8 நவம்பர், 2010

வலை வீசம்மா வலை வீசு!


ஜாக்கி சேகர், கேபிள் சங்கர், வால்பையன், ஆல்-இன்-ஆல் ராஜன், பன்னிக்குட்டி ராமசாமி, பலாபட்டறை ஷங்கர், ராம்ஜி யாஹூ, வெறும்பய, ரமேஷ்-ரொம்ப நல்லவன் (சத்தியமா), மங்குனி அமைச்சர், குசும்பன், கஞ்சா கருப்பு, குடுகுடுப்பை, எல் போர்ட் – பீ சிரியஸ், ராயல்ராஜ் (பெயரில் மட்டும்) – இவர்களெல்லாம் யார்?

வடசென்னை கேங்லீடர்கள் என்று அவசரப்பட்டு நினைத்துவிடாதீர்கள். இவர்களெல்லாம் வலைப்பூக்களில் எழுதும் எழுத்தாளர்கள். ஒவ்வொருவருக்கும் வேறு சொந்தப் பெயர் இருந்தாலும், பெரும்பான்மையானவர்கள் இதுபோல 'டெர்ரர்' புனைபெயர் வைத்துக் கொண்டு 'மிரட்டுகிறார்கள்'

இணையத்தில் இயங்கும் வலையுலகத்தை சுவாரஸ்யமாக்குவதில் இது போன்ற வித்தியாசமான புனைப்பெயர்களுக்கும் வித்தியாசமான கருத்துக்களுக்கும், கமெண்ட்களுக்கும் முக்கியப் பங்குண்டு.

சரி. அதென்ன வலையுலகம்?

முன்பெல்லாம் ஊரில் சிலர் எப்போது பார்த்தாலும் கதையோ, கவிதையோ எழுதிக் கொண்டிருப்பார்கள். வெளிவரும் எல்லாப் பத்திரிகைகளுக்கும் தங்களுடைய படைப்பை அனுப்பி, அவை திரும்பி, திரும்ப வேறொரு படைப்பை அனுப்பி, அதுவும் திரும்பி.. இப்படியே விக்கிரமாதித்தன் – வேதாளம் கதைதான் நடக்கும். நொந்துப்போன அந்த படைப்பாளி 'கையெழுத்துப் பத்திரிகை' தொடங்கி விடுவார். இதற்குப் பிறகாக தன் பத்திரிகையை படிக்கச் சொல்லி தன்னுடைய சுற்றுவட்ட நண்பர்களையும், உறவினர்களையும் அணுக அவர்கள் தலை தெறிக்க இட்த்தைக் காலி பண்ணிக் கொண்டு ஓடுவார்கள்

கொஞ்சம் 'பசை'யுள்ள படைப்பாளியாக இருக்கும் பட்சத்தில், லோக்கல் பிரிண்டிங் பிரஸ்ஸில் மாதாமாதம் கைக்காசைப் போட்டு அச்சடித்து, சொந்தமாக 'பத்திரிகை ஆசிரியர்' ஆகிவிடுவார். கடைகளில் யாரும் வாங்கமாட்டார்கள் என்பதால், செல்போன் எஸ்.எம்.எஸ். வியாபாரி போல கிடைக்கும் முகவரிக்கெல்லாம் அனுப்பிவைத்து 'கொசுக்கடி தாங்கமுடியலையடா நாராயணா' என்று நொந்து கொள்ளச் செய்வார். அந்தப் படைப்பாளியிடம் நம் முகவரி மாட்டிக் கொண்ட காரணத்தாலேயே மாதாமாதம், அவருடைய இலக்கிய அவஸ்தையை பொறுத்துக் கொண்டு போயாகவேண்டும். எங்கேயாவது நேரில் பார்த்துவிட்டால் "ஏப்ரல் மாசம் உங்களைப் பத்தி ஒரு பின்நவீனத்துவக் கவிதை எழுதியிருந்தேனே.. படிச்சீங்களா?" என்று கேட்டுத் வைப்பார். நாம் ஙே!

இதெல்லாம் அந்தக் காலம். டெக்னாலஜி ஈஸ் ஸ்..சோஓஓஓஓ... மச் இம்ப்ரூவ்ட். கையெழுத்துப் பத்திரிகையாகவும், லோக்கல் இலக்கியப் பத்திரிகையாகவும் படைப்பாளிகள் இலக்கியச் சேவை ஆற்றிய காலம் முடிந்துவிட்டது. தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் ஏதோ ஒரு பக்கவிளைவாக கையெழுத்துப் பத்திரிகைக் கவிஞர்கள் இப்போது உலகளவில் புகழ் பெற்ற கவிஞர்களாகவும், கவிதாயினிகளாகவும்  ஆகிவிட்டார்கள். இலக்கியத்தில் புரட்சி பூத்துவிட்டது!  இப்போது யாரும் கைவலிக்க எழுதி கையெழுத்துப் பத்திரிகை நடத்துவதில்லை. Blog  என்ற ஒரே சொல்லில் ஆங்கிலத்திலும், வலைப்பதிவு வலைப்பூ என்று இரண்டு சொற்களில் தமிழிலும் வழங்கப்படும் இலவச இணையங்கள் தோன்றிவிட்டன.

