‘அவர்கள்’ படத்தை தெலுங்கில் ‘இதி கதை காது’ என்று பாலச்சந்தர் எடுத்தபோது, தமிழில் ரஜினி செய்திருந்த வேடத்தை சிரஞ்சீவிக்கு கொடுத்தார். கமல்தான் அங்கும் ஹீரோ.

சிறிய கதாபாத்திரங்களும், வில்லன் வேடங்களுமே சிரஞ்சீவிக்கு தொடர்ச்சியாக கிடைத்துக் கொண்டிருந்தன. பாலச்சந்தர் இயக்கிய ‘47 Rojulu’ (தமிழில் ‘47 நாட்கள்’ என்று ரிலீஸ் ஆனது) சிரஞ்சீவியின் நடிப்புத் திறனை முழுமையாக வெளிக்கொண்டு வந்தது. இந்தப் படத்தில் அவர் ஆண்ட்டி ஹீரோவாக நடித்திருந்தார். தமிழிலும் ‘காளி’, ‘ராணுவவீரன்’ போன்ற ரஜினி படங்களில் வில்லத்தனமான வேடங்களில் நடித்தார். தன்னுடைய ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட் ஜூனியர் என்பதால், இவரை வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் பயன்படுத்துவதை ரஜினி விரும்பினார்.

செகண்ட் ஹீரோ, வில்லன் என்று நடித்துக் கொண்டிருந்தாலும் சிரஞ்சீவியின் ஆக்ரோஷமான நடிப்பு, தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக, இவர் இளைஞராக இருந்தார் என்பது அவர்களுக்கு ஆகப்பெரிய ஆறுதலாக அமைந்தது. ஏனெனில், எண்பதுகளின் தொடக்கத்தில் ஐம்பதை தாண்டிய தெலுங்கு ஹீரோக்களே அளவுக்கதிகமான மேக்கப்பில் கல்லூரி மாணவர்களாக நடித்துக் கொண்டிருந்தார்கள். இளமையான செழுமையான ஹீரோயின்களோடு கலர் கலராக அவர்கள் டூயட் பாட, படம் பார்க்கும் ரசிகர்கள் ஆற்றாமையால் மாய்ந்துப் போனார்கள். இந்தக் கொடுமையில் சிக்கி சீரழிந்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஆபத்பாண்டவனாக சிரஞ்சீவி தெரிந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

சிறு பட்ஜெட் படத் தயாரிப்பாளர்களுக்கு சிரஞ்சீவியை ஹீரோவாக போட்டு படம் எடுப்பது வசதியாக இருந்தது. முதலுக்கு மோசமில்லை என்பதையும் தாண்டி கணிசமான லாபத்தை பார்த்தார்கள் என்றே சொல்ல வேண்டும். இந்த அமாவாசைக்கு ஒரு தொகையை அங்கே இங்கே வாங்கி பூஜையை போட்டு விட்டால், அடுத்த அமாவாசைக்கு படம் ரிலீஸ். சிரஞ்சீவியால், ஒரே மாதத்தில் கையில் லம்பாக பணம் புரண்டது தயாரிப்பாளர்களுக்கு.

இப்படியே போய்க்கொண்டிருந்த சிரஞ்சீவியின் கேரியரில் 1983ஆம் ஆண்டு அடித்தது செம ஜாக்பாட்.
யெஸ், அவரது நடிப்பில் ‘கைதி’ என்கிற படம் சூப்பர்ஹிட் ஆகி சிரஞ்சீவியை முன்னணி நட்சத்திரமாக மாற்றியது. இத்தனைக்கும் அரதப்பழசான பண்ணையாரை எதிர்க்கும் கிராமத்து இளைஞன் கதைதான். ஆக்‌ஷன், சென்டிமெண்ட், ரொமான்ஸ், டான்ஸ் என்று அத்தனை ஏரியாக்களிலும் சிரஞ்சீவி பட்டையைக் கிளப்ப, தெலுங்கின் மாஸ்டர்பீஸ் படங்களின் பட்டியலில் இணைந்தது ‘கைதி’.

அந்த ‘கைதி’க்கு நன்றி செலுத்தும் விதமாகதான் தன்னுடைய நூறாவது படம், நூற்றி ஐம்பதாவது படத்தின் டைட்டில்களில் எல்லாம் ‘கைதி’யை கொண்டுவருகிறார்.

சினிமா குடும்பங்களின் ஆதிக்கம் மிகுந்த தெலுங்கு சினிமாவை, எவ்வித சினிமாப் பின்னணியுமில்லாத எளிய குடும்பத்தில் பிறந்த சிரஞ்சீவி கைப்பற்றி செய்த சாதனைகள் யாரும் நம்ப முடியாதவை. குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு வெளியுலகத்தை காட்டியவர் இவர்தான். ‘டபுக்கு டபான் டான்ஸு’ என்று தெலுங்குப்பட நடனக் காட்சிகள் கிண்டலடிக்கப் பட்டுக் கொண்டிருந்த நிலையை மாற்றிக் காட்டிய பெருமை இவரையே சாரும்.

பழைய பண்ணையார் கதைகளை அழித்தொழித்து, ப்ரெஷ்ஷான கதைக்களன்களை அறிமுகப்படுத்தினார். ஸ்டுடியோவுக்குள் முடங்கிக் கிடந்த தெலுங்கு சினிமாவை, விதவிதமான லொக்கேஷன்களுக்கு அழைத்துச் சென்று சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்தார். வில்லன் மூன்று அடிகள் அடித்தபிறகு, ஹீரோவுக்கு மூக்கில் ரத்தம் வந்தபின்புதான் திருப்பி அடிக்க வேண்டும் என்கிற ஆதிகாலத்து ஸ்டண்ட் கந்தாயங்களை கடாசி எறிந்து, ஆக்‌ஷன் என்றால் எப்படியிருக்க வேண்டும் என்று ஸ்க்ரீனில் ரணகளமாக்கி காட்டினார்.

இதற்காக சிரஞ்சீவி கமர்ஷியல் ஏரியாவில் மட்டுமேதான் காண்சன்ட்ரேட் செய்தார் என்று முடிவெடுத்து விடாதீர்கள். ஆந்திர அரசின் நந்தி விருதுகள், மத்திய அரசின் தேசிய விருதுகளையும் அவரது படங்கள் குவிக்கத் தவறவில்லை. தமிழில் கமர்ஷியலுக்கு ரஜினி, கலையம்சத்துக்கு கமல் என்று பாகம் பிரித்துக் கொண்டு சினிமாவை முன்னேற்றினார்கள். அதே காலக்கட்டத்தில் தெலுங்கிலோ இரண்டு சுமைகளையுமே சிரஞ்சீவி சேர்த்து சுமந்தார். இந்தியிலும் சில படங்கள் நடித்தார். தமிழில் அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த ‘ஜெண்டில்மேன்’ படத்தின் இந்திப் பதிப்பில் சிரஞ்சீவிதான் ஹீரோ.

‘கைதி’யில் அவருக்கு கிடைத்த நட்சத்திர அந்தஸ்துக்குப் பிறகு, திரும்பிப் பார்க்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தார். அடுத்த இருபது ஆண்டுகள், மெகாஸ்டாரின் ஆட்சிதான் ஆந்திராவில். அவரது படங்கள் வெற்றி பெறும் போதெல்லாம் அடக்கமாக இருப்பார். தோல்வி அடையும் போதெல்லாம் வீறுகொண்டு எழுவார்.

1991ல் சிரஞ்சீவியின் ‘கேங் லீடர்’, தெலுங்கு சினிமாவின் அத்தனை வசூல் சாதனைகளையும் உடைத்தது. உடனடியாக அவரது ‘கரண மொகுடு’ (தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘மன்னன்’ படத்தின் ரீமேக்), ‘கேங் லீடர்’ படைத்த சாதனைகளை முறியடித்து, தெலுங்கு சினிமாவின் முதல் பத்து கோடி ரூபாய் வசூல் திரைப்படமாக அமைந்தது. அப்போதெல்லாம் சிரஞ்சீவி படைக்கும் சாதனைகளை சிரஞ்சீவியேதான் உடைப்பார்.

சிரஞ்சீவியின் சாதனைகளுக்கு எல்லாம் சிகரமாக அமைந்தது 1992-ல் கே.விஸ்வநாத் இயக்கத்தில் ‘ஆபத் பாண்டவடு’ படத்துக்காக அவர் வாங்கிய சம்பளம். ஒண்ணேகால் கோடி. இந்தியாவிலேயே, ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை எட்டிய முதல் நடிகர் சிரஞ்சீவிதான். அப்போது, இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனே எழுபத்தைந்து லட்சமோ என்னவோதான் வாங்கிக் கொண்டிருந்தார். அவ்வகையில் இன்று கோடிகளை குவிக்கும் எல்லா மொழி ஹீரோக்களுமே சிரஞ்சீவிக்குதான் நன்றிக்கடன் பட்டவர்கள்.

தொண்ணூறுகளின் மத்தியில் தெலுங்கு சினிமாவில் புதுரத்தம் பாய்ச்சப்பட்டது. புதிய இயக்குநர்கள், இளம் நடிகர்கள் வரவு அதிகமாக இருந்த அந்த காலக்கட்டத்தில் சிரஞ்சிவி ஃபார்முலா படங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. தன்னுடைய வழக்கமான ஃபைட்டர் தன்மையை வெளிப்படுத்தி ‘ஹிட்லர்’ (1997) மூலமாக மீண்டும் மெகாஸ்டார் இமேஜை தக்கவைத்தார். சிரஞ்சிவீயின் ‘இந்திரா’ (2002), தெலுங்கு சினிமாவின் முதல் முப்பது கோடி வசூல் படமாக அமைந்தது. நம்மூர் ‘ரமணா’வை ‘டாகூர்’ என்று ரீமேக் செய்து, பிளாக்பஸ்டர் ஹிட் என்றால் எப்படியிருக்க வேண்டும் என்று தன்னுடைய அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு எடுத்துக் காட்டினார். இரண்டாயிரங்களின் மத்தியில் சில சறுக்கல்கள், சில சாதனைகள் என்று கலந்துகட்டி அவரது கேரியர் அமைந்தாலும், ‘மெகா ஸ்டார்’ இமேஜ் உச்சத்தில் இருந்தபோதே படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்.
பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மெகாஸ்டாரை முழுநீள ஹீரோவாக ‘கைதி நெம்பர் 150’ படத்தில் தரிசிக்கப் போகிறார்கள் அவரது ரசிகர்கள். சிரஞ்சீவியின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி தெலுங்கு சினிமாத் துறைக்கே இது கொண்டாட்டமான சங்கராந்தி. படத்தைப் பற்றி நாம் எதுவும் புதுசாக சொல்ல வேண்டியதில்லை. நம்ம விஜய் நடித்த ‘கத்தி’யின் தெலுங்கு ரீமேக். இவரது உடம்பில் ரத்தம் ஓடுகிறதா, மசாலா ஓடுகிறதா என்று ரசிகர்கள் சந்தேகிக்கும் வண்ணம் கரம் மசாலா ஹிட்டுகளை கசாப்புக் கடை பாய் மாதிரி போட்டுத் தள்ளும் வி.வி.விநாயக்தான் இயக்குநர். நம்ம ‘கத்தி’ அங்கே மேலும் கூர்மைப் படுத்தப்படும் என்று உறுதியாகவே நம்பலாம்.

சினிமா குடும்பப் பின்னணி கொண்ட வாரிசுகள்தான் வெல்ல முடியும் என்கிற நிலைமையை மாற்றியமைத்தவர் அல்லவா? எனவேதான் சிரஞ்சீவியின் வெற்றியை எப்போதும் எல்லோரும் விரும்புகிறார்கள். அதை சாமானியனின் வெற்றியாக கொண்டாடுகிறார்கள்.

ஒரு சுவையான முரண் என்னவென்றால், எந்த கலாச்சாரத்தை எதிர்த்து நின்று சினிமாவில் சிரஞ்சீவி வென்றாரோ, இப்போது அவரது குடும்பமும் அதையேதான் செய்துக் கொண்டிருக்கிறது. சிரஞ்சீவியின் அடுத்த தலைமுறையில் உருவாகிய இளம் நடிகர்கள்தான் இப்போது தெலுங்கு சினிமாவின் சரிபாதியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்குமான இந்த முரண்தான், பார்வையாளர்களாக நம் வாழ்வின் ஆகப்பெரிய சுவாரஸ்யமே.

(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)

23 நவம்பர், 2016

சத்ரியன் மறைந்தார்!

இந்த தலைமுறையினரில் எத்தனை பேருக்கு இந்த இயக்குநரை தெரியுமென்று தெரியவில்லை. எண்பதுகளின் குழந்தைகளான எங்களுக்கு கே.சுபாஷ், மிகப்பெரிய இயக்குநர்.

அந்த காலக்கட்டத்தில் ரஜினி - கமல் இருவரையுமோ, இருவரில் ஒருவரையுமோ இயக்காமல் தமிழில் முன்னணி இயக்குநராக கோலோச்சியவர் அனேகமாக இவர்தான்.  இருப்பினும் தொண்ணூறுகளில் திரையுலகப் படிக்கட்டுகளில் அடுத்தடுத்த நிலையில் இருந்தவர்களான விஜயகாந்த், சத்யராஜ், பிரபு ஆகியோரின் மனம் கவர்ந்த இயக்குநராக இவர் இருந்தார். பி.வாசுவுக்கு இணையான செல்வாக்கு சுபாஷுக்கும் ஒரு காலத்தில் இருந்தது.

‘நாயகன்’ படத்தின் வெற்றிக்கு கமல்ஹாசனின் நடிப்பும், மணிரத்னத்தின் இயக்கமும்தான் காரணமென்று அத்தனை பேரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கமலுக்கும், மணிரத்னத்துக்கும்தான் தெரியும், சுபாஷின் உழைப்பு அப்படத்தின் வெற்றிக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தது என்று. ‘நாயகன்’ காலத்தில் மணிரத்னத்தின் வலதுகையாக சுபாஷ் இருந்தார். எனவேதான், தனியாக படம் இயக்கப் போய் திணறிக் கொண்டிருந்தபோது, தன்னுடைய தயாரிப்பில் ‘சத்ரியன்’ இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்தார் மணிரத்னம்.

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு ஜோடியில் கிருஷ்ணனின் மகனாக பிறந்தவர் சுபாஷ். ஆனால், தன்னுடைய சினிமா சிபாரிசுக்காக எந்நாளும் அவர் தன்னுடைய தந்தை பெயரை பயன்படுத்தியதே இல்லை.

சுபாஷின் முதல் முயற்சியான ‘கலியுகம்’, புரட்சிகரமான கதையை கொண்டதாக இருந்தாலும் போதிய வெற்றி பெறவில்லை. ஆனால், இவரது இயக்கத்தில் பிரபு கம்ஃபர்ட்டபிளாக உணர்ந்தார். எனவே அடுத்து அவர் நடித்த காமெடிப் படமான ‘உத்தம புருஷன்’ படத்தின் இயக்குநர் வாய்ப்பும் சுபாஷையே தேடிவந்தது. இந்தப் படம் கமர்ஷியலாக நன்றாக போக, தமிழ் சினிமாவின் வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவராக சுபாஷ் தடம் பதித்தார்.

1990 தீபாவளிதான் சுபாஷின் தலை தீபாவளி எனலாம். கமலின் ‘மைக்கேல் மதன காமராஜன்’, ராமராஜனின் ‘புதுப்பாட்டு’ (தயாரிப்பு : இளையராஜா), மனோபாலா இயக்கத்தில் சத்யராஜின் ‘மல்லுவேட்டி மைனர்’, பாக்யராஜின் ‘அவசர போலிஸ் 100’ என்று பலத்த போட்டிகளுக்கு மத்தியில் விஜயகாந்த் நடிப்பில் இவர் இயக்கிய ‘சத்ரியன்’ வெளிவந்து வெற்றி கண்டது. அதுவரையில் தமிழ் சினிமாவில் வெளிவந்த cop movies வகையில் அதுவே தலைசிறந்தது என்று பெயரெடுத்தது.

‘சத்ரியன்’ திரைப்படம், தமிழ் சினிமாவில் போலிஸுக்கு என்று புது இலக்கணமும் படைத்தது. இரண்டே பாட்டு, ஒரு நச் ப்ளாஷ்பேக், விறுவிறுப்பான திரைக்கதை, நறுக்கென்ற வசனங்கள் என ‘சத்ரியன்’ ஒரு டிரெண்ட் செட்டர். பிற்பாடு ஷங்கர் போன்ற பெரிய இயக்குநர்களின் கதை சொல்லும் பாணியில் ‘சத்ரியன்’ தாக்கம் கூடுதலாகவே இருந்தது. தொண்ணூறுகளின் தொடக்க நியூவேவ் மூவியாக, அடுத்த சில ஆண்டுகள் தமிழ் சினிமாவின் போக்கை தொழில்நுட்பரீதியில் தீர்மானிக்கக் கூடியதாக அப்படம் அமைந்தது. ‘பழைய பன்னீர் செல்வமா வரணும்’ என்கிற திலகனின் குரல் இருபத்தாறு ஆண்டுகள் ஆகியும் யார் காதிலாவது இன்னமும் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.

ஆங்கிலப் படங்கள் பாணியில் அவர் எடுத்த த்ரில்லரான ‘ஆயுள் கைதி’ வசூலில் சோடை போனாலும், அடுத்த தீபாவளிக்கு அவர் கொடுத்த ‘பிரம்மா’ பிளாக் பஸ்டர் ஹிட். இந்த தீபாவளிதான் பிரசித்தி பெற்ற தளபதி –- குணா மோதிய பிரபலமான தீபாவளி. ரஜினி, கமல் படங்களை பல ஏரியாக்களில் ‘பிரம்மா’ அசால்டாக தோற்கடித்தது. ‘செக்ஸ் கொஞ்சம் தூக்கல்’ என்கிற விமர்சனத்தையும் பெற்றது. ‘பிரம்மா’ ஜோடியான அதே சத்யராஜ் - பானுப்ரியாவை வைத்து அவர் இயக்கிய ‘பங்காளி’, சுபாஷுக்கு பின்னடைவாக அமைந்தது. எனினும் இன்றுவரை தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ‘சைதை தமிழரசி தாக்கப்பட்டாரா?’ என்கிற வசனம் இடம்பெற்ற படம் அதுதான்.

‘பங்காளி’க்குப் பிறகு சுபாஷின் திரையுலக வாழ்க்கையில் பெரும் தேக்கம். அப்போது அறிமுகமாகியிருந்த அஜித்தை வைத்து அடுத்தடுத்து ‘பவித்ரா’, ‘நேசம்’ படங்களை இயக்கினார். அவை எதிர்ப்பார்த்த வெற்றியை எட்டவில்லை. பார்த்திபனை வைத்து அவர் எடுத்த ‘அபிமன்யூ’ பரபரப்பாக வசூலித்து மீண்டும் சுபாஷை லைம்லைட்டுக்கு கொண்டுவந்தது. இதன் பிறகு தரை லோக்கலுக்கு இறங்கி பிரபுதேவாவை வைத்து ‘நினைவிருக்கும் வரை’, ‘ஏழையின் சிரிப்பில்’ படங்களை வெறும் வசூலை மட்டுமே மனதில் நிறுத்தி இயக்கி வென்றார்.