ஆமாம் இங்கு எல்லாமே இலவசம்தான். உங்களுக்குத் தேவையானது எல்லாம் ஒரே ஒரு மின்னஞ்சல் முகவரி. அதைக் கொண்டு நீங்கள் வலைப்பூவைத் துவக்கி விடலாம். www.blogger.com  என்ற வலைத்தளத்திற்குப் போனால், பாப்பாக்களுக்குக் கையைப் பிடித்து எழுதச் சொல்லிக் கொடுப்பதைப் போல வலைப்பூ ஆரம்பிக்கக் கற்றுக் கொடுப்பார்கள். இன்னொரு சுலப வழி உங்கள் நண்பர்கள் அல்லது அலுவலகத்தில் சதா சர்வ காலமும் கணினி முன்னாலேயே இருப்பவர்களின் பெயர்களை எல்லாம் எழுதி சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு ஒரு பெயரை எடுங்கள். அவர் அநேகமாக ஒரு வலைப்பதிவராக இருப்பார்!   .

வலைப்பூ (அ) வலைப்பதிவுகளில் எழுதிவரும் ஆயிரக் கணக்கான  படைப்பாளிகள் இந்த இரண்டு வழிகளில் ஒன்றைப் பினபற்றித்தான் வலைப்பதிவுகளைத் துவக்கினார்கள் வலைப்பூவில் ஆரம்பத்தில் சுமாராக எழுதி, போக போக எழுத்தில் 'கில்லி'யாகி, பிரபல பத்திரிகைகளால் கவனிக்கப்பட்டு வாய்ப்பளிக்கப்பட்டவர்களும் உண்டு. நிறைய வலைப்பதிவர்கள் புத்தகங்கள் கூட எழுதியிருக்கிறார்கள்.

மூன்றாவது வலைப்பதிவிலேயே சரக்கு காலியாகி, டைரி லெவலுக்கு வந்து, பின் பத்திரிகைகளில் வந்ததை எடுத்துக் காப்பி & பேஸ்ட் செய்பவர்களும் உண்டு.  

ஜெயமோகன், சாருநிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், பா.ராகவன்,  போன்ற பிரபலமான எழுத்தாளர்கள் பலரும் தமிழில் வலைப்பூ எழுதுகிறார்கள். ஊடகங்களில் தங்களால் எழுதமுடியாத சில விஷயங்களுக்கு வலைப்பூவை பயன்படுத்திக் கொள்கிறார்கள். தங்கள் வாசகர்களோடு நேரடியாக தொடர்புகொண்ட உரையாட வலைப்பூக்கள் இவர்களுக்கு உதவுகிறது.

வலைப்பதிவர்கள் ஏன் எழுதுகிறார்கள்?

"வலைப்பதிவு இல்லையென்றாலும் காகிதத்தில் எதையாவது எழுதிக் கொண்டே இருப்பேன். எழுதுவது என்பது ஒரு அனுபவப் பகிர்வு. நம் கருத்துகள் சிலருக்காவது பிடிக்குமென்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்" என்கிறார் கவிஞர் சு. தணிகை (marubadiyumpookkum.wordpress.com). ஆனால் இவரைப் போல இல்லாமல் வெறுமனே பொழுதுபோக்குக்கு எழுதுபவர்கள் அதிகமாகி விட்டார்கள் என்பதுதான் பழைய வலைப்பதிவர்களின் விமர்சனம்.

எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை வலைப்பதிவுகளை விமர்சிக்கும்போது, "இதனால் பதினைந்து நிமிட பிரபலம் கிடைக்கிறது" என்று குறிப்பிட்டார்.

சரி. என்னதான் எழுதுகிறார்கள்?

இவர்களது மொழியில் சொன்னால் 'மொக்கை'தான் அதிகம். முதல் நாள் முதல் காட்சியே ஏதாவது ஒரு மொக்கைப் படத்தை பார்த்துவிட்டு, "அந்தப் படத்தைப் பார்க்காதீங்க!" என்று அதிரடியாக சொல்லுவார்கள். படத்தின் டைட்டிலில் தொடங்கி, எண்ட் கார்ட் வரை கதையை அப்படியே விமர்சனமென்ற பெயரில் எழுதுவார்கள். இயக்குனர் சேரனின் ஒரு படம் போதிய வரவேற்பை வணிகரீதியாக பெறாதபோது, ஒரு டிவி நிகழ்ச்சியில் இந்த வலைப்பதிவர்களை பற்றி நொந்துப்போய் பேசினார்.

அதே நேரத்தில் இந்த மொக்கை சினிமாக்களை தவிர்த்து மாற்று சினிமாக்கள் குறித்த அறிமுகத்தை தரும் வலைப்பதிவர்களும் நிறைய உண்டு. சுரேஷ்கண்ணன் (pitchaipathiram.blogspot.com) என்னும் பதிவர், தொடர்ச்சியாக மாற்று சினிமா குறித்த அறிமுகத்தை தந்து வருகிறார். வெகுஜன ரசனையின் அபத்தத்தை 'சுரீர்' வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். ஆர்.வி. என்ற பதிவரின் 'அவார்டா கொடுக்குறாங்க?' (awardakodukkaranga.wordpress.com) என்ற வலைப்பூவில் பழைய, நல்ல சினிமாக்கள் குறித்த விரிவான அலசல்கள் படிக்க கிடைக்கிறது.