பார்த்திபனை மீண்டும் அவர் இயக்கிய ‘சபாஷ்’, பழைய சுபாஷை மீண்டும் கொண்டுவந்தது. எனினும் வணிகரீதியாக சரியாக போகவில்லை. கிட்டத்தட்ட இந்தப் படத்தோடு சுபாஷின் தமிழ் திரையுலக வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக கருதலாம். அதன் பின்னர் பிரபுதேவா சகோதரர்களை வைத்து அவர் எடுத்த ‘ஒன் டூ த்ரீ’, டிசாஸ்டர் ஆகவே அமைந்தது.
எனினும் இந்தியில் வெற்றிகரமான கதையாசிரியராக அவர் கடைசி பத்தாண்டுகளாக இருந்தார். ஷாருக்கானின் வசூல் சரித்திர சாதனைப் படமான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்துக்கு கதை எழுதியது இவர்தான். ‘எண்டெர்டெயின்மெண்ட்’, ‘தில்வாலே’, ‘ஹவுஸ்ஃபுல்-3’ என்று இந்தியிலும் வெற்றிக்கொடி நாட்ட சுபாஷ் தவறவில்லை.

இன்று ‘தல’ அஜீத், ஷூட்டிங்கில் எல்லோருக்கும் பிரியாணி சமைத்துப் போடுவது பிரபலமான செய்தியாக, ஆர்வமாக வாசிக்கப்படுவதாக ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. அஜீத்துக்கு ‘பவித்ரா’ படம் எடுத்த காலத்தில் பிரியாணி உட்பட விதவிதமான அசைவ உணவு வகைகளை சமைக்க கற்றுக் கொடுத்தவர் இதே கே.சுபாஷ்தான். அறிமுகக் காலத்தில் சினிமாவில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த அஜீத்துக்கு கே.சுபாஷின் அலுவலகம்தான் வேடந்தாங்கலாக இருந்தது. ஓய்வாக இருக்கும்போது சுபாஷை பில்லியனில் அமரவைத்து சென்னை முழுக்க அதிவேகமாக பைக் ஓட்டி குஷிப்படுத்துவாராம் அஜித்.

தொண்ணூறுகளின் சினிமா ரசிகர்களுக்கு தாங்க முடியாத இழப்பு, சுபாஷின் திடீர் மரணம்.

9 நவம்பர், 2016

தெறிக்குது இளமை!

‘கீழ் மேல்’ கோட்பாடுதான் மலையாளிகளின் ஒரே கலை செயல்பாடு என்று இன்னும் நாம் நம்பிக் கொண்டிருந்தால் நம்மைவிட பெரிய முட்டாள்கள் யாருமில்லை. மலையாளிகள் என்றாலே கதகளி, வேட்டி, சேச்சி, மூக்கால் பேசும் முக்காத் தமிழ் என்கிற காலமெல்லாம் மலையேறி மாமாங்கமாகி விட்டது. மிக தைரியமாக ஹோமோசெக்ஸ் த்ரில்லர் எடுக்கிறார்கள். குறிப்பாக வினீத் சீனிவாசனின் வரவுக்குப் பிறகு மலையாளத் திரையுலகில் புதிய அலை சுனாமி வேகத்தில் கரைகடந்து வீசிக்கொண்டிருக்கிறது.

‘1983’, ‘ஒரு வடக்கன் செல்ஃபீ’, ‘தட்டத்தின் மறயத்து’, ‘மும்பை போலிஸ்’, ‘பிரேமம்’, ‘பெங்களூர் டேஸ்’, ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘டயமண்ட் நெக்லஸ்’, ‘டிராஃபிக்’, ‘ஷட்டர்’, ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’, ‘த்ரிஷ்யம்’ என்று சமீப வருடங்களில் வேறெந்த திரையுலகிலும் வராத அளவுக்கு வகை வகையான கதைகளிலும், களங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறது மாலிவுட்.

இந்த புதிய அலை ஜோதியில் லேட்டஸ்ட் வரவு ‘ஆனந்தம்’.

முற்றாக புதுமுகங்களோடு களமிறங்கியிருக்கும் இயக்குநர் கணேஷ்ராஜுக்கும் இதுதான் முதல் படம். வினீத் சீனிவாசனிடம் உதவியாளராக இருந்தவர், அதே வினீத் சீனிவாசனுக்கு கதை சொல்லி அவரையே தயாரிக்க வைத்திருக்கிறார். என்ன கதை சொல்லி கன்வின்ஸ் செய்திருப்பார் என்பதுதான் சஸ்பென்ஸாக இருக்கிறது. ஏனெனில் ‘ஆனந்தம்’ படத்தில் கதையென்று எதையும் குறிப்பாக சுட்டிக்காட்ட முடியவில்லை. தமிழில் எண்பதுகளின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட ‘பன்னீர் புஷ்பங்கள்’ வகையறா கதைதான்.

காட்சிக்கு காட்சி திரையின் ஒவ்வொரு பிக்ஸெலிலும் தெறிக்கும் இளமைதான் ‘ஆனந்தம்’. படம் பார்க்கும் கல்லூரி மாணவர்கள், தங்களையே கண்ணாடியில் காண்பதாக உணர்வார்கள். முப்பது ப்ளஸ்ஸை எட்டிய அரைகிழங்கள், தங்களின் இருபதுகளை நினைத்து ஏங்குவார்கள். புத்திசாலித்தனமான திரைக்கதை யுக்தியோ, வலுவான காட்சியமைப்புகளோ இல்லாமலேயே ‘ஆனந்தம்’, ஒரு ‘ஆட்டோகிராப்’பை சாதித்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் குறைந்தபட்சம் ஒரு ‘ஆனந்தம்’ –- அதாவது கள்ளமில்லாத ஒரு சிரிப்பு - என்று மட்டும் திட்டமிட்டுப் பார்த்துக் கொண்டதுதான் இயக்குநரின் சிறப்பு. சின்ன சின்ன உரசல்கள், கேலி, கிண்டல், சீண்டல், ஜாலி, நட்பு, காதல், ஜொள்ளு, லொள்ளு என்று ஒவ்வொரு உணர்வையும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து, சரிவிகிதத்தில் கலந்து பரிமாறியிருக்கிறார் கணேஷ்ராஜ். சேர்மானம் சரியாக அமைந்துவிட்டதால் ஆனந்தத்தின் சுவை அபாரம்.

என்ஜினியரிங் படிக்கும் கல்லூரி மாணவர்கள் ‘இண்டஸ்ட்ரியல் விசிட்’ அடிக்கிறார்கள். மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் எப்படியோ பிரின்சிபலை தாஜா செய்து, இந்த விசிட்டில் கோவாவையும் சேர்த்துவிடுகிறார். புதுவருடம் அன்று வகுப்பு மாணவர்கள் அத்தனை பேரும் கோவாவில் பார்ட்டி கொண்டாடுவதுதான் திட்டம். கொச்சியிலிருந்து ஹம்பிக்கு போய், அங்கிருந்து கோவா என்று மாணவர்களின் நான்கு நாள்தான் ‘ஆனந்தம்’.

இந்த நான்கு நாட்கள் அவர்களில் சிலருக்கு எதிர்கால வாழ்க்கை குறித்த தெளிவினை ஏற்படுத்துகிறது. உம்மணாம் மூஞ்சி புரொபஸர் ஒருவர், எப்போதும் புன்னகையை மட்டுமே முகத்தில் ஏந்தியிருக்கும் சக புரொபஸரின் மீது காதலில் விழுந்து கல்யாணம் செய்துக் கொள்ள முடிவெடுக்கிறார். பப்பி லவ் முறிந்த ஒருவன், காதல் இல்லையென்றாலும் அப்பெண்ணோடு நட்பை தொடரமுடியும் என்று உணர்கிறான். இன்னொருவனோ தன்னுடைய உள்ளத்தை தான் விரும்பும் பெண்ணிடம் திறந்துகாட்டி அவளது காதலை வெல்கிறான். தான் தானாக இருக்கக்கூடிய சுயவெளிப்பாட்டின் சுதந்திரத்தை இன்னொருவன் அறிகிறான். தான் நேசிக்கக்கூடியவனை அவனை அவனுடைய தனித்துவத்தோடு மதிக்க ஒருத்தி கற்றுக் கொள்கிறாள். தன்னுடைய பெற்றோரின் மணமுறிவினை முதிர்ச்சியோடு ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பான்மைக்கு மற்றொருத்தி வருகிறாள். இப்படியாக அந்த வகுப்பிலிருக்கும் பலரின் வாழ்க்கையை அந்த நான்கு நாட்கள் முற்றிலுமாக மாற்றுகிறது. கூட்டமாக இருப்பதின் சவுகரியத்தை அனைவருமே உணர்கிறார்கள். பொதுவாக இதுமாதிரி ஜானரில் படமெடுப்பவர்களுக்கு கை கொஞ்சம் துறுதுறுக்கும். லேசாக செக்ஸ் சேர்த்தால் ஜம்மென்று இருக்குமே என்று தோன்றும் (நம்ம ஊர் செல்வராகவன் நாசமா போனதே இதனால்தான்). ஆனால், கணேஷ்ராஜோ படத்தில் சின்ன கிளிவேஜ் கூட இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். ஆங்காங்கே ‘நேவல்’ தெரியதான் செய்கிறது. ஆனால், காமமாக கண்ணுக்கு எதுவும் உறுத்தவில்லை.

தெலுங்கில் இயக்குநர் சேகர் கம்முலா எடுக்கும் ‘ஹேப்பி டேஸ்’, ‘லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல்’ போன்ற ‘ஃபீல்குட்’ மூவிகளின் தாக்கம் சற்றே அதிகமாக இருந்தாலும், கணேஷ்ராஜின் அசால்டான ஜஸ்ட் லைக் தட் ஸ்டைல் இயக்கம்தான் ‘ஆனந்தம்’ படத்தினை ரசிகர்களை காதலிக்க வைக்கிறது. சேகர் கம்முலாவுக்கு ரசிகனை இரண்டு காட்சியிலாவது அழவைத்து பார்த்துவிட வேண்டும் என்பது லட்சியமாக இருக்கும். கணேஷ்ராஜோ, எவ்வளவு சீரியஸான சீனுக்கு லீட் இருந்தாலும், அதையும் எப்படி காமெடியாக்கலாம் என்பதே கவலையாக இருந்திருக்கிறது. சின்ன சந்து கிடைத்தாலும் அதில் fun வந்தாக வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்திருக்கிறார்.
படத்தின் இடைவேளையிலும், இறுதியிலும் வரும் இரண்டு காட்சிகள் அபாரமானவை.

தான் இன்னமும் காதலை தெரிவிக்காத பெண்ணின் அருகாமை யதேச்சையாக அவனுக்கு கிடைக்கிறது. ஆசை தீர அந்த பிரைவஸியை அனுபவிக்கிறான் (நோ வல்கர், பேசிப்பேசி தன்னை புரியவைத்து அவளை புரிந்துக்கொள்கிறான்). அவளுக்கு எதை கண்டாலும் பயம் என்பதை அறிகிறான். இவன் சொல்கிறான்.

“எனக்கும் சின்ன வயசுலே இருட்டுன்னா பயம். கரெண்ட் கட் ஆனதுமே ரொம்ப பயப்படுவேன். என்னோட அப்பாதான் அப்போ நட்சத்திரங்களை காண்பிச்சார். கண்ணுக்கு தெரியாத இருட்டை நினைச்சு பயந்துக் கிட்டிருக்கிறதைவிட, கண்ணுக்கு தெரியற மகிழ்ச்சியை அனுபவிக்க கத்துக்கோடான்னு சொன்னாரு”

சின்ன டயலாக்தான். கேட்கும்போது சட்டென்று ஒரு ஜென் கவிதை மாதிரி ஏதோ திறப்பை மனசுக்குள் ஏற்படுத்துகிறது இல்லையா? இந்த காட்சியில் கேமிரா நிலவுக்குச் செல்கிறது. அருகில் நட்சத்திரங்கள். இடைவேளை. வாவ்!

இதே போல கிளைமேக்ஸுக்கு முன்பாக ஒரு வசனம். இத்தனை மாணவர்களையும் மேய்த்து நல்லபடியாக திரும்ப ஊருக்கு கொண்டுபோய் சேர்க்கும் பொறுப்புணர்வில் மிக ஜாக்கிரதையாக இருக்கிறான் அவர்களது ஒருங்கிணைப்பாளர். காலேஜில் இருந்து கிளம்பியதிலிருந்து ஒவ்வொரு விஷயத்தையுமே அவன் பார்த்து பார்த்து செய்துக் கொண்டிருப்பதை, அவர்கள் வந்த பேருந்தின் ஓட்டுநர் கவனித்துக் கொண்டே இருக்கிறார். டூரின் கடைசி நாளன்று, பேருந்து ஓட்டுநரிடம் வந்து ஊர் திரும்புவது பற்றி ஏதோ பேச ஆரம்பிக்கிறான். அவர் சொல்கிறார்.

“மவனே! உனக்கு ஒண்ணு சொல்றேன். எப்பவும் பொறுப்பை தலையிலே சுமந்துக்கிட்டு அலையாதே. பொறுப்பு எங்கேயும் போயிடாது. அது எப்பவும் நம்மளுக்கு இருந்துக்கிட்டேதான் இருக்கும். அதுக்குண்ணு உன் வயசுக்குரிய ஆனந்தத்தை இழந்துடாதே. இன்னும் கொஞ்ச நாளில் நரை விழுந்துடும். தொப்பை வந்துடும். அப்பவும் பொறுப்பு இருக்கும். ஆனா, இளமை இருக்காது. போ.. உன் பிரெண்டுங்களோட லைஃபை என்ஜாய் பண்ணு”

இவ்வளவுதான் படமே.

படம் பற்றி வேறென்ன சொல்வது? நடிகர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். கேமிராமேன் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் திறமையாக இயக்கியிருக்கிறார். இப்படியே க்ளிஷிவாகதான் எதையாவது சொல்லிக் கொண்டு போகவேண்டும். படம் பாருங்கள். ஆனந்தமாக இருங்கள். அவ்ளோதான் சொல்லமுடியும்.

6 அக்டோபர், 2016

க.கா.விலிருந்து தொடரி வரை!

 தன்னுடைய உயரத்தை அவர் உணரவில்லையா, அல்லது அவரைப் போன்றவர்களை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லையா என்று சொல்லத் தெரியவில்லை.

இயக்குநர் ஷங்கருக்கு உரிய potential இவருக்கும் உண்டு.

ஆனால்-

ஷங்கருக்கு கிடைத்த வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.

தனக்கு வாய்த்த space குறைவுதான் என்றாலும், அதை முடிந்தவரை நிறைவாகவே செய்ய முயற்சிப்பார். அவரது படங்கள் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். ஆனால், அழகியலில் எந்த குறையும் இருக்காது.

பிரபு சாலமன்.

இயக்குநராகி பதினெட்டு ஆண்டுகள் ஆகிறது. இன்னமும் அவருடைய கேரியர் ‘பரமபதம்’தான். பெரிய ஏணியில் ஏறிய அதே வேகத்தில் பெரிய பாம்பினை பிடித்து இறங்கிவிடுகிறார்.

நல்ல இயக்குநர்களுக்கு ஓர் இலக்கணமுண்டு. கதை, திரைக்கதை உள்ளிட்ட content கந்தாயங்கள், படப்பிடிப்பு உள்ளிட்ட திரைப்பணிகளுக்கு 50 சதவிகித உழைப்பை செலுத்தி, மீதியிருக்கும் 50 சதவிகிதத்தை எடிட்டிங் டேபிளுக்கு அர்ப்பணிப்பார்கள். அப்படிப்பட்ட எடிட்டிங் டேபிளின் மகத்துவத்தை தமிழ் சினிமாவில் முதன்முதலாக உணர்ந்தவர் எம்.ஜி.ஆர்.

இன்றைய தலைமுறை இயக்குநர்கள் பலரும் கதை விவாதங்களிலும், படப்பிடிப்புத் தளங்களிலும் தங்கள் முழு ஆற்றலையும் விரயமாக்கிவிட்டு அவசர அவசரமாக எடிட்டிங்கை முடித்து, ‘பண்ண வரைக்கும் போதும்’ என்று படத்தை வெளியிட்டு ரசிகர்களை தாலியறுக்கிறார்கள்.

பிரபுசாலமனின் படங்கள் பெரும்பாலும் எடிட்டிங் டேபிளில்தான் அதன் நிஜமான வடிவத்தை எட்டுகின்றன. இதில் கடைசியாக அவர் வெளியிட்ட ‘தொடரி’யில்தான் கொஞ்சம் பிசிறு தட்டுகிறது. மற்றபடி அவர் இயக்கிய படங்களில் தேவையற்ற காட்சிகளோ, செலவு செய்து எடுத்து விட்டோமே என்று துருத்திக் கொண்டு தெரியும் ஷாட்டுகளோ இருக்காது.

சினிமாவில் இயங்கவேண்டும் என்பதுதான் பிரபு சாலமனின் கனவு. அனேகமாக அவர் நடிகராக விரும்பிதான் சென்னைக்கு வந்திருப்பார் என்று தோன்றுகிறது. சரத்குமாருக்கு ‘டூப்’ போட்டிருக்கிறார். அந்தப் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்த சுந்தர்.சி-யின் நட்புதான் பிரபு சாலமனை இயக்கம் பக்கமாக செலுத்தியிருக்க வேண்டும்.

சுந்தர்.சி இயக்கிய முதல் படம் ‘முறை மாமன்’. அதில் உதவி இயக்குநராக பிரபு சாலமன் பணியாற்றினார். அடுத்து அன்பாலயா பிலிம்சுக்காக ‘முறை மாப்பிள்ளை’ (அருண் விஜய் அறிமுகமான படம்) படத்திலும் பிரபு சாலமன், சுந்தர்.சி-க்காக வேலை பார்த்தார். இந்தப் படம் முடியும் கட்டத்தில் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் முட்டிக் கொள்ள படம் அந்தரத்தில் தொங்கியது. கோபத்துடன் சுந்தர்.சி வெளியேறி ‘உள்ளத்தை அள்ளித்தா’ எடுக்க ஆரம்பித்து விட்டார். பிரபு சாலமனே அன்பாலயா பிரபாகரனுக்கு கைகொடுத்து எடிட்டிங் - ரீரெக்கார்டிங் உள்ளிட்ட வேலைகளை ஒருங்கிணைத்து ‘முறை மாப்பிள்ளை’ வெளிவர உதவினார். அதற்கு நன்றிக்கடனாக பிரபு சாலமனை இயக்குநராக்குவதாக அன்பாலயா பிரபாகரன் உறுதி கூறினார்.

‘ஆஹா’ படம் ஹிட்டாகி அதில் ரகுவரன் - பானுப்ரியா ஜோடிப் பொருத்தம் ரசிகர்களை கவர்ந்திருந்த நேரம். ரகுவரனை வில்லத்தனமான ஹீரோவாக்கி, அவருக்கு பானுப்ரியாவை ஹீரோயினாக்கி ஒரு கதை எழுதி தயாராக வைத்திருந்தார் பிரபு சாலமன். ஆனால், அன்பாலயா பிரபாகரனுக்கோ மாஸ் ஹீரோவை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றுதான் ஆசை. ஷங்கரின் ‘முதல்வன்’ செய்துக் கொண்டிருந்த அர்ஜூனை வைத்து, இதே கதையை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார். ‘Casting ஒத்துவராது சார்’ என்று பிரபு சாலமன் சொன்னதை அவர் கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் அர்ஜூனை வைத்தே ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ எடுத்தார். அர்ஜூன் பெரிய ஹீரோ என்பதால், பானுப்ரியா நடிக்க வேண்டிய பாத்திரத்தில் அப்போது இந்தியில் முன்னணி நடிகையாக இருந்த சோனாலி பிந்த்ரேவை புக் செய்தார்கள். படம் நன்றாக இருந்தும்கூட ‘முதல்வன்’ அர்ஜூனின் இமேஜே, இந்தப் படத்தை தோல்வியடையச் செய்தது. வைஜயந்தி மாலாவின் மகன் இந்தப் படத்தில் செகண்ட் ஹீரோவாக அறிமுகமானார். அவருடைய திரைவாழ்க்கையும் செல்ஃப் எடுக்கவில்லை. தயாரிப்பாளரான அன்பாலயா பிரபாகரனின் காலமும் முடிவுக்கு வந்தது. பிரபு சாலமனுக்கும் அடுத்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘பாரதி கண்ணம்மா’ படத்தின் கன்னட உரிமையை ராக்லைன் வெங்கடேஷ் பெற்றிருந்தார். அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு பிரபு சாலமனுக்கு கிடைத்தது. அங்கும் இதே casting பிரச்சினை. ‘பார்த்திபன் நடித்த வேடத்துக்கு ரவிச்சந்திரன் பொருந்த மாட்டார்’ என்கிற இவரின் ஆட்சேபணையை, ஓவர்ரூல்ட் செய்தார் தயாரிப்பாளர். படம் ஃப்ளாப்.

‘சேது’ படத்தின் போதே விக்ரமுக்கும், பிரபு சாலமனுக்கும் நட்பு மலர்ந்திருந்தது. அதன் விளைவாக பிரபு சாலமனுக்கு படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் விக்ரம். முந்தைய இரு படங்களையும் ஏ.கே.பிரபு என்கிற பெயரில் இயக்கியவர், தன்னுடைய பெயரை ஏ.கே.சாலமன் என்று மாற்றிக் கொண்டு இந்தப் படத்தை இயக்கினார். விக்ரமுக்கு, பிரபு சாலமன் வேறு கதைகளை சொல்ல, அவர் குறிப்பாக அப்பா - மகன் சென்டிமெண்ட் கதையிலேயே பிடிவாதமாக இருந்தார். ‘இந்த கதைக்கு உங்கள் வயது அதிகம்’ என்கிற சாலமனின் அட்வைஸ் எடுபடவில்லை. வழக்கம்போல தன் பாத்திரத்துக்கு பொருத்தமில்லா ஹீரோ என்கிற சாபக்கேட்டுக்கு ஆளானார் சாலமன். போதாக்குறைக்கு விக்ரமுக்கு ஏற்பட்டிருந்த கமர்ஷியல் ‘ஜெமினி’ இமேஜ், அடுத்தடுத்து பாலாஜி சக்திவேலின் ‘சாமுராய்’, சாலமனின் ‘கிங்’ என்று இரண்டு படங்களையும் தோற்கடித்தது.

முதல் மூன்று படங்களுமே படுதோல்வி அடைந்தபிறகு, ஓர் இயக்குநர் மேலெழுவது என்பது கிட்டத்தட்ட இன்று சாத்தியமே இல்லாத ஒன்று. பிரபு சாலமன் தினமும் ஒரு தயாரிப்பாளரையாவது சந்தித்து ஒன்லைன் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு பெரிய ஹீரோவின் கால்ஷீட்டை வைத்திருந்த தயாரிப்பாளரிடம் கதை சொல்லப் போனார். “கதையெல்லாம் கிடக்கட்டும். உன் ஜாதகத்தைக் கொடு. ஹீரோவுக்கு மேட்ச் ஆச்சின்னா, நீதான் டைரக்டர்”. இவருக்கு ஆச்சரியமாக இருந்தது. நாம என்ன ஹீரோவையா கல்யாணம் பண்ணிக்கப் போறோம் என்று மனசுக்குள் நினைத்தவர், “என்னோட திறமைதான் சார் என் ஜாதகம்” என்று சொல்லிவிட்டு திரும்பிவிட்டார்.

ஆனால், அந்த சந்திப்பு வீண் போகவில்லை. அந்த ‘ஜாதக’ மேட்டரையே கதையாக்கினார். ஹீரோவின் ஜாதகம் வில்லனுக்கு பொருந்தித் தொலைக்கிறது. கிட்டத்தட்ட தன் மனைவி மாதிரி எப்போதும் ஹீரோ கூடவே இருக்க வேண்டும் என்று வில்லன் எதிர்ப்பார்க்கிறான். ஹீரோ மறுக்க, பிரச்சினை ஆகிறது என்று ‘கொக்கி’ போட்டு ‘கொக்கி’ கதையை எழுதினார். இம்முறை casting பிரச்சினையே வந்துவிடக்கூடாது என்று தெளிவாக இருந்தார். தன் பாத்திரத்துக்குதான் நடிகரே தவிர, நடிகருக்காக பாத்திரமல்ல என்று காத்திருந்தார். இவரை போலவே காத்திருப்பில் இருந்த கரணுக்கு ‘கொக்கி’ செட் ஆனது. முதன்முறையாக பிரபு சாலமன் என்கிற பெயரில் இயக்கிய பிரபு சாலமனுக்கு ஒருவகையில் இதுதான் முதல் படம் எனலாம். தான் யார், தன்னுடைய திறமை என்ன என்பதையெல்லாம் இந்தப் படத்தில்தான் உணர்ந்தார் அவர். படம் ஹிட்.

ஒரு மாதிரியாக தன்னுடைய ரூட்டை பிடித்துவிட்டவர் அடுத்து சத்யராஜின் மகன் சிபிராஜுக்காக ‘லீ’ செய்தார். அதுவரை நடிப்பில் வெற்றியே அறியாத சிபிராஜுக்கு முதன்முதலாக பேசப்பட்ட படமாக இது அமைந்தது.

அடுத்தது ‘லாடம்’. தயாரிப்புத் தரப்பில் ஏற்பட்ட சில குழப்பங்களின் காரணமாக ஓர் இயக்குநர் எந்தளவுக்கு தன்னை காம்ப்ரமைஸ் செய்துக் கொண்டாக வேண்டியிருக்கிறது என்பதை பிரபு சாலமனுக்கு உணர்த்திய படம் இது. அவர் எழுதிய கதையில் ஹீரோயினே இல்லை. ஆனால்- படம் வெளியாகும்போது அதில் சார்மி ஹீரோயின். டெக்னிக்கலாக தான் விரும்பியதையெல்லாம் இந்தப் படத்தில் பரிசோதித்துப் பார்த்துக் கொள்ள முடிந்ததோடு, தன்னுடைய அடுத்தப் படத்துக்கான ஹீரோவையும் இதில் கண்டறிந்தார் என்பதே பிரபு சாலமனுக்கு ஒரே லாபம். யெஸ். விதார்த், இந்தப் படத்தில் துணை நடிகராக வில்லனின் அல்லக்கைகளில் ஒருவராக நடித்திருந்தார்.

இனிமேல் தானே தயாரிப்பாளராக ஆகிவிடுவது ஒன்றே, தன்னுடைய படைப்புகளை தான் நினைத்த மாதிரியாக கொடுப்பதற்கான ஒரே வழி என்றுணர்ந்தார்.

இந்த காலக்கட்டத்தில் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அருகிலிருந்த டீக்கடையில் பார்த்த ஒரு காட்சி அவரை உலுக்கிக் கொண்டே இருந்தது. போலிஸ்காரர் ஒருவரும், அவரது கையோடு சங்கிலியால் பிணைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரும் ஒன்றாக அமர்ந்து டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த காட்சி, பிரபு சாலமனை தொடர்ச்சியாக தொல்லைக் கொடுத்துக் கொண்டே இருந்தது. நல்ல நாள், கெட்ட நாள் இல்லாமல் எப்போதும் குற்றவாளிகளோடே வாழ்க்கையை கழிக்க வேண்டிய நிலையில் இருக்கும் போலிஸ்காரர், சிறு குற்றத்துக்காக சிறை, கோர்ட் என்று அலைக்கழிக்கப்பட்ட குடும்பம், குழந்தை, குட்டிகளை பிரிந்து அவஸ்தைப்பட வேண்டிய நிலையிலிருக்கும் குற்றவாளி என்கிற இரு துருவங்களுக்கு பின்னாலிருந்த கதைகளை யோசிக்க ஆரம்பித்தார். ‘மைனா’ உருவானது.
பயணங்களின் காதலரான பிரபுசாலமனின் படங்களில் லொகேஷன்கள் அதுவரை சினிமாக்களில் இடம்பெறாதவையாக ப்ரெஷ்ஷாக இருக்கும். ‘மைனா’வில்தான் அது பளீரென்று தெரிந்தது. குரங்கணி, இன்று எல்லா சினிமாக்காரர்களுக்குமே ஃபேவரைட் லொகேஷனாக இருக்கிறதென்றால், அதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் பிரபு சாலமன்.

இந்தப் படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட, படத்தின் ரேஞ்ச் எங்கேயோ போனது. போதாக்குறைக்கு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல் பேசிய பேச்சு, ரசிகர்களிடம் படம் குறித்த எதிர்ப்பார்ப்பை எகிறவைத்தது. கமலுக்கு முன்பாக உதயநிதி பேசும்போது, “இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் என்னை உறங்கவிடாமல் செய்துவிட்டது” என்றார். அப்பேச்சை குறிப்பிட்ட கமல், “நான் இன்றுதான் படத்தை பார்த்தேன். நிம்மதியாக உறங்குவேன். நல்ல படம் பார்த்தால் மட்டுமே எனக்கு நிம்மதியான உறக்கம் கிடைக்கிறது” என்றார். பாராட்டுவதில் கமலின் கஞ்சத்தனம் ஊரறிந்தது. அவரே பிரபு சாலமனின் ‘மைனா’வை பாராட்டியதால் 2010 தீபாவளிக்கு வெளியான ‘மைனா’, கருப்புக் குதிரையாக ஓடி தனுஷின் ‘உத்தம புத்திரன்’, ‘தமிழ்ப்படம்’ கொடுத்த தெம்பில் இருந்த சிவாவின் ‘வ – குவார்ட்டர் கட்டிங்’, அர்ஜூனின் ‘வல்லக்கோட்டை’ படங்களை ஜெயித்தது.

‘மைனா’வுக்கு பிறகு விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளை ஆனார் பிரபு சாலமன். ‘கும்கி’யின் வெற்றியைப் பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை. சுனாமியின் பத்தாம் ஆண்டை நினைவுகூறும் வகையில் வெளிவந்த ‘கயல்’, வணிகரீதியாக வெற்றியடையவில்லை என்றாலும், விமர்சனப் பூர்வமாக நல்ல படமென்று பெயரெடுத்தது. கடைசியாக ‘தொடரி’.

பிரபு சாலமன் படங்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் கிண்டலான விமர்சனங்கள் நிறைய உண்டு. ஆங்கிலம், கொரியன் உள்ளிட்ட படங்களை உல்டா அடிக்கிறார் என்று எல்லாம் தெரிந்தவர்கள் ஸ்டேட்டஸ் போடுகிறார்கள். ‘தொடரி’ வரை இது தொடர்கிறது.

தனக்குப் பிடித்த படங்களின் கருவை எடுத்துக் கொண்டு, அதை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் அவர் மாற்றித் தருகிறார் என்பதில் குற்றம் சாட்ட என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. ‘காட்ஃபாதர்’ எப்படி ‘நாயகன்’ படத்துக்கு இன்ஸ்பிரேஷனோ அதுபோன்ற செயல்பாடுதான் இது. ‘கும்கி’யை ஜப்பானியர்கள் பார்த்தால், அதை ‘செவன் சாமுராய்’ என்று கண்டுபிடிப்பார்களா என்பதே சந்தேகம்தான். அவர் குறித்த ஒவ்வாமை இணையத்தில் அதிகமாக இருப்பதற்கு அவரது மதமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றுதான் யூகிக்க வேண்டியிருக்கிறது.

ஒரு இயக்குநராக தொழில்நுட்பரீதியில் தமிழ் சினிமாவுக்கு அவர் அளித்திருக்கும் பங்களிப்புகளை வைத்தே அவரை எடை போட வேண்டும். இன்று ‘மேக்கிங் பின்னிட்டான்’ என்று பொள்ளாச்சியில் கூட படம் பார்ப்பவன் உச்சரிக்கிறானே, இந்த ‘மேக்கிங்’ போக்கினை பத்து ஆண்டுகளுக்கு முன்பாக ‘கொக்கி’ என்கிற குறைந்த பட்ஜெட் படத்தில் சாத்தியப்படுத்தி காட்டியவர் பிரபு சாலமன். போஸ்ட் புரொடக்‌ஷனில் இன்று இளம் இயக்குநர்கள் ஆர்வம் செலுத்தத் தொடங்கியிருப்பதற்கு பிரபு சாலமனும் காரணமாக இருந்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.
‘கும்கி’ படத்தின் இன்விடேஷன் இண்டஸ்ட்ரியையே உலுக்கியது. அல்ட்ரா மாடர்ன் யூத் ஆன விக்ரம்பிரபுவை யானை பாகன் கேரக்டருக்கு பிரபு சாலமன் தேர்ந்தெடுத்தபோது கிண்டலடித்தவர்கள் எல்லாம் வாயடைத்துப் போனார்கள். ஒரு பெரிய ஹீரோ, பிரபு சாலமனிடம் ஆதங்கமாகவே கேட்டாராம். “ஏன் பிரபு, நான் இந்த யானை மேலே உட்கார்ந்தா நல்லா இருக்காதா?” இவர் அமைதியாக பதில் சொல்லியிருக்கிறார் “சாரி சார். இது உங்க கப் ஆஃப் டீ கிடையாது”. தொடக்கக் காலத்தில் தவறான பாத்திரத் தேர்வுகள் கொடுத்த கசப்பான அனுபவங்களை பிரபு சாலமன் மறக்கவே இல்லை. அதனால்தான் நட்சத்திரங்களுக்கு கதை பண்ணாமல், தன் கதைக்கான முகங்களை அவர் தேடிக்கொண்டே இருக்கிறார்.

பிரபுசாலமனை நம்பி பெரிய முதலீடு போடக்கூடிய தயாரிப்பாளர் கிடைத்தால் அவரும் இந்தியாவே அசரும்படியான ஒரு படத்தைக் கொடுக்கக்கூடிய திறமை கொண்டவர்தான். ஆனால், காம்ப்ரமைஸ் செய்துக் கொள்ள விரும்பாத இயக்குநரை எந்த தயாரிப்பாளரும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் விரும்புவதில்லையே?

8 ஜூன், 2016

இறைவி

டைட்டிலே பெருமழை சத்தத்தோடுதான் தொடங்குகிறது.

இன்னும் எத்தனை ஆண்டுகளோ கழித்து நடைபெறவிருக்கும் கல்யாணம் குறித்து கனவு காணும் ஓர் இறைவி, மறுநாளே கல்யாணம் செய்துக்கொள்ளப் போகும் ஓர் இறைவி, கல்யாணம் முடிந்து கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்ந்து முடித்த ஓர் இறைவி.

அந்த மழைநாளில் இந்த இறைவிகளின் அப்போதைய மனநிலைதான் படத்தின் தொடக்கம். படம் முழுக்கவே பாத்திரங்களின் உணர்வுபூர்வமான எழுச்சியிலோ, வீழ்ச்சியிலோ சாட்சியாக ஜோவென மழை கொட்டுகிறது.

படத்தில் விஜய்சேதுபதி, “என்ன கான்செப்ட்?” என்று கேட்கிறார். ‘மழையில் நனைய விரும்பும் இறைவிகள்’ என்பதுதான் கான்செப்ட். இறுதியில் ஒரே ஒரு இறைவிதான் நனைகிறார் என்பதோடு படம் முடிகிறது.

பாலுமகேந்திரா, பாலச்சந்தர், சுஜாதா மூவருக்கும் tribute செய்யப்பட்டு படம் தொடங்குகிறது. நியாயமாகப் பார்க்கப் போனால் இந்தப் பட்டியலில் மணிரத்னத்தையும், ஆனந்தவிகடன் ஆசிரியர் ரா.கண்ணனையும் கூட சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும். ‘மவுன ராகம்’ ரேவதிக்குப் பிறகு மழையை அதிகம் காதலிப்பவர்கள் இவர்கள்தான்.

இறைவிகளின் கதையாக மட்டும் ‘இறைவி’ இருந்திருக்கலாம். கான்செப்டை மீறி இறைவன்களின் திருவிளையாடலாக மாறிவிட்டதுதான் ‘இறைவி’யின் சோகம்.

‘கோவலன் அல்ல கேவலன்’ என்கிற பாபிசிம்ஹாவின் கோபம் ஒருவகையில் நியாயமே. ‘வயிற்றுக்குள் இருக்கும் குட்டியை ஓர் ஓரமாக வைத்துவிட்டு, புதுக்குட்டியை எப்படி பிரசவிக்க முடியும்?’ என்கிற எஸ்.ஜே.சூர்யாவின் லாஜிக்கும் சரிதான். படைப்பாளியின் வலியை இன்னொரு படைப்பாளியாக புரிந்துக் கொள்ளும் சிற்பியான ராதாரவியின் பாத்திர வார்ப்பும் அருமை. வைப்பாட்டி மீதிருந்த ஆசையும், மோகமும் அற்றுப்போக மனைவியை நாடிவந்து வாழ விரும்பும் நேரத்தில் எல்லாம் ஏதோ பிரச்சினைகளால் பிரிய நேரும் விஜய் சேதுபதியின் பரிதவிப்பும் உணரக்கூடியதுதான்.

எல்லாம் இருந்தும் ‘இறைவி’யை ஏன் வழிபட முடியவில்லை என்றால் படத்தின் மையத்துக்கு தொடர்பில்லாமல் அலைபாயும் காட்சிகளாக தயாரிப்பாளரின் ஈகோ, சிலை கடத்தல் என்று திரைக்கதை கோட்டை தாண்டி ஓடிக்கொண்டே இருப்பதால்தான்.

நெடில் ஆண்கள், குறில் பெண்களை கொடுமைப் படுத்துகிறார்கள் என்கிற பிரசங்கமெல்லாம் சரிதான். உண்மைதான். ஆனால், ஆண்கள் அவ்வளவுதானா?