அரசியல் பதிவுகள் நிறைய எழுதுகிறார்கள். ஆயினும் ஆழமான அரசியல் விமர்சனங்கள் மிகக்குறைவான பதிவர்களிடமே காணக் கிடைக்கிறது. பெரும்பாலும் அன்றைய செய்தித்தாள்களில் வந்த செய்திகளை வாசித்து டென்ஷனாகி, "ஏய் மனிதனே!" டைப்பில் பக்கெட்டுக் கவிதைகள் எழுதுவார்கள். அல்லது வாசித்த செய்தியை அப்படியே 'டைப்' அடித்து வலையில் ஏற்றுவார்கள். செய்திகளை வாசித்து அவற்றை அலசி மாற்றுக்கருத்தை முன்வைப்பவர்கள் அரிதாகவே காணப்படுகிறார்கள்.

வினவு (vinavu.com), மருதன் (marudhang.blogspot.com), பைத்தியக்காரன் (naayakan.blogspot.com), ரோஸாவசந்த் (rozavasanth.blogspot.com), சுகுணாதிவாகர் (sugunadiwakar.blogspot.com), சுடலைமாடன், மாதவராஜ்(mathavaraj.blogspot.com), குழலி(kuzhali.blogspot.com), ப்ரூனோ (doctorbruno.net), ஓசை செல்லா (osaichella.blogspot.com) போன்ற சில பதிவர்களின் அரசியல் பதிவுகள் குறிப்பிடத்தக்கவை. பொதுப்புத்தியை எதிர்த்து எந்தவொரு பிரச்சினையிலும் மாற்றுப்பார்வையை முன்வைக்கும் அரசியல் பதிவுகளை பூதக்கண்ணாடி வைத்துத் தேடிப்பார்த்தால் படிக்கக் கிடைக்கும்.

'கிழக்கு பதிப்பகம்' பத்ரி (thoughtsintamil.blogspot.com) ஒரு கருத்து எந்திரன். அவரது வலைப்பூவில் நீங்கள் எதைவேண்டுமானாலும் எதிர்ப்பார்க்கலாம். உலகின் எல்லா விஷயங்களுக்கும் ஏதோ ஒரு கருத்தோ அல்லது தகவலோ வைத்திருக்கிறார். இவரைப் போன்றவர்கள் கொஞ்சம் சீரியஸாகவே வலைப்பதிவை பயன்படுத்துகிறார்கள்.

'இட்லி வடை' (idlyvadai.blogspot.com) என்றப் பெயரில் வித்தியாசமான வலைப்பூ ஒன்று உண்டு. ஊடகங்களில் வரும் அரசியல் செய்திகளை தொகுத்து 'நறுக்'கென்று வழங்குவதில் கில்லாடி இந்த இட்லிவடை. தேர்தல் சீஸனில் இட்லிவடை களைகட்டும். இந்த வலைப்பூவை எழுதி வருபவர் யாரென்று யாருக்குமே தெரியாது. "அவரா இவர்? இவரா அவர்?" என்று மற்ற வலைப்பதிவர்களை இந்தப் பதிவின் சொந்தக்காரராக யூகித்து விளையாடும் விளையாட்டு தமிழ் வலையுலகில் ரொம்பப் பிரபலம்.

சினிமா, அரசியலுக்கு அடுத்து பதிவுலகில் மவுசு இலக்கியத்துக்குதான். ஏனெனில் எப்படி எழுதினாலும் கவிதை, கதை என்கிற வடிவம் இலக்கியமென்று இங்கே நம்பப்படுகிறது. வலைப்பதிவர்களில் 95 சதவிகிதம் பேர் கவிஞர்களாகவும் இருக்கிறார்கள். சுனாமியா? பூகம்பமா? அயோத்தி தீர்ப்பா? ஈழமா? – இருக்கவே இருக்கிறது கீபோர்டு. தட்டு ஒரு கவிதையை அல்லது கட்டுரையை. அள்ளிக்கொள்ளு பின்னூட்டங்களை.

பின்னூட்டங்கள் என்றதும்  குழம்பி விடாதீர்கள். படைப்புக்கு வரும் வாசகர்களின் விமர்சனங்கள்தான் பின்னூட்டங்கள். அதாவது பத்திரிகைக்கு வரும் வாசகர் கடிதங்கள் மாதிரி. ஒரு பதிவைப் போட்டதுமே, அடுத்த ஐந்து ஆறு நிமிடங்களில் இருந்து பின்னூட்டங்கள் வர ஆரம்பித்துவிடும். அரசியல், இலக்கியப் பதிவுகளில் பின்னூட்டங்கள் விவாதத்துக்கு பயன்படுகிறது என்றாலும், வலையுலகில் இடப்படும் பின்னூட்டங்கள் 90 சதவிகிதம் மொக்கையானவை. வெட்டியானவை.