இருபத்து நான்கு வயதில் தன் தலையை தவிர அத்தனையையும் அடகு வைத்து தங்கைக்கு திருமணம் செய்துவைத்த ஆணை எனக்குத் தெரியும். மனைவி உடல்நலிவுற்ற காலத்தில் urine pan பிடித்தவனையும் தெரியும். வாங்கும் சம்பளத்தை அப்படியே கவர் பிரிக்காமல் அம்மாவிடம் கொடுத்து, அம்மா கொடுக்கும் காசில் தன் செலவுகளை சுருக்கிக் கொள்பவனையும் தெரியும். எலாஸ்டிக் போன ஜட்டியை அரைஞாண்கயிறின் உதவியால் அட்ஜஸ்ட் செய்து மாட்டிக்கொண்டு, குழந்தைகளுக்கு பர்த்டே டிரெஸ்ஸை ஆடம்பரமாக எடுக்கும் ஆண்களை கார்த்திக் சுப்புராஜ் அறியமாட்டாரா என்ன?

அறிவார். ஆனால், பெண்ணியம்தான் இப்போது பேஷன். அது நிஜமான பெண்ணியமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் அவசியமில்லை. பெண்ணியம் மாதிரி ‘போலச் செய்துவிட்டால்’ போதும். ‘கல்யாணமெல்லாம் வேணாம், just fuck me’ என்று பூஜா திவாரியா, விஜய் சேதுபதியை கூப்பிட்டு கூடும்போது சத்யம் சினிமாஸில் ஐடி ரசிகர்கள் விசில் அடித்து ஆர்ப்பரிக்கிறார்கள். போதாதா?

‘வித்தியாச விரும்பி’ என்று நாலுபேர் புகழ்ந்து, அப்படியொரு பெயரெடுத்து தொலைத்து விட்டதாலேயே, இயல்பாக இருக்க முடியாமல் சொந்த வாழ்க்கையிலும் கூட ஏதாவது வித்தியாசமாக இருந்துத் தொலைக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆட்பட்டு மெண்டல் ஆகிப் போனவர்கள் சினிமாவிலும், இலக்கியத்திலும் ஏராளம்.

சினிமாவை சினிமா என்று சினிமாக்காரர்கள் அழைத்துக் கொண்டிருந்த போதெல்லாம் தயாரிப்பாளரில் தொடங்கி தியேட்டர் வாசலில் கடலை விற்றுக் கொண்டிருந்தவர்கள் வரை சந்தோஷமாகதான் இருந்தார்கள். ‘படைப்பு’, ‘படைப்பாளி’ என்று எப்போது கெத்து கூட்ட ஆரம்பித்தார்களோ, அன்று பிடித்தது ஏழரை நாட்டு சனி. இன்றுவரை தொடர்கிறது.

இறுதிக்காட்சியில் பாபிசிம்ஹாவை விஜய்சேதுபதி கொல்கிறார். விஜய்சேதிபதியை எஸ்.ஜே.சூர்யா கொல்கிறார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே ரசிகர்களை கொன்றுவிட்டார்.

‘இறைவி’ முடிந்ததும் நல்ல மழையில் நனைந்தேன். ஆண்கள், நனைய விரும்புவதுமில்லை. மழையில் நனைய அச்சப்படுவதுமில்லை.

12 மே, 2016

யமுடிக்கு மொகுடு டூ சுப்ரீம்

எனக்கு ஒரு பெரியப்பா இருக்கிறார். குட்டியும், புட்டியுமாக குஜாலாக இருந்தவர் என்பதால் கல்யாணம் காட்சியில் எல்லாம் ஆர்வமில்லாமல் மைனர் குஞ்சாக மடிப்பாக்கத்தில் சுற்றிக் கொண்டிருந்தார். நடுத்தர வயதை எட்டும் பருவத்தில் திடீரென ஞானோதயம் வந்து நெல்லூருக்கு போய் ஏதோ கம்பெனியில் செட்டில் ஆகி வடுக வந்தேறியாக மாறிவிட்டார். அங்கேயே கல்யாணம் செய்து (வடுக கலாச்சாரத்தின் படி ரெண்டு ஒய்ஃப் என்று கேள்வி) பிள்ளைகள் பெற்று சவுக்கியமாக வாழ்ந்து வந்தார்.

வருடத்துக்கு ஒருமுறை குடும்பத்தோடு சென்னைக்கு வருவார். விஜிபி கோல்டன் பீச், கிண்டி பார்க், மெரீனா பீச், சுற்றுலாப் பொருட்காட்சி, எம்.ஜி.ஆர் - அண்ணா சமாதியை எல்லாம் சடங்கு மாதிரி சுற்றிப் பார்த்துவிட்டு கிளம்புவார். வரும்போது கையோடு ஏகத்துக்கும் ஆடியோ கேசட்டுகளை அள்ளிக் கொண்டு வருவார். பெரும்பாலும் சிரஞ்சீவி படப்பாடல்கள்தான். பெரியப்பாவின் குழந்தைகள் இருவரும் புத்தி தெரியும்வரையை சிரஞ்சீவியை தங்கள் தாய்மாமன் என்றே நம்பிக் கொண்டிருந்தார்கள்.

‘தொங்க மொகுடு’, ‘த்ரினேத்ருடு’, ‘கைதி நம்பர் 786’, ‘யமுடிக்கி மொகுடு’, ‘அத்தக்கி யமுடு அம்மாய்க்கி மொகுடு’, ‘கேங்க் லீடர்’, ‘முட்டா மேஸ்திரி’, ‘ஜெகதீக வீருடு அதிலோக சுந்தரி’, ‘கர்ணா மொகுடு’, ‘கொண்டவீட்டி தொங்கா’ என்று தெலுங்குப் படங்களின் அறிமுகம் அப்போதுதான் கிடைத்தது. மொழி புரிகிறதோ இல்லையோ. துள்ளலான பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு படத்தின் கதையையும் அவர்கள் திரைக்கதை, வசனத்தோடு இரண்டரை மணி நேரத்துக்கு ஒரு ஃப்ரேமை கூட மிஸ் செய்யாமல் சொல்வார்கள். சிரஞ்சீவிப் படமென்றால் ஒன்றுக்கு மூன்று முறை பார்ப்பார்களாம். ‘கேங் லீடர்’, ஆந்திராவில் தினசரி ஏழு காட்சிகளாக (விடியற்காலை காட்சி மட்டும் கிடையாது) நூறு நாள் ஓடிய தியேட்டர்கள் ஏராளம்.

டிவியில் போடும் தெலுங்குப் படங்கள் பெரும்பாலும் அழுது வடிந்துக் கொண்டிருந்தது அல்லது என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ் டைப் கிழட்டுப் படங்கள். பெரும் சிறப்புகள் வாய்ந்த சமகால சிரஞ்சீவியின் தெலுங்குப் படங்களை நம்மால் பார்த்து ரசிக்க முடியவில்லையே என்கிற என்னுடைய ஏக்கத்தை ரங்கா தியேட்டர் தீர்த்து வைத்தது. சனி, ஞாயிறு காலை காட்சிகளாக வாரந்தோறும் ஏதேனும் புதுப்படங்களை போட்டு குஷிப்படுத்த ஆரம்பித்தார்கள்.

அம்மாதிரி ஒருமுறை பார்த்த படம்தான் ‘யமுடிக்கு மொகுடு’. ‘எமனுக்கே புருஷன்’ என்பது மாதிரி ஏடாகூடமான மீனிங். நம்மூர் ‘அதிசயப்பிறவி’தான் அங்கே ‘யமுடிக்கு மொகுடு’. இதை பார்ப்பதற்கு முன்பே ‘அதிசயப்பிறவி’யை பார்த்துவிட்டேன் என்றாலும், ‘யமுடிக்கு மொகுடு’ ரொம்பவே கவர்ந்தது. காரணம், பாடல்களும், சிரஞ்சீவியின் அதிரடியான நடனமும். குறிப்பாக ராதாவோடு அவர் ஆடும் இந்த ஆட்டம் அபாரம். ‘அந்தம் இந்தோளம் ஆதாரம் தாம்பூலம்’ என்கிற இந்தப் பாட்டு முழுக்க சுப்ரீம் ஸ்டார் சிரஞ்சீவிக்கு செம பில்டப்பு. ‘அதிசயப்பிறவி’யிலும் இந்த சிச்சுவேஷனுக்கு ‘சிங்காரி பியாரி பியாரி’ என்று செம சாங்க். ‘அந்தநிதி அந்தாலநிதி அந்தகினி சந்தேலகதி’ என்கிற வரிகள் வரும்போது தியேட்டரே அலறும் (இந்த வரிகளின் மீனிங் ஏதாவது டபுளா?)
ராஜ் - கோட்டி என்று இரட்டை இசையமைப்பாளர்கள்தான் அப்போது நிறைய தெலுங்குப் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார்கள். இளையராஜா அவர்களுக்கு கொஞ்சம் காஸ்ட்லியாக இருந்திருக்க வேண்டும். ஏ.ஆர்.ரகுமான் நீண்டகாலம் ராஜ் - கோட்டிகளிடம்தான் கீபோர்ட் வாசித்துக் கொண்டிருந்தார். ‘யமுடிக்கு மொகுடு’, ராஜ்-கோட்டி கைவண்ணம்தான்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் ‘யமுடிக்கு மொகுடு’ பாடல்கள் தெலுங்கு பேசும் ஊர்களில் எல்லாம் தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த வாரம் வெளியான ‘சுப்ரீம்’ படத்தில் மீண்டும் ரீமிக்ஸில் ஒலிக்கும்போதும், ‘அந்தம் இந்தோளம்’ பாட்டுக்கு அந்த காலத்தில் கிடைத்த அதே வரவேற்பு இப்போதும் தியேட்டரில் கிடைக்கிறது. ‘சுப்ரீம்’ படத்தின் ஹீரோ சாய்தரம்தேஜ். சிரஞ்சீவியின் தங்கை மகன். இவரது முந்தையப் படமான ‘சுப்ரமணியம் ஃபார் சேல்’ படத்திலும் ‘குவ்வா கோரிங் கதோ’ என்று ‘கைதி நம்பர் 786’ படத்தின் பாடலை ரீமிக்ஸ் அடித்து ஆடியிருந்தார். தான் நடிக்கும் எல்லாப் படத்திலும் தாய்மாமன் சிரஞ்சீவியின் பாடல் ஒன்றை ரீமிக்ஸ் செய்து ஆடியே தீருவேன் என்று அடம் பிடிக்கிறாராம் சாய்.
‘சுப்ரீம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் திரையில் இந்தப் பாடலை போட்டுக் காட்ட விழாவுக்கு வந்திருந்த சினிமாக்காரர்களே விசிலடித்து டான்ஸ் ஆட ஆரம்பித்து விட்டார்களாம். படம் சூப்பர் டூப்பர்ஹிட் என்பதை தனியாக சொல்ல வேண்டியதே இல்லை.

7 மே, 2016

24

‘டைம் மெஷின்’ என்பதே காதில் பூ சுற்றும் ஐடியாதான். அறிவியல்ரீதியாக காலத்தின் முன்னும் பின்னும் நகரவேண்டுமென்றால் ஒளியைவிட வேகமாக பயணிக்கக்கூடிய ஏதோ ஒரு சமாச்சாரத்தை நாம் கண்டறிய வேண்டும். அடுத்த நூறாண்டுக்குள் இது சாத்தியமாகும் வாய்ப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லை.

எனவே, இப்போதைக்கு டைம்மெஷின் கான்செப்ட் என்பது ஏழு கடல் ஏழு மலை தாண்டி வசிக்கும் கிளியின் கண்களில் மந்திரவாதியின் உயிர் இருக்கிறது என்பது மாதிரி லாஜிக்கில்லாத ஃபேன்ஸி கதைதான். அப்படிப்பட்ட மகா காதுகுத்தல் கதையை எடுத்துக் கொண்டு, திரையில் தெரியும் காட்சிகளை சாத்தியம் என்று மக்கள் நம்பும்படியான திரைக்கதையை எழுதுவது என்பது டைம்மெஷினை கண்டுபிடிப்பதைவிட சவாலான விஷயம். இயக்குநர் விக்ரம்குமார் இந்த சவாலை மிக சுலபமாக கடந்திருக்கிறார்.

“அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
என் இசை நின்றால் அடங்கும் உலகே”

என்று நடிகர் திலகம் ‘திருவிளையாடல்’ படத்தில் பாடும்போது அப்படியே உலக இயக்கம் freeze ஆகி நிற்கும் காட்சியை ஏ.பி.நாகராஜன் புனைந்திருப்பாரே நினைவிருக்கிறதா?

மீண்டும்-

“நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே” என்று அவர் தொடரும்போது உலகம் மீண்டும் இயங்கத் தொடங்கும். ஐம்பதாண்டுகளுக்கு முன்பு இந்த காட்சியை திரையில் பார்த்து நம் தாத்தாக்களும், அப்பாக்களும் எப்படி அசந்திருப்பார்களோ, அதே அசத்தலை மீண்டும் சாத்தியமாக்கி இருக்கிறது ‘24’. இந்தப் படத்தில் freeze ஒரு கதாபாத்திரத்துக்கான முக்கியத்துவத்தோடு இயங்குகிறது.

ஷங்கரின் ‘ஐ’ ஒப்புக் கொள்வதற்கு முன்பாக ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ‘24’ படத்தில் நடிக்க நடிகர் விக்ரம் முடிவெடுத்திருந்தார். ‘யாவரும் நலம்’ வெற்றிக்குப் பிறகு விக்ரம் குமார் இதை இயக்க திட்டமிட்டிருந்தார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையென்று ஆடம்பரமாக ஆரம்பித்தார்கள். “சிக்கலான கதை. ஆனால், 6 வயது முதல் 60 வயது வரை இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும்” என்றெல்லாம் விக்ரம் பேட்டி கொடுத்தார். பிற்பாடு திரைக்கதை விவாதத்தில் நடிகர் விக்ரமுக்கும், இயக்குநர் விக்ரமுக்கும் முரண்பாடு ஏற்பட்டு படம் கைவிடப்பட்டது என்று சொன்னார்கள்.

இதே கதையை தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு சொன்னார் இயக்குநர் விக்ரம். தமிழில் பெரும் வெற்றி பெற்ற sci-fi கதையான ‘நியூ’வில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்த வேடத்தில் தெலுங்கில் மகேஷ்பாபுதான் நடித்திருந்தார். படம் அட்டர் ப்ளாஃப். எனவே, ‘தூக்குடு’வாக மசாலாவில் எகிறி அடித்துக் கொண்டிருந்த மகேஷ்பாபுவுக்கு அப்போதைக்கு அறிவியல் புனைகதையில் ஆர்வமில்லை. அது சரிதான். இரண்டு, மூன்று ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் ‘நேனொக்கடினே’ என்கிற sci-fi த்ரில்லரில் நடித்தபோது அந்த படமும் அட்டர்ப்ளாப்தான் ஆனது.

வெறுத்துப்போன இயக்குநர் விக்ரம்குமார், ‘இதயத்தை திருடாதே’ பாணியில் செம ரொமான்ஸாக ‘இஷ்க்’ படத்தை தெலுங்கில் இயக்கி, பிரும்மாண்ட வெற்றி பெற்றார். ஆனாலும் காலத்தில் முன்னும் பின்னும் நகரும் ஆர்வம் அவரை தூங்கவிடவில்லை. அப்போது நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாகசைதன்யா என்று மூன்று தலைமுறையும் சேர்ந்து நடிக்கக்கூடிய கதை ஒன்றினை இயக்குநர்களிடம் நாகார்ஜூனா கேட்டுக் கொண்டிருந்தார்.

விக்ரம்குமார் தான மனசில் நினைத்திருந்த ‘24’ பாணியில் ‘காலத்தை ஏமாற்றும்’ கதை ஒன்றின் ஒன்லைனரை பிடித்து நாகார்ஜூனாவிடம் சொன்னார். நாகேஸ்வரராவின் ஆலோசனையின் பேரில் திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்து ‘மனம்’ எழுதப்பட்டது. விக்ரம் மீது நம்பிக்கை வைத்து வேறெதையும் விசாரிக்காமல் கோடிகளை கொட்ட தயாரானார் நாகார்ஜூனா. ‘மனம்’, ஆந்திர மனங்களை மயக்கியது. போட்ட காசை பன்மடங்காக திருப்பி எடுத்தனர் நாகார்ஜூனா குடும்பத்தினர். படம் வெளியாகும்போது நாகேஸ்வரராவ் உயிரோடு இல்லை. தெலுங்கு சினிமாவின் legendக்கு மகத்தான tribute செய்துக் கொடுத்தார் விக்ரம்குமார்.

ஒருவகையில் விக்ரமுக்கே மீண்டும் தன் ‘24’ மீது பூரண நம்பிக்கை ஏற்பட ‘மனம்’ அடைந்த சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றிதான் காரணம். நடிகர் விக்ரமுக்கு முன்பு தயார் செய்திருந்த கதையை தூசு தட்டினார். திரைக்கதையில் நிறைய மாற்றங்களை செய்து சூர்யாவுக்கு சொன்னார். தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த சூர்யாவுக்கு இது மிகப்பெரிய ரிஸ்க். பெரிய பட்ஜெட் கோரும் கதை. தன்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளரை காம்ப்ரமைஸ் செய்ய முடியாது. எனவே, தானே தயாரிக்க முன்வந்தார். அவருக்கு இந்தப் படத்தில் நடிப்புரீதியாக எதிர்கொண்ட சவால்கள்தான் ஆர்வத்தைத் தூண்டியது. கொஞ்சமென்ன நிறையவே காஸ்ட்லியான ஆர்வம்தான். எனினும் ‘நந்தா’வில் தொடங்கி, அடுத்தடுத்து சூர்யா நிகழ்த்திப் பார்த்த பரீட்சார்த்த முயற்சிகள் புதிதல்லவே. ‘ஜெயித்தால் மன்னன், தோற்றால் நாடோடி’ என்று எம்.ஜி.ஆர் கணக்காக தானே தயாரித்து, மூன்று வேடங்களில் நடித்தார்.

‘24’ படத்தின் பின்னணிக்கதை இதுதான்.
முன்பு தான் ஒளிப்பதிவு செய்யவிருந்த இந்தப் படத்தினை இப்போது திரு எப்படி செய்திருக்கிறார் என்று பார்த்துவிட்டு அசந்துப்போன கேமிரா பேரரசன் பி.சி.ஸ்ரீராம் ட்விட்டரில் நெகிழ்ந்துப் போய் பாராட்டுகிறார். இன்று ‘24’ பார்த்துவிட்டு, இந்திய சினிமாவின் ஜாம்பவான்கள் பொழியும் பாராட்டுமழையில் நனைய இயக்குநர் விக்ரம்குமாருக்கு எவ்வளவு அருகதை இருக்கிறதோ, அதே அருகதை இந்த கதையை நம்பி வாழ்க்கையை பணயம் வைத்த சூர்யாவுக்கும் இருக்கிறது.

‘ஆத்ரேயாடா’ என்று சர்ச்சில் சாத்தானாக மாறி விஸ்வரூபம் எடுக்கும் வில்லன் சூர்யா, ‘டேய் பெரியப்பா’ என்று பதிலுக்கு மல்லுக்கட்டும் இளைய சூர்யா, ‘சாதிச்சிட்டேன் ப்ரியா’ என்று யுரேகா கூச்சலிடும் விஞ்ஞானி சூர்யாவென்று தன் நடிப்பு வாழ்வின் அடுத்த பரிமாணத்துக்கு அசத்தலாக நகர்ந்திருக்கிறார். பரபரவென்ற த்ரில்லர் ஆக்‌ஷன் படத்தில் சண்டைக் காட்சிகளே திரைக்கதையில் இல்லை என்கிற பலவீனத்தை புத்திசாலித்தனமான காட்சிகளால் அசால்டாக கடந்திருக்கிறார் இயக்குநர் விக்ரம்குமார்.