ஒரு பதிவர் இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை அவதானித்து, கடுமையாக உழைத்து ஒரு நல்லப் பதிவினை எழுதினாரென்றால், ஒரு பின்னூட்டக்காரர் 'மீ த பர்ஸ்ட்டு' என்று மட்டும் ஒரு வரி போட்டுவிட்டு மொண்ணை ஆக்கிவிடுவார். பதிவெழுதிய படைப்பாளியோ மெல்லவும், முடியாமல் விழுங்கவும் முடியாமல் அந்த விமர்சனத்தை(?) ஏற்றுக் கொண்டாக வேண்டும். இல்லையேல் அடுத்தப் பதிவுக்கு அந்த 'மீ த பர்ஸ்ட்டு' பின்னூட்டம் போட்டவர் வரமாட்டார்.

எழுதப்பட்ட கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? பின்னூட்டங்களில் நடக்கும் கும்மி. நீ யோக்கியமா, நான் யோக்கியமா, அவன் யோக்கியமா? என்று நீளும் விவாதங்களில் தனிநபர் சண்டைகள் மலியும். ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் புனைப்பெயர் உண்டல்லவா? அதுதான் அவரது அடையாளம். ஆனால் புனைப்பெயரில் பின்னூட்டம் இட விரும்பாதவர் அடையாளம் தெரியாதவராகவும் (அனானிமஸ்) பின்னூட்டம் இட முடியும். அல்லது வேறொருவர் பெயரிலும் (அதர் ஆப்ஷன்) பின்னூட்டம் எழுதலாம்.

இந்த பின்னூட்டக் குழப்பங்களால் பல பதிவர்களது பெயர் 'ரிப்பேர்' ஆவதும் உண்டு. தேவையில்லாத சாதி, சமய, தேசிய அக்கப்போர்களும் விளைவதுண்டு. டோண்டு ராகவன் (dondu.blogspot.com) என்ற வலைப்பதிவர் இப்பின்னூட்டக் குழப்பங்களுக்கு 'எலிக்குட்டிச் சோதனை' என்ற புதிய முறையினை அறிமுகப்படுத்திய பெருமைக்குச் சொந்தக்காரர். வலைப்பதிவு சேவை வழங்கும் கூகிள், வேர்ட்பிரஸ் ஆகிய மென்பொருள் நிறுவனங்களுக்கே கூடத்தெரியாத டெக்னிக் இது. ஆயினும் எலிக்குட்டிகளை மென்று ஏப்பம் விடும் பூனைகள் வலையுலகில் ஏராளம்.

எந்தவிதமான தணிக்கையும் இல்லாத இடம் என்பதால் வலைப்பதிவுகளை இன்னவகையான 'ஊடகம்' என்று வகைப்படுத்துவது கொஞ்சம் கடினமானது. தீவிரவாதிகள் கூட வலைப்பதிவை தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதால் இந்திய அரசு சில நாட்களுக்கு வலைப்பதிவுகளை தடை செய்த சம்பவம் கூட நடந்தது.

ஜனரஞ்சகமாக எழுதும் பதிவர்களுக்குதான் இங்கே மவுசு அதிகம். நர்சிம் (narsim.in), பரிசல்காரன் (parisalkaaran.com), கார்த்திகைப் பாண்டியன் (ponniyinselvan-mkp.blogspot.com), செல்வேந்திரன் (selventhiran.blogspot.com), லதானந்த் (lathananthpakkam.blogspot.com), தாமிரா (www.aathi-thamira.com), ஈரோடு கதிர் (maaruthal.blogspot.com), கார்க்கி (karkibava.com), விசா (writervisa.blogspot.com) என்று சூப்பர் ஹிட்டான பதிவர்கள் நிறைய பேர். இவர்களுக்கு வாசகக்கூட்டமும் அபரிதமானது. சூப்பர்ஹிட் ஆனவர்களை 'பிரபல பதிவர்கள்' என்று வலைமொழியில் குறிப்பிடுகிறார்கள். தீவிர இலக்கிய வாசகரான ஜ்யோவ்ராம் சுந்தர் (jyovramsundar.blogspot.com) தன்னுடைய இலக்கிய வாசக அனுபவங்களை உயர்தரமான மொழியில் பகிர்ந்து கொள்கிறார்.

'பிரபல' போட்டியில் இப்போது பிரதானப் போட்டியாளர்களாக இருப்பவர்கள் ஜாக்கிசேகரும் (jackiesekar.com), கேபிள் சங்கரும் (cablesankar.blogspot.com). உலகளவில் இணையத் தளங்களின் பிரபலத்தை அளவிடும் 'அலெக்ஸா' தரவரிசையில் முதல் ஒரு லட்சம் இடங்களுக்குள் இருப்பவர்கள் இவ்விருவரும். இந்திய அளவில் முதல் பத்தாயிரம் இடங்களுக்குள்ளாக இருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் இருக்கிறதோ இல்லையோ? தமிழ் வலைப்பதிவுகளில் 33 சதவிகித இடம் பெண்களுக்கு நிச்சயமாக இல்லை. 3 சதவிகிதம் இருந்தாலே அதிகம். சர்வநிச்சயமாக ஆண்வாசனை அடிக்குமிடம் தமிழ் வலையுலகம். தமிழச்சி(tamizachi.com), சந்தனமுல்லை(sandanamullai.blogspot.com), அணில்குட்டி கவிதா(kavithavinpaarvaiyil.blogspot.com), துளசி கோபால்(thulasidhalam.blogspot.com), லஷ்மி பாலகிருஷ்ணன்(malarvanam.wordpress.com), மதிகந்தசாமி (mathykandasamy.blogspot.com), பத்மா அரவிந்த் (thenthuli.org), தமிழ்நதி (tamilnathy.blogspot.com) என்று குறிப்பிடத்தக்க சிலர் இருக்கிறார்கள். ஆண் பதிவர்களும், பெண் பதிவர்களும் வித்தியாசப்படுவது மொக்கைத் தன்மையில். தங்கள் பிரச்சினைகளை விலாவரியாக, நாகரிகமாக எழுதுவதில் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், நிறைவாக எழுதுகிறார்கள் பெண் பதிவர்கள்.

திருநங்கையான லிவிங் ஸ்மைல் வித்யாவின் (livingsmile.blogspot.com) வலைப்பூ எண்ணற்ற ஆச்சரியங்களையும், அதிர்ச்சிகளையும் உள்ளடக்கியது. திருநங்கைகளுக்கான உரிமைப் போருக்காகவும் இந்த வலைப்பூவை அவர் பயன்படுத்திக் கொள்கிறார்.

பெற்றோர் உதவியுடன் எழுதும் குழந்தைப் பதிவர்கள் கூட ஒரு சிலர் உண்டு.

திமுக – அதிமுக, ரஜினி – கமல், விஜய் – அஜித் என்று இரட்டை நேரெதிர் ஆளுமைகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கச்சை கட்டிக் கொள்ளும் தமிழ்ப்பண்பு தமிழ் வலையுலகில் மிகையாக காணக் கிடைக்கிறது. இந்த அடிதடி சண்டைகளால் ஏற்படும் விளைவுகள் மோசமானவை. சைபர் க்ரைம் போலிஸார் தலையிடும் அளவுக்கு கட்டுக்கடங்காமல் போன சில சம்பவங்களும் உண்டு. "சொந்தத் தகவல், புகைப்படங்கள் போன்றவற்றை எந்தக் காலத்திலும் பகிர்ந்துக் கொள்ள இயலாத அளவுக்கு வலையுலகம் பாதுகாப்பு அற்றதாக இருக்கிறது" என்கிறார் கவிதா.

தமிழில் வலைப்பதிவு எழுதுவதில் சில சவுகர்யமான விஷயங்களும் இருக்கிறது. வலைப்பதிவு எழுதும் அரசு மருத்துவரான ப்ரூனோ சொல்கிறார்.

"தாய்மொழியில் சொல்ல விரும்பிய கருத்தை உலகுக்கே வெளிப்படுத்த முடிகிறது. வார்த்தையோ, பக்க அளவோ வரையறையில்லை. கால அவகாசமும் இல்லை. விரும்பியபோது எழுதலாம். நம் கருத்து தவறானது என்று தெரிந்தால் யாராவது உடனே சுட்டிக் காட்டுகிறார்கள். திருத்திக் கொள்ள முடிகிறது"

சரி. எழுதும் விஷயத்தை எப்படி மற்றவர்கள் படிக்க வகை செய்கிறார்கள்?

எழுதியப் பதிவின் சுட்டியை (link) மின்னஞ்சல் மூலமாக நண்பர்களுக்கு அனுப்புகிறார்கள். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்கிறார்கள். தமிழ் வலைப்பதிவுகளை திரட்டுவதற்கென்றே சில திரட்டிகளும் (aggregator) உண்டு. இந்த திரட்டிகளில் இணைந்துக் கொள்வதின் மூலமாக உலகெங்கும் நொடிகளில் நம் வலைப்பதிவினை உலகத்தின் எந்த மூலைக்கும் எடுத்துச் செல்ல முடியும். கூகிள் ரீடரிலும் நாம் வாசிக்க விரும்பும் வலைப்பூக்களை சேமித்து வைத்து வாசிக்க முடியும். பிறருக்கும் பகிர முடியும்.

www.thamizhmanam.com, www.tamilveli.com, http://ta.indli.com, www.thiratti.com ஆகியவை இப்போது பிரபலமாக இருக்கும் திரட்டிகளில் சில. இத்தளங்களை பாவித்து, எண்ணற்ற வலைப்பதிவுகளை நீங்கள் வாசிக்கலாம்.

தமிழ்ச்சூழலை விட்டு விலகி அன்னிய நாடுகளில் வேலை நிமித்தமாகவோ, வாழ்வியல் நிமித்தமாகவோ வாழ்பவர்களுக்கு நிச்சயமாக இந்த தமிழ்வலைப்பூக்களை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். "தமிழை முதன்முதலாக கணினியில் பார்க்கக் கிடைத்த பரவசத்தை என்னால் வாழ்நாளில் மறக்கவே முடியாது" என்று வளைகுடா நாடுகளில் பணிநிமித்தமாக வாழும் பதிவரான ஆசிப்மீரான் (asifmeeran.blogspot.com) தனது பதிவில் எழுதுகிறார்.