24 மணி நேரம் முன்னும் பின்னும் நகரலாம் என்கிற அதிசயப் பொருள் கிடைத்தவுடன் சாமானியனான வாட்ச் மெக்கானிக், அதை எதற்கு எப்படி பயன்படுத்துவான் என்று தரைலோக்கலுக்கு சிந்தித்து, ஹீரோவுக்கும் வில்லனுக்குமான மைண்ட்வாரில் ரசிகர்களின் இதயத்தை ‘திக்’கிடவைத்து, இந்தியத் திரையுலகத்துக்கே கதை சொல்லும் பாணியில் புதிய வாசல்களை திறந்து கொடுத்திருக்கிறது விக்ரம்குமார் - சூர்யா கூட்டணி. சூர்யாவைப் பொறுத்தவரை இது ‘கஜினி’க்கும் மேலே.
இந்தப் படத்தைப் பார்ப்பதே கூட ஒரு வகையில் டைம் டிராவல்தான். நாம் மூன்று மாதம் காலத்தில் முன்னோக்கிப் போய் பார்க்கிறோம். ஏனெனில் கதை நடப்பது ஆகஸ்ட்டு 2016ல்.

‘24’ கொடுப்பது அனுபவம். அதை 626 வார்த்தைகளில் இதுபோல விமர்சனமாக எழுதியோ, வாயால் ஹெலிகாஃப்டர் ஓட்டியோ யாருக்கும் புரியவைத்துவிட முடியாது. தவறவிடாமல் நீங்கள் முதலில் போய் படத்தைப் பாருங்கள். பிடித்திருந்தால் குடும்பத்தோடு இன்னொரு முறை போய் பாருங்கள். வேறென்ன சொல்லமுடியும்?

1 ஏப்ரல், 2016

டிஜிட்டல் ராஜா!

 சினிமா படங்களின் டைட்டிலை உற்றுக் கவனிப்பவர் என்றால் உங்களுக்கு ஜி.பாலாஜி என்கிற பெயர் பரிச்சயமானதுதான். ‘டிஜிட்டல் சினிமா டிசைனர்’ என்கிற டைட்டிலுக்கு கீழே இவரது பெயர் இருக்கும்.

‘லிங்கா’, ‘ரஜினி முருகன்’, ‘கதகளி’, ‘ஓ காதல் கண்மணி’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, ‘நண்பேண்டா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘தமிழ்ப்படம்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘வழக்கு எண் 18/9’, ‘வல்லினம்’, ‘ஹரிதாஸ்’, ‘தங்க மீன்கள்’, ‘பத்து எண்றதுக்குள்ளே’, ‘ஆரஞ்ச் மிட்டாய்’ என்று ஏராளமான படங்களுக்கு இவர்தான் டிஜிட்டல் சினிமா டிசைனர். இப்போது ‘இது நம்ம ஆளு’, ‘வெற்றிவேல்’, தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் ’பிரம்மோத்சவம்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி அலுவலகத்திற்கு நேர் பின்னால் இருக்கும் அவரது ஸ்டுடியோவில் சந்தித்தோம். தமிழ் சினிமாவின் டிஜிட்டல் வரலாற்றை விவரித்தார்.
“நான் ரொம்ப செண்டிமெண்டாதான் இந்த ரூமை வாடகைக்கு எடுத்து இங்கே உட்கார்ந்து வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். இந்த அறைக்கு இந்திய சினிமா வரலாற்றில் முக்கியமான இடம் உண்டு. எண்பதுகளோட இறுதியிலே ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ புகழ் நவோதயா ஸ்டுடியோஸ் இதே அறையில்தான் ஆசியாவின் முதல் டிஜிட்டல் ஏவிட் எடிட்டிங் ஸ்டுடியோவை அமைச்சாங்க.

டிவியில் ‘பைபிள் கதைகள்’னு தொடர் எடுக்குறதுக்காக இந்த டெக்னாலஜியை பல லட்ச ரூபாய் செலவில் கொண்டுவந்தாங்க. அப்போ அது சக்சஸ் ஆகலை. அந்த தொடரும் ஏதோ சில காரணங்களால் சில வாரங்களிலேயே நின்னுடிச்சி.

அப்போ கமல் சார் நவோதயாவில் ‘சாணக்யன்’ மலையாளப் பட்த்தில் நடிச்சிருந்தார். எப்பவுமே டெக்னாலஜியில் அப்டேட்டா இருக்கணும்னு நெனைக்கிற அவர், ஏவிட் எடிட்டிங் பற்றி ரொம்ப ஆர்வமா விசாரிச்சி தெரிஞ்சிக்கிட்டாரு. இந்திய சினிமாவில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்திய ரியல் மீடியா நிறுவனத்தினரும் கமல் சாருக்கு நண்பர்கள்தான். அவங்களும் அடிக்கடி டிஜிட்டலில் என்னென்ன அப்டேட்ஸ்னு சார் கிட்டே சொல்லிக்கிட்டே இருப்பாங்க.
அப்படிதான் முதன்முதலா ‘மகாநதி’ படத்தை கம்ப்ளீட்டா டிஜிட்டல் எடிட்டிங்கில் செஞ்சாங்க. ஃபிலிமில் ஷூட் பண்ணி அதை அப்படியே ஸ்கேன் பண்ணி கம்ப்யூட்டருக்கு கொண்டுவந்து - டெலிசினின்னு சொல்லுவாங்களே, அது இதுதான் - எடிட் பண்ணி மறுபடியும் பிலிமுக்கு டிரான்ஸ்பர் பண்ணனும்னு காதை சுத்தி மூக்கைத் தொடுற கடினமான வேலைதான். ஃபிலிம் புரொஜெக்‌ஷனில் டப்பிங் பேசியிருப்பாங்க. அது டிஜிட்டலில் sync ஆகாது. லிப் மூவ்மெண்ட் ஏடாகூடமா போகும். அதனாலேயே திரும்பத் திரும்ப நாலைஞ்சி முறையெல்லாம் அந்தப் படத்துக்கு டப்பிங் பேசிக்கிட்டே இருக்க வேண்டியிருந்தது.

‘என்னப்பா இது’ன்னு நிறைய பேர் சலிச்சிக்கிட்டாங்க. ‘நாம ஒரு புது டெக்னாலஜியை அறிமுகப்படுத்தறோம். அதோட நிறைகுறைகளை முதன்முதலா எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுறது நாமதான். அதனாலே சில சிரமங்கள் இருக்கதான் செய்யணும். அதுக்காக நம்ம கடமையிலிருந்து பின்வாங்கிட கூடாது’ன்னு கமல்சார்தான் சமாதானப்படுத்தினாராம். இந்தியாவில் கம்ப்யூட்டர் என்பதையே ரொம்ப பேர் கண்ணால கூட பார்த்திருந்திருக்க முடியாத சூழலில், இருபத்து மூணு வருஷம் முன்னாடி ஒரு தமிழ்ப் படம் முழுக்க டிஜிட்டல் எடிட்டிங்கில் உருவான கதை இதுதான்.

முதல்லே டிஜிட்டல் எடிட்டிங் - அதைத் தொடர்ந்து டிஜிட்டல் சவுண்டு (டால்பி, டிடிஎஸ் முதலியன) - விஷூவல் எஃபெக்ட்ஸ் & ஆப்டிகல்ஸ் - டிஜிட்டல் கலர் கரெக்‌ஷன் - இப்போ டிஜிட்டல் புரொடக்‌ஷன். சினிமா டிஜிட்டலில் கடந்து வந்திருக்கும் பாதையின் வரிசை இதுதான்...’’ என்கிறார் பாலாஜி.
இதுலே டிஜிட்டல் சினிமா டிசைனரோட வேலை என்ன?

பிலிம் இருக்குறப்போ லேப் என்ன வேலை செஞ்சதோ அதுமாதிரி வேலைன்னு குத்துமதிப்பா புரிஞ்சுக்கங்க. முன்னாடியெல்லாம் ஷூட் பண்ணி, அதை லேபுக்கு கொண்டு போய் கழுவி, டப்பிங் சேர்த்து, ரீரெக்கார்டிங் பண்ணி, எடிட்டிங்குக்கு அனுப்பி, பிரிண்டு போட்டு... இதெல்லாம் ஃபிலிமில் நிறைய பேரு பண்ணிக்கிட்டு இருந்தாங்க இல்லையா?

இந்த வேலையை எல்லாம் கம்ப்யூட்டர் துணையோட நான் ஒருத்தன் மட்டுமே செய்யுறேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் அன்றன்றைக்கு ஷூட் பண்ணுற விஷூவல்களை டிஜிட்டலா எல்டிஓங்கிற டேப்பில் ரெக்கார்ட் பண்ணி பேக்கப் எடுத்து வெச்சுப்பேன்.

எடிட்டிங், டப்பிங், ரீரெக்கார்டிங், வீ.எஃப்.எக்ஸ்-னு எதுக்கு தேவைப்பட்டாலும் தேவைப்படுற நேரத்துலே இந்த டேட்டாவை கொடுக்குறது. அப்பப்போ அதுலே அப்டேட் ஆகுற வேல்யூஸையும் சேர்த்து வெச்சுக்குறது. கடைசியா ஒரு படம் தியேட்டருக்கு போகிற நிலை வரைக்கும் என்னோட வேலை இருந்துக்கிட்டே இருக்கும்.

ஒட்டுமொத்தமா சொல்லணும்னா ஒரு பெரிய நிறுவனத்துக்கு பேக் (BACK) ஆபிஸில் இருந்து என்னவெல்லாம் செஞ்சுக் கொடுப்பாங்களோ, அதுமாதிரி சினிமாவுக்கு நான் பேக் ஆபிஸுன்னு சொல்லலாம். நான் ஒர்க் பண்ணுற படங்களுக்கு கலர் கரெக்‌ஷனும் நானே செஞ்சிக் கொடுத்துடறேன். சிம்பிளா சொல்லணும்னா போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளுக்கு நாங்க ரொம்ப முக்கியம்.
இந்த மாதிரி டிஜிட்டல் பேக்கப் (Back Up) ஒரு சினிமாவுக்கு ரொம்ப முக்கியமா?

ஆமாம். ஒரு தயாரிப்பாளர், தான் எடுத்த மொத்தப் படத்தையும் அவரோட கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கில் எல்லா வேலையையும் முடிச்சி காப்பி பண்ணி வெச்சிருந்தாரு. போன டிசம்பருலே வெள்ளம் வந்தது இல்லையா? அந்த வெள்ளத்துலே அவருடைய வீடு மூழ்கி, கம்ப்யூட்டர் முழுக்க நனைஞ்சிடிச்சி. அந்த ஹார்ட் டிஸ்கை இப்போ எங்கிட்டே கொண்டுவந்து ஏதாவது பண்ணி படத்தை எடுக்க முடியுமான்னு கேட்குறார். இதுக்குதான் நாங்க வேணுங்கிறது. ஒவ்வொரு படத்தையும் நாலைஞ்சு காப்பி பேக்கப் எடுத்து வேற வேற லொக்கேஷனில் பாதுகாப்போம். எந்த சூழலிலும் படக்குழுவினரோட உழைப்பு வீணா விழலுக்கு இறைச்சா நீரா ஆகவே ஆகாது.

சர்வதேச அளவிலேயே ஒரு படம் எடுக்கப்படறப்போ அப்பப்போ முறையான பேக்கப் செஞ்சு வச்சுக்கணும்னு ஒரு ரூல் இருக்கு. அப்போதான் இன்சூரன்ஸே பண்ண முடியும்.

இந்த ஃபீல்டுக்கு எப்படி வந்தீங்க?

அம்மா, சிவாஜி ரசிகை. எப்பவும் சிவாஜி படங்களை பார்த்துக்கிட்டே இருப்பாங்க. அவங்களோட சேர்ந்து பார்த்து, பார்த்து எனக்கு சினிமா மேலே ஆர்வம் வந்தது. ஆனா, சினிமாவில் என்னவா ஆகணும்னு ஐடியாவே இல்லை. தொண்ணூறுகளில் ‘ஜூராசிக் பார்க்’, ‘டைட்டானிக்’ மாதிரி படங்களை பார்த்துட்டு, அனிமேஷன் துறையில் வேலை பார்க்கலாம்னு ஆசைப்பட்டேன். அனிமேஷன் கத்துக்கிட்டு வேலை தேடினேன்.

நண்பர் ஒருவர் மூலமா ‘சேது’ படத்தோட எடிட்டர் ரகுபாபு சாரோட அறிமுகம் கிடைச்சுது. அவர் கிட்டே அசிஸ்டெண்ட் எடிட்டரா சேர்ந்தேன். நான் வேலை பார்த்த முதல் படம் ‘கும்மாளம்’. நாலஞ்சி வருஷம் அவர்கிட்டே வேலை பார்த்துட்டு, ஏவிட் எடிட்டிங்குக்காக ஏவிஎம்மில் ஒரு ஸ்டுடியோ போட்டோம்.

ஏவிட் சாஃப்ட்வேர் விலையே 30 லட்சரூபாய் இருந்தது. அவங்க ஒரு லட்ச ரூபாய் விலையிலே ஒரு சாஃப்ட்வேர் கொண்டுவந்தாங்க. அதை இன்ஸ்டால் பண்ணிட்டு லேப்டாப் மூலமா ஷூட்டிங் ஸ்பாட்டுலேயே எடிட்டிங் பண்ணலாம்னு சான்ஸ் கேட்டு அலைஞ்சோம். அப்போலாம் ஃபிலிம் எடிட்டிங்குக்குதான் மவுசு இருந்தது. ஏவிட்டுன்னாலே இங்கே நிறைய பேருக்கு அலர்ஜி.

ஆனா, மலையாளப்பட தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் ஏவிட் அல்வா மாதிரி. ஒரு நாப்பது, நாப்பத்தஞ்சி படம் அவங்களுக்கு பண்ணிக் கொடுத்தோம். கொஞ்சம் கொஞ்சமா சினிமாவோட தேவைகள் கம்ப்யூட்டரை சார்ந்து அமைய ஆரம்பிச்சது. இத்துறையிலே கம்ப்யூட்டர் கத்துக்காதவங்க பல நூறு பேர் வேலை இழக்க ஆரம்பிச்சாங்க.

2004-05 காலக்கட்டத்தில் டிஜிட்டல் கேமிராவால் ஷூட் பண்ணுற கல்ச்சர் வந்தது. ரெட் கேமிராவோட வரவு, திடீர்னு நம்ம சினிமாவோட குவாலிட்டியை பல படிகள் முன்னாடி கொண்டுப் போச்சி. எடிட்டிங், ரெக்கார்டிங் உள்ளிட்ட போஸ்ட்புரொடக்‌ஷன் வேலைகள் எல்லாம் ஜெட் வேகத்தில், கூடுதல் தரத்தில் உருவாக ஆரம்பிச்சிது.

2006ல் ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரில் ‘பேரழகன்’ படத்தை க்யூப் மூலமா டிஜிட்டல் புரொஜெக்டரில் காமிச்சாங்க. அதை பார்த்ததுமே இனிமே சினிமாவோட எதிர்காலம் டிஜிட்டலில்தான் இருக்குன்னு புரிஞ்சது.

சினிமாவுக்கு டிஜிட்டலா என்னென்ன வேலைகளை பார்க்க முடியுமோ, அதையெல்லாம் நாமதான் பார்க்கணும்னு முடிவெடுத்தேன். இப்போ நான் தனியா செய்யுற வேலைகளை பெரிய நிறுவனங்கள் (பெரும்பாலும் முன்னாள் லேப்கள்) செஞ்சுக் கொடுக்குது. ஆனா, தனிப்பட்ட முறையில் முழுப் பொறுப்பும் எடுத்துக்கிட்டு வேலை பார்க்கிறதுன்னா இந்தியாவிலேயே விரல்விட்டு எண்ணக்கூடிய ஆட்கள்தான் இருக்காங்க. அதில் நானும் ஒருவன்.
இந்த டிஜிட்டல் புரொஜெக்‌ஷன் பத்தி கொஞ்சம் சொல்லுங்க..?

ஒரு டிஜிட்டல் புரொஜெக்டரோடு, ஒரு கம்ப்யூட்டர் சர்வர் இணைந்திருக்கும். முன்னாடி மாதிரி ஃபிலிம் ஓட்டுற பிசினஸே கிடையாது. ஹார்ட் டிஸ்கில் காப்பி பண்ண படத்தை சர்வரில் அப்லோட் பண்ணிட்டா, அப்படியே ஓட்டலாம்.

க்யூப், யூஎஃப்ஓ, பிஎக்ஸ்டி, ஸ்கிராபிள், சோனின்னு நிறைய நிறுவனங்கள் இந்த டிஜிட்டல் தொழிலில் இருக்காங்க. ஹாலிவுட்டின் தரம் என்பது 2கே டிஜிட்டல். ஆனா, நாம ரொம்ப நாளாவே 1கே சினிமாவில்தான் இருந்திருக்கோம். இதை டிஜிட்டல் சினிமான்னு சொல்லாம, ஈ-சினிமான்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. இப்போ நாமளும் 2கே-வுக்கு வேகமா மாறிக்கிட்டிருக்கோம்.

க்யூப்பில் ஒரு படம் 200 ஜிபி அளவுக்கு இருக்கும். ஆனா, யூஎஃப்ஓ டெக்னாலஜியில் 20ஜிபி லெவலுக்குதான் இருக்கும். நிறைய பேர் சேட்டிலைட்டில் இருந்து நேரடி ஒளிபரப்புன்னு நெனைச்சுக்கிட்டிருக்காங்க.

அப்படியில்லை. சர்வரில்தான் இருந்துதான் புரொஜெக்டர் மூலமா ஸ்க்ரீனுக்கு சினிமா வருது. ரியல்மீடியா ஆளுங்களாம் நேரடியாவே தியேட்டருக்கு போய்தான் படத்தை சர்வரில் சேர்த்துட்டு வர்றாங்க. யூஎஃஓ பைல் கொஞ்சம் சிறுசுங்கிறதாலே, நெட்டிலேயே அனுப்ப முடியும்.

அப்போவெல்லாம் ‘பொட்டி வந்துடிச்சி’ன்னு ஃபிலிம் ரோல் தியேட்டருக்கு வர்றதையே பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகறப்ப ஊர்வலமா கொண்டு வந்து கொண்டாடுவாங்க. இப்போ KDMனு சொல்லுவாங்க.. Key delivering message.. அதுதான் பொட்டியை ரீப்ளேஸ் பண்ணியிருக்கு.

சில KB அளவு மட்டுமே இருக்குற இந்த XML ஃபைல்தான் இன்று சினிமாவின் தலையெழுத்தையே நிர்ணயிக்குது. அந்த ஃபைலை ஓபன் பண்ணாதான் சர்வரில் encrypt செய்யப்பட்டு save ஆகியிருக்கிற படம், decrypt ஆகி புரொஜெக்டருக்கு வரும்.