பேன நட்பு அருகிப்போன இக்காலத்தில், வலைப்பதிவுகள் மூலமாக உருவாகும் நட்புகள் மிக முக்கியமானவை. இணையங்களில் "முஸ்தபா முஸ்தபா" பாடிச்செல்லும் தோழர்கள் வலைப்பதிவுகளால் பெருகியிருக்கிறார்கள். இந்த நட்பு வட்டம் ஆரோக்கியமான சில சமூகப் பணிகளுக்கும் பயன்பட்டிருக்கிறது. வலைப்பதிவர்கள் இணைந்து பொதுப்பணிகளுக்கு நிதித்திரட்டுவது, உயிர்காக்கும் சேவைகளை செய்வது என்று ஈடுபடுகிறார்கள். சுனாமி நேரத்தில் இவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதை இதில் முக்கியமாக குறிப்பிடலாம்.

சிங்கப்பூரில் பணிநிமித்தமாக வசிப்பவர் ஜோசப் பால்ராஜ் (maraneri.com). தமிழகத்தில் இருக்கும் இவரது தந்தை திடீரென காலமானார். என்ன ஏதுவென்று புரியாமல் கலங்கிய மனதோடு விமானம் பிடித்து சென்னைக்கு வந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஊருக்குப் போய் தந்தையாரின் இறுதிக் காரியங்களை முடிக்கும் வரை கூட இருந்து உதவினார்கள் அப்துல்லா (mmabdulla.com) உள்ளிட்ட சக பதிவர்கள். இத்தனைக்கும் அப்துல்லா போன்றவர்கள் அதற்கு முன்பாக ஜோசப்பை நேரில் பார்த்தது கூட இல்லை. இதுபோல பதிவர்கள் ஒருவருக்கொருவர் சுக துக்கங்களில் பங்கு கொள்ளுமளவுக்கு தமிழ் வலையுலகத்தால் ஒரு உறவுப்பின்னல் ஏற்பட்டிருப்பது என்பது ஆரோக்கியமான விஷயம். இவர்கள் அடிக்கடி பதிவர் சந்திப்புகள் நடத்தி தங்களது நட்பினை புதுப்பித்துக் கொள்கிறார்கள். பதிவர்களுக்கு வலைப்பதிவு தொடர்பான தொழில்நுட்ப அறிவு மேம்படவும், புதிய பதிவர்களை வரவேற்கும் முகமாகவும் அவ்வப்போது பதிவர் பட்டறைகளும் நடைபெறுகிறது.

நட்பு மட்டுமல்ல. வலைப்பதிவுகளால் 'காதல் கோட்டை' கட்டப்பட்டு, கல்யாணத்தில் முடிந்த சுவையான சம்பவங்களும் சில உண்டு.

சரி. இதுவரை வாசித்ததில் வலையுலகம் என்பதைப் பற்றி உங்களுக்கு முழுமையாகவோ அல்லது அரைகுறையாகவோ ஒரு வடிவம் கிடைத்திருக்கும். ஒரு சராசரி வலைப்பதிவு எப்படி எழுதப்பட்டிருக்கும்? இந்தக் கட்டுரையை வாசிக்கிறீர்கள் இல்லையா.. இதே மொழிநடையில்தான் இருக்கும்!

 

நிமிடங்களில் தொடங்கலாம் வலைப்பூ!

நீங்களும் வலைப்பதிவு செய்து தமிழ்ச்சேவையில் குபீரென்று குதிக்கலாம். Blogger.com, wordpress.com போன்ற எண்ணற்ற தளங்களில் உங்கள் பெயரைப் பதிவு செய்து உங்களுக்கென்று ஒரு வலைப்பதிவைத் துவங்கலாம். இது முற்றிலும் இலவசம். உங்கள் கிரெடிட் கார்ட் பொருளாதார மேன்மை பெற்றதாக இருப்பின் காசு கொடுத்து, உங்கள் வலைப்பதிவை டாட் காமாகவும் மாற்றிக் கொள்ளலாம். ஒரு மின்னஞ்சல் முகவரி துவக்குவதைப் போலவே வலைப்பதிவு துவக்குவதும் ரொம்ப ஈஸி!

ஹேப்பி பிளாகிங் போக்ஸ்!


(நன்றி : புதிய தலைமுறை)

30 கருத்துகள்:

  1. பெயரில்லா12:12 PM, நவம்பர் 08, 2010

    மீ த பர்ஸ்ட்டு

    பதிலளிநீக்கு
  2. இன்றுதான் புதிய தலைமுறையில் வாசித்தேன்.

    நன்றி லக்கி!

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா12:29 PM, நவம்பர் 08, 2010

    enga enn Fav Athisha pathi ondrum solla villai ?

    Vambil mattikollubavar Dondu mattum thana? thevai illatha varigal avai.

    பதிலளிநீக்கு
  4. யுவா வலைப்பூ பற்றி அருமையான அறிமுகம்.ஒரு நாள் நாங்களும் போட்டியாளாராக வருவோம்.அறிமுக படுத்த ரெடியாக இருங்க.

    பதிலளிநீக்கு
  5. புத்தகம் வாங்கி இன்னும் படிக்கல.. :)) படிக்கனும்..

    நன்றி.. யுவா...:)

    பதிலளிநீக்கு
  6. //வினவு (vinavu.com), மருதன் (marudhang.blogspot.com), பைத்தியக்காரன் (naayakan.blogspot.com), ரோஸாவசந்த் (rozavasanth.blogspot.com), சுகுணாதிவாகர் (sugunadiwakar.blogspot.com), சுடலைமாடன், மாதவராஜ்(mathavaraj.blogspot.com), குழலி(kuzhali.blogspot.com), ப்ரூனோ (doctorbruno.net), ஓசை செல்லா (osaichella.blogspot.com) போன்ற சில பதிவர்களின் அரசியல் பதிவுகள் குறிப்பிடத்தக்கவை. //

    நன்றி !!

    பதிலளிநீக்கு
  7. ரெண்டு வருசத்துக்கு மேலா பதிவுகளை படிசுகிட்டு வரேன்.அப்பப்ப கமென்ட் போடுறதோட சரி.
    ஒரு பதிவு எழுதனும்னு தோணி,எழுதியும் பாத்தாச்சு.கடை விரித்தேன் கொள்வாரில்லை கேஸ்தான்.
    என் பதிவ படிச்சுட்டு,தேறும் தேறாதுன்னு ஒரு வார்த்தை சொல்லுங்களேன் தோழரே!

    பதிலளிநீக்கு
  8. நல்லா எழுதி இருக்கிங்க. ஆனால், பல விஷயங்களை ஒரே கட்டுரைக்குள் தொகுத்துக் கொடுத்து இருப்பதால் வலைப்பதிவுன்னா என்னன்னே தெரியாத வாசகர்களை அது குழப்பத்தில் ஆழ்த்திவிடலாம்.

    பதிலளிநீக்கு
  9. வலைப் பூக்களைப் பற்றியதொரு நல்ல கட்டுரை.

    பதிலளிநீக்கு
  10. பத்திரிக்கையுலகில் நண்பர்களை வெளிப்படுத்தியமைக்கு நன்றி..

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. முதலாவது பின்னூட்டம் பொற்குடத்துக்குப் பொட்டிட்டது போல பதிவைத் தூக்குது லக்கி. :)

    பதிலளிநீக்கு
  12. வலைப்பூக்கள் பற்றிய நல்ல கட்டுரை...

    புத்தகம் தான் படிக்க முடியாமல் போய் விட்டது... நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன் அனுப்புவதற்கு..

    பதிலளிநீக்கு
  13. இந்தப் பதிவு உங்களின் சிறந்த வாசிப்பு அனுபவத்தை அழகாய் வெளிப்படுத்துகிறது . பல நண்பர்களின் சிறந்த பதிவுகளை அறிந்துகொண்டேன் பகிர்வுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  14. கொஞ்சம் பிஸி தோழர். இப்போதுதான் கவனிக்கிறேன். பிரபல(?) லிஸ்டில் நம்மையும் சேர்த்தமைக்கு நன்றி.

    கட்டுரை நன்றாக வந்திருக்கிறது. இந்த மாதிரி ஈஸி டாப்பிக்குகளையாவது எங்க மாதிரி ஆளுங்களிடம் வாங்கி போடலாம்ல.? கொஞ்சம் வெரைட்டியா இருக்கும்ல.. ஹிஹி.. ஐடியா.. குடுக்குறேன்யா.!

    பதிலளிநீக்கு
  15. லக்கி, பழசை மறந்தா பத்தும் கிடைக்காதுன்னு சொல்வாங்க... கருப்பு ப்ளாக்கை மறந்துட்டீங்க, மாயவரத்தான் ப்ளாக்கை மறந்துட்டீங்க, செந்தழல்ரவி ப்ளாக்கை மறந்துட்டீங்க, திருவடியான் ப்ளாக்கை மறந்துட்டீங்க, வரவணையான், கைப்புள்ள...ஏங்க உங்க வட்டம் மட்டும்தான் எழுதுவீங்களா?

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா10:59 PM, நவம்பர் 08, 2010

    அட லூசு பயலே !...நீயெல்லாம் ஒரு பத்திரிக்கை காரன் ? தெருபொருக்கித்தனமாக எழுதும் "சாக்கி" சேகர், தயிர்வடை கேபிள் போன்ற நாலாந்தர ஆட்களுக்கு கூட்டம் வந்து அவர்கள் //உலகளவில் இணையத் தளங்களின் பிரபலத்தை அளவிடும் 'அலெக்ஸா' தரவரிசையில் முதல் ஒரு லட்சம் இடங்களுக்குள் இருப்பவர்கள் இவ்விருவரும்//
    -என்று எழுதுகிறாயே ? முண்டமே. அறிவியல் தொழில் நுட்பங்களை எழுதி, அதன் மூலம் அலெக்ஸா வரிசையில் முன்னணியில் இருப்பவர்கள் உனக்கு தெரியாதா? இந்த அலெக்ஸா மயிறு பற்றி கவலைப்படாமல் உன்னையும் ,உன் விலை போகாத பத்திரிகை விமர்சனம் பற்றியும் கவலைபடாமல் புதிய பதிவர்கள் வெளுத்து கட்டுகிறார்களே அது பற்றி உன் மர மண்டையில் ஒன்றும் இல்லையா?
    You are a Biased Bull Shit !! :((

    சாக்கியும்,கேபூல் சங்கரும் எழுதிய பதிவுகளில் சினிமா, செக்ஸ் தவிர பிறருக்கு பயன்படும் ஏதாவது இருந்ததா?
    மூதேவி !