ஆக்சுவலா, இது ரொம்ப ரொம்ப டெக்னிக்கலா எக்ஸ்ப்ளெயின் பண்ண வேண்டிய விஷயம். எல்லாருக்கும் புரியணுமேன்னு கொஞ்சம் மேலோட்டமா சொல்லுறேன்.
டிஜிட்டலுக்கு அடுத்து சினிமாவின் வடிவம் என்னவாக மாறும்?

டெக்னாலஜியை ஜோஸியம் மாதிரியெல்லாம் கணிக்க முடியாது. உண்மையை சொல்லணும்னா சினிமா இப்போ தியேட்டரை விட்டு வீட்டுக்கு போயிக்கிட்டிருக்கு. செல்போனில் கூட சினிமாவை டவுன்லோடு பண்ணி பார்த்துக்கிட்டிருக்காங்க. இதுக்கும் டிஜிட்டல்தான் காரணம்.

இன்னமும் சினிமா ஒரு கலை, கதை சொல்லும் ஊடகம்னுலாம் கதை விட்டுக்கிட்டு இருந்தோம்னா வேலைக்கு ஆகாது. நம்ம டிவி சீரியல்களிலேயே பக்கம் பக்கமா கதை சொல்லிக்கிட்டிருக்காங்க.

அதனால தியேட்டரில் பார்த்தாதான் வேலைக்கு ஆகும் என்கிற மாதிரி படம் எடுக்கணும். சொல்லுற கதைக்கு நல்ல டெக்னிக்கல் சப்போர்ட் இருக்கணும். படம் பார்க்குறவன் ‘அட’ போடணும். சினிமாங்கிறது தியேட்டருக்கான ஊடகம் என்கிற மதிப்பை நாம ஏற்படுத்தாமல் போனால், இந்த தொழிலுக்கான மவுசு குறைய ஆரம்பிச்சிடும். அப்புறம் வீக்கெண்டில் மட்டும்தான் தியேட்டரில் படம் ஓடும்.

நம்ம படைப்பாளிகளுக்கு நெருக்கடி கொடுக்குற சவாலான சூழல்தான். ஆனா, ஹாலிவுட்டில் இந்த சவாலை வெற்றிகரமா கடந்திருக்கிற மாதிரி நாமளும் கடப்போம் என்கிற நம்பிக்கை இருக்கு.

(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)

15 பிப்ரவரி, 2016

விசாரணையின் மறுபக்கம்!

‘விசாரணை’ திரைப்படம் வெளியான அன்று ஒரு தொலைக்காட்சியில் இயக்குநர் வெற்றிமாறனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

“இந்தப் படம் போலிஸ்காரர்களை ரொம்ப மோசமாக சித்தரிக்கிறதே? ‘விசாரணை’யை பார்ப்பவர்கள் போலிஸ் என்றாலே இப்படிதான் என்று நினைத்துவிட மாட்டார்களா?”

வெற்றிமாறன் இதற்கு புத்திசாலித்தனமான பதில் ஒன்றினை சொன்னார்.

“போலிஸ்னாலே இப்படிதான்னு நான் சொல்லலை. பூ அல்லது தலைன்னு எந்த விஷயத்துக்குமே ரெண்டு பக்கம் இருக்கும். நான் ஒரு பக்கத்தை மட்டும்தான் இந்தப் படத்துலே காட்டியிருக்கேன். இன்னொரு பக்கத்தை வேற யாராவது காட்டுவாங்க”
தெரிந்தேதான் இந்த பதிலை சொன்னாரா என்று தெரியவில்லை. ‘விசாரணை’ வெளியான அதே நாளில்தான் மலையாளத்தில் ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’ வெளியானது. போலிஸ் விசாரணையால் பாதிக்கப்படுபவர்களின் பார்வையில் நம் ‘விசாரணை’ விரிந்தது என்றால், மலையாளத்தில் போலிஸ் பார்வையில் விரிந்திருக்கிறது. இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பேச ஏராளமான விஷயங்கள் இருக்கிறது.

நம்மூரில் வெற்றிமாறன் எப்படியோ, அதுபோலதான் கேரளாவில் இயக்குநர் ஆப்ரிட் ஷைன். அவரது பெயரை சொன்னால் இங்கே யாருக்கும் உடனே தெரியாது. ஆனால், அவர் எடுத்த படம் ரொம்ப பிரபலம். ‘1983’. ‘பொல்லாதவன்’ நமக்கு எப்படி ஒரு ப்ரெஷ்ஷான ஜானரை கொடுத்ததோ, அதுபோலவே ‘1983’ மலையாளத்தில் நிகழ்ந்த புதிய முயற்சி. அதே இயக்குநரின் இரண்டாவது படம்தான் ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’. முதல்பட ஹீரோவையே இரண்டாம் படத்துக்கும் புத்திசாலித்தனமாக வளைத்துப் போட்டுவிட்டார். ‘1983’ பெற்ற அபாரமான வணிக வெற்றி, நிவீன்பாலியை படம் தயாரிக்கவும் உந்தித் தள்ளியது. ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’வின் ஹீரோவும், தயாரிப்பாளரும் அவர்தான்.

‘விசாரணையை’ பற்றி இங்கே ஏகப்பட்ட விசாரணை நடந்துவிட்டது. எனவே, நேராக ‘ஆக்‌ஷன் ஹீரோ’வுக்கு போய்விடலாம்.

பி.எச்.டி முடித்து ஏதோ காலேஜில் லெக்சரராக வேலை பார்த்துக் கொண்டிருந்த பிஜூவுக்கு போலிஸ் வேலை மீது காதல். எஸ்.ஐ. எக்ஸாம் எழுதி தேர்வாகி, எர்ணாகுளம் டவுன் ஸ்டேஷனுக்கு பணிபுரிய வருகிறார்.

பிஜூவின் ஒரு மாதகால போலிஸ் ஸ்டேஷன் வாழ்க்கைதான் ஒட்டுமொத்த படமுமே. இந்தப் படத்தில் கதை கிடையாது. வில்லன் கிடையாது. காட்சிகள் மட்டும்தான். அந்த காட்சிகளை ஒன்றுக்கு ஒன்று தொடர்பு படுத்தும் சுவாரஸ்யமான திரைக்கதை, வசனங்கள் மூலமாக இல்லாத கதையை இருப்பதாக பார்வையாளனை நம்பவைக்கிறார் இயக்குநர்.

போலிஸ் படம் என்றாலே ஹீரோ தீர்க்கவேண்டிய பிரதான பிரச்சினை ஒன்று இருக்கும். அந்த பிரச்சினையை தீர்க்கவிடாமல் தடுக்கும் வில்லனை அழித்து ஒழித்து சுபம் என்பதுதான் உலகம் முழுக்கவே இருக்கும் டெம்ப்ளேட். மசாலாத்தனமாக ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’ என்று டைட்டில் வைத்துவிட்டு, ஆப்ரிட் ஷைன் நமக்கு காட்டியிருப்பது மாற்றுப்படம். ஒரு சாதாரண எஸ்.ஐ.யின் கேரியரில் அவன் சந்திக்கக்கூடிய வழக்குகளை எப்படி சமாளிக்கிறான் என்பதுதான் படத்தின் ஒருவரி. தன்னுடைய காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கை ஒருவரும் மீறக்கூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறான்.

குடித்துவிட்டு பொது இடத்தில் எல்லோருக்கும் ‘தரிசனம்’ காட்டும் குடிகாரனில் தொடங்கி, மாநிலமே வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் கிரிமினல் வரை பிஜூ டீல் செய்கிறான். அவன் விசாரணை செய்யும் ஒவ்வொரு வழக்குமே ஒரு சிறுகதை. ‘சடக்’கென்று தொடங்கி ‘படக்’கென்று முடிகிறது. சில கதைகளின் உருக்கம் நெஞ்சை தொடுகிறது. லாக்கப்பில் ஒருபுறம் கிரிமினல்களை போட்டு மிதித்துக்கொண்டே போனில் மறுபுறம் தனக்கு நிச்சயமான பெண்ணோடு காதல் கடலை போடுகிறான் பிஜூ. படத்தில் அட்மாஸ்பியருக்கு வரும் பாத்திரங்களை கூட அவ்வளவு சிறப்பாக எப்படி நடிக்க வைக்க முடிந்தது இயக்குநருக்கு என்கிற ஆச்சரியம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

‘ஆக்‌ஷன் ஹீரோ’ என்கிற அதிரடியாக டைட்டில் வைத்து இருந்தாலும், ‘சிங்கம்’ ரேஞ்சுக்கு ரவுண்டுகட்டி விளையாட அவ்வளவு வாய்ப்புகள் இருந்தும், வழக்கமான ஆக்‌ஷன் காட்சிகள் படத்தில் இல்லை. க்ளைமேக்ஸில் இதற்கு சமாதானம் சொல்லுகிறார் இயக்குநர். “பிஜூ ஒன்றும் சூப்பர் ஹ்யூமன் இல்லை. நம்மை மாதிரி வெறும் மனுஷன்தான்”

‘நேரம்’, ‘தட்டத்தின் மறையத்து’, ‘1983’, ‘ஓம் சாந்தி ஓசண்ணா’, ‘பெங்களூர் டேஸ்’, ‘ஒரு வடக்கன் செல்ஃபீ’, ‘பிரேமம்’ என்று சகட்டுமேனிக்கு ஹிட்டுகள் கொடுத்துவரும் நிவின்பாலி ஒரு மோகன் என்றுதான் இத்தனை நாட்களும் நினைத்திருந்தேன். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் இன்னொரு கமல் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்.

21 ஜனவரி, 2016

குடும்பம் + குற்றம் + செக்ஸ் = டோலிவுட் கோங்குரா

குழம்பிப் போயிருக்கிறார்கள் தெலுங்கர்கள். தொண்ணூறுகளின் இறுதியிலும், இரண்டாயிரங்களின் துவக்கத்திலும் தமிழர்கள் சந்தித்த அதே சூழல்தான்.

நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளில் இருந்து எழுபதுகளிலேயே தமிழர்கள் வெளிவரத் தொடங்கிவிட்டோம். நில சீர்த்திருத்தம் போன்ற அரசின் முன்னெடுப்புகளும் அந்த சமூக மாற்றத்தை விரைவுப்படுத்தியது. தொண்ணூறுகளின் முற்பகுதியில் இந்தியாவை ஆக்கிரமித்த உலகமயமாக்கலுக்கு தன்னை வேகமாக தயார்படுத்திக் கொண்ட முதல் இந்திய மாநிலம் தமிழகம் என்பதற்கு அதுவும் ஒரு காரணம். மைசூர் அரசுடனான நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் காலாவதியாகி காவிரி பிரச்சினை தலையெடுக்கத் தொடங்கியவுடனேயே தமிழக அரசு விழித்துக் கொண்டு தன்னை நகர்ப்புற கலாச்சாரத்துக்கு தகவமைத்துக் கொள்ள தயாராகி விட்டது. எனவேதான் இங்கே பண்ணையார்களும், நாட்டாமைகளும், ஜமீன்களும் மவுசு இழந்துப் போனார்கள்.

ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் டெல்லி, மும்பை, கொல்கத்தா என்று வேலைரீதியாக தமிழ் பார்ப்பனர்கள் பறக்க, அவர்களை பின்தொடர ஆரம்பித்தார்கள் மற்ற தமிழர்கள். உலகமயமாக்கலின் காரணமாக பணித்திறமைக்கு பற்றாக்குறை ஏற்பட்டபோது அதே பார்ப்பனர்களின் வாரிசுகள் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு இடம்பெயர, நெல்லுக்கு பாயும் தண்ணீருக்கு பாய்ந்ததை போல பார்ப்பனரல்லாத மற்ற சாதியினரில் கல்வித்தகுதி பெற்ற என்ஜினியர்களும், சி.ஏ.க்களும், எம்.பி.ஏ.க்களுக்கும் அயல்நாடுகளில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ் சமூகம் கணிசமாக சம்பாதிக்க ஆரம்பித்தது. இன்று என்.ஆர்.ஐ. தமிழர்களை குறிவைத்து செயல்படக்கூடிய ஏராளமான வணிகங்களில் (என்.ஜி.ஓ.தான் ஆகப்பெரிய வணிகம்) சினிமாவுக்கே பிரதான இடம். ஓவர்சீஸில் காசு பார்க்கலாம் என்று எண்பதுகளின் இறுதியில் கமல் சொன்னபோதும், என்.ஆர்.ஐ.களின் முதலீட்டில் பெரிய படங்களை எடுக்க முடியும் என்றுகூறி ‘மருதநாயகம்’ முயற்சித்தபோதும், “இதெல்லாம் வேலைக்கு ஆவுறதில்ல....” என்று மஞ்சப்பையை கக்கத்தில் வைத்துக் கொண்டு கேலியாக சிரித்த சினிமாக்காரர்கள் இன்று ‘ஓவர்சீஸே சரணம்’ என்று காலில் விழுகிறார்கள். கமல் சொன்னது நம்மூர்காரர்களுக்கு புரியவில்லை. ஆனால் பாலிவுட்காரர்கள் விழித்துக்கொண்டு இருபது வருடங்களாக பணத்தை அறுவடை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓக்கே. லெட் அஸ் கமிங் டூ த கோர் பாயிண்ட்...

சிகப்பு கோலோச்சிய பூமியாக இருந்தாலும் ஆண்டான் – அடிமை ஜமீன் கலாச்சாரத்தில் இருந்து இன்றைய தேதி வரை முழுமையாக வெளிவர முடியாமல் அவதிப்படுகிறது தெலுங்குதேசம். நகர்ப்புற பிரதேசங்கள் சீமாந்திராவாகவும், சிறுநகரம் மற்றும் கிராமங்கள் பெரும்பாலும் அடங்கிய மாநிலமாக தெலுங்கானாவும் உருவாகிய பிறகு எல்லா வணிகமுமே அப்பகுதியில் எம்மாதிரியான யுக்திகளை செயல்படுத்தி தம்மை வளர்த்துக் கொள்வது என்கிற குழப்பத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். சந்திரபாபு நாயுடுவின் சாஃப்ட்வேர் அபிமானத்தால் அங்கே கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் வெயிட்டாக உருவாகியிருக்கும் என்.ஆர்.ஐ தெலுங்கு சமூகம், நாம் முன்பு எதிர்கொண்டு, இப்போது சமாளித்துக் கொண்டிருக்கும் கலாச்சாரரீதியான இரண்டுங்கெட்டான் குழப்பத்தில் நீடிக்கிறது.

இந்த பிரச்சினைகளை எல்லாம் மிக எளிமையாக முதன்முதலாக அங்கே கடந்திருப்பவர்கள் சினிமாக்காரர்கள்தான். உலகிலேயே வேறெந்த பிரதேசத்திலும் தெலுங்கர்கள் அளவுக்கு சினிமாவை கொண்டாடுபவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே.

பொங்கலுக்கு தமிழில் நான்கு படங்களை வெளியிட்டு அவற்றில் ஒன்று ஹிட் ஆகி, இன்னொன்று ஜஸ்ட் பாஸ் ஆகி, மற்ற இரண்டு படங்கள் அட்டர் ப்ளாப் ஆகியிருக்கின்றன. அதே நேரம் தெலுங்கிலும் மகரசங்கராந்திக்கு நான்கு படங்கள்தான் வெளியாகி இருக்கின்றன. நான்குமே லாபம் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. அவற்றில் ஒன்று சூப்பர்ஹிட். மற்றொன்று ப்ளாக்பஸ்டர் ஹிட். இவற்றில் மூன்று படங்கள் சென்னையில் வெளியாகியிருக்கின்றன. ஜூனியர் என்.டி.ஆர் படத்துக்கும், நாகார்ஜூனா படத்துக்கும் கூடிய கூட்டம் ரஜினி முருகனைவிட அதிகம். மூன்று படங்களுமே சென்னை கேசினோ திரையரங்கில் ஓடுகிறது. சர்வானந்த் நடித்த ‘எக்ஸ்பிரஸ் ராஜா’ மட்டும் நாளைதான் வெளியாகிறது.

இன்னமும் தமிழ் சினிமாவுக்கு கைவராத வெற்றி சூத்திரத்தை தெலுங்கில் கண்டறிந்து விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. படத்துக்கு பூஜை போட்ட அன்றே, இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வசூல் என்னவென்று கணித்து திட்டமிட்டு செலவுகளை வரையறை செய்து பக்காவாக துட்டு பண்ணுகிறார்கள். இந்த திட்டமிடலிலேயே படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், மார்க்கெட்டிங் எல்லாமே மிக துல்லியமாக அடையாளம் காணப்பட்டு விடுகிறது.
ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘நானாக்கு பிரேமத்தோ’ (அப்பாவுக்கு அன்புடன்), ஐரோப்பிய என்.ஆர்.ஐ குடும்பங்களின் தொழில்போட்டியை களமாக கொண்ட படம். உள்ளூரிலும் அந்த சரக்கை விற்கவேண்டுமே? எனவே உள்ளடக்கம் பக்கா லோக்கல். ஜூ.என்.டி.ஆரின் அப்பா ஒரு காலத்தில் பெரும் தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபதி. ஜெகபதி ராஜூவின் துரோகத்தால் சரிகிறார்.

மகன் வளர்ந்து, அப்பாவை ஏமாற்றியவனை அதலபாதாளத்துக்கு தள்ளுகிறான் என்கிற 70ஸ் கதைதான். போனஸாக வில்லனின் மகளை காதல் வலையில் வீழ்த்துகிறார் ஹீரோ. ‘தனி ஒருவன்’ பாணியில் கேட் vs மவுஸ் விளையாட்டு திரைக்கதையில் சுவாரஸ்யத்தின் உச்சியை எட்டுகிறது. இயக்குநர் சுகுமாரின் ட்ரீட்மெண்ட், இப்படத்தை தொழில்நுட்ப அடிப்படையில் சர்வதேச தரத்துக்கு கொண்டுச் சென்றிருக்கிறது. தரை டிக்கெட் ஹாலிவுட் கமர்ஷியல் மாதிரியான அதிவேக திரைக்கதை, அதிரடி ஸ்டண்ட், தெலுங்குக்கே உரித்தான கலர் காஸ்ட்யூம் டூயட்டுகள், குத்துப்பாட்டு என்று மிக்ஸிங் பக்காவாக இருப்பதால் உள்ளூரில் மட்டுமின்றி அயல்நாடுகளிலும் அமோக வசூல்.

நாகார்ஜூனாவின் ‘சொக்கடே சின்னி நாயனா’, இதுவரையிலான ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாக்களின் ஸ்பெசிமென் சாம்பிள். நாகார்ஜூனா என்கிற ஹீரோவுக்கு ஆன்ஸ்க்ரீனில் இருக்கும் ஆக்‌ஷன் + ரொமான்ஸ் இமேஜையும், ரசிகர்களின் மனதில் பதிந்திருக்கும் ஆஃப் ஸ்க்ரீன் ப்ளேபாய் இமேஜையும் (தென்னிந்தியாவின் ஹாட்டஸ்ட் ஸ்டார் அமலாவை கடும்போட்டியில் தட்டிக் கொண்டு போனவர் ஆயிற்றே?) அப்படியே புத்திசாலித்தனமாக காசாக்கியிருக்கிறார் இயக்குநர் கல்யாண் கிருஷ்ணா.

படத்தின் கதை ரொம்பவும் சிம்பிள்தான்.
அமெரிக்காவிலிருந்து ராமும், சீதாவும் சொந்த ஊருக்கு வருகிறார்கள். வந்த காரணம், விவாகரத்து வாங்குவது. மாமியார் ரம்யா கிருஷ்ணன் மருமகளிடம் காரணம் கேட்கிறார். மனைவியை கவனிக்காமல் எப்போதும் மருத்துவத்தொழிலையே கட்டி அழுதுக் கொண்டிருக்கிறான் ராம். கல்யாணமாகி மூன்று ஆண்டுகளில் மூணே மூன்று முறை மட்டுமே தம்பதிகளுக்குள் ‘அது’ நடந்திருக்கிறது. ஒரு நாளைக்கே மூன்று முறை ‘அது’ செய்யக்கூடிய தன் கணவனுக்கு இப்படி ஒரு பிள்ளையா என்று ரம்யாகிருஷ்ணனுக்கு கொதிப்பு ஏற்படுகிறது. இறந்துவிட்ட தன் கணவன் பங்காரம் (அதுவும் நாகார்ஜூனாதான்) போட்டோவுக்கு முன்பாக நின்று, “யோவ் பங்காரம், என்னை இப்படி தனியா தவிக்கவிட்டுட்டு போயிட்டே, உன் புள்ளைய கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினா, இப்படி வாழ்க்கையை கெடுத்துக்கிட்டு வந்து நிக்கிறான்” என்று புலம்புகிறார்.

எமலோகத்தில் எமகன்னிகளோடு ஜல்ஸா புரிந்துக் கொண்டிருக்கும் பங்காரம், மகனின் பிரச்சினையை (!) சரிசெய்ய பூலோகத்துக்கு விரைகிறார். அவரை மனைவி ரம்யாகிருஷ்ணன் மட்டும்தான் பார்க்க முடியும். பேசமுடியும். வந்தது வந்துவிட்டோம், ஒருமுறை மனைவியோடு ஜாலியாக இருந்துவிடலாம் என்று முயற்சிக்கும் செத்துப்போன பங்காரத்துக்கு அதற்கெல்லாம் அலவ்ட் இல்லை என்கிற எமலோக விதியை எமன் சுட்டிக் காட்டுகிறார்.
எப்படியாவது மகன் ராமை முறுக்கேற்றி மகளோடு சேரவைக்க, அப்பா பங்காரம் சிட்டுக்குருவித்தனமாக சிந்தித்து சில ஐடியாக்களை செயல்படுத்துகிறார். இதே காலக்கட்டத்தில்தான் அவருக்கு தெரியவருகிறது, தான் இறந்தது விபத்தால் அல்ல சதியால் என்பது. மகனை மருமகளோடு நான்காவது முறையாக வெற்றிகரமாக சேரவைக்கிறார். அவர்களுக்கு இடையேயான பிரச்சினைகளை களைந்து ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பையும் காதலையும் புரியவைக்கிறார். தன்னை வீழ்த்திய வில்லன்களையும் மகன் மூலமே பழிவாங்குகிறார்.

அவ்வளவுதான் கதை. இதை தமிழில் எடுத்தால் பெரியார் பிறந்த பகுத்தறிவு மண்ணில் எடுபடாது. ஆனால் புராண மயக்கத்தில் கிறுகிறுத்துப் போயிருக்கும் ஆந்திராவுக்கு அல்வா மாதிரி சப்ஜெக்ட். எமனை காட்டி எத்தனையோ முறை கல்லா கட்டியும், ஒவ்வொரு முறையும் முந்தைய வசூல்சாதனையை முறியடித்துக் கொண்டே போகிறார்கள்.

சக்கைப்போடு போடும் மேற்கண்ட இரண்டு படங்களிலுமே குடும்பம், குற்றம், செக்ஸ் ஆகியவைதான் கச்சா. எதை எதை எந்தெந்த அளவுக்கு கலக்க வேண்டும் என்பதை படத்தின் பட்ஜெட், ஹீரோ முதலான விஷயங்கள் தீர்மானித்திருக்கின்றன. ஆனால், சொல்லி அடித்திருக்கும் சிக்ஸர்கள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இதை போல நமக்கே நமக்கான ஃபார்முலாவை நாம் எப்போதுதான் கண்டறியப் போகிறோம்?

நாம் சமூகம் குறித்த புரிதலில் கொஞ்சம் தெளிவாகி விட்டோம். அவர்கள் சினிமா எடுப்பதில் பயங்கர தெளிவாக இருக்கிறார்கள். அப்படியே உல்டா.

அதிருக்கட்டும். பாலகிருஷ்ணா நடித்த ‘டிக்டேட்டர்?’
இரண்டரை மணி நேரம் பாட்டு, ஃபைட்டு, பஞ்ச் டயலாக், டேன்ஸ் என்று பக்கா என்டெர்டெயின்மெண்ட். பாலைய்யாவை பார்த்து சிரிப்பு, அநீதியை உணர்ந்து ஆக்ரோஷம், ஹீரோயின் அஞ்சலியை நினைத்து காமம் உள்ளிட்ட நவரச உணர்வுகளையும் படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் ஏற்படுத்துகிறார்கள். தியேட்டரை விட்டு வெளியே வந்ததுமே மூளை பிளாங்க் ஆகி ஒருமாதிரி போதிமரத்து ஞானம் (ஃபுல் அடித்த போதை என்றும் சொல்லலாம்) கிடைக்கிறது. படம் சம்பந்தப்பட்ட அத்தனை விவரங்களுமே மறந்துவிடுகின்றன. அடுத்த காட்சிக்கு க்யூவில் நிற்பவன் கேட்கிறான். “மூவி பாக உந்தியா அண்ணா?”. சட்டென்று பாலையா ஸ்டைலில் தொடை தட்டி, கண்கள் சிவந்து, விருட்டென்று ஒரு கையை உயர்த்தி அனிச்சையாக அவனை எச்சரிக்கும் தொனியில் உரத்த குரலில் சொல்கிறோம் “சூப்பருக்கா உந்திரா....”

7 ஜனவரி, 2016

குடும்பங்களின் வெற்றி!

ஒரு திரைப்படத்தின் ஒரே ஒரு காட்சியிலாவது உங்களை அறியாமல், கண்களில் கண்ணீர் துளிர்த்துவிட்டால் போதும். அந்த படம் நிச்சயம் மெகாஹிட். இரண்டாம் நபருக்கு தெரியாமல் நீங்கள் கர்ச்சீப்பை எடுத்து கண்ணைத் துடைத்துக் கொண்டது எந்தெந்த படங்களைப் பார்த்தபோது என்று யோசித்துப் பாருங்கள். இந்த உண்மை புரியும். ‘நேனு சைலஜா’ (தெலுங்கு) குறைந்தபட்சம் ஒரு காட்சியிலாவது இப்படி உலுக்கியெடுக்கிறது.

ராம் பொத்தினேனிக்கு இப்போது வயது இருபத்தெட்டுதான். ஆனால் ஹீரோவாகி பத்தாவது ஆண்டு. முதல் படமான ‘தேவதாசு’, பத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஐநூறு நாட்களுக்கும் மேலாக ஓடி மகத்தான சாதனை புரிந்தது. பதினெட்டு வயதிலேயே ஒரு ஹீரோவுக்கு இத்தகைய வெற்றி என்பது தெலுங்கு சினிமாவில் மட்டும்தான் சாத்தியம். இதே மாதிரி சாதித்த இன்னொருவர் ஜூனியர் என்.டி.ஆர்., தெலுங்கில் இதுமாதிரி ஏராளமான சாதனைகள் உண்டு. உலகிலேயே அதிக ஹிட் ரேட் கொண்ட ஹீரோ அங்குதான் இருக்கிறார். ‘விக்டரி ஸ்டார்’ வெங்கடேஷ். அவர் நடித்த முதல் 50 படங்களில் 45 படங்கள் நூறுநாள் ஓடியவை.
ராம் எத்தகைய ஹீரோ என்று வரையறுப்பது கொஞ்சம் கடினம். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். கொஞ்சம் சிகப்பாக இருக்கிறாரே தவிர்த்து, நம்மூர் விமல் மாதிரிதான் சராசரித் தோற்றம். அதிக உயரமில்லை. கொஞ்சம் reduce to fit மாதிரிதான் இருப்பார். அதனாலோ என்னவோ சீமாந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் இரண்டாம் அடுக்கு நகர இளைஞர்கள், தங்களை சினிமாவில் பிரதிநிதித்துவப்படுத்தும் நாயகனாக இவரை கொண்டாடுகிறார்கள். ஒரு படம் மெகாஹிட் என்றால் அடுத்த படம் அட்டர் ப்ளாப் என்பதுதான் ராமுடைய பத்தாண்டு கேரியர் கிராப். இத்தகைய சிக்கலான சினிமா வாழ்க்கை என்றாலும் இதற்குள்ளேயே ‘ரெடி’, ‘காண்டிரேகா’ என்று தெலுங்கு இண்டஸ்ட்ரி பாக்ஸ் ஆபிஸையே சுக்குநூறாக்கிய இரண்டு ப்ளாக்பஸ்டர் மூவிகள் இவரது ஃபிலிமோகிராபியில் உண்டு.

ஓக்கே. லெட் அஸ் கம் டூ ‘நேனு சைலஜா’

சமீபமாக அடுத்தடுத்து ப்ளாப்களையே கொடுத்துவந்த ராம், தன்னுடைய ஆக்‌ஷன் இமேஜை (!) கைவிட்டு, ‘காதலுக்கு மரியாதை’ விஜய் கணக்காக காதல், குடும்பம், சென்டிமெண்ட் என்று களமிறங்கி இருக்கும் இந்தப் படம் 2016ன் முதல்நாளில் வெளிவந்து வசூல் சுனாமியை ஏற்படுத்தியிருக்கிறது. விமர்சகர்கள், தெலுங்கில் எடுக்கப்பட்ட ‘தில்வாலே துலானியா லே ஜாயங்கே’ என்று கொண்டாடுகிறார்கள். தமிழ், இந்தி மொழிகளுக்கு ரீமேக் உரிமை வாங்க போட்டாபோட்டி நடக்கிறதாம்.

தமிழில் முதல் படம் வெளிவருவதற்கு முன்பே பரபரப்பாக புக் ஆனவர் கீர்த்தி சுரேஷ். ஆனால், ‘இது என்ன மாயம்’ வெளியானபிறகு என்ன மாயமோ தெரியவில்லை. கீர்த்தியின் கீர்த்தி அதலபாதாளத்துக்கு போய்விட்டது. இதுபோல கோலிவுட்டில் மவுசு இழந்த ஹீரோயின்களுக்கு ‘வந்தாரை வாழவைக்கும் வடுகதேசம்’தான் வேடந்தாங்கல். கீர்த்தி, தெலுங்கில் அறிமுகமாகியிருக்கும் இந்த முதல்படமே ப்ளாக் பஸ்டர் ஹிட். அங்கு இன்னும் நான்கைந்து ஹிட்டுகளை அவர் கொடுத்தபிறகு, பல கோடிகளை கொடுத்து மீண்டும் கோலிவுட்டுக்கு கூப்பிடுவோம். ஸ்ரேயா, நயன்தாரா, தமன்னா, இலியானா என்று இந்த வரலாறுக்குதான் சமீபகாலத்திலேயே எவ்வளவு எடுத்துக்காட்டுகள்?
வழக்கமான, மிக சாதாரணமான காதல் கதைதான். அதில் எந்த சந்தேகமுமில்லை. குழந்தைப் பருவத்திலேயே ராமுக்கு கீர்த்தி மீது ஈர்ப்பு. ராமின் அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றல் ஆகிறது. வளர்ந்து பெரியவர்கள் ஆனபிறகு சந்திக்கிறார்கள். ராம், கீர்த்தியிடம் காதலை வெளிப்படுத்துகிறான். ‘ஐ லவ் யூ. பட், ஐ ஆம் நாட் இன் லவ் வித் யூ’ என்று வித்தியாசமாக குழப்புகிறார் அவர்.

குழம்பிப் போன ராமுக்கு, தற்செயலாக கீர்த்தியினுடைய குடும்பப் பின்புலம் தெரியவருகிறது. ஒரு மாதிரி வடகொரியா கணக்காக இரும்புக்கோட்டையாக இருக்கும் அவர்களது குடும்பத்தை இளகவைக்கிறார். கீர்த்தியை கைப்பிடிக்கிறார். தட்ஸ் ஆல்.

இந்த சாதாரண ரொமான்ஸ் ஃபேமிலி டிராமாவில் இயக்குநர் அடுக்கியிருக்கும் காட்சித் தோரணங்கள்தான் சம்திங் ஸ்பெஷல். சின்ன சின்ன ஃப்ரேமை கூட விடாமல் ஒவ்வொரு பிக்ஸெலாக செதுக்கித் தள்ளியிருக்கும் ரிச் மேக்கிங். ஒவ்வொரு காட்சியுமே புத்திசாலித்தனமான ஐடியாவால், நறுக்கான வசனங்களால் ‘அட’ போடவைக்கிறது.

“நல்லா இருக்குங்கிறது வேற. நமக்கு பிடிச்சிருக்குங்கிறது வேற” – இதுமாதிரி எளிமையான, ஆனால் சுரீர் வசனங்கள்.
படத்தின் க்ளைமேக்ஸுக்கு சற்று முன்பாக ஒட்டுமொத்தப் படத்தின் சுமையையும் ஒரே காட்சியில் தங்கள் தோள்களுக்கு மாற்றிக் கொள்கிறார்கள் சத்யராஜும், ரோகிணியும். “பொண்ணுக்கு கல்யாணமானா பெத்தவங்களை விட்டுட்டு புகுந்த வீட்டுக்குப் போகணும்னு எவன்யா எழுதினான்? சத்தியமா சொல்றேன், அவன் பொண்ணு பெத்தவனா இருக்கமாட்டான்!” என்று சத்யராஜ் உருகும்போதும், “எல்லோரையும் மாதிரி என் புருஷனும் என்கூட நடந்துக்கணும்னுதான் ஆசை. ஆனா, அவரு என் குழந்தைகளுக்கு நல்ல தகப்பனா இருக்கணுங்கிறதுக்காக எவ்வளவோ இழந்திருக்காரு. அப்பா கிட்டே அவருக்கு கிடைக்காத கவுரவம், அவரோட பிள்ளைங்க கிட்டே கிடைச்சா போதும்” என்று ரோகிணி ஈரமான கண்களோடு பேசும்போதும் அதுவரை சிரித்து கும்மாளமாக படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்கள். இவ்வளவு திறமையான இந்த கலைஞர்களை வைத்து தமிழில் இன்னமும் அம்மி கொத்திக் கொண்டிருக்கிறோமே என்கிற வேதனைதான் நமக்கு ஏற்படுகிறது.

படம் முடியும்போது, இப்படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களின் சாயலையும் நம் உறவுகளில் தேடி ஒப்பிட்டு மகிழ்கிறோம். இரத்தமும் சதையுமான நம் ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் நெருக்கமான கதையை சொல்லியிருப்பதாலேயே ‘நேனு சைலஜா’ எவரெஸ்ட் ஹிட்டை எட்டியிருக்கிறது. இது, நம் இந்திய குடும்பமுறை பாரம்பரியமாக தொடரும் வெற்றிகரமான வாழ்வியலை அடையாளப்படுத்தும் மகத்தான வெற்றியும் கூட.

26 நவம்பர், 2015

கதைக்கார தேவர்

“யார் யாரோ வர்றாங்க. தேவருக்கு நூற்றாண்டு விழான்னு ஆரம்பிக்கிறாங்க. பேஷா செய்யலாமேன்னு சொல்றேன். போயி கலந்து பேசிட்டு உடனே வர்றோமுன்னு கிளம்புறாங்க. அவ்வளவுதான். அப்புறம் என்ன ஆனாங்கன்னே தெரியாது. தமிழ் சினிமாவுக்கு தேவர் எவ்வளவு பங்களிப்பு செஞ்சிருக்காரு. எவ்வளவு சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்காரு. எத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுத்திருக்காரு. வள்ளலா வாரி வாரி வழங்கியிருக்காரே. கருத்து கட்சி வேறுபாடுகளை மறந்து எல்லாருமா சேர்ந்து எவ்வளவு பிரும்மாண்டமா நடத்திக் காட்டியிருக்கணும். மறந்துவிடக்கூடிய மனிதரா அவரு. வயசு மட்டும் ஒத்துழைச்சிருந்தா நானே ஆடி, ஓடி செஞ்சிருப்பேன்” கலைஞானத்தின் கண்களில் கடந்தகாலம் நிழலாடுகிறது.

எட்டு வயதில் டூரிங் தியேட்டரில் முறுக்கு விற்றுக் கொண்டிருந்த கலைஞானம், பிற்பாடு முப்பது படங்களுக்கு கதை எழுதி, நூற்றுக்கணக்கான படங்களின் திரைக்கதை விவாதங்களில் பங்குபெற்று, தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் தேவரின் கதை இலாகா அவ்வளவு பிரபலம். திரைப்படத்தின் டைட்டிலிலேயே ‘கதை : தேவர் கதை இலாகா’ என்று பெயர் வரும்போது ரசிகர்கள் கைத்தட்டி மகிழ்வார்கள். அந்த பிரசித்தி பெற்ற கதை இலாகாவின் தூண்களில் ஒருவராக இருந்தவர் கலைஞானம்.

சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் குறித்த தன்னுடைய நினைவலைகளை தினகரன் தீபாவளி மலருக்காக பகிர்ந்துக் கொண்டார்.
“எல்லாம் தேவரோட ஆசி. நான் நல்லா இருக்கணும்னு முதல் சந்திப்பிலேயே விரும்பினவரு அவரு. அப்போதான் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிக்கிட்டிருந்தேன். சிவம்னு ஒருத்தரு தேவரண்ணனோட குழுவில் இருந்தவரு. அவர்தான் என்னை அண்ணன் கிட்டே அழைச்சிட்டுப் போனாரு.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு நான் எழுதிக்கொடுத்த படங்களோட பேரையெல்லாம் வரிசையா சொன்னவரு, ‘இதையெல்லாம் நீதானே எழுதினே’ன்னு கேட்டாரு. ‘ஆமாம்’னு சொன்னேன். ‘கோபாலகிருஷ்ணனே அருமையா கதை சொல்லுவாரு. அவரையே நீ கதை சொல்லி அசத்தியிருக்கே. கெட்டிகாரன் தாம்பா’ன்னு பாராட்டினாரு.

கொஞ்ச நேரம் பேசிட்டு, குடும்ப நிலவரத்தை விசாரிச்சாரு. அப்போ நான் பெருசா சம்பாதிக்கலை. அதை சொன்னதும், ‘அடப்பாவி, இவ்வளவு ஹிட்டு கொடுத்துட்டு இன்னும் ஒண்ணும் சேர்த்து வைக்கலையா?’ன்னு கேட்டாரு.