    நீ போடும் இந்த மொக்கை பதிவுக்கு ஆஹா, ஓஹோ என சொம்பு அடிக்க ஒரு உதவாக்கரை முட்டாள்கள் கூட்டம் வேறு. அட வெட்கம் கெட்ட கூட்டம்!!.

    பதிலளிநீக்கு
  17. //இந்தக் கட்டுரையை வாசிக்கிறீர்கள் இல்லையா.. இதே மொழிநடையில்தான் இருக்கும்!//

    இது பொய். இந்த மாதிரி நல்ல நடையில் எத்தனை பதிவர்கள் எழுதுகிறார்கள் ? 70% மேல் பதிவர்கள் இனிமே பதிவெல்லாம் படிக்க வருவியா ! வருவியா ஒடிருங்கிற மாதிரி தான் எழுதுகிறார்கள்.

    சுஜாதா போல எழுதியிருக்கீங்க, நல்லாருக்கு.

    பதிலளிநீக்கு
  18. unmai tamilan, jackie and Cable la vida Alexa la munadi irukaar..

    பதிலளிநீக்கு
  19. Enjoyed the entire article, particularly this part:

    //ஒரு சராசரி வலைப்பதிவு எப்படி எழுதப்பட்டிருக்கும்? இந்தக் கட்டுரையை வாசிக்கிறீர்கள் இல்லையா.. இதே மொழிநடையில்தான் இருக்கும்!//

    Nice!

    ***
    Pinnoottam patri ivlo vaariyirukka venaaam!!

    பதிலளிநீக்கு
  20. கிருட்டிணன்11:47 AM, நவம்பர் 09, 2010

    //
    அட லூசு பயலே !...நீயெல்லாம் ஒரு பத்திரிக்கை காரன் ? தெருபொருக்கித்தனமாக எழுதும் "சாக்கி" சேகர், தயிர்வடை கேபிள் போன்ற நாலாந்த...................நீ போடும் இந்த மொக்கை பதிவுக்கு ஆஹா, ஓஹோ என சொம்பு அடிக்க ஒரு உதவாக்கரை முட்டாள்கள் கூட்டம் வேறு. அட வெட்கம் கெட்ட கூட்டம்!!.
    //
    அனானி என்ன பிரச்னை உனக்கு ? வேணும்னா படி இல்லேன்னா போ. என்னவோ இவரு இணையத்தில நல்ல விஷயம் மட்டுமே பாக்குற மாதிரி. கலைஞர் புதுசா நூலகம் திறந்திருக்கார். அங்க போயேன். உன்ன யாரோ வந்து வாடா படிடான்னு சொன்ன மாதிரி. செக்ஸ் பிடிகலன்னா போய் டாக்டர பாரு.

    பதிலளிநீக்கு
  21. பெயரில்லா11:50 AM, நவம்பர் 09, 2010

    லக்கிலுக்,

    அவார்டா கொடுக்கறாங்க தளத்தை குறிப்பிட்டதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  22. அருமையான கட்டுரை...
    பதிவர்கள் மத்தியில் மட்டுமல்ல,. பதிவர்கள் அல்லாத வாசகர் மத்தியிலும் பிரபலமாக இருக்கும் உண்மை தமிழன் பெயர் விடுபட்டது ஒரு குறை... ...
    இருந்தாலும் பரவாயில்லை... இந்த கவனக்குறைவு கட்டுரையின் தரத்தையும் பாதிக்கவில்லை... உண்மைத்தமிழனின் புகழையும் பாதிக்கவில்லை...

    பதிலளிநீக்கு
  23. I am a PhD student from South Korea. After reading your "வலை வீசம்மா வலை வீசு!", i felt that to read a review article about Blogs.

    Hats off to you.

    Kesavan.

    பதிலளிநீக்கு
  24. நான் வலைப் பூ எழுத ஆரம்பித்த நாளிலிருந்து தொடர்ந்து தாங்கள் காட்டும் ஆதரவுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  25. பெயரில்லா12:14 PM, நவம்பர் 11, 2010

    எனக்கு வலையை காட்டிக்கொடுத்த www.luckylookonline.com இதை காணமே தோழர்??

    பதிலளிநீக்கு
  26. நான் பேசிகலி சோம்பேறி. வழக்கமா 10 பக்கத்துக்கு இருக்கற பதிவை எல்லாம் படிக்க மாட்டேன்.அதையும் மீறி படிச்சேன். அருமையாக இருந்தது..

    பதிலளிநீக்கு