உடனே தன்னோட தம்பிகிட்டே சொல்லி பத்தாயிரம் ரூபாய் எடுத்துக்கிட்டு வரச் சொன்னாரு. என் கையிலே கொடுத்து, ‘இது வெறும் அட்வான்ஸ்தான். இதை எடுத்துட்டு ஊருக்குப் போய் ஏதாவது நிலபுலன் வாங்கி போட்டுட்டு வா. எதிர்காலத்துக்கு உதவும். மத்ததையெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்’னு சொன்னாரு. இப்படிதான் நான் தேவர் கிட்டே சேர்ந்தேன்.

தேவரோட இருந்த ஒவ்வொருத்தருக்கும் இதுமாதிரிதான் அனுபவம் இருக்கும். அறிமுகமானவுடனேயே ஒருத்தர் மேலே அளவில்லாமே அக்கறை காட்ட தேவராலே மட்டும்தான் முடியும்.

தேவர் கிட்டே வேலைக்கு சேர்ந்ததுமே தினமும் ஒரு கதை சொல்ல சொல்லுவாரு. கதை இலாகாவை சேர்ந்தவங்களுக்கு இது மட்டும்தான் வேலை. நாங்க சொல்லிக்கிட்டே இருப்போம். அவரு கேட்டுக்கிட்டே இருப்பாரு. பிடிக்கலைன்னா துப்பிடுவாரு. பிடிச்சிருந்தா உடனே ஓக்கே பண்ணி வெச்சுப்பாரு. ஏதாவது படம் படப்பிடிப்பிலே இருந்தாகூட கேப் விடமாட்டார். நாங்க அடுத்தடுத்த படத்துக்கு கதை சொல்லிக்கிட்டே இருக்கணும். எங்களையெல்லாம் ஆசையா ‘டேய் கதைக்காரனுங்களா...’ன்னுதான் கூப்பிடுவாரு.

அவரும் சுவாரஸ்யமா கதை சொல்லுவாரு. அண்ணன் சொல்ல ஆரம்பிச்சாருன்னா நேரம் போறதே தெரியாது. அவரோட வாழ்க்கையோட ஒவ்வொரு அங்குலத்தையும் மனசு திறந்து எங்களிடம் சொல்லியிருக்காரு.
சின்ன வயசுலே அண்ணன் எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி உடம்பை நல்லா பலமா வெச்சிருப்பாரு. கோயமுத்தூர் ராமநாதபுரம் பகுதியிலே ‘மாருதி உடற்பயிற்சி நிலையம்’னு இருந்துச்சி. அங்கேதான் அண்ணன் பயிற்சி பண்ணுவாரு. அவருக்கு சினிமாவிலே பெரிய ஸ்டண்ட் கலைஞரா வரணும்னு ஆசை. அங்கேதான் எம்.ஜி.ஆரும் உடற்பயிற்சி செய்ய வருவார். இப்படியாக ரெண்டு பேருக்கும் நட்பு மலர்ந்துச்சி.

அண்ணன் மாச சம்பளத்துக்கு ஜூபிடர் பிக்சர்ஸ்லே வேலைக்கு சேர்ந்துட்டாரு. ஷூட்டிங் இருந்தாலும் சரி. இல்லைன்னாலும் சரி. அவருக்கு மாசாமாசம் சரியா சம்பளம் வந்துடும். ஆனா அப்போ எம்.ஜி.ஆர் காண்ட்ராக்டுலே இல்லை. அதனாலே அவருக்கு வேலை இருந்தாதான் காசு. குடும்ப கஷ்டம்.

ஒருமுறை தேவரண்ணன் எம்.ஜி.ஆர் வீட்டு வழியா நடந்து போய்க்கிட்டிருக்காரு. அப்போ எம்.ஜி.ஆரோட தாய் சத்யாம்மா தெருவிலே மிரண்டுப்போய் நின்னுக்கிட்டிருந்தாங்க. என்ன்ன்னு இவரு கேட்டிருக்காரு. ‘காசு வாங்கிட்டு வர்றேன்னு முதலாளியை பார்க்க ராமச்சந்திரன் போயிருக்கான். அவன் வந்து காசு கொடுத்தப்புறம்தான் அரிசி வாங்கி சமைக்கணும். இப்பவே இருட்டிடிச்சி. புள்ளை பசியோட வருவான். என்ன செய்யுறதுன்னு தெரியலை’ன்னு அம்மா சொல்லியிருக்காங்க. தேவருக்கு அப்படியே ஒரு மாதிரி ஆயிடிச்சி.

உடனே தன்னோட வீட்டுக்கு ஓடிப்போனவரு சமையலறைக்கு போய் அரிசிப்பானையிலே இருந்து அரிசியை எடுத்து தன்னோட சட்டை, டவுசர் பாக்கெட்டில் எல்லாம் நிரப்பிக்கிட்டு எம்.ஜி.ஆர் வீட்டுக்கு ஓடியிருக்காரு. அந்த அரிசியை கொடுத்து சீக்கிரமா சோறு வடிச்சி வைங்கம்மான்னு சொல்லியிருக்காரு.

நைட்டு வீட்டுக்கு வந்துப் பார்த்த எம்.ஜி.ஆர், சாதம் தயாரா இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கார். சத்யாம்மா என்ன நடந்ததுன்னு மகன் கிட்டே சொல்லியிருக்காங்க. அப்படியே நெகிழ்ந்துப் போயிட்டாராம் எம்.ஜி.ஆர்.

பிற்பாடு எம்.ஜி.ஆரை வெச்சி தேவர் எப்படி அதிகப் படங்கள் தயாரிச்சாருங்கிறதுக்கு இந்த சம்பவம் ஒரு முக்கியமான காரணம். ஒருத்தரு மேலே ஒருத்தரு அவ்வளவு அன்பு ஆரம்பத்துலேருந்தே வெச்சிருந்தாங்க.

தேவருக்கு கல்யாணமாகி குழந்தைகள்லாம் பிறந்திருந்தது. சினிமாவையெல்லாம் மறந்துட்டு கோயமுத்தூரில் பால் கடை நடத்திக்கிட்டிருந்தாரு. நேர்மையா வியாபாரம் பார்க்குறவரு என்பதால் பிசினஸ் நல்லா இம்ப்ரூவ் ஆச்சி. பழைய சினிமா ஆளுங்க அப்பப்போ வந்து தேவரை பார்த்து பேசிட்டு போவாங்க. அப்படிதான் ஒருமுறை கேமிராமேன் விஜயனும், நடிகர் எஸ்.ஏ.நடராஜனும் பேசிக்கிட்டிருந்தாங்க.

பேச்சுவாக்கிலே நாமளே படம் தயாரிக்கலாம்னு திட்டம் தீட்டினாங்க. மூணு பேரும் காசு போட்டு படக்கம்பெனி ஆரம்பிச்சாங்க. பால் வியாபாரத்துலே சேர்த்த காசை தேவரண்ணன் முதலீடா போட்டாரு.

படம் பேரு ‘நல்ல தங்கை’. எஸ்.ஏ.நடராஜனே நடித்து இயக்கினார். கதை, வசனம் ஏ.பி.நாகராஜன். நம்பியார், ராஜசுலோசனா, மாதுரிதேவின்னு நடிக நடிகையர் எல்லாம் ஸ்டார்ஸ். படம் பூஜை போட்ட அன்னிக்கே நல்லா வியாபாரம் ஆச்சி. நல்லா வளர்ந்துக்கிட்டிருந்த நேரத்துலே ஒரு பிரச்சினை. பார்ட்னர் ஒருத்தர் கொஞ்சம் ‘அப்படி இப்படி’ புதுமுக நடிகை ஒருத்தர் கிட்டே நடந்துக்கிட்டு, விஷயம் தேவரண்ணன் காதுக்கு வந்துச்சி. இப்படியே போச்சின்னா தன்னோட பேரும் கெட்டுப் போயிடும்னு தேவர் போய் அவரோட சண்டை போட்டாரு. அடிதடி லெவலுக்கு போக அப்புறம் எல்லாரும் வந்து சமரசம் பண்ணி, தேவரண்ணன் தன்னோட பங்கை பிரிச்சி வாங்கிக்கிட்டாரு.

சினிமா ஃபீல்டுக்குள்ளே நுழையணும்னு ஆசைப்பட்டு இப்படி ஆகிப்போச்சேன்னு அவருக்கு வேதனை. ஏ.பி.நாகராஜன்தான் சமாதானப்படுத்தி, ‘நீங்களே தேவர் பிலிம்ஸ் என்கிற பேருலே படக்கம்பெனி ஆரம்பிக்கலாமே?’ன்னு யோசனை சொன்னாரு. தேவருக்கு படக்கம்பெனி ஆரம்பிக்கிற ஐடியாவை விட கம்பெனிக்கு ஏ.பி.என். சொன்ன பேரு ரொம்ப புடிச்சிருந்தது. குடும்பத்தை அப்படியே சென்னைக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. தி.நகரில் சின்னதா ஒரு ஆபிஸ் போட்டாரு. இப்படிதான் புகழ்பெற்ற தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தோன்றிச்சி.
முதல் படமே எம்.ஜி.ஆரை வெச்சிதான் தயாரிக்கணும்னு முடிவு பண்ணியிருந்தாரு. அதுதான் ‘தாய்க்குப் பின் தாரம்’. படம் எடுக்குறப்பவே தேவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் கதையோட முடிவு விஷயத்தில் சின்ன மனஸ்தாபம். இதனாலே அடுத்து ரஞ்சனை வெச்சி நீலமலைத் திருடன் எடுத்தாரு தேவர். இதுவும் வெற்றிப்படம் தான்னாலும் ‘தாய்க்குப் பின் தாரம்’ அடைந்த வெற்றியை தொட முடியலை. அடுத்து ‘செங்கோட்டை சிங்கம்’னு ஒரு படம். இது ஓடலை. ஜெமினியை வெச்சி ‘வாழவைத்த தெய்வம்’ எடுத்தாரு. சுமாராதான் போச்சி. ‘யானைப்பாகன்’, ‘கொங்கு நாட்டு தங்கம்’னு அடுத்தடுத்து ரெண்டு ஃபெய்லியர்.

தேவர் ஃபிலிம்ஸ்லே கலகலத்துப் போயிடிச்சி. இனிமேல் தேவர் அவ்வளவுதான்னு எல்லாரும் அவரை விட்டு விலக ஆரம்பிச்சாங்க. எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு கோயமுத்தூருக்கே திரும்பப்போய் ஏதாவது தொழில் செஞ்சி பிழைச்சுக்கலாம்னு அண்ணன் முடிவெடுத்திருக்காரு. அப்போதான் நாகிரெட்டி நிலைமையை கேள்விப்பட்டு கூப்பிட்டு அனுப்பியிருக்காரு. ‘நீங்க தொடர்ந்து சினிமா தயாரிக்கணும்’னு சொல்லி அவரோட ஸ்டுடியோவில் எந்த வேலையா இருந்தாலும் செஞ்சுக்கலாம். காசு பத்தியெல்லாம் பிற்பாடு பேசிக்கலாம்னு சொல்லிட்டாரு.

சரி. ஒருமுறை முயற்சிக்கலாம்னு அண்ணனும் சாங்ஸ் ரெக்கார்ட் பண்ணிட்டு வேலையை தொடங்கினாரு. அப்போ எம்.ஜி.ஆருக்கு கால் உடைஞ்சிருந்த சமயம். யதேச்சையா அண்ணனும், அவரும் வாகினி ஸ்டுடியோவில் எதிர்படுறாங்க. ஏற்கனவே இருந்த மனஸ்தாபத்தாலே அஞ்சு வருஷம் பிரிஞ்சிருந்த நண்பர்கள் ஒருத்தரை ஒருத்தர் கட்டி தழுவிக்கிறாங்க. தன்னைப் பத்தி பேசாம, எம்.ஜி.ஆரோட நலனைப் பத்தி மட்டுமே விசாரிச்சிக்கிட்டிருந்தாரு தேவர்.

அப்போ எம்.ஜி.ஆர் செஞ்ச ஒரு காரியம் மகத்தானது. தேவரை தன்னோடவே தன் வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போனார். அவரோட தாய் சத்யபாமா படத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் மவுனமா நின்னாங்க. ‘அண்ணா! என் தாய் மீது ஆணை. இனிமேல் நீங்க எப்போ என்னை கேட்டாலும் கால்ஷீட் இல்லைன்னு சொல்லமாட்டேன்’னு சத்தியம் பண்ணினாரு.

சத்தியபாமா தாய் சொர்க்கத்திலிருந்தே தேவரை ஆசிர்வதிச்சிருக்கணும். உடனே தான் எடுத்துக்கிட்டிருந்த படத்துக்கு எம்.ஜி.ஆரை ஹீரோவா போட்டாரு. தேவர், படத்துக்கு வெச்ச பேரை பார்த்தோம்னா, அவரு எவ்வளவு பெரிய குசும்புக்காரருன்னு தெரியும். எம்.ஜி.ஆர் செய்த சத்தியத்தை நினைவுறுத்தும் விதமா ‘தாய் சொல்லைத் தட்டாதே’ன்னு பேரு வெச்சாரு.

அதில் தொடங்கி அடுத்தடுத்து எம்.ஜி.ஆரை வெச்சி பதினாறு படம் தயாரிச்சாரு. எம்.ஜி.ஆர் படம் எடுக்கலைன்னா தண்டாயுதபாணி பிலிம்ஸ் பேனரில் மிருகங்களை வெச்சி படம் எடுப்பாரு. பக்திப்படம் எடுப்பாரு. இந்திக்கெல்லாம் போய் ராஜேஷ்கண்ணாவை வெச்சு ‘ஹாத்தி மேரா சாத்தி’யெல்லாம் எடுத்து வெற்றிக்கொடி நாட்டினார். தேவர் பிலிம்ஸ் என்றால் நாடு முழுக்க தெரியுமளவுக்கு கம்பெனியை வளர்த்தார். கதையை முதல்லேயே பக்காவா ரெடி பண்ணி வெச்சுக்கிட்டு குறுகிய காலத்துலே படப்பிடிப்பை முடிச்சி நாற்பது, நாற்பத்தஞ்சி நாளில் முழுப்படத்தையும் எடுத்துடுவாரு. உழைப்புக்கு தாராளமா ஊதியம். அதே நேரத்தில் வேலையில் கறாரான கண்டிப்புங்கிறதுதான் தேவரோட ஃபார்முலா.

தன் கூட இருக்குறவங்களும் தன்னை மாதிரியே முன்னேறனும்னு நெனைக்கிற பரந்த மனசு. என்னை தயாரிப்பாளர் ஆக்கி அழகு பார்க்க விரும்பினார் தேவர். ‘எல்லாத்தையும் நானே கூட இருந்து முடிச்சிக் கொடுக்கறேன்’னு வாக்கும் கொடுத்தார். நானும் உற்சாகமா போய் முதன்முதலா ரஜினியை ஹீரோவா புக் பண்ணினேன். வில்லன் வேஷம் பண்ணிக்கிட்டிருக்குறவரை ஹீரோவாக்குறியே, சரிபடாதுன்னு தேவர் விலகிட்டாரு. அவரு பேச்சை கேட்கலைன்னு என் மேலே கோவம் கூட பட்டாரு.
எப்படியோ கஷ்டப்பட்டு ‘பைரவி’ படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணினேன். முதல் காட்சி முடிந்ததுமே தேவரண்ணன் கூப்பிட்டு அனுப்பினாரு. ‘நீ ஜெயிச்சிட்டடா’ன்னு சொன்னாரு. எனக்கு குழப்பமாயிடிச்சி. இப்போதானே முதல் காட்சியே முடிந்திருக்கு, அண்ணன் நம்மளை சமாதானப்படுத்த சொல்றாரோன்னு நெனைச்சேன். ‘நீங்க படம் பார்த்த அதே தியேட்டர்லேதாண்டா நானும் மாறுவேஷத்துலே பார்த்தேன். படம் பிரமாதம். நீ ஜெயிச்சிட்டே’ன்னு திரும்பச் சொன்னாரு. அப்போதான் அண்ணன் என் மேலே எவ்வளவு அக்கறையா இருந்திருக்காருன்னு தெரிஞ்சது.

நான் இந்தப் படத்தை தயாரிச்சிக்கிட்டிருந்த நேரத்துலே தினமும் பூஜையிலே உட்கார்ந்து, நான் ஜெயிக்கணும்னுதான் முருகனை வேண்டிக்கிட்டிருந்திருக்காரு. தயாரிப்பாளர் ஆயிட்டதாலே பொம்பளை, தண்ணீன்னு கெட்ட பழக்க வழக்கம் பக்கமா போறேனான்னு ஆளுங்களை வெச்சி கண்காணிச்சி இருக்காரு. அப்படியெல்லாம் இல்லைன்னு தெரிஞ்சதும்தான் என்னோட வெற்றியையே அங்கீகரிச்சாரு.

எந்த ரஜினியை வெச்சி படம் பண்ணக்கூடாதுன்னு அண்ணன் எனக்கு சொன்னாரோ, அதே ரஜினியை வெச்சி மூணு படம் அடுத்தடுத்து பண்ணனும்னு ஆசைப்பட்டாரு. என்னை கதைகூட ரெடி பண்ணச் சொன்னாரு. அந்த படம்தான் ‘தாய் மீது சத்தியம்’.

அதுக்காக அவரோட ஆபிசுக்கு போய் வந்துக்கிட்டு இருந்தேன். ஊட்டியிலே அமிதாப்பச்சனை வெச்சி தேவர் எடுத்துக்கிட்டிருந்த படத்தோட ஷூட்டிங். அதுக்கு கிளம்பிக்கிட்டிருந்தார். ஆபிஸில் அப்போ கொஞ்சம் கையாடல் மாதிரி ஊழல்கள் நடந்து, தேவரண்ணன் கொஞ்சம் மனவருத்தத்தில் இருந்தார். ஒரே நேரத்துலே மூணு படம் எடுக்கற டென்ஷன் வேற. முருகன் படத்துக்கு முன்னாடி நின்னு, “ஏண்டா என்னை இப்படி சோதிக்கறே? சீக்கிரமா என்னை கூப்பிட்டுக்கடா”ன்னு மனமுருக வேண்டினார். எனக்கு அப்படியே பக்குன்னு ஆயிடிச்சி.

மூணு நாள் கழிச்சி செய்தி வந்தது. எங்களை வாழவைத்த தெய்வம் எங்களை விட்டுப் போனது. அவர் கேட்டுக்கிட்ட மாதிரியே முருகன் அவரை அழைச்சிக்கிட்டான். இத்தனைக்கும் தேவரண்ணனுக்கு அப்போ வயசு வெறும் அறுபத்தி நாலுதான். நாற்பது வயசுலேதான் அவரோட சினிமா வாழ்க்கையே தொடங்கிச்சி. மிகக்குறுகிய காலத்தில் அப்படியொரு அமரப்புகழை அடைந்த மகத்தான சாதனையாளர் அவர். சினிமா எப்படி எடுக்கணும்னு கத்துக்கணும்னா, தேவர் என்னவெல்லாம் செஞ்சிருக்காருன்னு தெரிஞ்சிக்கிட்டாலே போதும். ஒரு மனிதன் எப்படி வாழணும்னாலும் அவருதான் எல்லாருக்கும் பாடம்”

(நன்றி : தினகரன் தீபாவளி மலர் 2015)